மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

அபுதாபியில் அமுதைப் பொழியும் நிலவே...


அபுதாபியில் நேற்று மாலை தமிழ் அமுது பருகும் வாய்ப்பு பல தமிழர்களுக்கு கிடைத்தது. பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக தனது இனிய குரலால் தமிழகத்தை மட்டுமல்ல உலகத்தையே கட்டிப் போட்ட சுசிலா அம்மாவுக்கு பாராட்டு விழாவும் அதே நிகழ்ச்சியில் திரு. டெல்லி கணேஷ் அவர்களின் விவாத மேடையும் நடந்தன. ஐயாயிரம் ரசிகர்களுக்கும் குறையாமல் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை 6 மணிக்கு விழா ஆரம்பம் என்று போட்டிருந்ததால் நாங்கள் 6.30 மணிக்கு விழா நடக்கும் இந்திய சமூகக்கூடம் (ISC) சென்றபோது அரங்கமே நிரம்பி வழிந்தது. பாரதி நட்புக்காக அமைப்பு இதுவரை நிகழ்த்திய நிகழ்வின் தொகுப்பு மேடை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த திரையில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

பின்னர் விழா ஆரம்பமானது. வரவேற்புரை நிகழ்த்தியவர் ஆங்கிலத்தில் ஆரம்பித்து பின் தமிழில் பேசி முடித்தார்.பின்னர் சிலரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. பரத நாட்டியம் ஆடிய அனைவரும் மிக சிறப்பாக நடனமாடினர். குறிப்பாக பாரதியார் பாடல் ஓன்றுக்கு திரையில் படம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இரண்டு மாணவிகள் நடனமாடினர். அந்தப்பாடலின் உன்னதத்தை தங்கள் நடனத்தில் கொண்டு வந்தனர். அருமை... அவர்களின் அபிநயம்... குறிப்பாக மழை பெய்வது போலவும் உடம்பு சிலிர்ப்பது போலவும் அந்த மாணவிகள் செய்த அபிநயங்கள் அருமை. நிகழச்சி முடிந்தும் இன்னும் கண்ணுக்குள்.

பின்னர் நிறுவனர், தலைவர் உள்பட சிலர் மேடை ஏற்றப்பட்டு கெளரவிக்கப்பட்டு சில வார்த்தைகள் பேசினர். அப்போது பேசியவர்களில் என்னைக் கவர்ந்தது ETA நிறுவனர் பேச்சுதான். ஆம் அபுதாபியில் எந்த தமிழனுக்காவது உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள். செய்கிறேன் என்றார். பிறக்கு உதவும் அமைப்பாக பாரதி நட்புக்காகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் பேசிய அமைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன் உடனே ஆவண செய்வதாக சொன்னது அரங்கத்தில் கைதட்டல் ஒலி அடங்க அதிக நேரம் ஆனது.

பலத்த கை தட்டலுக்கு இடையே சுசிலாம்மா மேடை ஏற்றப்பட்டு இருக்கையில் அமர்த்தப்பட்டார். அவர் அமர்ந்ததும் முனைவர் திருஞானசம்பந்தம் அவர்கள் சுசிலா அம்மா பற்றி சில வார்த்தைகள் பேசினார். சுசிலாம்மாவுக்கு 'அமுதைப் பொழியும் நிலவே' என்ற விருது வழங்கி கௌரவித்தனர் பாரதி நட்புக்காக அமைப்பினர்.

பின்னர் ஏற்புரை நிகழ்த்திய சுசிலாம்மா கலக்கி விட்டார். அவருக்கும் காலில் காயம் என்று சொன்னார். எனவே மேடையில் அமர்ந்து பேசினார். அவரது குரலுக்கு அப்படி என்ன சக்தி? அப்பா... பேச ஆரம்பித்ததும் மடைதிறந்த வெள்ளம்போல் பேச ஆரம்பித்தார்.

மேடையின் எதிரே அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த டெல்லி கணேஷை புகழ்ந்து பேசினார். தெலுங்கில் இருந்து அவர் தழிழுக்கு, தமிழ் நாட்டிற்கு வந்தது 1950ம் வருடம் என்றும் அடுத்த வருடம் வந்தால் 60 வருடங்கள் நிறைவு பெறுவதாகவும் கூறிய போது கைதட்டல் ஒலியில் அரங்கமே அதிர்ந்தது.

அந்தக் காலத்தில் எல்லாப்பாடல்களும் இரவில்தான் பதிவு செய்யப்பட்டன என்றும் இப்ப இருக்கும் வசதிகள் எதுவும் இல்லாமல் வேர்வையுடன் பாடி முடித்து, அந்தப்பாடல் வெற்றி பெற்றபோது கிடைத்த சந்தோஷங்களை நினைவு கூர்ந்தார்.

அவரது மானசீக குரு லதா மங்கேஷ்கர் என்றும் அவருடன் பிறந்தது நால்வரல்ல என்றும் நானும் அவரது தங்கைதான் என்றும் என்னை தெற்குக்கு அனுப்பிவிட்டான் இறைவன் என்றும் மனம் மகிழ, நெகிழ தெரிவித்தார்.

'சுசிலான்னு ஒரு பொண்ணு பாட்டுக் கத்துக்கிட்டு இங்க வரும் அதுக்கு பாட்டெழுதணும் என்றே எங்கள் செட்டிநாடு கண்டெடுத்த காலத்தால் அழியாத காவியக் கவிஞன் கண்ணதாசனை படைத்ததாக புகழந்தார். 'அத்தான்.. என்னத்தான் அவர் என்னைத்தான்...' என்ற பாடலை சில வரிகள் பாடியபோது 'தான்... தான்...' என்று முடித்த அந்த திறமையை பாராட்டினார்.

அதிகம் பேசினால் பாட மாட்டேன்... பாடினால் பேசமாட்டேன்...' என்றபடி 'என்னைப் பாடச் சொன்னால்...' ,'சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து...' போன்ற சில பாடல்களைப் பாடிய போது அந்த இனிய குரல் இன்னும் சுசிலாம்மாவிடம் அப்படியே இருந்தது.

நகைச்சுவையாகவும் இனிமையாகவும் பாடல்களின் வரிகள், பேச்சு என்று வெளுத்து வாங்கியவர் முடிக்க நினைக்கையில் ஒருவர், பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பாடலை கேட்க, அவர் என்னய மச்சானைப்பற்றி பேச சொல்லுகிறார் என்றார் சிரிப்புடன்... அந்தப் பாடலை அவரது புத்தகத்தில் தேடி கண்டுபிடிக்க இயலாததால் பாடாமல் விட்டுவிட்டார்.

தமிழகம்தான் எனக்கு வாழ்வளித்தது. அங்குதான் என் கடைசி நிமிடங்கள் கரைய வேண்டும் என்ற போது அரங்கத்தில் கை தட்டல் இருந்தாலும் பல மனங்கள் கனத்துக் கிடந்தன என்பதே உண்மை. அவர் எழுந்ததும் மக்களைப் பார்த்து ஒருவர் பேச சொல்ல எழுந்தால் அதிகம் பாட்டு வரும் என்றார் புன்னகையுடன்.

அவர் மேடையை விட்டு இறங்கிய போது ரசிகர்கள் எழுந்து நின்னு கைதட்ட, மேடையில் நின்று கும்பிட்டவர், அப்படியே குனிந்து தரையை தொட்டு வணங்கினார். மேன் மக்கள் மேன் மக்களே..!

அவரது பாரட்டுவிழாவிற்குப் பிறகு டெல்லி கணேஷ் தலைமையில் வாழ்க்கைக்கு உறுதுணையாய் இருப்பது இன்றைய வாழ்க்கை முறை, உறவுகள், நண்பர்கள், பொருளாதாரம் என்ற தலைப்பில் விவாதமேடை நடந்தது. அதில் குழுவுக்கு ஐவர் இருந்தனர். எல்லோரும் நல்லா பேசினார்கள். இடையிடையே டெல்லி கணேஷின் நகைச்சுவை வேறு.

அபிதாபியில் அழகிய தமிழ்பருகினேன் அதற்காக எங்கள் சென்னைத் தமிழ் சரியில்லை என்று சொல்லாதீர்கள். இப்ப உள்ள காலச்சூழலில் என்னப்பா நல்லா இருக்கியா என்று கேட்பதை சுருக்கி 'இன்னா கீறியா..?' என்பதாகவும், ஆட்டோவுல போகும் போது அந்த வலது பக்கம் திருப்புப்பா என்றால் நம்மை திரும்பி பார்த்து 'ரைட்ல போன்னு சொல்லு சார் என்பதாகவும் கலகலப்பாக பேசினார்.

பேசியவர்கள் பெயர் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் அனைவரின் பேச்சுக்களும் ரசிக்கும் விதமாக இருந்தாலும் சிலரின் பேச்சுக்கள் நெஞ்சைத் தொட்டன. குறிப்பாக, இலங்கை நண்பர் ஒருவர் பேசும்போது குற்றுயிர் பூமியில் இருந்து வந்திருப்பதாகவும் நாட்டிற்கு போன் செய்து பெற்றோரிடம் பேசினால் சந்தோஷம் என்றும் அவர்கள் போன் எடுக்கவில்லை என்றால் என்னாச்சோ என்ற பதட்டம் வருவதாகவும் தான் ஊருக்கு வருகிறேன் என்றால் இங்கு நிலமை சரியில்லை என்றும் உன் குரலையாவது கேட்கிறோம். உன்னை இழக்க எங்களால் முடியாது என்றும் சொன்னபோது தமிழர்களாகிய நமது நெஞ்சுக்குள் ஒருவித வலி. அரங்கமே சோகத்தில் ஆழ்ந்தது.

ஒரு பெண் பேசும் போது தனது மகனுக்கு விபத்து ஏற்பட்டபோது நண்பர்கள் உதவியதாகவும் அவன் நன்றாக வந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது பரிசு வாங்கி வந்த போது பரிசைவிட நண்பர்கள்தான் ஞாபகத்தில் வந்ததாகவும் கூறினார்.

எங்கள் நண்பர் சுபான், கந்தசாமி பட பாடலான 'இதெல்லாம் டூப்பு...' பட்டியலில் சில பல சேர்த்து கலக்கி இல்லாம் டூப்பு பணம்தான் டாப்பு என்றும், அவருக்கு பிகர் பிடிக்கும் என்றும் திருமணத்தின் போது நாலு பிகர் இருந்ததாகவும் மனைவியின் அன்பால் ஐந்து, ஆறு என்றாக்கி ஏழை பிடித்துவிட்டதாக சொன்னார். டெல்லி கணேஷ் மிரள பணத்துக்கான சைபரை சொன்னதாக சொன்னார். அவர் இட்ட பட்டியலில் அம்மா, அப்பா இல்லை என்பதை உறவுக்காக பேசிய பெண் பிடித்துக் கொண்டார்.

இன்றைய வாழ்க்கை முறையில் பேசியவர் சற்று குண்டாக இருக்க டெல்லி கணேஷ் கிண்டலாக பேச, அவர் நீங்கள் பெயரில் கணேஷை வைத்திருக்கிறீர்கள்... நான் உருவத்தில் வைத்திருக்கிறேன் என்று போட்டாரே பார்க்கலாம்...

நல்ல நகைச்சுவையுடன் நகர்ந்த விவாதமேடை அதிக நேரம் ஆனதால் கூட்டம் கலைய ஆரம்பிக்க விவாதம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் முடிவுக்கு வந்தது. நடுவர் நட்பே என்று முடித்தார். நல்ல நிகழ்ச்சி நேரமின்மையால் முடிவுக்கு வந்தது வருத்தமாக இருந்தாலும் நல்ல கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி மனநிறைவைத்தந்தது.

'பரியன் வயல்' சே.குமார்.

6 எண்ணங்கள்:

Paleo God சொன்னது…

ஒரு இனிய பொழுதா..:)

மகிழ்ச்சி..:)

malar சொன்னது…

அபுதாபியில் நடந்த புரோகிராமின் விடியோ தொகுப்பு இருந்தால் லின்ங் கொடுங்கள்....நன்றி..

'பரிவை' சே.குமார் சொன்னது…

சந்தோஷமான மாலைதான் ஷங்கர்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வருகைக்கு நன்றி மலர். நான் விழாவில் பார்வையாளனாகவே கலந்து கொண்டேன். வீடியோ நண்பர்களிடம் இருந்து கிடைத்தால் லிங்க் தருகிறேன்.

நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

Congrats!

Your story titled 'மனசு: அபுதாபியில் அமுதைப் பொழியும் நிலவே...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd February 2010 12:25:01 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/189855

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team


வாய்ப்பளித்த தமிழிஷ்க்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

இரசிகை சொன்னது…

suseelaa-ma pathi yenakku therintha oru incident.

sivaaji iranthappo anjali seiyum vagaiyil stage program koduththaangalaam..

appo,"naalai intha velai paarthu oodi vaa nila"song paadum pothu...

intru enthan thalaivan illai sentru vaa nila-ngira varikalai padikkum pothu azhuthu paada mudiyaama poittunnu kelvip patturukken

azhagaana voice avungalukku:)