மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 30 ஜூன், 2012

சிறு பூக்கள்..!





அலையவிட்ட மனங்களை
அறியவில்லை...
அலையும் கூந்தல்..!

***

குளிக்க மறுத்தது
உன் உதடு தொட்ட
என் கைக்குட்டை..!

***

மேகம் விலகியதால்
வெட்கப்பட்டு சிரித்தது
முழு நிலவு..!

***

உணர்வுகளெல்லாம்
அவளாகிப் போக
உறவுகள் எல்லாம்
அந்நியமாய்..!

***

ஆடும் மயிலென
நாசி தட்டிச் செல்கிறது
முன் இருக்கைப்
பெண்ணின் கூந்தல்..!

-'பரிவை' சே.குமார்

திங்கள், 25 ஜூன், 2012

மனசின் பக்கம்: எழுத நினைப்பவையும் சில வலிகளும்

அது என்னமோ தெரியலைங்க நிறைய சேமித்து நாளை... நாளை... என்று நாளைக் கடத்தி சட்டி காலியானதும் அகப்பையை விட்டு தேடுவதே பொழப்பாகிப் போச்சி... இப்படி யோசிச்ச கதைகளெல்லாம் காணாமலே போச்சுன்னா... நிறைய டைப் பண்ணி, பென் டிரைவ்ல போட்டு வச்சி ஒரு பென் டிரைவ்வை தெரியாம குப்பையில போட்டாச்சு... அடுத்ததை ஆபீஸ்ல பைல் காப்பி பண்றதுக்கு ஒருத்தனுக்கு கொடுத்து வாங்கி நம்ம சிஸ்டத்துல போட்டா பிளாங்கா இருக்கு... என்னென்னமோ பணணியாச்சு... எதுவும் வரலை... அம்புட்டுத்தான்னு நினைக்கிறேன். நிறைய இப்படியே தவற விட்டாச்சு.

நம்ம ஊர்ல சின்னச் செடிய ஒரு இடத்துல இருந்து பிடுங்கி இன்னொரு இடத்துல நட்டால வளருமான்னு சந்தேகம். ஆனா இங்க (அரபு நாட்டில்) பெரிய பெரிய பேரீச்சம்பழ மரங்களை பிடுங்கி நட்டு வளர்த்துப்புடுறாங்க... அதுவாவது பரவாயில்லை அலைனில் நாங்க இருக்கும் ஏரியாவில் ஒரு வேப்ப மரம் சாய்ஞ்சு வளந்து இருந்துச்சு... நான் தினமும் அந்த மரத்தைக் கடந்துதான் அலுவலகம் செல்வேன். ஒரு நாள் நான் போகும்போது ஒரு பாகிஸ்தானி அந்த மரத்தின் கிளைகளை வெட்டி தூரின் ஓரத்தில் குழி பறித்துக் கொண்டிருந்தான். சரி மரத்தை வெட்டப் போறாங்கன்னு பாத்துக்கிட்டே போனேன். நான் பெரும்பாலும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக மதியம் அந்த வழி வருவதில்லை. அதனால் அடுத்த நாள் அந்த மரம் இன்று இருக்காது என்று நினைத்தபடி போனால் அதே இடத்தில் வளைந்து நின்ற மரத்தை நேராக நிறுத்தி சுற்றி மண் அணைத்து தண்ணீர் விட்டிருந்தார்கள். இதுவாவது வளர்றதாவது அப்படிங்கிற நினைப்பில் தினமும் அந்த வழியே கடந்து கொண்டிருந்தேன். சில நாட்களாக அழகாக கிளைகளை விட்டு வளர்கிறது. இதை நண்பர் ஒருவரிடம் சொன்னபோது அவர் வா நான் ஒரு இடத்துக்கு கூட்டி போறேன் என்று கீரீன் முபாஸரா என்ற இடத்திற்கு செல்லும் வழியில் கூட்டிச் சென்றார். ஓரிடத்தில் ரோட்டோரமாக சுமார் 20 மரங்களை வேறிடத்தில் இருந்து கொண்டு வந்து நட்டிருக்கிறார்கள். சில மரங்கைள் தழைத்து வளர்ந்து இருக்கின்றன. என்னால் நம்பவே முடியவில்லை.

இங்க நல்ல வெயிலுங்க... கொல்லோ கொல்லுன்னு கொல்லுது.. நான் வரும் பாதையில் பேருந்து வசதி அவ்வளவாக இல்லாததால் நடந்தே அறைக்கு வந்துவிடுவேன். அப்படி வரும் போது ரோட்டின் ஓரத்தில் இருக்கும் புல்தரையில் மெஷின் மூலமாக புல் வெட்டிக் கொண்டிருந்தார் ஒரு நண்பர். பார்க்க இந்தியர் போலத்தான் இருந்தார். இது போல் புல் வெட்டுபவர்களைப் பார்த்திருக்கிறேன். நாலு சக்கர வண்டியில் அமர்ந்து அதை புல் இருக்கும் ஏரியாவில் ஓட்டி வெட்டுவார்கள். ஆனால் இவர் இந்த வெயிலில் காலை முதல் மாலை வரை நம்ம ஊரில் மொசைக் போடுவதற்கென்று ஒரு மிஷின் வைத்திருப்பார்களே... அதுபோல மோட்டாரை ஆன் செய்து ஓட்டி ஓட்டி புல் வெட்டிக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த மிஷினை மேலாக ஓட்டினால் வெட்டாது போல முழுப் பலமும் கொடுத்து அதை தள்ளுகிறார். சுட்டெரிக்கும் வெயிலில் வேர்வைக் குளியலில் அவர் கஷ்டப்பட்டு வேலை செய்வதை பார்க்கும் போது மூன்று மணி வரை ஏசி அறையில் இருந்து விட்டு ஒரு இருபது இருபத்தைந்து நிமிடம் நம்மால் வெயிலில் நடக்க முடியவில்லையே என்று நினைத்து அவரைப் பார்த்தால் அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் எதோ மர்மம் இருந்தது... என்னவாக இருக்கும். நாம தான் இப்படி கஷ்டப்படுறோமுன்னா வெள்ளையுஞ் சொள்ளையுமா காச மிச்சப்படுத்திக்கிட்டு இந்த வேகாத வெயில்ல போறாம் பாருன்னு நினைச்சிருப்பாரு போல... சரி விடுங்க.

நாட்டுப்புறப் பாடல்கள் இப்போது ஒரு சிலரால் மட்டுமே வாழ்கின்றன என்பதே உண்மை என்றாலும் இன்னும் கிராமங்களில் இந்தப் பாடல்கள் அழியாமல் இருப்பதில் சின்ன சந்தோஷம். சினிமாவில் வரும் நாட்டுப்புறப்பாடல்களும் படத்தின் வெற்றியை மையமாக வைத்தே எழுதப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டுப்பாடல், குலவைப்பாடல், ஒப்பாரிப்பாடல், நலுங்குப்பாடல், திருவிழாப்பாடல், குலவைப்பாடல், நடவுப்பாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவைகளைப் பற்றி நாட்டுப்புறப்பாடல்கள் என்ற தலைப்பில் ஒரு சில பதிவுகள் எழுத எண்ணம். ஆனால் இது குறித்து எழுத நிறைய தகவல்கள் திரட்ட வேண்டும். மதியம் வரும்போது இன்று எழுதலாம்... இன்று எழுதலாம் என்று நினைத்து வந்து யோசனைக்கு தலையணை கொடுத்து விடுகிறேன். பார்க்கலாம் விரைவில் எழுத எண்ணம்... எப்படியும் சில பகிர்வுகளாவது பகிருவேன் என்று நம்புகிறேன்.

இதே போல் ஒரு கல்லூரிக் கதையும் உறங்கிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் உண்மை நிறைய கற்பனை கலந்து ஒரு தொடராக குறிப்பிட்ட நாளில் கொண்டு வர எண்ணம். ஆனால் செங்கோவி போல் தொடர் எழுத இன்னும் உத்வேகம் வரவில்லை. நீண்ட நாளாக கிடப்பில் இருக்கும் இந்த (தொடர்) கதை, நேற்று தேவா அண்ணனின் என் பிரண்டைப் போல யாரு மச்சான் படிச்சதும் மனசுக்குள் ஏறி உக்காந்து எழுத சொல்லி அடம்பிடிக்குது... இதுக்கு தலையணை கொடுத்தாலும் படுக்க மாட்டேங்குது... இதையும் எழுத எண்ணம்... பார்க்கலாம்...

விஷால் இப்போ பள்ளிக்கூடம் போறாருங்க... அவரைப் பற்றி எழுத நிறைய இருக்கு... பள்ளிக்கூடம் கிளம்புற வரை நல்லபிள்ளைதான் அப்புறம் அழுத ரணகளப்படுத்துறதுல நாறப்புள்ளையாயிடுவாராம். பள்ளிக்கூடத்துக்குப் போகமா இருக்க அவரு கேக்குற கேள்விகள் இருக்கே... அடேங்கப்பா... அவங்க அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க... போன வாரம் அக்கா கிளம்பும் போதே கிளம்பி தயாராயிட்டு தூங்கிட்டாராம். எழுப்பினதும் எல்லாருக்கும் அப்பா ஸ்கூலுக்கு வருவாங்க... எனக்குத்தான் அப்பா இல்லையே... நான் மிஸ் கேட்டா என்ன சொல்றதுன்னு மழலையா கேட்க, அம்மணி ஆடிப்போயிட்டாங்களாம். அப்பா துபாயில இருக்காங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லுவியல்ல அது மாதிரி மிஸ்கிட்டயும் சொல்லு அப்படின்னு சொல்ல... இங்க வரமாட்டாங்கள்ல... என்ன சொல்றதுன்னு ரொம்ப கவலைப்பட்டாராம்... இப்படி நிறைய இருக்கு... கொஞ்சம் கொஞ்சமா பாத்தாத்தான் சுவராஸ்யம்.

இப்படி எழுதலாம்... எழுதணும்... எழுத வேண்டும் என்று மனசுக்குள் நிறைய தேங்கிக் கிடக்க... எழுத முடியாமல் இழுத்துக் கொண்டே போகக் காரணம் பின்னால் சொல்பவைதான் என்பதே உண்மை... கூடுதல் வேலைப்பளூ மனச்சோர்வை கொடுப்பதாலும்... நாம் எல்லாரும் வேண்டும் என்று மரியாதை வைத்திருக்கும் நபர்கள் எல்லாம் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுகிறார்களே என்ற நினைப்பின் நீங்கா வலியும்... நம்ம வளர்ச்சி கண்டு சந்தோஷப்பட வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய நெருங்கிய சொந்தங்கள் எப்படி வளர்கிறீர்கள் பார்ப்போம் என்று சவால் விடுவதை நினைத்து வெம்பும் மனதின் வேதனையும்... இன்னும் சில் வலிகளும் சேர்ந்து எழுத நினைப்பவைகளை அழித்து மறைக்கின்றன. நான் மேலே சொன்ன வலிகள் எல்லாம் நாங்கள் வீடு கட்ட அஸ்திவாரம் போட நினைக்கும் போது கட்டிடமாக வளர்ந்த வலிகள்... எவ்வளவு பேச்சுக்கள்... எத்தனை சவால்கள்... சாபங்கள்... இத்தனைக்கும் நானும் என் மனைவியும் எல்லாரும் வேண்டும் என்று நினைப்போமே தவிர யாரையும் தாழ்த்தியோ தூற்றியோ வாழப் பிடிக்காதவர்கள்... வாழ நினைக்காதவர்கள்.  சொந்தங்களின் சாபம் எங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை... அட ஏழு வயசு முதியவளிடம் சவால் விடுகிறார்கள் 50 வயதைக் கடந்த இந்தக் குழந்தைகள்.  இதை எங்க போய் சொல்றது?.

மனசின் பக்கம் இன்னும் சில பகிர்வுகளுடன் என்றாவது ஒரு நாள் தொடரும்...

-'பரிவை' சே.குமார்.
கூகிள் : படத்துக்கு நன்றி

வெள்ளி, 22 ஜூன், 2012

மழை நேரத்து வானம்


நேற்றிரவு ஆரம்பித்த மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. சற்று நேரம் அமைதி காப்பதும் பின்னர் சோவென்று அடித்துக் கொண்டு ஊத்துவதுமாக தொடர்கிறது. வீதியெல்லாம் வெள்ளக்காடாக தண்ணீர் நிற்கிறது. இந்த மழை தூறலாக ஆரம்பிக்கும் போதே முதலில் போவது கரண்ட்தான். நேற்றிரவு போனது இன்னும் வரவில்லை. நல்லவேளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் வேலைக்கு செல்ல வேண்டியதில்லை. இல்லையென்றால் இந்த மழையில் ரொம்ப சிரமப்பட வேண்டியிருந்திருக்கும். சை இந்த மழை எப்பத்தான் விடுமோ தெரியலை. வெயில் தாங்க முடியாமல் மழை வந்தா பரவாயில்லையின்னு நினைப்பு வரும். ஆனா மழை தொடர்ந்து பெய்தால் ஏன் தான் இந்த மழை வருதோன்னு நினைப்பு வர ஆரம்பிச்சிருது என்று மனசுக்குள் நினைத்தபடி கட்டிலில் படுத்திருந்தான் கணேசன்.

திவ்யா,  பிறந்த ஊர்க்  கல்யாணத்துக்கு நேற்றுப் போனவள் நாளைதான் வருவதாக சொல்லியிருந்தாள். இந்த நேரத்தில் அவள் இருந்தால் மழை நேரத்தில் சாப்பிடுவதற்கென்றெ சில பதார்த்தங்களை செய்து தருவாள். வேலைக்காரப் பெண் காலையில் வந்து தோசை வார்த்துக் கொடுத்து மதியத்துக்கும் சமைத்து வைத்துவிட்டு மாலை வருகிறேன் என்று சொன்னபோது இந்த மழையில் இனி நீ வரவேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். தண்ணீருக்குள் நீந்தி வரவேண்டியதில்லை என்பதில் அவளுக்கும் சந்தோஷம்தான்.

மழையின் சோவென்ற சப்த்தத்தை கேட்டபடி எவ்வளவு நேரம்தான் படுத்திருப்பது டிவி பார்க்கலாம் என்றால் கரண்டு வேறு இல்லை. பழைய புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் கொஞ்ச நேரத்தில் அவனுக்குப் புளித்துவிட்டது. உடனே அவனது புத்தகங்கள் அடுக்கியிருக்கும் செல்பை திறந்து கல்லூரியில் அவனுக்கு மற்ற நண்பர்கள் போட்டுக் கொடுத்த ஆட்டோகிராப் டைரியை எடுத்துப் படிக்கலானான். எத்தனை முறை படித்தாலும் நண்பர்களின் எழுத்துக்கள் அலுப்பதேயில்லை. ஒவ்வொரு பக்கமாக படித்துக் கொண்டே வந்தவன் ஒரு நண்பன் எழுதியிருந்ததைப் படித்ததும் சிரித்துக் கொண்டே 'ஆம் நண்பா நீ சொன்னது சரிதான்... நீதி நேர்மை என்று போனால் நடுவீதிதான்' என்று சத்தமாக சொல்லிக் கொண்டான்.

அடுத்த பக்கத்தை திருப்பியவன் நீண்ட பெருமூச்சை விட்டான். எங்கே இருக்கிறாய்? எப்படியிருக்கிறாய்?? மனசுக்குள் கேள்வி கேட்டான். எனக்குள் விதைத்து நீயே அறுத்துச் சென்றுவிட்டாயே நியாயமா? அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிக் கொண்டான். என் உயிரின் உறவே ஆரம்பத்திலேயே படிப்பவர்களுக்குப் புரிந்துவிடும் அவன் உயிர் அவளென்று... தொடர்ந்து படித்தவன் அப்படியே அந்தப் பக்கத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டு படுத்தான்.

அந்த உயிரின் உயிர் காயத்ரி கல்லூரியில் மூன்றாண்டுகள் அவனுக்குள் அழிந்திருந்தவள். இப்படியிருப்போம்... அப்படியிருப்போம்... என்றெல்லாம் பேசியவள்... ஏனோ தெரியவில்லை... கரைந்து போனாள். காயத்ரியுடனான காதல் திவ்யாவுக்கு தெரியும். பல முறை அவள் இந்தப் பக்கங்களைப் படித்து இருக்கிறாள். இதெல்லாம் இல்லையின்னா கல்லூரி வாழ்க்கையே வேஸ்ட்டுங்க என்று அவனுக்கு ஆதரவாக பேசுவாள். அவர்களுக்குள் சண்டை வந்தால் கூட தப்பித்தவறி நீ ஒருத்திய காதலிச்சவந்தானேன்னு சொல்லமாட்டா. அவனுக்கு கிடைத்த அருமையான மனைவி. இவள் கிடைக்கத்தான் அவள் விலகினாளோ என்று அவன் பலமுறை நினைத்திருக்கிறான்.

சூடா காப்பி போட்டு சாப்பிடலாம் என்ற போது அவனது செல்போன் கூப்பிட்டது. எடுத்து யாரென்று பார்த்தவன் மச்சான் என்பதை பார்த்ததும் "என்னடா மச்சான்?" என்றான்.

எதிர் முனையில் சுரேஷ், "மாப்ளே என்ன பண்றே... தனியாத்தானே இருக்கே?"

"ஆமா... போரடிக்குதுடா... கரண்ட் வேற இல்லை... உன் தங்கச்சி வேற ஊருக்குப் போயிருக்காளா தனியா குர்றான்னு உக்காந்திருக்கேன். இப்பத்தான் காபி போட்டு சாப்பிடலாமுன்னு நினைச்சேன்."

"பீச்சுக்கு ஒரு டிரைவ் போகலாமா?"

"என்னடா சொல்றே இந்த மழையில பீச்சுக்கா?"

"ஆமா... நம்ம ஆளு ஒருத்தி இருக்கா. பேமிலி பிகர்தான்... அவளோட ஜாலியா பீச்சுக்குப் பொயிட்டு எஞ்சாய் பண்ணிட்டு வரலாம்..."

"பொண்ணு கூடவா... அய்யய்யோ..."

"என்ன நொய்யய்யோ... நீ இதுக்கு முன்னால் ஜாலி ட்ரைவ் வந்ததில்லையாக்கும்"

"அ...அது கல்யாணத்துக்கு முன்னாடி... உந்தங்கச்சி வந்ததுக்கு அப்புறம் இது மாதிரி ட்ரைவ் எல்லாம் விட்டுட்டேன்ல்ல..."

"இப்பதான் தங்கச்சி இல்லையில்ல... மழை வேற கொட்டிக்கிட்டு இருக்கு... நாம ஒரு முறை மகாபலிபுரம் போனோம் பாரு... அது மாதிரி ஒரு சூப்பர் ட்ரைவ்... எனக்கு ரொம்ப குளோஸ் இந்தப் பொண்ணு... மேரேஜ் ஆனவதான்... அவ பிரண்டையும் கூட்டிக்கிட்டு வாறேன்னு சொன்னா... என்ன சொல்றே... சும்மா மழையில ஒரு ஜாலி... அவங்கள கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாறேன்... கிளம்பி இரு..."

"இல்லடா... நான் வரலை... நீ பொயிட்டு வா..." என்றபடி போனை கட் பண்ணினான்.

காபி போட்டவன் மனசுக்குள் நண்பன் சொன்னது டிக்காசனாக இறங்கியது. ஜாலி டிரைவ்... மகாபலிபுரம் போனது மாதிரி... ஆமா... அன்னைக்கு கூட வந்தது கிளாஸ்மேட் மல்லிகா, எஞ்சாய்ங்கிற வார்த்தைக்கு அன்னைக்குத்தான் அர்த்தமே புரிஞ்சது. அதுக்கப்புறம் அது மாதிரி ட்ரைவ் எதுவும் அமையலை. ஆனா இன்னைக்கு மறுபடியும்... யோசித்தான்... யோசனை அவனை வென்றது. போன் செய்து தானும் வருவதாக சொன்னான்.

வாசலில் காரை நிறுத்திக் கொண்டு சுரேஷ் மிஸ்டு கால் கொடுக்கவும் வேகவேகமாக் வீட்டை பூட்டிக்கொண்டு மழையில் ஒடிப்போய் காரின் முன்பக்கம் ஏறிக் கொண்டான்.

"என்னடா... ஆரம்பத்துல சாமியார் மாதிரி பேசினே... வெளக்கெண்ண... தங்கச்சியிருந்தா நாங்களே கூப்பிட்டிருக்க மாட்டோம்... சரி பின்னால பாரு... சிவப்பு சுடி மஞ்சு என்னோட பிரண்ட்... பக்கத்துல இருக்கது காயத்ரி... அவளோட பிரண்ட்... இது உன்னோட காயத்ரி இல்ல... இது வேற காயத்ரி..." சொன்ன சுரேஷ் பலமாக சிரித்தான்.

"ஹாய்" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

"என்ன சுரேஷ் உங்க பிரண்ட் பேச காசு கேப்பாரு போல..."

"அவன் கொஞ்சம் மூடிடி... கொஞ்ச நேரமானா சரியாயிடுவான்..." என்ற போது கணேசனின் செல்போன் அடித்தது.

"டேய் உந்தங்கச்சிடா"

"மஞ்சு யாரும் பேசாதீங்க... பேசுடா... இது எதையும் உளறிடாதே"

"ம்..." என்றபடி போனை ஆன் பண்ணினான்.

"என்னம்மா... என்ன பண்ணுறே?"

"இருக்கேன். நீங்க என்ன பண்ணுறீங்க... மழை விட்டிருக்கா?"

"எங்க விடுறது...பேய் மழை பேயுது..."

"வேலக்காரப் பொண்ணு வந்தாளா?"

"ம் வந்தா... காலையில தோசை, மத்தியானத்துக்கு சமைச்சு வச்சா... பாவம் இந்த மழையில இனி வர வேண்டான்னு சொல்லிட்டேன்."

"நீங்க என்ன செய்வீங்க... தோசை சுடுறேன்னு கை கால்ல சுட்டுக்குவீங்க... நம்ம பஞ்சண்ணன் கடை நம்பர் பிரிட்ஜ் மேல இருக்க டைரியில இருக்கு, போன் பண்ணி எதாவது டிபன் நைட்டுக்கு வாங்கிக்குங்க..."

"ம்..."

"வீட்லயா இருக்கீங்க...?"

"இல்ல... அது வந்து..."

"என்ன வந்து... எங்க இருக்கீங்க?"

"உங்க அண்ணன் கூட பீச்சுக்குப் போறேன்..."

"சுரேஷ் அண்ணன் கூடவா... இந்த மழையிலயா... சரியாப் போச்சு... சாதரண குளிர் காத்து வீசினால ஆயிரத்தெட்டு தும்மல்... இதுல... ஏங்க எதையாவது இழுத்துக்காதீங்க... நானும் பக்கத்துல இல்ல..."

"இல்லம்மா...சும்மா மழை நேரத்துல பீச்சு எப்படியிருக்குன்னு பாத்துட்டு அப்படியே..."

"நீங்க அண்ணங்கிட்ட போனை குடுங்க"

"இந்தாடா உங்கிட்ட பேசணுமாம்..."

"என்னம்மா... அப்பா அம்மால்லாம் நல்லாயிருக்காங்களா?"

"ம்... ஏண்ணே... அவரைப் பத்திதான் உங்களுக்கு தெரியுமே... சைனஸ் வேற இருக்கு... மழையில நனஞ்சு எதையும் இழுத்துக்கிட்டுறாமா.... பேசாம அவரை வீட்டுல விட்டுடுங்கண்ணா... ப்ளீஸ்"

"இல்லம்மா... வண்டியவிட்டு இறங்கமாட்டோம்..."

"அவருகிட்ட கொடுங்க..."

"ஏங்க கீழ இறங்காதீங்க... காத்தும் மழையுமா இருக்கு... அங்க ரோடெல்லாம் தண்ணியா கிடக்கும். எது குழி எது ரோடுன்னு தெரியாம இருக்கும்... இந்த நேரத்துல பீச்சுக்குப் போகலைன்னு யாரு அழுதா... நீங்க திரும்பி வீடு போற வரைக்கும் எனக்கு படக்குப் படக்குன்னு இருக்கும்... வீட்டுக்குப் போனதும் போன் பண்ணுங்க.... கீழ இறங்காதீங்க... வீட்டுக்குப் போனதும் கையில சுட்டுக்காம சுடுதண்ணி வச்சி அதை குடிங்க... இல்ல வேணாம்... கெட்லர் இருக்குல்ல அதுல தண்ணி சூடு பண்ணிக்கங்க... சரி வக்கிறேன். பாத்துப் போங்க..." திவ்யா போனை வைக்கவும்

"என்னடா தங்கச்சிக்கிட்ட வீட்டுல இருக்கேன்ன்னு சொல்ல வேண்டியதுதானே... எரும..."

"இல்லடா அவகிட்ட பொய் சொல்ல வராது..."

"அப்புறம் நாங்க கூட இருக்கதை சொல்லலை... மறைக்கிறதும் பொய்தானே..." என்றாள் மஞ்சு.

"அது..."

"ஏய்... அவன வாறாதே... அவன் கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப நல்லபுள்ள..."

"உங்க பிரண்ட பின்னால வரச்சொல்லுங்க... அந்த நல்ல புள்ளய பாப்போம்."

"பின்னால போறியாடா..."

"வேண்டாம்... போடா..."

சிறுது நேரத்தில் அவனது செல்பேசி மீண்டும் அழைக்க... "அப்பா... தங்கச்சியாத்தான் இருக்கும்... வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன்... போனதும் போன் பண்ணுறேன்னு சொல்லு... இப்ப பேசுனதோட பீச்சு பொயிட்டு வாற வரைக்கும் போன ஆப்பண்ணிப் போடு..."

"சரி இருடா... சத்தம் போடாம இருங்க..." என்றபடி போனை ஆன் செய்து "என்னம்மா... நீதான் சொல்லிட்டியல்ல... உங்க அண்ணன் கூடத்தான் வந்திருக்கேன். நீ சொன்ன பின்னால நான் இறங்க நினைச்சாலும் அவன் இறங்க விடமாட்டான். சும்மா ஒரு ரவுண்ட் பொயிட்டு மழை நேர பீச்சைப் பாத்துட்டு அப்படியே திரும்பிடுவோம்... நீ பயப்படாம இரு... வீட்டுக்கு வந்ததும் உனக்கு கூப்பிடுறேன். ஓகே... " என்றபடி போனை வைத்தவன்

என்ன நினைத்தானோ தெரியவில்லை. "மச்சான் ஒரு பஸ் ஸ்டாப் ஓரமா நிப்பாட்டு நான் பஸ் இல்லேன்னா ஆட்டோவுல வீட்டுக்குப் போய்க்கிறேன். நீங்க பீச்சுக்குப் பொயிட்டு வாங்க" என்றான்.

"என்ன மச்சான்... என்னடா ஆச்சு..."

"இல்லடா... ஏதோ பழைய சபலத்துல வந்துட்டேன்... உன் தங்கச்சிக்கு உயிரெல்லாம் இங்கதான் இருக்கும்... நான் வீடு திரும்பிப் போற வரைக்கும் அவ ஆயிரம் போன் பண்ணீருவா... எத்தனை சாமிக்கு நேர்த்திக்கடன் வச்சாளோ தெரியாது... கர்ப்பமா இருக்க அவ படபடப்போட டென்சனாவே இருப்பா... கல்யாணம் ஆகி இந்த ஆறு மாசத்துல அவ அப்பா, அம்மா எல்லாம் ரெண்டாம்பட்சமாயாச்சு... நாந்தான் அவளுக்கு உலகம். இன்னைக்கு ஒரு நாள் சந்தோஷத்துக்காக அவகிட்ட பொய் சொல்லிட்டு அவ கூட இருக்க ஒவ்வொரு நிமிசமும் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு புழுங்கணும். வேண்டான்டா... அவ ஊருக்குப் பொயிட்டு நான் ஒரு போன் பண்ணினதுதான்... ஆனா அவ எத்தனை தடவ பண்ணியிருப்பா தெரியுமா... எனக்குள்ள இருந்த ஜாலி ட்ரிப் ஆசை இன்னையோட செத்திருச்சிடா... சாரிடா... என்னய இங்கயே எறக்கிவிடு... இனி மழையில நனஞ்சாலும் எனக்கு ஒண்ணும் ஆகாது." என்ற அவனது பேச்சில் மனைவியின் நேசம் மறைக்காமல் தெரிந்தது.

-'பரிவை' சே.குமார்
கூகிள் : படத்துக்கு நன்றி

திங்கள், 11 ஜூன், 2012

சுழலும் பூமிக்குள்...


வெயில் விட்டுச் சென்ற
வெக்கையை காற்றில் கரைத்து
கருமையை வசப்படுத்த
ஆரம்பிக்கும் இரவின் பயணத்தில்...

கூட்டுக்குள் குலவும் குயில்கள்...
எங்கோ அலறும் ஆந்தை...
சோத்துக்காய் வாசலில்
தெருவோர குழந்தைகள்...

அணைந்து விழிக்கும் மின்சாரம்...
அழுகும் சீரியல் மாமிகள்...
அடம் பிடிக்கும் குழந்தைகள்...
தண்ணீர் சொட்டும் தெருக்குழாய்...

எதையோ பார்த்து குலைத்தபடி
வீதியில் ஓடும் தெருநாய்கள்...
பந்து விளையாடும் பசங்க...
நொண்டி விளையாடும் பொண்ணுங்க...

இரவுப் போர்வையை விலக்கிப்
பார்க்கும் பௌர்ணமி...
தனிமை விரும்பும் பருவ மங்கை...

எதிர் வீட்டு தாவணிக்காக
தவமிருக்கும் இளைஞனின்
உதட்டு நெருப்பில் புகையும் சிகரெட்...

வீட்டுக் கணக்கு விவகாரத்தில்
விக்கித் தவிக்கும் குடும்பஸ்தன்...
இரை தேடி வரும் ஆட்டுக்காக
பேருந்து நிறுத்தத்தில் விலைமாது...

குடித்த சரக்கு குடலுக்குள்
எடுத்த வாந்தியாய் வார்த்தைகள்...
ரோட்டில் அலறும் ஹாரனைத்
தொடரும் அர்ச்சனைக் குரல்கள்...

சந்துக்குள் வந்து திரும்பும் சைக்கிளின்
வருகையை உணர்த்தும் ம்ணியோசை...
பாலுக்காக கன்றைத் தேடும்
தாய்ப்பசுவின் பாசக் குரல்...

டீக்கடையில் ராஜாவின் ராஜ்ஜியம்...
எங்கோ முயங்கும் உடல் மொழிகள்...
பாலுக்கு அழும் குழந்தை...
இன்னும் எல்லாம் கடந்து....

தொடரும் விடியலின் வாசலில்
பறவைகளின் ரீங்காரம்...
பால்காரனின் மணியோசை...
வாசல் தெளிக்கும் தண்ணீரிசை...

டீக்கடையில் அம்மன் பாடல்...
அம்மாவின் திருப்பள்ளி எழுச்சி...
என மீண்டும் தொடங்கி

அடுத்த இரவுக்கான பயணத்தை
களைப்பின்றி தொடர்கிறது
உறங்காத காலச்சக்கரம்...!
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 5 ஜூன், 2012

மூடு பனி - அதீதத்தில்

அதீதம் இதழில் வெளியாகும் இரண்டாவது சிறுகதை இது. இந்தக் கதையை வெளியிட்ட ஆசிரியர் குழுவிற்கும் நண்பர் எல்.கே அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்னைப் பற்றி, அதுவும் என் கல்வித் தந்தையின் பெயரோடு  சிறு குறிப்புடன் என் கதை வெளிவந்திருப்பதில் எல்லை இல்லா சந்தோஷம். அதீதம் ஆசிரியர் குழுவிற்கு சிரம் தாழ்ந்த நன்றி.

அதுவும் அப்பாதுரை, கோபால்கண்ணன் (மனவிழி - சத்ரியன்)  போன்ற மலைகளுடன் எனது கதையும் வெளியாகியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

இனி மூடுபனிக்குள் பயணிப்போம்.

ழைய அட்லஸ் சைக்கிள் வேலுச்சாமியின் மிதிக்கிணங்க ‘கீச்… கீச்…’ என்று தாளநயத்துடன் போய்க் கொண்டிருந்தது. ஆனால் எப்பவும் சைக்கிளை வேகமாக மிதிக்கும் அவர் இன்று வேண்டா வெறுப்பாக மிதித்துக் கொண்டிருந்தார். அதற்கும் காரணம் இருந்தது. அதை நினைக்கையில் நெஞ்சு தடக் தடக்கென்று எக்ஸ்பிரசாக மாற, வாய் ‘சை என்ன வாழ்க்கை … எவன் எவங்கிட்டயோ பேச்சு வாங்கி… நாறப்பொழப்பு பொழக்க வேண்டியிருக்கு…’ என்று தானாக முணுமுணுத்தது.

படபடப்பாக வரவும் சைக்கிளை விட்டு இறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு ரோட்டோரம் இருந்த வாகமரத்தடியில் ஒண்ணுக்கு இருந்துவிட்டு சொக்கலால் பீடியை பத்தவைத்து இழுத்ததும் கொஞ்சம் ஆசுவாசமாக இருப்பதுபோல் தோன்ற மீண்டும் சைக்கிளை மெதுவாக மிதிக்க ஆரம்பித்தார்.

சைக்கிள் முன்னால் செல்ல அவரின் மனசு மெல்ல பின்னால் சென்றது…

தொடர்ந்து வாசிக்க இந்த சுட்டியை தட்டுங்கள்.


-'பரிவை' சே.குமார்.