மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 10 ஜூலை, 2012

விவசாயியின் வேதனை



வாய்க்கா வரப்பு பாக்கயிலே
வயிரெல்லாம் எரியுதடா..!
கருவ மண்டிக் கிடக்கிறது
காண மனசு சகிக்கலைடா..!

நீர் நிறையும் கண்மாயும்
வறண்டு போய் கிடக்குதடா..!
வானம் பார்த்த பூமி இப்போ
வனமாகிப் போச்சுதடா..!

மடை திறந்து தண்ணி
பாய்ச்ச மனசு நினைக்குதடா..!
சறுக்கை உடைப்படச்ச காலம்
கரையேறிப் போயாச்சுடா..!

களையெடுப்பு கதிரறுப்பு
காண விருப்பமடா..!
உரம் போட்டு மருந்தடிக்க
உள்ளம் மறுகுதடா..!

நெல் குவிந்த களத்து மேடு
கரைஞ்சுதான் போச்சுடா..!
வைக்கோல்போர் இருந்த இடம்
கருவைக்கு வீடாச்சுடா..!

நெல் சுமக்கும் குதிரெல்லாம்
காற்றைச் சுமக்குதடா..!
நெல் அவிக்கும் அண்டாவும்
பரணில் தூங்குதடா..!

புண்ணாக்குத் தண்ணி சுமந்த
தொட்டி குப்புறக் கிடக்குதடா..!
கோழிகள் குலவிய கூடும்
வெறுமையை சுமக்குதடா..!

உழவுக்கு காளைமாடு...
பாலுக்கு பசுவமாடு...
எப்போதும் ரெண்டெருமை...
விளையாடும் வெள்ளாடு...
எல்லாம் வளர்த்த கசாலை
இடிந்து போய் நிக்குதடா..!

எங்கயும் போகாம
இங்கயே இருக்கமடா..!
எங்க ஊரு எங்க மண்ணு
எங்களுக்கு உலகமடா..!

எங்களுக்கும் எம்எல்ஏ...
எம்பி எல்லாம் இருக்காங்கடா...
கண்ணுலதான் காணவில்லை
களவாணிப் பயலுகளை..!

முன்ன மழையால விவசாயம்
அழிஞ்சப்போ வருவாங்கடா..!
கண் துடைப்பு காசையும்
எங்களுக்குத் தருவாங்கடா..!

இப்ப இங்க விளையவில்லை
அதனால அவங்க வரலையடா..!
எப்போ ஓட்டுத் தேவையோ
அப்போ ஓடி வருவாங்கடா..!

விளஞ்ச பூமி வெடிப்பு போல
விரிஞ்சு கிடக்கு எங்க நெஞ்சம்..!
வெடிப்பு இனி மாறாது...
வேதனையும் சொல்லித் தீராது..!

-'பரிவை' சே.குமார்.

படம் வழங்கிய கூகிளுக்கு நன்றி.

6 எண்ணங்கள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கண்ணீரும் இரத்தமும் சொட்டும் வரி(வலி)கள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

கிராமத்து விதை பாலை மண்ணில் என்கிற
தங்கள் சுய அறிமுகம்தான் எத்தனைச் சரியானது
என்பது தங்க்கள் கவிதையில் லயிக்கையில்
தெளிவாகப் புரிகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சசிகலா சொன்னது…

விளஞ்ச பூமி வெடிப்பு போல
விரிஞ்சு கிடக்கு எங்க நெஞ்சம்..!
வெடிப்பு இனி மாறாது...
வேதனையும் சொல்லித் தீராது..!
வலி மிகும் வரிகள்.

suraavali சொன்னது…

விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1
http://suraavali.blogspot.in/2011/10/1.html

ம.தி.சுதா சொன்னது…

///நெல் சுமக்கும் குதிரெல்லாம்
காற்றைச் சுமக்குதடா..///

ஒரு பெரிய மனச்சுமையை ஒரு சில வரிகளுக்குள் உழவனுக்கு பதிலாக விதை்துள்ளீர்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தென்னிந்தியக் கலைஞர்களின் ஈழவருகையின் சாதகமும் பாதகமும்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நெகிழ வைத்த வரிகள் ! நன்றி !)