மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 29 செப்டம்பர், 2010

மறக்க முடியா மனுசன்



புரை ஏறும் மனிதர்கள் என்று பா.ரா சித்தப்பும் காரெக்டர் என்று வானம்பாடிகள் ஐயாவும் அவர்கள் வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத நபர்களைப் பற்றி எழுதி வருகிறார்கள். இங்கு நான் பகிரப் போகும் நபரும் அப்படி மறக்க முடியாத நபராகிப் போனவர்தான். ஆனால் இவர் புரை ஏறியவரோ காரெக்டரோ இல்லை எனக்குள் வித்தியாசமானவர்.

துபையில் இருக்கும் அண்ணன் வரச்சொல்லிக் கொண்டே இருந்ததால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வார விடுமுறையில் கிளம்பினேன். அண்ணனின் அறைக்கு நான் சென்ற போது மாலை 5 மணியிருக்கும். எல்லாரும் நல்ல தூக்கததில் இருந்தனர்.  யாரும் விழித்துக்கூட பார்க்கவில்லை.

சிறிது நேரத்தில் ஒருவர் எழுந்தார். என்னைப் பார்த்தார் நான் சினேகமாக சிரித்தேன். அவர் கண்டு கொள்ளவேயில்லை. இரவு சமையலுக்கான வேலையில் வேகவேகமாக இறங்கினார். பருப்பு அவியப் போட்டு விட்டு காய்களை பெரிது பெரிதாக வெட்டினார். என்னிடம் எதுவும் பேசவில்லை... இவரல்ல நான் சொல்ல வந்த வித்தியாசமான மனிதர். இருந்தாலும் அறைக்கு வந்தவரை வாவென்று சொல்லக்கூட அறியாத தமிழர் என்பதற்காகவே இவரைப் பற்றி சில வரிகள்.
அண்ணன் எழுந்தார் வாடா எப்ப கிளம்பினே என்றபடி கைலியை கட்டு என்றார். இல்லண்ணே அக்கா மக வீட்டுக்குப் பொயிட்டு வந்துடுறேன் என்றதும் நான் வரவா என்றார் வேண்டாம் நான் பொயிட்டு வாரேன் என்று கிளம்பினேன். பின்னர் நான் திரும்பி வரும்போது இரவு 11.30 மணியாச்சு. எல்லாரும் படுத்துவிட்டார்கள்.

மறுநாள் காலை அண்ணன் சிறிது வேலை இருக்கிறது 10 மணிக்கு வந்துடுவேன் என்றபடி கிளம்ப அறையில் நானும் அண்ணனின் நண்பர் மட்டும் இருந்தோம். அப்போது இரவு வேலைக்கு சென்ற அறை நண்பர் ஒருவர் வந்தார். என்னிடம் "எப்ப வந்திங்க... நல்லாயிருக்கிங்களா..." என்றார். எனக்கு ஆச்சரியம் யாருமே பேசாத அறைக்குள் தானே வந்து பேசுகிறாரே என்று. அப்புறம் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்....

"இப்பல்லாம் சாப்பிடவே பிடிக்க மாட்டேங்குதுங்க... முன்னல்லாம் நாலு கறி வைப்பாங்க இப்ப ஒண்ணாகிட்டாங்க அதுவும் நல்லால்லை... கேட்டா சாப்பிட்டா சாப்பிடு இல்லண்ணா போன்றான்... என்ன செய்ய வயித்துப்பாடுல்ல... என்னங்க நானு சொல்றது"

நான் ஆமோதிப்பதாய் தலையாட்டினேன். அவரே மேலும் தொடர்ந்தார் "இந்த செல்போன் வந்து எல்லாம் கெட்டுப் போச்சுங்க... முன்னல்லாம் வராத்துக்கு ஒருவாட்டி போன் பண்ணி பேசுவோம். இப்ப செல்போன் வந்துட்டு ரொம்பத்தான் பேசுறோம்... அதுவும் இந்த இண்டெர்நெட் போனெல்லாம் வந்துட்டு தொட்டது தொண்ணூறுக்கும் போனுதான்... என்ன செய்ய காலம் எங்கயோ போகுது. சரிதானேங்க"

"ஆமாமா... நீங்க சொல்றது சரிதான்" இது நான். அப்ப இடையில் புகுந்த அண்ணனின் நண்பர், "நீ என்ன ரொம்ப சலிச்சுக்கிறே... விடுய்யா... நீ பேசலை"

"நீ சும்மா இருய்யா... உனக்கு ஒண்ணும் தெரியாது... நான் அவருகிட்ட சொல்றேன்... நீ சும்மா சும்மா பேசுவே... நான் எதுக்கு சொல்ல வாரேன் தெரியுமா... இப்படித்தான் ஹைவேஸ்ல உள்ள ஏடிஎம் அறைக்குள்ள காலேசு பசங்க கசமுசா பண்ணி அதை நெட்டுல போட்டுட்டான் தெரியுமில்ல... உலகம் அழிவை நோக்கி போகுது..."

"நீ இதெல்லாம் எங்கய்யா பாத்தே... சும்மா கதைவிடாதே..." என்றார் நண்பர்.

"உனக்கு எல்லாத்துக்கும் புரூப்பு வேணுமாக்கும்... புக்குல பார்த்தேன்..."

"ராத்திரி வம்சம் படம் பார்த்தோமய்யா... நல்லாயிருந்துச்சு..."

"கேசட் எங்கய்யா... இந்தா சிந்துசமவெளி... சூப்பர் படமய்யா... எல்லாரும் பாக்கவேண்டிய படம்..."

"என்னங்க சாமி வீட்டை தாக்குற அளவுக்கு மோசமான படமுன்னு ஊரே சொல்லுது நீங்க என்னடான்னா நல்ல படமுன்னு சர்டிபிகேட் கொடுக்கிறீங்க?" என்றேன் நான்.

"இல்லங்க நாட்டுல நடக்குறதைதானே எடுத்திருக்கான்... அதுல பாருங்க என்று படம் மற்றும் அவரின் பார்வையை விவரமாக விளக்கினார். கடைசியில இது கற்பனைக் கதைன்னு போட்டு கீழே அல்லன்னு போடுறான்யா" என்றார் அண்ணனின் நண்பனிடம் அவரும் அப்ப இன்னைக்கு பாத்திருவோமுய்யா என்று சிடியை வாங்கிக் கொண்டார்.

"இப்பதான் ஊருக்குப் பொயிட்டு வந்தேன்... என்னமா கெட்டுப்போச்சு... ஏமாற்றம்... வழிப்பறி... வறுமைன்னு மோசமா இருக்கு. இங்கயிருந்து நல்ல படமா கொண்டு போனேங்க... எம் பொண்டாட்டி பாக்க விடலை... அப்பதான் பாக்கலாமுன்னு ஆன் பண்ணுவேன்... நாதஸ்வரம் பாக்கணும்பா... அப்புறம் தென்றல்... இந்த சீரியல் பொம்பளைங்களை ரொம்ப கெடுத்து வச்சிருக்கு... ஒருநா இப்படித்தான் அடுப்புல பருப்பப் போட்டுட்டு அப்படியே நாடகத்துல உக்காந்துட்டா... அது வெந்து தண்ணியெல்லாம் போயி அடிப்புடிச்சோடனே ஐய்யய்யோன்னு ஓடுற என்னத்தை சொல்ல நாலு வாங்கு வாங்கினேன். எம் பொண்ணுக்கு ரெண்டு வயசுதான் ஆகுது... அது " என் ஊரு கன்னியாகுமாரி... என் பேரு மீனாகுமாரி..." அப்படின்னு எதோ பாடுதுங்க... எனக்கு வரமாட்டேங்குது பாருங்க... எல்லாம் இந்த டிவி பண்ற வேலைங்க... எல்லாத்துக்கும் மேல எங்க அப்பத்தா, அதுக்கு வயசு எம்பது இந்த வயசுல தம்பி அந்த டிவிய தட்டிவிடு நாடகம் பாக்கணும் பாத்துப் பழகிப் போச்சு... நேத்து வேற நல்ல இடத்துல முடிச்சிருக்கான்னு சொல்லுது பாருங்க எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியலை."

"இதைவிட கொடுமை என்னன்னா பக்கத்து வீட்டுக்காரன் செவத்துல வெள்ளை பெயிண்டடிச்சு வச்சிக்கிட்டு புராஜெக்டர்ல படம் போட்டுப் பாக்குறான்... ஊப்பருல போட்டு சும்மா தொம் தொம்முனு ஊரையே கூட்டுறான்... ரொம்ப தேறிட்டாங்க தெரியுமா?"

"எல்லாம் வளர்ச்சிதானேங்க"

"ஆமா... வளர்ச்சி என்னங்க வளர்ச்சி... அழிவுதாங்க... எல்லாரும் அழிவை நோக்கிப் போறோம்...இந்தா பாருங்க பாகிஸ்தான்ல மழை வெள்ளத்துல எத்தனையோ கிராமம் அழிஞ்சிபோச்சு... இயற்கை சிரழிவுகள் அதிகமாயிடுச்சு... இதே நிலமை நாளைக்கு நமக்கு வராதுன்னு என்ன நிச்சயம்... ஆமா உங்க அண்ணனுக்கு ஊருல சொந்த வீடுதானே..."

"ஆமா..."

"எனக்கு வீடு கட்டல்லாம் நம்பிக்கையில்லங்க... எப்ப எதுல அழிவு வரும் சாவு வருமுன்னு யாருக்கு தெரியும்... இருக்கவரைக்கும் நல்லா சாப்பிட்டு அனுபவிச்சிட்டுப் போகவேண்டியதுதான்...."

"அப்ப உம்மகனுக்கு சேத்துவைக்க மாட்டியா?" இது அண்ணனின் நண்பர்.

"எதுக்கு சேர்த்து வைக்கணும்...அப்பன் சேத்துவச்சிட்டுப் பொயிட்டான்னு அது ஊதாரியாயிடும்... எனக்கெல்லாம் எங்கப்பா சொத்தா வச்சிருந்தாரு... பத்து வருசத்துக்கு முன்னால நா இங்க வரும்போது எங்கப்பா தம்பி புல்லு இருக்க இடத்தை தேடித்தான் மாடு போகணும்... அங்க கக்கூஸ் கழுவச் சொன்னாலும் செய்யி அப்பதான் முன்னுக்கு வரலாமுன்னாரு... வேற ஒண்ணும் சொல்லலை... அவரு வார்த்தை எவ்வளவு சரியா இருக்கு தெரியுமா?"

"அதுக்காக வீடு கட்டாம இருந்துடுவியா..."

"அதான் சொல்றேன்லய்யா... இந்தாளுக்கு எப்பவுமே புரியாதுங்க... நம்மளையும் குழப்புற குழப்பவாதி... லெட்ச லெட்சமா அதுல போயி கொட்டமுடியுமா... நீங்களே சொல்லுங்க"

"------" பதில் பேசாது சிரித்து வைத்தேன்.
"இப்ப காற்றிலயும் மாசு அதிகமாயிப்போச்சு... எங்க ஊருக்குப் பக்கத்துல செல்போன் டவர் வைக்கக் கூடாதுன்னு போராட்டம் பண்ணி நிறுத்திபுட்டாங்கன்னா பாருங்க"

"அது என்னய்யா பண்ணுது..."

"என்ன பண்ணுதா... அதில இருந்து அணுக்கள் வெளியாகுதாமய்யா... அது கர்ப்பிணிகளுக்கெல்லாம் ஆபத்தாம்.... சில நேரங்கள்ல குழந்தைகூட உண்டாகாதாம்... தெரியுமா?"

"என்னய்யா புதுசா கதைவிடுறே..."

"இதுக்குத்தாய்யா புத்தகம் வாங்கிப் படிக்கணுங்கிறது... ரூம்ல நீயி நீயூஸ்கூட பாக்கமாட்டே... எப்பவும் கேடிவியில படம், இல்லைன்னா புட்டி அது போதும் உனக்கு... உலக விஷயம் தெரியணுய்யா... எதோ வாழ்ந்தோம் செத்தோமுன்னா இருக்கது."

"ரொம்ப கதைவிடுறேய்யா.."

"கதையில்லய்யா... நெஜம்... அப்புட்டும் நிஜம்... நான் இங்க வந்தப்போ எவ்வளவு சிட்டுக்குருவி சாயந்தர நேரத்துல பால்கனியில வந்து உக்காரும் தெரியுமா... இப்ப அதெல்லாம் எங்க... காத்துல கலந்த கெட்ட அணுக்களால செத்துப் போச்சு... இப்ப ஒரு சிட்டுக்குருவி பாக்க முடியுதா? சும்மா கதைவிடுறதா சொல்றே..."

"நிஜமுய்யா... இப்ப அதிகமா சிசேரியன் செய்ய என்ன காரணம்... நாம சாப்பிடுற சாப்பாடுதான்... எல்லாம் ரசாயணம் கலந்து இருக்கு, அதனால சுகப்பிரசவம் இல்லை.... அந்தக் காலத்துல ஏழட்டுன்னு பெத்துக்கலை. அப்ப எங்கய்யா அபரேசன்... இப்ப பாஸ்டுபுட்டு, அது இதுன்னு எல்லாம் மாடர்னா மாறியாச்சி... அப்புறம் டாக்டரை குத்தம் சொல்லி என்ன பிரயோசனம்?"

"நீங்க சொல்றதும் சரிதான்" இது நான். அதிகம் அவரிடம் நான் பேசவில்லை என்றாலும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன். உடனே, "நீங்க எப்படி புரிஞ்சு பேசுறீங்க... இங்க உள்ளவங்க நான் எதாவது பேசினா இடையில எதையாவது சொல்லி மூடவுட் ஆக்கிடறாங்க... அதனால வந்தமா படுத்தமான்னு இருக்கது... இன்னைக்கு உங்க கூட பேசியது சந்தோஷமா இருக்கு... ஆமா நான் போரடிக்கலையில்ல...." என்றாரே பார்க்கலாம்.

பிறகு அவர் படுத்து உறங்கிவிட அண்ணன் வந்ததும் சாப்பிட்டுவிட்டு நானும் கிளம்பி வந்தேன்.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 27 செப்டம்பர், 2010

மனசின் பக்கம் - 27-09-2010

முதல்ல நம்ம கதையை சொல்லிட்டு அப்புறம் மத்ததுக்கு போகலாம். கடந்த பத்து,பதினைந்து நாளாக அலுவலகத்தில் கூடுதல் வேலைங்க. காலையில ஏழு மணியில் இருந்து மதியம் 3மணி வரை எனக்கு அபுதாபி (Abu Dhabi) - அலைன் (Al Ain) சாலையில் இருக்கும் பனியாஸ் (Baniyas) என்ற இடத்தில் இருக்கும் அரசு அலுவலகத்தில் வேலை. அந்த அரசு அலுவலகம் பாலைவனத்தின் ஓரத்தில் இருக்கிறது.... கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல்தான்... அதன் நடுவே வகிடுடெடுத்தது போல் செல்லும் சாலைகள். வெயில் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு சுட்டெரிக்கும். அங்கு வேலை முடிந்ததும் எங்கள் அலுவலகம் வர வேண்டும் அங்கு ஒமானில் (Oman) முடிக்க வேண்டிய புராஜெக்ட் ஒன்றை மாலை 6.30 மணி வரை செய்ய வேண்டும். அதன்பின் அலுவலகத்தில் இருந்து அறைக்கு போக்குவரத்து நெரிசலில் சிக்கி வந்து சேரும் போது இரவு 7.30 மணியாகிவிடுகிறது.. பின்னர் அன்று இரவுக்கான சமையலை ஆரம்பித்து முடிக்க 9.30 மணியாகிவிடும். அதன்பின் குளித்து சாப்பிட்டு சிறிது நேரம் எதாவது பார்த்து படுக்க 11.30 மணியாகிவிடுகிறது.... கணிப்பொறியை ஆன் செய்ய மனசு நினைத்தாலும் உடம்பு மறுக்கிறது.

இந்தக் கதைய ஏன் இப்ப நான் சொன்னேன்னா... எல்லாருக்கும் தெரிவிக்கிறது என்னன்னா... ஆரும் பின்னூட்டம் போடலை ஓட்டுப் போடலை ஆட்சி அமைக்கன்னு நம்ம மேல காண்டாயிடக் கூடாதுன்னுதான் பிரச்சனைய வெலாவாரியா சொல்லிப்புட்டோம்... சரியா...?

***



நேற்றைய ஏர்டெல் சாம்பியன் கோப்பைக்கான போட்டியில் நம்ம சென்னை அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. குழு உணர்வுடன் விளையாண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். டோனி சொன்னது போல் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பது தெரியாது. இருந்தாலும் இவர்கள் அனைவரும் மீண்டும் ஒரே அணியில் (இதே அணியாக இருந்தால் நல்லது) விளையாட வேண்டும் என்பதே என் எண்ணம்.

***

இளையராசாவுக்கு தேசிய விருது நான்காவது முறையாக கிடைத்துள்ளது எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தையும் அளவில்லா ஆனந்தத்தையும் கொடுத்ததை அனைவரின் பதிவிலும் கண்டேன். விருது குறித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட ராசா, அதே அடக்கத்துடன் நல்ல இசைக்கு கிடைத்த விருது என்று சொன்னார். ஆம் அவர் கொடுத்த இசை, கொடுக்கிற இசை எல்லாமே நம் காதுகளில் தங்கிச் செல்லவில்லை... அங்கேயே தங்கி விடுகின்றன... எத்தனை வருடங்கள் ஆனாலும் ராசா ராஜாதான்.

***

காமன் வெல்த் விளையாட்டு தொடங்குவதற்குப் முன்னர் தினம் ஒரு வருந்தத்தக்க் செய்தி வந்து கொண்டிருப்பது இந்தியர்களான நம் மானத்தை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. ஊழல் பெருச்சாளிகள் இன்னும் அதே புன்னகையுடந்தான் வலம் வருகிறார்கள். அவர்தம் மக்களுக்கு சொத்து சேர்த்தார்களே தவிர இந்தியர்களின் மானத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்பதை அந்தப் புன்னகையே சொல்கிறது. ஜென்மங்களுக்கு இன்னும் அரசியலில் வாய்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது.இப்படிப்பட்ட ஜென்மங்களை வைத்துத்தான் அரசையே நடத்த முடியும்... நடத்துகிறார்கள் என்பதை நினைக்கும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே...

***

எனது மச்சானின் (அப்பாவின் தங்கை மகன்) 21/2 வயது குழந்தைக்கு பிளட் கான்சராம். இந்த சம்பவத்தை கேள்விப் பட்டத்தும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... மிகுந்த வேதனையை கொடுத்தது. உடம்பு முடியவில்லை என்று ஏறத்தாழ 15 நாட்களுக்கு மேல் வீட்டிலேயே வைத்து இருந்திருக்கிறார்கள். இந்த மனிதர்களை என்ன சொல்வது? குழந்தை நடக்காமல், பேசாமல் போகவும் மதுரைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். டாக்டர்கள் இவர்களை சத்தம் போட்டதுடன் சிகிச்சையை ஆரம்பித்து இருக்கிறார்கள். வெள்ளை அணுக்கள் செலுத்தி சிகிச்சை அளிப்பதாகவும் தற்போது குழந்தை ஓரளவு தேறியிருப்பதாகவும் சொன்னார்கள். இரண்டு வருடத்திற்கு சிகிச்சை பெற வேண்டும் என்றும் காய்ச்சலை குழந்தையிடம் அண்டவே விடக்கூடாதென்றும் அப்படியே காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும் மருத்துவர்கள் சொன்னதாக சொன்னார்கள். எது எப்படியோ... காசு பணம் கரைந்தாலும் அந்தப் பிஞ்சு நல்லாயிருக்கணும். அந்த குழந்தைக்காக நீங்களும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.

***

சன் டிவியில் ஒலிபரப்பாகும் ' 'நாதஸ்வரம்' நாடகம் மிகவும் அருமையாக போய்க்கொண்டிருக்கிறது. செட்டிநாட்டுப் பூமியின் காரைக்குடிதான் கதைக்களம். எங்கள் மக்களின் பேச்சு வழக்கு, நடை உடை பாவனைகள் எல்லாத்தையும் அப்படியே காட்டியிருக்கிறார் காரைக்குடிகாரரான மெட்டி ஓலி' திருமுருகன். மௌலி மற்றும் பூவிலங்கு மோகனின பண்பட்ட நடிப்புடன் திருமுருகன் மற்றும் நாசரின் நடிப்பு பட்டறையில் பயிற்சியளிக்கப்பட்ட புதுமுகங்களும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். 'மெட்டி ஓலி' போல் நாதஸ்வரமும் எல்லா மெகாத்தொடர்களை பின்னுக்கு தள்ளிவிட்டது என்பதே உண்மை,

***

இந்த வாரம் பார்த்த படங்கள் குறித்து சில வரிகள்...

பாஸ் என்கிற பாஸ்கரன் - இரண்டரை மணி நேரம் கவலையை மறந்து சிரிக்க வைக்கும் படம்... நகைச்சுவையில் கதையை தேனில் கலந்த பலாச்சுளை போல் கொடுத்துள்ளார் இயக்குநர். வாழ்த்துக்கள்... படம் சூப்பர்..!

துரோகி - பார்த்து முடித்ததும் இதற்காக இரண்டரை மணி நேரத்தை... என்று கவலைப்பட வைக்கும் படம். சுமார் ரகம் என்று சொல்ல முடியாத குப்பை.

***

நண்பர் பரிசல்காரன் ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்துள்ளார். சில குறிப்புக்களைக் கொடுத்து அதை கதைக்குள் கையாளா வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளார். இந்த வித்தியாசமான் சிறுகதைப் போட்டிக்கு நானும் சிறுகதை என்று ஒன்றை அனுப்பியுள்ளேன். அதை எனது சென்ற பதிவில் பகிர்ந்தேன். அந்த கதையையும், நண்பர் பரிசல்காரனின் சிறுகதை குறித்த பகிர்வையும் படிக்க கீழே கொடுத்துள்ள லிங்கை சுட்டுங்கள்.


(பதிவின் முடிவில் நண்பர் பரிசல்காரன் அவர்களின் பகிர்வுக்கான லிங்க் உள்ளது.)

மீண்டும் அடுத்த மனசின் பக்கத்தில் வேறு தகவல்களுடன்...

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

சினிமாக்களம் (சவால் சிறுகதை)



(சற்றே 'பெரிய' சிறுகதை - படம் அருளிய கூகிளாருக்கு நன்றி)

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு சிறிய குடியிருப்பின் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்த அந்த நால்வருமே சினிமா ஆசையில் சென்னை வந்தவர்கள்.

"என்ன மாப்ளே... இன்னைக்கு போன காரியம் என்னடா ஆச்சு..?" என்று பேச்சை ஆரம்பித்தான் ரகு. இயக்குநராகும் ஆசையில் புதுக்கோட்டையில் இருந்து வந்தவன். நல்லா கதை எழுதுவான். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபல இயக்குநர்கள் வரிசையில் இருக்கும் சத்ரியனிடம் கடந்த சில மாதமாக உதவி இயக்குநராய் இருக்கிறான். அவரது தற்போதைய படம் இவனது கதைதான் என்பது அவனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும்.

"இயக்குநர் சங்கரை பல நாள் அலைச்சலுக்குப் பின்னர் இன்றுதான் பார்த்தேன்." என்று பேச்சை நிறுத்தினான் மதுரைக்காரனான சுந்தர். இவனும் இயக்குநர் ஆசையில் அதுவும் பிரமாண்ட இயக்குநர் சங்கரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து தொழிலை கற்றுக் கொண்டு அடுத்த பிரமாண்ட இயக்குநராய் சன் பிக்ஸர்க்கு படம் பண்ண வேண்டும் என்பதை கொள்கையாய் கொண்டு சங்கர் அலுவலகத்துக்கு நடையாய் நடப்பவன்.

"என்னடா... அவரைப் பாத்தியா..? " ஆவலாய்க் கேட்டான் வசந்த், நடிகனாய் ஆகவேண்டும் என்று நெல்லையில் இருந்து வந்து சில படங்களிலும் சில மெகா தொடர்களிலும் தலை காட்டிக் கொண்டிருப்பவன்.

"இன்னைக்குதாண்டா மாப்ளே எங்கிட்ட பேசினாரு... நான் எழுதி பத்திரிக்கையில் வந்த கதையெல்லாம் காட்டினேன். அவருகிட்ட அசோசியேட்டா இருக்கவரு ஒருத்தரை பிரண்டாக்கி வச்சிருக்கேன். அவரும் சொன்னாரு... தம்பி இப்ப எந்திரன் பட ரீலீஸ் அது... இதுன்னு ரொம்ப பிஸி... இப்பக்கூட மலேசியா போறேன்... அடுத்த வாரம் வாங்க... அடுத்த ஸ்கிரிட் பற்றி டிஸ்கஷன் இருக்கு... நீங்களும் கலந்துக்கங்கன்னு சொல்லியிருக்காருடா..."

"ஹே... நம்மள்ள அடுத்த ஆளும் இணை இயக்குநராயிட்டான், அப்புறம் என்ன..." கோரஸாய் கத்தினர்.

"எப்படா பார்ட்டி... நாளைக்கு மகாபலிபுரம் போகலாமா?" என்றான் அந்த அணியின் பைனாஞ்சியர் ரமேஷ், இவனும் ரகுவும் சிறுவயது முதலே நண்பர்கள். பள்ளி, கல்லூரி மேடைகள் அவனை நல்ல பாடகனாக்கி வைத்திருந்தன. அதனால் பாடகனாக வேண்டும் என்று சென்னைக்கு வந்தவன். படித்த எம்.பி.ஏவை வைத்து நல்ல வேலையில் சேர்ந்து சம்பாதித்து வந்த வருமானத்தில் நண்பர்களுக்கும் அறைக்கும் செலவு செய்து கொண்டு அப்பப்ப பெற்றோருக்கும் பணம் அனுப்பவும் செய்தாலும் பாடகன் கனவு மனதுக்குள் நிறைய விழுதுகளை விட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

"என்ன பார்ட்டின்னாலும் எங்க மூணு பேர்கிட்டயும் இப்ப சல்லிக்காசு பெயராது. நீதான் செலவு பண்ணனும்... அவனுக்கு பணம் கையில் கெடச்சதும் உனக்கு திருப்பிக் கொடுத்துடுவான் இல்லடா மாப்ளே..."

"அட ஏண்டா... நீங்க வேற... அவருகிட்ட சேர்ந்த பின்னாடி கண்டிப்பா பார்ட்டி வைக்கிறேன் மாப்ளே... அது வரைக்கும் ஆளைவிடுங்க்டா சாமிகளா... இந்த ரகு இன்னம் பார்ட்டி வைக்கலை... அதுக்குள்ள என்னைய கேக்க ஆரம்பிச்சிட்டிங்க..."

"மாப்ளே... பார்ட்டி வைக்கிறது பெரிய விஷயமில்லைடா... இப்ப எங்கிட்ட காசேயில்லைடா... எல்லாத்துக்கும் ரமேஷ்கிட்ட கேட்டா நல்லாயிருக்காதுடா...படம் எடுத்து முடிச்சதும் என்னோட கதைக்கு பணம் தர்றேன்னு சொல்லியிருக்காருடா... கிடைச்சதும் கண்டிப்பா பார்ட்டி வச்சிடலாம்... என்ன ஒகேவா..."

"அதுக்கு என்னடா இப்ப அவசரம்... நீ சீக்கிரம் படம் எடுக்கணும் அதுதாண்டா எங்க ஆசையெல்லாம்..."

"கண்டிப்பா நடக்குமுடா... நான் எடுக்கப்போற படத்துக்கான கதையெல்லாம் ரெடியாத்தாண்டா வச்சிருக்கேன். இப்ப அமையாதுடா... இன்னும் கொஞ்ச நாளாகுமுடா...பார்க்கலாம் எல்லாம் கடவுள் செயல்... நான் எடுக்கிற படத்துல கண்டிப்பா நீ பாடுறே... இவனும் நல்ல கதாபாத்திரத்துல நடிக்கிறான்... அதுல எந்த மாற்றமும் இல்லைடா..."

"நான் இல்லையா?" என்றான் சுந்தர்.

"நீதான் பெரிய பட்ஜெட் இயக்குநர்கிட்ட சேர்ந்துட்டியே... அப்புறம் என்ன பெரிய பட்ஜெட் படமாத்தான் இயக்குவே... யார்கண்டா நான் களவாணி மாதிரி படம் பண்றப்போ நீ எந்திரன் மாதிரி படம் பண்ணி எனக்கே போட்டியா நின்னாக்கூட நிப்பே" என்று சொல்லி ரகு சிரிக்க, வசந்தும் ரமேஷூம் சேர்ந்து கொண்டனர்.

"போங்கடா அங்கிட்டு... நீங்கள்லாம் இல்லைன்னா இந்த சென்னையில நான் யாருடா... கடவுள் புண்ணியத்துல நான் நல்ல நிலைக்கு வந்தாலும் வராட்டாலும் கடைசி வரைக்கும் எனக்கு எல்லாமே நீங்கதான்டா... பணம் காசு வந்ததும் குணத்தை மாத்திக்கிற சாதி நான் இல்லைடா..."

"சே... என்னடா மாப்ளே... உன்னையப் பத்தி தெரியாதா... சும்மா ஒரு ஜாலிக்காக சொன்னேன்..." என்ற ரகுவின் செல்போன் 'உன் பெயர் சொல்ல ஆசைதான்...' என்று அழைக்க, "மாப்ளக்கு தங்கச்சிக்கிட்ட இருந்து போன் வந்தாச்சு... இனி இப்ப படுக்க வரமாட்டான்... " என்று வசந்த் நண்பர்களிடம் சொல்ல எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.

"போங்கடா... படுங்க வாரேன்..." என்றபடி போனை ஆன் செய்து மொட்டைமாடி கட்டைச் சுவற்றில் அமர்ந்து "ம்... சொல்லும்மா..." என்று பேச ஆரம்பித்தான்.

*****

சில வாரங்கள் ஓடிய நிலையில் படப்பிடிப்பு முடிந்து கிளம்பிய ரகுவை இருக்கச் சொன்னார் இயக்குநர். சரி இன்னைக்கு பணம் தருவார் நாளைக்கு மகாபலிபுரம் போயிடலாம் என்று மனதிற்குள் நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

தயாரிப்பாளருடன் பேசிவிட்டு வந்த இயக்குநர் "வா ரகு... கார்ல போகயில பேசிக்கிட்டே போகலாம்..." என்றார்.

அண்ணாசாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறி போய்க் கொண்டிருந்த காரை ஓட்டியபடி "ரகு உனக்கு ஒண்ணும் வேலையில்லையே..." என்று கேட்டார்.

"இல்லண்ணே... என்ன விசயம்?"

"அடுத்த படத்தைப்பத்தி உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... அதான்..."

"எங்கிட்ட எண்ணன்னே பேச இருக்கு... எப்ப ஆரம்பிக்கப் போறோம்."

"சொல்றேன்... அப்படியே பீச்சுக்குப் போயி பேசலாமா..?"

"ம்... போகலாண்ணே..." என்றபடி செல்போனை எடுத்து ரமேஷூக்கு போன் செய்து, "மாப்ளே நான் எங்க டைரக்டர் அண்ணங்கூட இருக்கேன்... லேட்டாத்தான் வருவேன் " என்று சொல்லி வைத்த போது கார் சிவாஜி சிலையில் திரும்பி பீச்சுக்குள் நுழைந்தது.

காரை பார்க் செய்துவிட்டு இறங்கி, கூட்டமில்லாத பகுதியில் நடந்து கடலோரத்தில் இருந்த ஒரு படகின் முனையில் இருவரும் ஏறி அமர்ந்தனர்.

சிகரெட் ஒன்றை எடுத்துப் பத்தவைத்தபடி அவனிடம் பாக்கெட்டை நீட்ட அவனும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.

"சொல்லுங்கண்ணே..."

"அடுத்த படம் பண்றது தொடர்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி முன்னணி தயாரிப்பாளர் பரிசல்காரன் சார்கிட்ட பேசினேன்."

"அண்ணே அவர் பண்ற எல்லாபடமும் சூப்பர் ஹிட்டுண்ணே.... அடுத்தது அவர் படமா.... கிரேட்ண்ணே... ஆமா அவரு என்னண்ணே சொன்னார்... பண்ணலாம்ன்னு சொன்னாரா..."

"ம்... நல்லா பண்ணலாம்ன்னு சொன்னார்... ஆனா கிராமத்து சப்ஜெக்ட் வேண்டாங்கிறார்...:

"அப்புறம் என்ன சப்ஜெக்ட் வேணுமாம்... கிராமத்துக் கதையில உங்களை அடிச்சுக்க ஆளே இல்லைன்னு இருக்கப்போ ஏன் வேண்டாங்கிறார்."

"அவரு சொல்றதும் கரெக்ட்தான்... வரப்போற எந்திரன் தமிழ் படத்தோட டிரண்டை மாத்துதோ இல்லையோ வித்தியாசமான கதைகளை இயக்குநர்களை தேட வைக்கும் என்பது மட்டும் உண்மை. அப்ப நாம பண்ற படத்துலயும் கிராமியக்கதைக்குப் பதிலா சற்று மாறுதலா க்ரைம் கதை பண்ணினா நல்லாயிருக்குமுல்ல அப்படின்னு சொல்றாரு..."

"ஆமாண்ணே... அவரு சொல்றது சரி தானே ஒரு காதல் கோட்டை வந்தது... அதுக்குப் பின்னால பார்த்தா பார்த்து, பாக்காம, டெலிபோன் அப்படின்னு எத்தனையோ காதல்கள். ஒரு சுப்ரமண்ய புரத்துக்குப் பின்னால வட்டார வழக்கை அப்படியே வழங்கி எத்தனையோ படங்கள்... அதுமாதிரி இதுவும் டிரண்டை மாத்தலாமில்லையா..? நீங்க க்ரைம் கதை பண்ணலாமுன்னு சொல்லிட்டு வரவேண்டியதுதானே..."

"இதுல இன்னொரு பிராப்ளம் இருக்கு ரகு... சாதாரணமாக க்ரைம் சப்ஜெக்ட்டு ஒண்ணு ரெடி பண்ணிக்கிட்டு வான்னா நாம ரெடி பண்ணலாம். அவரு என்னன்னா ஒரு இங்கிலீஷ் ரைட்டரோட நாவலோட தமிழாக்கத்தை படிச்சிட்டு சில இடங்களை அடிக்கோடிட்டு கொடுத்து இருக்காரு. அதை நல்லா படிச்சுப் பார்த்துட்டு அதை தீமா வச்சு நல்ல கதை ரெடி பண்ணிக்கிட்டு வா கண்டிப்பா பண்ணலாம்ன்னு சொல்றார்..."

"ப்பூ... இவ்வளவுதானா... அதுக்கென்னன்னே நல்ல கதையா ரெடி பண்ணிடலாம்..."

"அதுக்குத்தான் உன்னைய கூட்டியாந்தேன்... இது நம்ம ரெண்டு பேரைத்தவிர வேற யாருக்கும் தெரியக்கூடாது... இப்ப பண்ணிக்கிட்டிருக்கிற கதை மாதிரி சீக்ரெட்டா இருக்கணும்..."

"அது சரிண்ணே... நான் யார்கிட்டண்ணே சொல்லப் போறேன்..." என்றபோது அவனது செல் 'உன் பேர் சொல்ல...' என்ற போது கட் செய்தான். மீண்டும் அடிக்க, "எடுத்துப் பேசு உன் பிரண்ட்ஷாத்தான் இருக்கும்" என்றார்.

"ம்... என்னடா... டைரக்டர் சார்கூட முக்கியமான டிஸ்கஷன்ல இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன்" என்றபடி பதிலுக்காக காத்திருக்காமல் கட் செய்தான். பின்னர் இயக்குநரிடம் "அண்ணே அந்த புத்தகத்தைக் கொடுங்க..."என்றான்.

"கார்ல இருக்கு... வா... தர்றேன் பாரு... எழுத முடியுமான்னு பாரு... முடியலைன்னா வேண்டான்னு சொல்லிட்டு வேற தயாரிப்பாளர்கிட்ட பேசலாம்..."

"செய்யலாம்ண்ணா....எனக்கு ஒருவாரம் டயம் கொடுங்க சூப்பர் கதை ரெடி பண்ணலாம்" என்றான் முழு நம்பிக்கையுடன்.

"இந்த நம்பிக்கைதான் எனக்கு உங்கிட்ட ரொம்ப பிடிச்சது... நாளைக்கு நீ பெரிய ஆளா வருவேடா..." என்று முதுகில் தட்டினார்.

"எல்லாம் உங்க ஆசிர்வாதம் அண்ணா" என்று நெஞ்சில் கை வைத்துக்கொண்டான்.

இருவரும் காருக்கு வந்ததும் அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கிப் பார்த்தான் அடிக்கொடிட்ட பக்கங்களின் அடையாளத்துக்கு பேப்பர் வைக்கப் பட்டிருந்தது. பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அதில் சிலவற்றை படித்துப் பார்த்தான்... பின்னர் ஒரு சில பத்திகளை மறுபடியும் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

'டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.'

'“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.'

'"காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்."' புத்தகத்தை மூடி வைத்தான்.

"என்ன ரகு... முடியுமா?"

"கண்டிப்பா முடியும்... எனக்கு இந்த புத்தகம் வேணும்... இந்தக் கதைய ஒரு தடவை படிச்சேன்னா நல்ல ஐடியா கிடைக்குமுன்னு நினைக்கிறேன்...."

"எடுத்துக்க... சீக்கிரம் ரெடி பண்ணு..."

"சரிண்ணே..."

"அப்புறம்... இன்னம் பணம் வரலை... வந்ததும் பேமண்ட் வாங்கிக்க... செலவுக்கு காசிருக்கா... இந்தா இதை வச்சுக்க்க..."என்று இரண்டு நூறு ரூபாய் நோட்டை அவனது பாக்கெட்டில் திணித்தார்.

"வேண்டாண்ணா... அப்புறம் வாங்கிக்கிறேன்..."

"இருக்கட்டும் ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா... வீட்டுக்குப் பொயிட்டு பரிசல்காரன் சார்கிட்ட ஒரு வாரத்துல கதையோட வாரேன்னு சொல்லிடுறேன்..."

"சரிண்ணே... என் ரூம் வந்தாச்சு...நான் இங்க இறங்கிக்கிறேன்..."

"சரி பாத்துப் போப்பா... வரட்டா"

*****

"என்னடா மாப்ளே... அடுத்தபட டிஸ்கஷனா...?" என்று கேட்டான் சுந்தர்.

"ஆமாடா..."

"மறுபடி உன்னைய கதை எழுதச் சொன்னாரா...?" கோபமாய் கேட்டான் வசந்த்.

"------"

"என்னடா... அப்ப அடுத்த கதைய நீ எழுதப் போறியா... அவன் லெட்சம் லெட்சமா சம்பாதிக்க நீ கதை எழுதிக் கொடுக்கிற... உன்னோட முதக் கதைக்கு இன்னும் ஆயிரம் ரூபா கூட தரலை அதைப்பத்தி எதாவது கேட்டியா... வேற டைரக்டர்கிட்ட டிரைப் பண்ண வேண்டியதுதானே..."

"அங்கயும் இதே கதை இருக்காதுண்ணு என்னடா நிச்சயம்? விடுங்கடா"

"நீ திருந்தமாட்டே..."

"இல்லடா... இன்னும் பணம் வரலைன்னு சொன்னாரு... வந்ததும் தர்றேன்னாருடா... சரி வாங்க சாப்பிட போகலாம்.

'உன் பேர் சொல்ல ஆசைதான்...' போன் அழைக்க...

"ம்... சொல்லும்மா..."

"எங்க இருக்கே... ரூமுக்கு வந்துட்டியா..?"

"இப்பத்தான் வந்தேன்... இன்னைக்கு உன்னோட ரெக்கார்டிங் முடிஞ்சதா?"

"அப்பா... இப்பவாவது கேக்கணுமின்னு தோணுச்சே... முடிஞ்சாச்சு"

"சாரிம்மா... காலையில இருந்து நல்ல வேலை... படம் பினிசிங்ல இருக்கதால அங்க இங்க நகர முடியலை... அப்புறம் டைரக்டரோட பீச்சுல டிஸ்கஷன் அதான்"

"என்ன அடுத்தபடத்துக்கு கதை எழுதச் சொன்னாரா... இந்தப்படத்துக்கே இன்னம் பணம் தரலையில்ல...முதல்ல பணத்தைக் குடுங்க... அப்புறம் எழுதுறேன்னு சொல்ல வேண்டியதுதானே"

"அது எப்படிம்மா... முகத்துல அடிச்சமாதிரி கேக்கிறது... வரட்டும் கேக்கலாம்... "

"சரி... நான் இன்னைக்கு ரிக்கார்டிங் தியேட்டர்ல புரடியூசர் பாலாஜிகிட்ட உனக்காக பேசினேன்... நல்ல கதையோட வரச்சொல்லும்மா... கதைய பாத்துட்டு சொல்றேன்னு சொல்லியிருக்காரு... நல்ல கதையா ரெடிபண்ணிட்டு சொல்லு... அவரைப் போயி பாக்கலாம்..."

"சரிம்மா... எங்க டைரக்டரோட வேலையை முடிச்சிட்டு நல்ல கதைய ரெடி பண்றேன்..."

"சரி.... சாப்பிட்டியா?"

"இல்ல இப்பத்தான் கிளம்புறோம்.... பாத்துக்க... குட்நைட்... நாளைக்கு பார்ப்போம்."

"ஏய்... காமினி என்னடா சொல்றா?"

"தெரிஞ்ச புரடியூசர்கிட்ட பேசியிருக்காளாம்.... கதையோட வரச்சொல்லியிருக்காராம்..."

"வாவ்.... ஹே......... கூஊஊஊஊஊ" என்று கத்தியபடி அவனை தூக்கினர்.

"மாப்ளே முதல்ல நல்ல கதைய ரெடிபண்ணு.... கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும். இந்த புத்தகத்தை ஒரு மூலையில் வைடா"

"இல்லடா... எங்க டைரக்டர் பணம் தரலைன்னாலும் நா எழுதித்தாரேன்னு சொன்னதும் பணம் தாரேன்னு சொன்னாரோ இல்லையோ மகிழ்ச்சியில இரு நூறு ரூபா பாக்கெட்டுல வச்சிட்டுப் போனாருடா... அவரை ஏமாத்த எனக்கு மனசில்லைடா.... மூணு நாள்ல ரெடி பண்ணிட்டு எனக்கான கதையை ரெடி பண்ணலாம்... இந்த வாய்ப்பு கிடைச்சா... நீ கண்டிப்பா பாடுறே.... இவன் நடிக்கிறான்... சரி வாங்க... இன்னைக்கு கையேந்திபவன் வேண்டாம்... நல்ல ஒட்டலுக்குப் போகலாம்... சந்தோசமாய் எஞ்சாய் பண்ணலாம்..." என்றான் கண்டிப்பாய் இயக்குநராவோம் என்ற நம்பிக்கையில் ரகு.

-'பரிவை' சே.குமார்.

குறிப்பு: நண்பர் பரிசல்காரன் அவர்கள் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கான கதைக்கான கதை இது. சிறுகதைப் போட்டி குறித்து அறிய இங்கே கிளிக் செய்து படியுங்கள்... நீங்களும் எழுதுங்கள்.

இந்தக் கதைக்கான உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

சிறுவர் கதைகள் (நான்கு)



"டேய்... எனக்கொரு பெஞ்சில் கொடுடா...."

"நாந்தரமாட்டேன் போ..."

"ரெண்டு இருக்குல்ல ஒண்ணு கொடுடா..."

"முடியாது போ..."

"தாடான்னா..." படக்கென்று பிடிங்கினாள்.

"எருமை... உம் பென்சில் எங்கடி... எம் பெஞ்சிலை பறிக்கிறே... அம்மாட்ட சொல்லவா தாரியா... அம்ம்ம்மா..." கத்தினான்.

"இந்தாடா... கத்தாதே... இரு நீ எதாவது கேப்பேல்லே... அப்ப பாரு..."

"அங்க என்ன சண்டை... விடிஞ்சா எந்திரிச்சா... உங்க பஞ்சாயத்துதான் பெரிசா இருக்கு... பஸ் வர்ற நேரமாச்சு...  கிளம்புங்க... உங்க சண்டைய சாயந்தரம் வந்து வச்சிக்கங்க..."

இருவரும் அரக்கப் பறக்க கிளம்ப... பென்சில் அனாதையாக கிடந்தது.

-----------


ம்மா வீட்டில் இல்லாததால் டிவி பார்த்துக் கொண்டிருந்த அண்ணனும் தம்பியிம் விஜய், அஜீத்தால் கட்டிப்பிடித்து உருண்டனர். மாறி மாறி அடித்துக் கொண்டனர். நகங்களால் ஒருவருக்கு ஒருவர் கீறிக்கொண்டனர்.

கதவு திறக்கும் சப்தம் கேட்டதும் இருவரும் தலையை ஒதுக்கிக் கொண்டு அமைதியாக டிவி பார்க்க ஆரம்பித்தனர்.

"என்ன ரெண்டு பேரும் ரொம்ப அமைதியா இருக்கீங்க... என்னாச்சு..."

"ஒண்ணுமில்லையே... படம் பார்க்கிறோம்... இல்லடா"

"ஆமாம்மா..."

"சரி... சரி..."

அம்மா உள்ளே போனதும் கையை மடக்கி சின்னவன் பெரியவனை குத்த, "அம்மா இங்க பாரும்மா... சும்மா இருக்கயில அடிக்கிறாம்மா..." அழுகையினூடே கத்தினான்.

-----------

"நானும் விளையாட வாரேண்டா..." என்றாள் அவள்

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... ஓரமா உட்கார்ந்து பாரு போதும்..." என்றான் அவன்.

"என்னைய மட்டும் ஏண்டா சேர்க்க மாட்டேங்கிறீங்க..." கோபமாக கேட்டாள் அவள்.

"ஆளு கரெக்டா இருக்கு... உனக்கு விளையாடத் தெரியாது" கேலியாக சொன்னான் அவன்.

"உப்புக்கு சப்பாணியாவது இருக்கேண்டா..." கெஞ்சினாள் அவள்.

"வேணான்னா போ... இல்ல முகரைய பேத்துடுவேன்..." கையை முறுக்கிக் காட்டினான் அவன்.

"நீ உருப்புடவேமாட்டே... எருமை" முணங்கியபடி அமர்ந்தாள் அவள்.

"என்னடா... விளையாடுறீங்க... " என்றபடி உள்ளே வந்த பிரசிடெண்ட் மகன், விளையாட்டை சொன்னதும் "நானும் வாரேன்" என்றான்.

"கரெக்டா இருக்கு... அடுத்த ஆட்டை வரலாம்" என்றான் அவன்.

"என்னடா லெப்ட்... அவன் கரெக்டா இருக்குங்கிறான்... நாளைக்கு தோப்புக்கு வரணுமா இல்லையா..." மிரட்டினான் பிரசிடெண்ட் வாரிசு.

"டேய் நீ வாடா... நீ போய் உட்காருடா... அப்புறம் வரலாம்" என்றான் லெப்ட்.

"என்னடா... வேற யாரையாவது நிப்பாட்டுடா..." என்றான் அவன்.

"சொன்னா கேளுடா... போடா"

முகத்தை சுருக்கிக் கொண்டு அவள் அருகில் போய் அமர்ந்தான் அவன்.

-----------

"டேய்... முந்திரி தோப்புக்கு போகலாமா?"

"ம்... போகலாம்"

"ஆனா யார்கிட்டயும் சொல்லக்கூடாது... சரியா?"

"சரிடா... எப்ப போறோம்...?"

"நாளைக்கு..."

"சரி..."



"என்னடா முந்திரி தோப்புக்கா... போறீங்க..."

"இல்லையே..."

"எனக்கு எல்லாம் தெரியும் மறைக்காதீங்க... நானும் வாரேன்..."

"சரி வா... மூணு பேரும் போகலாம்"



"மூணு பேரும் எங்க கிளம்பிட்டிங்க... முந்திரி தோப்புக்குத்தானே..."

"இல்லையே.... சும்மா..."

"ஏண்டா பொய் சொல்றீங்க... நானும் வருவேன்... இல்லை தோப்புக்காரங்கிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்..."

"சரிடா இவனையும் கூட்டிக்கலாம்..."



ரெண்டு நாலாகி.... நாலு எட்டாகி... கும்பலா தோப்புக்கு போனப்போ தோப்புகாரன் வாசலில் நின்று "கருங்காலி நாய்களா இன்னைக்கு வாங்க... தோலை உறிச்சு உப்புக்கண்டம் போட்டுடுறேன்" என்று கத்திக் கொண்டிருந்தான்... வந்த சுவடு தெரியாமல் திரும்பும் போது முந்திரி பழத்தை இந்த வாரமும் இழந்தது அவர்கள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்து.

-----------

கவனிக்க: இந்த கதைகளை எழுதியதும் 'மைக்ரோ கதைகள்' என்று பெயரிட்டேன்... அது ஏனோ மனதில் ஒட்டவில்லை... பின்னர் 'குழந்தைக் கதைகள்' என்று பெயரிட்டு வைத்தேன். இன்று பதிவிடும் போது குழந்தைக் கதை என்றால் மூன்று, நான்கு வயதுக்குள் நடப்பது போலிருந்தால் நல்லாயிருக்கும் இது சற்று கூடுதல் வயதில் நடக்கும் கதை என்பதால் 'சிறுவர் கதைகள்' என்று மாற்றியாச்சு.

இது சிறுவர்களுக்கான கதையல்ல... சிறுவர்களுக்கு இடையே நிகழும் அன்றாட நிகழ்வு அவ்வளவே...

படித்து நொந்து திட்டுபவர்கள் மின்னஞ்சலில் வரவும்... ஏதோ மனசை தேத்திக்கிட்டு திட்டினாலும் கொஞ்சமாக திட்ட நினைப்பவர்கள் பின்னூட்டத்தில் வரவும். அப்புறம் ஓட்டு ரொம்ப முக்கியமுங்க... நாம ஆட்சியை புடிக்கணுமில்ல....

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

பேரு..!




சோப்பு வாங்கப் போன
எங்கிட்ட கடைக்காரரு
என்ன சோப்புன்னு கேக்காம
என்ன பேருன்னு கேக்க

அஞ்சலைன்னு சொல்ல
அந்த பேருல சோப்பு
இல்லைன்னு சிரிச்சாரு...

சோப்பு பேரா கேட்டியலா
நா எம்பேரை கேக்குறியன்னு
நினைச்சுக்கிட்டேன்னு சிரிச்சேன்...

வாறவுக பேரெல்லாம்
எனக்கு எதுக்கு தாயி...
சோப்பு பேரை சொல்லு
என்றார் சிரிக்காமல்..!

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சிறு பூக்கள் - III



பசியோடு ஆடு...
வருத்தப் பட்டது
கிளைகளை இழந்த
மரம்..!

---------
 
வண்டிப் பந்தயம்...
ஓடிய மாடுகளை விட
விரட்டிய மனிதர்கள்
மூச்சிரைத்தபடி..!

---------


எங்கும் போகலாம்...
தொட்டிக்குள்
விடப்பட்டதறியாமல்
சந்தோசப்பட்டது மீன்..!

---------


பிரிவு வருத்தமே...
இருந்தும் மனசுக்குள்
சுகமாய் உன்
நினைவின் நிழல்கள்..!

-'பரிவை' சே.குமார்

வியாழன், 16 செப்டம்பர், 2010

மீன் வலி



நாவால் துளாவியும்...
விரலால் விரவியும்...
வர மறுத்தது
தொண்டைக்குள் சிக்கிய
மீன் முள்..!

'சோத்தை உருட்டி
வாயில் போட்டு
விழுங்கு' அம்மாவின்
கணக்கு பொய்த்தது..!

'தண்ணிய கொப்பளித்து
துப்பு' அப்பாவின்
வைத்தியம் தப்பானது..!

'கண்ணாடி பார்த்து
மெதுவா பிடுங்கு'
அக்காவின் அறிவுரைக்கும்
சிக்காமல் போனது..!

எச்சில் விழுங்கும்
போதெல்லாம்
'சுருக்' கென்ற வலியுடன்
உள்ளிருப்பு போராட்டம்
தொடர்ந்தது..!

அருவலில் முடிவாய்
வந்த வாந்தியில்
எல்லாம் வெளியே...
முள்ளைத் தவிர..!

மருத்துவரிடம் போனால்
இலகுவாக பிடிங்கினார்
எரிச்சலூட்டிய முள்ளை..!

மீன் விலையோ
அம்பது ரூபா...!
முள் பிடுங்க
நூற்றம்பது...!

எனது வலி இப்ப
அப்பா முகத்தில்..!

-'பரிவை' சே.குமார்

திங்கள், 13 செப்டம்பர், 2010

கிராமத்து நினைவுகள் : மடை திறந்து...


கிராமங்களின் அழகு நீர் நிறைந்த கண்மாயும் விளைந்து நிற்கும் வயல்களும்தான்.

கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய்க்கரையில் வயல்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காகவே மடைகள் (மதகு என்பார்கள்) கட்டப்பட்டிருக்கும். கரையில் பெரிய குழாய் பதித்து கண்மாயின் உள்வாயிலிலும் (உள்புறம்) வெளிப்பக்கத்திலும் திண்டுபோல் கட்டப்பட்டிருக்கும்.

எங்கள் கண்மாயிலும் நான் கு மடை உண்டு. பெரிய மடை, வெட்டுச்செய் மடை, காஞ்சிரம் மடை, ஐயனார் மடை என ஒவ்வொன்றிற்கும் பேர் உண்டு. இதில் விடுமுறை தினங்களில் மதிய நேரங்களில் எங்கள் பொழுது போக்கிடம் பெரியமடைதான்.

மதியம் சாப்பிட்டதும் எல்லாரும் மடையை நோக்கி கிளம்பிவிடுவோம். கர்ணனின் கவச குண்டலம் போல் எல்லாருடைய இடுப்பிலும் அண்ணாமலை ஸ்டைலில் குத்தாலம் துண்டு இறுக்கி கட்டப்பட்டிருக்கும். அண்ணாமலை பார்த்து கட்டவில்லை... அதற்குமுன்னரே கபடி, கோலிக்குண்டு, கிட்டி விளையாடும்போது தோளில் இருக்கும் துண்டை கீழே வைக்காமல் கட்டிப் பழகியது. அப்படியே பழகிவிட்டது.

மடையின் அருகில் வேப்பமரம் ஒன்று இருக்கும். அதனால் அருமையான காற்றும் குளுகுளு என்ற சில்லிப்பும் இருக்கும். அங்கு எங்கள் அரட்டைக் கச்சேரி ஆரம்பமாகும். சினிமா, பள்ளியில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் அங்குதான் அலசி ஆராயப்படும். இடையில் லேசான தூக்கம் வேறு.

அந்த மடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவனை குறிவைத்து அனைவரும் சமிக்சை கொடுத்துக் கொள்வோம். அவ்வளவுதான் ஒருவன் அவன் தலையில் துண்டைப் போட மற்றவர்கள் அவன் தலையில் கொட்ட ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு ரவுண்ட் முடிந்து துண்டை நீக்குவதற்குள் அவனவன் அவனவன் இடத்தில் இருப்பார்கள். யார் அடித்தார் என்பதே தெரியாது. ஆனால் தினம் ஒருவர் அடி வாங்குவது உறுதி. கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு சிலர் கூடுதலாக வாங்கியிருந்தாலும் எல்லாரும் அடி வாங்கியிருப்போம்.

விவசாய காலத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச அடைத்திருக்கும் மடையை திறந்து விட்டுவிட்டு வேகவேகமாக புறமடைப்பக்கம் (கண்மாய்க்கு வெளியே) வந்து தண்ணீர் ஒடிவருவதைப் பார்த்து சந்தோஷம் அடைந்த அந்த தருணத்தை எல்லோரும் அனுபவித்து இருக்கிறோம்.

நாங்கள் படுத்து உறங்கி... பேசி மகிழ்ந்து... சண்டை போட்டு... பரிட்சை சமயத்தில் அதில் அமர்ந்து படித்து... உறவாடிய மடையை மீண்டும் புதுப்பித்து கட்ட எங்கள் உறவினர் ஒருவர் கான்ட்ராக்ட் எடுத்து, மடையை உடைத்து புதிதாக கட்டினார். அந்த வருடம் மழை வந்து கண்மாய் நிறைந்த போது அவர் அடித்த மீதத்தில் கட்டிய மடை பல இடங்களில் உடைப்பெடுத்து கண்மாய் தண்ணீர் வெளியாக ஆரம்பித்தது. நாங்கள் முடிந்தளவு அடைத்துப் பார்த்தோம். தண்ணீர் வெளியாவதை தடுக்க முடியவில்லை. கடைசியில் கையில் இருந்த கடப்பாறையால் உடைத்து அடைத்து விட்டோம்.

தான் கட்டிய மடையை சின்னப் பயக உடைத்து விட்டாங்களே என்று அன்று எங்களுடன் மோத ஆரம்பித்தவர் இன்று வரை எங்களுடன் மோதிக் கொண்டுதான் இருக்கிறார். உடைந்த மடையில்தான் வயலுக்கு நீர் பாய்ச்சி வந்தோம். மீண்டும் வேறொரு கான்ட்ராக்டர் எடுத்து கட்டிய மடைதான் இன்னும் உபயோகத்தில் இருக்கிறது.

நாங்கள் மடையுடன் உறவாடியது போல் இன்று உறவாட யாரும் இல்லை. இந்த முறை ஊருக்கு சென்ற போது பெரிய மடை அருகில் சென்ற சமயங்களில் பழசு மனசுக்குள் வந்து சென்றது.

-'பரிவை' சே.குமார்

சனி, 11 செப்டம்பர், 2010

பேச பயம் எனக்கு


நமக்கு என்னமோ தெரியலைங்க இந்த பொண்ணுங்ககிட்ட பேசுறதுன்னா கை காலெல்லாம் உதறலெடுத்துடும். இன்னைக்கு நேத்து இல்லைங்க ஒண்ணாப்புல இருந்து இதே நிலைதான். ஊருக்குள்ளயும் யார்கிட்டயும் பேசுறதில்லை. எங்க பஞ்சப்பத்தா, எம் பேராண்டிக்கிட்ட பேசணுமின்னா வெத்தலை பாக்கு வைக்கணுமின்னு என்னை பார்க்கிறப்பல்லாம் சொல்லும். அதுக்கு லேசா சிரிச்சு வைப்பேன் அவ்வளவுதான்.

கடந்த காலத்துல நாம வந்த வழியை திருப்பிப் பார்த்தா பொண்ணுங்ககிட்ட பேச பட்ட பாட்டை ஒரு மெகா சீரியலாவே எடுக்கலாம். நீங்க சிரிப்பா எடுத்துக்கிட்டாலும் சரி... சீரியஸா எடுத்துக்கிட்டாலும் சரி... எம்மனசுக்குள்ள உள்ளத இப்பவாவது வெளியில சொல்லணுமின்னு தோணுச்சு... அதான் தனியா உக்காந்து சொல்றேன்... இன்னொன்னு இதை யாரும் எம்பொண்ட்டாட்டிக்கிட்ட சொல்லிடாதீங்க... எதுக்கு சொல்றேன்னு கடைசியில உங்களுக்கே புரியும்.

எங்கூருக்கு பக்கத்துல இருக்கிற அரசினர் மேல்நிலைப் பள்ளியில நான் நாலாப்பு படிச்சேன். எங்கிளாசுல அரசல்புதூர்ல இருந்து தனலெச்சுமின்னு ஒரு கட்டச்சி படிச்சது. கிளாசுல எல்லாத்துக்கும் வெடுக்கு வெடுக்குன்னு எந்திருச்சு பதில் சொல்லும். எல்லாரும் அதுகிட்ட பேசிக்கிட்டே இருப்பானுங்க. நா பேசவே மாட்டேன். நாம எதுக்கு அதுகிட்ட பேசணும்ன்னு நினைச்சுப்பேன்.

யாரு லீவு போட்டாலும் அது மட்டும் லீவே போடாது. நமக்கெல்லாம் அடிக்கடி வர்ற தலைவலி, காய்ச்சல் எல்லாம் அதுக்கு மட்டும் வர்றதேயில்லை. லீவு போட்டவங்கள்லாம் அதுகிட்டதான் நோட் வாங்கி எழுதுவாங்க. ஒரு தடவை நானும் மூணு நாள் லீவு போட்டாச்சு. கிளாசுக்கு போனா நிறைய நடத்திப்புட்டாங்க.

ரமேசுக்கிட்ட நோட்டுக்கேட்டா, "அட ஏண்டா இவனே... எ எழுத்தைப் பார்த்து நானே படிக்க முடியாது. நீ எப்படி எழுதுவே... தனத்துக்கிட்ட நோட் வாங்கி எழுது... அது எழுத்து அழகா குண்டு குண்டா இருக்கும்." என்றான்.

"டே... ரமேசு... நீயே வாங்கிக்கொடுடா... எனக்கு அதுகிட்ட கேட்க என்னமோ மாதிரி இருக்குடா"

"அடேய்... கிளாசுப்புள்ளைக்கிட்ட பேச பயமா இருக்கா... நல்லாயிருக்குடா... சரி இரு நான் கேக்குறேன்"

"தனம்... ஓ நோட்டைக் கொடுவே..."

"ஏ நோட் உனக்கு எதுக்கு..."

"எனக்கில்லை மகேசு மூணு நாளா வரலையில்ல... அதான் பார்த்து எழுத..."

"அவனுக்கு வேணுமின்னா அவன் கேக்கட்டும்... நீ யாரு வக்காலத்து..." கோபமாக கேட்டாள் கட்டச்சி.

"இல்ல அவன் யாருகிட்டயும் பேச மாட்டான்... பயப்படுவான்..."

"எங்கிட்ட பேசுனா போட்டிருக்கிற டவுசர்ல மூத்தரம் போயிடுவானோ... நான் என்ன காளியாட்டமா இருக்கேன். துரை பயப்படுறாரு..." கேலியாக சிரித்தாள்.

"பாவம் புள்ள... அவன் எழுத குடுல்ல"

"போடா... நாளைக்கு சனிக்கிழமை, திங்ககிழமை இங்கிலீஷ் சார் பரிச்சை சொல்லியிருக்காரு... நான் படிக்கணும்... நீ கொடு" என்று தர மறுத்துவிட்டாள்.

அதன் பிறகு அவ கூட பத்தாப்பு வரைக்கும் படிச்சேன். நோட்டும் கேக்கலை... பேசவும் இல்லை. இப்ப அவ... சரி அது எதுக்கு இந்த சந்தோஷமான நேரத்துல... விடுங்க மேல சொல்றதைக் கேளுங்க.

******

அப்புறம் பதினோன்னு படிக்கும்போது ஒருநாள் நல்ல மழை... சைக்கிளை ஓட்டமுடியாம பஸ் ஸ்டாப்பு ஓரத்துல நின்னுக்கிட்டிருந்தேன். அங்க எங்கூரு புவனாவும் நின்னுச்சு. ஆனா நான் அதுக்கிட்ட எதுவும் பேசலை... அதுவும் எங்கிட்ட எதுவும் பேசலை... கொஞ்சம் மழை விட்டாப்புல இருக்க, சைக்கிளை எடுத்தேன்...

அப்ப "மகேசு, மறுபடியும் மழை வராப்புல இருக்கு... பஸ் வருமான்னு தெரியலை... நானும் உங்கூட வாரேண்டா"ன்னு சொன்னுச்சு... நான் காதுல வாங்குன மாதிரி காட்டிக்கலை... அது "மகேசு... மகேசு"ன்னு பின்னால கூப்பிட்டது கேக்காத மாதிரி பொயிட்டேன். அப்புறம் ஒம்பதாப்பு படிக்கிற ராமசாமி மாமா மகன் கூட்டியாந்திருக்கான்.

காலையில புவனாவை பார்த்தப்போ முறைச்சுக்கிட்டே எங்கக்காகூட குளிக்கப் போச்சு. அன்னைக்கு சாயந்தரம் எங்கக்கா எங்கிட்டா, "எருமை... நம்மூருப்புள்ள மழையில நின்னப்போ கூட்டியாரதுக்கென்ன. அவன் சின்னப்பயலா இருந்தாலும் வாக்கான்னு கூட்டியாந்திருக்கான்." அப்படின்னு திட்டுச்சு. நான் போக்கான்னு சொல்லிட்டு பொயிட்டேன். இப்பவும் புவனா ஊருக்கு வந்தாலும் எங்கிட்ட பேசாது நானும் பேசமாட்டேன்.

******

காலேசுல படிக்கயில எங்கிளாசுல மொத்தம் முப்பத்தைஞ்சு பேரு, அதுல இருவது பேரு புள்ளைங்க. எங்க பசங்க எப்ப பார்த்தாலும் கடலை போட்டுக்கிட்டே இருப்பாங்க. எனக்கு அது புடிக்காது... நா வெளியில பொயிட்டு வகுப்பு ஆரம்பிக்கும் போதுதான் உள்ளே வருவேன்.

ஒருநா இப்படித்தான் நான் பிஸிக்ஸ்ல படிக்கிற ரமேசைப் பார்க்கப் போனேன். அவனும் பிள்ளைங்ககிட்டதான் பேசிக்கிட்டு இருந்தான். என்னைப் பார்த்ததும், "வாடா மகேசு... சும்மா உள்ளே வா" அப்படின்னு கூப்பிட, உள்ளே போனேன்.

"பிரண்ட்ஸ்... இவன் எம் பிரண்ட்... ஒண்ணாப்புல இருந்து ஒண்ணா படிச்சோம்..."

"ஹாய்..."

"....." பேசாமல் நின்னேன்.

"என்னடா உன் பிரண்ட் ஊமையா?" என்றாள் ஒருத்தி.

"இல்ல ரமா... இவனுக்கு பொண்ணுககிட்ட பேச கூச்சம்... அதான்..."

"அலோ... சும்மா பேசுங்க... நாங்க ஒண்ணும் முனுங்கிடமாட்டோம்..." என்றாள் அவள்.

"அவரு பேசினா முத்து உதிர்ந்திடுமோ என்னவோ" என்றாள் இன்னொருத்தி.

அதுக்கு மேல அங்க நிக்க பிடிக்காம நா வாரேண்டான்னுட்டு வேகமா வந்திட்டேன்

சாயந்திரம் காலேசு விட்டுப் போகையில, "மகேசு நில்லுங்க நானும் வாரேன்... பேசிக்கிட்டே போகலாம்" அப்படின்னு சொல்லிக்கிட்டே சைக்கிளை வேகமாக ஓட்டி என்னருகில் வந்தாள் ரமா.

அவளைப் பார்த்து லேசா சிரிச்சு வச்சேன். அவ என்னென்னமோ பேசினா, ஆனா நான் எதுவும் பேசலை. இது தினமும் தொடர்ந்துச்சு... பிரண்ட்செல்லாம் அவளை நான் லவ் பண்றதா சொன்னாங்க... நா சிரிச்சுக்கிட்டேன்...

படிப்பு முடிஞ்சப்ப அவ எங்கிட்ட லவ்வை புரப்போஸ் பண்ணினா, அப்பவும் நான் எதுவும் சொல்லலை. அதுக்கப்புறம் அவளை பார்க்கவேயில்லை. சில நாளுக்கு முன்னால திருச்சி போறப்போ பஸ்ல பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுக்கிட்டா, ஆனா நான் பாக்காத மாதிரி நின்னுக்கிட்டேன். என் முதுகுக்குப் பின்னால அவ பெருமூச்சு விட்ட சப்தம் கேட்டுச்சு.

இப்பவும் எந்த பொண்ணுக்கிட்டயாவது பேசணுமின்னா உதறல் எடுத்துடும். சரிங்க காய்கறி வாங்க வந்தவன் மனசில உள்ளதை புலம்பிட்டேன். போதும் நம்ம கதை... வீட்டுக்குப் போறேன் நீங்களும் பின்னால வாங்க...

******

"இவ்வளவு நேரம் என்ன பண்ணுனீங்க"

"...."

"இப்புடி பேசாம இருந்தே காலத்தை ஓட்டிடுவீங்க போல"

அதுக்கும் பதிலாய் "...."

"ஆமா என்ன காய் வாங்கினீங்க..." என்றபடி கூடையை கவித்தவள், "கருமம்... இந்த முத்தக் கத்திரிக்காய எதுக்கு வாங்காந்தீங்க... அதுவும் பாதி பூச்சியா இருக்கு... எதாவது ஒண்ணு உருப்படியாத் தெரியுதா... எந்தலையில கட்டி வச்சு கழுத்தறுத்துப்புட்டாங்க... எத்தனை மாப்பிள்ளை வந்துச்சு... எல்லாத்தையும் விட்டுட்டு இந்த மங்குனிக்கு கட்டி வச்சிட்டாங்களே... காலமெல்லாம் இது கூட...."

நான் மெல்ல வெளியானேன்.

இது எப்பவும் நடக்குறதுதான்... இதுக்குத்தான் நான் என் கதையை சொன்னப்ப எம்பொண்டாட்டிகிட்ட சொல்லாதீங்கன்னு சொன்னேன். இல்லேன்னா அதுக்கும் சேர்த்து அர்ச்சனை விழுந்திருக்கும். இருங்க சொல்ல மறந்துட்டேனே... இப்ப நம்மளை சத்தம் போட்ட நம்ம அம்மணி யாரு தெரியுமா? சத்தமா சொல்ல முடியாதுங்க பக்கத்துல வாங்க... நம்ம நாலாப்பு கட்டச்சிதாங்க... என்ன செய்ய விதி சேர்த்துடுச்சு... சரிங்க, இன்னொரு நாளைக்கு இன்னும் சில கதைகளோட சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்

வியாழன், 9 செப்டம்பர், 2010

இதயமே... இதயமே...

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தவர் முரளி. ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணிகள் மத்தியில் வெற்றிப்படங்களை கொடுத்தவர்களில் முரளியும் ஒருவர்.

பிறந்தது கர்நாடகம் என்றாலும்  தமிழ்ப்படங்களில் மட்டுமே நடித்தார். வேறு மொழிப்படங்களில் நடிக்கவில்லை. அம்மா தமிழ் நாட்டவர் என்பதால் தமிழ்நாட்டை தாய் நாடாக நினைத்தவர். தனது குடும்பம் பற்றியோ தன்னைப் பற்றியோ தவறான செய்திகள் வராமல் வாழ்ந்தவர்.

தமிழில் 1984ஆம் ஆண்டு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான பூவிலங்கு படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து வெற்றி நாயகனாக வலம் வந்தார்.

தான் நடிக்கும் கதாபாத்திரம் என்னவோ அதை அப்படியே தனது நடிப்பில் கொண்டு வந்தவர் முரளி என்றால் மிகையாகாது. நடிகர் மோகன் படங்களில் பாடல்கள் எப்படி ஹிட் ஆகுமோ அது போல் இவரது படப் பாடல்களும் அனைவரும் ரசிக்கும்படி அமைந்தன.

பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராகவே நடித்துள்ளார். தனது மகன் அறிமுகமான பாணா காத்தாடி படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றினார். அதில் என்ன கதாபாத்திரம் தெரியுமா? மருத்துவக் கல்லூரி மாணவர். அதில் அவர் பேசும் வசனத்தில் "நான் இதயம் ராஜா, எம்.பி.பி.எஸ். நான் காம் ஆண்டு படிக்கிறேன்" என்பார். "இன்னமா காலேசு படிக்கிறாரு" என்று ஒருவன் சொல்வான். வயதானதே தெரியாத நடிகர்.

46 வயது மரணிக்கக் கூடிய வயதா..?. 'இதயமே... இதயமே... உன் மௌனம் என்னைக் கொல்லுதே..' என்று பாடி நடித்தவர், இதயவலியால் மரணமடைந்தார் என்னும் போது நமக்கு மனசு வலிக்கிறது.

மகன் நடிக்க வந்ததும் ஓய்வெடுக்க நினைத்திருப்பார் போல, ஆனால் நிரந்தர ஓய்வெடுப்பார் என்று குடும்பத்தார்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.

பூவிலங்கு, பகல் நிலவு, புது வசந்தம், நம்ம ஊரு பூவாத்தா, சாமி போட்ட முடிச்சு, இதயம், சின்ன பசங்க நாங்க, என்றும் அன்புடன், அதர்மம, என் ஆசை மச்சான், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், காதலே நிம்மதி, தினந்தோறும், தேசிய கீதம், இரணியன், ஆனந்தம், கடல் பூக்கள், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களை முக்கியமானவையாக சொல்லலாம்.

முரளி ஏராளமான விருதுகளை பெற்றிருந்தாலும் அவர் நடித்த கடல் பூக்கள் படத்துக்காக 2001ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.பி.எஸ். படித்துள்ள தனது மகளுக்கு மூன்று நாட்களுக்கு முன் சிறப்பான முறையில் நிச்சயதார்த்தம் செய்த முரளி அவரது திருமணத்தை கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அவரை அப்படி ஒரு சந்தோஷத்தை பார்க்க உனக்கு கொடுப்பினை இல்லை என்று காலன் கூட்டிச் சென்று விட்டான்.


நேற்றிரவு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முரளி இன்று காலை பிணமாகத் திரும்பினார்.

அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், ரசிகைகள் என தமிழகமே திரண்டு வந்து அஞ்சலி செய்கிறது. நாளை இந்தக் கலைஞனின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்படுகிறது.

முரளிக்கு அஞ்சலி செலுத்திய சிவக்குமார், "முரளி வயசே ஆகாதவர். அவருக்கு மரணம் என்றால் அந்தக் கடவுளைத்தான் சபிக்க வேண்டும்" என்றார். அது உண்மையே...

முரளியின் மரணத்தால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதுடன் முரளி என்ற மகா கலைஞனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

முரளி நீங்கள் மறைந்தாலும், பொட்டு வைத்த வட்ட நிலாவிலும்... ஈரமான ரோஜாவேயிலும்... இன்னும் எத்தனையோ கீதங்களில் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

மனசின் பக்கம் - III

பேராசை பெருநஷ்டம்:

இந்த வார 'டீலா நோடீலா' நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி கலந்து கொண்டார். அவரது கணவர் வர்மக்கலை மூலமாக நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அந்த தொழிலை மேம்படுத்த இருப்பதாகவும் சொன்னார். இலவசமாக மருத்துவம் என்ற அவர்களது நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள். ஆனால் நிகழ்ச்சியில் நடந்தது என்ன தெரியுமா?

ஆரம்பத்தில் அந்த அம்மா மிகப்பெரிய தொகை இருக்கும் பெட்டிகளை திறந்தார்கள். இருந்தும் அடுத்து வந்த சுற்றுகளில் நல்ல முன்னேற்றம் சிறு சிறு தொகைகள் வந்தன. அவருக்கான டீல் தொகையும் கூடி வந்தது.

கடைசிச் சுற்றுக்கு முந்தைய சுற்று முடிவில் அவருக்கு 17 லட்சமும் சில ஆயிரங்களும் பேங்கர் என்று சொல்லி அழைபேசியில் பேசுபவரால் டீலாக வைக்கப்பட்டது. இதற்கு நோடீல் கொடுத்தால், இருக்கும் இரண்டு பெட்டிகளில் அவரது கையில் இருக்கும் பெட்டியில் என்ன தொகையிருக்கிறதோ அது கிடைக்கும்.

அதுவரை விளையாண்டது போக மீதம் இருந்த தொகையோ ரூ.500 மற்றும் 50 லட்சம் மட்டுமே. பார்வையாளர்கள் வரிசையில் இருந்து டீல் என்ற குரல்கள் கேட்கத் துவங்கின. அவரது மாமியார் என்று நினைக்கிறேன், அவரும் போதும்மா என்கிறார். ஆனால் கணவன் மனைவிக்கு 50 லட்சம் கிடைத்தால் நல்லாயிருக்கும் என்ற ஒரு நப்பாசை.

இருவரும் கூடி ஆலோசித்தனர். கணவன் ஒரே முடிவாக நோடீல் கொடு என்றார். மனைவி கடிகார பெண்டுலமானர். இதுவா அதுவா என்ற குழப்பத்தில் இருந்தார். பின்னர் கணவனின் அன்புக் கட்டளை(?)க்கு இணங்கி நோடீல் கொடுத்துவிட்டார்.

தொலைக்காட்சிகளுக்கே உரிய சில பல நாடகங்களுடன் பெட்டியை திறந்தால் கேலரியில் உள்ள பெட்டியில் 50 லட்சம் இருக்க, அவரது பெட்டியில் வெறும் 500 ரூபாய் மட்டுமே. பின்னர் அழுகைகள், ஆத்திரங்கள் எல்லாம் வந்தன.

17 லட்சங்கள் எங்கே..? 500 ரூபாய் எங்கே..? மக்கள் சேவை செய்ய நினைத்தவர்கள் கிடைத்தது போதும் என்று போயிருந்தால்... 17 லட்சம் கையில்...  அவர்களது பேராசைக்கு கிடைத்த பரிசு... வெறும் 500 தானே.

கணவருக்கு வீட்டில் போய் என்ன கிடைத்திருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த சம்பவம் வாழ்நாளெல்லாம் அவர்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்?

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து..!

*****

மனித நேயமற்ற அரக்கன்:

எங்களுக்கு சமையல் செய்து கொடுத்துவிட்டு இரவு வேலைக்கு செல்லும் கிளினிங் கம்பெனி அண்ணன் ஒருவர், அபுதாபி வந்து ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே ஊருக்கு செல்ல கடந்த மூன்று மாதமாக கம்பெனியில் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களும் இழுத்தடித்தார்களே தவிர, விடுப்பு அளிக்க ஏனோ அவர்களுக்கு மனம் வரவில்லை.

அவருக்கு ஆறு மாதம் விடுப்பு இருந்தாலும் அவரது விசா டிசம்பரில் முடிவடைவதால் மூன்று மாதத்தில் வரவேண்டிய நிலை. அதனால் அவர்களிடம் தினமும் நச்சரிக்க, ஒரு கட்டத்தில் அவரது மேற்பார்வையாளர், 'எனக்கு ஒண்ணுமில்ல... நீ பெரிய ஆளுக்கிட்ட பேசு'ன்னு சொல்லிட்டு பங்களாதேஷ்க்கு ஆள் எடுக்க பொயிட்டான். இவரும் கம்பெனியில் பேச அவர்களும் போகச் சொல்லியாச்சு.

இங்கும் விமான டிக்கெட் கம்பெனிதான் கொடுக்க வேண்டும் என்ற விதி உண்டு. ஆனால் சில கம்பெனிகள் கொடுப்பதில்லை. (எங்க கம்பெனியிலும் இல்லை) அவரிடம் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்து காட்டிட்டு பாஸ்போர்ட் வாங்கிக்க என்று சொல்லியுள்ளார்கள். ( டிக்கெட் தொகை அவர்கள் கொடுத்தது போல் கணக்கில் காட்டத்தான் டிக்கெட்டுடன் வரச்சொன்னது).

அந்த அண்ணனும் இன்று இரவு சென்னை செல்லும் விமானத்தில் டிக்கெட் எடுத்து மகளுக்கு திருமணம் வைக்க இருப்பதால் நண்பர்களிடம் கடன் வாங்கி நகைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், சாக்லெட், பிஸ்கட் பாக்கெட்டுக்கள் என எல்லாம் வாங்கி விட்டார். ஊருக்குச் செல்ல பார்சலெல்லாம் கட்டி ரெடியாயாச்சு.

நேற்று காலை கம்பெனிக்கு சென்று எல்லா வேலைகளையும் முடித்து பாஸ்போர்டை வாங்க காத்திருந்த போது பங்களாதேஷில் இருந்து வெள்ளியன்று திரும்பிய அவரது மேற்பார்வையாளன் கம்பெனிக்கு போன் செய்து அந்த ஆளுக்கு பாஸ்போர்ட் கொடுக்காதே... அவருக்கு மாற்று ஆள் இல்லை என்று சொல்லிவிட்டான். மேலும் அலுவலகத்திற்கும் வந்து தடுத்துவிட்டான். அவரும் எவ்வளவோ பேசியிருக்கிறார் ஆனால் அவன் செவி சாய்க்கவில்லை. இப்ப போகமுடியாது என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறான்.

ஒரு கட்டத்தில் மனது உடைந்த அண்ணன் வேலையை ராஜினாமா செய்து விட்டார். இருந்து ஒரு மாத வேலை செய்ய வேண்டும் என்ற விதியின்படி அவரை வேலைக்கு வரச் சொல்லிவிட்டார்கள். இப்ப டிக்கெட் பணத்தில் பாதிதான் கிடைக்கும். வாங்கிய பொருட்களை பார்சலில்தான் போட்டுவிட வேண்டும். அவர் மனதொடிந்து போய் இருக்கிறார்.

அவரது ஆசைகளை நிராசையாக்கியவன் ஒரு அரபியோ, பாகிஸ்தானியோ, மலையாளியோ அல்ல... நம்ம தமிழன் தான்.

தமிழனுக்குத் தமிழன் எதிரிதான் என்பதை நிரூபித்துவிட்டான் பரதேசி.

*****

நான் பார்த்த படங்கள் ஒரு பார்வை:

நான் மகான் அல்ல: ஆரம்பத்தில் டீலக்ஸ் பஸ் போல் சென்ற படம் முடியும் போது கிராம்ங்களுக்கு செல்லும் டவுன்பஸ் போலாகிவிட்டது. கார்த்திக் வேலை தேடுவதும் காஜலை லவ்வுவதும் போர். நம்மளை மாக்கானாக்கும் படம்.

பாணா காத்தாடி: முரளியின் மகனும் கதாநாயகியும் நல்ல தேர்வு. பிரசன்னா வில்லன் என்றால் அவருக்கு மேல் ஒருவர் இருக்கிறார் என்று ஒரு இடத்தில் மட்டும் காட்டுகிறார்கள். வித்தியாசமான முடிவா வில்லன்கள் இருக்க கதாநாயகன் கொல்லப்படுகிறார். கதையை நகர்த்தத் தெரியாமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். காத்தாடி பறக்கவில்லை.

குற்றப்பிரிவு: போலீஸ் ஸ்டோரி என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஸ்ரீகாந்த், பிரித்விராஜ் நல்ல தேர்வு. போரடிக்காமல் போகிறது. சில குறைகள் இருந்தாலும் குற்றம் சொல்ல முடியாத படம்

களவாணி: கிராமத்துக் கதைக்களம், அலட்டலில்லாத அசத்தலான நாயகன், நாயகியுடன் வயல்களும் வரப்புகளும் நடித்துள்ளன. மீண்டும் பார்க்க வேண்டும் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கும் படம். களவாணி உள்ளங்களை களவாடும்.

வம்சம்: நம்ம தலைவரின் வம்சம் நடித்த படம். வித்தியாசமான முயற்சி, கிராமத்துக் கதையாக இருந்தாலும் பலி வாங்கும் கதை என்பதால் வெட்டுக்குத்து நிறைந்துள்ளது. நாயகிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு... நாயகனுக்கு..? இயக்குநருக்கு கேமிராவுக்குள் ஐயா தெரிந்திருப்பார் போல பல இடங்களில் நாயகனுக்காக இறங்கிப் போயிருப்பது தெரிகிறது. வம்சம் வளராத குத்துச் செடி.

விருந்தாடி: அய்யோ... தியேட்டர் பக்கம் போயிடாதீங்க... அப்புறம் என்ன நடந்தாலும் நான் பொறுப்பில்லை சொல்லிப்புட்டேன்.

மனசின் பக்கம் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்





'எருமை மாடே...'
எட்டாப்பு சாரும்

'களவாணிப்பயலே...'
கணக்கு வாத்தியாரும்

'மூதேவி...'
முத்துராமன் ஐயாவும்

'முண்டம்...'
ராமசாமி வாத்தியாரும்

'தண்டம்...'
தனசேகரன் சாரும்

'மரமண்டை...'
இங்கிலீஷ் வாத்தியாரும்

இப்படி பலபேரில் அழைத்து
பட்டை தீட்டிய
பிரமாக்கள் எத்தனையோ..?

அத்தனையிலும் தனியாய்
அழுத கண்ணும்...
ஒழுத மூக்குமாய்...

அம்மா முந்தானைக்குள்
ஒளிந்தவனை வாரி அணைத்து

'அ... ஆ...' கற்றுக் கொடுத்த
ஒண்ணாப்பு டீச்சர்
மனசுக்குள் உசரமாய்..!


(என் ஆசிரியர்களுக்கும், நல் ஆசிரியர்களுக்கும், ஆசிரிய நண்பர்களுக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்த்துக்கள்.)

-'பரிவை' சே.குமார்.

சனி, 4 செப்டம்பர், 2010

நினைவில் அவள்..!


நண்பனின் திருமணம்...
சென்னையிலிருந்து செழியன்...
கோவையில் இருந்து கோபால்...
திருச்சியில் இருந்து தில்லை...
மதுரையில் இருந்து மாறன்...
உவகையுடன் உள்ளூர் நண்பர்கள்...

சொந்தங்களுக்கு மத்தியில்
நண்பர்களின் முற்றுகை...
இராக்குடியின் ராஜ்ஜியத்தில்...
எல்லாரும் பயணிக்க..

கூடிக்களித்த காலங்கள்
பழங்கதையாய் அவரவர் பேச்சில்...
ஏனோ தெரியவில்லை
எல்லார் பேச்சிலும்
அங்கு வராத அவள் இருந்தாள்..!

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(யார் மனதையும் புண்படுத்தாது என்ற மிகுந்த நம்பிக்கையில் எழுதப்பட்ட நகைச்சுவைப் பகிர்வு)

வருடம் : 2016
இடம் : சட்டசபை, சென்னை

'மத்தியில் கூட்டாச்சி... மாநிலத்தில் சுயாட்சி' என்ற தீவிர கொள்கைப் பிடிப்போடு இருக்கும் 'குடும்பக் கட்சி'யின் ஆட்சியில் எதிர்கட்சித் தலைவராக 'மலைநாடு மங்கை' கட்சியின் 'சும்மா'வுக்கு பிடித்தமான 'குங்குமப் பொட்டு' வெந்நீர் தனது பரிவாரங்களுடன் அடிக்கடி வெளி நடப்பு வெடியை பத்தவைத்துக் கொண்டிருந்தார். சும்மாவின் சுமைதாங்கிகளாய் 'இரண்டுங்கெட்டான்' கட்சியின் மகத்துவரும் 'மறுமலர்ச்சி'யே இல்லாத கட்சியின் கள்ளத்தோணியும் ஒரு சில எம்.எல்.ஏக்களுடன் கூட்டாஞ்சோறு ஆக்கிக் கொண்டிருந்தனர். 'ஆங்க்' கட்சித்தலைவர் விழிச்சகாந்த் மட்டும் 'நான் ஒருத்தந்தான் ஊரு...' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.மத்தியில் ஆட்சியை பகிர்ந்து கொடுத்தாலும் மாநிலத்தில் ஐஸ்கிரீமுக்கு ஏங்கும் குழந்தையாக இருக்கும் 'கதர்சட்டை' ஜால்ராவை தட்டும் பணியை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

சரி, இனி அங்கே என்ன நடக்குதுன்னு பார்ப்போம். காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை, இலங்கை பிரச்சினை என மூன்று முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் சன்லின் அழைப்பு விடுத்திருந்தார்.

கூட்டத்தில் பேசிய அழகர் (அப்பவும் இவரான்னு கேக்குறது தெரியுது... என்ன செய்ய வழி நடத்த ஆள் வேணுமே) நமது கழகத்தையும் நாட்டு மக்களையும் கட்டிக்காத்த நம்ம தலைவர் மஞ்சள்துண்டு அவர்கள் மக்களுக்காக வண்டியில் அமர்ந்தும் உழைத்தார்கள். அவர்களுக்கு இன்னும் மக்கள் சேவை..."

"எந்த மக்களுக்காக உழைத்தாருங்க..." முணங்கினார் இரண்டுங்கெட்டான் மகத்துவர்.

"என்ன மகத்துவரே... சொல்ல வர்றதை சத்தமா சொல்லுங்க"

"ஒண்ணுமில்லை யூ கண்டினியூ"

"மக்கள் சேவை செய்ய இன்னும் எண்ணமிருந்தாலும் அவரது உடல் ஒத்துக் கொள்ளவில்லை. மக்கள் சேவை மட்டுமே எனது தேவை என்றுதான் இருக்கிறார். அவர் விடும் மூச்செல்லாம் மக்கள் நலனுக்காத்தான் என்பதை நாடே அறியும்.இந்த நூற்றண்டில் மக்களே எல்லாம் என்று இருக்கும் இவரைப்போல் இன்னொரு தலைவர் பார்க்க முடியுமா? படுத்துக் கொண்டு எங்களுக்கெல்லாம் மக்களை வழி நடத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்."

'அவரா வீட்டுல இருப்பேன்னாரு... மவனே செத்தா முதல்வராத்தான் சாவேன்னு அடம்பிடிச்சவரை ஆண்டது போதுமுன்னு அடக்கியில்ல வச்சிருக்கோம்' மனசுக்குள் சொல்லிக் கொண்டார் முதல்வர் சன்லின்.

"அவரின் வாரிசு நம்ம முதல்வர் அப்பாவின் பாணியில் மக்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

"ஐயா அழகரே... உங்க குடும்பக்கட்சி புராணம் கேட்க நாங்க வரலை... முக்கிய பிரச்சினை குறித்து பேச வந்திருக்கோம். அதை விட்டுட்டு இதை பேசிக்கிட்டு... மக்கள் மக்கள்ன்னு மக்களை மாக்கானாக்காதீங்க... ஆங்க்..." கடுப்பில் கத்தினார் விழிச்சகாந்த்.

"இருங்க தம்பி... அவசரப் படாதீங்க... எங்க குலப் பெருமைய சொல்லிட்டு ஆரம்பிப்பமுல்ல..."

"அதுக்குள்ள நான் ஒரு தூக்கம் போட்டுடுவேன்" என்று பக்கத்திலிருந்த கிழங்கோவிடம் கொட்டாவி விட்டபடி முணங்கினார் வாசம்.

"சரி... மக்கள் பிரச்சினைக்கு வாறீங்களா வெளிநடப்பு செய்யட்டுமா" முணுங்கி முணுங்கி பேசினார் குங்குமப் பொட்டு வெந்நீர்.

"சரி... மக்கள் பிரச்சினை குறித்து முதல்வர் பேசுவார்"

"வணக்கம்... நமக்கு இப்ப இருக்கிற மூன்று முக்கிய பிரச்சினை இது. ஒண்ணு காவிரி நீர், இரண்டாவது முல்லைப் பெரியாறு, மூன்றாவது இலங்கை..."

"இதை வச்சே எத்தனை காலம்தான் ஓட்டுறது..." முனங்கினார் கண்மூடி.

"சும்மா இருமய்யா... நம்ம ஆட்சி நடக்குது எதிர் கட்சி மாதிரி பேசுறே..." கடிந்து கொண்டார் சங்கிலி கருப்பன்.

"ஆமா... குடும்பத்துல்ல உள்ளவன் எல்லாம் அமைச்சராயிட்டான். உனக்கு அறங்காவல்துறை எனக்கு தமிழ் வளர்ச்சித்துறையின்னு ஒண்ணத்துக்கும் உதவாத துறைகள்... இதுல கட்சிக்கு சப்போர்ட் பண்ணனுமாக்கும்..." கண்மூடி.

"என்ன பண்றது... சுகமா பொழச்சோம்.... இப்ப வாழவாவது வழி பண்ணிக் கொடுத்து இருக்காங்கள்ல... அதுக்காச்சும் சும்மா இருப்போம்" - சங்கிலி கருப்பன்

"அங்க பாரு... அடிகிரி நிதியமைச்சராம், குருவி போக்குவரத்துத் துறை, அடிகிரி மைந்தன் கல்வி அமைச்சர்... அப்புறம் அங்க பாரு மத்தியிலதான் ஜவுளிக்கு இடமுன்னா மாநிலத்துல சட்டத்துறை அமைச்சர் சூர்யநிதி, இதுக்கு மேல வம்சம் சுகாதரத்துறை, வம்சத்தை உருவாக்கிய கோவை கில்லாடி பொதுப்பணித்துறை..."

"என்னய்யா உங்கிட்ட வந்து உட்கார்ந்தது தப்பா போச்சு... அடிகிரி வேற ஒரு மாதிரி பாக்குது. தென்மாவட்டத்துல அது கால்ல கிடந்து நல்ல பேரு வாங்கி வச்சிருக்கேன். கெடுத்துடாதய்யா... சத்த சும்மா இருய்யா..." பதவிக்கு ஆப்பு அடிச்சிடுவாங்களோன்னு பயத்தோட முணங்கினார் சங்கிலி கருப்பர்.

"என்ன சங்கிலி, கண்மூடி என்ன சொல்றாரு..." என்றார் அடிகிரி.

"ஒண்ணுமில்லேன்னே... பைபாஸ் சர்ஜரி பண்ண எடத்துல வலிக்கிற மாதிரி இருக்காம்... அதான் சொன்னாரு..."

"நீங்க வேணா போய் ரெஸ்ட் எடுங்க" என்றார் அடிகிரி நக்கலாக.

"இல்ல இப்ப பரவாயில்லை..." எங்கே நம்ம போனா நிரந்தரமாக ஓய்வு கொடுத்துடுவாங்களோ என்ற பயத்தில் வேகமாக மறுத்தார் கண்மூடி.

"கேரளா பிரச்சினைக்கு நான் புதுசா ஒரு சொல்யூசன் வச்சிருக்கேன். அது என்னன்னா..." முதல்வர் சன்லின் பேச

"என்ன சம்மந்தம் பண்ணலாம்ங்கிறீங்களா?" நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் வெந்நீர்.

"கரெக்ட் வெந்நீர்... சும்மாகிட்ட சும்மா இருந்தாலும் அப்பப்ப உங்க மூளையும் நல்லா வேலை செய்யுது...அதுக்கு பாராட்டுக்கள்"

"பாராட்டு இருக்கட்டும்... இதெல்லாம் நடக்கிற வேலையா?"

"ஏன் முடியாது நாம முதல்ல பொண்ணெடுப்போம். அப்புறம் பொண்ணு கொடுப்போம்... சம்மந்திங்களா ஆயிட்டமுன்னா நமக்குள்ள சண்டை வராதுல்ல... இது குறித்து கேரள முதல்வருக்கு விரிவா ஒரு லெட்டர் எழுதியிருக்கேன்."

"நீயும் லெட்டர் கதை விடுறவன்தானா... ஐயோ" புலம்பினார் வாசம்.

"என்ன வாசம் தலைவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டது அதை அவ்வளவு சீக்கிரம் விட முடியுமா? சொல்லுங்க."

"அது சரி"

"அவருகிட்ட இருந்து நல்ல பதில் வருமுன்னு நினைக்கிறேன். அவரு ஓகே பண்ணிட்டா இரண்டு அரசும் சேர்ந்து ஒரு சட்டம் ஒன்று இயற்றி அப்புறம் சம்மந்தம் வச்சிக்கலாம்."

"சரி காவிரிக்கு என்ன திட்டம் இருக்கு... பேசாம ஒகேனக்கல்ல கொடுத்துட்டு காவிரி வாங்கிடலாமா..." கிழங்கோவன் கிளறினார்.

"அதுக்கு அவசியம் இல்லை... எப்பிடி இருந்தாலும் காவிரி டெல்டா பகுதிகள்ல நல்ல மழை பேஞ்சா அவங்கதானா திறந்து விடப்போறாங்க. அதனால வருஷா வருஷம் நல்ல மழை பெய்யணுமின்னு கோவில்கள்ல கெடாவெட்டி பூஜை போடச்சொல்லுங்க... அது போதும். "

"பார்றா... நல்ல திட்டமாவுல்ல இருக்கு. ஆமா குடும்பக்கட்சி ஆடு இலவசமா கொடுக்குமா?" மகத்துவர் கிண்டலடிக்க

"ஆமா கொடுத்த டிவி எல்லாம் ஓடாம கிடக்கு... இதுல ஆடு வாங்கி கொடுத்துட்டாலும்.. ஆங்க்..." விழிச்சகாந்த் மகத்துவருக்கு பதில் சொன்னார்.

"இலங்கை மக்கள் நலனுக்கான திட்டம் என்னன்னு சொல்லுங்க..." கள்ளத்தோணி.

"கள்ளத்தோணி இதுல எப்பவும் ஆர்வமானவரய்யா.... இது குறித்து பேச கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பிசின் தலைமையில ஒரு குழு இலங்கை போயிருக்கு. அதுல மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கவிதாயினியும் தகவல் தொழில் நுட்ப அரசரும் போயிருக்காங்க..."

"ரெண்டு பேருமா... அது சரி... பேமிலி டிரிப்பா..." வெந்நீர் கேட்க

"ஏய் அதிகம் பேசாத மரியாதை கெட்டுடும்... யாரை தப்பா பேசுறே..." குதித்தது அடிகிரியும் வம்சமும்.

"விடுங்கப்பா... அவரா பேசுறாரு... சும்மா சொல்லிவிட்டிருக்கும்"

"இந்த பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?" என்றார் விழிச்சகாந்த.

"உங்ககிட்ட விட்டா இலங்கைக்கு நேர போயி ஒரே ஆளா தீர்த்து வச்சிருப்பீங்க... யாருக்கு தெரியுது" மகத்துவர் பிட்டைப் போட

"சும்மா இருய்யா... நம்ம பிரச்சினைக்கு விருதாச்சலம் இருக்கு... இங்க வேண்டாம்"

"சரி... முக்கிய பிரச்சினையின்னு சொல்லிட்டு கோமாளித்தனமா பேசத்தானா கூப்பிட்டிங்க. நாங்க கிளம்புறோம்" வெந்நீர் எழு,பின் தொடர்ந்த சும்மாவின் அடிபொடிகளிடம் "இப்பவே அம்மாவுக்கு போனைப் போட்டு நாளைக்கு யார் பேர்ல இது குறித்து கட்டுரை எழுதலாமுன்னு கேட்டு குடும்பக்கட்சியை கிழிக்கிறோம்". மெதுவான குரலில் சொன்னார்.

"அப்பா எனக்கு அஜீத் பட சூட்டிங் இருக்கு... இப்பவே லேட்டாயிடுச்சி... வரட்டா..." குருவி பறக்க,

"ஐய்யய்யோ... இன்னும் ரெண்டு நாள்ல லண்டன்ல நடக்குற தந்திரன் பாடல் கேசட் வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு இருக்கு அதுக்கு லண்டன் போகனும் நான் கிளப்புறேன்" என்றது சூர்யநிதி.

சூட்டிங் போகணும் என்று வம்சமும், விஜய்கிட்ட அடுத்த படம் குறித்த டிஸ்கஷன் இருக்கு என்று அடிகிரி மைந்தனும் பறக்க

"இன்னேரம் ரெண்டு கட்டப் பஞ்சாயத்து பண்ணி காசு பாத்திருக்கலாம்" என்று அடிகிரியும், கோவை கில்லாடியும் கிளம்ப

"பாரு எல்லா அமைச்சரும் தொழிலுக்கு போயாச்சு. மக்கள் பிரச்சினை ஊறுகாய் மாதிரி அப்பப்ப இப்படி ஒரு அலம்பல். இனி அடுத்து எப்பன்னு தெரியலை இதை நாம செய்தியா போடணும், நாம போடலைன்னாலும் இன்னேரம் குடும்பத் தொலைக்காட்சியில பிளாஷ் நியூஸ் வந்திருக்கும். அப்புறம் நாளை கரனும், முரசும் பக்கம் பக்கமா எழுதும்... நாமலும் எழுதத்தானே வேணும்." என்று முணங்கியபடி இரண்டு நிருபர்கள் வண்டியை எடுத்தனர்.

-'பரிவை' சே.குமார்.

போட்டோஸ் : கூகிள்