மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...



ன்பின் ராம்...

நலம்தானே..?

இதென்ன கேள்வி என்று நீ சிரிக்கக் கூடும்... ஆனாலும் இப்படித்தானே ஆரம்பிக்க வேண்டும் இல்லையா..?

சரி... சரி... நல விசாரிப்பு நம்முள் எதற்கு...

எத்தனை அன்பை... நேசத்தை... பாசத்தை... பரிவைக் கண்டேன் அந்த இரவில் உன்னிடத்தில்... 

அந்த ஒற்றை இரவு போதுமே இனிமேலான வாழ்க்கையை மழைச்சாரலாய் மகிழ்விக்க...  

அந்த இரவு நீண்டு கொண்டே போகக்கூடாதா என்று ஏங்கிக் கொண்டேதான் உன்னருகில் நானிருந்தேன்... காலத்துக்குத் தெரியாதே நம் கண்ணீரூம் காதலும்...

ஆமா... நீ இவ்வ்வ்வளவு பேசுவாயா ராம்..? ஆச்சர்யத்தில் பூத்துப் போனேன் தெரியுமா?

ரீயூனியனுக்கு வா என்று சுபாவும் பிரண்ட்சும் கூப்பிட்டப்போ வரும் எண்ணமில்லை எனக்கு... நீ வரக்கூடும்.. உன்னைப் பார்த்து ஏன் என்னிடம் சொல்லாமல் தஞ்சாவூரை விட்டுப் போனாய்..? உனக்கு என் நினைப்பே இல்லாமல் போனதெப்படி..? என்றெல்லாம் கேட்டு உன்னிடம் உரிமையுடன் சண்டை போட வேண்டும் என்றுதான் கனெக்சன் ப்ளைட் பிடித்து ஓடி வந்தேன்.

உன்னைக் கண்ட அந்த நிமிடம்... அப்பப்பா... என் வாழ்வின் அற்புத தருணம்... உன்னைக் கண் தேட, நீ ஒளிந்திருக்கிறாய் என்றார்கள்.. என் முன்னே என் உள்ளம் உன்னருகே ஓடிவந்ததை நீ அறிவாயா..?

பத்தாம் வகுப்பில் கருவாயனாய்.. என்னைப் பைத்தியமாய்க் காதலித்தாலும் சொல்லத் தயங்கி படபடக்கும் இதயத்துடன் வலம் வந்தவனா இவன் என தாடி மீசையுடன் ஆஜானுபாகுவாய் உன்னைப் பார்த்து யோசித்தேன்.... இருப்பினும் இன்னும் படபடப்பில் பத்தாம் வகுப்பு பையனாய் நீ என்பதை உணர்ந்த போது யோசனை காற்றுப் போன பலூன் ஆனது... நீ கையில் பலூன் வைத்திருந்தாய்தானே அப்போது....

ஆமா என்னைப் பார்த்ததும் அன்று போல் இப்பொழுதும் ஏன் மயங்கினாய்...?

என்னடி செய்தாயென நட்புக்கள் கேட்டார்கள்... என்ன பதில் சொல்ல... இன்னும் அவன் காதல் கோழை என்றா..? உன்னைப் பார்த்தே சிரித்து மழுப்பினேன்.

உன்னைப் பார்த்து கேட்க நினைத்த கேள்வியை எல்லாம் மறக்கடித்து விட்டது நீ ஓடிச் சென்று எடுத்து வந்து கொடுத்த சாப்பாடு... நீ சாப்பிடு எனக் கொடுத்ததும் என் எச்சில் என்பதால் எத்தனை சந்தோஷம் உனக்கு... விட்டால் ஸ்பூனைக் கூட சாப்பிட்டிருப்பாய் போல....

அந்த இரவு.... 

கார்... இரயில்.. பைக் என மாறி மாறிப் பயணம்... 

வயசானால் என்ன... அந்த மணித்துளிகள் எத்தனை இளமையாக இருந்தது தெரியுமா..?

என்னை நினைத்தபடி நீ... உன்னைப் பருகியபடி நான்.... ஆஹா... சொர்க்கம்...

நீ இறக்கிவிட்ட தருணத்தில் நான் இறந்து விட்டதாய் நினைத்தேன்...

'என்னை விட்டு ரொம்பத் தூரம் பொயிட்டியா ராம்..?' என்று அழுகையுனூடே நான் கேட்ட போது 'இறக்கிவிட்ட இடத்தில்தான் நிற்கிறேன்' என்று நீ சொன்னதும் எப்படி இறங்கி வந்தேனென்றெல்லாம் தெரியாது... வந்தேன் உன்னிடம்... அந்த அன்பு... பிரிதலின் வலி எல்லாமாய் சேர்ந்ததில்தான் உன்னை அடித்தேன்... ஒரு பெண் குழந்தைக்கு அம்மா என்பதை மறந்து... அதில் எனக்கு குற்ற உணர்வில்லை ராம்... நீ என் குழந்தை...

உனது கரடிக்குட்டி தாடியை எடுத்து உன்னை பத்தாம் வகுப்பு ராமாக பார்க்க ஆசைப்பட்டேன்... ஆமா முடிவெட்டியவர் எல்லாம் தெரியும் எனச் சிரித்தாரே... எல்லாவற்றையும் எல்லாரிடமுமா சொல்லியிருக்கிறார்...?

தாடி... மீசை... இல்லாத ராம் எத்தனை அழகு தெரியுமா... அதை நான் மட்டுமே பருகினேன் ஆசை தீர அந்த இரவில்...

ஆம்பளை நாட்டுக்கட்டைடா நீ என்றதும் உனக்கென்ன அத்தனை வெட்கம்... நாட்டுக்கட்டை பெண்களுக்கு மட்டுமான வாசகமா என்ன..? நீ நாட்டுக்கட்டைதான்... அதிலும் கடைந்தெடுக்கப்பட்ட கருவேலங்கட்டை.

அந்த இரவு இரயில் பயணம் மறக்கக் கூடியதா சொல்... எத்தனை இன்பத்தை அந்தப் பயணம் அள்ளிக் கொடுத்தது... திகட்டத் திகட்டக் கிடைக்கவில்லை என்றாலும் தித்திப்பாய் கிடைத்ததே..

உன் மாணவிகளில் அவள் ரொம்பச் சூட்டிகை.... அவள் தயங்கி நின்றதைப் பார்த்ததும் எங்கே சார் மேல எனக்கு கிரஷ் இருந்துச்சுன்னு சொல்லி விடுவாளோ என்று நினைத்தேன்.. நல்லவேளை உன்னை ரொம்ப நல்லவன் என்பதோடு நிறுத்திக் கொண்டாள். நீ நல்லவன் என்பதை அவள் சொல்லித்தான் அறிய வேண்டுமா என்ன..?

நான் அவர்களிடம் நம் காதல் குறித்தும் திருமணம் குறித்தும் சொன்ன பொய் தப்பென்று மற்றவர்களைப் போல் நீயும் நினைத்தாயா ராம்..? நான் வாழ நினைத்த வாழ்க்கையை... வாழாத வாழ்க்கையை அந்த நள்ளிரவில் சில நிமிடங்களேனும் வாழ்ந்து பார்த்தேன்... அது தவறா..? 

நீ அதை தவறாய் நினைக்கவில்லை என்பதை உன் சிரிப்புச் சொன்னதில் அறிந்தேன்... எனக்குத் தெரியாதா என் ராமை. ராம்... நீ வெள்ளந்தி... இப்படி இருக்காதே இந்த உலகம் உன்னை வஞ்சித்து விடும்.

ரம்பை... ஊர்வசி பற்றியெல்லாம் பேசும் போது எத்தனை வெட்கம் உனக்கு... இதையெல்லாம் எங்கே வைத்திருந்தாய்... 37 வயது ஆம்பிள்ளைக்குள் இத்தனை வெட்கத்தை அந்த இரவில்தான் பார்த்தேன்.

உன் வீட்டில் என் சமையல்.... சுமாராய்த்தான் சமைப்பேன்... சூப்பர் என்றாய்.. என் வீட்டில் சமைக்க ஆளுண்டு... என் கணவருக்கு ஒரு முறை கூட என் சமையல் இல்லை தெரியுமா...? .

நண்பர்கள் மூலமாக எத்தனை முறை கேட்டிருப்பாய் 'யமுனை ஆற்றிலே' பாடச் சொல்லி... ஏன் பாடவில்லை தெரியுமா...? உன் தவிப்பை... உன் மகிழ்வை... நான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலமே.. அந்த இரவில் மின்சாரம் போன நேரத்தில் நான் பாடியதே உன் தவிப்பையும் மகிழ்வையும் ஒரு சேர நீ கொண்டு வரும் விளக்கொளியில் அனுபவிக்க வேண்டும் என்பதாலேயே... அனுபவித்தேன் ஆயுசுக்கும் சேர்த்து.

ராம்... உனக்கொன்று தெரியுமா...?

என் தனிமையில் இந்த 'யமுனை ஆற்றிலே' பாடலை எத்தனை முறை பாடியிருக்கிறேன் தெரியுமா ... அப்போதெல்லாம் என் எதிரே நீ இருப்பாய்...?

என் துப்பட்டாவும்... தலையில் வைத்த பூவும் உன் டிரங்குப் பெட்டிக்குள்... உன் நினைவுகள் எல்லாம் என் மனசுக்குள்...

என் மஞ்சள் குர்தாவும்... ஜீன்ஸ் பேண்டும் இனி உன் டிரங்குப் பெட்டிக்குள் பத்திரமாகும் என்பது எனக்குத் தெரியும்... உனது சட்டையின் வாசம் என் மனமெங்கும் நிரம்பியிருப்பது உனக்குத் தெரியுமா..?

நீ எவ்வளவு பேசினாய்..? என்னைப் பின்தொடர்ந்த பையனை அடித்து போலீஸ் கேஸ் ஆனது.... என்னைத் தேடி கல்லூரி வந்தது... என நிறையப் பேசினாய் ராம்...  

அந்த மழை இரவு எத்தனை சுகமாய் இருந்தது தெரியுமா..? 

உனக்கு பெண் பார்க்க வேண்டும் என நான் சொன்ன போது ஏன் நீ அப்படி மறுத்தாய்... உனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டும் ராம்... அதை நான் பார்த்து ரசிக்க வேண்டும்.

என் மகளின் போட்டோ பார்த்ததும் எத்தனை மகிழ்வு உனக்கு... அப்படி ஒரு மகிழ்வு உன் மகளைப் பார்க்கும்போது எனக்கும் வேண்டும் ராம்...

என் திருமணத்தில் ஒரு ஓரமாய் ஓளிந்து நின்றாயா நீ.... வலித்தது ராம்.... உண்மையில் வலித்தது. இதற்காக எத்தனை முறை அழப்போகிறேனோ தெரியவில்லை.

என்னை முதன் முதலில் சேலையில் பார்த்தபோது தூக்கிக் கொண்டு போய் கோவிலில் வைத்துத் தாலி கட்டணும் போல் இருந்ததென்றாயே... திருமணத்தன்றே சினிமா ஹீரோவாய் தூக்கிச் சென்றிருக்கலாமே... ஏன் ராம் கோழையாய் இருந்தாய்...? நீ வந்து என் ஜானு எனக்குத்தான் என கேட்பாய் எனக் காத்திருந்தேன் என்று உன்னிடம் சொன்னேன்தானே அந்நள்ளிரவில்...

அந்த வசந்தி உன் பெயரைச் சொல்லியிருந்தால் வாழ்க்கை நமக்கு வசப்பட்டிருக்கும்... ஆனால் இந்த நள்ளிரவு வசமாகியிருக்குமா..?

கேட்க நினைத்தேன் ராம்... எங்கே உன் பெற்றோர் என... அவர்களும் என்னைப் போல் உன்னை விட்டுப் போய்விட்டார்களா..? 

ராம்... உன் நெஞ்சில் சாய்ந்து அழத்தான் ஆசை எனக்கு... ஒரு குழந்தையின் தாய் என்பதைவிட இந்த சமூகத்தின் பார்வை நம் மீது சேற்றை வாரி வீசுமே என்ற பயமே தடுத்தது... மாதர் சங்கங்கள் உன்னை மாறி மாறி வசைபாடுமே... திருமணம் ஆனவளை நீ எப்படித் தொடலாமென... 

ஆமா... காரின் கியரில் என் கை வைத்தழுத போது உன் கையும் கியர் பிடித்ததே... அத்தனை அழுத்தம் ஏன் உனக்குள்... கை வலிக்கிறது தெரியுமா...?

உன் முகம் மூடி அழுதேனே அந்த ஒரு நிமிடம் போதுமெனக்கு வாழ்நாளெல்லாம் வாழ.... 

அந்த இரவு போதும் ராம் இனி வரும் இரவுகளில் இனிமையைச் சுமக்க...

திருச்சி வரைக்கும் வந்த நீ சிங்கப்பூர் வரைக்கும் வந்திருக்கலாமே என்று தோன்றியது ராம்... விமானத்தில் நீயில்லா வெறுமையை உணர்ந்தேன்.

இனி 'யமுனை ஆற்றிலே...' பாடலை எங்கும் எப்போதும்  பாடவே மாட்டேன் ராம்... சேர்க்க வேண்டிய இடத்தில் அதைச் சேர்த்துவிட்டேன்... பத்திரமாக வைத்துக் கொள்... அந்த பரபரப்பான முகத்தை பத்திரமாய் வைத்துக் கொள்வேன் என்னுள் எப்போதும்...

அடுத்த சந்திப்பு எப்போது... எப்படி நிகழும்..? 

தெரியாது... நிகழாது போனாலும் போகலாம். 

அதுவரை மீட்ட என்னிடம் ஏராளமான நினைவுகளைக் கொடுத்திருக்கிறாய் ராம்.

மறக்காமல் நீ மீண்டும் தாடி வளர்த்துக் கொள் ராம்... 

பத்தாம்வகுப்பு ராமை நான் மட்டும்தான் பார்க்க வேண்டும்... அது எனக்கே எனக்கான ராம்... இது சுயநலம்தான்... என்ன செய்ய... என் ஆசையில் இதுவும் கூட...

என்னைப் போல் காதலித்த பெண்கள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருப்பதாக மற்றவர் போல் நீயும் நினைக்கமாட்டாய் என்று தெரியும்... என் வலி எத்தகையது என்பதை உணர்ந்தாய்தானே...

ராம்களின் உணர்ச்சி சொல்ல மாளாதாம்... அப்ப ஜானுக்களின் வலி...?

சரி விடு... நீ அப்படிச் சொல்லவில்லைதானே...

மீண்டும் பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்...

உன்....

ஜானு (மு.ஜானகி)
-'பரிவை' சே.குமார்.

சனி, 6 அக்டோபர், 2018

சினிமா விமர்சனம் : 96

96 ரீயூனியன்...

ராம் - ஜானுவின் காதலுடன் பயணிக்கும் ஓர் இரவு....



'யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட...
பார்வை பூத்திட பாதை பார்த்திட...
பாவை ராதையோ  வாட...'

இந்தப் பாடலை  பாடச் சொல்லும் போதெல்லம் வேறொரு பாடலைப் பாடி ஏங்க வைப்பவள், எப்போது பாடப் போகிறாள்... அவளின் குரலில் அவன் இதை எப்போது கேட்பான் என ஏங்க வைத்து மின்சாரம் போன அந்த மணித்துளியில் விளக்குத் தேடி அவன் போக, மனக்குமுறலாய் இந்த யமுனை ஆறு வழிகிறது அவள் குரலில்... அடித்துப் பிடித்து ஓடிவரும் அவனுக்கு முன்னே நாம் ஜானுவின் முன்னால் ஆஜராகி விடுகிறோம் காதலோடு.

ஒற்றைப் பார்வையும் உதிர்த்த சில சிரிப்புக்களும்... என்னைக்கும் மறக்கக்கூடாதென அடிக்கப்பட்ட இறுதி பள்ளி நாள் பேனா மையுமாய் காதல் ஊறிக்கிடக்க, அவள் நினைவுகளால் திருமணம் செய்யாமல் முதிர் கண்ணனாய் நிற்கிறானா... இல்லை குடும்ப உறவுகள் அற்ற வாழ்க்கையாலா... எது எப்படியோ அவனுக்குள் ஜானு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள். அவளுக்குள்ளும் ராம்...

ஒற்றை இரவு... எத்தனை நினைவுகளை வருடிச் செல்கிறது... பெய்யும் மழையும் பேசும் பயணங்களுமாய்...

அழகன் படத்தில் பானுப்பிரியாவும் மம்முட்டியும் 'சங்கீத ஸ்வரங்கள்... ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்... என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்லே பகலா எனக்கும் மயக்கம்...' அப்படின்னு இரவெல்லாம் பாடிய பாடல் எத்தனை பேரின் தூக்கதைக் கெடுத்ததோ அதே போல்தான் ஜானுவின் தவிப்பும்... ராமின் பூட்டி வைக்கப்பட்ட நினைவுகளும்....

நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போகும் போது எதைப் பார்த்தாலும் நமக்குள் ஒரு பிரியம் பூப்பூக்கும்... அப்படியான பிரியத்தில் அவன் படித்த பள்ளியும் காதல் நினைவுகளும் பள்ளி வாட்ச்மேன் ஜனகாராஜை காரை வைத்து மோதுவது போல் செய்யும் இடத்தில் பூக்கிறது.

பள்ளிக்குள் ஓடும் அவன் பின்னே இசையும் ஓடுகிறது காதல் குழந்தையாய்... தான் படித்த வகுப்பறையில் அவள் அமர்ந்த இடத்தில் முதலில் அமர்கிறான். பின் தன் இருக்கை போய் அமர்கிறான். அதன் தொடர்ச்சியாய் நண்பர்களின் வாட்ஸ் அப் குழுமத்தில் இணைந்து 22 வருடங்களுக்குப் பிறகு நண்பர்களின் கூடலுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இது போன்றொரு கூடலை எங்கள் கல்லூரியில் சென்ற ஆண்டு எங்களுக்கு முன்னே படித்தவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ந்த வீடியோ மூலம் பார்க்க நேர்ந்தது. நம் நட்புக்களையும் சந்திக்கலாமே என்ற ஆவல்... பாலையில் இருந்து ஏற்பாடு செய்து அந்த நாளில் ஓடிச் செல்லும்படியான கம்பெனியில் நமக்கு வேலை இல்லையே... பெரும்பாலும் என் பள்ளி நட்புக்கள் தொடர்பில் இல்லை... கல்லூரி நட்பில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாமே வாழ்வின் நிமித்தம் வெளிநாடுகளில்... பின் எப்படி...? அதனால் அது நினைவாய் மக்கிப் போனது.

அந்த தினம் நண்பர்கள் எல்லாம் குடும்பத்தோடும் தனியாகவும் வந்து சேர, ராமும் வருகிறான். ஜானு வரமாட்டாள் என்பதாய் சொல்லப்பட்டிருக்க, அவள் சிங்கப்பூரில் இருந்து வருகிறாள் என்பது அறிய வரும் போது பள்ளியில் அவள் காதலுக்காக ஏங்கித் தவித்த நினைவில் தனியே நிற்கிறான்... அவளைப் பார்க்க முடியாதென ஒளிந்திருக்கிறான் என்பதே உண்மை.

படம் ஆரம்பித்து முதல் அம்பது நிமிடங்கள் பள்ளிக்கால வாழ்க்கையாக விரிகிறது... அந்தக் காதலை அவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்... அதில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பு... யாருமே சோடை போகவில்லை.... ராமாக எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா, ஜானகி தேவியாக கௌரி கிருஷ்ணன், தோழியாக வரும் தேவதர்ஷினியின் மகள் (தேவதர்ஷினியின் சிறுவயது கதாபாத்திரம்), நண்பர்களாக வருபவர்கள் (ஆடுகள் முருகதாஸ் மற்றும் பகவதி பெருமாளுக்கான கதாபாத்திரம்) என எல்லாருமே அந்தக் காதலுக்குள்... காலகட்டத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார்கள்.

எங்கே இவர்களின் காதல் மீண்டும் பற்றிக் கொள்ளுமோ என்று நினைக்கும் நண்பர்கள் சுபாவை (தேவதர்ஷினி) இவர்களுடனே அனுப்பி அவளை ஹோட்டலில் விட்டதும் நீ வீட்டில் போய் இறங்கு என்று சொல்லி அனுப்ப, ஆனால் ராமோ அவளை முதலில் இறக்கிவிட, அவள் இவனைக் கிள்ளி அவளை விட்டுட்டு வீடு போய்ச் சேரு என்று சொல்லிச் சென்றாலும் என்னாச்சோ என்ற பயத்தில் இருவருக்கும் மாறி மாறி போன் செய்கிறாள். இருவருமே பொய் சொல்கிறார்கள். பற்றிக் கொள்ளாத காதல் தென்றலாய் அந்த இரவு முழுவதும் பயணிக்கிறது... நம்மைப் படுத்தி எடுக்கிறது.



விஜய் சேதுபதி நடிப்பு அரக்கன்... சின்னச் சின்ன முகபாவங்களைக் கூட மிக அருமையாகச் செய்திருக்கிறார். ஜானு முன்னால் அமர்ந்து கவிதை வாசிக்கும் போது.... அவள் தூங்கியதும் அவளுக்கு திட்டி சுற்றி நெட்டி முறிப்பது... தாலியைத் தொட்டுக் கும்பிடுவது... பெட்டின் மேலே ஏறி வா என்றதும் யோசித்து மழுப்புவது... யமுனை ஆற்றிலே பாடலுக்கு விழுந்தடித்து ஓடிவந்து அவள் முகம் பார்ப்பது...  ஆம்பள நாட்டுக் கட்டடா நீ என்று சொல்லும் இடத்தில் முகத்தில் வரும் நாணம்... என மனிதன் கலக்கல் சேதுபதி... இந்தக் கதாபாத்திரத்துக்கு இவர்தான் பொருத்தமானவர்.

த்ரிஷா... இதுவரை கமலா காமேஷ் என்று அறியப்பட்டவர் முகநூலெங்கும் ஜானுவாய் நிரம்பி வழிகிறார். ஜெஸ்ஸிக்குப் பிறகு ஒரு ஆத்மார்த்தமான கதாபாத்திரம்... ஜானுவாய் வாழ்ந்திருக்கிறார் என்பதைவிட அந்த வேதனை, மகிழ்ச்சி, உருகுதல், காதல் என மனுஷி அடித்து ஆடியிருக்க்கிறார். 52 நிமிடத்தில் கதைக்குள் வரும் த்ரிஷா, இடைவேளைக்குப் பின்னான பொழுதுகளை ஓர் இரவாய் விஜய் சேதுபதியுடன் பகிர்ந்து கொள்ள திரையில் விரியும் கதையின் பின்னே நம்மையும் நகர்த்துகிறார்... ஜானு... ஜானு... என நம் ஜானுக்களை நினைத்தபடி.

அவருக்கு குரலும் அவ்வளவு அழகாய் பொருந்திப் போகிறது... ஜானுவின் குரலாய் வாழ்ந்தவர் சின்மயியாம்... அருமை.

இறுதிக் காட்சியில் அவரின் தவிப்பும்... வேதனையும்... அப்பப்பா... செம.. அதுவும் தான் அழுவதை அவன் பார்க்கக் கூடாது என்பதற்காய் அவன் முகம் மறைத்து அழுது... விலகி... நம்மையும் அழ வைத்து விடுகிறார்.

இது 96க்கான படம் மட்டுமல்ல... அதற்கு முந்தைய இன்றைய கூடாமல் போன காதலுக்கான படம்தான்... மெல்லத்தான் நகர்கிறது இடைவேளைக்குப் பின்... நகரட்டுமே அதனால் என்ன... அவர்கள் எவ்வளவு பேசுகிறார்கள்... நாம் கடந்த காலத்துக்குள் பயணிக்கிறோம்... இன்னும் கொஞ்ச நேரம் ஜானு இருக்க மாட்டாளா... என்ற ஏக்கத்தோடுதானோ விமானத்தில் பறக்கும் ஜானுவைப் பார்க்கிறோம்... பின் என்ன மெதுவாக நகர்கிறது என்ற பொய்யைத் தூக்கிச் சுமக்கிறோம்.

விஜய் சேதுபதி என்னய்யா நடிக்கிறான்... டெம்ப்ளட் வசனம் பேசிக்கிட்டு... இதெல்லாம் ஒரு காதல் கதையா... அவளுக்காக 37 வயசு வரைக்கும் காத்திருந்தானாக்கும்... கடுப்பாகுது என்று சொல்லும்  உலக சினிமா ரசிகர்களுக்கான படமில்லை இது... உள்ளூரில் ஒருத்தியைப் பார்த்துச் சிரித்து அவ என்னைப் பார்த்து சிரித்தாடா என்று குதூகலித்து கொண்டாடி... பின் காணாமல் போன பாமரக் காதலர்களுக்கான படம் இது.

சொல்ல மறந்துட்டேனே... விஜய் சேதுபதியின் மாணவியாய் வந்து... எங்க சாரை நல்லாப் பாத்துங்கங்க மேடம் என காபி ஷாப்பில் சொல்லிச் சொல்லும் அந்தச் இளைஞியும் மிகச் சிறப்பாய் நடித்திருக்கிறார்.

நள்ளிரவில் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுடன் நம்ம சார் காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாரே என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக சேராத காதலை சேர்ந்ததாய் ஜானு விவரிக்கும் கல்லூரிக் காட்சிகள் எத்தனை உணர்ச்சிகரமானவை.... ஜானு ஏன் பொய் சொன்னாள் என்று கேட்பவர்களுக்கு வாழாத அந்த வாழ்க்கையை... அவள் அந்த நிமிடத்தில் வாழ்ந்து முடித்து விடுகிறாள். இதில் என்ன பொய் இருக்கிறது.

படத்துக்கு  இசையும் (கோவிந்த்) ஒளிப்பதிவும் (சண்முக சுந்தரம்) மிகப்பெரிய பலம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பட ஒளிப்பதிவாளரான பிரேம் குமார் இயக்குநராய் மாறி இருக்கும் படம் இது. இப்படியான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்திருப்பாரோ என்று தோன்ற வைக்கிறது. ஒரு சில படத்தில் தனது சரக்கை முழுவதுமாக இறக்கி வைத்து விட்டு அடுத்த படத்தில் கோட்டை விடும் இயக்குநர்கள் நிறைந்த தமிழ் சினிமாவில் இதுபோல் இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க வாழ்த்துக்கள்.

96 - சேராத காதலை காதலாய்ச் சொல்லும் படம்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 5 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை

Related image

கொஞ்சம் பெரிய பதிவுதான்... நிறைய எழுத ஆசை நீளமே (நீலம் அல்ல) போதுமென்றது...  பொறுமையாக வாசித்து உங்களின் மனக் கருத்தைச் சொல்லுங்கள்.

ரியேறும் பெருமாள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், இயக்குநர் பா.ரஞ்சித்தை தயாரிப்பாளராக மாற்றியிருக்கும் படம்.  

சா'தீ'யம் பேசும் படம் மட்டுமின்றி அதன் வலிகளைச் சொல்லும் படம்.

'இப்பல்லாம் எங்க சார் சாதி பாக்குறாங்க...?' என்று பெருமைக்காக பேசினாலும் இன்னும் சாதி வெறி என்பது ஊறித்தான் கிடக்கிறது மனித உள்ளத்துக்குள்...

விமர்சனங்கள் எல்லாமே ஆஹா... ஒஹோ என்றுதான் புகழ்கின்றன... அந்தப் புகழ்ச்சிக்கு ஏற்ற படமே இது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... சாதியை தொட்டுக் கொண்டு கோபுரமாக ஆக்கியதைத் தவிர்த்து... 

ஆமா.. அதென்ன ஆதிக்கச் சாதிப் பெண்களை மட்டும் எப்போதுமே தேவதையாகக் காட்டுகிறார்கள் என்ற விவாதம் வாட்ஸப் குழுமத்தில் ஓடியது... அதானே... ஏன்..?. தேவதைகள் எல்லாச் சாதியிலும் இருக்கத்தானே செய்கிறார்கள்... காட்டலாமே... எது தடுக்கிறது..? 

அதென்ன படத்தில் ஆதிக்க சாதிப் பெண்கள் மட்டுமே வழியக்கப் போய் காதலிப்பதாய் காட்டுகிறார்கள் என்ற விவாதம் எங்கும் ஓடவில்லை... ஓடாது... காரணம் நாம் 'ஆதிக்க' சாதிக்கு எதிரானவர்கள்... தப்பென்றால் எல்லாமே தப்புத்தான் என்னும் எண்ணம் நமக்குள் வருவதில்லை... இவன் நல்லவன், அவன் கெட்டவன் என்ற பகுப்பாய்வில் நாம் கில்லாடிகள்தான் எப்போதும்... பகுப்பாய்வில் கூட நாம் சாதி பார்ப்போம்தானே... 

இந்தச் சாதிப் பெண்ணைக் காதலிக்க வேண்டும்... திருமணம் செய்ய வேண்டும்... என்பதெல்லாம் வாய்வழிச் செய்தியாக தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சாதி இளைஞர்களுக்குச் சொல்லப்பட்டு அப்படி நடக்கும் பட்சத்தில் பணமும் கொடுக்கப்படுகிறது என்பதையும்... அது அதே சாதி இளைஞிகளுக்குச் சொல்லப்படுவதில்லையே ஏன் என்பதையும்... நாம் யாருமே விவாதப் பொருளாக எடுத்துக் கொள்ளமாட்டோம். காரணம் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே சாதி வியாபாரப் பொருள்.

இந்தக் காதல் என்பது இரண்டு சாதிக்குள் மட்டும் நிகழ்வதில்லை... எல்லாச் சாதிகளுக்குள்ளும்தான் நிகழ்கிறது. நாம் நீலக் குறீட்டை படத்தில் நடித்த நாய்க்கும் வைக்கும் இடத்தில் இன்ன சாதியெனச் சொல்லி மார்தட்டிக் கொள்கிறோம்... குலம் காக்க வந்த குலவிளக்கு நான் என் சாதி மக்களில் கெட்டவர்களே இல்லை என்பதாய்... அப்ப எதிர் தரப்பு...அதுதான் ஆதிக்க சாதி.... ஆமா... ஆதிக்க சாதி என்றால் 'நீலம்' தவிர்த்து அனைவருமா..?

இங்கு எந்த சாதிக் காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது..? ஒரே சாதிக்குள் காதலித்தாலும் பிரிவினைகளும் அடிதடிகளும் உண்டுதான் என்பதை நாம் மறந்துவிட்டு ஏதோ இரு சாதிகளுக்குள் மட்டுமே இது பரவிக் கிடப்பது போலவும்... அவர்களுக்குள் மட்டுமே ஆணவக் கொலைகள் நிகழ்த்தப்படுவது போலவும் பாவனை செய்வது ஏனோ..?

ஒவ்வொரு சாதிக்கும் மேலும் கீழும் சாதிகள் உண்டு... மேலே இருப்பவனுக்கு கீழே இருப்பவன் அடிமை சாதி... கீழே இருப்பவனுக்கு மேலே இருப்பவன் ஆதிக்க சாதி... இதில் எதற்காக படம் முழுவதும் சாதீயக் குறியீடுகள்... அதுவும் இரு பக்கத்து வலியைச் சொல்லும் படத்தில் ஒரு பக்கம் மட்டுமே குறியீடுகளாய் நிரம்பி வழிகிறது... மறுபக்கம் அதெல்லாம் தேவையில்லை... அவங்க பூராவும் ஆதிக்கம்தான் என்பதாய்... 

ரஞ்சித்தின் படங்கள் எப்போதுமே 'சாதீ'யத்தை சவுக்கு கொண்டு அடிப்பது போல் ஆளாளுக்குப் பேசுவோம்... அது எப்போதும் சவுக்கு எடுப்பதில்லை... சாதியை மட்டுமே உரக்கப் பேசும். இப்படி சாதியை வைத்துப் படமெடுத்துப் பெயர் வாங்கலாம் என்ற நினைப்பு மட்டுமே அவருக்குள் இருப்பதால்தான் அந்த வட்டத்துக்குள் இருந்து வெளிவர மறுக்கிறார்.. அதையே அவரின் படங்களும் பறை சாற்றுகின்றன.

மாரி செல்வராஜ்க்கு ரஞ்சித் கிடைத்ததால்தான் சுதந்திரமாக படமெடுக்க முடிந்திருக்கிறது என்று ஆளாளுக்குப் புகழ்கிறார்கள்...  ரஞ்சித் இல்லாது வேறொரு தயாரிப்பாளர் கிடைத்திருந்தால் கண்டிப்பாக 'நீலம்' பாய்ச்சாது இன்னும் சிறப்பாக எடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.

சரி... படம் எப்படி...?

அருமையான படம்... 

இப்படித்தான் காதல்கள் கொல்லப்படுகின்றன என்பதைத் தைரியமாகச் சொன்ன படம். அதுவும் ஆணவக்கொலை செய்வதற்கென்றே ஒரு கிழவன் ஊருக்குள்... அவர் செய்யும் கொலைகள் நம்மைப் பதற வைக்கின்றன. ஆற்றுக்குள் சிறுவன் கொலை கதைக்குத் தேவையில்லாதது என்பதைத் தவிர.

ஒரு நட்பு... அது காதலாகுமா... ஆகாதா... என்பதான கதையில் அதை காதலாக்கி... அவனை அடித்து... உதைத்து... சிறுநீர் கழித்து.... என்ன ஒரு கொடூரம்... எத்தனை வக்கிரமானது இந்தச் சாதி வெறி..

அதன் பின் அவன் அவளிடம் நடந்ததைச் சொல்லி... அவள் கட்டியழுது... ஒரு காதல் பாடல்... பின்னர் 'சாதி' வெறியர்களால் பிரச்சினை... இப்படியாகத்தானே எப்போதும் நகரும் தமிழ் சினிமா, ஆனால் இதில் தான் பட்ட அவமானத்தை கடைசி வரை சொல்லாமலே மனசுக்குள் போட்டுப் பூட்டி மறுகும் அவனும்... அதனால் அவளும் படும்பாட்டை நம் வாழ்க்கைக் கதையாக முன்னிறுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். வாழ்த்துக்கள் மாரி.

'இந்தப் பையனா... நல்ல பையனாச்சே... நான் வேணுமின்னா பேசிப் பாக்கட்டுமா...?' என்று சொல்லும்போது அட ஆணவக்கொலை செய்யும் கிழவனுக்குள் சிறிய மனசு கூட இருக்கே என்று தோன்றினாலும் அதற்கு முன்னான ஒரு காட்சியில் பேருந்தில் அதே இளைஞனை கூப்பிட்டுப் பக்கத்தில் அமரச் செய்து ஊர் பேரைக் கேட்டதும் ஏதோ தொடக்கூடாததைத் தொட்டது போல் எழுந்து... நகர்ந்து செல்லும் அந்தக் கிழவன் மீது ஏற்பட்ட கோபம் இறுதிவரை நீடிக்கவே செய்கிறது.

தன் பெண் ஒருவனை ரொம்பப் பிடிக்கும் அவனுக்கு மட்டுமே திருமணப் பத்திரிக்கை கொடுப்பேன் என்று சொல்லும் போதே அவனைக் காதலிக்கிறாள் என்று நினைக்கும் பெற்றோரை என்ன சொல்வது..? ஏன்... எதற்கு... எப்படி... என்றெல்லாம் கேள்விகள் கேட்காமல் முடிவுகளை எடுப்பது எல்லாச் சாதியிலும் இருக்கத்தான் செய்கிறது... அதில் சாதிப் பாகுபாடெல்லாம் இல்லைதானே.

இது போன்ற ஆட்கள் ஆதிக்க சாதியில் மட்டுமே இருக்கிறார்கள் என்று காட்டுவது தீவிரவாதி என்றால் முஸ்லீம்தான் என்ற தமிழ்ச் சினிமாவின் அழிக்க முடியாத கறைபோல்தான். 

ஒரு கிராமியக் கலைஞனை, அம்மணமாக்கி ஓட விடும் போது கண்ணீர் மட்டுமல்ல... வலியும் மனமெங்கும்... இன்னும் இப்படியான சாதீய வெறிகள் இருக்கத்தானே செய்கின்றன... குறிப்பாக இளைஞர்களுக்குள் சா'தீ' வளரத் தொடங்கியிருக்கிறது சமீப காலங்களில்...

காதலாகுமா... ஆகாதா.... என்பதை காலம் சொல்லுமென 'சரி வா... கப்பல் விடலாம்' என்று முடித்தாலும் அவனும் அவளின் தந்தையும் பேசும் காட்சிகளின் வசனம் செம... அருமையான இறுதிக்காட்சி... காலம்தான் பதில் சொல்லணும் என்றபோது காலம் எப்போது பதில் சொல்லும் என்னும் கேள்வி நமக்குள். 

நான் செருப்புத் தைப்பவனின் மகன்தான்... அன்னைக்கு ஒதுக்குனவன் இன்னைக்கு எங்கிட்ட வந்து நிக்கிறான் என்று முதல்வர் சொல்வது எதார்த்த உண்மை... என் நண்பனின் தந்தையை ஒதுக்கியவர்கள் அவன் அண்ணனின் முன் 'சார்' என போய் நின்றார்கள்... நிற்கிறார்கள்.. காரணம் படிப்பு... படிப்புத்தான் மாற்றத்திற்கான ஒரே வழி.

'நான் சாதி பார்த்தாடா பழகுறேன்...' என்ற ஆனந்தின் கேள்வியை நாம் நம் நட்பில் பலமுறை கேட்டிருப்போம்... என் கல்லூரி நாட்களில் எனக்கு பெரும்பாலும் சாப்பாடு கொடுத்தது என் நண்பனின் தாய்... அவர் எனக்கும் அன்னைதான்... அந்த வீட்டில் நீலவண்ணம் குடிகொண்டிருக்கவில்லை. இப்பவும் நாங்கள் எந்த வண்ணத்தையும் சுமக்கவில்லை. மனிதர்களாய்தான் தொடர்கிறோம் நட்பை.

எங்கள் பேராசான் ஆதிக்கசாதி மனிதர்தான்... கல்லூரிக் காலத்தில் விடுமுறை தினங்கள் எல்லாம் அவர் வீட்டில்தான்... நாங்கள் பத்துப் பேருக்கும் மேல்... எங்களில் ஆண்ட... ஆளப்போற... ஆதிக்க... நீல சாதிகள் எல்லாம் உண்டு... பிரிவினை இல்லை. அசைவம் சாப்பிடாத ஐயா வீட்டில் அம்மா எங்களுக்காக அசைவம் சமைப்பார்... நாங்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவோம்.. என்னருகே பிராமணப் பெண்ணான என் தோழி அமர்ந்து சாப்பிடுவார்... நாங்கள் நாங்களாக இருந்தோம்... ஐயா வீடு ஒரு நாளும் சாதீய ஏற்றத்தாழ்வைப் போதிக்கவில்லை. அது சமத்துவபுரமாகத்தான் இன்றும்.

சித்தப்பனின் மகள் வேறொருவனுடன் பழகும்போது, அதுவும் ஊர்ப் பேரைச் சொன்னாலே இன்ன சாதிக்காரன் என்று தெரியும் நிலையில் அவன் திருமணத்துக்கு வரும்வரை வீட்டில் சொல்லவோ, அவனுடன் மோதவோ செய்யாத வகுப்புத் தோழன் திடீர் வில்லனாதல் சினிமாவுக்கானது... குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு.

2005-களில் வேட்டையாடித்தான் பொழப்பு நடத்தினார்கள் என்பது சினிமாவுக்கானது... வேட்டையாடுதல் என்பது இப்போதும் இருக்கும் ஒரு பொழுதுபோக்குத்தான்.

'வா கருப்பி...' என்றதும் அது அவனுடன்தான் போகிறது... பின் எப்படி சாதி வெறியர்களின் கையில் மாட்டுகிறது..? இருப்பினும் சாதீயக் குரூரம் நாயின் சாவில்.... டைரக்டரின் டச்... செம... அவன் கைலி அவிழ்ந்து விழ, கதறி ஓடி வந்து புழுதியில் விழுந்து அழுவது... மனசைப் பிழிந்தது. இன்றைய இளவட்டங்கள் சாதியைத் தூக்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்... மாற்றம் அவர்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

எங்க பக்கம் சல்லிக்கட்டு மாடு செத்தால் நடக்கும் நிகழ்வுகள் நாயின் இறப்பில்... மாரடித்தல்.... ஒப்பாரி என வித்தியாசமாய் சிலவும் அதனோடு.... அப்படியிருக்கிறதா..?

'டாக்டர்' ஆவேன் என்று சொல்பவன் முதல்வர் இது சட்டக் கல்லூரி... டாக்டராக முடியாது வக்கீலாத்தான் ஆகலாம் என்ற பின்னே 'அம்பேத்காராவேன்' என்பது சாதீய மனிதர்களுக்கானது... சாதிப் பற்றாளனின் கைதட்டலுக்கானது. அவன் சொல்லும்போதே டாக்டர் அம்பேத்கார் போல் ஆவேன் என்று சொல்லியிருக்கலாம். இங்கே பாரதி, அம்பேத்கார், அப்துல்கலாமை எல்லாம் சாதி மத வட்டத்துக்குள் வைத்துப் பார்க்கவில்லை. அவர்களைச் சார்ந்தோரே வட்டமிடுகிறார்கள்.

குடத்தின் மூடி திறந்து கண்மாயில் தண்ணீர் குடிப்பது போல் வாய் வைத்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் பார்க்கப் புதுசு... அப்படி இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும்.

எந்தச் சிறிய கிராமத்திலும் 12வது வரை பள்ளிகள் இருப்பதில்லை... பக்கத்துச் சிறு நகரங்களில்தான் படித்து கல்லூரிக்கு வந்து சேர்வோம்... ஆங்கிலத்தில் புலியாக இல்லை என்றாலும் ஓரளவேனும் தெரிந்திருக்கும்... விவரமானவனாக இருப்பவன் ஏ பார் அம்பிகா என்பானா..? 

கருப்பியைக் கொல்லும் இரயில்தான் இறுதியில் ஆணவத்தையும் கொல்கிறது... ஆணவம் அத்துடன் செத்துவிடுமா என்ன... அது எப்பவும் போல் எல்லா இடத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த இரயில்கள்தான் எத்தனை காதல் கொலைகளைச் செய்து இருக்கின்றன... இருந்தும் இன்னும் உயிர்போடு ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன காதலிக்கும் உயிர்களைத் தேடி...

சமரசமாப் போங்கடே என்று கை கொடுக்கச் சொன்னால் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை வைத்துக் கொண்டு கை கொடுக்கிறார்கள்... அப்புறம் அங்க எப்படி சமரசம் வரும்..?

பிடித்த நடிகையின் அட்டைப் படம் போட்ட நோட்டு, வீட்டுப் படிக்கல்லில் வைத்து எழுதுதல்... என பால்யத்தைப் புரட்டிப் பார்க்க வைத்த காட்சிகள் அழகு.

சினிமாத்தனமும் குறியீடுகளும் நிறையயிருந்தாலும் வாழ்க்கையை... வலியை... அவரவர் பார்வையில் சொல்லும் கதைக்களத்துக்காக கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

கதிர்... எதார்த்த நடிகன்... தமிழ் சினிமாவின் நம்பிக்கை விதை.

ஆனந்தி... அழகான, நடிக்கத் தெரிந்த பெண்... G.V.பிரகாஷைப் போல் குட்டைப் பாவாடை மாட்டிவிடவில்லை என்றால் கண்டிப்பாக ஜொலிப்பார்.

சூரி, சந்தானம் போன்றவர்களின் நகைச்சுவை நம்மைக் கொல்லும் காலத்தில்தான் யோகிபாபுக்கள் இயற்கையாய் வந்து போகிறார்கள்.

படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் விதம் அருமை... காட்சிகள் கண் முன்னே நிற்கின்றன.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்துக்கு பெரிய பலம்.

படம் முழுவதும் சா'தீ'ய வன்முறையைச் சொல்லி இறுதியில் புள்ள குட்டிகளைப் படிக்க வையுங்கடா என்ற தேவர் மகனையும் கொண்டாடினோம்... ஆணவக் கொலைகளைச் சொல்லும் போது சா'தீ'யக் குறியீடுகளை அள்ளித் தெளித்திருக்கும் பரியேறும் பெருமாளையும் கொண்டாடுவோம்... இன்னும் வர இருக்கும் சாதிப்படங்களை எல்லாம் வரவேற்போம்.

நாம் சா'தீ'யத்தை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதில் அரசியல்வாதிகளைவிட ஆபத்தானவர்கள் இந்த சினிமாக்காரர்கள் என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்..? 

தமிழ் சினிமா சா'தீ'யத்தை விட்டு வெளியே வந்தாலே போதும்... சாதி மெல்லச் சாகும் என்பதே உண்மை.

ஆமா... பரியன்.... 

மிகச் சிறப்பான படம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா... 

மாரி செல்வராஜ்கள் சா'தீ'ய சமரசம் செய்யாமல் இன்னும் நிறைய வாழ்க்கைப் படங்களைக் கொடுக்க வேண்டும்... அது சினிமாவில் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் மாற்றங்களைக் கொடுக்கும் படமாக அமைய வேண்டும்.

வாழ்த்துவோம் மாரியை...
-'பரிவை' சே.குமார்.

புதன், 3 அக்டோபர், 2018

சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)

'என் உயிர் நீதானே...' என்ற எனது சிறுகதை 'ஐ லவ் யூடா' என்ற பெயரில் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. என் உயிர் நீதானேயை விட ஐ லவ் யூடா ஈர்ப்பாக இருக்கும் என்று நினைத்தார்கள் போல. 

எது எப்படியோ முத்துக்கமலத்தில் இது எனது மூன்றாவது கதை... படைப்பாளர்கள் வரிசையில் எனக்கும் ஒரு இடமும் அதில் என் கதைகளும்... நன்றி முத்துக்கமலம்.

முத்துக்கமலத்தில் வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.

வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க... நன்றி.




உயிரே ஒரு கடிதம்
(ஐ லவ் யூடா)
'ப்படியிருக்கே?'

யாருடா இவன் ஒரு லெட்டர் எழுதும் போது எப்படியிருக்கேன்னு ஆரம்பிச்சிருக்கானேன்னு நீ நினைக்கமாட்டேன்னு எனக்குத் தெரியும். அந்த ஒரு வரிக்குள் ஒளிந்திருக்கும் என்னை நீ கண்டுபிடித்து விடுவாய் என்பதை நான் அறிவேன்.

'சரி... எப்படியிருக்கே...?' என் நினைவுகள் பல நேரம் நம் நினைவுகளை மீட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை காலம் ஆனாலும்... இனிக்கும் நாட்களல்லவா அந்த நாட்கள்...? எப்படி மறப்பது... எப்படி அதை வீசி எறிவது..?

'நம் முதல் சந்திப்பு உனக்கு ஞாபகம் இருக்கா...?' அட பைத்தியக்காரா... இது என்னடா கேள்வியின்னுதானே சிரிக்கிறே... உனக்கு ஞாபகம் இல்லாமலா இருக்கும்... மரத்தடியில் நண்பர்களுடன் நிற்கும் எங்களைக் கடந்து செல்லும் பட்டாம்பூச்சிகளில் தேவதையாய் நீ தெரிய, நான் உன்னைப் பார்த்து கை நீட்டி 'இங்கே வா' என்கிறேன். நீ உன் தோழியை துணைக்கழைக்க, 'அவ எதுக்கு... பாத்ரூம்க்கும் அவளை கூட்டிக்கிட்டே போவியா..'? என நான் சொன்னதும் என் நண்பர்கள் எல்லாம் கேலியாய் சிரிக்கிறார்கள். நீ உன் தோழி தவிர்த்து அழகான முகத்தில் கோபத்தின் சிவப்பு சூடி அருகே வருகிறாய்...

'பர்ஸ்ட் இயர்தானே...' என்றதும் 'ஆமாம்' என தலையாட்டினாய்.

'ஆமா நீ பூம்பூம் மாடு... நான் மாட்டுக்காரன்... கேள்வி கேட்ட தலையாட்டுறே... ஊமையா...?' என்றேன் நக்கலாய்... மீண்டும் நண்பர்களின் சிரிப்பொலி.

'ஆமா...' என்றாய்... பர்ஸ்ட் இயரா என்றதற்கு இந்த ஆமாவா இல்லை ஊமையா என்றதற்கு இந்த ஆமாவா என்று ஆராயாமல் 'உன் பேர் என்ன?' என்றேன். நீயும் கோபத்தோடு 'மிருதுளா' என்றாய்.

'டேய் மாப்ள... பிரதர் இன் லா , சிஸ்டர் இன் லாவெல்லாம் தெரியும்... அது என்னடா மிருது லா' என்று சிரித்தான் ரகு. உடனே நீ 'மிருதுளான்னு சொன்னேன் என்றபடி அங்கிருந்து அகன்றாய். கொஞ்சத் தூரம் போய் திரும்பி பார்த்து முறைத்தாய்... நானும் முறைத்தேன்... 

முறைக்கும் கண்கள் விரைவில் ரசிக்கும் என்பதை அப்போது நாம் உணரவில்லை.

நாட்கள்... வாரங்களாகி... வாரங்கள்... மாதங்களாக பயணித்தபோதுதான் நான் ரவுடி என நீயும்.. நீ திமிர் பிடித்தவள் என நானும் நினைத்திருந்தது மெல்ல மாறி முதல் பார்வையின் தவறுதான் அது என்பதை உணர்ந்து சிறு புன்னகையுடன் கடக்க ஆரம்பித்து மெல்ல மெல்லப் பேசி நட்பானோம்.

அன்று... அதுதான் நம்மை உணர வைத்த நாள்... உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. என்னமோ எல்லாமே இவனுக்கு மட்டுந்தான் ஞாபகம் இருக்க மாதிரி ஞாபகம் இருக்கான்னு கேட்கிறானேன்னு நீ சிரிப்பேன்னு எனக்குத் தெரியும்... இருந்தும் கேட்கத் தோணுது  இப்போதைய வாழ்க்கை... சரி வா... நம்மை உணர வைத்த நாளை மீண்டும் உணர்வோம்.

கல்லூரி நண்பனின் தங்கை திருமணம்... நீயும் அங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும்... என்னைவிட உனக்கு அவனிடம்தான் ஒட்டுதல் அதிகம். அதற்கு காரணம் இருந்தது... அவனும் நீயும் இலக்கியம் பேசுபவர்கள்... எனக்கு அதெல்லாம் புரியாது... தெரியாது. கல்லூரி சார்பாக பல போட்டிகளுக்கு இருவரும் அனுப்பப்பட்டு நிறைய பரிசுகளை வென்று வந்து கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நட்பு வட்டத்தில் நான் வெளியேதான் நிற்க வேண்டியிருக்கும் என்பதை நன்கறிவேன். நான் இன்னும் உன்னுடன் நெருங்கிப் பழகாத தினங்களே அவை... ஒரு புன்னகை., சில வரிப் பேச்சுடனான நட்பு மட்டுமே நமக்குள்... அப்படியிருக்க உன் இலக்கியத் தோழனின் தங்கை திருமணம் வரமாலா இருப்பாய்..?

Image result for மனைவி

அது ஒரு சிறு கிராமம்... பசுமை நிறைந்த வயல்வெளிகள்... பேருந்து வசதி இல்லாத கிராமம்... மெயின் ரோட்டு வழியாக பயணிக்கும் பேருந்தில் கிளைச்சாலையில் இறங்கி கப்பி ரோட்டில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். அதனால் நாங்கள் நண்பர்களின் வண்டிகளில் ரெண்டு மூணு பேர் என அங்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னே கல்லூரி நண்பர்கள் வந்திருக்க, நீ வந்திருக்கிறாயா..? என்று நான் தேடினேன் என்பதை உன்னிடம் அன்றே சொன்னேன். ஞாபகத்தில் இருக்கா..? சரி விடு... இந்த வார்த்தை வேறு அப்பப்ப வந்துவிடுகிறது. தேடிய என் விழிகளுக்குள் நீ சிக்கினாய்... ஆனால் உன் இலக்கிய நண்பனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாய்... ஏனோ விழிகளை விலக்கினாலும் மீண்டும் மீண்டும் உங்கள் பக்கமே நகர்ந்து கொண்டிருந்தது.

சாப்பிடப் போகும் போது ஏதேச்சையாய் பார்ப்பது போல்,'ஹாய் எப்ப வந்தீங்க..?' என்றாய்... இதுதான் நம் நட்பின் ஆரம்பப் பேச்சாய் நான் உணர்ந்தேன்.  'அப்பவே வந்துட்டோம்... நீதான் பிசி' என்றபடி கடந்தேன். அதன் பின்னான நேரங்கள் நண்பர்களுடன் அரட்டையில் கழிந்தது. கிளம்பும் போது 'எங்களை பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ண முடியுமா?' என்று என்னிடம் வந்து கேட்டாய். எனக்கு ஆச்சர்யம்..? அப்போது பெண்கள் பேசுவதே பெரிய விஷயம்.. வண்டியில் பின்னால் அமர்ந்து வருவது என்பது சாத்தியமேயில்லை. அப்படியிருந்தும் நீ கேட்டதும் என்னால் மறுக்க முடியவில்லை. நண்பனின் வண்டியில்தான் நான் வந்திருந்தேன். அவனிடம் வண்டியை நான் வாங்கி ஸ்டார்ட் பண்ண, நீ என் பின்னே ஏறிக்கொண்டாய். மற்றவர்கள் மற்ற நண்பர்களின் வண்டியில்...

'என்ன எதுவுமே பேசாம வாறீங்க..?' நீதான் கேட்டே, 'ஒண்ணுமில்லை...' என்றேன். சிரித்தவாறே 'ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே..?' என்றாய். வண்டி பள்ளத்தில் இறங்கி ஏறும் போது ஏதேச்சையாய் உன் கை என் தோளைப் பற்றியது. எனக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்... அதிலிருந்து மீண்டு 'என்ன...?' என்றேன். 'இந்த டிரஸ் நல்லாவே இல்லை... இந்தப் பேண்டுக்கு லைட் ஊதாக் கலர் சர்ட்டுன்னா சூப்பரா இருக்கும்' என்றாய். 'ம்... எங்க அக்கா நல்லாயிருக்குன்னு சொன்னுச்சு...' என்றதும் 'அக்காவோட ரசனை சூப்பர்' என்று சிரித்தாய்.

நமக்குள் கொஞ்ச நேர அமைதி "என்ன சார்...பேச யோசிக்கிறீங்க... ராக்கிங் பண்ணினப்போ என்னை ஊமையின்னு சொன்னீங்க... இப்ப யார் ஊமை...' என்று நீ கேட்க, 'அது என்னமோ தெரியலை... வந்த பொண்ணுகள்ல சட்டுன்னு உன்னைப் பிடித்தது... கூப்பிட்டுக் கேட்டேன்... ராக்கிங்ன்னா அப்படித்தான் பேசணும்... அதான்...' என்றதும் நீ சிரித்தாய்.

வேகமா வாங்கடா.. என்ன இப்பத்தான் கல்யாண ஊர்வலம் மாதிரி மெதுவா வாறீங்க என்று முன்னே சென்ற நண்பன் கத்த, வண்டியின் வேகத்தைக் கூட்டினேன். 'மெல்லவே போங்க' என்று என் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்தாய்.

'ஆமா... உன் இலக்கிய நண்பன் கல்யாண வேலையை விட்டுட்டு உங்கிட்ட அப்படி என்ன கடலை போட்டான்.... சிரிச்சு சிரிச்சு பேசினீங்க... இலக்கியமா?' என்றேன் நக்கலாக.

 'என்ன நக்கலா... அவங்க வீட்டுத் திருமணத்துக்கு வந்திருக்கோம்... அவன் வந்து பேசினான்.. தட்ஸ் ஆல்.. ஆமா நீங்க பாத்தீங்களா...?' என்றாய். 'ஆமா... என்ன ஒரு சந்தோஷம் அவன் முகத்துல... கல்யாண மாப்பிள்ளை மாதிரி...' என் பொறுமலை கொட்டினேன். 'ஏய் அவன் என்னோட பிரண்ட்... நீங்க அப்ப என்னையத்தான் பாத்துக்கிட்டு இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க...' என்னைச் சீண்டினாய்.

'ஆமா... பெரிய அழகி... கண்ணுக்கு முன்னே கடலை... அதான்...' என்றதும் 'ஏன் நான் இந்த டிரஸ்ல நல்லாயில்லையா...?' என்றவள், 'நீங்க எங்க பக்கம் வந்து உக்காந்து பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு பார்த்தேன்... வரவேயில்லை... அவன்கிட்ட பேசினதால கோபமாக்கும்..' என்றாய். 'நான் எதுக்கு தாயி உங்கமேல கோபப்படணும்... என்னோட பிரண்ட்ஸ்கூட அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தேன்... இப்பக்கூட உதவியின்னு கேட்டீங்க... வந்தோம்... உங்களை கூட்டிக்கிட்டு பவனி போகலாம்ன்னு சந்தோஷத்துல வரலை...' என்றேன்.

உடனே நீ 'ம்க்கும்... நம்பிட்டோம்.... இதே பசங்க கேட்டிருந்தா வந்துருப்பீங்களாக்கும்... சாக்குப் போக்கு சொல்லியிருக்கமாட்டீங்க... பொண்ணுங்கன்னதும் வந்தீங்க... என்ன சார் சரிதானே...?' என்று சிரிக்க, நான் மறுக்க ‘என்னைய ஏத்தாம வேற பொண்ணை உங்க வண்டியில ஏத்தியிருக்கலாமே என் என்னை உங்க வண்டியில ஏத்தினீங்க..’ எனக் கேட்டுச் சிரித்தாய். நான் பதிலேதும் சொல்லாமல் வண்டியை செலுத்த பேருந்து நிறுத்தம் வந்தது.

நீ இறங்கியதும் நான் வண்டியை எடுக்க 'ஒரு நிமிடம்' என்றாய்.. நின்றேன்... அருகே வந்து 'இந்த சாரி எனக்கு நல்லா இல்லையா..?' என்று என் முகம் பார்த்துக் கேட்டாய்... பொய் சொல்ல மனமில்லை எனக்கு... 'நீ ரொம்ப அழகா இருக்காய்..' உண்மை பேசினேன். 'அப்ப அப்படிச் சொன்னீங்க..?' சிறு குழந்தைபோல் கோபமாய்க் கேட்டாய். 'சும்மா' என்று சிரிக்க, 'டேய்... அங்க என்னடா கடலை... வாடா... அவனுங்க காத்துக்கிட்டு இருப்பானுங்க என்ற நண்பனின் அழைப்புக்கு, 'போங்கடா... வாறேன்' என்றதும் 'நடத்துங்க... நடத்துங்க...' என்றபடி அவர்கள் கிளம்ப, 'எங்க நடத்துறது... நான்தான் வகுப்பு எடுக்க வேண்டியிருக்கு' என மெல்ல முணங்கினாய். 'என்ன..?' என்றேன். 'பின்னே' என்று சிரித்தாய்.

'சாரே... அவன் என்னோட போட்டிகளுக்கு வர்றவன் என்ற முறையில்தான் பேசுவேன்... நீங்க பாட்டுக்க காதல் கத்திரிக்காய்ன்னு எல்லாம் நினைச்சிறாதீங்க... எனக்கு என்னைய முதன் முதலில் ராக்கிங் பண்ணின இந்த ரவுடியைத்தான் பிடிக்கும்... அந்த கத்திரிக்காயெல்லாம் இங்கிட்டுக்கூட இருக்கலாம்' என்று சாதாரணமாய் நீ சொல்ல, நான் விக்கித்து நின்றேன்.

'ஏய் வாயாடி... வாயாடுனது போதும்....வாடி பஸ் வருது' என் உன் பிரண்ட்ஸ் குரல் கொடுக்க, 'உங்க கூட வண்டியில வந்த இந்தக் கொஞ்ச நேரம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது, நாளைக்கு இந்த பேண்டுக்கு லைட் ஊதா சர்ட்டுல வாங்க...' என்றபடி ஓடினாய். அதன் பின் கப்பி ரோட்டில் என் வண்டி பறந்தைச் சொல்லவும் வேண்டுமா..?

நம் காதலைச் சுமந்த கல்லூரி...

மைதானத்துப் புங்கை மரத்துக்கு கீழ் இருக்கும் அமரும் திண்டு...

பெண்கள் அறைக்குப் பின்னே இருக்கும் வேப்ப மரம்...

கல்லூரிச் சாலை...

மாலை நேரங்களை விழுங்கிய பாரதி பூங்கா...

என இவையெல்லாம் நம் காதலைப் பருக, ஈருடல் ஓருயிராய் ஆனோம். எல்லாருக்கும் வரும் எதிர்ப்புக்களைச் சந்தித்து  உறுதியாய்... முடிவாய்... நின்று குடும்ப சம்மதத்துடன் குமரன் சன்னிதியில் வாழ்வில் இணைந்தோம்.

அன்று... நம் முதல் இரவு...

எல்லாருமே முதல் இரவு என்றால் அது காமத்திற்கான இரவு என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் அதுதான் நம் வாழ்க்கைக்கான முதல் இரவு...

காதலித்த ஆறாண்டுகள் எவ்வளவோ பேசியிருந்தாலும் அந்த இரவில் நம் வாழ்க்கையைப் பற்றி, பிறக்கப் போகும் நம் குழந்தைகள் பற்றி, செல்ல வேண்டிய தூரம் பற்றி, அடைய வேண்டிய சிகரம் பற்றி... இன்னும் இன்னுமாய் நேரம் கடந்து கொண்டே செல்ல, நம் பேச்சும் கூடிக்கொண்டே போனது உனக்கு நினைவில் இருக்கா?

காதலிக்கும் போது இருக்கும் நேசம், புரிந்து கொள்ளும் தன்மை என எல்லாம் தம்பதிகளானதும் சற்றே மாறித்தான் போகும் என்பதை காதல் திருமணம் செய்த எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அந்தப் புள்ளி... பெரிய கோலமாக மாறி... 'அப்பவே சொன்னேன் வேற சாதிக்காரன் வேண்டான்னு... காதல் கத்திரிக்காய்ன்னு சொல்லி நீதானே கட்டிக்கிட்டே... இன்னைக்கு தப்புப்பண்ணிட்டேன்னு புலம்புறே...' என்ற உன் அம்மாவின் வாக்கு வேதவாக்காகி   என் உயிரை எடுத்துச் சென்று விட்டாய்.

விவாகரத்துப் பேப்பர் அனுப்புகிறோம் என்கிறார் உங்கப்பா...

விவாகரத்து...

அது யாருக்கு வேணும்...?

உயிர் போன பின்னால் இனி ரத்து செய்ய என்ன இருக்கிறது..?

நான் மாறிவிட்டேன் என்கிறாய் நீ..? எப்போதும் சுமந்த காதலைத்தான் இப்போதும் சுமக்கிறேன்... முதல் நாள் எனக்குள் பறந்த பட்டாம்பூச்சி இப்போதும் பறந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன ஒன்று... அன்று இளமைத் துள்ளலுடன் வாழ்க்கை பற்றிய கவலையின்றிப் பறந்தது... இன்று கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து நம்மளை நம்பிய வந்தவளை கண் கலங்க விடக்கூடாது... என் தேவதையை ராணி மாதிரி வச்சிக்கணும்ன்னு... வாழ்வின் அர்த்தம் கொடுத்தவளுக்காக... உனக்காக... ஓடிக் கொண்டிருக்கிறேன்...

என் தேவதைக்குள் பூக்க இருக்கும் தேவதைகளுக்கா தேனைச் சேமிப்பதற்காக பணம் என்னும் மகரந்தத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். ஓட்டத்தின் வேகத்தில் வார்த்தை தென்றலாவதும் சூறாவளியாவதும் தவறில்லையே... இதயத்துக்குள் உன் மீதான பிரியம் இம்மியளவும் குறையவில்லை... தினம் தினம் இமயம் அளவு கூடிக்கொண்டேதான் போகிறது,

என்னைப் புரிந்தவளே... என் கண்ணம்மா.. இதுதான் நான்... நான் நானாக இருக்கிறேன்... நீ நீயாக இருப்பாய் என்ற நம்பிக்கையில் இன்னும்... கடந்து கொண்டிருக்கிறேன் நீயில்லா மணித்துளிகளை...

உன் உயிரைச் சுமக்கும் உடல் மட்டும் இங்கே... உயிர்...?

என் ப்ரியமானவளுக்கு... என கணவன் எழுதியிருந்த மின்னஞ்சலை வாசிக்க விருப்பமில்லாததால் திறந்து பார்க்காமல் வைத்திருந்தாள். இரவு படுக்கப் போகுமுன் ‘சரி அப்படி என்னதான் கதை விட்டிருக்கிறான்’ என வாசித்துத்தான் பார்ப்பமோ என்று திறந்த மிருதுளா,  'பிரிய நினைத்தால் படிக்க வேண்டாம்... பிரியம் இருந்தால் ஒருமுறை வாசித்துச் செல்' என்று ஆரம்பித்த கடிதத்தைப் படிக்க மெதுவாக வாசிக்க ஆரம்பித்தாள்.

‘நல்லாயிருக்கியா’வில் உருகி...

ஒவ்வொரு ‘நினைவிருக்கிறதா’விலும் கண்ணீரைச் சேர்த்து...

‘என் கண்ணம்மா’வில் கன்னத்தில் இறக்கி...

‘நீ இல்லா மணித்துளி’யில் உடைந்து...

‘கேள்விக்குறியில் நிற்கும் உயிரில்’ பொறுமி...

'ஐ லவ் யூடா...' என்று கதறி அழுதாள்.
-'பரிவை' சே.குமார்.

****
ண்பர் 'தளிர்' சுரேஷின் 'தேன்சிட்டு' மின்னிதழில் வெளியான 'மனிதர்கள்' சிறுகதை விரைவில் பகிரப்படும். அத வாசிக்கவும் நண்பர் இதழை வாசிக்கவும் விரும்பினால் இங்கு சொடுக்குங்கள்.

****

திங்கள், 1 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி


'பொறு புள்ள பூவழகி
சத்த நேரம் பேசிக்கிறேன்...

பொழுதும் போகவில்லை
உன்னத்தான் யோசிக்கிறேன்...

மனசெங்கும் பூப்பூத்து
மச்சினியே காத்திருக்கு...

படக்குன்னு நீ வரவே
பாதையிலே பாத்திருக்கு...

திருநா பேரழகே
உனக்காக நான் பொறந்தேன்..'

கிராமியப் பாடல்களை எழுதுவதில் கில்லாடி ராசி.மணிவாசகன் அவர்களின் சமீபத்திய வெற்றிப் பாடல் இது. நாடக நடிகர் (நாரதர்/ முருகன்) முத்துச் சிற்பி சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். இவரின் 'அத்த மக உன்ன நெனச்சி' பாடல் ஆந்தக்குடி இளையராசாவைப் பிரபலமாக்கியது. 'பொறு புள்ள பூவழகி' முத்துச்சிற்பிக்கு கிராமியப் பாடல்களில் முகவரி கொடுத்திருக்கிறது.

(வள்ளி மனோரஞ்சனியுடன் முத்துச் சிற்பி)

கிராமியப் பாடல்களைக் கேட்பதில் எப்போதும் ஒரு சந்தோஷம் எல்லாருக்குமே உண்டுதானே... அதை விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனோ... பரவை முனியம்மாவோ... கொல்லங்குடி கருப்பாயியோ.... புஷ்பவனம் குப்புசாமியோ... அனிதாவோ... கோட்டைச்சாமி ஆறுமுகமோ... இன்னும் யார் யாரோ பாடினாலும் அந்த வரிகளைச் சுமக்கும் கிராமிய இசை அப்படியே அணைத்துக் கொண்டு, நம்மை அறியாமல் ஆட்டம் போட வைக்கும்.

சமீபத்திய கிராமியப் பாடல்கள் முழுக்க முழுக்க கிராமியச் சாயல் இல்லாவிட்டாலும் மிகச் சிறப்பான வரிகளால் நம்மை ஈர்க்கின்றன. இப்போதைக்கு தஞ்சை சின்னப்பொண்ணு... ஆந்தக்குடி இளையராஜா... விஜய் சூப்பர் சிங்கர்... (இப்படிச் சொன்னாத்தான்  தெரியும்ங்கிற மாதிரி ஆக்கிட்டானுங்க) செந்தில் கணேஷ் எனப் பலர் சிறப்பான முறையில் கிராமியப் பாடல்களை மேடைகளில் அரங்கேற்றி வருகிறார்கள். கரகாட்டம் காம ஆட்டமாக மாற, கிராமியப் பாடல்களுக்கான மேடைகள் விரிய ஆரம்பித்துவிட்டன.

முன்னெல்லாம் கிராமியப் பாடல்களை பெரும்பாலும் அவர்களே எழுதி அவர்களே பாடி வந்தார்கள்... அது ஒரு தனிச்சுவை. இப்போது பாடல் வரிகளை எழுதுவதற்கென்றே பலர் இருக்கிறார்கள்... அந்தப் பாடல்களை பல இளம் கலைஞர்கள் மிகச் சிறப்பாகப் பாடி தங்களின் திறமையை நிருபிப்பதுடன் கிராமியக்கலையை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.

புஷ்பவனத்தின் 'ராஜாத்தி உன்னை எண்ணி' பாடலைப் போல ஆத்தங்குடி இளையராஜா பாடிய 'அத்த மக உன்ன நெனச்சி' பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. எந்தத் திருவிழா என்றாலும் யார் நடத்தும் கிராமியக் கலை நிகழ்ச்சி என்றாலும் அதில் 'அங்கே இடி முழங்குது' என கருப்பரை ஆட விடாமல் இருப்பதில்லை. அப்படித்தான் இந்த 'அத்த மக உன்ன நெனச்சி' பாடலும். இந்தப் பாடல் குறித்து முன்பு ஒரு பகிர்வு எழுதியிருந்தேன். அதனால் அத்த மகளுக்கான பதிவு இது இல்லை என்பதால் பூவழகி பின்னே போகலாம்.

'வள்ளி திருமணம்' நாடகம் பார்க்கும் நாடக ரசிகர்களுக்கு நாரதர் முத்துச்சிற்பியைத் தெரியாமல் இருக்காது. தன் குரல் வளத்தால் 'சிம்மக்குரலோன்' என்றும் 'இசையருவி' என்றும்  அழைக்கப்படுபவர், பாடல்களை மட்டுமே பாடி பிரபலம் அடைந்து விடலாம் என்றெண்ணாமல் நிறையப் புராணங்களைப் படித்து மிகச் சிறப்பான தர்க்கம் பண்ணக் கூடிய இளைஞர். இவரோடு தர்க்கம் பண்ணுகிறவர்களோடு பாட்டும் புராணமுமாய், குறிப்பாக அடித்துக் கொண்டு நாறாமல் மிகச் சிறப்பாக நடிக்கக் கூடிய மனிதர். ராதாகிருஷ்ணன், ராஜா, சூர்யா போன்ற பபூன்களுடன் நடத்தும் சிரிப்புத் தர்க்கமும்... கலைமகள், அபிராமி, மனோரஞ்சனி போன்றோருடனான புராணத் தர்க்கமும் சிறப்பாகவே இருக்கும் என்றும்... எப்போதும்.

நல்ல பாடகரான இவரின் முதல் கிராமியப் பாடல்கள் தொகுப்பான 'சிற்பிக்குள்ள முத்தப்போல' சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு பாடல்களாக அவரின் யூடிப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். பகிர்ந்த பாடல்கள் அனைத்துமே சிறப்பாக வந்திருக்கிறது. அம்மாவுக்கு ஒன்று... குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு ஒன்று... காதல் பாடல்கள் என அடித்து ஆடியிருக்கிறார். எல்லாம் அருமையின்னாலும் பூவழகியே எனக்கு முதன்மையாய்.

இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் இன்றைக்கு கிராமத்துப் பாடல்களை எழுதிக் கொடுப்பவர்கள் மிகச் சிறப்பான பாடல்களை எழுதிக் கொண்டிருப்பவர் ராசி.மணிவாசகன்.... அவர் வரிக்கு வரி வசியம் பண்ணுகிறார். வார்த்தைகள் வசதியாய் வந்து அமர்கின்றன அவரின் பேனாவுக்கு... மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கப் போற கவிஞர், கிராமியப் பாடலாசிரியர். இவரின் வரிகளுக்கு முத்துச்சிற்பி தன் குரல் வளத்தால் உயிர்கொடுத்திருக்கிறார்.

பொறு புள்ள பூவழகியில் என்ன அழகான வரிகள்... அருமையான இசை... முத்துச்சிற்பியின் குரல் அவருடன் இணைந்து பாடும் 'சூப்பர் சிங்கர்' ஸ்ரீநிஷாவின் ஈர்க்கும் குரல் என கலக்கலாய் வந்திருக்கிறது. ராசாத்தி உன்னை எண்ணி போல... அத்தமக உன்ன நினைச்சி போல... இந்த பூவழகியும் இனி எல்லா மேடைகளிலும் வலம் வருவாள்.

பொறு புள்ள பூவழகியில் வசீகரிக்கும் வரிகளாக 'திருநா பேரழகே உனக்காக நான் பொறந்தேன்...', 'வா புள்ள ஒண்ணால பூங்காத்தா மாறணும்...', 'உன்னோடு நான் வாழ பல ஆயுள் தேடுவேன்...', 'மாறாத காதலும் மனசோரம் பாடுது...', 'பருவத்து நேசங்கள முதுமைக்கும் சேர்த்து வைப்போம்...',உருவம் சிதஞ்ச பின்னும் உள்ளத்தால சேர்ந்திருப்போம்...', 'நிலவொன்னு ராத்திரியில் நித்தமும் தேடுதைய்யா...' இப்படி நிறைய வரிகளைக் சொல்லிக் கொண்டே போகலாம்.

(பொறுபுள்ள பூவழகி...)

முத்துச்சிற்பியின் குரல் வளம் குறித்துச் சொல்லத் தேவையில்லை. மைக்கே இல்லாமல் பல மைல் தூரம் கேக்கும். சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவிற்கு என்ன ஒரு அருமையான குரல் வளம். அப்படி நம்மையும் பாடலோடு இழுத்துச் செல்கிறது.

மிகவும் அருமையானதொரு ஆல்பம். முதல் முயற்சியிலேயே வெற்றிக்கனியை எட்டிப்பிடித்திருக்கும் முத்துச்சிற்பியை வாழ்த்துவோம்.

-'பரிவை' சே.குமார்.