மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஆகஸ்ட், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 79

முந்தைய பதிவுகளைப் படிக்க... 



79.  வசந்தத்தை நோக்கி

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். பிர்ச்சினைகள், சந்தோஷம், போராட்டம் என அவர்களின் காதல் எல்லாவற்றையும் சந்தித்து புவனா குடும்பத்தில் ஏற்கமாட்டார்கள் என்பதால் ஊரை விட்டு ஓட முடிவு பண்ண அம்மா ஆசிர்வாதத்தில் அண்ணன் வழியனுப்ப ராம்கியின் நண்பர்கள் உதவியுடன் வீட்டை விட்டு வெளியாகிறாள். 

இனி...

கார் வந்து நிற்கவும் காவேரியும் ராம்கியும் வாசலுக்கு ஓடி வந்தனர். காரின் பின்னிருக்கையில் இருந்து சரவணன் முதலில் இறங்க, அவனைத் தொடர்ந்து பழனி இறங்கினான், முன்பக்கமிருந்து அண்ணாத்துரையும் அறிவும் இறங்கினர். அவர்களை 'வாங்கடா' என்று சொன்ன ராம்கியின் கண்கள் புவனாவைத் தேடின.

பின்னிருக்கையில் இருந்து மெதுவாக இறங்கிய புவனாவைப் பார்த்ததும் அவளருகில் ஓடிச் சென்று கைகளைப் பிடித்துக் கொண்டு 'புவி' என்றவனுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையை அடைத்தது. தனது துணையை அடைந்து விட்டோம் அவன் இப்போது தன்னருகில் இருக்கிறான் என்ற நினைப்பு புவனாவுக்குள் வர, 'ராம்' என்று கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

"டேய்... இது நம்மூரு இல்ல... டவுனு... அதுவும் கொஞ்சம் ஒதுக்குப்புறமான ஏரியா.... எல்லாரும் எட்டிப் பாக்குறானுங்க... என்ன ஏதுன்னு விசாரிப்பானுங்க... அப்புறம் சேகருக்குத்தான் பிரச்சினை எதுவா இருந்தாலும் உள்ள போயிப் பேசலாம்" என மெதுவாக அதே நேரம் சற்று கடுமையாகச் சொன்னான் அண்ணாத்துரை.

"அண்ணே... காரை அப்படிப் போட்டுட்டு வாங்க... " என டிரைவரிடம் சொன்ன சரவணன், "டேய் ராம்கி, சேவியர் எங்கடா வந்துக்கிட்டு இருக்கானாம்..."

"ஈவினிங்க்தான் கிளம்புறேன்னு சொன்னான்... காலையிலதான் வருவான்.." என்றவன் புவனாவின் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டான். எனக்கே எனக்கான என்னவள் எனக்காக எல்லாம் துறந்து... பாசமிகு அப்பாவையே விட்டுவிட்டு வந்திருக்கிறாள் என்ற நினைப்பு அவனுக்கு அவள் மீதான அன்பை இன்னும் அதிகப்படுத்தியது.

"ஆமா... சேகர் எங்கே?" பழனிதான் கேட்டான்.

"அவரா.... வேலை முடிஞ்சி டிரைன்ல வந்து அப்புறம் வண்டி எடுத்துக்கிட்டு வருவாரு... இப்ப வந்திருவாரு...." என்ற காவேரி. "சரி பின்னால கிணறு இருக்கு... பக்கத்துல பாத்ரூம் இருக்கு... எல்லாரும் ஒரு குளியலைப் போடுங்க... சூடா காபி சாப்பிடலாம்... அவரும் வந்துருவாரு..."

"கிணறா...?" அறிவு ஆச்சர்யமாகக் கேட்டான்.

"ஏங்க கிணறு நம்ம ஊர்ல மட்டும்தான் இருக்குமா என்ன? இந்த வீடு தனி வீடாவும் அதே நேரம் பின்னால கொஞ்சம் தோட்டம், கிணறுன்னு இருக்கதாலயும் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சு... அதான் டவுனுப்பக்கம் காலி பண்ணிப் போகாம இருக்கோம். அங்க போயி நெருக்கமான வீட்டுகளுக்குள்ள வாழ ரெண்டு பேருக்கும் இஷ்டமில்லை... பின்னால போயிப் பாருங்க.. எங்கூர்ல மாதிரி தோட்டம் போட்டு வச்சிருக்கோம்..." என்றாள்.

"அதுசரி... சேகர் இங்கயும் கிராமத்தானாத்தான் வாழ்றாரா?" கேட்டது பழனி.

"கிராமத்தாளைக் கட்டின எங்கண்ணன் அப்புறம் எப்படி இருப்பாரு?" சோகத்தினுடேயும் காவேரியைக் கிண்டல் செய்தாள் புவனா.

"ம்.. அண்ணி வேண்டாம்.... அப்பறம் கிராமத்துக்காரியோட வேலையைக் காட்ட வேண்டி வரும்... ஆமா... சரி.. சரி... நீங்கள்லாம் பின்னாடி தோட்டத்துப்பக்கம் போயி  குளிங்க... புவனா உள்ள குளிக்கட்டும்... கார்ல வந்த அசதி குளிச்சா கொஞ்சம் குறையும்..." என்று சொல்லி விட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள்.

"ராம்... நாம ஒண்ணு நெனச்சா... கடவுள் ஒண்ணு நினைக்கிறானே... இப்படி ஆயிருச்சே... உங்க கூட வாழப்போறோம்ங்கிற தைரியத்துல கிளம்பி வந்துட்டேன்.. ஆனா ஊர் முன்னால பெத்தவங்க கேவலப்பட்டு நிப்பாங்களேன்னு நினைக்கும் போது வருத்தமா இருக்குப்பா... திரும்பப்  போயிடலாம்ன்னு தோணுது..."

"எல்லாம் சரியாகும் புவி... கொஞ்சக் காலம் பொயிட்டா எல்லாம் சரியாகும்.. இனி திரும்பிப் போன ஆரத்தி எடுத்தா வரவேற்கப் போறாங்க... கவலையை விடு... இனி ஆகுறதைப் பார்ப்போம்..." என்று ராம்கி சொல்ல இருவரும் கொஞ்ச நேரம் தனிமையில் பேசட்டும் என மற்றவர்கள் வீட்டின் பின்பக்கமாகச் சென்றனர்.

"இப்ப இதுக்கு என்ன முடிவு... ஒண்ணு அவங்களை எங்க இருந்தாலும் பிடிச்சாந்து கண்டந்துண்டமா வெட்டணும்... இல்ல அவனோட குடும்பத்தை வேரறுக்கணும்... யாருவுட்டுப் புள்ளையை யாரு இழுத்துக்கிட்டுப் போறது... நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல..." ஒரு மீசை துடித்தது.

"இங்க பாருங்க பெரியய்யா... அவனை மட்டும் குத்தம் சொல்லி நம்மபுள்ள நல்ல புள்ளைன்னு பேச முடியுமா? இவ விருப்பப்பட்டுத்தானே போயிருக்கா... அப்புறம் அவனோட குடும்பத்தை அழிக்கணும் அது இதுன்னு எதுக்குப் பேசிக்கிட்டு... அவன் நம்மளவிட கீழ இருக்குறவங்கிறதால குடும்பத்தை வேரறுக்கணுமின்னு சொல்றீங்க... இதே அவன் நமக்கு மேல இருக்குறவனா இருந்தா நாளக்கி காலையில அம்புட்டுப் பயலும் இங்க வந்துல்ல நிப்பானுங்க... குடும்பம்... அண்ணன்... தங்கச்சி... இதெல்லாம் விட்டுடுங்க... நமக்கு அவங்க ரெண்டு பேரு பொணமும் நம்ம மண்ணுல கிடக்கனும் அம்புட்டுத்தான்... அதுக்கு ஆகுறதைப் பாருங்க..." புவனாவின் அப்பா.

"அண்ணே... அவனோட ஆத்தாளைப் பிடிச்சி நாலு தட்டுத்தட்டினா அவன் தன்னப்போல வருவான்னே..." - சித்தப்பா

"ஏய்... நீ சும்மா இருப்பா.... அவனைத் தேட ஆளை விடு போதும்... நீ பாட்டுக்கு தேவையில்லாத பிரச்சினைகளை இழுத்து விட்டு போலீசு கீலீசுன்னு அழைய விட்டுறாதே... இது யாருக்கும் தெரியாம கமுக்கமா நடக்கணும்..." 

"அப்பா... அவங்களை இங்க கொண்டாந்து வெட்டுறதால என்ன வந்துடப் போகுது... சனியன் தொலஞ்சிச்சு... நமக்கு மானக்கேடுதான்... நான் இல்லைன்னு சொல்லலை... அவளுக்குப் புடிச்சி ஓடியிருக்கா... கஷ்டமோ நஷ்டமோ அவன் காப்பாத்துவான்னு நினைச்சிப் போயிட்டா... கழுத தொலஞ்சது தொலஞ்சதாவே இருக்கட்டுமே... புடிச்சாந்து வெட்டி... கருமாதி பண்ணி என்னத்துக்கு... அவளை இனி வாழ்நாள்ல பாக்கவே கூடாதுன்னு முடிவெடுங்க நல்லது... அதைவிட்டுட்டு வெட்டுறேன்... வெட்டுறேன்னு எல்லாரும் பேசினா எப்படி?" வைரவன் கோபமாய் பேசுவது போல் தங்கைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தான்.

"என்னப்பு நீ... வக்கீலுக்குப் படிச்சதால பாயிண்டோட பேசுவேன்னு பார்த்தா... பதுங்குறே.... பதுங்குற சாதியில்லப்பு நம்மது... இன்னைக்கு நம்ம வீட்டுப் புள்ள ஓடியிருக்கா... இதையே முன்னுதாரணமா எடுத்துக்கிட்டு அடுத்தடுத்துக் கிளம்பாதுன்னு என்ன நிச்சயம்...?" முகத்தில் வெட்டுப்பட்ட ஒருவர் வைரவனைப் பார்த்துக் கேட்டார்.

"மாமா... வக்கீலுக்குப் படிச்சதாலதான் இப்படிப் பேசுறேன்... பதுங்கவும் இல்ல... பாய வேண்டாம்ன்னும் சொல்லல... அவ ஒண்ணும் மைனர் கிடையாது. மேஜர்... அதைத் தெரிஞ்சுக்கங்க... வீட்டை விட்டு போனவங்க பக்கவா பிளான் பண்ணாமலா போவாங்க... நாளைக்கே தாலியக் கட்டிட்டு ரிஜிஸ்தர் ஆபீஸ்ல கல்யாணத்தை பதிஞ்சிட்டாங்கன்னா... பதிஞ்சிட்டாங்கன்னா என்ன பதிஞ்சிடுவாங்க... அப்புறம் நாம அவங்களைக் கொலை பண்ண முயற்சி பண்றோம்ன்னு போலீசுக்கிட்ட போனா நாமதான் மாட்டிக்கிட்டு முழிக்கணும்... இன்னைக்கு இங்க வாய்கிழிய பேசுறவனெல்லாம் களி திங்கணும்... தெரியுமா?"

"ஏ... ஏ.... என்னப்பு இப்படி மிரட்டுறீரு...இப்ப இதை என்ன பண்ணலாம்ன்னு சொல்றீங்க...." மீண்டும் மீசை கேட்டது.

"அவளை தலை முழுகிட்டு ஆக வேண்டியதைப் பார்ப்போம்... சன்னமா தேடுவோம்... என்னைக்காவது ஒரு நாள் இங்க வராமலா போயிருவான்... அன்னைக்கு காதும் காதும் வச்ச மாதிரி காரியத்தை முடிப்போம்... இப்போதைக்கு கொஞ்சம் ஆறப்போடுவோம்... இதுதான் என்னோட முடிவு... நீங்க என்னப்பா சொல்றீங்க..? " என அப்பாவை நோக்கினான்.

"தம்பி சொல்றதுதான் சரியின்னு படுது... பெத்தவங்க வேண்டான்னு போன நாயி இருந்தா என்ன செத்தா என்னய்யா... செத்துட்டான்னு தல முழுக்கிட்டு என்னோட ஒத்த மவனுக்கு ஜாம் ஜாம்ன்னு கலியாணத்தை வக்கிறேன்யா... இதை விட்டுத் தள்ளுங்கய்யா..." 

"அண்ணே.... இது நம்ம வீட்டு விசயம்... இவந்தான் சின்னபுள்ளத்தனமாச் சொல்றான்னா நீங்களும்..." மெதுவாக இழுத்தார் சித்தப்பா.

"இங்க பாரு தம்பி... இப்போதைக்கு இதை விடு... பேசலாம்" என அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வைரவனுக்கு அப்பா உண்மையாத்தான் சொல்றாரா இல்லை எல்லார் முன்னாடியும் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. வீட்டுக்குள் தலைவிரி கோலமாக மகள் என்ன பண்றாளோ ஒரு போன் கூட பண்ண நம்பர் இல்லையே என நினைப்பில் கண்ணீர் ஓட அமர்ந்திருந்த அம்மாவிற்கு கணவரின் பேச்சு சற்று ஆறுதலாக இருந்தது.

நாகம்மாவுக்கு சேகர் போன் பண்ணி சொன்னதும் 'என்ன பண்ணறானோ... ஏதும் பிரச்சினை வந்தா என்ன பண்ணப்போறானோ...' எனத் தவித்தாள். அம்மா அவனுக்கு ஒண்ணும் ஆகாது என சீதா சொன்னாலும் பெத்தமனசு பதறிக் கொண்டுதான் இருந்தது. 

"இங்க பாருத்தா... அந்த புள்ள மேல இருக்க பாசத்துலதான் இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கான். அந்தப்புள்ளயும் எல்லாத்தையும் விட்டுட்டு நம்ம பய பின்னாடி போயிருக்குன்னா எல்லாம் ஒரு அதீத அன்புதான் காரணம்... பொம்பளப்புள்ள எல்லாத்தையும் விட்டுட்டு போயிருக்கும் போது நம்ம பயலப் பத்திக் கவலைப்பட்டுக்கிட்டு... ரெண்டு பேரும் நல்லாயிருக்கட்டும்... நீ ஒருவாட்டி அங்கன போயி அதுகளுக்கு ஆதரவா இருந்துட்டு வரலாம்... பயப்படாம இரு... மனசப் போட்டு அலட்டிக்காத..." என்று அண்ணன் முத்துவும் ஆறுதலாகப் பேசினார்.

"என்னமோண்ணே.... பெரியவனைப் பத்தி நா ரொம்பக் கவலப்பட்டது கெடயாது... இவனு படிச்சி ஒரு நல்ல நெலமக்கி வருவான்னு கனவு கண்டேண்ணே... இன்னைக்கு இப்படி வந்து நிக்கிது... சாதி சனத்துக்குத் தெரிஞ்சா எம்புட்டுக் கேவலம்... எதையுமே யோசிக்காம இப்படிப் பண்னிட்டானே... நாமளும் இது சரியில்லைன்னு எடுத்துச் சொல்லாம எடுத்தோம் கவித்தோமுன்னு அவம்போக்குல பொயிட்டோமேன்னுதான் வருத்தமா இருக்கு..."

"என்னத்தா... இப்படிப் பேசுறே... மாப்பிள்ளை பழகுதுன்னு தெரிஞ்சப்போ நாங்கூட கோபப்பட்டேன்... அப்புறம் அந்தப் புள்ளையை நேர்ல பாத்தப்போ அதுதான் நம்ம தம்பிக்கு ஏத்த புள்ளைன்னு தோணுச்சு... நாம பாத்தாக்கூட இப்படி பொருத்தம் அமையாது.... சாதிவிட்டு சாதி போறது பிரச்சினைதான்... அதுக்காக மனசு ஒத்துப் போனதுகள பிரிக்கிறது நல்லாயில்ல... எல்லாம் சரியாகும்...எது வந்தாலும் ஏத்துக்கலாம்... நம்ம புள்ள நல்லாயிருந்தாப் போதும்.. பெரியவனுக்கிட்ட நீ பேசு இல்ல அவம்பொண்டாட்டிய பேசச் சொல்லு... நாளக்கி எனக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலயின்னு சொல்லிடப்புடாது பாரு"

"என்னவோ சொல்றீக... மனசுதான் கேக்கலை... மூத்தவனுக்கு அந்தப்புள்ளய விட்டுப் பேசச் சொல்றேன்... அவ இப்ப ரொம்ப நல்லவளா இருக்கா..."

"எப்பவும் அவ நல்லவதான்... சேர்றவளுகதான் கெடுக்கிறது..."

சேகர் வந்ததும் கிளம்புறோம் என்று சொன்ன ராம்கியின் நண்பர்களை இருக்கச் சொல்லி காலையில் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம், வட பழனி கோவில்ல சாமி தரிசனம் மதியம் வெளிய சாப்பாடு என்று பேசி முடிவு செய்து சந்தோஷமாய் படுக்கச் செல்ல....

தே நேரம்...

'என்ன இவனுக எங்க போனோம்ன்னு சொல்ல வேண்டாம்... வழி அனுப்பி வச்சதுக்காகவாவது போன் பண்ண வேண்டாமா?' என வைரவனும், 'இன்னும் எனக்கு போன் பண்ண இவனுகளுக்கு முடியலையே?' என்று மல்லிகாவும் யோசிக்க...

'எம்மக என்ன பண்ணுறாளோன்னு...' புவனாவின் அம்மாவும் 'எம்மவன் என்ன பண்ணுறானோன்னு...' நாகம்மாவும் தூக்கம் வராமல் தவிக்க...

'அக்கா... அந்தச் சிறுக்கிய அப்பவே புடிச்சி எவனுக்காவது கட்டி வைக்கச் சொன்னேன்... நீயும் அத்தானுந்தான் கேக்கல... இப்ப அவள நெனச்சி நீ உடம்பக் கெடுத்துக்காதே...' என செய்தி கேள்விப்பட்டு திருப்பத்தூரில் இருந்து வந்த புவனாவின் சித்தி அக்கறையோடு சொல்ல...

'என்ன ஆனாலும் அவளப் பிடிச்சாந்து கழுத்த அருக்கணும் தம்பி...' தண்ணிப் போதையில் மகளின் பிரிவில் வலியை வார்த்தையில் தனது சகலையிடம் கொட்டினார் புவனாவின் அப்பா....

இப்படி பல்வேறு பிரச்சினைகளைச் சுமந்த இரவு விடியலை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது...


-(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வு

தொடருங்கள்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கிறேன் நண்பரே
அருமை

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 2

சிகரம் பாரதி சொன்னது…

அருமை நமது வலைத்தளம் : சிகரம்

சிகரம் பாரதி சொன்னது…

பதிவர்கள் கவனிக்கவும் ! : புரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க?
பதிவர்கள் கவனிக்கவும் ! : சிகரம் - வலை மின்-இதழ் - 003

Yoga.S. சொன்னது…

ஹூம்...........ஆளாளுக்கு என்னென்னல்லாமோ நெனைக்கிறாங்க.வைரவனால சுமூகமா எல்லாம் முடிஞ்சு,குடும்பம் ஒண்ணு சேரணும்/சேரட்டும்.