மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 31 டிசம்பர், 2018

சிறுகதை : கலங்காத குளத்தில் ஏன் கல்லெறியனும்..? - தேன்சிட்டு பொங்கல் மலர்

நண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களின் தேன்சிட்டு பொங்கல் மலரில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட நண்பருக்கும் ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.


(படத்தைப் பெரிதாக்கி கதையை வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க)







ண்பர் 'தளிர்' சுரேஷ் அவர்களின் தேன்சிட்டு மின்னிதழ் அச்சு இதழ் போல மிகச் சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது. ஒவ்வொரு பக்கத்திலும் அவரின் மெனக்கெடல் தொடர்கிறது. தேன்சிட்டு இதழ் மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. மகிழ்ச்சி... தேன்சிட்டு தன் பயணத்தை இன்னும் சிறப்பாய் தொடர வாழ்த்துக்கள்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

மனசு பேசுகிறது : அய்யப்ப பூஜையும் அன்பான சந்திப்பும்

ப்போதேனும் ஒரு விடுமுறை நாள் மகிழ்வுக்குறிய நாளாகிவிடும்... இங்கு அது அத்தி பூத்தாற்போல் கிடைப்பதுண்டு, ஏனென்றால் பெரும்பாலான விடுமுறை தினங்கள் அறைக்குள்ளேயே கழிந்துவிடும். பழைய அறையில் இருக்கும் வரை எப்போதேனும் குழும கூட்டங்கள், நட்புக்களின் வருகை என வெளியில் சென்றால்தான் உண்டு. புதிய அறைக்கு வந்தபின் அருகே நண்பர்களின் பூக்கடை இருப்பதால் பெரும்பாலான விடுமுறை தினங்களை மாலை நேர அரட்டை விழுங்கிக் கொள்கிறது.


கணிப்பொறி பழுதான பின் விடுமுறை தினங்கள் எல்லாம் வெறுமையான தினங்களாய்... வீட்டுக்குப் பேசும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களைக் கடத்துதல் என்பது மிகப்பெரிய விஷயமாகிவிட்டது. இரவெல்லாம் செல்போனில் படம் பார்க்கும் நண்பர்கள் மத்தியில் அரைமணி நேரம் செல்போனைப் பார்ப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. எப்போது கணிப்பொறி மீண்டும் உயிர்பெறும் என்பது தெரியாது. அதன் காரணமாகவே பூக்கடை முன் கராசார விவாதம் மணிக்கணக்கில் தொடர்கிறது.

எப்போதேனும் ஒரு விடுமுறை தினம் மகிழ்வுக்குறிய நாளாகிவிடும் என்றுதானே ஆரம்பித்தேன். அப்படியான விடுமுறை தினத்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அனுபவிக்க முடியாமல் செய்தது தொடரும் கால் வலி. 

பாரதி நட்புக்காக அமைப்பின் 'ஆனந்த ராகம்' நிகழ்வுக்கு வரச் சொல்லி அதன் தலைவர் இராமகிருஷ்ணன் அவர்கள் பலமுறை அழைத்திருந்தார். விழாவை ரசிக்கவும் சூப்பர் சிங்கர் வெற்றியாளரும் தற்போதைய சினிமாப் பாடகருமான திவாகரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. கால் வலியுடன் செல்வதென்பது இயலாத காரியம் என்பதால் ஆவலுக்கு அணைபோட்டு அறைக்குள் முடங்கிவிட்டேன்.

இந்த விழாவிற்குச் சில நண்பர்கள் வருவதாய் சொல்லியிருந்தார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் வரவில்லை என்பதை பின்னர் அறிந்தேன். துபாயில் இருந்து சில நண்பர்கள் வந்து சென்றிருக்கிறார்கள் சுவடு தெரியாமல்...  இந்தச் சுவட்டில் அபுதாபி நட்புக்கள் சிலரும் அடக்கமே.

அமீரக எழுத்தாளர்கள் குழுமத் தலைவர் ஆசிப் மீரான் அண்ணாச்சிதான் நிகழ்ச்சியின் தொகுப்பாளராய் இருந்தார் என்பதைப் பின்னர் அறிய முடிந்தது. நிகழ்வு மிகச் சிறப்பாக இருந்ததாகச் சொன்னார்கள். இராமகிருஷ்ணன் சாரும் மறுநாள் 'ஏன் வரவில்லை' எனக் கேட்டு நலம் விசாரித்தார். இந்தப் பண்பு எல்லாருக்கும் வருவதில்லை... நானும் அடக்கமே இதில்.

எப்போதேனும் ஒரு விடுமுறை தினம் மகிழ்வுக்குறிய நாளாகிவிடும்... மறுபடியுமான்னு நினைக்காதீங்க... உண்மையிலேயே இந்த வெள்ளி மகிழ்வுக்கு உரிய தினமாகத்தான் இருந்தது. இந்திய சமூக மையத்தில் (ISC) ஐயப்பன் பூஜை... இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்றிருக்கிறேன். இந்த முறை செல்லலாம் என்ற ஆவல். இரவெல்லாம் தூங்க முடியாத கால்வலிதான் ஆவலுக்கு முட்டுக்கட்டையாய் இருந்தது. இருந்தும் ஐய்யபனைத் தரிசிக்க வேண்டும் பிரச்சினைகளைக் கடக்க என முடிவெடுத்தேன்.

முதல்நாள் இரவே இராஜாராமுடன் பேசும் போது அதிகாலையில் வந்துவிடுவேன்... நீங்களும் வாங்க என்றார். அறை நண்பர் போகலாம் எனச் சொல்லியிருந்தார். காலையில் கேட்டபோது இரவு நீண்ட நேரம் தொடர்ந்த வாரவிடுமுறையின் காரணமாக பின்வாங்கிவிட்டார். 

எப்போதும் போல் அதிகாலைக் குளியல் முடித்து இராஜாராமுக்குப் போன் செய்து அவர் வந்ததை உறுதி செய்து கொண்டு மெல்ல நடந்து போய் பேருந்தைப் பிடித்து ISC-க்கு அருகில் இறங்கி இராஜாராமுடன் அவரின் உறவினரையும் வாசலியேயே சந்தித்து அளவளாவினோம்.

பின்னர் காலை சிற்றுண்டி ஐயப்ப பூஜையில்... கொஞ்ச நேரம் பூஜை நடந்த இடத்தில் அமர்ந்திருந்தோம். பின்னர் மேல்தளத்தில் சமையல் வேலை நடக்கும் இடத்தில் பணியிலிருந்த கிளினிங் கம்பெனி ஆட்களில் பலர் இராஜாராமின் உறவினர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் அங்கு சென்றோம். நீச்சல் குளம் அருகில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்... குளிர் எங்களை விரட்டத் துடித்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவுகள் சந்திப்பு எப்படியானதொரு மகிழ்வைக் கொடுக்கும் என்பதை அறிவோமல்லவா..? நாமும் அனுபவிப்பவர்கள்தானே... அப்படியான ஒரு நெகிழ்வான தருணத்தில் எல்லாருடைய மகிழ்ச்சியும் கண்களில் தெரிந்தது.

இன்றைய அவசர உலகத்தில் உறவுகள் சந்திப்பு என்பது மட்டுமல்ல கூடப் பிறந்தவர்கள் சந்திப்பு என்பது கூட அரிதாகிவிட்டது. அப்படியிருக்க, இந்தப் பாலை மண்ணில்... அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் உறவுகள் சந்திக்க இயலாத சூழலில் இது போன்ற நிகழ்வுகளே சந்திப்பதற்கான வாய்ப்பாய் அமைகின்றன அல்லவா..? 

அதுவும் அந்தக் கம்பெனி தன்னை ஐயப்ப பூஜையில் இணைத்துக் கொண்டதால் வருட முழுவதும் எங்கோ ஓரிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அந்த ஒருநாளில் எல்லாரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில் எத்தனை மகிழ்வாய் இருப்பார்கள் என்பது அவர்களின் நல விசாரிப்புக்களில் தெரிந்தது. அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்குள்... அது தனியொருவனாய் நின்ற என்னையும் தொத்திக் கொண்டது என்பதே உண்மை.

'கவிஞர்' பால்கரசும் வந்து சேர்ந்தார். எழுத்து, எழுத்தாளர்கள் என பேச்சு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் வரும் உறவுகளுடன் அவர்களின் நல விசாரிப்புக்கள்... ஊர்ப் பேச்சுக்கள் எனத் தொடர்ந்து கொண்டிருந்தது. 

இதற்கிடையே மீண்டும் கீழிறங்கி வரிசையில் நின்று ஐயப்ப தரிசனம் முடித்து மீண்டும் மொட்டைமாடி... உறவுகளின் குலாவல்... கதை, கவிதை, கட்டுரை, பிரபல எழுத்தாளர்கள் என பேச்சு தொடர்ந்து கொண்டேயிருந்தது.

மதிய உணவுக்கு டோக்கன் கொடுத்திருந்தார்கள்... ஆனால் டோக்கன் கேட்டு தொந்தரவு செய்யவில்லை என்றாலும் பெரும் கூட்டத்தில் திருமண வீட்டில் பந்திக்கு நிற்பது போல் நின்று ஒரு வழியாக மூன்றாவது பந்தியில் ராஜாராமும் பால்கரசும் சாப்பிட, நாலாவது பந்திதான் உனக்கானது என ஐயப்பன் சொன்னதால் சாப்பிட்டு அங்கிருந்து கீழிறங்கினோம். மிகச் சிறப்பான சைவ உணவை, வாழையில் சாப்பிடக் கொடுத்துத்தான் வைக்க வேண்டும். எங்களுக்குக் கொடுத்து வைத்திருந்தது. அங்கிருந்து பால்கரசுவின் காரில் கிளம்பினோம்.

அறைக்கு அருகில்... ஆஸ்தான பூக்கடைக்கு முன்னர் மீண்டும் தொடங்கியது பேச்சு... இலக்கிய ஆர்வமுள்ள நட்புக்களுடன் பேசுவதற்கு சொல்லவா வேண்டும்... அவர்கள் பேச... எப்பவும் போல் கேட்டுக் கொண்டிருந்தேன் நான். 

ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேச்சுத் தொடர்ந்தது. அதன் பின் பூக்கடையில் சில சாமான்கள் வாங்கிக் கொண்டு எங்களின் மாளிகையையும் பார்த்து அவர்கள் விடை பெற்ற பின்னர் கட்டிலில் அமர்ந்து காலை நீட்டினால் வலியின் கொடுமை மெல்ல மெல்ல உச்சம் பெற்றது... 

இன்று வரை வலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றாலும் நிறைவான தரிசனமும் அன்பான சந்திப்பும் அன்று பரிமாறப்பட்ட நெய் பாயாசம் போல் இனித்துக் கொண்டேயிருக்கிறது இன்னும் மனசுக்குள்.


திருவிழாக்களை எல்லாம் முன்னோர்கள் திட்டமின்றி ஏற்படுத்தவில்லை... எல்லாரும் கூடி மகிழ வேண்டும் என்பதே முக்கியமான காரணம். தற்போது வேலை, குடும்பம் என எல்லாரும் பிரிந்து கிடக்கிறோம்... இச்சூழலில் நல்லது, கெட்டதில் கலந்து கொள்வதென்பது கூட அரிதாகிவிட்டது. 

திருவிழாக்களில் கூடி மகிழ்தல் என்பது அத்திபூத்தாற்ப் போலாகிவிட்டது. திருவிழாவுக்கு என்னால் வரமுடியாது என்பதே இப்போது அதிகம் கேட்கும் வார்த்தையாகிவிட்டது. பெரும்பாலான கிராமங்களில் திருவிழாக்கள் பெரிசுகளின் கட்டாயத்தின் பேரில்தான் இன்னும் மரணிக்காமல் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் ஆட்களற்ற கிராமங்களில் திருவிழாக்களும் சிதைந்து போகும். சந்திப்புக்கள்... நல விசாரிப்புக்கள்... மகிழ்வான தருணங்கள் எல்லாமே காணாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதி.

தற்போது உறவு முறைகள் தெரியாது வளரும் தலைமுறை, கொஞ்சக் காலத்தில் திருவிழாக்களையும் அறியாமல்தான் வளரும் என்பதே உண்மை.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 27 டிசம்பர், 2018

சினிமா விமர்சனம் : கனா

Related image

னா

'ஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்' நாயகி ரமா,  தன் மகளின் ஆசைக்கு தான் போட்டு வைத்திருக்கும் முட்டுக்கட்டையை உடைக்கும் இடத்தில் சொல்வார். உண்மைதான்... எத்தனை தடைகள் வந்தாலும் உடைச்சி எறிஞ்சிட்டு தன்னோட ஆசையை, கனவை அடைந்தே தீருவேன் என அடம்பிடிக்கத் தெரியணும். அப்படி அடம்பிடித்து தன் இலக்கை அடைந்தாரா கௌசி.

'ஜெயிக்கிறேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது... ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்' என இந்தியாவுக்காக களம் இறங்கப்போகும் அந்நாளில் குடும்ப பிரச்சினைக்காக கனவை தூக்கியெறிய நினைக்கும் போது பயிற்சியாளராக வரும் சிவகார்த்திகேயன் சொல்வார். இது உண்மையான, எதார்த்த வரிதானே... இந்த அறிவுரையை ஏற்றாரா கௌசி.

'என் பொண்ணு தமிழ் நாட்டுக்காக மட்டுமில்லை... இந்தியாவுக்காகவும் விளையாடுவாய்யா... விளையாட வைப்பேன்...' எனக் கேலி செய்யும் ஊரார் முன் விவசாயி சத்யராஜ் சபதம் போடுகிறார். அந்தச் சபதத்தை நிறைவேற்றினாரா கௌசி.

'சித்தி அவ எங்கூடத்தானே விளையாடுறா...' என விளக்குமாற்றால் அடித்து இழுத்துச் செல்லும் ரமாவிடம் கேட்கும் அண்ணனும், அவளுக்கு விளையாடச் சொல்லிக் கொடுக்கும் ஊர் உறவுகளான அண்ணனின் நட்புக்களும் விரும்பியதைச் செய்தாளா கௌசி.

'சார் எங்கப்பா இந்தியா தோத்துப் போனதும் அழுதார் சார்... நான் விளையாண்டு ஜெயிச்சி அவரைச் சிரிக்க வைக்கணும் சார்' என பள்ளியில் விளையாட்டு ஆசிரியரிடம் சொன்னபடி தன் ஆசையை, கனவை நிறைவேற்றி அப்பாவைச் சிரிக்க வைத்தாளா கௌசி.

தன்னை ஒதுக்கும் வடக்குக்கு முன் திறமையைத் தொலைக்காமல் அடித்து ஆடி களம் கண்டு தெற்கைத் தலை நிமிர வைத்தாளா கௌசி.

வயசுக்கு வந்த புள்ளயா லட்சணமா நடக்கத் தெரியிதா என முதுகுக்குப் பின்னே பேசும் ஊர்க்காரர்களுக்கு தன் லட்சணத்தை உயர்த்திக் காட்டினாளா கௌசி.

'பொட்டச்சிக்கிட்டயாடா அவுட்டானே' என்பவனிடம் 'நான் பார்த்ததை நீ பார்த்திருக்கணும்' என்று சொல்ல, களத்தில் இறங்கியவன்  'ஆமாடா பந்து ஆடி ஆடி வருதுடா'ன்னு சொல்ல அதன்பின்  அடிதடி, கலவரமென உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிப் பிரச்சினை காவல் நிலையம் செல்வதாய் ஆரம்பிக்கும் கதையில் தன்னைக் கேவலமாய்ப் பேசியவர்களுக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பதில் சொன்னாளா கௌசி.

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவங்களுக்குத்தான் தெரியும்... அங்கிருக்கும் பெண்களின் நிலை. இன்று கிராமங்களில் இருந்து பெரும்பாலான குடும்பங்கள் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டன. பெண்களும் கூட கிராமிய சூழலில் வளர்வதென்பது வெகுவாகக் குறைந்து விட்டது. அப்படி வளரும் பெண் சாதிக்கத் துடிக்கும் போது வந்து விழும் வார்த்தைகளை அனுபவித்த பெண்ணான கௌசி சாதித்தாளா..?

Image result for kanaa movie images

வயசுக்கு வந்தால்தான் என்றில்லை ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல் பசங்களுடன் விளையாடினால் 'ஏய்... வர்றியா.. வரவா...' என்ற குரல் வீட்டிலிருந்து கிளம்பி வரும். 'பொட்டச்சிக்கு பயலுகளோட என்ன விளையாட்டு' என்றும் 'உம்மவளக் கண்டிச்சி வையி... ஆம்பளப் புள்ளயளோட ஜோடி போட்டுச் சுத்துறா' என்றும் 'அடக்க ஒடுக்கமா இருடி..' என்றும் எத்தனையோ வார்த்தைகள் வசவுகளுடன் வந்து விழும். இதுதான் கிராமத்தின் உண்மையான பக்கம்... அதை அப்படியே காட்டியிருக்கிறார் இயக்குநர்.

'கனா'வில் கிரிக்கெட்டும் விவசாயமும் இணைத்துப் பேசப்படுகிறது. விவசாயம் சம்பந்தமாக கொஞ்சம் அதிகமாகப் போயிருக்கிறார்கள் என்றாலும் கதையே இல்லாமல் 'மாஸ்' காட்டாமல் அதைப் பேசியிருக்கிறார்களே அதுவும் சோறு போடும் விவசாயம் குறித்து கோடிகளில் புரளும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதையில் பேசியிருக்கிறார்களே... அதற்காக இயக்குநர் அருண்ராஜ் காமராஜைப் பாராட்டலாம்.

சில காட்சிகள் முரண் என்றாலும் முழுதாய்ப் பார்த்து முடிக்கும் போது முரணைப் புறந்தள்ளி 'ஜெயிச்சிட்டாடா கௌசி' என ஆரிப்பரிக்கிறது கண்ணீர்.

எத்தனையோ படங்களில் கிரிக்கெட் போட்டி பார்த்திருக்கிறோம்... பந்தை எல்லைக்கோட்டில் உருட்டி விட்டு நாலு என்பார்கள். தூக்கிப் போட்டு ஆறு என்பார்கள் ஆனால் இதில் அந்த மைதானக் காட்சிகளை நாம் நேரடியாகக் கிரிக்கெட் பார்ப்பது போல் மிகவும் பரபரப்பாக... 'ஆப் சைட்... ஆப்சைட் போடாதே... பின்னால போடு' என செமத்தியாகக் கொடுத்திருக்கிறார்கள். எடிட்டர் ரூபன் பாராட்டுக்குறியவர்.

விவசாயி முருகேசனாக சத்தியராஜ்... வானம் பார்த்த பூமியின் கிராமத்து விவசாயியாக வலம் வருகிறார். அப்பா செத்துக் கிடக்கும் போதும் ஸ்கோர் பார்க்கும் கிரிக்கெட் பைத்தியம் (இது கொஞ்சம் ஓவர்தான், செத்த வீட்டுல எங்கய்யா டிவி போடுவானுங்க... அதுவும் கிராமத்தில்). 

படிக்கும் காலத்தில்... கணிப்பொறி மையம் வைத்திருக்கும் போது நாங்களும் அப்படித்தான் திரிந்தோம். அபுதாபி வந்தும் இந்தியா - பாகிஸ்தான் உலககோப்பை போட்டி அன்று லெபனானி மேனேஜரிடம் கேட்டு விடுப்பு வாங்கிச் சென்று மேட்ச் பாத்தவங்கதான் என்றாலும் இப்போது கிரிக்கெட் மீதான பாசம் குஷ்பு, சிம்ரன் மீதான பாசம் போல அடியோடு குறைந்து விட்டது. ஆனா முருகேசன் இந்த வயசுலயும் பைத்தியமா இருக்காரு எங்கப்பா போல.... ஆமா இப்பவும் கிரிக்கெட்டுன்னா டிவிக்கு முன்னாலதானே கிடக்கிறார்.

கௌசி.... 

ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு இறுதி வரை 'கௌசி'யாத்தான் தெரிந்தார்.

என்ன நடிப்பு... ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக வாழ்தல் என்பது எளிதல்ல... தோல்வி, துரோகம், எள்ளல், என எல்லாவற்றையும் சுமந்து வைராக்கியத்தோடு முன்னேறி இந்தியாவுக்காக களம் இறங்கும் வரை... இல்லையில்லை விவசாயத்தையும் கிரிக்கெட்டையும் இணைத்துப் பேசுவது வரை கௌசி... கௌசிதான். 

ஒவ்வொரு படத்திலும் தன் திறமையை நிருபித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா, கனாவை தன் திறமையால் தனியே சுமந்திருக்கிறார். இது அவரது சினிமாப் பயணத்தில் மகுடம்...  ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்புத் தெரிகிறது. கடுமையான உழைப்பின் களைப்பை வெற்றி போக்கியிருக்கிறது.

இவரை 'பொம்பள விஜய் சேதுபதி'ன்னும் சொல்லலாம். ஆனா நல்லவரு வல்லவருன்னு ஒரு காலத்துல 'தல'யைச் சொன்ன மாதிரி கொஞ்ச நாளா இணையமெல்லாம் வி.சேயைப் புகழ ஆரம்பிக்கிறாங்க... எங்கிட்டுப் பார்த்தாலும் அவருதான்... சீதக்காதி இதுல மயங்கினாருன்னா அமுக்கிப் போட்டு சோலியை முடிச்சிடுவானுங்க.. சூதனமா அவரு இருக்கணும்... புகழ் போதை பொல்லாதது என்பதை உணர்ந்து வல்லவரு நல்லவரை விட்டு வெளியே வர வேண்டிய நேரமிது அவருக்கு. ஐஸ்வர்யா இன்னும் தொடரட்டும் தனது எதார்த்த, போராட்ட நடிப்பை... அதுவே மற்றவர்களிடம் இருந்து அவரைத் தனித்துக் காட்டும்.

எப்பவுமே பிடிக்காத சிவகார்த்திகேயனை இதில் பிடித்தது.. காமெடி செய்கிறேன் பேர்வழி என சூரியுடன் மொக்கை போடாமல் தனித்த பயிற்சியாளராய் பண்பட்ட நடிப்பு.

Actress Aishwarya Rajesh in Kanaa Movie Photos HD

உர வியாபாரி இளவரசு... மகளைக் கண்டிக்கும் கிராமத்து அம்மாவாக ரமா, கௌசியை ஒரு தலையாகக் காதலிக்கும் புதுமுகம் தர்ஷன், அவரின் நண்பர்கள், கிரிக்கெட் சொல்லிக் கொடுக்கும் ஊர் பசங்க, இன்ஸ்பெக்டராக வரும் ராமதாஸ் என எல்லாருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் இசை அருமை... பாடல்கள் நல்லாயிருக்கு... இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் பின்னணி இசையில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். அதுவும் கிரிக்கெட் போட்டிக் காட்சியில் தூள்... பதற்றத்தை நம்முள் பத்த வைக்கிறார். அனிருத் போல பாத்திரங்களை உருட்டவில்லை என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

முதல் படத்தில் விளையாட்டை மையமாக்கி விவசாயம் பற்றி பேசியிருப்பதற்கு தாராளமாக வாழ்த்துச் சொல்லலாம் இனியும் தரமான படங்களைக் கொடுங்கள் என்ற விண்ணப்பத்தோடு. 'அவனுக்கு எங்கயோ மச்சமிருக்கு'ன்னு யாரேனும் உங்கள் வெற்றி குறித்துச் சொன்னால் மயங்கி விடாதீர்கள் அருண்ராஜ்.

இப்படி ஒரு படத்தை எடுத்து தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், இன்னும் நல்ல படங்களைக் கொடுக்கட்டும். 

கனா - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்... அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

கணிப்பொறி இல்லாதது... கால் வலி குறையாதது என பாதிக்கப்பட்டிருந்தாலும் வேலையில்லாத நேரத்தில் ஏதேனும் எழுதலாமேயென அலுவலகத்தில் பொழுது போகாமல் தட்டச்சிய பதிவு இது என்பதை எல்லாருக்கும் முகநூலில் லைக் போடுறே, பதிவு எழுதுறே கேட்டா வீட்டில் கணிப்பொறி இல்லை, கால் வலிங்கிறேன்னு சொல்லி கோபப்படும் உறவுகளுக்காகவே இங்கு சொல்லிவிட வேண்டுமல்லவா. அப்புறம் அலுவலகத்தில் இதையெல்லாம் செய்யாதே என அட்வைஸ் பண்ண நினைத்தால் வேலையில்லாம 10 மணி நேரம் என்னய்யா செய்யிறது என்பதே என் பதிலாய் வரும்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 20 டிசம்பர், 2018

மனசு பேசுகிறது : கரும்புனல்

Image result for கரும்புனல்

ரும்புனல்

ராம்சுரேஷ் அவர்களின் கரும்புனல் நாவல் நிலக்கரி சுரங்கத்தின் கருப்புப் பக்கங்களை... நாம் அறிந்திராத அரசியலை... படிப்பறிவில்லாத மக்களின் வலியை... எந்த வித சமரசமும் இல்லாமல் பேசியிருக்கிறது. 

ஆரம்பம் முதல் இறுதிவரை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலோடும் அந்த மக்களுக்கு என்ன ஆகுமோ என்ற பதட்டத்தோடும் பயணிக்க வைக்கும் எழுத்து நடை.

மிகச் சிறந்த எழுத்தாளராய் வரவேண்டியவர் ஏன் அமீரகத்தில்  'பினாத்தல்' சுரேஷ் என தன்னைச் சுருக்கிக் கொண்டு ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டார் அல்லது தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டார் என்பதுதான் புரியவில்லை. அண்ணே அந்த வட்டத்தை விட்டு வெளியே வாங்கண்ணே... நீங்க போட்டுக் கொண்ட வட்டம் உங்கள் பாதையில் பயணிக்க விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்... உங்களிடமிருந்து இன்னும் நிறைய நாவலை எதிர்பார்க்கிறோம்.

வட மாநில அதிகாரிகளின் வெறிக்குப் பலியாடாய்ப் போகிறான் கோல் இந்தியா லீகல் ஆபீசர் சந்திரசேகர் என்ற சந்துரு.

நிலக்கரி சுரங்கத்துக்காக ஆதிவாசிகள் வாழும் உச்சிடி என்ற ஒரு கிராமத்தையே எடுத்துக் கொள்ள நினைக்கும் சாஹல் கோல்மைன்... அதற்கென இழப்பீடு தொகையாய் சில ஆயிரங்களை மக்களுக்குக் கொடுக்க நினைக்கிறது. மக்களோ வீட்டில் ஒருவருக்கு வேலை, இழப்பீட்டுத் தொகை மற்றும் பசுமை நிறைந்த ஜிர்க்கி என்னும் கிராமத்தில் இடம் என்ற மூன்று கோரிக்கைகளை வைக்கிறார்கள். 

ஆனால் அவர்களின் கோரிக்கையில் இரண்டை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லும் அரசு, அதற்கான முயற்சியில் மட்டும் இறங்காமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. காரணம் என்ன என யோசிக்கவே வேண்டியதில்லை... இதில்தான் ஒட்டு மொத்த அரசியலும் அடங்கியிருக்கிறது. அதைத்தான் நாவலும் பேசுகிறது.

ஆதிவாசி மக்களிடம் பேசுவதே தீண்டாமை என்று நினைக்கும் அதிகாரிகள் வர்மா, பானர்ஜி, சட்டர்ஜி என. அந்த மக்களிடம் பேசுவதற்கு என்றே வக்கீலான சந்திரசேகர் அனுப்பப்படுகிறார். அவருக்கு முதல் பார்வையிலேயே உச்சிடி நீலக்கண் தீபா மேல் காதல்... காதல் என்பது ஊறுகாய் போலத்தான்... கதை பேசுவது நிலக்கரிச் சுரங்கத்தையே.

தீபா... இவள் உச்சிடியில் பிறந்து கோயம்புத்தூரில் டிகிரி முடித்தவள். தங்கள் ஊரை எடுத்துக் கொள்ள நினைக்கும் அரசுக்கு எதிராக தாங்கள் கேட்கும் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களுக்காக... மக்களை ஒருங்கிணைத்துப் போராடும் லோபோவின் முறைப்பெண். இவளும் போராளியே. முரட்டுத்தனமில்லாமல் போராட வேண்டும் என்று நினைப்பவள். சந்துருவை கணவனாக அடைய நினைப்பவள்.

லோபோ... குடிகாரன்... முரடன்... மக்களுக்காகப் போராடுபவன். தீபாவின் பேச்சுக்கு அடிபணிபவன்... அரசு அதிகாரிகளை வெறுப்பவன்... இவனை வழக்கில் மாட்ட வைத்து தங்கள் காரியத்தை முடிக்க நினைக்கும் அதிகாரிகளை கருவறுக்கிறான் இறுதியில்... மாவோயிஸ்ட் தீவிரவாதியாக...

எந்த ஊர் என்றாலும் நல்லது செய்ய நாலு பேர் இருந்தால் தூக்கிப் போடும் பிஸ்கெட்டுக்கு வாலாட்டும் ஒருவன் இருக்கத்தான் செய்வான். அப்படி ஒரு கிழவன் இருக்கிறான் உச்சிடியில்... எல்லாரும் ஜிர்க்கி போக, இவன் மட்டும் வேறு இடம் போகிறான் அரசின் உதவியுடன்.

போட்டிருக்கும் சட்டையெல்லாம் கருப்புப் பொடியா இருக்கேன்னு உதறிப்போட்டா மறுபடியும் பொடி படியத்தானே செய்யும்... இந்தக் கருப்பு உதறினால் போகக்கூடியதா என்ன...? அப்படியான கருப்புப் பிடித்த அதிகாரிகள்... அவர்களின் குறுக்குப் புத்திகள்... தாங்கள் நினைத்ததைச் சாதிக்க நடத்தும் குள்ளநரி நாடங்கள் என விரிகிறது நிலக்கரிச் சுரங்கத்தின் புகை கரும்புனலாய்...

டீசல் திருடும் போலீஸ் எதிர்த்துக் கேட்டவன் மீது வழக்குத் தொடுப்பதும்... ரோட்டில் நடந்து செல்லும் சந்துருவை சந்தேகப்பட்டு பிடித்து வருவதும்... அதன் பின்னான போராட்டங்கள்... போலீஸ் நிலைய எரிப்பு... போலீசார் மரணம் என கதை விரியும் போது தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று தோன்றுவதை கரும்புனலை வாசிக்க நேர்ந்தால் உணர்வீர்கள்.

ஜார்க்கண்ட் உருவாவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகள்தான் காட்சியாய் விரிகிறது. கிராமத்துக்கு கீழே இருக்கும் சுரங்கத்துக்குள் சந்துரு போகும் போது அவனுக்கும் அவனைக் கூட்டிச் செல்லும் நண்பனுக்குமான உரையாடலில் நமக்குத் தெரியாத நிறைய விஷயங்களை அறிய முடியும். 

வேலை தருவதாகச் சொல்லி நூறு கிலோமீட்டருக்கு அப்பால் டீக்குடுக்க, தண்ணீர்க் கொடுக்க... என வேலை கொடுப்பதையும்... இடம் தருவதாகச் சொல்லி ஒண்ணத்துக்கும் உதவாத மலையடிவார பாறை நிலங்களைக் கொடுப்பதையும் கதை வழியே நம்மிடம் சொல்லிச் செல்கிறார். நாமும் வாசிக்கிறோம் வலியுடனும் மலை உச்சியில் டீக்கடை வைத்து 50 பைசாவுக்கு டீக்கொடுக்கும் கிழவனின் மனநிலையுடனும்.

ஒரு கிராமத்தை அழிக்க ஓடும் ஆற்று நீரை அரசு அதிகாரிகளால் நிறுத்தி வைக்க முடியும் என்பதையும் நிலக்கரி சுரங்க அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை எல்லாம் செயல்படுத்துவார்கள் என்பதையும் படிக்கப் படிக்க இப்படியும் மனிதர்களா... இப்படியெல்லாம் செய்வார்களா என்று யோசிக்க வைத்ததுடன் சக மனிதனை மனிதனாகப் பார்க்காதவர்களை நினைத்து வருத்த வைத்தது.

இறுதிப் பக்கங்களை திக்... திக்... மனதோடுதான் வாசிக்க முடியும். அழிவும் அதன் பின்னான வன்முறைகளும் பதைபதைக்க வைக்கிறது. 

தீபா - சந்துரு காதல் கதையின் போக்கில் சினிமாத்தனம் என்றாலும் அந்த நீலக்கண்கள் பிழைத்துப் போகட்டும் என சொல்லி கண்ணீரோடு இறங்கும் போது சில நிமிடங்கள் அப்படியே உறைந்து உட்கார வைத்து விட்டது.

மாவோயிஸ்ட் எப்படி உருவாகிறார்கள்... உருவாக்கப்படுகிறார்கள் என்பதையும் கதை சொல்லிச் செல்கிறது.

பலரின் அரசியல் பசிக்கு... கோடிகளை சுருட்டுவதற்கு... சந்துரு என்னும் அப்பாவி பலியாடாக்கப்படுகிறான். அவனின் பார்வையிலேயே கதை விரிந்தாலும் இறுதிவரை அவன் நாயகனாக நிறுத்தப்படவில்லை. கதையில் போக்கில் எல்லாருமே சிறப்பான இடத்தைத்தான் பிடிக்கிறார்கள் கமல் பட கதாபாத்திரங்களைப் போல.

சுரேஷ் அண்ணா... ஒரே ஒரு வேண்டுகோள் நீங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும் நிலக்கரி அரசியல் குறித்து... இதில் விரிவாகச் சொல்லக் களமில்லை என்றாலும் நிறைவாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

நண்பர்களே... முடிந்தால் அல்ல விருப்பத்துடன் கரும்புனலை வாசிக்க முயலுங்கள். ஒரு வித்தியாசமான நாவலை வாசித்த அனுபவம் கிடைக்கும்.

நிலக்கரி சுரங்கத்துக்குள் பயணித்த அனுபவத்தையும் ஒரு கிராமம் அரசியலுக்காகவும் தங்கள் வருமானத்துக்காகவும் எப்படி அழிக்கப்படுகிறது என்ற 'பய'ங்கர அனுபவத்தையும் ஒரு சேரப் பெறலாம் 'கரும்புனல்' என்னும் அருமையானதொரு நாவலை வாசிக்கும் போது. 

அவரின் அடுத்தடுத்த நாவல்களும் வாசித்தேன் செமையா இருந்தன... 

அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

லாப்டாப் உறங்கி ஒரு மாதத்துக்கு மேலாச்சு... கையில் இப்போது சிஸ்டம் இல்லை... அலுவலகத்தில் மாலை வேலையில்லாத போது வேகமாய் தட்டச்சியது. தவறுகள் இருந்தால் பொறுத்தருள்க.

கரும்புனல் 
வம்சி பதிப்பகம்
விலை : 170 ரூபாய் 
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

சிறுகதை : சன்னலோரம்

முத்துக்கமலம் இணைய இதழில் தீபாவளி புதுப்பித்தல் பகுதியில் வெளியான எனது சிறுகதை. 

நன்றி முத்துக்கமலம் ஆசிரியர் குழு.

முத்துக்கமலத்தில் வாசிக்க 'சன்னலோரம்'

****
Related image
திருச்சி செல்லும் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனக்கு எப்பவுமே இருவர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்து பயணிப்பது மட்டுமே பிடிக்கும். பெரும்பாலும் வேலை நிமித்தமாக நான் அடிக்கடி நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் எப்பவுமே என்னோட சாய்ஸ் சன்னலோர இருக்கைதான்... லேசா சன்னலைத் திறந்து வைத்தால் முகத்தில் அடிக்கும் காற்று... கடந்து செல்லும் அசையும் அசையாப் பொருட்கள்... மனிதர்கள்... என ரசிப்போடும்... களிப்போடும் பயணிப்பதில் ஆர்வம் அதிகம்.

சில நேரங்களில் இருவர் அமரும் சீட்டில் சன்னலோரம் அமர்ந்த பின்னர் நம்மருகில் யாருமே அமர மாட்டார்கள். அப்போதெல்லாம் எங்கே நம்மை எழச் சொல்லி விடுவார்களோ என்ற நினைப்போடு பேருந்துக்கு உள்ளே பார்ப்பதைத் தவிர்த்து வெளியில் விழிகளை ஓட்டுவேன்.

எனக்குப் பிடித்தது சன்னலோர இருக்கை அதை யாரோ ஒருவருக்கு விட்டுக் கொடுத்துட்டு உள்ளிருக்கையில் அமர்ந்து கூட்ட நெரிசலில் அழுக்கப்பட்டு... அழுத்தப்பட்டு... பிழிந்து எடுக்கப்பட்டு... பின்னர் கசங்கிய சட்டையோடும் உடலோடும் இறங்குவதில் எனக்கு எப்பவும் விருப்பம் இருந்ததில்லை.

இப்படித்தான் ஒருமுறை மதுரைக்குச் செல்லக் காரைக்குடியில் ஏறினேன். பேருந்துக்குள் ஏறியதும் இருக்கைகளைப் பார்த்து முன் சக்கரத்துக்கும் பின் சக்கரத்துக்கும் இடையிலான இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன். 

பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை என்றாலும் பெரும்பாலான சன்னல் இருக்கையை ஆண்களும் பெண்களும் ஆக்கிரமித்து இருந்தார்கள். அப்போது ஒரு இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி ஏறினாள். சுற்றும் முற்றும் பார்த்தவள் நேராக என் இருக்கை அருகே வந்து 'எக்ஸ்கியூஸ் மீ...' என்றாள். நானோ அப்போதுதான் மொபைலில் முக்கியமாய் எதையோ தேடுவது போல் நோண்டிக் கொண்டிருந்தேன். அவள் மீண்டும் 'எக்ஸ்கியூஸ் மீ சார்... உங்களைத்தான்' என்றாள்.

"என்னையா...? உங்களுக்கு என்ன வேணும்...?" என்று அவளை அண்ணாந்து பார்த்துக் கேட்டேன்.

"நீங்க கொஞ்சம் மாறி உக்காரமுடியுமா...?" என்றாள்.

"மாறி உக்காரணுமா..? ஏன்..? பஸ்ல சீட் இல்லையா?" எழுந்த கோபத்தை அடக்கியபடி கேட்டேன்.

"இப்படி எல்லாச் சீட்டுலயும் ஒவ்வொரு ஆளா உக்காந்துக்கிட்டா வர்றவங்க எங்க உக்கார்றதாம்..."

நான் என் மடியைப் பார்த்தேன்... உடனே அவள் என்னைப் பார்த்து முறைத்தாள்.

"மேடம் பஸ்ல இடமில்லைன்னா பரவாயில்லை... அதான் நிறைய சீட் காலியாத்தானே இருக்கு... முன்னாடி மூணு பேர் அமர்ற இருக்கையில எல்லாம் ரெண்டு பேர்தானே இருக்காங்க... அங்க போயி உக்காருங்க... அதென்ன குறிப்பா.. என்னமோ நீங்க சீட் போட்டிருந்து அதுல நான் உக்காந்த மாதிரி எங்கிட்ட வந்து நிக்கிறீங்க.. அப்படி சன்னலோர சீட்டுதான் வேணுமின்னா... கண்டக்டருக்கிட்ட போயி கேளுங்க..." என்று சொல்லிவிட்டு மீண்டும் மொபைலை நோண்ட ஆரம்பித்தேன்.

சிறிது நேரத்தில் கண்டக்டர் என் அருகில் வந்து "சார்... கொஞ்சம் மாறி உக்காருங்க " என்றார்.

"எதுக்கு சார்... நான் காசு கொடுத்துத்தானே பயணிக்கிறேன்... எனக்கு எந்த இருக்கை வேணுமோ அதில் பயணிக்க உரிமை இருக்கா இல்லையா... அதுக்காக ஒரு இடத்தைப் பிடிச்சி... அதுல உக்காந்த பின்னால யாரோ ஒருவருக்காக நான் ஏன் இடம் மாறனும்... அப்படி எதுவும் ரூல்ஸ் வச்சிருக்கீங்களா...? மாறி உக்காந்தா டிக்கெட் ரேட்ல டிஸ்கவுண்ட் தருவீங்களா..?" என்றேன்.

"சார்... விதண்டவாதம் பேசாதீங்க... எல்லா சீட்டுலயும் ஒவ்வொரு ஆளா உக்காந்தா எப்படி சார்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க சார்..."

"அது சரி... இந்த சீட்ல பயணம் செய்யலாம் அப்படின்னு ஒரு மனநிலைக்கு வந்த பின்னால இப்ப ஏறிக்கிட்டு இடமாறி உக்காரச் சொல்றவங்களுக்கு முன்னுரிமையின்னா நான் எதுக்கு பதினைந்து நிமிடமா உங்க பேருந்துல ஏறி உக்காந்திருக்கணும்... கிளம்பும் போது ஏறி இருக்கலாமே... இதே ஒரு பொம்பளை உக்காந்திருந்து நான் வந்து மாறி உக்காருங்கன்னு சொன்னா விட்டிருப்பாங்களா... நீங்க கூட மாறி உக்காரச் சொல்லுவீங்களா...? ஏன் பஸ்ல இருக்கவங்களே இவ்வளவு இடம் கிடக்கையில நீங்க ஏன் சார் அங்க போயி நிக்கிறீங்கன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க..."

"என்ன சார் படிச்ச நீங்களே இப்படிப் பேசுறீங்க... பாருங்க... நிறைய லேடீஸ் ஏறுறாங்க... ஜென்ஸ் ஒவ்வொரு ஆளா உக்காந்திருந்தா அவங்களை நான் எப்படி உக்கார வைக்கிறது சொல்லுங்க.... முன்னாடி இருக்கிற சீட்டுக்கு மாறுறதால உங்களுக்கு என்ன பிரச்சினை சார்..."

"ஓகே... சார்... நான் விரும்புற சீட்டுல பயணிக்கத்தான் எனக்கு விருப்பமே தவிர, உக்காந்த சீட்ட மத்தவங்களுக்கு கொடுத்துட்டு நீங்க உக்காரச் சொல்ற இடத்துல உக்காந்து பயணிக்க எனக்கு இஷ்டமில்லை சார்... அவங்க உக்காரட்டும்..." என்றபடி எழுத்து பேருந்தைவிட்டு இறங்க, "சார்... சார்... முன்னால சீட்ல உக்காருங்க சார்... அடுத்த பஸ் இருபது நிமிஷம் ஆகும் சார்...' என கண்டக்டர் முதுகுக்குப் பின்னே கத்திக் கொண்டிருந்தார்.

என்னடா இவன் சீட் மாறி உக்காந்தா என்னன்னு நீங்க யோசிக்கலாம்... ஒரு பெரியவர் வந்து தம்பி எனக்கு சன்னல் பக்கம் உக்காந்தாத்தான் வாந்தி வராது என்றாலோ... சன்னல் சீட்டா இருந்தா குழந்தை வேடிக்கை பார்த்துக்கிட்டு வருவான் அழமாட்டான் என்றாலோ... மாறிக் கொடுப்பவன்தான் நான்.. ஆனால் சீட் இருக்கும் போது வீம்புக்குன்னே வந்து நிக்கிறவங்களுக்கு நான் எப்பவும் இறங்கிப் போவதில்லை... அது என் குணமும் இல்லை. 

பேருந்து மெல்ல நகர ஆரம்பித்தது... ஒரு சில இருக்கைகள் தவிர மற்ற இருக்கைகளில் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். எனக்கு அருகே காலியாக இருந்தது. 'யாராச்சும் வந்து உக்காந்துட்டா தேவலாம்... இல்லேன்னா எதாச்சும் லேடீஸ் வந்தா மாறி உக்காருங்கன்னு சொல்லுவானுங்க... அப்புறம் சண்டை போட வேண்டி வரும்' என்று நினைத்தபோது ஒரு பெரியவர் அருகில் வந்து அமர்ந்தார். அவருக்கு 70 வயசு இருக்கும். என்னைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தார்.

பேருந்து வேகமெடுக்க ஆரம்பிக்க, டிவியில் மருது படம் ஓட ஆரம்பித்தது. 

படம் பார்க்கும் எண்ணமின்றி வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தேன்.

"என்ன தம்பி... படம் பிடிக்கலையோ... வெளியில பாத்துக்கிட்டு வாறீக...?" என்றார் பெரியவர்.

"பாத்த படம்தான் ஒரு தடவைக்கு மேல பாக்க முடியாது... அதான்"

"இப்ப எல்லாப் படமும் அப்படித்தானே இருக்கு..." என்றவர் டிஏஎஸ் பட்டணம் பொடி பட்டையை இடைவாரில் இருந்து எடுத்தார். "தூக்கம் வராம இருக்க பொடிப் போடுவேன்... உங்களுக்கு எதுவும் தொந்தரவு இல்லையே..." என்றார்.

"பிரச்சினையில்லை..." என்றதும் கொஞ்சம் பொடியை விரலால் கிள்ளி எடுத்து மூக்கில் வைத்துச் சர்ரென்று உறிஞ்சினார். 

அவர் கையை உதறியபோது எனக்குத் தும்மல் வந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும் நிஜாம்லேடி புகையிலை பாக்கெட் எடுத்து அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கையில் வைத்து உருட்டி, வாய்க்குள் அதக்கிக் கொண்டார். 

அதன்பிறகுதான் அவரின் ஆட்டம் ஆரம்பமானது... 

பேருந்து ஏதாவது ஸ்டாப்பிங்கில் நிற்கும் போதெல்லாம் என் மீது படுத்து வெளியே எச்சிலை துப்ப ஆரம்பித்தார். வாய்க்குள் எச்சிலோட கொதகொதவென பேச ஆரம்பித்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது பெரிய மனுசன் என்பதால் பேசாமல் அமர்ந்திருந்தேன். 

திருமயம் தாண்டியது மெல்ல தோள் சாய்ந்தார்... தட்டி விட்டுப் பார்த்தும் மறுபடியும் தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தார்.... மெல்லிய குறட்டையோடு.... 

நான் எப்போதும் என்மீது சாய்ந்து தூங்க யாரையும் அனுமதிப்பதில்லை. அது எனக்குப் பிடிப்பதுமில்லை... கோபம் தலைக்கேறினாலும் பெரிய மனிதர் என்பதாலேயே அவரை தட்டித் தட்டி விடிவதோடு நிறுத்திக் கொண்டேன். 

புதுக்கோட்டை போவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது. 'தம்பி உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேனோ...?' என்று சிரித்தபடி அங்கு இறங்கினார். 

இப்போது பக்கத்தில் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஆயா வந்து அமர்ந்தது... கையில வேற வெத்தலைப் பெட்டி வச்சிருக்கதைப் பார்த்ததும் ‘ஆஹா புதுக்கோட்டை வரை புகையிலை பார்ட்டி... இனி வெற்றிலை பார்ட்டி இன்னைக்கு யார் முகத்துல முழிச்சமோ தெரியலை’ என்று நினைத்த எனக்குள் பக்கத்து வீட்டு புஷ்பா வந்து சிரித்தாள்... சேச்சே... புஷ்பாவைப் பார்த்துட்டுப் போனா அன்னைக்கு சக்ஸஸ்தான் என நினைத்துக் கொண்டேன்... காரணம் அவ நம்ம ஆளாச்சே.

சரி சன்னலோரமா ஒண்டிக்க வேண்டியதுதான் என சன்னலோடு ஐக்கியமாக...

பேருந்தின் வேகத்தில் காற்றுத் தாலாட்ட... 

தூக்கம் மெல்லக் கண்களை அணைக்க ஆரம்பிப்பதை உணர்ந்தேன்... 

என் தலை மெல்ல அருகிலிருந்த ஆயாவின் தோள் சாய்ந்தது.

- 'பரிவை' சே.குமார்.