மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 11 செப்டம்பர், 2010

பேச பயம் எனக்கு


நமக்கு என்னமோ தெரியலைங்க இந்த பொண்ணுங்ககிட்ட பேசுறதுன்னா கை காலெல்லாம் உதறலெடுத்துடும். இன்னைக்கு நேத்து இல்லைங்க ஒண்ணாப்புல இருந்து இதே நிலைதான். ஊருக்குள்ளயும் யார்கிட்டயும் பேசுறதில்லை. எங்க பஞ்சப்பத்தா, எம் பேராண்டிக்கிட்ட பேசணுமின்னா வெத்தலை பாக்கு வைக்கணுமின்னு என்னை பார்க்கிறப்பல்லாம் சொல்லும். அதுக்கு லேசா சிரிச்சு வைப்பேன் அவ்வளவுதான்.

கடந்த காலத்துல நாம வந்த வழியை திருப்பிப் பார்த்தா பொண்ணுங்ககிட்ட பேச பட்ட பாட்டை ஒரு மெகா சீரியலாவே எடுக்கலாம். நீங்க சிரிப்பா எடுத்துக்கிட்டாலும் சரி... சீரியஸா எடுத்துக்கிட்டாலும் சரி... எம்மனசுக்குள்ள உள்ளத இப்பவாவது வெளியில சொல்லணுமின்னு தோணுச்சு... அதான் தனியா உக்காந்து சொல்றேன்... இன்னொன்னு இதை யாரும் எம்பொண்ட்டாட்டிக்கிட்ட சொல்லிடாதீங்க... எதுக்கு சொல்றேன்னு கடைசியில உங்களுக்கே புரியும்.

எங்கூருக்கு பக்கத்துல இருக்கிற அரசினர் மேல்நிலைப் பள்ளியில நான் நாலாப்பு படிச்சேன். எங்கிளாசுல அரசல்புதூர்ல இருந்து தனலெச்சுமின்னு ஒரு கட்டச்சி படிச்சது. கிளாசுல எல்லாத்துக்கும் வெடுக்கு வெடுக்குன்னு எந்திருச்சு பதில் சொல்லும். எல்லாரும் அதுகிட்ட பேசிக்கிட்டே இருப்பானுங்க. நா பேசவே மாட்டேன். நாம எதுக்கு அதுகிட்ட பேசணும்ன்னு நினைச்சுப்பேன்.

யாரு லீவு போட்டாலும் அது மட்டும் லீவே போடாது. நமக்கெல்லாம் அடிக்கடி வர்ற தலைவலி, காய்ச்சல் எல்லாம் அதுக்கு மட்டும் வர்றதேயில்லை. லீவு போட்டவங்கள்லாம் அதுகிட்டதான் நோட் வாங்கி எழுதுவாங்க. ஒரு தடவை நானும் மூணு நாள் லீவு போட்டாச்சு. கிளாசுக்கு போனா நிறைய நடத்திப்புட்டாங்க.

ரமேசுக்கிட்ட நோட்டுக்கேட்டா, "அட ஏண்டா இவனே... எ எழுத்தைப் பார்த்து நானே படிக்க முடியாது. நீ எப்படி எழுதுவே... தனத்துக்கிட்ட நோட் வாங்கி எழுது... அது எழுத்து அழகா குண்டு குண்டா இருக்கும்." என்றான்.

"டே... ரமேசு... நீயே வாங்கிக்கொடுடா... எனக்கு அதுகிட்ட கேட்க என்னமோ மாதிரி இருக்குடா"

"அடேய்... கிளாசுப்புள்ளைக்கிட்ட பேச பயமா இருக்கா... நல்லாயிருக்குடா... சரி இரு நான் கேக்குறேன்"

"தனம்... ஓ நோட்டைக் கொடுவே..."

"ஏ நோட் உனக்கு எதுக்கு..."

"எனக்கில்லை மகேசு மூணு நாளா வரலையில்ல... அதான் பார்த்து எழுத..."

"அவனுக்கு வேணுமின்னா அவன் கேக்கட்டும்... நீ யாரு வக்காலத்து..." கோபமாக கேட்டாள் கட்டச்சி.

"இல்ல அவன் யாருகிட்டயும் பேச மாட்டான்... பயப்படுவான்..."

"எங்கிட்ட பேசுனா போட்டிருக்கிற டவுசர்ல மூத்தரம் போயிடுவானோ... நான் என்ன காளியாட்டமா இருக்கேன். துரை பயப்படுறாரு..." கேலியாக சிரித்தாள்.

"பாவம் புள்ள... அவன் எழுத குடுல்ல"

"போடா... நாளைக்கு சனிக்கிழமை, திங்ககிழமை இங்கிலீஷ் சார் பரிச்சை சொல்லியிருக்காரு... நான் படிக்கணும்... நீ கொடு" என்று தர மறுத்துவிட்டாள்.

அதன் பிறகு அவ கூட பத்தாப்பு வரைக்கும் படிச்சேன். நோட்டும் கேக்கலை... பேசவும் இல்லை. இப்ப அவ... சரி அது எதுக்கு இந்த சந்தோஷமான நேரத்துல... விடுங்க மேல சொல்றதைக் கேளுங்க.

******

அப்புறம் பதினோன்னு படிக்கும்போது ஒருநாள் நல்ல மழை... சைக்கிளை ஓட்டமுடியாம பஸ் ஸ்டாப்பு ஓரத்துல நின்னுக்கிட்டிருந்தேன். அங்க எங்கூரு புவனாவும் நின்னுச்சு. ஆனா நான் அதுக்கிட்ட எதுவும் பேசலை... அதுவும் எங்கிட்ட எதுவும் பேசலை... கொஞ்சம் மழை விட்டாப்புல இருக்க, சைக்கிளை எடுத்தேன்...

அப்ப "மகேசு, மறுபடியும் மழை வராப்புல இருக்கு... பஸ் வருமான்னு தெரியலை... நானும் உங்கூட வாரேண்டா"ன்னு சொன்னுச்சு... நான் காதுல வாங்குன மாதிரி காட்டிக்கலை... அது "மகேசு... மகேசு"ன்னு பின்னால கூப்பிட்டது கேக்காத மாதிரி பொயிட்டேன். அப்புறம் ஒம்பதாப்பு படிக்கிற ராமசாமி மாமா மகன் கூட்டியாந்திருக்கான்.

காலையில புவனாவை பார்த்தப்போ முறைச்சுக்கிட்டே எங்கக்காகூட குளிக்கப் போச்சு. அன்னைக்கு சாயந்தரம் எங்கக்கா எங்கிட்டா, "எருமை... நம்மூருப்புள்ள மழையில நின்னப்போ கூட்டியாரதுக்கென்ன. அவன் சின்னப்பயலா இருந்தாலும் வாக்கான்னு கூட்டியாந்திருக்கான்." அப்படின்னு திட்டுச்சு. நான் போக்கான்னு சொல்லிட்டு பொயிட்டேன். இப்பவும் புவனா ஊருக்கு வந்தாலும் எங்கிட்ட பேசாது நானும் பேசமாட்டேன்.

******

காலேசுல படிக்கயில எங்கிளாசுல மொத்தம் முப்பத்தைஞ்சு பேரு, அதுல இருவது பேரு புள்ளைங்க. எங்க பசங்க எப்ப பார்த்தாலும் கடலை போட்டுக்கிட்டே இருப்பாங்க. எனக்கு அது புடிக்காது... நா வெளியில பொயிட்டு வகுப்பு ஆரம்பிக்கும் போதுதான் உள்ளே வருவேன்.

ஒருநா இப்படித்தான் நான் பிஸிக்ஸ்ல படிக்கிற ரமேசைப் பார்க்கப் போனேன். அவனும் பிள்ளைங்ககிட்டதான் பேசிக்கிட்டு இருந்தான். என்னைப் பார்த்ததும், "வாடா மகேசு... சும்மா உள்ளே வா" அப்படின்னு கூப்பிட, உள்ளே போனேன்.

"பிரண்ட்ஸ்... இவன் எம் பிரண்ட்... ஒண்ணாப்புல இருந்து ஒண்ணா படிச்சோம்..."

"ஹாய்..."

"....." பேசாமல் நின்னேன்.

"என்னடா உன் பிரண்ட் ஊமையா?" என்றாள் ஒருத்தி.

"இல்ல ரமா... இவனுக்கு பொண்ணுககிட்ட பேச கூச்சம்... அதான்..."

"அலோ... சும்மா பேசுங்க... நாங்க ஒண்ணும் முனுங்கிடமாட்டோம்..." என்றாள் அவள்.

"அவரு பேசினா முத்து உதிர்ந்திடுமோ என்னவோ" என்றாள் இன்னொருத்தி.

அதுக்கு மேல அங்க நிக்க பிடிக்காம நா வாரேண்டான்னுட்டு வேகமா வந்திட்டேன்

சாயந்திரம் காலேசு விட்டுப் போகையில, "மகேசு நில்லுங்க நானும் வாரேன்... பேசிக்கிட்டே போகலாம்" அப்படின்னு சொல்லிக்கிட்டே சைக்கிளை வேகமாக ஓட்டி என்னருகில் வந்தாள் ரமா.

அவளைப் பார்த்து லேசா சிரிச்சு வச்சேன். அவ என்னென்னமோ பேசினா, ஆனா நான் எதுவும் பேசலை. இது தினமும் தொடர்ந்துச்சு... பிரண்ட்செல்லாம் அவளை நான் லவ் பண்றதா சொன்னாங்க... நா சிரிச்சுக்கிட்டேன்...

படிப்பு முடிஞ்சப்ப அவ எங்கிட்ட லவ்வை புரப்போஸ் பண்ணினா, அப்பவும் நான் எதுவும் சொல்லலை. அதுக்கப்புறம் அவளை பார்க்கவேயில்லை. சில நாளுக்கு முன்னால திருச்சி போறப்போ பஸ்ல பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுக்கிட்டா, ஆனா நான் பாக்காத மாதிரி நின்னுக்கிட்டேன். என் முதுகுக்குப் பின்னால அவ பெருமூச்சு விட்ட சப்தம் கேட்டுச்சு.

இப்பவும் எந்த பொண்ணுக்கிட்டயாவது பேசணுமின்னா உதறல் எடுத்துடும். சரிங்க காய்கறி வாங்க வந்தவன் மனசில உள்ளதை புலம்பிட்டேன். போதும் நம்ம கதை... வீட்டுக்குப் போறேன் நீங்களும் பின்னால வாங்க...

******

"இவ்வளவு நேரம் என்ன பண்ணுனீங்க"

"...."

"இப்புடி பேசாம இருந்தே காலத்தை ஓட்டிடுவீங்க போல"

அதுக்கும் பதிலாய் "...."

"ஆமா என்ன காய் வாங்கினீங்க..." என்றபடி கூடையை கவித்தவள், "கருமம்... இந்த முத்தக் கத்திரிக்காய எதுக்கு வாங்காந்தீங்க... அதுவும் பாதி பூச்சியா இருக்கு... எதாவது ஒண்ணு உருப்படியாத் தெரியுதா... எந்தலையில கட்டி வச்சு கழுத்தறுத்துப்புட்டாங்க... எத்தனை மாப்பிள்ளை வந்துச்சு... எல்லாத்தையும் விட்டுட்டு இந்த மங்குனிக்கு கட்டி வச்சிட்டாங்களே... காலமெல்லாம் இது கூட...."

நான் மெல்ல வெளியானேன்.

இது எப்பவும் நடக்குறதுதான்... இதுக்குத்தான் நான் என் கதையை சொன்னப்ப எம்பொண்டாட்டிகிட்ட சொல்லாதீங்கன்னு சொன்னேன். இல்லேன்னா அதுக்கும் சேர்த்து அர்ச்சனை விழுந்திருக்கும். இருங்க சொல்ல மறந்துட்டேனே... இப்ப நம்மளை சத்தம் போட்ட நம்ம அம்மணி யாரு தெரியுமா? சத்தமா சொல்ல முடியாதுங்க பக்கத்துல வாங்க... நம்ம நாலாப்பு கட்டச்சிதாங்க... என்ன செய்ய விதி சேர்த்துடுச்சு... சரிங்க, இன்னொரு நாளைக்கு இன்னும் சில கதைகளோட சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்

23 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

நானா சொல்ல மாட்டேன். ஆனா.....

Unknown சொன்னது…

அப்பப்போ நாம பேசாம இருக்கறது தான் சரி...

அம்பிகா சொன்னது…

உண்மைகதையா புனைவா?
ஆனா நல்லாயிருக்கு.

சுசி சொன்னது…

நல்லா இருக்கு குமார். நல்ல எழுத்து நடை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கலாநேசன்...
நீங்களா சொல்லாம இருந்தா போதும்... ஆனா...ஆவன்னான்னா அப்புறம் ஆட்டோ அனுப்ப வேண்டி வரும். ஜாக்கிரதை... ஆமா சொல்லிப்புட்டேன்.
//அப்பப்போ நாம பேசாம இருக்கறது தான் சரி...//
இது மருவாதி... சலாம் சொல்லிக்கிறான் குமாரு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்பிகா மேடம்....
நம்ம லைப்ல இப்படியெல்லாம் நடக்கலை.
ரெண்டு நாளைக்கு முன்னால மனசுக்குள்ள மலர்ந்தது. ரம்ஜான் விடுமுறையால் உடனே மலராமல் இன்னைக்கு எழுத்தானது. அம்புட்டுத்தான்.
அக்கா, நம்ம ஊட்டம்மாக்கிட்ட உண்மைக்கதை அது இதுன்னு சொல்லி மாட்டிவிட்டுடாதீங்க.
அவங்க நமக்கு தெரியாம வலைப்பூவை செக் பண்றாங்கன்னு நம்பத்தகுந்த வட்டாரத் தகவல். ஹி....ஹி...!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசி மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vasu balaji சொன்னது…

:)). நல்லாருக்கு

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

:)

Pavi சொன்னது…

நன்று

r.v.saravanan சொன்னது…

நன்றாக தான் மலர்ந்திருக்கிறது கதை குமார் எழுத்து நடை நல்லாருக்கு

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் ஐயா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க முத்துலெட்சுமி மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பவி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

பொம்பள புள்ளைங்ககிட்ட உங்களுக்கு, பேசத்தான்
தெரியாது. ஆனா, நல்லா (கம்பியூட்டர்ல)
எழுதத் தெரியுது. வெவரமா எழுதியிருக்கீங்க...

vanathy சொன்னது…

இது உங்க கதை போல இருக்கே. அண்ணியின் மெயில் ஐடி தர முடியுமா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க நிஜாமுதீன்...
இது கற்பனைதானே அதனால பயமில்லை எனக்கு...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
சத்தியமா 100% கற்பனையே...
சந்தேகம் இருந்தால் உங்க அண்ணி மெயில் ஐடி எதுக்கு அலைபேசி நம்பரே தர்றேன். பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். (உங்களுக்கு 70% ஆதரவு கிடைக்க வாய்ப்பி உண்டு...)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Asiya Omar சொன்னது…

சூப்பர்,வெரி இண்ட்ரெஸ்டிங்.

ம.தி.சுதா சொன்னது…

நல்ல ரசனைக்குரிய பதிவு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க asiya அக்கா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ம.தி.சுதா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

lcnathan சொன்னது…

KARPANAI YENTRAALUM NALLA NADAI,VAZHTHTHUKKAL!

lcnathan சொன்னது…

KARPANAI YENTRAALUM NALLA MURAIYIL EZHUTHAPPATTU ULLATHU,NANTRI!

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//சத்தமா சொல்ல முடியாதுங்க பக்கத்துல வாங்க... நம்ம நாலாப்பு கட்டச்சிதாங்க... என்ன செய்ய விதி சேர்த்துடுச்சு..///

ஆஹா... இதுக்கு அப்புறமும் கற்பனைன்னா சொல்றீங்க..??? அவ்வவ்வ்வ்வ்
குமார்ர்ர்ரர்ர்ர்ர் .....எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்...!!!