மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 21 ஏப்ரல், 2014

மனசின் பக்கம் : கனவுகளைச் சுமக்கும் காலம்

மே மாதம் ஊருக்குப் போக டிக்கெட் எல்லாம் போட்டாச்சு. ஆரம்பத்தில் ஒரு மாதத்துக்கு ஓகே என்று சொன்னவன் போன வியாழன் பணி முடிந்து வீட்டுக்கு வந்ததும் போனில் கூப்பிட்டு உன்னோட லீவை மேனேஜ்மெண்ட் 15 நாள் ஆக்கியிருக்கு அப்படின்னான். இவன்தான் எல்லாம்... மேனேஜ்மெண்ட் மேல பலி போடுறான்னு கொஞ்சமாக குரலை உயர்த்தினேன். 

உடனே நீ போன பாக்குறதுக்கு ஆள் இல்லை... இப்ப ரெண்டு பேர் ராஜினாமா பண்ணிட்டுப் பொயிட்டானுங்க... ஒம்பது பேர் பாக்க வேண்டிய புராஜெக்டை நாலு பேர வச்சி சமாளிக்கிறோம்... உன்னைய நான் விட்டாலும் நம்ம கிளையண்ட் விட மாட்டாங்க... நீ போகணுமின்னு சொன்ன ரெண்டு வாரம் பொயிட்டு வான்னு போன்ல சொன்னான். இதுக்கு முன்னால உன்னைய மாதிரி பொறுப்பான ஆள் இல்ல... நீ இருந்தியன்னா எனக்கு கவலையில்லை... உன்னை மாதிரி ஆகுமா... மானே... தேனே... பொன்மானே எல்லாம் போட்டான். 

பொறுமையாக் கேட்டுட்டு ராஜினாமா பண்ணிட்டுப் பொயிட்டானுங்கன்னா அது என்னோட பிரச்சினையா... உன்னோட பிரச்சினையான்னு கேட்டேன். மழுப்பலாகப் பதில் சொன்னான். உனக்கு வேலை இருந்தா இங்க இருக்கணும்... வேலையில்லைன்னா ஊர்ல இருக்கணும்... இது என்ன கணக்குன்னு கேட்டதும்.... நண்பா நம்மளோட இப்போதைய பிரச்சினையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு அப்படின்னு கெஞ்சலாகச் சொன்னான். ஓகே...ஓகே... நான் இருபத்தி நாலு மணி நேரமும் வேலை பார்க்கிறேன்... நீ ஒண்ணே ஒண்ணு மட்டும் செய்யி.... என்னோட குடும்பத்தைக் இங்க கொண்டு வர்றதுக்கு கம்பெனி மூலமா ஏற்பாடு பண்ணிக் கொடு, குடும்பம் நடத்த பணம் கொடுன்னு சொன்னதும் நீ ரொம்ப கோபமா இருக்கே அப்புறம் பேசுவோம்ன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டான். 

நேற்று காலையில கிளையண்ட் அலுவலகத்துல மீட்டிங் இருந்தது. அங்கு வந்தவன் ஒன்றும் பேசவில்லை. குமார் நீ பொயிட்டு வா... ஒண்ணும் பிரச்சினை இல்லை... குடும்பத்தை விட்டுட்டு நீ இங்க இருக்கது எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்குந் தெரியும். கம்பெனியில 3 வாரம் லீவ் அப்ரூவ் பண்ணச் சொல்றேன். அப்புறம் ஒரு வாரம் பண்ணிக்கலாம்.. நீ ஒரு மாதம் இருந்துட்டு வா அப்படின்னு சொன்னான். எனக்கு ஒரு மாதம் கண்டிப்பா வேணும் மூணு வாரத்துல எல்லாம் வரமுடியாதுன்னு சொன்னதும் ஓகே... ஓகே... இங்க மட்டும் 2 வாரத்துல வந்துடுவேன்னு சொல்லிட்டுப் போன்னு சொன்னான். சரிடா... நான் ஒரு மாதம் இருந்துட்டுத்தான் வருவேன் என்று சொல்லிவிட்டேன். 

பின்னர் கிளையண்ட் அலுவலகத்தில் இருக்கும் ஆந்திரா நண்பரிடம் சொன்னபோது நீ எதுக்கு 15 நாளுக்கு ஒத்துக்கிறே.... அரபிக்காரனுக்கெல்லாம் அடிக்கடி வீவு கொடுக்கிறானுங்க... உனக்கு மட்டும் என்னவாம்... ஒரு மாதம் இருந்துட்டு வா... பாத்துக்கலாம் என்று சொன்னார். நமக்கு இவனுக சப்போர்ட் இருக்குன்னு எங்க ஆளுக்குத் தெரியாது. அங்க இருக்க மேனேஜர் அரபி நானே உன்னைய இங்க எடுத்துக்கிறேன். ஆனா ஆறு மாசம் பொறு..  உங்க புராஜெக்ட் முடியப் போகயில இங்க வந்திடலாம். இப்ப எடுத்தா உங்க கம்பெனிக்கும் எங்களுக்கும் பிரச்சினையாகும்ன்னு சொல்லி வச்சிருக்கான். நடக்குமா பார்க்கலாம்.

குமார் பொயிட்டா என்ன பண்ணுறதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லி புலம்பியிருக்கான். எனக்கு மேல உள்ளவன் செய்ய வேண்டியதை எல்லாம் கிளையன்ட் ஆபிசில நாந்தானே செய்யிறேன். இனி அது என்னோட மலையாளி நண்பனுக்கு வரும். தக்காளி எல்லா வேலையும் பாக்க குமார் வேணும்... சம்பள உயர்வோ, பேமிலி அலவன்சோ கொடுக்கிறதுன்னா கசக்கும். ரெண்டு இடத்துல வேலைக்கான முயற்சி பண்ணியிருக்கிறேன். ஊருக்குப் பொயிட்டு வந்ததும் வேலை மாற்றம் இருக்கும் அப்ப இருக்குடின்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டே வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன். தெய்வங்களின் எண்ணம் எப்படி என்று பார்க்கலாம்.

திருமணத்திற்குப் பிறகு சித்ரா பௌர்ணமிக்கும்அழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவில் ஒரு முறை கலந்து கொண்டிருக்கிறேன். ஊரில் இருக்கும் போது வருடா வருடம் குலதெய்வத்தின் விழாவுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய்விட்டது. இந்த முறை அதற்குள் ஊருக்குப் போய் விடுவேன் என்று நினைக்கிறேன். அழகர் ஆற்றில் இறங்கும் அன்று மதுரையில் மனைவியின் அம்மா வீட்டில்தான் ஜாகை என்று முடிவு செய்திருக்கிறேன். அழகு மலையான் அருள் கிடைக்குமா தெரியவில்லை.

ஊருக்குப் போவதால் கலையாத கனவுகள் தொடர்கதையை தொடர்ந்து சில நாட்கள் பதிந்து முடிக்க எண்ணம்.... முடியுமா தெரியவில்லை. ஊருக்குப் போனால் ஒரு மாதம் மனசு வலைப்பூவுக்கு விடுமுறை என்பது கண்டிப்பாக விடப்படும். மீண்டும் வந்து கதையைத் தொடர்ந்தால் கதையின் போக்கு நன்றாக அமையாது. எனவே இனி தொடர்ந்து நான்கு ஐந்து நாட்கள் கலையாத கனவுகள் வெளிவந்தாலும் வரலாம். சோர்வு என்னும் சோம்பேறியும் ஐபிஎல் கிரிக்கெட்டும் இடையில் வராமல் இருந்தால் இது சாத்தியமே.

ஊரில் இருக்கும் ஒரு மாதமும் தேவகோட்டை, காரைக்குடியில்தான் திரிவேன். என்னடா திரிவேன்னு போட்டிருக்கான்னு நினைக்கிறீங்களா? ஊரு சுத்துறதுதானே வேலை... திருச்சி, மதுரை வருவேன். நண்பர்களைச் சந்திக்க எண்ணம். ஊருக்குப் போகுமுன் எனது செல்போன் எண்ணைச் சொல்கிறேன். நண்பர்கள் தொடர்பில் வரவும். குடந்தையூர் சரவணன் அண்ணன், மதுரை சரவணன், தமிழ்வாசி பிரகாஷ், முத்து நிலவன் ஐயா, கரந்தை ஜெயக்குமார் ஐயா, திண்டுக்கல் தனபாலன் சார், அ. பாண்டியன், விமலன் அண்ணா இன்னும்.. இன்னும்... நான் வாசிக்கும்... என்னை வாசிக்கும் எல்லா நட்புக்களையும் சந்திக்க ஆசை. மேலும் எனது வீட்டிற்கு வந்து செல்லும் சீனா ஐயா வீட்டிற்கு இந்த முறையாவது செல்ல வேண்டும். பெரிய்ய்ய்ய்ய்ய ஆசை இது... நிறைவேறுமா என்று எனக்குத்  தெரியவில்லை.  

சிறுகதை தொகுப்பு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் முளைத்து ஒரு வயதாகிவிட்டது. சென்ற முறையே அகநாழிகை பொன். வாசுதேவன் அண்ணாவிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அப்புறம் சில பல பிரச்சினைகளால் எல்லாம் விட்டாச்சு. இப்போ போய் எனது பேராசான். மு,பழனி இராகுலதாசன் அவர்களிடம் ஆலோசித்து இறங்கலாம் என்று எண்ணம். நிறைவேறுமா அல்லது ஒரு வயது என்பது அதிகரிக்குமா தெரியவில்லை.

ஊருக்குப் போகும் சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் இருபத்தி நான்கு மணி நேரமும் என் வருகையை எண்ணி, அதையே பேசி. சுவாசித்து வாழும் எனது அன்பான குழந்தைகள் மற்றும் மனைவியை மீண்டும் அழ வைத்துத் திரும்ப வேண்டும் என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. இருந்தாலும் கிடைக்கும் ஒரு மாத விடுமுறையில் முடிந்தவரை குழந்தைகளைச் சந்தோஷமாக வைத்திருந்து வரவேண்டும் என்று மனசுக்கு சொல்லிக் கொள்கிறேன். பிரிவுக்கும் ஒரு முடிவு இந்த வருடத்திலாவது வரும் என்று நினைக்கிறேன். ஆண்டவன் வழி செய்ய வேண்டும்.

- மனசின் பக்கம் மீண்டும் மலரும்.
-'பரிவை' சே.குமார்.

19 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

எல்லாம் கடவுளின் ஆசியால் நல்லபடியாக நடக்கும் அண்ணா... நான் துபாயில் Lab Analyst இருக்கிறேன்... உங்களுடைய பதிவு எல்லாம் வாழ்வியல் ஓட்டத்தை தெளிவாக விளக்குகிறது... தொடருங்கள் அண்ணா ...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் மகிழ்ச்சி... விரைவில் சந்திக்கும் நாளை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்... எங்க ஊருக்கு வரும் போது கண்டிப்பாக தொடர்பு கொள்ளவும்... 9944345233

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கனவுகளை சுமக்கும் காலம் நனவாகட்டும்.

r.v.saravanan சொன்னது…

முதலாளிகளுக்கு நாம் எந்திரம் போல் தான் நாம் உணர்வுகள் நம் குடும்பம் இதில் அக்கறை இல்லை .விட்டு தள்ளுங்கள் இது உழைக்கும் வர்க்கத்தின் சாபக்கேடு
விட்டு தள்ளுங்கள் நீங்கள் இந்தியா வருவதை மிக உற்சாகமாக உணர்கிறேன்
வாருங்கள் குமார் மேலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது நானும் குடும்பத்துடன் வரும் எண்ணம் இருக்கிறது நல்வரவு

ராமலக்ஷ்மி சொன்னது…

விடுமுறை இனிதாக அமையட்டும். மற்ற விருப்பங்களும் மெய்படட்டும்.

துரை செல்வராஜூ சொன்னது…

இந்த மாதிரி பிரச்னை எங்கு தான் இல்லை?..

நல்லபடியாக சந்தோஷமாக போய் வாருங்கள்..

Unknown சொன்னது…

இம்முறை 3ஜோக்காளியும் உங்களை மதுரைக்கு அன்புடன் வரவேற்கிறான் !
த ம

Unknown சொன்னது…

விடுமுறையா?நன்று,நன்று!ஆண்டுக்கு ஒரு தடவையோ,அதிகமோ குடும்பத்தாருடன் இணைந்திருப்பது,சொல்லில் அடங்கா மகிழ்வு.தொடர் என்ன,தொடர்?அது எங்கும் போய் விடாது.மகிழ்வாக குடும்பத்தினருடன் பொழுதை செலவிட்டு வாருங்கள்,காத்திருப்போம்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

விரைவில் ஊர் வர வாழ்த்துக்கள்! சென்னை பக்கம் வந்தால் எங்க வீட்டுக்கும் வாருங்கள்! நன்றி!

r.v.saravanan சொன்னது…

"விளையாடிய பொழுதுகள்

http://kudanthaiyur.blogspot.com/2014/04/blog-post_21.html

ஜீவன் சுப்பு சொன்னது…

welcome to home town ...

Menaga Sathia சொன்னது…

vவிடுமுறை இனியதாக அமையட்டும் சகோ,நல்லபடியாக போய்ட்டு வாங்க!!

'பரிவை' சே.குமார் சொன்னது…


வாங்க அன்னபுஷ்பராஜா...
ரொம்ப நன்றிங்க...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
துபாயில இருக்கீங்க... கண்டிப்பாக சந்திப்போம்...


வாங்க தனபாலன் சார்...
இந்த முறை கண்டிப்பாக சந்திக்கலாம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா...
தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி.

வாங்க சரவணன் அண்ணா...
மதுரை வரும்போது மறக்காமல் போன் பண்ணுங்க...

'பரிவை' சே.குமார் சொன்னது…



வாங்க ராமலெஷ்மி அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செல்வராஜ் ஐயா...
தங்களது அன்புக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பகவான்ஜி...
கண்டிப்பாக மதுரையில் சந்திப்போம்...

வாங்க யோகராஜா அண்ணா...
ரொம்ப நன்றி அண்ணா... தொடரின் பின்னால் வரும் முக்கியமான நீங்களே சொல்லியாச்சு... அப்புறம் என்ன எஞ்சாய் பண்ணிட்டு வந்து தொடருவோம்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுரேஷ்...
சென்னை வந்தால் கண்டிப்பாக தங்கள் வீட்டிற்கு வருகிறேன்...

வாங்க சரவணன் அண்ணா...
விளையாடிய பொழுதுகள் படிச்சாச்சு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜீவன் சுப்பு....
ரொம்ப நன்றிங்க...

வாங்க மேனகா அக்கா...
நலாமா? ரொம்ப நாள் ஆச்சு போல...
ரொம்ப நன்றி அக்கா...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விடுமுறை இனிதாக அமையட்டும். மே மாதம் நானும் தமிழகத்தில் தான் இருப்பேன் என நினைக்கிறேன். முடிந்தால் பார்க்கலாம்.....