மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 20 டிசம்பர், 2012

மழையில் உன் வாசம்


இரவின் அமைதியைக்
கிழித்தது எங்கயோ
விழுந்த இடியின் ஓசை..!

தூறலாக ஆரம்பித்து
சட்டென ஆர்ப்பரித்துப்
பெய்ய ஆரம்பித்த
பேய் மழையின் சப்தம்
தூக்கத்தை தூர விரட்டியது...

மழைக்கு அலறும்
மாமரத்து ஆந்தை...
பெருங்குரலில் குறைத்தபடி
படுக்க இடம் தேடி
ஒடிவரும் வீட்டு நாய்...

பேய் மழையாவுல பெய்யுது
என்றபடி ஓட்டில் வடியும்
மழைத் தண்ணீரை பிடிக்க
நனைந்தபடி குடங்களை
வைக்கும் அம்மா...

நாற்றங்காலில் வீசிய
உரம் நாசமாகிப் போச்சே...
என்றபடி கட்டிலிலிருந்து
எழுந்து அமரும் அப்பா...

மழை பெய்யுதா...
காலையில பெய்யக்கூடாதா
லீவாவது கிடைக்கும்
போர்வைக்குள் முனங்கியபடி
பத்தாவது படிக்கும் தங்கை...

மழையின் வேகத்தில்
இடிக்கும் இடியில்
எங்கோ முறிந்து விழும்
மரத்தின் ஓசை...

ஒழுகும் கசாலைக்குள்
படுக்க முடியாமல்
குரலெழுப்பும் பசு...

மழையின் சாரலையும்
மண்ணின் வாசத்தையும்
அனுபவித்த மனசுக்குள்

முந்தைய மழைநாளில்
உன் துப்பட்டா குடைக்குள்
நடந்து வந்த ஞாபகக்கீற்று
மின்னலாய்...

-'பரிவை' சே.குமார்

10 எண்ணங்கள்:

ஆத்மா சொன்னது…

முந்தைய மழைநாளில்
உன் துப்பட்டா குடைக்குள்
நடந்து வந்த ஞாபகக்கீற்று
மின்னலாய்...
////////////////

அருமை..
என்னதான் நடந்தாலும் நாம நம்மட வேலையில உஷாரா இருக்கனும்....:)

Menaga Sathia சொன்னது…

மழை ரசிச்சு அழகா எழுதிருக்கீங்க...இங்கயும் மழை பெய்யுது,ரசித்துக்கொண்டெ படித்தேன்!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

மழை ஒன்று.நினைவுகள் நூறு.கவிதை நன்று..

சசிகலா சொன்னது…

மழையின் சாரலையும்
மண்ணின் வாசத்தையும்
அனுபவித்த மனசுக்குள்..
அழகிய காதல் உணர்வு இழையோடுகிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கலக்கல்...

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக அருமை குமார்.

Unknown சொன்னது…

Alagana varihal.. Ovvaru varium arumai..

Ranjani Narayanan சொன்னது…

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!
உங்கள் கொள்ளு பற்றிய பதிவைப் படித்திருக்கிறேன்.

மழை நாளில் காதலியின் நினைவு! வயசு அப்படி!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை
பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_12.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சே.குமார் - கவிதை அருமை - மழையினை அனுப்வித்து - மழையின் போது நடக்கும் நிகழ்வுகளை அசை போட்டு ஆனந்தித்து - இறுதியில் நச்சென்று //மழையின் சாரலையும்
மண்ணின் வாசத்தையும்
அனுபவித்த மனசுக்குள்

முந்தைய மழைநாளில்
உன் துப்பட்டா குடைக்குள்
நடந்து வந்த ஞாபகக்கீற்று
மின்னலாய்...// என முடித்தது பாராட்டத் தக்கது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா