மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

கிராமத்து நினைவுகள் : மகா சிவராத்திரி

சின்ன வயதில் சிவராத்திரி என்றால் மறுநாள் கோவில்களில் காவடி, பூக்குழி எல்லாம் பார்த்துவிட்டு பொரி உருண்டையும் பலகாரமும் வாங்கிக் கொண்டு வருவது என்பதாகத்தான் கழியும்.

எங்க ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீகூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடக்கும். பள்ளியில் படிக்கும் போது இரவு நாடகம்(கூத்து) பார்த்துவிட்டு பூக்குழி பற்றவைப்பதையும் பார்த்து சாமி கும்பிட்டு வரலாம் என வயல்களுக்குள் நடந்து குறுக்குப் பாதையில் கோவிலை அடைந்துவிடுவோம்.


மறுநாள் சாமி கும்பிடக்கூட இடம் கிடைக்காது என்பதால் இரவே சாமி கும்பிட்டு விட்டு கூத்து நடக்கும் இடத்திற்குச் சென்று சிறிது நேரம் வேடிக்கை பார்ப்போம். இரவு 10 மணிக்கு ஆர்மோனியம் பின்பாட்டு பாட ஆரம்பமாகும் கூத்தில் முதலில் பபூன் வந்து சில கதைகளைச் சொல்லி பல இரட்டை அர்த்த வசனங்கள் பேசிச் செல்வார். (முன்பைவிட தற்போது கரகாட்டத்தில் போல கூத்திலும் இரட்டை அர்த்த வசனங்களை எல்லாரும் பேசுகிறார்கள்) பின்னர் டான்ஸ் வந்து நாலு பாட்டை ஆர்மோனியத்துடன் அரையும் காலுமாக சின்னாபின்னமாக்கி ஆடுவார். பின்னர் பபூனும் இணைய மோதலில் ஆரம்பித்து காதல்வரை போய் அவர்கள் கிளம்பிவிடுவார்கள்.

இரவு பனிரெண்டு மணிக்கு மேல் கோவில் முன்பாக மறுநாள் பூ இறங்குவதற்காக விறகுகள் போட்டு பூக்குழி வளர்ப்பார்கள். சாமிக்கு தீப ஆராதனை பார்த்து மரங்களை கும்மலாக அடுக்கி அதனடியில் சூடம் கட்டிகட்டிகளாக வைத்து தீயைப் பற்ற வைப்பார்கள். மெதுவாக எரிய ஆரம்பித்து பின்னார் ஜூவாலை விட்டு எரிய ஆரம்பிக்கும். மறுநாள் காலை பூக்குழி இறங்கும் கண்ணப்பய்யா காவடி வரும் போதுதான் அந்தத் தீயை உடைத்துப் பரவி விடுவார்கள். நாங்களும் மெதுவாக வீடு நடையைக் கட்ட ஆரம்பிப்போம்.

கல்லூரியில் படிக்கும் போது ஒரு குழுவாக சைக்கிளில் கிளம்பிவிடுவோம். குறுக்காக நடந்து போனால் சுலபமான தூரம்தான்.... சைக்கிள் என்றால் தேவகோட்டையை தொட்டுத்தான் செல்ல வேண்டும். சைக்கிளில் போவலாம் என்று முடிவெடுத்து வந்தால் அம்மா இந்த இருட்டுக்குள்ள எதுக்குடா தேவையில்லாம என சப்தம் போடுவார்கள். சில தடவை பயணம் தடைபட்டு விடும். பல தடவை நீ சும்மா இரும்மா... பொயிட்டு இப்ப வந்துருவோம்... எல்லாருந்தானே போறோம்ன்னு கிளம்பிடுவோம்.

கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவிலில் கூத்து என்றால் முதலில் கம்மங்காடு என்ற ஊரில் இருந்து அம்மனின் உறவினரர் ஒருவர் வந்து மேடையில் எதாவது பாடியோ ஆடியோ செல்வார். இது எப்பவும் கடைபிடிக்கும் முறையாகும். காரணம் அம்மனின் வரலாற்றுப்படி அவர் அந்த ஊருக்கு கூத்தாட வந்தவர்தான்... கூத்து நடந்து கொண்டிருக்கும் கண்மாய்ப் பக்கம் சென்று வர, கூட வந்த அண்ணன் சப்தம் போட்டதால் தனது சேலையால் கண்மாய்க்குள் இருந்த மரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டதாகவும் அந்த மரத்திலேயே அவருக்கு சிலை செய்ததாகவும் சொல்வார்கள். இப்பவும் அம்மனின் கழுத்து ஒருபுறம் சாய்ந்திருக்க, அலங்காரம் இல்லாத நேரத்தில் பார்த்தால் கழுத்தில் கயிறு இருக்கும். 

கல்லூரியில் படிக்கும் போது பரிட்சைக்கு நான் படிக்கச் செல்லும் இடம் இந்தக் கோவில்தான்.... மிகவும் அமைதியாக இருக்கும்... மனசுக்கு ஒரு நிறைவைக் கொடுக்கும் இடமாக இருக்கும். இங்கு ஐயனார், கருப்பர், காளி, உளி வீரன், பிள்ளையார், முனீஸ்வரர் என தனித்தனியாய் கோவில்கள் உண்டு. படிக்கும் போது பாஸாக வேண்டும் என அம்மன் கோவிலுக்குப் பின்புறம் இருக்கும் ஈச்ச மரத்தில் முடிச்சிப் போட்டு வைப்பார்கள். புதனும் சனியும் கோவிலுக்கு சுற்று வட்டத்தில் இருந்து அதிகமான மக்கள் கூட்டம் வரும்.

சரி சிவராத்திரிக்கு வருவோமா... மறுநாள் காலையில் கோவிலுக்குப் போனால் ஒவ்வொரு காவடியாக பார்த்து கடைசியில் வரும் தானாவயல் காவடிக்காக காத்திருப்போம். ஏனென்றால் முப்பது நாப்பது காவடிகள் ஒன்றாக வரும்... காவடி ஆட்டம்... கால் போட்டு எல்லாரும் ஒரே மாதிரியாக... சும்மா தூள் கிளப்பிவிடுவார்கள். ஆனால் மதியம் ரெண்டு மணி ஆயிடும்... தானாவயல் காவடி வந்துவிட்டால் கூட்டம் கிளம்பிவிடும். இதற்கு இடையில் தண்ணீர்ப் பந்தலில் குடிக்கும் மோர் மற்றும் பானக்கத்திற்கு அன்று மட்டும் அளவில்லை... வயிறு குறையக் குறைய நிரப்பிக் கொண்டே இருப்போம்.

பின்னர் எங்க ஊரில் இருந்து மாமா ஒருவர் கீரணிக் கருப்பருக்கு காவடி கட்ட ஆரம்பிக்க இரவு ஊரில் அவங்க வீட்டில் சாமி அழைப்பு, ஆட்டம் எல்லாம் பார்த்து சாப்பிட்டு கூத்தாடிப் பெரியநாயகி அம்மன் கோவில் செல்வோம்... திருமணத்திற்குப் பிறகு நான் வளர்கிறேனே மம்மி என்ற கணக்கில் சைக்கிள் எல்லாம் வண்டியாகிவிட்டது. காலையில் எங்க ஊரில் இருந்து கீரணிக்கு காவடியுடன் நடக்க ஆரம்பிப்போம். கிட்டத்தட்ட பத்துப் பணிரெண்டு கிலோ மீட்டர் நடந்து காவடி செலுத்தி பின்னர் திரும்பி வருவோம்...

ஊரில் இருக்கும் வரை கீரணிக்கு காவடியுடன் செல்வதைத் தவற விடுவதில்லை. மாமாவும் மாப்பிள்ளை நீங்க நாளைக்கு வாறீங்க என்று அழைத்து விடுவார். கோவில்கள், திருவிழாக்கள், சந்தோஷங்கள் எல்லாம் துறந்து வீடு... வீடு விட்டா அலுவலகம் என்று எந்தவித சந்தோஷங்களும் இன்றி வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கிறது. ம்... அது ஒரு கனாக்காலம்....

நேற்றே பகிர நினைத்த பதிவு வெளியே சென்று விட்டதால் இன்று பகிருகிறேன்...

-கிராமத்து நினைவுகள் தொடரும்...
-'பரிவை' சே.குமார். 

வியாழன், 27 பிப்ரவரி, 2014

காத்திருக்கிறேன் காதல் நினைவுகளோடு..!


நாம் காதலித்த
அந்த தருணங்களை
இப்போது நினைத்தாலும்
நெஞ்சுக்குள் பசுமையாய்
துளிர் விடுகிறது
நம் காதல்..!

நம் முதல் சந்திப்பு
முருகன் கோவிலில்...
உன் அம்மா பின்னே
நீலத்தாவணியில் நீ..!

நான் பார்ப்பதை
அறிந்து விரலால்
மாக்கோலமிட்டாய்
மார்பிள் தரையில்..!

பின்னர் அடிக்கடி
சந்திப்பதற்காகவே
உன் வீட்டுப் பாதையில்
உலாவரலானேன் நான்..!

காதல் மலர்ந்ததும்
எனக்காக நீயும்...
உனக்காக நானும்...
யாரும் பார்த்து
விடக்கூடாதென்ற
பயத்துடன் தெருமுனையில்
காத்திருப்போமே..!

இன்று நினைத்தாலும்
உள்ளுக்குள் அசசம்..!

பாய் கடைக்கு எனக்காக
போன் பேச வரும் உன்னை
பேப்பர் படிப்பது போல்
படித்த அந்த இனிய தருணங்கள்..!

நீ சைக்கிள் ஓட்டும்
அழகை என் வீட்டு
மாடியில் இருந்து
நான் பார்த்து ரசித்த
அந்த அழகிய நாட்கள்..!

ஆற்றில் நீ குளித்துத்
திரும்புகையில்
உன் முகத்தில்
அழகாய் இருக்கும்
தண்ணீர் துளிகளை
கண்டு ரசிப்பதற்காகவே
ஒற்றையடிப் பாதையில்
உன் எதிரே வந்து
அருகில் வந்தும்
ஒதுங்காமல் ஒரு கணம்
மெய் சிலிர்த்து நிற்கும்
அந்த மாலை நேரங்கள்..!

ஒருமுறை நான் கேட்டேன்
என்பதற்காக நீ கஷ்டப்பட்டு
பயத்துடன் கொடுத்த
அந்த முதல் முத்தத்தின்
ஈரம் என் கன்னத்தில்
இன்றும் பதமாய்..!

இப்படி எத்தனையோ தருணங்கள்
நினைத்த மாத்திரத்தில்
நெஞ்சுக்குள் பசுமையாய்..!

திருமணத்திற்குப் பின்னும்
தொடர்ந்த நம் காதல்...
அதனால் கிடைத்த
சந்தோஷங்கள்
ஒன்றா... இரண்டா..?

நம் காதல் காத்திருப்புகள்
இன்றும் தொடர்கின்றன...
அன்று உன் வரவுக்காக
காத்திருந்தேன்..!

இன்று உன்னிடம் வருவதற்காக
காத்திருக்கிறேன்...
காலன் வருவானா..?

(2009 - ல்  நெடுங்கவிதைகள்  த்தில் ழுதிது)     
                                                                                                                                       -'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பம்பரம்


ம்பர சீசன் தொடங்கியதில் இருந்து ஆளாளுக்கு மதி கடையில் இருந்து பம்பரம் வாங்கி வந்து சாட்டையில் சுற்றி கோவில் தரையில் கிர்ரெண்று சுற்றினார்கள். மேலும் சிலரோ அதை லாவகமாக கையில் எடுத்து அடுத்தவரின் கையில் விட்டுச் சந்தோஷப்பட்டனர். ஒரு சிலர் பம்பரம் வாங்கிக் கொடுக்க முடியாது என அம்மாக்கள் பிடித்த அடத்தின் காரணமாக நல்ல வைரம் பாய்ந்த கருவைக் கட்டையை வெட்டி அழகாக செதுக்கி ஆணி அடித்து பம்பரம் ஆக்கியிருந்தார்கள். மேலத்தெரு முத்துசாமியின் நாலு வயசு சந்தோஷூக்கு இப்போ கடையில் தலைமீது ஆணி வைத்து அதில் சாட்டை கட்டி புதிதாக வந்திருக்கும் பம்பரத்தை வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அவனும் கிர்ரெண்ற சப்தத்துடன் சுத்தப பழகிவிட்டான். அவனோட அக்கா பத்து வயசு பாமா லாவகமாச் சுத்தி அவனைக் குஷிப்படுத்தினாள். அதுவும் சாட்டையில் தொங்கியபடி சுற்றுவது அழகாகத்தான் இருக்கு.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்ற முத்து மனசுக்குள் அப்பத்தாவைக் கருவிக் கொண்டான். எல்லாரும் பம்பரம் வாங்கி சுத்துறானுங்க.... இந்தக் கெழவி பம்பரம்தான் வாங்கித் தர விடலை. கட்டையில செஞ்சு தாறேன்னு சொன்ன சோலைப் பயலயுமில்ல திட்டிப்புடுச்சு... வெளங்காத கெழவி.... கட்டையில போக... 

"ஏய் முத்து தள்ளி நில்லுடா... பம்பரம் குத்தும் போது சும்மா ரெங்கிக்கிட்டு வரும்... மண்டைகிண்டையில சொட்டுன்னு வந்து அடிச்சிப்புடும்...." கத்தினான் சேகர்.

"ஆமா இங்கிட்டுத்தான் வருது... சும்மா சுத்துடா.. மொட்டக்கட்ட அடிக்கப்போறே... அதுக்கு உதாரு விடுறே..." பம்பரம் இல்லாத கடுப்பில் திரும்பி எகிறினான் முத்து.

"எனக்கென்னப்பா நா சொல்லிட்டேன்... அப்புறம் உன் இஷ்டம்..." என்றபடி பம்பரத்தை சாட்டையால் சுற்றி ஆணியின் நுனியை நாக்கால் எச்சில்படுத்தி நாக்கைத் துருத்தி காலைத் தூக்கி வட்டத்துக்குள் இருந்த பம்பரத்தின் மீது குத்தினான்.

"டேய் சோல... எனக்கொரு பம்பரஞ் செஞ்சுதாடா..." மும்மரமாக பம்பரம் சுற்றுவதில் இருந்த சோலையிடம் கெஞ்சலாகக் கேட்டான்.

"அட போடாங்... உங்க அப்பத்தா சோத்தை திங்கிறியா பீயைத் திங்கிறியான்னு கேக்குது... வேண்டாம்ப்பா... உனக்கு நாஞ் செஞ்சுதரமாட்டேன்..."

"...." பதில் சொல்லாமால் வட்டத்துக்குள் குத்தி 'ர்ர்ர்'ரென்ற சத்தத்துடன் வெளியே சீறி சுற்றிய முருகனின் சிவப்புக் கலர் பம்பரத்தையே பார்க்க, அவன் பார்ப்பதைப் பார்த்த முருகன் சாட்டையை பம்பரத்தைச் சுற்றி முடிச்சுப் போல் போட்டு ஒரு கையால் டக்கென்று மேலே தூக்கிவிட்டு லாவகமாக கையில் வாங்கி சுத்தவிட்டான்.

"டேய் அதை எங்கையில விடுறா..." வெட்கத்தை விட்டுக் கேட்டான்.

"டேய் இங்க பாருங்கடா... தொத்தப்பயலுக்கு பம்பரம் கையில சுத்தணுமாம்... நீ விடாதேடா..." என்று சொன்ன இளங்கோவிடம் "சும்மா இருடா" என்ற முருகன் அவனது கையில் விட்டான். கிர்ரெண்று கையில் சுற்றும் போது உச்சந்தலை வரை சில்லிப்பாய் இருந்தது. அடக்க முடியாத சிரிப்பு அவனுக்கு வந்தது.

"டேய் முத்து... அடேய் இங்க வாறியா... வரவா...?" அப்பத்தாவின் குரல் கேட்டதும் கடுப்புடன் அங்கிருந்து நகர்ந்தான்.

வீட்டுக்குப் போனதும் வாசலில் நின்ற அப்பத்தா, "அவனுக பம்பரம் குத்துற இடத்துல நிக்காதேன்னு எத்தனை தடவ உனக்குச் சொல்லியிருக்கேன்... ஒரு நேரம் போல ஒரு நேரமிருக்காது. அது பாட்டுக்கு படாத இடத்துல பட்டுட்டா என்ன பண்றது.?" கத்தினாள்.

"சும்மா போப்பத்தா... பம்பரந்தான் வாங்கித் தரமாட்டீங்க... பாக்கக்கூடக் கூடாதா?"

"எனக்கென்னப்பா உங்கப்பன் வரும்போது உங்காத்தாக்கிட்ட சொல்லி வாங்கிட்டு வரச்சொல்லுங்க...."

"நா அப்பாக்கிட்ட சொல்லி வாங்கியாரச் சொல்லுறேன்...." என்றபடி உள்ளே சென்றான்.

றுநாள்...

"முத்து நா உனக்கு என்னோட செவப்புப் பம்பரத்தைத் தரவாடா?" முருகன் அவனிடம் கேட்டான்.

"போடா... நீ சும்மா சொல்லி என்னைய வெறுப்பேத்துவே..."

"இல்லடா நெஜம்மாத்தான்... நான் புதுசா பம்பரம் வாங்கப்போறேன்... இதைத் தாறேன்..." என்றான்.

"எப்போ?"

"மத்தியானம் வரும்போது புதுசு வாங்கிட்டு வந்திருவேன்... சாயந்தரம் உனக்குத் தாறேன்..."

"உண்மையாவா?"

"எங்க அம்மா மேல ஆணையா"

"சரி குடு பாக்குறேன்..."

"இந்தா..."

வாங்கி எல்லாப் பக்கமும் பார்த்தவன் இடமில்லாமல் ஆக்கர் போட்டிருப்பதைப் பார்த்ததும் "என்னடா இம்புட்டு ஆக்கர் இருக்கு..." முகத்தைச் சுருக்கினான்.

"ஆமா வெளாடும் போது தோத்தா ஆக்கர்தானே போடுவாங்க... பிரியாத்தானே தாரேன்னு சொன்னே... புதுசா வாங்கிக் கொடுப்பாக..."

"இல்லடா சும்மா கேட்டேன்... நல்லாத்தான் இருக்கு..."

"வேணாம்ன்னா விடு... வேற யாருக்காச்சும் கொடுக்கிறேன்...."

"இல்லடா... எனக்கே கொடுடா... இனிமே இதுல ஆக்கர் விழுகாம பாத்துக்கிறேன்..."

"உனக்கு ரொம்ப திமிருடா... வெளாட்டுன்னு வந்தா ஆக்கர் வாங்கம இருக்க முடியாது... உன்னய முதல்ல சேக்குறானுங்களான்னு பாரு...."

மாலை பம்பரம் சுற்றத் தயாரானபோது...

"டேய் நானும் வாரேன்டா.." என்றபடி வந்து நின்றான் முத்து.

"டேய் இங்க பாருங்கடா தொத்தப்பய ஆட்டைக்கு வாராணாமுடா... உங்கிட்ட ஏதுடா பம்பரம்... உங்கப்பத்தா வாங்கிக் கொடுத்துச்சா..." ஏளனமாக கேட்டான் சேகர்

"இல்ல முருகன் கொடுத்தான்... எங்கப்பா இந்த வாரம் வரும்போது புது பம்பரம் வாங்கிட்டு வாறேன்னு சொல்லியிருக்காக..."

'ப்ப்பூ....' என எல்லாருமாக சிரித்தார்கள்.

"எதுக்குடா சிரிக்கிறீங்க...?"

"புதுசா வாங்கி என்ன பண்ணப்போறே... உனக்கு பம்பரமே குத்தத் தெரியாது... முதல்ல இதுல பழகு அப்புறம் பாப்போம்..." தான் என்னவோ பம்பரம் சுற்றுவதில் சாம்பியன் என்பது போல சோலை பேசினான்.

"எதுக்குடா இவனுக்கிட்ட கொடுத்தே... ஆக்கர் வாங்கிறதுக்காவது வச்சிருக்கலாமுல்ல..." மெதுவாக கீறிவிட்டான் இளங்கோ

"அட பொயிட்டுப் போகுதுடா.... பாவம் சுத்திட்டுப் போறான்..."

"சரிடா... உனக்கு மூணு சான்ஸ் தாரேன்... இந்த வட்டத்துக்குள்ள இருக்க என்னோட பம்பரத்து மேல ஒரு தடவையாச்சும் ஆணி பதியிற மாதிரி குத்திடு... அப்புறம் உன்னைய ஆட்டையில சேத்துக்கிறோம்..." முத்துக்கு போட்டி வைத்தான் சேகர்.

"சரிடா... வையி...." தயாரானான் முத்து

"டேய் எதுக்குடா தேவையில்லாம... அவனையும் ஆட்டையில சேத்து அவனோட பம்பரத்தை உடைப்போம்..." என்றான் சோலை.

"இவன் முதல்ல வட்டத்துக்குள்ள சுத்துறானான்னு பாப்போம்... சும்மா இருங்கடா..."

சாட்டையை சுற்றும் போது நிற்காமல் சுத்திக் கொண்டே வர எல்லாரும் சிரித்தார்கள்.

ஒரு வழியாக சுற்றி ஓங்கிக் குத்த முதல் குத்து வட்டத்துக்குள் விழுந்தாலும் மொட்டைக் கட்டையாக மண்ணில் சுற்றிச் செல்ல "மொதக்குத்து மொட்டக்குத்து..." என்று எல்லாரும் ஒன்றாகக் கத்தினார்கள்.

இந்த முறை எப்படியும் ஆக்கர் போட்டே ஆகணும் என்ற முனைப்புடன் குத்த இந்த முறை பம்பரம் சாட்டை நுனியில் தொங்கியது.

"அடேய் இனி இவன் ஜெம்மத்துக்கும் நம்ம கூட ஆட முடியாது.... முருகன் வச்சிருக்கும் போது எப்புடி ரெங்குன பம்பரம் தொத்த கைக்குப் போனதும் தொத்தலாகிப் போச்சுடா..." சிரித்தான் இளங்கோ.

"என்னடா தொத்த... நோத்தாவா எனக்குப் பேரு வச்சா... மூத்தரக்குண்டி..." என்று பதிலுக்கு சிலுப்பினான்.

"டேய் மூத்தரக்குண்டியின்னு சொன்னே மூக்கைப் பேத்துருவேன்..." இளங்கோ எகிறினான்.

"இருடா... இன்னும் ஒரு குத்து... அவன் குத்தலைன்னா நாம அவனைக் குத்துவோம்..." என்று இளங்கோவை சமாதானப்படுத்தினான் சேகர்.

'மாரி... இந்தக் குத்துல பம்பரம் வெளியாகணும்..' என்று மனசுக்குள் சாமி கும்பிடும்போது "அடேய் அவனுக்கிட்ட எவன்டா பம்பரத்தைக் கொடுத்தது... எங்களுக்கு வாங்கித் தரத்தெரியாமயா இருக்கோம்... நீங்கதான் சொல்பேச்சுக் கேக்கலைன்னா அவனையும் ஏண்டா கெடுக்கிறீங்க... யாருமேலயாவது பட்டு சண்டைக்கு வந்துட்டா... இப்பக் கொடுத்துட்டு வாரியா வரவாடா" என்று அவனது அப்பத்தா கத்தியபடி வர...

"தொத்த தோக்கப்போறான்... ரெடியா இருங்க.... அவனை வெளுக்கிறதுக்கு..." என்று சேகர் சொல்ல, "ஏய்... ஏய்..." என எல்லாரும் கோரஸாகக் கத்த....

பம்பரத்தை நாக்கால் எச்சில் பண்ணி கண்ணை மூடி கையை ஓங்கும் போது அப்பத்தாவும்  சுற்றி நின்று சிரிப்பவர்களும் ஒரு முறை வர கண்ணைத் திறந்து ஓங்கிக் குத்தினான்.

சரியான குத்து... துள்ளியமாய் வீசிய வீச்சு.... சேகரின் பம்பரத்தில் பச்சக் என்று குத்த.... அந்த வேகமான குத்து கொடுத்த தாக்கத்தில் சேகரின் பம்பரம் ரெண்டாக உடைந்து சிதற...

குத்திய வேகத்தில் வாடிவாசல் காளை போல முத்துவின் பம்பரம் எகிறி அவர்களை நோக்கி வந்த பாட்டியின் நெற்றியை சொட்டென்று தாக்க...

"அய்யோ... யாரையோ பம்பரத்தால அடிக்கப் போறான்னு பாத்த கடைசியா எம்மண்டைய உடைச்சிட்டானே... வா உங்காத்தாக்கிட்ட சொல்லி உனக்குப் பூஜை போடச் சொல்றேன்... பம்பரமா வேணும் பம்பரம்... உங்கப்பனுக்கிட்ட சொல்லி மசுர வாங்கிட்டு வரச்சொல்லுறேன்..." என்று கத்தியபடி நெற்றியைத் தடவ...

அப்பா பம்பரம் வாங்கித் தருவாரா மாட்டாரா என்பது இப்போது முக்கியமில்லை... கேலி பேசியவர்களின் முகத்தில் கரி பூசிய சந்தோஷத்தில் "யாருக்கிட்ட இனி எங்கிட்ட மோதுனா... பம்பரத்தை சில்லாத்தான் பொறக்கணும்..." என கத்திவிட்டு அப்பத்தாவைத் தாக்கி எகிறிய பம்பரத்தை எடுத்துக் கொண்டு "பாத்து வரக்கூடாதா அப்பத்தா.... நல்லவேளை படாத இடத்துல பட்டிருந்தா சங்குதான்..." என்று எகத்தாளமாகச் சொல்லிவிட்டு "ம்.. வேற யாருடா வைக்கிறா... வச்சிப் பாருங்கடா...." என்று சவால் விட்டான் தொத்தலான முத்து.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

மனசு பேசுகிறது : குறும்படங்கள் - மிச்சக்காசு

ப்பொழுது தமிழில் நல்ல நல்ல குறும்படங்கள் வர ஆரம்பித்திருப்பது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுக்கிறது. சிலர் குறும்படத்தில் ஜெயித்துவிட்டு அதையே திரைப்படமாக்கும் போது சொதப்பலாக திரைக்கதை அமைப்பால் வந்தது தெரியாமலேயே போய் விடுகின்றனர். அந்த வகையில் குறும்படமாகச் ஜெயித்து வெள்ளித்திரையிலும் வெற்றிவாகை சூடியது இயக்குநர் அருண் குமாரின் பண்ணையாரும் பத்மினியும்.

சில நாட்களுக்கு முன்னர் ஒரு மலையாள குறும்படம் பார்க்க நேர்ந்தது. துபாயில் இருக்கும் கணவன் மனைவிக்குள்ளான கதை அது. கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று இருக்கிறார்கள். கணவனுக்கு மனைவியின் வருமான மிகப்பெரிய சொத்தாகத் தெரிகிறது. இருவரும் வேலைக்குப் போவதும் வருவதுமாக இருப்பதால் அவர்களுக்குள்ளான அந்நியோன்யம் ரொம்ப இடைவெளியில் பயணிக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கை ஓட்டத்தில் அந்தப் பெண் கர்பமாகிறாள். த்ற்போதைய சூழலில் குழந்தை வேண்டாம் என கணவன் கலைக்கச் சொல்கிறான். ஆனால் அவள் முடியாது என்று சொல்கிறாள். கர்ப்பமானதால் நீண்ட விடுமுறை கொடுக்க முடியாது என்று கம்பெனி முரண்டு பிடிப்பதால் அவளுக்கு வேலையும் போகிறது. அதன்பின் கணவன் மனைவிக்குள் விரிசல் வந்ததா இல்லை கணவன் திருந்தினானா என்பதாய் கதை பயணிக்கும்.

இதேபோல சில குறும்படங்கள் பார்த்ததும் பச்சக் என மனசுக்குள் ஒட்டிக் கொள்ளும். அப்படி ஒட்டிக் கொண்ட ஒருபடம் ஜட்டி, புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் கடலை, சுண்டல் விற்கும் ஒருவர் ஒரு ஓட்டைச் ம் ஜட்டியை வைத்துக் கொண்டு அதை மாற்றி புதிதாக ஒன்று வாங்க வேண்டும் என பணம் சேர்ப்பார். இதற்கு இடையில் தெருவில் ஒட்டியிருக்கு ஜட்டி விளம்பரம் பார்த்து கனவெல்லாம் காண்பார். கடைசியில் அவர் ஜட்டி வாங்கினாரா இல்லையா என்பதை மிகவும் எதார்த்தமாய் நகைச்சுவையாய் அந்தக் குறும்படத்தின் இயக்குநர் சொல்லியிருப்பார்.

கேபிள் சங்கர் அண்ணா அவர்களின் குறும்படம் என்று நினைக்கிறேன் பிரியாணி. ஒரு பிரியாணி பொட்டலத்தை வைத்துக் கொண்டு நண்பர்கள் இருவர் அதை வீணாக்காமல் யாரிடமாவது கொடுப்பதற்காக அலைவது போல் காட்டியிருப்பார்கள். ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன நண்பன் நீயாச்சு உன் பிரியாணி ஆச்சுன்னு சொல்லிட்டு போய்விடுவார். இவர் அலைந்து கடைசியில் பிரியாணி கேட்டு வாங்கிக் கொடுக்க முடியாத அண்ணன் தங்கையைச் சந்தித்து கொடுப்பார். உடனே அண்ணன்காரன் கையில் இருக்கும் சேர்த்து வைத்த காசைக் கொடுப்பான். தங்கையோ தனது அன்பின் வெளிப்பாடாக ஓடிச் சென்று ஒரு பூவைப் பறித்து வந்து கொடுப்பாள். யதார்த்தமாய் கதையை நகர்த்தியிருப்பார்கள்.

இப்படி நிறைய குறும்படங்களை கொஞ்ச நாட்களாக ரசிக்க முடிந்தது. அந்த வகையில் தற்போது என்னைக் கவர்ந்த குறும்படம் இலங்கையில் இருந்து சகோதரர் மதிசுதா அவர்கள் இயக்கியிருக்கும் 'மிச்சக்காசு'. தற்போது எந்தக் கடையிலும் மிச்சக்காசைக் கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக சாக்லெட்டுக்களைத்தான் கொடுக்கிறார்கள். சிலர் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். பல கடுப்பாக சில கேள்விகளைக் கேட்டுவிட்டுத்தான் போவார்கள். இதையே திரைக்கதையாக ரசிக்கும் விதமாகப் பண்ணியிருக்கிறார் இயக்குநர் மதிசுதா.



ஒரு விடுமுறை தினத்தில் ஓவியம் ஒன்றை வரைந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவனை அவனது அம்மா கடைக்குப் போய் சாமான் வாங்கி வரச் சொல்கிறார். அவனும் என்னம்மா என்ற கடுப்புடன் சைக்கிளில் பயணிக்கிறான். கடையில் அவன் வாங்கிய சாமான் போக மிச்சமுள்ள சில்லறைக்குப் பதிலாக மிட்டாய் கொடுக்கிறார் கடைக்காரர். பின்னர் அடுத்தடுத்த முறை அவன் வரும்போது கடைக்காரர் மிட்டாய் சில்லறையைக் கொடுக்கிறார். இதற்கு இடையில் வீட்டின் வாசலில் நிற்கும் ஆட்டோவில் விளையாடுகிறான் சிறுவன். ஆட்டோவில் பயணிப்பவராக நாயைக் காட்டியிருப்பதுடன் அம்மா கடைக்குச் செல்லச் சொன்னதும் இருங்கோ வாறேன் என்று நாயிடம் சொல்லிச் செல்கிறான். அன்று முழுவதும் கடைக்கும் வீட்டுக்குமாக அலையும் அவன் மாலையில் தான் வாங்கும் பொருளுக்கு கடைக்காரர் இவ்வளவு விலை என்று சொன்னதும் தன் பையில் இருக்கும் மிட்டாய்களை எண்ணி எண்ணி எடுத்து பொருளுக்கான பணமாக வைத்துவிட்டு கிளம்புகிறான். கடைக்காரர் அவனைப் பார்த்து நாக்கைத் துருத்துகிறார்.

சிறுவனாக நடித்திருக்கும் சங்கர் அசால்டான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறான். கடைக்காரராக வரும் மதிசுதா கடைசியில்தான் முகம் காட்டுகிறார் என்றாலும் அந்தக் கையில் இருக்கும் கயிறு அவரை பல போட்டோக்களில் பார்த்திருப்பதால் நமக்கு ஆரம்பத்திலேயே அவர்தான் எனக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.  கடைசியில் கடையில் ஒரு பெண் அமர்ந்திருப்பர். அவர்தான் உண்மையான கடை ஓனராக இருப்பார் போலும். அம்மாவுக்கு என தனியாக கதாபாத்திரம் இல்லாமல் குரலை மட்டுமே வைத்திருப்பது சிறப்பு. கடைக்காரர் மிட்டாய் கொடுக்குமிடத்தில் ஒருமுறையாவது சில்லரை இல்லை இந்தா மிட்டாய் வச்சுக்கோ என சொல்வதாக வசனம் இருந்திருக்கலாம். இருந்தாலும் நமக்கு அனுபவம் இருப்பதால் அதை புரிந்து கொள்ளமுடிகிறது. சிறுவன் கடைக்குச் செல்லும் காட்சி ஒருமுறை எடுத்து பலமுறை காட்டப்பட்டுள்ளது. அவன் வந்து திரும்பும் அந்த இடம் மீண்டும் மீண்டும் வருகிறது. கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் மிகச் சிறப்பான குறும்படமாக வந்திருக்கிறது. கதையும் காட்சிப்படுத்திய விதமும் அருமை. பின்னணி இசை மிகவும் அருமை. சாம்சங் எஸ்4-ல் எடுத்திருக்கிறார்கள். மதிசுதாவின் முந்தைய குறும்படங்கள் எந்தளவுக்கு மக்களைச் சென்றடைந்ததோ தெரியாது ஆனால் மிச்சக்காசு எல்லாருக்கும் பிடிக்கும். சிறந்த திரைக்கதைக்கான விருதும் பெற்றிருப்பதாக நேற்று முகநூலில் பகிர்ந்திருந்தார். ஒரு இயக்குநர் உருவாகிக் கொண்டிருக்கிறார்... வாழ்த்துக்கள் மதிசுதா.

-மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.. 

சனி, 22 பிப்ரவரி, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 52

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                                                                    பகுதி-50
------------------------------------------------

52.  காதலும் சாதியும்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதலை வெளிச்சமிட ராம்கிக்கு புவனாவின் சித்தப்பாவாலும் அவளைக் கட்டிக்கொள்ளத் துடிக்கும் ரவுடி மணியாலும் கத்திக் குத்து விழ, காயத்துடன் அவனைப் பார்த்தவள் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள். இருவரும் கல்லூரி முதல்வரால் கண்டிக்கப்படுகிறார்கள். ஐயாவைப் பார்த்துப் பேசும் ராம்கியின் அம்மா கோபத்துடன் கிளம்புகிறாள்.

இனி...

வைரவனின் வண்டி வந்து நிற்கவும் 'எதுக்கு இவன் வர்றான்... இன்னைக்கு காலேசுல அதுக பண்ணுனது இவனுக்குப் போயிருச்சோ... அதுக்கு எதுக்கு நமக்கிட்ட விசாரணைக்கு வரணும்... இன்னைக்கு என்ன நமக்கு விசாரணை தினமா? இப்பத்தான் பையன் தரப்பில வந்து பேசிட்டு வாய்தா வாங்காமலே ஒரு கொலைவெறியோட போயிருக்காங்க. அடுத்து இவன் என்ன பண்ணப் போறானோ  தெரியலையே... ம்... என்னதான் கேக்குறான்னு பார்ப்போம்' என்று நினைத்தபடி மனைவியைப் பார்க்க, அவரும் எப்பவும் போல இருங்கன்னு சைகை செய்தார்.

"வாங்க வைரவன்... என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்கீங்க... கூப்பிடும் போதெல்லாம் வரமாட்டீங்க... அம்மா தம்பிக்கு காபி குடும்மா..."

"சும்மா உங்களைப் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்ய்யா... அம்மா காபி எல்லாம் வேண்டாம் இப்பத்தான் குடிச்சிட்டு வாறேன்." என்றவனின் பேச்சில் சிகரெட் வாடை அடித்தது.

"ம்... உக்காருங்க... என்ன விஷயம்? அப்பா அம்மாவெல்லாம் நல்லாயிருக்காங்களா?"

"இப்ப எல்லாரும் நல்லாத்தான் இருக்காகய்யா..." அவன் 'க்' வைத்துப் பேசுவதைப் பார்த்ததும் சரி... இன்னைக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கான்... நாமளும் பிடி கொடுக்கக்கூடாது என முடிவு செய்தார்.

"என்ன தம்பி... இப்ப நல்லாயிருக்காங்கன்னு சொல்றீங்க... எனக்குப் புரியலையே..."

"உங்களுக்குப் புரியலையா? அது சரி... உங்க மாணவி போற போக்கைப் பார்த்தால் நாளைக்கு எல்லாரும் நல்லாயிருக்க மாட்டோமுன்னு தெரியுது..."

"யாரு புவனாவா.... அவங்க என்ன பண்ணுனாங்க... படிப்பு விஷயமா அவங்களை குறை சொல்ல முடியாதே?"

"படிப்புல இல்ல பழக்க வழக்கத்துல..."

"பழக்க வழக்கமா?"

"ம்... அந்த ராம்கி கூட...."

"ஆணும் பெண்ணும் நட்பா இருக்கக்கூடாதா என்ன?"

"இருக்கலாம்... ஆனா அது நட்பா இருக்கிற வரைக்கும்..."

"அப்புறம்...?"

"தெரியாத மாதிரி கேக்காதீங்க ஐயா... அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் இருக்கிறது நட்பா... இல்லை அதுக்கு மேலயான்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்..."

"இங்க பாருங்க தம்பி... இங்க வர்ற பிள்ளைங்க எல்லாம் எங்களோட பிள்ளைங்க மாதிரித்தான்... அதுல புவனா, ராம்கியின்னு எல்லாம் வேறுபாடு கிடையாது... எனக்குத் தெரிஞ்சு நல்ல நட்புத்தான் அவங்களுக்குள்ள... ஆமா நா ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?"

"ம்... கேளுங்கய்யா... "

"நட்பாப் பழகிற ரெண்டு பேரு ஒரு கட்டத்துல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு காதல்ங்கிற கட்டத்துக்குள்ள வந்தா என்ன தப்புங்கிறேன்..."

"காதல்ங்கிற கட்டத்துக்குள்ள வர்றது தப்பில்லை... ஆனா யாரைக் காதலிக்கிறோம்ங்கிறதுதான் முக்கியம்..."

ஐயா சிரித்தபடி, "என்ன தம்பி காதல்ன்னு வரும்போது அங்க எதுக்கு ஜாதி வருது... அப்புறம் அதுக்குப் பேரு காதலில்லையே..."

"நான் காதலே வரக்கூடாதுன்னு சொல்றேன்... நீங்க சாதி மாறி காதலிச்சா தப்பில்லைன்னு சொல்றீங்க... அதுக்காக எவனோ ஒருத்தனை எங்க வீட்ல ஏத்துக்கிட்டா எங்க சாதிக் கௌரவம் என்ன ஆகுறது?"

"படிக்கிற பிள்ளைங்க நீங்களும் இன்னும் சாதி, மதம்ன்னு இருக்கீங்களே தம்பி... சாதி சம்பிரதாயங்கிற கூட்டுக்குள்ள இருந்து வெளிய வரணும் தம்பி..."

"ஐயா நீங்க பாடம் நடத்துற மாதிரி சொல்றீங்க... இப்படி சொல்றது ரொம்ப ஈஸி... ஆனா சாதிங்கிற வட்டத்துக்குள்ள கிடைக்கிற மரியாதை, கௌரவம் எல்லாத்தையும் விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் வெளிய வரமுடியாது. சரிய்யா... அவங்க பழகுறாகங்கிறது எனக்குத் தெரியுது... இல்லை... இல்லையின்னு எல்லாரும் எத்தனை நாள்தான் மறைக்கப் பார்ப்பாங்க.... எனக்கு அவன் மேல தனிப்பட்ட முறையில பாசம் இருக்கு... ஆனா அது என்னோட தங்கச்சிக்கு காதலனா ஏத்துக்கிற அளவுக்கு கிடையாது... எதிர்ப்புக்கள் வரும்போது அவனால நின்னு பிடிக்க முடியுமான்னு எனக்குத் தெரியாது... ஆனா விழுற ஒவ்வொரு அடியும் பலமா இருக்கும்... அது மட்டும் நிச்சயம்... அவனுக்கு சொல்லி வையுங்க..." என்றபடி எழுந்தான்.

"தம்பி... இருங்க... சின்னஞ்சிறுசுக ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொன்னா நாமதான் எதிர்ப்புக்களை விட்டுட்டு சேர்த்து வைக்கணும்..."

"சாரி ஐயா... உங்க மேல ஒரு மரியாதை இருக்கு... என்னோட மனநிலை இப்போதைக்கு அவங்க உறவை ஏத்துக்கிற நிலையில இல்லை... ஒருவேளை ஏத்துக்கிற மனநிலை வந்தா பார்க்கலாம்... ஆனா அது வருமான்னு தெரியாது... நான் வாறேன்..." என்றபடி கிளம்பினான்.

அவன் வண்டியை எடுத்துக் கிளம்பும் வரை பேசாமல் இருந்த அவரின் மனைவி "என்னங்க இப்படிப் பேசிட்டுப் போறான்... பாவம் அந்தப் புள்ளைங்க.... என்ன பண்ணப் போறானுங்களோ...?"

"இப்போதைக்கு எதுவும் பண்ண மாட்டானுங்க... இவன் எதிர்ப்பை வழுவாக் காட்டினாத்தான் பிரச்சினை... இப்போதைக்கு இவன் தன்னோட எதிர்ப்பைக் காட்ட மாட்டான்னு நினைக்கிறேன்... பரிட்சை முடியட்டும்... பார்க்கலாம்... ஆனா மேல்படிப்புக்கு முன்னாலயே இவங்க முடிவு எடுக்க வேண்டிய சூழல் வந்தாச்சு... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்." என்றபடி வெளியே கிளம்பத் தயாரானார்.

விசாரணைகள் அது  இது என்று இரண்டு பக்கமும் ஓடிக் கொண்டிருக்க... பரபரப்பான வாழ்க்கைப் பாதையில் இருந்து விலகி இருவரும் ஒருவழியாக தங்களது பரிட்சையை முடித்தனர். ராசு மீண்டும் சிங்கப்பூர் சென்றுவிட, சீதையின் கணவன் முத்து குடி கூத்தியா எனத் திரிய ஆரம்பித்தான். சொல்லிச் சொல்லிப் பார்த்து பொறுமையிழந்த அவனது அப்பா அவனை அடித்துவிட, அவரை எப்படிமாமா அடீப்பீங்க என அவருடன் சண்டை போட்ட சீதா கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள்.

"வாங்கண்ணே..." வீட்டிற்குள் நுழைந்த அண்ணனைப் பார்த்து நாகம்மா சுரத்தில்லாமல் சொன்னாள்.

"ம்... எங்கத்தா சீதை"

"ம்... உள்ள இருக்கா? உக்காருங்க..."

"என்ன சுரத்தில்லாம பேசுறே?"

"என்னத்தைப் பேசச் சொல்லுறீங்க... என்னோட தலையெழுத்து எல்லாப் பக்கமும் பிரச்சினையா இருக்கு... "

"அவன் திருந்திட்டான்னு நெனச்சு கட்டி வச்சது என்னோட தப்புதான்... அவனைத் திருத்திருவான்னு நெனச்சேன்... கழுத அவன் போக்குல விட்டிருச்சு..."

"அவதான் கட்டிக்க மாட்டேன்னு நின்னாளே நாந்தானே உறவு விட்டுப் போகக்கூடாது... நம்ம அண்ண வீடுன்னு வம்படியா நின்னு கட்டுனேன்..."

"இங்க பாருத்தா.... எல்லாஞ் சரியாகும்... நான் இருக்கேன்ல்ல... அப்படியே விட்டுருவேனா என்ன சீதையைக் கிளம்பச் சொல்லு..."

"ம்... சீத... அடி சீதை... மாமா வந்திருக்காக பாரு..."

உள்ளேயிருந்து வந்த சீதா "வாங்க மாமா" என ஒப்புக்கு கேட்டுவிட்டு அம்மாவின் அருகில் அமர்ந்தாள்.

"என்னம்மா மாமா மேல இன்னும் கோபம் போகலையா... அவந்திருந்தனுமின்னு அடிச்சேன்... என்னோட தப்புத்தேன்... மன்னிச்சுக்க... நீ வா... எல்லாம் சரி பண்ணலாம்..."

"எதுக்கு மாமா... நா இங்கனதானே இருக்கேன்.."

"என்னம்மா நீயி... மேடு பள்ளம் இருந்தாத்தான் வாழ்க்கை... அவனை உன்னோட கண்ட்ரோல்ல கொண்டு வரப்பாரு... ஊருக்குப் போக வேண்டாம்... இங்க எதாவது ஒரு தொழில் பண்ணி பொழப்ப ஓட்டட்டும்... சரி பண்ணிடலாம் தாயி... எல்லாமே பொம்பளங்க கையிலதான் இருக்கு... என்ன நாகம்மா நான் சொல்றது..."

"சரிதாண்ணே... சின்னஞ் சிறுக பிரச்சினையினா தாங்காதுகதானே... எப்படியாச்சும் மாப்பிள்ளைக்கு நல்ல புத்தி வந்து பொழக்கட்டும்... நீ போத்தா... நா ரெண்டு நா கழிச்சு வாறேன்... எல்லாம் பேசி சரி பண்ணுவோம்..." என்று மகளை வாஞ்சையுடன் தடவினாள்.

"ம்.. " என்றபடி கிளம்ப ஆயத்தமானாள் சீதா. 

"சின்ன மருமகப்பிள்ளை என்ன சொல்றார்?"

"என்னத்தைச் சொல்றார்... அவரு கதை போற போக்கு சரியில்லைண்ணே... அவரு நமக்கு இல்லை... அந்தக் குட்டிய விட்டுட்டு வரமாட்டான் போலத் தெரியுது. இப்ப மேப்படிப்பு படிக்கணுமின்னு நிக்கிறான்... நா படிச்சது போதும் எங்கிட்டாச்சும் வேலக்குப் போன்னு சொல்லிட்டேன்..."

"படிக்கட்டுமே... அதனால என்ன"

"அவளும் அதே காலேசுக்குப் போவா... அங்கயும் சேந்து சுத்துவாங்க... இதெல்லாம் நமக்கு எதுக்கு... படிச்சிக் கிழிச்சது போதும்... நமக்குப் புள்ளயா இருந்தாப் போதும்..."

"ம்... அவன் போக்குல போயித்தான் திருத்தணும்... பாப்போம் எம்புட்டுத் தூரந்தான் போறான்னு... சரித்தா நாங்க கிளம்புறோம்.. நீ ஒரு எட்டு அங்க வா.... சரியா..." என்றவர் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு நடக்க அவருக்குப் பின்னே சீதாவும் தொடர்ந்தாள்.

"அலோ..."

"ம்... சொல்லு புவி..."

"என்ன தூங்கிட்டியா?"

"இல்ல டிவி பாத்துக்கிட்டு இருந்தேன்... நீ கூப்பிட்டே..."

"பாக்காம இருக்கிறது ரொம்பப் போரா இருக்கு ராம்..."

"இங்கயும் அப்படித்தான்... வீட்ல இருந்து பெயரெல்லாம் சொல்லிப் பேசுறே... யாரும் இல்லையா?"

"அப்பா, வைரவன் இல்ல... அம்மாதான் டிவியில நாடகம் பாக்குறாங்க... சோ நான் ப்ரி... அங்க"

"அம்மா வெளியில பேசிக்கிட்டு இருக்காங்க... பிரச்சினை இல்லை... என்ன அப்ளிகேசன் மாமா வாங்கிட்டு வந்தாரா?"

"மாமாவா... எந்த மாமா?"

"ம்... உங்க அப்பா"

"அது சரி மாமாவாயிட்டாரா அவரு?"

"ஆமா பொண்டாட்டியோட அப்பா மாமாதானே..."

"ஊரச்சுத்தி கலவரமாம்... இவரு கல்கோனா சாப்பிடுறாரு..."

"எத்தனை கலவரம் வந்தாலும் எம்பொண்டாட்டி நீதான் சரியா?"

"அது சரி... எங்கயோ மாப்பிள்ளை இருக்கான்னு பேசுறானுங்க... படிப்பு போதும்ன்னு பேசுறானுங்க... நாம கட்டிப்பிடிச்ச விசயமெல்லாம் இவனுகளுக்குத் தெரியுது ஆனா வெளிய சொல்லலை... எனக்குப் பயமா இருக்கு... மௌனமா இருந்து கழுத்தறுத்துருவானுங்களோன்னு... எங்கிட்டாவது ஓடிப் போயிடலாம் ராம்... அப்புறம் படிப்பைப் பார்க்கலாம் ப்ளீஸ்..."

"ம்... கொஞ்சம் பொறுமையா இரு... அதுக்கான நாள் வரும்வரை காத்திருப்போம்... என்னையத் தவிர வேற ஒருத்தனும் உன்னைய தொட முடியாது..."

"அந்த நம்பிக்கையிலதான் காத்திருக்கேன்.. சரி... சரி... அம்மா கூப்பிடுறாங்க... பை" என்று போன் கட்டாக போனையே வெறித்துக் கொண்டிருந்த ராம்கியின் மனதுக்குள் பல திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஓட ஆரம்பித்தன.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

கிராமத்து நினைவுகள் : அடி பம்ப்

பெரும்பாலான கிராமங்களில் அடி பம்புகள் இன்னும் இழந்துபோன அடையாளங்களுடன் தனது சுயத்தை இழக்காமல் இருக்கின்றன. எங்கள் ஊரிலும் முதன் முதலில் எங்கள் தண்ணீர் தேவையைத் தீர்ப்பதற்காக வந்து இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது.

எங்கள் ஊரில் இரண்டு கண்மாய்கள் இரண்டு ஊரணிகள் இருந்தாலும் மழைக்காலம் தவிர மற்ற நாட்களில் தண்ணீருக்கு திண்டாட்டமாக இருந்த காலம் அது. ஊரணிகள் என்பது பெயருக்குத்தான். ஒன்று சுத்தமாக பயன்பாட்டில் இல்லை. மற்றொன்றில் தண்ணீர் நிறைந்தாலும் அது குளிப்பதற்கோ குடிப்பதற்கோ பயன்படுவதில்லை. கண்மாயிலும் ஊருக்குப் பின்னே இருக்கும் கண்மாய் விவசாயத்திற்கும் குளிப்பதற்கும் மட்டுமே பயன்பட்டது. ஊருக்குள் நுழையும் போது இருக்கும் கண்மாய் விவசாயம், குளிக்க, குடிக்க என எல்லாவற்றிற்கும் பயன்பட்டது.

நாங்கள் பள்ளியில் படிக்கும் போதுதான் எங்க ஊருக்கு அடி பம்ப் வரப்போவதற்கு அடையாளமாக அடிபம்ப் போடுவதற்காக இடம் பார்த்தார்கள். ரோட்டோரத்தில் மாரியம்மன் கோவிலுக்குப் பின்னே வேப்ப மரத்து அருகில் போர்ப் போட ஆரம்பித்தார்கள். எப்போது அடி பம்ப் வரும் என்ற ஆவல் எல்லோருக்குள்ளும் இருந்தது. பத்துப் பதினைந்து நாள் போர் போட்டு குழாய் இறக்கி அதைச் சுற்றி கூழாங்கல் கொட்டி மேலே சாக்கைக் கட்டி வைத்துவிட்டுப் போய்விட்டார்கள்.

ஊருக்குள் ஓட்டுக் கேட்டு வரும் எம்.எல்.ஏ. ஜெயித்ததும் எட்டிப் பார்க்காமல் அடுத்த தேர்தலுக்குத்தான் வருவார். நாமும் அன்று வரவேற்றது போலவே மறுபடியும் வரவேற்று ஓட்டைப் போட்டு அடுத்த அஞ்சு வருசத்துக்கு சம்பாரிக்க வழி பண்னிக் கொடுப்போமல்ல அதே போல் போர் போட்டதும் கொஞ்ச நாளைக்கு யாரும் வரவில்லை. பின்னர் ஒருநாள் திடீரென ஒரு கம்ப்ரஸரைக் கொண்டு வந்து தண்ணிரை சுற்றம் செய்தார்கள். முதலில் சேறும் சகதியுமாக வந்த தண்ணீர் நேரமாக நேரமாக நல்ல தண்ணீராக வர எல்லோரும் தண்ணீரில் குளித்து ஆட்டம் போட்டோம்.

அதன் பிறகு சில வாரங்கள் கழித்து அடி பம்பினைச் சுற்றி வட்டமாக சிமிண்டில் தளமிட்டு சுற்றி கட்டி நின்று தண்ணீர் அடிப்பதற்கான பிளாட்பாரம் அமைத்துச் சென்றார்கள். பின்னர் ஒருநாள் அடிபம்ப் முழு உருவம் பெற்று தண்ணீரை கொடுக்க ஆரம்பித்தது. குடத்தை வைத்துவிட்டு அதம் பின்னே நீளமாக இருக்கும் கம்பியை மேலும் கீழுமாக ஆட்ட தண்ணீரைச் சளச்சளவென கொட்ட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் ஆசையில் வேகவேகமாக அடிக்க பின்னர் கைவலி வந்து தண்ணீர் அடிக்க யோசிக்க வைத்தது.

ஒரு சிலர் கம்பியை வேகமாக ஆட்டும் போது டங்க் என மேலே ஒரு அடி கீழே ஒரு அடி... டங்க்கு டங்குன்னு அடிச்சா அப்படி அடிக்காதீங்கன்னு பக்கத்துல நிக்கிறவங்க சொன்னாலும் கேக்காத ஒரு சிலரை இளையர் வீட்டு ஐயா கண்டபடி திட்டிவிடுவார். ஒருவர் தண்ணீர் அடிக்கும் போது அசந்து மறந்து கையை அந்த கம்பியின் பாதையில் வைத்துவிட்டால் போதும் உயிர் போகும் அளவிற்கு வலியுடன் ரத்தம் கொட்ட நச்சுவிடும். எல்லாருக்கும் அந்த அனுபவம் இருக்கிறது. சிலர் தண்ணிர் அடிக்கும் போது வழுக்கி விழுந்து அடிபட்டிருக்கிறார்கள்.

சில நாட்கள் செயின் அறுந்து படுத்துவிடும், அப்புறம் வைத்தியரைக் கூட்டியாந்து பார்த்து சரி செய்வார்கள். வைத்தியருக்கு கூலியாக வீட்டிற்கு இவ்வளவு என வசூலிப்பார்கள். கண்மாயில் தண்ணீர் இல்லாத நாட்களில் எல்லாம் நாங்கள் குளிக்கும் இடம் அடி பம்ப்தான்... ஆளுக்கு ஒரு பெரிய இரும்பு வாளி வைத்திருப்போம்... நான், என் தம்பி, தம்பி சரவணன், சேகர் சித்தப்பு, சரவணன் சித்தப்பு, முருகன், மச்சான் இளங்கோ, சோலை என எல்லாருமாக அரட்டை அடித்துக் கொண்டு குளிப்போம். செவ்வாய் வெள்ளி மாடு குளிப்பாட்டி விட்டு குளிக்க வேண்டும். தினமும் காலையில் தண்ணீர் அடித்து குடம் குடமாகக் கொண்டு போய் பாத்திரங்களை நிரப்பி வைப்போம். அதற்காகவே எல்லாருடைய வீட்டிலும் பிளாஸ்டிக் வைத்திருப்போம்.

பின்னர் எங்கள் ஊருக்கு மற்றுமொரு அடி பம்ப் வந்தது. அது ஊருக்குப் பின்னே வயல்களுக்குள் இருந்தது. அங்கு யாரும் விரும்பிச் செல்வதில்லை. அந்த அடி பம்ப் ஒருவரின் தோட்டத்திற்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தது. எங்கள் பாசமிகு அடிபம்ப் நாங்கள் பள்ளி, கல்லூரி எல்லாம் முடித்த போதும் ஓய்வில்லாமல் உழைத்தது. இதற்கு இடையே கண்டதேவியில் இருந்து தண்ணீர் கொண்டு வர பைப் போட்டு எல்லைப் பிரச்சினையில் நின்று போனது. பின்னர் பக்கத்து ஊரான மன்னன் வயலில் இருந்து வயல்களின் ஊடாக தண்ணீர் கொண்டு வந்தார்கள். கொஞ்ச நாள் எல்லாரும் குழாயில் பிடிக்க, பின்னர் அதுவும் போய்விட எங்கள் அடி பம்ப் அப்போது பிரதமரின் குடிநீர் திட்டத்தில் மோட்டர் இணைத்து அருகே ஆயிரம் லிட்டர் டாங்குடன் தயாராகியது.

தற்போது எங்கள் ஊருக்குள் டாங்க் கட்டி தண்ணீர் பைப் வீட்டிற்கு வீடு வந்த போதும் தன்னுடைய சுயத்தை இழக்காமல் இன்னும் உயிர்ப்புடன் தண்ணீர் கொடுத்துக் கொண்டிருக்கிறது எங்கள் ஊர் அடி பம்ப்.

-கிராமத்து நினைவுகள் தொடரும்.....

-'பரிவை' சே.குமார்.  

வியாழன், 20 பிப்ரவரி, 2014

பண்ணையாரும் பத்மினியும்

படம் வந்து ரொம்ப நாளாச்சு இப்ப விமர்சனமான்னு தோணலாம். ஆனால் நல்ல படத்தைப் பற்றி எப்ப வேண்டுமானாலும் எழுதலாம் என்பது என் எண்ணம். முதலில் இது என்னடா பேருன்னுதான் நினைப்பு வந்தது அப்புறம்தான் இது குறும்படமாக வந்து நாம பார்த்ததுதானேன்னு தோணுச்சு... 


குறும்படமாக வந்து எல்லாரும் விரும்பிப் பார்த்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படமாக வெளிவந்தபோது குறும்படத்தில் இருந்த சுவை திரையில் வருமா என்றே நினைக்கத் தோன்றியது. குறும்படத்தில் பார்த்து ரசித்த கதையை சற்றும் பிசகாமல் சினிமாவுக்கான சில இடுதல்களும் தொடுதல்களும் கலந்து கலக்கல் காக்டெயிலாகக் கொடுத்துள்ளார் இயக்குநர் அருண்.

நகரத்தில் இருந்து ஒதுங்கிய ஒரு கிராமம்... அந்தக் கிராமத்துக்குள் புதிதாய் ஒரு பொருள் வரும் போது அந்த மக்களுக்கு அது எப்படியிருக்கும்... அதைப் பார்க்க வேண்டும் என்ற குறுகுறுப்பு இருக்குமே அதை கிராமத்து வாசியாக அனுபவித்தவன் நான்... பள்ளியில் படிக்கும் போது ஊருக்குள் முதன் முதலில் சித்தப்பா வீட்டிற்கு தொலைக்காட்சி வந்த போதும்... ஊருக்குள் முதன் முதலில் டிவிஎஸ் 50யும், எம்80யும் வந்த போது சின்னப்பசங்களாக அதைச் சுற்றிச் சுற்றி வந்ததையும் வீட்டிற்கு முதன் முதலில் வந்த பிபிஎல் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியை தொட்டுத் தொட்டு துடைத்துப் பார்த்தும் அனுபவித்த அந்த சந்தோஷத்தை மீண்டும் கிளறிப் பார்க்க வைத்தது இந்த பண்ணையாரும் பத்மினியும்.

தனது பிரீமியர் பத்மினி காரை தனது தம்பியிடம் விட்டுச் செல்கிறார் அந்த ஏரியாவில் கார் வைத்திருக்கும் அண்ணன். காரே ஓட்டத்தெரியாத பண்ணையார் வீட்டு வாசலில் நிற்கும் காரை ஊர் மக்கள் வந்து வந்து பார்த்துச் செல்கிறார்கள். அந்தக் காரை யாரை வைத்து ஓட்ட வைப்பது என்று நினைக்கும் போது ஊருக்குள் நானும் டிரைவர்தான் என்றபடி டிராக்டர் ஓட்டும் முருகேசனைக் கூட்டி வருகிறார்கள். அதை ஓட்ட ஆரம்பவனிடம் கற்றுக் கொள்ளத் துடிக்கும் பண்ணையாருக்கு எங்கே கற்றுக் கொடுத்தால் தனக்கு பத்மினியுடன் இருக்கும் பந்தம் போய்விடுமோ என அவருக்கு கற்றுக் கொடுக்க இழுத்தடிக்கிறான்.


இதற்கு இடையே தனது வீட்டில் வந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஒவ்வொரு பொருளாக வாங்கிச் செல்லும் அப்பா செல்லமான மகள், அவளை திட்டும் அம்மா... இந்த இடத்தில்தான் ஒரு நெருடல்... எப்பவுமே அப்பாவுக்குத் தெரியாமல் பெண்களுக்கு செய்வது அம்மாக்கள்தான். இங்கே சற்றே மாற்றியிருக்கிறார்கள். டெலிபோனில் ஆரம்பித்து காரில் வந்து நிற்கிறார். தனது மகள் கொண்டு செல்லும் காரை மீண்டும் திரும்பப் பெற்றாரா... முருகேசனின் காதல் என்னவானது என்பதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி அடித்து ஆடியிருக்கிறார். ரம்மியில் அடடா என்ன ராகம் நீயும் பாடுறேன்னு கேட்டு கொஞ்சம் தடுமாற்றம் கண்டவர் இதில் மீண்டும் ஏற்றத்தைப் பெற்றிருக்கிறார். கிடைக்கும் இடத்திலெல்லாம் நடிப்பில் கிடா வெட்டியிருக்கிறார். பண்ணையாராக வரும் ஜெயப்பிரகாஷ் கிராமத்து நல்ல மனிதராக... காரை கண் மூடித்தனமாக விரும்பும் மனிதராக கலக்கியிருக்கிறார். அவரின் மனைவியாக வரும் துளசியும் தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். அழுதழுது காரியம் சாதிக்கும் மகளா வரும் நீலிமாவும் நடிப்பில் சோடை போகவில்லை.

நாயகி ஐஸ்வர்யாவுக்கு அதிகம் வேலை இல்லை. கிராமத்துப் பெண்ணாக வலம் வருகிறார். பீடையாக வந்து கலக்கியிருக்கிறார் பால சரவணன். படத்தின் ஆரம்பத்தில் கதை சொல்ல ஆரம்பித்து இறுதியில் பத்மினியில் அமர்ந்து செல்லும் அட்டக்கத்தி தினேஷ், காரில் ஏற ஏங்கும் சிறுவன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருப்பது சிறப்பு. படத்தைப் பொறுத்தவரை செல்லம்மாளாக வரும் பத்மினியே முக்கிய கதாபாத்திரம்,  பத்மினிக்கு வில்லனாக ஊருக்குள் வரும் மினிபஸ்ஸை சித்தரித்திருப்பது சிறப்பு.


படத்தில் வெகுவாகக் கவர்வது பின்னணி இசை, மிகச் சிறப்பாக இசை அமைத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன. படம் பார்த்து முடிக்கும் போது டாஸ்மார்க் சமாச்சாரங்களும் குத்துப்பாடலும் இல்லாத ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி நமக்குள் வந்து சம்மணம் இட்டு அமர்ந்து கொள்கிறது. பண்ணையாரும் பத்மினியும் நம்முடனே வருவது போல் தோன்றுவது இயக்குநருக்கு கிடைத்த வெற்றி எனலாம்.

மொத்தத்தில் நாம் ரசித்துப் பார்க்க நினைக்கும் படங்களின் வரிசையில் பத்மினிக்கும் கண்டிப்பாக இடம் கொடுக்கலாம்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 19 பிப்ரவரி, 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 51

முந்தைய பதிவுகளைப் படிக்க...


------------------------------------------------

51.  காதல் சக்கரம் முறியுமா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதலை வெளிச்சமிட ராம்கிக்கு புவனாவின் சித்தப்பாவாலும் அவளைக் கட்டிக்கொள்ளத் துடிக்கும் ரவுடி மணியாலும் கத்திக் குத்து விழ, காதலின் வேகத்தில் சித்தப்பாவை எதிர்க்கும் புவனா,  அவனைக் காணும் ஆவலில் வந்தவள் காதல் வேகத்தில் அவனைக் கட்டிக்கொண்டாள்.

ல்லூரி வளாகத்துக்குள் ஒரு மாணவனும் மாணவியும் கட்டிப் பிடித்துக் கொள்வது என்பது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படும் என்ற நிலையில் புவனா யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் ராம்கியை கட்டிப் பிடித்தது கொண்டதைப் பார்த்ததும் மற்றவர்கள் தவித்தார்கள்.

"ஏய் புவி... இது காலேஸ்... பர்ஸ்ட் கண்ட்ரோல் யுவர் செல்ப்... யாராவது பாக்கப் போறாங்க..." கத்தினாள் மல்லிகா.

"டேய் ராம்கி... " அதட்டினான் சரவணன்.

சூழலை உணர்ந்து படக்கென்று தன்னை விடுவித்துக் கொண்ட புவனா, "சாரி..." என்றபடி விலகினாள். ராம்கி சுற்றி ஒருமுறை பார்த்தான் பல கண்கள் அவர்கள் மீது இருந்ததைப் பார்த்ததும் வெட்கமாக இருந்தது. டிபார்ட்மெண்ட் பக்கம் பார்வையைச் செலுத்த ஐயாவும் இன்னும் சில ஆசிரியர்களும் பார்ப்பதைப் பார்த்ததும் அவனுக்கு என்னவோ போலாகிவிட்டது.

"என்ன புவி இது... எனக்கு ஒண்ணுமில்ல... இப்ப என்ன பண்ணியிருக்கே நீயி... யோசிச்சுப்  பாரு...  அம்புட்டுப் பேரும் நம்மளையே பாக்குறாங்க..." மெதுவாகச் புவனாவைக் கடிந்து கொண்டான்.

"சாரி... உங்களைப் பார்த்ததும் நேத்துல இருந்து கண்ட்ரோல் பண்ணி வச்ச எம்மனச கண்ட்ரோல் பண்ண முடியலை... எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்கப்பா.. உணர்ச்சி வசப்பட்டு இப்படிப் பண்ணிட்டேன்..." என்றாள்.

"இருந்தாலும் நீ..." என ராம்கி எதோ பேச வாயெடுக்க "இப்ப என்னடா நடந்து போச்சுன்னு அந்த புள்ளய சத்தம் போடுறே...  ஏதோ உம்மேல உள்ள பாசத்துல அப்படிப் பண்ணிட்டா.... அதுக்கென்ன இப்போ... பிரின்ஸ்பால் கூப்பிட்டா பதில் சொல்லுங்க... என்ன தலையவா எடுக்கப் போறாங்க... விட்டுத் தள்ளுடா... எப்புடியும் நாளைக்குத் தெரியப்போறது இன்னைக்கே தெரிஞ்சாச்சு... புவனா நீ கிளாஸ்க்குப் போ... மதியம் பேசிக்கலாம்... வாடா போகலாம்..." என்று சூழலை மாற்றி வகுப்பிற்கு அழைத்து வந்தான் அண்ணாத்துரை.

வகுப்புக்கள் நடந்து கொண்டிருக்கும் போது ராம்கிக்கும் புவனாவுக்கும் முதல்வரிடம் இருந்து தனித்தனியே அழைப்பு போனது. இருவரும் முதல்வர் அறைக்குச் செல்ல அங்கு அவர்களின் துறைத் தலைவர்களும் இருந்தனர். இருவரும் ஒன்றும் பேசாமல் போய் நிற்க, ராம்கியின் துறைத்தலைவர்தான் பேச்சை ஆரம்பித்தார்.

"என்ன தம்பி... இது படிக்கிற இடம்.. காலையில நீங்க நடந்துக்கிட்டது...." பேச்சை நிறுத்தி ராம்கியை ஏறிட்டார்.

"இல்ல சார்... அது... வந்து... வந்து..."

"ஒரு பொம்பளப்புள்ள... அதுவும் நல்லாப் படிக்கிற பொண்ணு இப்படி எல்லாரும் பாக்கிற மாதிரி... நடந்துக்கிறது முறையில்லயில்லம்மா...." புவனாவைப் பார்த்தார்.

"ராம்கிக்கு நடந்த ஒரு இன்சிடென்ட்டால... நான் அப்படிப் பண்ணிட்டேன்... இதுல ராம்கியோட தப்பு எதுவும் இல்லை... என்ன தண்டனையின்னாலும் எனக்கே கொடுங்க சார்..."

"இங்க பாரும்மா... இது படிக்கிற இடம்... தப்புப் பண்ணுனவங்க வேற யாருமா இருந்தா இந்நேரம் சஸ்பெண்ட் பண்ணி பேரண்ட்டைக் கூட்டியாரச் சொல்லியிருப்பேன்... நீங்க ரெண்டு பேருமே நல்லாப் படிக்கிறவங்க... கல்சுரல் ஆக்டிவிடீஸ்ல காலேசுக்கு பெருமை சேர்த்திருக்கீங்க... நீங்களே இப்படிப் பண்ணினா..."

"சாரி சார்... எங்க தப்புத்தான் சார்... தண்டனையை எனக்குக் கொடுங்க... புவனாவுக்கு தண்டனை கொடுத்த அது அவங்க படிப்பைப் பாதிக்கும் சார்..." என்றான் ராம்கி.

முதல்வர் சிரித்தபடி "நல்ல புள்ளைங்கப்பா நீங்க... மாத்தி மாத்தி தண்டனையை எனக்குக் கொடுங்க... எனக்குக் கொடுங்கன்னு கேக்குறீங்களே... நான் இன்னும் தண்டனை பற்றி முடிவே பண்ணலையே... இதுதான் முதலும் கடைசியும்... இனிமே இதுபோல நடந்தா நான் சிவியரா ஆக்சன் எடுப்பேன். அப்புறம் மன்னிப்பே கிடையாது. உங்களுக்கு  தண்டனை கொடுக்க வேண்டாம்கிறதுதான் உங்க துறைத்தலைவர்களோட வேண்டுதலும்... உங்க மேல எல்லாருக்கும் மதிப்பு இருக்கு... அதை காப்பாத்த வேண்டியது உங்க கையிலதான் இருக்கு... போங்க..."

"ரொம்ப நன்றி சார்...." என்றபடி இருவரும் வெளியே வந்தனர். "சாரி என்னாலதான் உங்களுக்கும் கெட்ட பெயர்" என்றாள் புவனா.

"இதுல என்ன உனக்கு எனக்குன்னு பிரிச்சிப் பேசுறது... உனக்கு ஒண்ணுன்னா எனக்கும்தான் அதுல பங்கிருக்கு... சரி எதுவும் நினைக்காம கிளாஸ் போ... மதியம் பேசிக்கலாம்" என்று சொல்ல, அவர்களைக் கடந்த ஒருவன் சக மாணவனிடம் " சே... இப்படிப் பிகரெல்லாம் நம்மக்குக் கிடைக்க மாட்டேங்குது மாப்ளே... கிடைச்சிருந்தா நமக்கும் இதுபோல அதிர்ஷ்டம் அடிச்சிருக்கும்... ம் அதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்... நாளைக்கு நானும் கையில கட்டுப் போட்டுக்கிட்டு வந்தா வந்து ஒத்தரம் கொடுப்பாளா?" என்று நக்கலாகக் கேக்க, "டேய்" என ராம்கி அவனை நோக்கிப் பாயப் போக, புவனா அவனைத் தடுத்து "வேணாம் ராம்... இப்போ எதுவும் வேணாம்... யார் எது பேசினாலும் நாம பொறுமையா போக வேண்டிய நேரம் இது... இல்லைன்னா அவனுக்கு நானே பதில் சொல்லியிருப்பேன்... இப்ப எதாவது பேசினா மறுபடியும் பிரின்ஸ்பால் முன்னாடி நிக்கணும்..." என்றதும் இருவரும் அவரவர் வகுப்பறை நோக்கி நடந்தனர்.

மாலை வீட்டு வாசலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த தமிழய்யா, காபி கொடுத்த மனைவியிடம் "இன்னைக்கு நம்ம புள்ளங்க காலேசுல பேரைக் கெடுத்துக்கிருச்சுங்க...." என்றார்.

"மொட்டையா நம்ம புள்ளங்கன்னா யாரு... அப்படி என்ன பண்ணுச்சுங்க..?"

"அட நம்ம புவனாவும் ராமுந்தான்... புவனாவுக்கு வேண்டியவங்க ராமுவை அடிச்சிட்டாங்க போல... அதைக் கேக்க வந்த இந்தப் பொண்ணு அவரைப் பாக்கவும் கட்டிப்புடிச்சிடுச்சு..."

"ஐயையோ... அப்புறம்..?"

"நல்லவேளை முதல்வர் கூப்பிடும் முன்னால நானே ரெண்டு பேரோட துறையிலயும் பேசினேன். அப்புறம் முதல்வர்கிட்டயும் பேசிட்டு வந்தேன். அவரு கூப்பிட்டு கண்டிச்சி விட்டுட்டாரு. இந்த விசயத்துல நான் பேசினது அதுகளுக்குத் தெரியாது. ரெண்டும் என்னோட முகத்துல முழிக்க சங்கட்டப்பட்டுக்கிட்டு என்னைய பாக்கவே இல்லை...."

"ஆத்தாடி... வீட்டுகளுக்குத் தெரிஞ்சா என்னாகப் போகுதோ?"

"எப்பவா இருந்தாலும் தெரிஞ்சுதானே ஆகணும்...  பிரச்சினை வர்ற மாதிரி இருந்தா நானே ரெண்டு பக்கமும் பேசலாம்ன்னு பாக்குறேன்..." என்றபோது வாசலில் வந்து நின்ற டிவிஎஸ் பிப்டியில் இருந்து நாகம்மா இறங்கினாள்.

"அடடே... வாங்கம்மா... என்ன இம்புட்டு தூரம்? உள்ள வாங்க" என்று ஐயா சொல்ல, வாங்கம்மா என்று அம்மாவும் வரவேற்றார். உள்ளே வந்து நாகம்மா அமர, ராசு வாசலிலேயே நின்றான். 

"அட உள்ள வாங்கய்யா... நம்ம வீட்டுக்குள்ள வர்றதுக்கு என்ன... ரெண்டு பேருக்கும் காபி கொண்டாம்மா"  என்ற ஐயா "தம்பி எப்ப ஊருக்குப் போறாப்ல?" என ராசுவிடம் கேட்டார்.

சேரில் நெளிந்தபடி அமர்ந்த ராசு, "அடுத்த வாரம் போறேனுங்கய்யா" என்றான்.

"என்னம்மா... நீங்க இவ்வளவு தூரம் வந்திருக்கீங்கன்னா எதாவது..." என்று இழுக்க, "எதுக்கு இங்க வரப்போறேன்... எல்லாம் அவனாலதான்..." என்று அதிரடியாக நாகம்மா ஆரம்பித்தாள்.

"அவனாலதான்னா... ராமாலயா... அந்தப் புள்ளைக்கு என்ன?"

"புள்ளயாம் புள்ள... அட ஏய்யா நீங்க வேற எவளுக்காகவோ எவனுக்கிட்டயோ கத்திக்குத்து வாங்கிக்கிட்டு வந்து நிக்கிது..."

ஐயா எதுவும் பேசவில்லை... "என்னது கத்தியால குத்திட்டாங்களா?" காபியோடு வந்த அம்மா கலவரமாய் கேட்டார்.

"ம்... கையில குத்திட்டானுங்க..." காபியை வாங்கியபடி சொன்னான் ராசு.

"அவதான் முக்கியம்ன்னு சொல்றான்யா... என்னையவே எதுக்குறான்யா... எப்பவும் ஐயாவூடு போறேன்னு சொல்லிட்டு அவகூட சுத்தியிருக்கான்... உங்களுக்கெல்லாம் தெரிஞ்சும் மறச்சிட்டீங்க..."

"இங்க பாருங்கம்மா... ரெண்டு பேரும் பழகுறது எனக்கு தெரிய வந்தப்போ நானும் கண்டிச்சி... ரெண்டு குடும்பத்துலயும் நானே பேசுறேன்னு சொன்னேன்... வெளிய தெருவ சுத்தக்கூடாதுன்னு சொன்னேன்... புள்ளங்களும் அப்படித்தான் இருந்தாங்க...ரெண்டு பேருமே படிப்புலதான் கவனமா இருந்தாங்க... இங்க வந்தெல்லாம் அவங்க பேசிக்கிட்டு இருக்கலை... சின்னஞ் சிறுசுக ஒருத்தரை ஒருத்தர் விரும்பிட்டாங்க நாமதான் சேர்த்து வைக்கணும்..."

"நீங்க சாதாரணமா சொல்லுறீங்கய்யா... நேத்து குத்துனதுல எதாவது ஒண்ணுன்னா எனக்குத்தானேய்யா இழப்பு... பெரிய மனுசன் நீங்க அவனை திட்டித் திருத்தாம சேர்த்து வைக்கணுங்கிறீங்க..."

"அம்மா உங்க புள்ள உங்களை விட்டு எங்கயும் போகமாட்டன். ரெண்டு பேரையும் எங்க புள்ளங்களாத்தான் நாங்க பாக்குறோம்... அவங்க ஆசைக்கு பெரியவங்க நாம மதிப்புக் கொடுக்கலாமுல்ல... வீணாவுல அவங்க ஆசைய ஏன் கெடுக்கணும்..."

"நல்லாயிருக்குய்யா... அவங்க சாதி பெரிசா எங்க சாதி பெரிசான்னு எல்லாம் எனக்கு பாக்கத் தேவையில்ல... நாங்க வம்பு சண்டை வேண்டான்னு ஒதுங்கிப் போற சாதி... ஆனா அவங்க ஆ... ஊன்னா அருவாளைத் தூக்குற சாதி... எம்பையனுக்கிட்ட பாசுபோர்டெல்லாம் இருக்கு... பெரியவன் ஊருக்குப் போனதும் அவனையும் அங்கிட்டு அனுப்பிற வேண்டியதுதான்... வந்த கண்டிச்சி விடுங்க... இல்லைன்னா இனி இங்கிட்டு வாராதேன்னு போகச் சொல்லிடுங்க... எங்க குடும்பத்துக்கெல்லாம் காதல் கத்திரிக்காயெல்லாம் சரிப்பட்டு வராது. பெரிய மனுசன்னு பேச வந்தா கட்டி வப்போமுன்னு சொல்லுறீக..."

"ஏம்மா இம்புட்டு வேகமாப் பேசுறீங்க... அவங்க பழகினது அம்புட்டு பெரிய தப்பா... இருபத்து அஞ்சு வருசத்துக்கு முன்னால நாங்க காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்ப நல்லாயில்லையா என்ன... ஆரம்பத்துல எங்களை ஏத்துக்க மறுத்த எங்க குடும்பம் இப்ப எங்களோட நெருக்கமாத்தான் இருக்காங்க... முதல்ல எதிர்த்துட்டு அப்புறம் சேர்றதுக்கு நாம எல்லாருமா அவங்களோட காதல ஆதரிச்சி கல்யாணம் பண்ணி வைப்போம்... இதுல எதுக்கு சாதியும் சங்கடங்களும்..."

"அதானே பார்த்தேன்... பன்னியோட சேந்த கன்னும் பீ தின்னுமின்னு சும்மா சொல்லியிருக்காங்க... அதான் உங்ககிட்ட பழகி உங்க புத்தி வந்திருச்சு... நீங்களே ரெண்டு பேரையும் கோத்து விட்டிருப்பீங்க போல... இனி நான் பாத்துக்கிறேன். என்ன செய்யணுமோ அதைச் செய்துக்கிறேன்...." என்று நாகம்மா எழ, "இருங்கம்மா.... பேசலாம்..."

"போதும்யா... பேசினதெல்லாம் போதும்... நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்... என்ன பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும்... வாடா" என்று நாகம்மா கிளம்பிச் செல்ல. "என்னங்க இப்படி பேசிட்டுப் போறாங்க... சும்மா இருக்கீங்க" என்றபடி அருகே வந்த மனைவியிடம்  சிரித்தபடி பேச ஆரம்பித்தார்.

"விடும்மா... அவங்களுக்கு பிள்ளைங்கதான் உலகம்... படிச்சவங்களே காதல்ன்னு வந்தா எதிர்க்கிறப்போ படிக்காதவங்க இவங்க எப்படி ஏத்துப்பாங்க... அதான் பெத்தமனசு கோபமாப் பேசிட்டுப் போறாங்க... புள்ள நம்மளை விட்டுப் போயிடுவானோன்னு பயப்படுறாங்க... அவங்க பயம் சரிதானே..." என்றபோது வாசலில் வைரவனின் வண்டி வந்து நின்றது.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.