மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மனசின் பக்கம் - III

பேராசை பெருநஷ்டம்:

இந்த வார 'டீலா நோடீலா' நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி கலந்து கொண்டார். அவரது கணவர் வர்மக்கலை மூலமாக நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அந்த தொழிலை மேம்படுத்த இருப்பதாகவும் சொன்னார். இலவசமாக மருத்துவம் என்ற அவர்களது நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள். ஆனால் நிகழ்ச்சியில் நடந்தது என்ன தெரியுமா?

ஆரம்பத்தில் அந்த அம்மா மிகப்பெரிய தொகை இருக்கும் பெட்டிகளை திறந்தார்கள். இருந்தும் அடுத்து வந்த சுற்றுகளில் நல்ல முன்னேற்றம் சிறு சிறு தொகைகள் வந்தன. அவருக்கான டீல் தொகையும் கூடி வந்தது.

கடைசிச் சுற்றுக்கு முந்தைய சுற்று முடிவில் அவருக்கு 17 லட்சமும் சில ஆயிரங்களும் பேங்கர் என்று சொல்லி அழைபேசியில் பேசுபவரால் டீலாக வைக்கப்பட்டது. இதற்கு நோடீல் கொடுத்தால், இருக்கும் இரண்டு பெட்டிகளில் அவரது கையில் இருக்கும் பெட்டியில் என்ன தொகையிருக்கிறதோ அது கிடைக்கும்.

அதுவரை விளையாண்டது போக மீதம் இருந்த தொகையோ ரூ.500 மற்றும் 50 லட்சம் மட்டுமே. பார்வையாளர்கள் வரிசையில் இருந்து டீல் என்ற குரல்கள் கேட்கத் துவங்கின. அவரது மாமியார் என்று நினைக்கிறேன், அவரும் போதும்மா என்கிறார். ஆனால் கணவன் மனைவிக்கு 50 லட்சம் கிடைத்தால் நல்லாயிருக்கும் என்ற ஒரு நப்பாசை.

இருவரும் கூடி ஆலோசித்தனர். கணவன் ஒரே முடிவாக நோடீல் கொடு என்றார். மனைவி கடிகார பெண்டுலமானர். இதுவா அதுவா என்ற குழப்பத்தில் இருந்தார். பின்னர் கணவனின் அன்புக் கட்டளை(?)க்கு இணங்கி நோடீல் கொடுத்துவிட்டார்.

தொலைக்காட்சிகளுக்கே உரிய சில பல நாடகங்களுடன் பெட்டியை திறந்தால் கேலரியில் உள்ள பெட்டியில் 50 லட்சம் இருக்க, அவரது பெட்டியில் வெறும் 500 ரூபாய் மட்டுமே. பின்னர் அழுகைகள், ஆத்திரங்கள் எல்லாம் வந்தன.

17 லட்சங்கள் எங்கே..? 500 ரூபாய் எங்கே..? மக்கள் சேவை செய்ய நினைத்தவர்கள் கிடைத்தது போதும் என்று போயிருந்தால்... 17 லட்சம் கையில்...  அவர்களது பேராசைக்கு கிடைத்த பரிசு... வெறும் 500 தானே.

கணவருக்கு வீட்டில் போய் என்ன கிடைத்திருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த சம்பவம் வாழ்நாளெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்?

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து..!

*****

மனித நேயமற்ற அரக்கன்:

எங்களுக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு இரவு வேலைக்கு செல்லும் கிளினிங் கம்பெனி அண்ணன் ஒருவர், அபுதாபி வந்து ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே ஊருக்கு செல்ல கடந்த மூன்று மாதமாக கம்பெனியில் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களும் இழுத்தடித்தார்களே தவிர, விடுப்பு அளிக்க ஏனோ அவர்களுக்கு மனம் வரவில்லை.

அவருக்கு ஆறு மாதம் விடுப்பு இருந்தாலும் அவரது விசா டிசம்பரில் முடிவடைவதால் மூன்று மாதத்தில் வரவேண்டிய நிலை. அதனால் அவர்களிடம் தினமும் நச்சரிக்க, ஒரு கட்டத்தில் அவரது மேற்பார்வையாளர், 'எனக்கு ஒண்ணுமில்ல... நீ பெரிய ஆளுக்கிட்ட பேசு'ன்னு சொல்லிட்டு பங்களாதேஷ்க்கு ஆள் எடுக்க பொயிட்டான். இவரும் கம்பெனியில் பேச அவர்களும் போகச் சொல்லியாச்சு.

இங்கும் விமான டிக்கெட் கம்பெனிதான் கொடுக்க வேண்டும் என்ற விதி உண்டு. ஆனால் சில கம்பெனிகள் கொடுப்பதில்லை. (எங்க கம்பெனியிலும் இல்லை) அவரிடம் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்து காட்டிட்டு பாஸ்போர்ட் வாங்கிக்க என்று சொல்லியுள்ளார்கள். ( டிக்கெட் தொகை அவர்கள் கொடுத்தது போல் கணக்கில் காட்டத்தான் டிக்கெட்டுடன் வரச்சொன்னது).

அந்த அண்ணனும் இன்று இரவு சென்னை செல்லும் விமானத்தில் டிக்கெட் எடுத்து மகளுக்கு திருமணம் வைக்க இருப்பதால் நண்பர்களிடம் கடன் வாங்கி நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், சாக்லெட், பிஸ்கட் பாக்கெட்டுக்கள் என எல்லாம் வாங்கி விட்டார். ஊருக்குச் செல்ல பார்சலெல்லாம் கட்டி ரெடியாயாச்சு.

நேற்று காலை கம்பெனிக்கு சென்று எல்லா வேலைகளையும் முடித்து பாஸ்போர்டை வாங்க காத்திருந்த போது பங்களாதேஷில் இருந்து வெள்ளியன்று திரும்பிய அவரது மேற்பார்வையாளன் கம்பெனிக்கு போன் செய்து அந்த ஆளுக்கு பாஸ்போர்ட் கொடுக்காதே... அவருக்கு மாற்று ஆள் இல்லை என்று சொல்லிவிட்டான். மேலும் அலுவலகத்திற்கும் வந்து தடுத்துவிட்டான். அவரும் எவ்வளவோ பேசியிருக்கிறார் ஆனால் அவன் செவி சாய்க்கவில்லை. இப்ப போகமுடியாது என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறான்.

ஒரு கட்டத்தில் மனது உடைந்த அண்ணன் வேலையை ராஜினாமா செய்து விட்டார். இருந்து ஒரு மாத வேலை செய்ய வேண்டும் என்ற விதியின்படி அவரை வேலைக்கு வரச் சொல்லிவிட்டார்கள். இப்ப டிக்கெட் பணத்தில் பாதிதான் கிடைக்கும். வாங்கிய பொருட்களை பார்சலில்தான் போட்டுவிட வேண்டும். அவர் மனதொடிந்து போய் இருக்கிறார்.

அவரது ஆசைகளை நிராசையாக்கியவன் ஒரு அரபியோ, பாகிஸ்தானியோ, மலையாளியோ அல்ல... நம்ம தமிழன் தான்.

தமிழனுக்குத் தமிழன் எதிரிதான் என்பதை நிரூபித்துவிட்டான் பரதேசி.

*****

நான் பார்த்த படங்கள் ஒரு பார்வை:

நான் மகான் அல்ல: ஆரம்பத்தில் டீலக்ஸ் பஸ் போல் சென்ற படம் முடியும் போது கிராம்ங்களுக்கு செல்லும் டவுன்பஸ் போலாகிவிட்டது. கார்த்திக் வேலை தேடுவதும் காஜலை லவ்வுவதும் போர். நம்மளை மாக்கானாக்கும் படம்.

பாணா காத்தாடி: முரளியின் மகனும் கதாநாயகியும் நல்ல தேர்வு. பிரசன்னா வில்லன் என்றால் அவருக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்று ஒரு இடத்தில் மட்டும் காட்டுகிறார்கள். வித்தியாசமான முடிவா வில்லன்கள் இருக்க கதாநாயகன் கொல்லப்படுகிறார். கதையை நகர்த்தத் தெரியாமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். காத்தாடி பறக்கவில்லை.

குற்றப்பிரிவு: போலீஸ் ஸ்டோரி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஸ்ரீகாந்த், பிரித்விராஜ் நல்ல தேர்வு. போரடிக்காமல் போகிறது. சில குறைகள் இருந்தாலும் குற்றம் சொல்ல முடியாத படம்

களவாணி: கிராமத்துக் கதைக்களம், அலட்டலில்லாத அசத்தலான நாயகன், நாயகியுடன் வயல்களும் வரப்புகளும் நடித்துள்ளன. மீண்டும் பார்க்க வேண்டும் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கும் படம். களவாணி உள்ளங்களை களவாடும்.

வம்சம்: நம்ம தலைவரின் வம்சம் நடித்த படம். வித்தியாசமான முயற்சி, கிராமத்துக் கதையாக இருந்தாலும் பலி வாங்கும் கதை என்பதால் வெட்டுக்குத்து நிறைந்துள்ளது. நாயகிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு... நாயகனுக்கு..? இயக்குநருக்கு கேமிராவுக்குள் ஐயா தெரிந்திருப்பார் போல பல இடங்களில் நாயகனுக்காக இறங்கிப் போயிருப்பது தெரிகிறது. வம்சம் வளராத குத்துச் செடி.

விருந்தாடி: அய்யோ... தியேட்டர் பக்கம் போயிடாதீங்க... அப்புறம் என்ன நடந்தாலும் நான் பொறுப்பில்லை சொல்லிப்புட்டேன்.

மனசின் பக்கம் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

28 எண்ணங்கள்:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

மனித நேயமற்ற அரக்கன்:///

இது போன்ற பல சம்பவங்கள் பார்த்திருக்கிறேன்...நான் பணிபுரியும் இடத்தில் கூட.. (நீங்க சிங்கப்பூரில் தான் இருக்கிறீர்களா)

Chitra சொன்னது…

தமிழனுக்குத் தமிழன் எதிரிதான். :-(

Selva சொன்னது…

தமிழனுக்குத் தமிழன் எதிரிதான். :-(

சுசி சொன்னது…

நான் இப்போ டீலா நொடீலா பாக்கிரதில்லைங்க.

//
தமிழனுக்குத் தமிழன் எதிரிதான் என்பதை நிரூபித்துவிட்டான் பரதேசி.//
ஹஹாஹா.. இத தானே கால காலமாய் நிரூபிச்சிட்டு வராங்க..

அவருக்கு எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு வேண்டிக்கிறேன்..

படங்களில களவாணி மட்டும் பார்த்திருக்கேன்..
//களவாணி உள்ளங்களை களவாடும்.//

Menaga Sathia சொன்னது…

//தமிழனுக்குத் தமிழன் எதிரிதான்.// உண்மைதாங்க...

நாங்களும் அந்த டீலா நோடீலா நிகழ்ச்சியை பார்த்தோம்.அந்த தமப்திகளின் மேல் எரிச்சல்தான் வந்தது..பேராசை பெரு நஷ்டம்...

சௌந்தர் சொன்னது…

பேராசை பேரும் நஷ்டம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய சார்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நான் அபுதாபியில் இருக்கிறேன் நண்பரே.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சித்ரா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செல்வா...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசி மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அந்த அண்ணனுக்கு நல்லது நடந்தால் சந்தோஷமே.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க மேனகா மேடம்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அது பேராசைதானே மேடம். இவர்களெல்லாம் இலவச சேவை செய்கிறார்கள் என்றால் நம்ப முடியவில்லை.

வாங்க சௌந்தர்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

hai kumar,good review,but i think you may cut it as 2 instead of 1.am i right?

r.v.saravanan சொன்னது…

தமிழனுக்குத் தமிழன் எதிரிதான்


எப்போது மாறுமோ

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

ஐயோ பாவம் ...கொடுமை டீல் தான் போங்க...
ச்சே ரெம்ப பாவம் அவர்... மகள் திருமணத்துக்கு கூட போக முடியாத நிலை.. என்ன வாழ்க்கை போங்க?
களவாணி எனக்கு பிடிச்சது

சிநேகிதன் அக்பர் சொன்னது…

தமிழனா இருந்தாலும் யாராக இருந்தாலும் மேலதிகாரிகள் இப்படித்தான் செய்வார்கள். வேறு என்ன செய்ய?

அனைத்து பகுதிகளும் நல்லாயிருக்கு குமார்.

vanathy சொன்னது…

டீலா நோடீலா - இருவரும் சேர்ந்து தானே முடிவு செய்தார்கள். இது வாழ்நாள் முழுக்க அவர்களுக்கு பெரிய உறுத்தலா இருக்கும் என்பதே உண்மை.
அரக்கன் பற்றி என்ன சொல்வது? தமிழனுக்கு தமிழன் தான் எதிரி. நானும் நிறைய பார்த்திருக்கிறேன்.


படங்கள் பார்ப்பது குறைவு. பார்க்க சந்தர்ப்பம் அமைந்தால் களவாணி பார்க்க வேண்டும்.

இப்படி எல்லா டாபிக்கும் எழுதுவது நல்லா இருக்கு, அண்ணாச்சி.

Jaleela Kamal சொன்னது…

தமிழனுக்கு தமிழன் தான் எதிரி,
என்ன இருந்தாலும் மற்றவர் பிரச்சனைய கண்டு கொள்ள மாட்டார்க்ள்
தங்கள் வேலை ஆனா சரி, சே என்ன மனுசாட்கள்

Jaleela Kamal சொன்னது…

இது மனித நேயமற்றவர்கள் நிறையபேர் இருக்காங்க.

Sundhar சொன்னது…

Dear Mr.Sekar,
Please give me your UAE Moble number or reply at sundherm@gmail.com
Regards,
M.Sundhar

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சி.பி.செந்தில்குமார்...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொல்வது சரிதான். இது மனசின் பக்கம். இது மனதில் பட்டதின் கலவைதான்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சரவணன்...
தமிழனுக்கு தமிழன் எதிரி என்பது இப்போது மாறும் என்பது சாத்தியமில்லை.
உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தங்கமணி...
உங்களது மேலான கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்பர்...
மேலாதிகாரிகள் இப்படித்தான். ஆனால் ஒரு அரபிக்கு இருக்கும் மனிதாபிமானம் நம்ம தமிழனுக்கு இருக்கவில்லையே என்பதுதான் என் ஆதங்கம்.
உங்களது மேலான கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
இருவரின் முடிவு என்றாலும் அம்மாவுக்கு போதுமே என்ற எண்ணம் பாதி இன்னும் போகலாம் என்ற எண்ணம் மீதி. ஐயாவுக்கோ 50 வேண்டும் என்ற ஆவல். இந்த உறுத்தல் வாழ்நாளெல்லாம் இருக்கும் என்பது உண்மையே.

கண்டிப்பாக களவாணி பாருங்கள். நல்ல படம்.

உங்கள் கருத்துக்கு நன்றி. அடிக்கடி எழுத முடியாது. ஆனால் எழுதுகிறேன்.
நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜலீலா அக்கா...
உண்மைதான்... மனசாட்சியில்லாதவர்கள் நம்மவர்களா இருக்கிறார்களே என்ன செய்ய?
உங்களது மேலான கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுந்தர்...
கண்டிப்பாக மெயில் அனுப்புகிறேன்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமா, வலைப்பூ ஆரம்பித்து பதிவு எழுதவில்லை போலும். எழுதுங்கள்.
உங்களது மேலான கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

velji சொன்னது…

இதை ஒரு வார்த்தை..ஒஹோன்னு வாழ்க்கை'னு விளம்பரப்படுத்துறாங்க!

தமிழர்களின் எதிரிகள் சுகமாய்த்தான் இருக்கிறார்கள்! நண்பரை தொடர்ந்து போராடச் சொல்லுங்கள்!

அப்பாதுரை சொன்னது…

'பேராசையாலே வந்த துன்பம் சுய நலத்தின் பிள்ளை'னு ஒரு பழைய சினிமா பாட்டு நினைவுக்கு வருது. ஆனா ஒரு வேளை அவங்க ஜெயிச்சிருந்தாங்கன்னா அவங்களைப் பேராசைக்காரினு சொல்லியிருப்பமா? விடுங்க.

பயண விவகாரம் நெஞ்சைத் தொட்டது. இப்படியெல்லாம் நடக்கிறதா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

நன்றி வேலு.

நன்றி அப்பாதுரை.