மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 மார்ச், 2015

மனசின் பக்கம் : இனியவை சில...

திரு. துரை.செல்வராஜூ ஐயா அவர்களின் மனைவி மற்றும் மகன் இங்கு வந்திருந்தார்கள். அவர்களைப் பார்க்கப் போக வேண்டும் என என்னிடம் கடந்த வாரமே கில்லர்ஜி அண்ணா சொல்லியிருந்தார். நாங்கள் அபுதாபிக்குள் இருக்கிறோம். ஆனால் அவர்கள் இருந்ததோ விமான நிலையம் பக்கம்... அதனால் சந்திப்பதற்காக நேரம் சரிவர அமையவில்லை. கடந்த சனியன்று மாலை அபுதாபி மாலுக்கு வருகிறார்கள் என்றும் நாம் போய் சந்திக்கலாம் என்றும் கில்லர்ஜி அண்ணன் போனில் சொன்னார். அதன்படி அங்கு சென்று அவர்கள் வரும்வரை காத்திருந்து... சந்தித்து கொஞ்ச நேரம் அவர்களுடன் உரையாடித் திரும்பினோம். இது குறித்து விவரமான பதிவை கில்லர்ஜி அண்ணா தளத்தில் படிக்கலாம். அதற்குச் செல்ல இங்கு சொடுக்குங்கள்.
விஷால் உடல் நலம் தேறி வீட்டுக்கு வந்துவிட்டான். அவனுக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்றதில் இருந்து இணையப் பக்கம் அதிகம் வர முடியவில்லை. மேலும் அலுவலகத்தில் 9 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து விட்டு வருவதால் அலுப்பின் காரணமாக மற்ற பதிவுகளைப் பார்க்க முடிவதில்லை.  இருப்பினும் நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்... தவறாக நினைக்க வேண்டாம்.
சேனைத்தமிழ் உலாவில் சிறுகதைப் போட்டிக்கான கால அவகாசத்தை மார்ச்-31 வரை நீட்டித்து இருக்கிறார்கள். நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசினை வெல்லுங்கள். போட்டி குறித்த விவரம் அறிய இங்கு சொடுக்கவும்.
ங்கு இரண்டு நாட்களாக மணல் காற்று வீசுகிறது. வெளியில் ஒரே தூசி மயம். இனி கொஞ்சம் கொஞ்சமாக குளிர் குறைந்து மே மாதம் முதல் சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பித்து விடும். அப்புறம் வெளியில் சென்று வந்தால் குளித்துவிட்டு வந்தது போல் இருக்கும்.
சென்ற சனிக்கிழமை அன்று எனது பிறந்ததினம். எப்பவும் காலையில் எழுந்து குளித்து சாமி கும்பிடுவதுடன் சரி. பொதுவாக பிறந்ததினம் என்பதும் மற்ற நாட்களைப் போல் சாதாரணமாகத்தான் கடந்து செல்லும். யாரிடமும் சொல்வதும் இல்லை... கொண்டாடுவதும் இல்லை. எப்பவும் மனைவி எடுத்துக் கொடுத்து விடும் புதிய உடையை அணிவதுடன் முடித்துக் கொள்வேன். இந்த வருடம் கொஞ்சம் ஸ்பெஷல்... அப்பாவுக்கு நாங்கதான் டிரஸ் எடுப்போம் என செல்லங்கள் தங்கள் உண்டியல் சேமிப்பில் இருந்து அவர்களே தேர்வு செய்து வாங்கி அனுப்பிய சட்டையோடு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அன்றைய தினம் கடந்தது.
ம்ம ஊரில் அரசு அலுவலகத்துக்கு ஒரு வேலையாகச் சென்றால் முதலில் லஞ்சம் கொடுக்கணும்... அப்படியே கொடுத்தாலும் அதிகாரி தனது பதவியின் காரணமாக வா... போ... என்றே பேசுவார். படித்தவன்... அரசு வேலை என்றால் மட்டுமே மரியாதை... இதை ஒரு முறை காவல் நிலையத்தில் அனுபவித்திருக்கிறேன். ஊர் திருவிழா பாதுகாப்பிற்காக காவல் நிலையத்தில் எழுதிக் கொடுக்க வேண்டும் என்பது விதி. அதனால் நானும் எங்க சித்தப்பாவும் சென்றோம். அவர் தாடியுடன் வேஷ்டி சட்டையில் வந்தார். புதிய காவலர் ஒருவர் எங்களிடம் விவரம் கேட்டு 'ஐயா இல்லை... எழுதிக் கொடுத்துட்டுப் போய்யா...' என்று சித்தப்பாவிடம் சொல்லி 'இந்தா அங்க உக்காந்து எழுது' என்றார் கிராமத்தானுங்கதானே என்ற திமிருடன்...  'என்னப்பா இப்படி பேசுறார்' என்றதற்கு 'விடு பதவி பேசச் சொல்லுது.. எழுதிக் கொடுத்துட்டுப் போவோம்... நாம வந்தது ஊர்க்காரியத்துக்கு...' என்றார் கோபக்காரரான சித்தப்பா.

அந்தாளு சொன்னபடி  எழுதி தனது பெயரை ஆங்கிலத்தில் கையெழுத்து இட்டு தம்பி நீயும் கையெழுத்துப் போடுடா என என்னிடமும் கையெழுத்துப் பெற்றுக் கொடுத்தார். வாங்கிப் பார்த்த காவலர், 'சார் நீங்க...?' என மெதுவாக இழுத்தார். 'நான் ஹயர் செகண்டரி ஸ்கூல் தலைமையாசிரியர்... இது எங்க அண்ணன் மகன்... காலேசுல வேலை பாக்குறான்' என்றார். உடனே காவலர் எழுந்து 'ஐயா வந்ததும் கொடுத்துடுறேன் சார்... எதையும் மனசுல வச்சிக்காதீங்க' என்றார். ஊரில் ஆளைப் பார்த்துத்தான் வேலை நடக்கும். 

இங்கு எனது படிப்புச் சான்றிதழுக்கு இணையான அரபிச் சான்றிதழ் பெறுவதற்காக ஒவ்வொரு வேலையாக முடித்து உயர் கல்வித்துறை வரை சென்று கையெழுத்து வாங்கிவிட்டேன். நேற்று கல்வி அமைச்சகத்தில் இருக்கும் அலுவலகத்தில் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கச் சென்றேன். அங்கிருந்த ஒரு அரபிப் பெண் ஆன்லைனில் பதிவு செய்ய உதவினார்.  பின்னர் டோக்கன் எடுத்து காத்திருந்து மற்றொரு அரபிப் பெண்ணிடம் சான்றிதழ்களைக் கொண்டு போய்க் கொடுத்தபோது வாங்கிப் பார்த்து பண்பாகப் பேசியபடி எல்லா வேலையும் முடித்து சான்றிதழ் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகிவிடும் சார்... உங்களுக்கு குறுஞ்செய்தி வரும். நீங்களோ உங்கள் நண்பரோ ரசீதைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுங்கள் என்றார் புன்னகையுடன். இப்படி அலுவலக வேலைகள் நம்ம ஊரில் நடக்க இன்னும் பல காலம் ஆகும். மாற்றங்கள் வருவது எதிர்கால சந்ததியினரிடமே இருக்கிறது.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 8 மார்ச், 2015

குடும்ப விளக்கு

(மார்ச் -08 மகளிர் தின வாழ்த்துக்கள்...)


காலை எழுந்தது முதல் பணம் கேட்டு நச்சரிக்கும் கணவனுடன் சண்டையிட்டாலும் சமையல் வேலையில் மும்மரமாக இருந்தாள் மரகதம்.

"ஏண்டி, இப்ப பணம் தருவியா... இல்லயா..?"

"உனக்கு எதுக்குய்யா காசு... குடிக்கவும் சீட்டாடவுமா... சல்லிக்காசு எங்கிட்ட இல்ல... போய்யா..."

"நான் குடிப்பேன்... கும்மாளம் அடிப்பேன். உனக்கென்னடி... அது என்ன உங்க அப்பமுட்டு காசா... எம்மக சம்பாரிக்கிறது..."

"மக சம்பாரிக்கிறது... தூ... வெக்கமாயில்ல... பொம்பளப்புள்ள சம்பாத்தியத்துல தண்ணியடிக்க... நீ எல்லாம் ஒரு ஆம்பள..."

"ஆமாண்டி... நா ஆம்பிள்ளதான். அதனாலதான் மூணு புள்ளைய பெத்தேன்..."

"புருசன் குடிகாரனா இருந்தாலும் நாங்களும் சபலப்படுறதாலதான் நீங்க அப்பன். நாங்க முடியாதுன்னு சொன்னா... "

"ஏய்... இங்க பாரு... உன்னோட பேசிக்கிட்டு இருக்க நேரமில்லை... 100 ரூவா கொடு."

"முடியாதுய்யா... எம்மக வெளி நாட்டுல கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம். அதை குடிக்க நான் தரமாட்டேன். "

"என்னடி ரொம்ப பேசுற... தே... மகளே" என்றபடி அவளை அறைந்துவிட்டு "எவனவது கொடுப்பாண்டி... வந்து வச்சுக்கிறே..." என்றபடி கிளம்பினான்.

'நல்லவேளை சின்னவளுங்க ரெண்டு பேரும் காலேசுக்கு பொயிட்டாளுங்க. ம்... பெரியவ பாவம், படிக்காம வெளிநாட்டுல போயி வீட்டு வேலை செய்து பணம் அனுப்பி இவளுகளை படிக்க வைக்கிறதோட குடும்பத்துக்கும் அவதான் இப்ப எல்லாமே... அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணத்தை முடிக்கணும்.ம்... குடிச்சே அழிக்கிற இந்த ஆளை நம்பி மூணு புள்ளைங்களையும் எப்படி கரையேத்தப் போறேன்... எல்லாம் மாரி செயல்...' வழியும் கண்ணீரைத் துடைத்தபடி வேலையை தொடர்ந்தாள்.

"மரகத அத்தை உங்களுக்கு போன் வந்திருக்கு." என்று வாசலில் நின்று கத்தினான் பக்கத்து வீட்டு பையன்.

"இந்தா வாறேம்பா..." என்றபடி அடுப்பை அணைத்துவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டு, 'தேவியத்தான் இருக்கும். வேற யாரு நமக்கு பண்ணப்போறா...' என்று மனசுக்குள் நினைத்தபடி பக்கத்து வீட்டை அடைந்தாள்.

"வாங்க மதினி. தேவிதான். இப்ப கூப்பிடுவா... ஆமா... என்ன காலையிலயே சண்டையா...?"

"அது எப்பவும் நடக்கிறதுதானே...ம்... நான் வாங்கி வந்த வரம் அப்படி. அப்புறம் என்ன சொல்ல... அடிபடுறதும்... மிதிபடுறதும்... என்னோட காலம் பூராவும் தொடர்கதைதான்... "

போன் மணியடிக்க... "மதினி உங்களுக்காத்தான் இருக்கும் எடுங்க..."

"அலோ..."

"அம்மா... நான் தேவி பேசுறேன்... எப்படிம்மா இருக்கே."

"ம்... நல்லா இருக்கேம்மா... நீ எப்படி இருக்கே..."

"எனக்கென்னம்மா... நல்லாயிருக்கேன்... அப்பா, தங்கச்சிங்க..?"

"ம்... நல்லா இருக்காங்க... எப்பம்மா வருவ?"

"என்னம்மா... வந்து என்ன பண்றது..? இன்னும் ரெண்டு, மூணு வருசம் ஆகட்டும்... நாம நல்லா வரணும்மா... அதுதான் எனக்கு முக்கியம். ஆமா... என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு எதாவது பிரச்சினையா?"

"இ.. இல்லம்மா... அதெல்லாம் ஓண்ணுமில்ல..."

"பொய் சொல்லதம்மா... உன் குரலே காட்டுதே... அப்ப சண்டை போட்டாரா... அடிச்சாரா..? உண்மைய சொல்லுங்க..."

"அது எப்பவும் நடக்கிறதுதானே... அதவிடு... உனக்கும் கல்யாணம் பண்ணனும்... வயசாகுதுல்ல..."

"கல்யாணமா?" வெறுமையாக சிரித்தவள், "அம்மா... முதல்ல தங்கச்சிங்க படிக்கட்டும். அவளுகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு நான் பண்ணிக்கிறேன். ''

"என்னம்மா... அவளுகளுக்கு இப்ப என்ன அவசரம்...?"

"அம்மா... எங்களுக்கு நல்ல தாயைக் கொடுத்த கடவுள் தகப்பனை தப்பா கொடுத்துட்டான். அதோட விட்டானா... மூணு பேரையும் பொம்பளைப்பிள்ளையா வேற படைச்சுட்டான். என்னைய விட்டா அவங்களுக்கு செய்ய யார் இருக்கா... ம்... சொல்லுங்க. அவளுகளுக்கு எல்லாம் நல்லபடியா முடியட்டும். என்னோட வாழ்க்கையைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்."

"ம்... நீ சொன்ன கேட்கவா போறே..."

"அம்மா... செலவுக்கு பணம் அனுப்பியிருக்கேன். அப்பா பணம் கேட்டா கொடு. என்னமோ பண்ணித் தொலையட்டும். நீயாவது அடி வாங்காம இருப்பேயில்ல."

"பணம் கொடுத்தா மட்டும் மாறப் போறாரா... அது சாதிப்புத்தி சவக்காரம் போட்டு கழுவினாலும் போகாது. அதை விட்டுத்தள்ளு"

"பணம் வந்ததும் முதல்ல ஒரு செல்போன் வாங்கிக்க."

"நானா... செல்போன்... சரிதான்... அதையும் உங்கப்பன் தூக்கி வித்துப்புட்டு தண்ணியடுச்சுட்டு சீட்டாடிட்டு வந்துருவான். வீட்டுப் போனுக்குத்தான் கணேச மாமா இந்த மாசம் பணம் கட்டி வாங்கித்தாரேன்னு சொல்லி இருக்கு."

"சரிம்மா... உடம்பை பார்த்துக்கம்மா... நான் அப்புறம் பேசுறேன்..."

"சரிம்மா".

கடல் கடந்த தேசத்தில் கண்ணீரோடு போனை வைத்த தேவி, 'என்னை மன்னிச்சுடுங்கம்மா... உம் பொண்ணு வீட்டு வேலை பாக்கலைம்மா. பல பேருக்கு வீட்டுக்காரியா இருக்காம்மா. ஏஜெண்டை நம்பி வந்து மோசம் பொயிட்டேம்மா. இங்க வந்து சேர்ந்ததும் டான்ஸ் கிளப்புல வேலையின்னு சொன்னான். இப்ப தினமும் ஓருத்தனுக்கு முந்தி விரிக்க சொல்லுறான். எனக்கு தினம் தினம் முதலிரவுதாம்மா. என்னய மாதிரி நிறையப்பேர் உண்டு. எல்லோருமே மனசுக்குள்ள வேதனையோட உங்ககிட்ட சிரிச்சுப் பேசுறோம். என்ன செய்ய எங்க நிலமை தெரிஞ்சா நீங்க தாங்கமாட்டிங்களே. அதான் இதுவரைக்கும் சொல்லலை. இனியும் சொல்ல மாட்டேன்... ' வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என்னடி தேவி... என்னாச்சு... குடும்ப நினைப்பா...? நமக்கெல்லாம் துக்கமும் கூடாது.. தூக்கமும் கூடாது. இன்னைக்கு எவனோ அவனை சந்தோஷப் படுத்தினாத்தான் ஊர்ல உள்ளவங்க வயிறு நிறையும்... வா... மாமா வந்துட்டான் போல... கதவு திறக்கிற சப்தம் கேட்கிது." என்று தோழி ஒருத்தி சொல்லியபடி செல்ல, முகத்தை துடைத்துக் கொண்டு கிளம்பினாள்.

(எனது  சிறுகதைகள் தளத்தில் பிப்ரவரி - 2010 -ல் பகிர்ந்தது. மகளிர் தினத்தன்று மீள்பதிவாக... நன்றி.)
-'பரிவை' சே.குமார்.

சனி, 7 மார்ச், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 23)

முந்தைய பகுதிகள் :



 "சரி விடுங்க... ஏதோ பேசிட்டேன்..." என்றபடி பொங்கலை ஆரம்பிக்க சுப்பியை ஒடித்தவள் கையில் முள் குத்தி ரத்தம் வர. "ஏய் அசடு... கையில முள்ளைக் குத்திக்கிட்டு..." என்று அவளின் விரலை வாயில் வைத்து ரத்தத்தை உறிஞ்சியவன் "நீ தள்ளு நான் அடுப்பை பாக்குறேன்... அரிசியை கலைஞ்சி பாலை எடு..." என இதுவரை எதுவுமே நடக்காதது போல் கண்ணதாசன் பேச, "எப்படிங்க உங்களால் இப்படி இருக்க முடியுது..." என அவன் தலை கலைக்க, அங்கே ஆனந்தப் பொங்கல் பொங்க ஆரம்பித்தது.

இனி...

மாட்டுப் பொங்கல் முடிந்த அன்று மாலை சுந்தரியும் அழகப்பனும் குழந்தைகளுடன் வந்து சேர, கற்பகமும் கணவன் குழந்தைகளுடன் வந்திருந்தாள். இளையவள் கண்மணியும் பிரச்சினைக்குரிய மாப்பிள்ளை ரமேஷூம் வரவில்லை. எல்லாரும் வீட்டில் நிறைந்திருக்க சந்தோஷத்தில் திளைத்திருந்தது அந்த பழைய காலத்து வீடு.

இரவுச் சாப்பாடு முடிந்ததும் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கண்ணதாசனும் வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான்.

"என்ன கண்ணா... சின்னவருதான் வரலையின்ன அந்தப்புள்ளைகளையாச்சும் அனுப்பக்கூடாதா? ஆத்தா அக்கான்னு எல்லாம் ஒண்ணாத் திரியும் போது அதுக இல்லாம... பேரம்பேத்திகளைப் பாக்கணுமின்னு எனக்கு ஆசையிருக்காதா?" மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் கந்தசாமி.

"சித்தப்பா... நாங்கள்லாம் சிராவயல் மஞ்சுவிரட்டுக்குப் பொயிட்டு இருட்டோடதானே வந்தோம். சின்னத்தான் அங்க போயிட்டு வீட்டுக்குப் போக நேரமாயிருக்கும்... காலையில கூட்டிக்கிட்டு வருவாரு..."

"ஆமா மாமா... கண்மணி புருஷன் அதிக பழக்கவழக்கம் உள்ள ஆளு... எங்கிட்டக்கூட பேசினான்... வாறேன்னுதான் சொன்னான்... வந்துருவான்... கோபம் மாறி ஆளு இங்கிட்டு வரணுமில்ல... வரட்டும்..." என்றார் அழகப்பன்.

"ம்... ம்... முறுக்கிக்கிட்டு இருக்காம வந்தாச் சரி..." என்றார் கந்தசாமி.

"முறுக்கிக்கிட்டு கெடந்தா கெடக்கட்டும்... என்ன நம்ம பேரம்பேத்திகள கண்ணுல காட்டாம வச்சிருப்பாரு... அம்புட்டுத்தானே..." காளியம்மாள் புலம்பினாள்.

"அம்மா... நாளைக்கி வருவாங்க... வரமா எங்க போகப்போறாங்க..." இது சுந்தரி.

"சின்னம்மா... அவரு கோவக்காரரா இருந்தாலும் பாசமிருக்கும்... என்னையெல்லாம் எங்கன பாத்தாலும் காரை நிறுத்தி அத்தாச்சி எப்புடியிருக்கேன்னு கேட்டுட்டு.... வா கொண்டே விட்டுட்டுப் போறேன்னு சொல்லுவாரு... என்ன கொணந்தான் கிறுசுகெட்ட கொணம்" என்றான் கற்பகம்.

"ஆமா... உன்னோட கொழுந்தனுக்கு ரொம்பப் பாசந்தான்..." முணங்கினான் குமரேசன்.

"நீ சும்மா இருடா... அவருக்கென்ன... அவரு மேல கை வச்சது தப்புத்தானே.... நம்ம மேலயும் தப்பு இருக்குல்லடா..." என்றாள் கற்பகம் அவனின் தலையில் தட்டியபடி.

"ம்... அதுக்காக.... இந்தா அத்தான் உன்னைய தூக்கிப் போட்டு மிதிச்சிருந்தா... நாங்க பாத்துக்கிட்டா இருந்திருப்போம்... அவரை...." பேச்சை நிறுத்தி அவரைப் பார்த்தான் குமரேசன்.

"ஏம்மாப்ள... ஏன்... நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்துச்சு.... என்னைய ஏன் சந்திக்கு இழுக்குறே... நா உங்க அக்காவை அடிக்கிறதா.... அவ என்னைய தூக்கிப் போட்டு மிதிக்காம இருந்தாச் சரி..." என்றார் கற்பகம் கணவர்.

"என்ன மாப்ள... எம்புள்ளக அப்படியா வளந்திருக்குக..." என்றார் கந்தசாமி.

"நீங்க வளக்கலை மாமா... அங்க வந்ததும் அதுகளா வளந்திருச்சுக..." மெதுவாக முணங்கியவர் காளியம்மாளிடம் "அயித்தை அந்த வெத்தலைப் பொட்டியக் கொடுங்க... " என்று வாங்கி வெத்தலை போட ஆரம்பித்தார்.

"என்னத்தான் சொன்னீக.. சரியா காதுல விழுகலை..." என்றான் மணி.

"நீ வேற சும்மா இரு மாப்ள... வெத்தலையில காரமில்லைன்னு சொன்னேன்..." 

ரொம்ப நாளைக்குப் பிறகு எல்லாரும் ஒண்ணு சேர்ந்ததால் நீண்ட நேரம் சந்தோஷமாகப் பேசிக்கிட்டு இருந்துவிட்டு படுக்கச் சென்றனர்.

றுநாள்....

காலை 9 மணியைப் போல் ரமேஷ் குடும்பத்துடன் வந்திறங்கினான். ஸ்வேதாவும் சங்கரும் ஐயா, ஆயாவைப் போய்க் கட்டிக் கொண்டனர்.

"வாங்க மாப்ள..."  - கந்தசாமி.

"வாங்கப்பா" - காளியம்மாள்.

"மாமா உடம்புக்கு எப்படியிருக்கு..? மறுபடி செக்கப்புக்குப் போனீங்களா?" அன்பாய் அவரின் கை பிடித்துக் கேட்டான்.

"பரவாயில்லைப்பா...  செக்கப் போகணும்..." என்றார்.

"வாங்கத்தான்..." - மணி.

"அத்தான் வாங்க..." - குமரேசன்.

"ம்..." பொத்தாம் பொதுவாய் சொல்லி வைத்தான் ரமேஷ்.

"வா ரமேஷ்... நேத்தே வருவேன்னு பார்த்தேன்..." என்றார் அழகப்பன்.

"இல்லண்ணே... நேத்து சிராவயல் பொயிட்டு ரொம்ப லேட்டாயிடுச்சு... இவகிட்ட பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு போன்னு சொன்னேன்... கூட்டத்துல பஸ்ல இழுத்து வரமுடியாதுன்னு சொல்லிட்டா..." என்றான்.

"சரி... சரி... "

"வாங்கத்தான்... வா கண்மணி..." என்றபடி வந்தான் கண்ணதாசன். அவன் பின்னே கற்பகமும் வந்தாள்.

"சாப்பிடுங்கப்பா..." என்றாள் காளியம்மாள்.

"இல்ல அயித்தை... சாப்பிட்டுத்தான் வந்தோம்... என்ன சித்ரா, அபி மத்தியானம் ஆடா... மாடா..." என்றான் சிரித்தபடி.

"அய்யோ மாடா... அதெல்லாம் சாப்பிடுவீங்களா...?" என்றாள் அபி.

"அட சும்மா கேட்டேன்.... என்ன விசேசம்?"

"நாட்டுக்கோழி ரசம்..."

"ஆஹா... காலையிலயே வயிற்றைக் காயப் போட்டிருக்கலாமோ?"

"உக்காந்து மெதுவாச் சாப்பிடுங்க..." என்றாள் சுந்தரி.

"அது சரி மாப்ள சாப்பாட்டு ராமனான்னு திட்டப் போறாங்க...." என்று சிரித்தவன் "என்ன கோவக்கார மச்சான்... உர்ருன்னு இருக்கீக... எப்படா சட்டையப் புடிக்கலாம்ன்னா... இப்ப தப்புப் பண்ணலையே... ஆத்தா கண்மணி உன்னோட கையைக் காலைக் காட்டுடி... அது வேற என்னைய அடிக்க வந்துறாம..." எனச் சொல்லிச் சிரித்தான்.

"நீங்க வேற ஏந்த்தான்... அவன் சும்மா இருக்கான்" என்றான் கண்ணதாசன்.

"அட மச்சானை கேலி பேசக்கூடாதா?"

"நல்லா பேசுங்க... என்னமோ தெரியலை... பொங்கல் முடிஞ்சதும் சின்னம்மா இவனுக்கு வேப்பெண்ணை கொடுத்திருச்சு போல... அதான் உர்ருன்னு இருக்கான்..." என்று கண்ணதாசன் சிரிக்க, எல்லாரும் சிரித்தனர்... குமரேசனும் சேர்ந்து கொண்டான்.

காலை 11 மணிக்கெல்லாம் ஊரில் உள்ள சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பங்கு பிரிக்க அமர்ந்தனர்.

"ஏப்பா கந்தசாமி... இப்ப பொம்பளபுள்ளைகளுக்கு ஆத்தா வீட்டுச் சொத்துன்னு கொடுக்குறாங்க... நீ என்ன முடிவு பண்ணி வச்சிருக்கே..." கந்தசாமியின் சித்தப்பா தணிகாசலம், முன்னந்தலையில் முடிகள் இல்லாமல் பளபளன்னு மின்னிய வழுக்கையைத்  தடவியபடி கேட்டார்.

"உங்க பேராண்டிகளைக் கேளுங்க சித்தப்பா..."

"என்னப்பா... சொல்லுங்கப்பா..."

"ஐயா... அவனுககிட்ட என்ன கேட்டுக்கிட்டு... எங்ககிட்ட வேணுங்கிற சொத்து இருக்கு... அதைப் பாக்கவே எங்களால முடியல... இதுல இங்க வேற சொத்தா... அதெல்லாம் வேண்டாம்... மச்சானுங்க நல்லாயிருந்தா எதையும் கேட்டு வாங்கிக்கலாம்...." என்றான் ரமேஷ்.

"சின்னவுக டப்புன்னு போட்டு ஒடச்சிட்டாங்க... மூத்தவரு ஒண்ணும் சொல்லலையே..." என்றார் பரமசிவம்.

"இதுல நாஞ் சொல்ல என்ன இருக்கு மாமா.... அதான் தம்பி சொல்லிட்டானே... மச்சானுங்க நல்லாயிருந்தா அதைச் செய்யிங்க... இதைச் செய்யுங்கன்னு கேட்டு வாங்கிக்கலாம்... சொத்துல பங்கு வச்சிக்கிட்டு பாசத்தை விட்டுட்டு போக வேண்டியிருக்குமே மாமா..." என்றார் அழகப்பன்.

"அப்ப பொண்ணுங்களுக்கு வேண்டாம்... இருக்க சொத்தை பிரிச்சினை இல்லாம பிரிச்சிட வேண்டியதுதானே...." என்றார் தணிகாசலம்.

"இதுல அடிச்சிக்கிற என்ன இருக்கு... அப்பாதான் பிரிக்கணுமின்னாங்க... அவங்க ஆசை... பிரிச்சிக் கொடுத்துட்டு அவருதானே பாக்கப்போறாரு..." என்றான் மணி.

"எல்லாருக்கும் நா ஒண்ணு சொல்லிக்கிறேன்... சின்னவுகளுக்கு சொந்த வீடு இருக்கு... அதனால அந்த மாமரத்துக் கொல்லையை எங்களுக்கு கொடுத்துட்டா... அதுல வீடு கட்டிப்போம்..." என்று ஆரம்பித்து வைத்தாள் சித்ரா.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 6 மார்ச், 2015

மனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்

கோதரர் ரூபன் மற்றும் திரு. யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய சிறுகதை மூன்றாம் பரிசுக்குரிய கதையாக தேர்வாகியிருக்கிறது. அடிக்கடி போட்டிகள் நடத்தினாலும் மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள். நடுவர்களாக சிறப்பாக பணியாற்றிய திரு. ரமணி ஐயா, திரு.புவனேந்திரன், திண்டுக்கல் தனபாலன் அண்ணா ஆகியோருக்கும், கில்லர்ஜி அண்ணன், திரு. அ.பாண்டியன், திரு. இராஜமுகந்தன், திருமதி. அ,இனியா உள்ளிட்ட ஆலோசனைக் குழுவுக்கும் வாழ்த்துக்கள். மேலும் பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


சென்றவார பாக்யா மக்கள் மனசு பகுதியில் எனது கருத்து இடம் பெற்றுள்ளது. பத்திரிக்கையில் தொடர்ந்து நான்காவது வாரமாக எனது எழுத்து இடம் பிடித்திருக்கிறது. மக்கள் மனசு பகுதியை சிறப்பாகத் தொகுத்துவரும் எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு வாழ்த்துக்கள். 



மீண்டும் அபுதாபிக்கு வந்தாச்சு... அலைனில் இருக்கும் போது ஏழு மணிக்கு அலுவலகம் சென்றால் மூணு மணிக்கெல்லாம் அறைக்குத் திரும்பிவிடுவேன். நிறைய நேரமிருந்தது. இங்கு இந்த இரண்டு மாதத்தில் ஒரு பாகிஸ்தானியும் மலையாளியும் சேர்ந்து எல்லாத்தையும் மாற்றி வைத்துவிட்டார்கள். இங்கும் காலை 8 மணி முதல் 5 மணி வேலை செய்கிறோம் என்று சொல்லித் தொலைத்து விட்டார்கள். அங்கிருந்து வந்த முதல் நாள் எப்பவும் போல் 7 மணிக்குச் சென்றால் எவனையும் காணோம். நம்ம பயலுக 8 மணிக்கு மேல் வர, எகிப்துக்காரனுங்க எல்லாம் 9 மணிக்குத்தான் வந்தானுங்க. வந்ததும் அவனிடம் கேட்டால் இங்கு 8 மணி முதல் 5 மணி வரை தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றான். மதியம் சாப்பிடப் போனால் என்றதும் 6 மணி வரைக்கும் இருக்கணும் என்றான். எனக்கும் அவனுக்கும் சண்டை... முடிஞ்சதைப் பாருடா என்று சொல்லிவிட, பின்னர் மெதுவாக சமாதானம் ஆனான். 

அவனது பணிகளையும் கடந்த இரண்டு வருடமாக நான் செய்வதால் இப்போது என்னிடம் மட்டும் கொஞ்சம் குழைந்து பேசுவான். சென்ற வாரத்தில் ஒரு நாள் சான்றிதழ் பணிக்காக அபுதாபி கல்வி அமைச்சகம் சென்று வந்தேன். எங்கே போனாய் என்றான். இண்டர்வியூ போனேன்... தேர்வாகிவிட்டேன். வேலை ஓகேதான்... கத்தாராச்சும் சவுதியாச்சும் போகச் சொல்றான் என்றதும் ஏன் போறே... அங்கெல்லாம் செலவு அதிகம்... அப்படியிப்படின்னு புலம்பித் தீர்த்துட்டான். எனக்கு மேலே இருக்கும் எகிப்துக்காரன் கொஞ்சம் நல்லவன்... கொஞ்சம் கெட்டவன்... சில நேரம் அவனுக்காக பரிவு தோணும்.. சில நேரம் நம்ம பிறவிக்குணம் அவனுக்கிட்ட எகிறும். உடனே உனக்கு ரொம்பக் கோபம் வருது. குறைச்சிக்க என்று வந்து தடவிக் கொடுப்பான். இப்படித்தான் ஓடிக்கிட்டு இருக்கு.

டந்த ஒரு வாரகாலமாக விஷாலுக்கு காய்ச்சல்... மதுரை வந்திருக்கிறார்கள்... மருத்துவமனையில் காட்டியும் 101-ல் இருந்து குறையவேயில்லை. நேற்று மருத்துவமனையில் சேர்த்தாச்சு. மருத்துவ பரிசோதனையில் டைபாயிடு காய்ச்சல் என்பது உறுதியாக நேற்று முதல் மருத்துவமனையில் குளூக்கோஸ் ஏறி வருகிறது. மருந்துகளை எல்லாம் நரம்பில் செலுத்தி வருகிறார்கள். அவனுக்கு முடியாமல் வந்ததில் இருந்து வலைப்பக்கமும் முகநூல் பக்கமும் அதிகம் வரவில்லை. இன்று காலை என்னிடம் பேசினான். இப்போது பரவாயில்லை.

ஜீத்துக்கு ஆண் குழந்தை பிறந்த அன்று சகோதரர் ஒருவர் போன் பண்ணி பேசினார்... நீங்க தல ரசிகருல்ல ட்ரீட் கொடுங்க என்றார். ஒன்றும் சொல்லாமல் நான் எதுக்கு ட்ரீட் தரணுமின்னு சில வார்த்தைகளைச் சொல்லிட்டு விட்டுட்டேன். அன்று மாலை ஒரு நண்பர் போன் பண்ணி ட்ரீட் எப்போ என்றார். எதுக்கு என்றேன்.... என்ன உங்க தலக்கு பிள்ளை பிறந்திருக்கு... அதுவும் ஆம்பளைப் பிள்ளை... பெரிய ட்ரீட்டாக் கொடுங்க என்றார். என்னோட பிள்ளைங்க ஸ்கூல் போகுதுங்க... அதுகளுக்கு இப்போ பிறந்தநாளும் இல்லையே என்றேன் சிரிக்காமல்... நீங்க தலயோட தீவிர ரசிகர்... அவரோட படத்துக்குத்தான் போவீங்க... அப்ப குழந்தை பிறந்ததுக்கு டீரீட் கொடுக்கலைன்னா எப்படி என வசனம் பேசினார்... ஏலே... நீ திங்கணுமின்னா வா... போயி தின்போம்... எவனுக்கோ பிள்ளை பொறந்துக்கு எனக்கிட்ட ட்ரீட் கேக்குறே... கொய்யால... என்னவோ எனக்குப் பிள்ளை பிறந்த மாதிரின்னு கொஞ்சம் சப்தமாகப் இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை இறக்கவும்... ஐயா... எனக்கு ட்ரீட்டே வேண்டாம்.. தெரியாமக் கேட்டுட்டேன்... ஆளை விடுங்க சாமி என்று போனை வைத்தவர்தான் அதன் பிறகு கூப்பிடவேயில்லை.


காக்கிச் சட்டை படம் பார்த்தேன். இணையத்தில் வந்த நல்லாயிருக்கு என்ற விமர்சனங்கள்தான் படத்தைப் பார்க்க வைத்தது. விறுவிறுப்பு இல்லாத கதை... நர்ஸாக இருக்கும் நாயகி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். இந்தளவுக்கு விவரமான நர்ஸை எந்தப் படத்திலும் பார்த்ததில்லை. சிவகார்த்திகேயன் இந்தக் கெட்டப்பு, இந்தப் பேச்சு, இந்த நடனம் என எல்லாவற்றையும் எப்போ விட்டொழித்து தன்னாலும் இன்னும் சிறப்பாக நடிக்க முடியும் என்று காட்டப் போகிறாரோ தெரியவில்லை. அதிலும் சட்டையில் பட்டன் போடாமல் பாடலுக்கு ஆடுவதை நிறுத்தவே மாட்டாரு போல... முடியலை... விஜய் சேதுபதி மிகச் சிறந்த நடிகன்... ஆனால் எல்லோரும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது சிவகார்த்திகேயனைத்தான் என்பது வருத்தமான விஷயம் என்பதை இந்தப் படம் பார்க்கும் போது உணர்ந்தேன்.  என்னை அறிந்தால்படத்தின் கதையை ஒத்த கதையாக இருந்தாலும் அதில் இருந்த ஒரு விறுவிறுப்பு இதில் இல்லை. சிவகார்த்திகேயன் தன்னை மாற்றிக் கொண்டால் நிலையான இடத்தைப் பிடிக்கலாம்.

நான் மிகவும் ரசிக்கும் பாடல்... உங்கள் ரசனைக்காக...

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 3 மார்ச், 2015

விதியின் பிடியில்...


பிரிந்தவர் கூடினால்
பேசவும் கூடுமோ...?
எங்கோ படித்தது...
நீண்ட பிரிதலுக்குப் பின்
நீயும் நானும்
ஒரு பொங்கல் நாளில்
சந்தித்தபோது
நமக்குள்ளும் நிகழ்ந்தது...

எப்போதும் போல்
இல்லாவிட்டாலும்...
கொஞ்சம் பேசினோம்
என்றாலும்
புன்னகை பூக்காத
உதடுகள் போலியாய்....

எத்தனை வலி...
எத்தனை நிகழ்வு...
இரண்டு பக்கமும்
இழப்புக்கள்
இல்லையென்றாலும்
நம்மில் நம்மை
இழந்ததை அறியாத 
சொந்தங்களுடன்
இணைந்தே 
பயணிக்கிறோம் இன்று...

எல்லாம் மறந்தோமோ..
மரிக்கச் செய்தோமோ...
தத்தம் துணையுடன்
சந்தோஷமாய்
நகர்த்துகிறோம் நாட்களை....

துளிக்கும் கண்களைச்
சூனியமாக்கி...
விலகி நகர்கிறோம்...
விதியின் பிடியில்
விதிக்கப்பட்ட வாழ்க்கைப்
பயணத்தில்...
மீண்டும் சந்திக்கலாம்
இன்னும் பக்குவப்பட்ட
மனதுடன்...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 1 மார்ச், 2015

செவலைப்பசு

செவலைப்பசு காணாமப் போயி இன்னைக்கோட மூணு நாளாச்சு. அது காணாமப் போனதுல இருந்து சோறு தண்ணியில்லாம குடும்பமே தேடுது. இது விவசாயக் காலங்கூட கிடையாது. பயித்துல மேஞ்சுச்சுன்னு பிடிச்சிக் கட்டி வைக்க, நல்ல வெயில் காலம்... ராசுதான் அவுத்து விட்டுட்டு வந்தான்.. அப்பவே ரெங்கநாயகி காளைக்கி கத்திக்கிட்டு நிக்கிது... அவுத்துவிட்டு எங்கிட்டும் ஓடிறாமன்னு கத்திக்கிட்டுத்தான் இருந்தா. எங்க போவப்போகுது... மேச்சலுக்குப் போற இடத்துல கோயில் காளைக வருமுன்னு அவுத்துவிட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டான். 

மத்தியானம் வீட்டுக்கு தண்ணிக்கு வர்ற மாட்டைக் காணாமேன்னு எப்பவும் மேயுற பக்கம் போயி பாத்தா கிடேரி, கருத்தப்பசு, பில்லைப்பசுவெல்லாம் செவனேன்னு மேஞ்சிக்கிட்டு நிக்கிதுக.. செவலையை மட்டும் காணோம். 'ஆத்தி அப்பவே சொன்னாளே... கொலையை அறுக்கப்போறாளே'ன்னு தேடி ஆத்துப்போயித்தான் வீட்டுக்கு வந்தான். 'அப்பவே சொன்னேன் கேட்டீகளா? காளைக்கி கத்திக்கிட்டு எங்கிட்டுப் போச்சோன்னு ஒப்பாரி வச்சவ, சேலையை அள்ளிச் செருகிக்கிட்டு முத்துப்பயலையும் கூட்டிக்கிட்டு தேடிப் பொயிட்டு எட்டுமணிக்குத்தான் வந்தா. அதே மாதிரி ராசு ஒருபக்கமும் சீதா ஒருபக்கமுமாத் தேடி ஆத்துப்போயித்தான் வீட்டுக்கு வந்தாக. தேடித்தேடி காலுதான் வலிச்சதே ஒழிய மாட்டைக் கண்டுபிடிக்கவே முடியலை.

"எங்க போச்சுன்னே தெரியலை... மூணு நாளாத் தேடுறோம் கண்டேபிடிக்க முடியாம மாயமா மறைஞ்சிருச்சே... எவனோ பிடிச்சி வித்துப்புட்டானோ என்னவோ?" புலம்பினாள் ரெங்கநாயகி.

"பால் மாடா இருந்தாலோ இல்லை போடுஞ் செனையா இருந்தாலோ பிடிச்சி வித்திருப்பானுங்கன்னு சொல்லலாம்.. காளைக்கி கத்துற மாட்டை எவன்டி புடிச்சி விப்பான்... காளை நோக்கத்துல எங்கிட்டாச்சும் போயிருக்கும்..." மனைவியைத் தேற்றினான் ராசு.

"ஏங்க குறி பாத்தா என்ன... முத்தம்மாக்காவுட்டு எருமை காணமப்போயி குறிகாரர் சொன்னபடி ஆறு மாசத்துக்கு அப்புறம் கிடைச்சதுல்ல.. அது மாதிரி எதாவது சொன்னாங்கன்னா.. முத்துப் போட்டுப் பாக்கலாங்க..." வேகமாகக் கேட்டாள் ரெங்கநாயகி. அவள் சொல்வது சரிதான்... முத்தம்மாக்காவுட்டு எருமையை பிடிச்சி வச்சிக்கிட்டானுங்க... அவங்களும் தேடாத இடமில்லை... குறி கோடாங்கின்னு அலைஞ்சாங்க.... அப்படியும் கிடைக்கலை... அப்பத்தான் கைகாட்டியில முத்தையான்னு ஒருத்தர் முத்துப் போட்டுப் பார்த்து சொல்ற குறி அப்படியே பலிக்கிதாம்... சொன்னா சொன்னபடி நடக்குதாம்... ஓடிப்போன பிள்ளை இங்கதான் இருக்கு போயி பாருன்னு சொன்னா அது அப்படியே பலிக்கிதாம்... ரொம்ப பிள்ளைங்களைப் பிடிச்சாந்திருக்காகளாம்ன்னு சவுந்தரம் தம்பி தங்கையா வந்தப்போ சொல்ல, அங்க போனாங்க... மாடு காணாமப் போயி ஆறாவது மாசம் அதுவா வரும்ன்னு சொன்னாரு. இவுகளும் நம்பினாலும் ஆறு மாசத்து அப்புறமான்னு கொஞ்சம் அவநம்பிக்கையோட இருந்தாங்க. ஆனா அந்தாளு சொன்ன மாதிரி ஆறாவது மாசம் முடியிறதுக்குள்ள மாடு அதுவா வீட்டுக்கு வந்திருச்சு. அந்த நம்பிக்கையிலதான் சொல்றா.

"ம்.. நாளக்கி காலையில பொயிட்டு வாறேன்.." என்றான். செவலப்பசு, அப்படி ஒண்ணும் பிரமாதமாக் கறக்குற மாடு கிடையாது. காலையில ஒண்ணரை லிட்டரும் மத்தியானம் ஒரு லிட்டரும் கறக்கும்.. மயிலப்பசு போட்ட கன்னுக்குட்டிதான் இந்த செவலைப்பசு... கண்ணுக்குட்டியா இந்த கசாலைக்குள்ள ஓடித்திரிஞ்சதுதான்... முத்துப்பயலுக்கு அஞ்சு வயசு இருக்கும் போது பொறந்தது. அவனுக்கு இது ரொம்பக் குளோஸ்.. இதோடதான் விளையாட்டே... கட்டிப் பிடிச்சிக்கிட்டு கிடப்பான். அப்படியே வளந்து கிடேரியாச்சு.. அப்புறம் முதக் கன்னுக்குட்டி போட்டதும் சீதாவும் முத்துவும் கிடேரியை செவலைப்பசு ஆக்கிட்டாங்க. ஒரு தடவை பக்கத்துல போன மாமனாரைப் பாத்து கொம்பாட்டவும் கண்ணச் சுத்தி கருப்பு கெடக்கு மாப்ள.. பிள்ளைகளை குத்திக்கித்திப் பிடாம பேசாம வித்துப்புடுங்கன்னாரு...  அடப்போங்க மாமா, சீதாவும் முத்துவும் கட்டிப்பிடிச்சிக்கிட்டு கிடப்பாகன்னு சொல்லிச் சிரிச்சான். அந்தச் சமயத்துல முத்துப்பய அதுக்கிட்ட போக அவனை நாக்கால நக்க ஆரம்பிச்சிச்சு... அட ஆமா அதுக்கும் தெரியிது பாருங்கன்னு மாமனாரு பொயிட்டாரு. அந்தப் பாசந்தான் ரெண்டும் சோறு கூட தின்னாம அழுதுக்கிட்டு கிடக்குக.

சாயந்தரம் ஒருக்கா ஒரு ரவுண்டு பொயிட்டு ராத்திரித்தான் வந்தான். மாடுகளுக்கு அள்ளிப் போட்ட வைக்கோலையெல்லாம் அங்கிட்டும் இங்கிட்டும் இழுத்துப் போட்டு படுத்துக்கிடக்க, 'ஏய்...ஏய்... இம்பா'ன்னு எழுப்பி, அதையெல்லாம் காலால் தள்ளி குமிச்சி வச்சிட்டு திரும்பியவன் செவலைப்பசு கட்டுமிடம் வெறுமையாகத் தெரிய, அந்தக் கல்லு மேலே உக்காந்து கண் கலங்கினான். அதுக்கு பாதச்சுழி கெடக்கு வீட்டுக்கு ஆகாதுன்னு எத்தனையோ பேரு சொல்லியும் அது இங்க பொறந்தபுள்ள... அதை விக்கவே மாட்டேன்.. செத்தாலும் இங்கதான் சாகணும்... அந்தா அந்த மாமரத்துக்கு கீழதான் அதைப் புதைக்கணுமின்னு சொல்லி மறுத்துட்டான். அந்தச் சுழி அவங்களை ஒண்ணும் பண்ணலை... நல்லாத்தான் இருக்காக. சீதா வந்து அப்பா அம்மா கூப்பிடுதுன்னு சொல்ல கண்ணைத் தொடச்சிக்கிட்டுப் போனவன், 'ம்ம்மா'ன்னு செவலப்பசு கூப்பிடுற மாதிரி இருக்க திரும்பிப் பார்த்தான். அந்த இடம் வெறுமையாய் இருந்தது. கருத்தப்பசுதான் சொர்ருன்னு மூத்தரம் பேஞ்சது. கருத்தப்பசு எப்பவும் அப்படித்தான் மூத்தரம் பேஞ்சா கசாலைக்குள்ள இருக்க தாவெல்லாம் நிரம்புற மாதிரித்தான் பெய்யும். எம்புட்டுத் தண்ணிதான் குடிக்குமோ தெரியலை.

மயிலப்பசு போட்ட கன்னுக்குட்டிகள்ல ரெண்டுதான் பொட்டைக் கன்னுக்குட்டி, மத்ததெல்லாம் காளைகதான்... பொட்டைகளை மட்டும் வச்சிக்கிட்டு காளைகளை எல்லாம் வித்துட்டான். மூத்தது கருத்தப்பசு, இளையது செவலைப்பசு. கருத்தப்பசுவும் நாலு கன்னுக்குட்டி போட்டிருச்சு. ஆத்தா மாதிரி கெட்டியா மூணு லிட்டரு கறக்கும். என்ன ஒண்ணு கண்ணுக்குட்டிக்கு ரெண்டு முணு மாசத்துக்கு அப்புறம் பால் கொடுக்காது. மாருல வாயை வச்சாலே படக்குன்னு வெட்டும். பக்கத்துலயே ஒரு ஆளு நின்னு 'ஏய்ய்ய்ய்..'ன்னு அதட்டிக்கிட்டே நிக்கணும். ஏழெட்டு மாசத்துல பால் பீச்ச விடாம உதைய ஆரம்பிக்கும். அப்புறம் காலைக்கட்டித்தான் பீச்சணும். ஆனா செவலைப்பசு கறக்கும் போது கன்னுக்குட்டிக்கின்னு பாலை மடியில ஏத்தி வச்சிக்கிட்டு அப்புறம் கன்னுக்குட்டிய அவித்து விட்டதும் கொடுக்கும். பாரு மறைச்சிக் கொடுக்கிறதைன்னு ஒரு சில சமயம் ரெங்கநாயகி மறுபடியும் பீச்சிக்கிட்டு வந்துருவா. ஒண்ணறை லிட்டருனாலும் கிட்டத்தட்ட ஒரு வருசம் கொடுக்கும் அப்பறந்தான் கொஞ்சம் கொஞ்சமாக் குறைஞ்சு பால் வத்திப்போகும்.

"என்ன வந்ததும் வராததுமாக அங்க போயி உக்காந்துட்டீக... செவலைப்பசு கிடச்சிடுங்க... எனக்கு நம்பிக்கை இருக்கு... குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க...கருக்கல்ல கைகாட்டி போகணுமில்ல... " என்றாள் ரெங்கநாயகி, மாடு காணாமப் போன அன்னைக்கித்தான் ஆட்டம் போட்டா... இந்த மூணு நாளா அவன் படுற பாட்டையும் அலைச்சலையும் பாத்து அவனைத் திட்டலை.... திட்டி என்னவாகப் போகுது... தொலையட்டுமின்னா அவுத்து விட்டாரு... நம்ம நேரம்... அவரு என்ன பண்ணுவாரு... பாவம்... விடிஞ்சதுல இருந்துதான் அலையிறாரு.... எவனோ பிடிச்சிக் கட்டி வச்சிருக்கான்... எப்படியும் வந்துரும்.... என்று தன்னைத் தேற்றிக்கொண்டு அவனை திட்டுவதை விட்டிருந்தாள்.

விவசாய சமயத்துல பக்கத்து ஊரு வயலுகளுல போயி பயிரை மேஞ்சா புடிச்சிக் கட்டிப் போடுவாங்க. அப்புறம் மாட்டுக்காரங்க தேடிப்போயி மாட்டுக்கு பத்தோ இருபதோ கணக்குப் பண்ணி கொடுத்துட்டு அவங்க திட்டுறதையும் வாங்கிக்கிட்டு வருவாங்க. இவங்க ஊர்லயும் ஆடு மாடெல்லாம் பிடிச்சிக் கட்டுவாங்க. ஆனா காசை கோயில் உண்டியல்ல போடச் சொல்லிடுவாங்க. பிடிச்சாந்து கட்டுனவங்க வாங்கிக்க மாட்டாங்க... இப்படித்தான் நாலஞ்சி வருசத்துக்கு முன்னால  விவசாய சமயத்துல மேயப்போன மாடுகள்ல சில மாடுகள் காணாமப்போச்சு.. மேய்க்க ஆளுக போயிருந்தும் விளையாட்டு மோகத்துல விட்டுட்டு அழுதுக்கிட்டே வந்து வீட்டுல பூஜை வாங்குச்சுக... அதுல சீதாவும் ஒருத்தி, அப்புறம் தேடிப்போனா பனசமக்கோட்டை பாரி புடிச்சி வீட்ல கட்டி வச்சிருந்தாரு.. பேசிக்கீசி அவுத்துக்கிட்டு வந்தா பஞ்சுப்புள்ளயோட பசுவ மட்டும் கணோம்... ஏழு மாச சினையா வேற இருந்துச்சு. அவனுக்கிட்ட கேட்டா... இங்க கட்டிக்கெடந்த மாடுகளைத்தான் பயக வெரட்டிப் புடிச்சாந்தானுங்க... வெரட்டும் போது எங்கிட்டாச்சும் போயிருக்கும்ன்னு சொல்லிட்டான். ஆனா மாசக்கணக்காயியும் கண்ணாப் பொறப்புலயே காணோம். 

கிட்டத்தட்ட ஒம்போது மாசத்துக்கு அப்புறம் மில்லுல வேலை பாக்குற கண்ணப்பய, கூட வேலைப்பாக்குற காடத்தி கருப்பு வீட்டு விசேசத்துக்குப் போக, பக்கத்து வீட்டுல கட்டிக்கெடந்த மாட்டைப் பாத்து இது பஞ்சம்மா மாடு மாதிரி இருக்கேன்னு மெதுவா கருப்புக்கிட்ட விசாரிச்சி இருக்கான். செனையா இருக்கும் போது அவங்க அப்பா கொண்டாந்து கொடுத்தாரு... கண்ணு போட்டு இப்ப பால் கறக்குதுன்னு சொல்லியிருக்கான். இது பனசமக்கோட்டை பாரி மகவீடுதானேன்னு கேக்க ஆமான்னும் சொல்லியிருக்கான். அப்புறம் என்ன ஆளுப்பேருக போயி பாரியோட சண்டை போட்டு, பஞ்சாயத்து வச்சி... பாரி மக வளத்ததுக்கு கொஞ்சம் பணத்தைக் கொடுத்துட்டு மாட்டையும் கன்னையும் ஓட்டிக்கிட்டு வந்தாங்க... அத்தனை மாசத்துக்கு அப்புறமும் ஓட்டப்போன பஞ்சைப் பாத்ததும் மூசுமூசுன்னு மூச்சு விட்டு கையை கன்னத்தை எல்லாம் நாக்கால நக்குச்சாம் அந்தப் பசு... பஞ்சு எல்லாருக்கிட்டயும் சொல்லிச் சொல்லி சந்தோசப்பட்டுச்சு.. ..நினைவுகள் பூக்க வைத்த கண்ணீரைத் துடைத்தபடி அது மாதிரி செவலப்பசுவும் கிடைச்சிரணும் மாரி என்று வேண்டிக் கொண்டாள் ரெங்கநாயகி.

'நீங்கள்லாம் சாப்பிட்டீகளா?"தலையைத் துவட்டியபடி கேட்டுக்கொண்டு வந்தான் ராசு. 'சாப்புட்டோம்... அதுக ரெண்டும் கொஞ்சூண்டு சாப்பிட்டு போதும்ன்னு சொல்லிடுதுக... எனக்கு ரெண்டு வாய்க்கு மேல எறங்க மாட்டேங்குது...' என்றாள். 'எனக்கும் வேணாம்... மனசே நல்லாயில்லை...' என்றான். 'ரெண்டு நாளா ஒழுங்காச் சாப்பிடலைன்னுதான் உங்களுக்குப் பிடிச்ச கத்திரிக்காயும் கருவாடும் போட்டு வச்சிருக்கேன்... அலைஞ்சிட்டு வந்து சாப்பிடாமப் படுத்தா நல்லாவா இருக்கும்... வாங்க... சீதா அப்பாவுக்கு தட்டெடுத்து வையி' என்றவள் அவனைச் சாப்பிட வைத்தாள். வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் படுத்தவன் 'செவலைப்பசு வந்திருமா? எவனும் பிடிச்சி கேரளாவுக்கு அடிமாடு ஓட்டிக்கிட்டுப் போறவனுகக்கிட்ட வித்திருப்பானுங்களோ?' என்று நினைத்தான். எங்க நின்னாலும் ஏய் செவலைன்னு கூப்பிட்டா திரும்பிப் பார்த்து 'ம்ம்மா'ன்னு கத்துமே... எங்கெங்கயோ தேடி அலையிறேன்... ம்ம்மான்னு கத்தக் கூடாதா? என்று நினைத்தவனுக்கு கண்ணீர் வந்தது, மாட்டுக்காக அழுகிறானான்னு நினைக்கலாம்... அதை மக மாதிரியில்ல வளத்தான். அழுகாம என்ன செய்வான்... ராசு அலைஞ்ச அசதியில அடிச்சிப் போட்ட மாதிரி தூங்கினாலும் கனவெல்லாம் செவலைப்பசுவாவே வந்தது.

கருக்கல்ல கிளம்பி கைகாட்டி போனான்... இவனுக்கு முன்னே இரண்டு பெண்கள் வந்து அமர்ந்திருந்தனர். இவன் மூணாவது ஆள்.. முத்தையா குளித்து சாமி கும்பிட்டு குறி பாக்க உக்காரும் போது எட்டு மணியிருக்கும். இவன் முறை வரும்போது மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. இவன் குறியை எடுத்ததும் 'வளத்த பொருளை தொலச்சிட்டு திக்கித் தெணறி நிக்கிறியேப்பா.. கவலைப்படாதே... உன்னோட வீட்ல இருந்து எதாவது ஒண்ணு போகனுங்கிறது விதி... அது நீ வளத்த பொருளை அனுப்பிருச்சு.. நல்லதுக்குன்னு நினைச்சிக்கப்பா.. இல்லேன்னா நீ வேறா எதையாச்சும் இழந்திருப்பே...' என்றார். 'எம்மாடு கிடைச்சிருமா?'ன்னு மெதுவாக் கேட்டான். 'மூணு நாளைக்குள்ள உங்கண்ணுல காட்டுவேம்ப்பா.... அப்படி காட்டலைன்னா மூணு வருசமானாலும் கிடைக்காதுப்பா...' என்றார். அத்தோடு அவன் குறி முடித்து அடுத்த குறிக்குத் தாவினார். 

'என்ன இவரு... கிடைக்கும் கிடைக்காதுன்னு சொல்லாம மூணு நாளுல கிடைக்கலைன்னா கிடைக்காதுன்னு சொல்றாரு... இதுக்குத்தான் இந்த குறி சோசியத்தையெல்லாம் நம்புறதில்லை... இதுவரைக்கும் கிடைச்சிருமின்னு இருந்த நம்பிக்கை இப்ப செத்துப்போச்சு... ரெங்கநாயகிக்கிட்ட சொன்னா ரொம்ப வருத்தப்படுவா... பிள்ளைகளுக்குத் தெரிஞ்சா கஞ்சியே குடிக்காதுக.... என்ன பண்ணுறது... நப்பன்நாத்தா செத்தப்போ ஒரு வாரம் அழுதுட்டு அப்புறம் வேலையைப் பாக்கலையா.... செத்துட்டாகன்னு இன்னைக்கி வரைக்கும் அழுதுகிட்டு சாப்பிடாமயா கெடக்கோம்... அப்படி கொஞ்சம் கொஞ்சமா மறந்துருங்க.. என்று நினைத்தபடி வண்டியை செலுத்தியவன், பசி வயிற்றைக் கிள்ள கைகாட்டி விலக்கில் இருந்த சின்ன டீக்கடை முன் வண்டியை நிறுத்தினான்.

'ஏய் அலமி மாடு கத்துது பாரு.... வக்கலை அள்ளிப் போடு....' என்று கத்திக் கொண்டிருந்தவரிடம்  'அண்ணே சாப்பிட ஏதாச்சும் இருக்கா?' என்று கேட்டான். 'இருக்கு உள்ள வாங்க....' என்றவர் 'நாய்க்கு உக்கார நேரமில்லை... இதுல இவ அண்ணங்காரன் மாட்டைக் கொண்டு இங்க விட்டுட்டுப் போயிருக்கான்... நம்ம மாடுக அவுத்து விட்டா பொயிட்டு வந்திருங்க... இது புதுமாடு... எங்கிட்டாச்சும் ஓடிட்டா அவனுக்கு யாரு எழவு போடுறது... சரி... எங்கதை உங்களுக்கு எதுக்கு... குறி பாக்க போனியளாக்கும்... காலையில இங்கிட்டுப் போறதைப் பாத்தேன்... அந்தாளு சொன்னா சொன்னபடி நடக்குங்க... நமக்கு நல்லதுதானே சொன்னாரு,,' என அவன் முகம் பார்த்தார்., 'மாட்டைத் தொலச்சிட்டு குறிபாக்க வந்தேன்...இழுத்தாப்ல சொல்லியிருக்காரு...' என்றான். 'ம்... அவரு சொன்னா நடக்குங்க....சரி... இட்லி, தோசை, பொங்கல், வடை இருக்கு... உங்களுக்கு என்ன வேணும்?' என்றவரிடம்  'இட்லி இருந்தாக் கொடுங்க...' என்றான். 

அவர் இட்லி எடுக்கப்போக, அன்றைய பேப்பரை விரித்துப் பார்த்தவன், நினைவு வந்தவனாய் 'அண்ணே தேங்காய்ச் சட்னி வைக்காதீங்க.... காரச்சட்னி மட்டும் போதும்' என சத்தமாகச் சொல்ல, ராசுவின் சத்ததைக் கேட்டு கடைக்குப் பின்னாலிருந்து 'ம்ம்மா' என குரல் கொடுத்தது அவனின் செவலைப்பசு. 
-'பரிவை' சே.குமார்.