திரு. துரை.செல்வராஜூ ஐயா அவர்களின் மனைவி மற்றும் மகன் இங்கு வந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்கப் போக வேண்டும் என என்னிடம் கடந்த வாரமே கில்லர்ஜி அண்ணா சொல்லியிருந்தார். நாங்கள் அபுதாபிக்குள் இருக்கிறோம். ஆனால் அவர்கள் இருந்ததோ விமான நிலையம் பக்கம்... அதனால் சந்திப்பதற்காக நேரம் சரிவர அமையவில்லை. கடந்த சனியன்று மாலை அபுதாபி மாலுக்கு வருகிறார்கள் என்றும் நாம் போய் சந்திக்கலாம் என்றும் கில்லர்ஜி அண்ணன் போனில் சொன்னார். அதன்படி அங்கு சென்று அவர்கள் வரும்வரை காத்திருந்து... சந்தித்து கொஞ்ச நேரம் அவர்களுடன் உரையாடித் திரும்பினோம். இது குறித்து விவரமான பதிவை கில்லர்ஜி அண்ணா தளத்தில் படிக்கலாம். அதற்குச் செல்ல இங்கு சொடுக்குங்கள்.
விஷால் உடல் நலம் தேறி வீட்டுக்கு வந்துவிட்டான். அவனுக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்றதில் இருந்து இணையப் பக்கம் அதிகம் வர முடியவில்லை. மேலும் அலுவலகத்தில் 9 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து விட்டு வருவதால் அலுப்பின் காரணமாக மற்ற பதிவுகளைப் பார்க்க முடிவதில்லை. இருப்பினும் நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்... தவறாக நினைக்க வேண்டாம்.
சேனைத்தமிழ் உலாவில் சிறுகதைப் போட்டிக்கான கால அவகாசத்தை மார்ச்-31 வரை நீட்டித்து இருக்கிறார்கள். நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசினை வெல்லுங்கள். போட்டி குறித்த விவரம் அறிய இங்கு சொடுக்கவும்.
இங்கு இரண்டு நாட்களாக மணல் காற்று வீசுகிறது. வெளியில் ஒரே தூசி மயம். இனி கொஞ்சம் கொஞ்சமாக குளிர் குறைந்து மே மாதம் முதல் சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பித்து விடும். அப்புறம் வெளியில் சென்று வந்தால் குளித்துவிட்டு வந்தது போல் இருக்கும்.
சென்ற சனிக்கிழமை அன்று எனது பிறந்ததினம். எப்பவும் காலையில் எழுந்து குளித்து சாமி கும்பிடுவதுடன் சரி. பொதுவாக பிறந்ததினம் என்பதும் மற்ற நாட்களைப் போல் சாதாரணமாகத்தான் கடந்து செல்லும். யாரிடமும் சொல்வதும் இல்லை... கொண்டாடுவதும் இல்லை. எப்பவும் மனைவி எடுத்துக் கொடுத்து விடும் புதிய உடையை அணிவதுடன் முடித்துக் கொள்வேன். இந்த வருடம் கொஞ்சம் ஸ்பெஷல்... அப்பாவுக்கு நாங்கதான் டிரஸ் எடுப்போம் என செல்லங்கள் தங்கள் உண்டியல் சேமிப்பில் இருந்து அவர்களே தேர்வு செய்து வாங்கி அனுப்பிய சட்டையோடு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அன்றைய தினம் கடந்தது.
நம்ம ஊரில் அரசு அலுவலகத்துக்கு ஒரு வேலையாகச் சென்றால் முதலில் லஞ்சம் கொடுக்கணும்... அப்படியே கொடுத்தாலும் அதிகாரி தனது பதவியின் காரணமாக வா... போ... என்றே பேசுவார். படித்தவன்... அரசு வேலை என்றால் மட்டுமே மரியாதை... இதை ஒரு முறை காவல் நிலையத்தில் அனுபவித்திருக்கிறேன். ஊர் திருவிழா பாதுகாப்பிற்காக காவல் நிலையத்தில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது விதி. அதனால் நானும் எங்க சித்தப்பாவும் சென்றோம். அவர் தாடியுடன் வேஷ்டி சட்டையில் வந்தார். புதிய காவலர் ஒருவர் எங்களிடம் விவரம் கேட்டு 'ஐயா இல்லை... எழுதிக் கொடுத்துட்டுப் போய்யா...' என்று சித்தப்பாவிடம் சொல்லி 'இந்தா அங்க உக்காந்து எழுது' என்றார் கிராமத்தானுங்கதானே என்ற திமிருடன்... 'என்னப்பா இப்படி பேசுறார்' என்றதற்கு 'விடு பதவி பேசச் சொல்லுது.. எழுதிக் கொடுத்துட்டுப் போவோம்... நாம வந்தது ஊர்க்காரியத்துக்கு...' என்றார் கோபக்காரரான சித்தப்பா.
அந்தாளு சொன்னபடி எழுதி தனது பெயரை ஆங்கிலத்தில் கையெழுத்து இட்டு தம்பி நீயும் கையெழுத்துப் போடுடா என என்னிடமும் கையெழுத்துப் பெற்றுக் கொடுத்தார். வாங்கிப் பார்த்த காவலர், 'சார் நீங்க...?' என மெதுவாக இழுத்தார். 'நான் ஹயர் செகண்டரி ஸ்கூல் தலைமையாசிரியர்... இது எங்க அண்ணன் மகன்... காலேசுல வேலை பாக்குறான்' என்றார். உடனே காவலர் எழுந்து 'ஐயா வந்ததும் கொடுத்துடுறேன் சார்... எதையும் மனசுல வச்சிக்காதீங்க' என்றார். ஊரில் ஆளைப் பார்த்துத்தான் வேலை நடக்கும்.
இங்கு எனது படிப்புச் சான்றிதழுக்கு இணையான அரபிச் சான்றிதழ் பெறுவதற்காக ஒவ்வொரு வேலையாக முடித்து உயர் கல்வித்துறை வரை சென்று கையெழுத்து வாங்கிவிட்டேன். நேற்று கல்வி அமைச்சகத்தில் இருக்கும் அலுவலகத்தில் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கச் சென்றேன். அங்கிருந்த ஒரு அரபிப் பெண் ஆன்லைனில் பதிவு செய்ய உதவினார். பின்னர் டோக்கன் எடுத்து காத்திருந்து மற்றொரு அரபிப் பெண்ணிடம் சான்றிதழ்களைக் கொண்டு போய்க் கொடுத்தபோது வாங்கிப் பார்த்து பண்பாகப் பேசியபடி எல்லா வேலையும் முடித்து சான்றிதழ் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகிவிடும் சார்... உங்களுக்கு குறுஞ்செய்தி வரும். நீங்களோ உங்கள் நண்பரோ ரசீதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுங்கள் என்றார் புன்னகையுடன். இப்படி அலுவலக வேலைகள் நம்ம ஊரில் நடக்க இன்னும் பல காலம் ஆகும். மாற்றங்கள் வருவது எதிர்கால சந்ததியினரிடமே இருக்கிறது.
-'பரிவை' சே.குமார்.



