இரண்டு நாட்கள் இரவு நேர ஊரடங்கு என்றாலும் பகலிலும் வெளியில் செல்ல மனமில்லை... அறையில்தான்... பழனி ஐயா கொடுத்த வண்ணதாசனின் ஒரு சிறு இசை வாசித்து முடித்தாச்சு, ட்ரைவிங் லைசென்ஸ் என்னும் மலையாளப் படம், ஒரு சிறுகதை, ஆரம்பித்திருக்கும் புதிய நாவலில் அடுத்த பாகம் என ஏதாவது ஒன்றை எழுதலாம் என்ற எண்ணம் மனதளவிலேயே நிற்கிறது. நிகழ்வுகளின் தீவிரம் இன்னும் கூடுமோ என்ற அச்சமே மனமெல்லாம் நிறைந்து நிற்கிறது.
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
சனி, 28 மார்ச், 2020
சனி, 21 மார்ச், 2020
வெள்ளி, 20 மார்ச், 2020
மனசு பேசுகிறது : நிரபராதிகளின் காலம்
படைப்பு 'ஹைநூன்பீபி நினைவுச் சிறுகதைப் போட்டியில் இருக்கும் எனது கதையை அங்கு சென்று வாசித்து, தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்... கதையை வாசிக்க...
வியாழன், 19 மார்ச், 2020
சினிமா : ஐயப்பனும் கோஷியும் (மலையாளம்)
பதிவுக்குள் போகுமுன் COVID-19க்காக சில வரிகள்
கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் படுபயங்கரமாக இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. சில நாடுகள் வயதானவர்களுக்கு சிகிச்சை இல்லை என்று சொல்லியிருப்பது மிகப்பெரிய கொடுமை... வேதனை... வரும் நாட்களில் இறப்பு விகிதம் இன்னும் அதிகரிக்கும்.
வெள்ளி, 13 மார்ச், 2020
எதிர்சேவையில் என்னுரை
எந்த ஒரு அணிந்துரையும் இல்லாமல் வந்திருக்கும் எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் நான் எழுதியிருக்கும் என்னுரை உங்கள் பார்வைக்கு.
![]() |
| (அன்பின் ஐயா. முனைவர் மு.பழனி இராகுலதாசன்) |
‘நீங்களும் கதை
எழுதலாமே..?’
இந்த வரிகள் எனது பேராசான்
மு.பழனி இராகுலதாசன் அவர்களிடமிருந்து வந்தபோது நானும் முருகனும் எல்லா
மாலையும் போல அவருக்கு வலம் இடமாக சைக்கிளை உருட்டியபடி, பேசிக் கொண்டே நடந்து
கொண்டிருந்தோம்.
அவரின் கேள்விக்குப் பின் 'நானெல்லாம்
எழுதுறதா..?' என்ற
வார்த்தை எப்பவும் போல் சிரிப்போடு வந்தது. 'அதெல்லாம்
எழுதலாம்... நீங்க எழுதிக்கிட்டு வாங்க... பார்ப்போம்' என்றார்.
அதன் பின்னான நாளில் முதல் கதை... அதுவும் கல்லூரியில் படிக்கும் மாணவன் எழுதிய
கதை என்னவாய் இருக்கும்... ஆம்... அதேதான்... காதல் கதை... கொடுத்ததும் வாங்கி
வைத்துக் கொண்டார். பின்னொருநாளில் 'நல்லாயிருக்கு...
இன்னும் எழுதுங்க...'
என்றார் தோள் பிடித்து அணைத்துபடி. நல்லாயிருந்ததா என்பது தெரியாது ஆனாலும்
அவர் சொன்ன வார்த்தைதான் என் எழுத்துக்கான விதையை என்னுள் விதைத்தது.
கல்லூரியில் படிக்கும் போது
எழுதிய கதைகளில் முதல் கதைக்குப் பெயரிட்டு தினபூமி கதை பூமிக்கு அனுப்பச்
சொன்னவர் அவரே. அந்தக் கதை வெளியானபின் தொடர்ச்சியாய் கதைகள் அனுப்பி வெளிவர...
வெளிவர... எழுத்துப் போதை என்னுள் இறங்கியது... விடுமுறை தினங்களில் கதை எழுதுகிறேன்
என உட்கார்ந்து வீட்டில் திட்டு வாங்குவது தொடர்கதையானது.
முதல் கவிதையை எழுதி ஐயாவிடம்
கொடுத்ததும் வாசித்து, ஒன்றும் சொல்லாமல் வாங்கி வைத்துக் கொண்டார். சில
நாட்களுக்குப் பிறகு அதை வெள்ளைத் தாளில் எழுதச் சொல்லி தாமரை இதழுக்கு அனுப்பி
வைத்ததுடன் கவிதை வெளியான புத்தகத்துடன் வந்து மகிழ்வாய்ச் சொன்னவரும் அவரே.
அந்தக் கவிதைக்காக எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் வாழ்த்தையும் பெற்றேன். போன
முறை விடுமுறையில் சென்றபோது நான் எழுதி வைத்திருக்கும் 'வேரும்
விழுதுகளும்' என்ற
கிராமத்து நாவலை வாசித்தவர் இதை புத்தகமாக்க வேண்டும்... நான் இதைப் பற்றி நிறைய
எழுதித்தர வேண்டும் எனவும் சொன்னார். அது புத்தகமாகும் போது ஐயாவின்
அணிந்துரையுடன்தான் வரவேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.
என் எழுத்து இடைநில்லாப்
பேருந்து போலில்லாமல் கல்லூரிக்காலம்,
திருமணத்துக்குப் பின்,
அமீரக வாழ்க்கை என இடை நிறுத்தி... இடை நிறுத்தியே பயணித்தது... இப்பவும்
பயணித்துக் கொண்டிருக்கிறது... அமீரக வாழ்க்கையில்தான் வலைப்பூ அறிமுகம்... அதில்
எழுத ஆரம்பித்த எழுத்துக்களே வாழ்க்கைக் கதைகளை... குறிப்பாக கிராமத்து மனிதர்களின்
வாழ்வைப் பேச ஆரம்பித்தது. பல நண்பர்கள் கதையில் சோகமே முடிவாய் வருவதைக் குறித்து
என்னுடன் சண்டையிட்டிருக்கிறார்கள்... அழுகாச்சிக் கதை இதெல்லாம் எவன் வாசிப்பான்
என்றும் சொல்லியிருக்கிறார்கள். வாழ்க்கைக் கதைகள் எப்பவும் வலி நிறைந்தவையே...
அது ஒருபோதும் ஜிகினா பூசி மேடையேறுவதில்லை என்பதைப் அறிந்தவன் நான் என்பதால்
அவர்களின் பேச்சுக்களை பேச்சாய் மட்டுமே எடுத்துக் கொண்டேன்... என் எழுத்தில்
மாற்றம் நிகழ்த்தாமல்.
குடும்பம்... குழந்தைகள் தூர
தேசத்தில் இருக்க... அமீரகத்தில் ஒரு கட்டில் வாழ்க்கையில் சேணம்
பூட்டிய குதிரையாய் அலுவலகம்,
அறை என்று தொடரும் நாட்களில்... வலியை,
சோகத்தை, வெறுமையைப்
போக்கும் தோழனாய் அமைந்தது இந்த எழுத்து... வலைப்பூவில் எனது கதைக்கான நண்பர் வட்டம்
விரிந்து பரந்ததில் அமீரகத்தில் வந்த பின் எழுதியவைதான் முக்கியக் காரணம்...
முகமறியா நட்புக்களை உறவாக் கொடுத்ததும் இந்த எழுத்துத்தான்.
எழுத்து ஒரு வரம்... அது
எல்லாருக்கும் கை கூடுவதில்லை என்றும் சொல்பவர்களைப் பார்த்தால் எனக்குச் சிரிப்புத்தான்
வரும். நானெல்லாம் கல்லூரிக்குப் போய், ஒரு உந்துதலின் பேரில்தான் எழுத ஆரம்பித்தேன்.
எழுத எழுதக் கதைகளுக்கான களமும் எழுத்தின் வீச்சும் மாறிக் கொண்டேதான்
இருக்கிறது... கல்லூரிக் காலத்தில் எழுதிய கதைகளுக்கும் இப்போது எழுதும்
கதைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என் எழுத்து நடையில். எல்லாராலும் எழுத
முடியும்... யாருக்கும் எழுத வராதென்றெல்லாம் சொல்ல முடியாது... எழுத எழுத எழுத்து
நடை, களம், காட்சிப்
படுத்துதல் என எல்லாமே உங்களிடம் ஒட்டிக் கொள்ளும். அதன்பின் அதை யாராலும் பிரிக்க
முடியாது... குறிப்பாக நீங்கள் யாருக்காகவும் உங்கள் எழுத்தை மாற்றாத பட்சத்தில்
என்பதே நான் நண்பர்களிடம் சொல்வதும் எனக்குள் சொல்லிக் கொள்வதும்... ஒரு போதும்
அடுத்தவருக்காக எழுத்தை மாற்றியதில்லை... என் எழுத்து எப்பவும் இப்படித்தான்.
என் கதைகள் நிறையப் போட்டிகளில்
பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. அப்படி பரிசு பெற்ற கதைகள்தான் பெரும்பாலும் இந்தத்
தொகுப்பில் இருக்கின்றன. எல்லாக் கதைகளுமே
வாழ்வின் எதார்த்தம் பேசுபவையாகத்தான் இருக்கும்.
என்னைப் பொறுத்தவரை எதுவுமே
அவ்வளவு எளிதாக அமைந்து விடாது... தடைகளைத் தாண்டிப் பயணிப்பது என்பது பல
நேரங்களில் முடியாமலேயே போய்விடும் என்பதால் முயற்சி மேற்கொள்வதில் கூட யோசனையே
முன் நிற்கும்... பொருளாதாரமும் முக்கியக் காரணியாக இருப்பதால் முயற்சிக்காமலேயே
நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை இன்று வரை. சில மாதங்களுக்கு முன் உன் கதைகளைப்
புத்தகமாக்குவோம் என அமீரக வாசிப்பாளர் குழும ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான அண்ணன்
ஆசீப் மீரான் அவர்கள் எடுத்த முயற்சி சில காரணிகளால் தள்ளிப் போய்விட்டது
என்றாலும் முதல் விதை அவர் போட்டதுதான்... அவருக்கு என் முதல் நன்றி.
எந்த ஒரு முயற்சியும் எனக்கு
வெற்றியைக் கொடுப்பதில்லை என்ற வெறுப்பின் உச்சத்தில் இருந்தபோது நாம் பயணிப்போமென
உற்சாக மூட்டி, அதற்கான முயற்சியில் இறங்கிய தம்பி நெருடாவிற்கும் இந்தப்
புத்தகம் வெளிவரப் பேசி, கதைகளை அனுப்பச் சொல்லி எல்லாமுமாய் முன் நின்ற தம்பி கவிஞர்
பிரபு கங்காதரன்-க்கும் நன்றி என்று சொல்லித் தள்ளி வைப்பதைவிட இந்த உறவு
இறுதி வரை தொடர வேண்டும் என நான் வணங்கும் தெய்வத்திடம் பிரார்த்திக்கிறேன்.
நான் எதாவது எழுதி, அதற்கான
பரிசுத் தொகையோ புத்தகமோ வீட்டிற்க்கு அனுப்பப்படும் போது உடனே அதை போட்டோ எடுத்து
வாட்ஸ் அப் பண்ணி விடுவதுடன்... இவ்வளவு எழுதி வைத்து ஏன் இன்னும் புத்தகம்
ஆக்காமல் இருக்கீங்க எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் என் அன்பு மனைவி நித்யாவுக்கும், எங்க அப்பா
கதை எழுதியிருக்காங்க என கதை வெளியான புத்தகத்தை கையில் பிடித்தபடி பள்ளிச்
சிறுமியாய் வீதியிலிருக்கும் நட்புக்களுக்கு காட்ட ஓடிய என் செல்ல மகள் ஸ்ருதி-க்கும், நானும் கதை
எழுதுறேன் என ஏதாவது கிறுக்கி,
ஆங்கிலத்தில் கதை எழுதி பள்ளியில் இரண்டாம் பரிசு பெற்ற என் செல்ல மகன் விஷால்-க்கும்
நன்றி என்பதைவிட அன்பு முத்தங்கள் ஆயிரம் ஆயிரமாய்...
இத் தொகுப்புக்காக என்றில்லாமல்
இந்த ஆண்டு புத்தகம் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் நான் எனது வலையில்
எழுதியதில் 50
கதைகளை பிடிஎப் ஆக்கி நண்பர்கள் சிலரிடம் கொடுத்த போது, அதை என் மீதான அன்பின்
பேரில் முழுவதும் வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் தங்களின்
முகநூல் பக்கங்களிலும் எழுதிய கவிஞர் பூபகீதன், இராஜாராம்,எழுத்தாளர்
நௌஷத்கான், பாலாஜி பாஸ்கரன், சுடர்விழி ஆகியோருக்கும் நன்றி.
எனது எழுத்தை வலைப்பூவில்
பத்தாண்டுகளாக வாசித்துத் தங்களது கருத்துக்களைத் தொடர்ந்து சொல்லிவரும் வலை
நட்புக்கள் அனைவருக்கும்,
என் எழுத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் அகல், முத்துக்கமலம், காற்றுவெளி, தேன்சிட்டு, மின்கைத்தடி மற்றும்
என் கதைகளை வெளியிட்ட மின்னிதழ்களுக்கும்,
அடிக்கடி
கதையைக் கேட்டு
வாங்கிப் பிரசுரிக்கும் ‘எங்கள் பிளாக்’ ஸ்ரீராம் அண்ணாவுக்கும், அமீரக
எழுத்தாளர் குழும நட்புக்கள் அனைவருக்கும் மற்றும் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றி.
எனது முதல் புத்தகத்தைக்
கொண்டுவரும் கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகத்தாருக்கு நன்றி.
எங்களுக்கு வாழும் முறையைக்
கற்றுக் கொடுத்த... இப்பவும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இராம. சேதுராமன் - சே.சிவகாமி, கு.லட்சுமணன்
- லெ.இராஜகுமாரி ஆகியோரின் ஆசிகளோடும் நான் வணங்கும் தெய்வங்களின்
ஆசியோடும் முதல் புத்தகத்தை நண்பர்களின் வழிகாட்டுதலோடு, அவர்களின் முயற்சியில்
கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்வும் சந்தோஷமும்...
என் வாழ்க்கையில் என்னால்
எதுவும் நிகழ்ந்து விடவில்லை... இப்போதும் எப்போதும் என் நண்பர்களால்தான் நகர்ந்து
கொண்டிருக்கிறது... அவர்களே நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
என் கதைகளை வாசியுங்கள்...
கிராமத்து மனிதர்களின் வாழ்வைச் சுவாசித்த அனுபவம் கண்டிப்பாகக் கிடைக்கும்...
உங்கள் வாழ்த்துக்களும் மனம் நிறைந்த கருத்துக்களுமே என்னை முன்னோக்கி நகர்த்திச்
செல்லும் என்பதால் உங்களின் கருத்துக்களை எதிர் நோக்கியிருக்கிறேன்.
எனது இந்த முதல் புத்தகத்தை எனது
பேராசன். முனைவர். மு.பழனி இராகுலதாசன் அவர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
நன்றி.
-'பரிவை'
சே.குமார்.
செவ்வாய், 10 மார்ச், 2020
எதிர்சேவை விமர்சனம் 2 : நம்பிக்கை தரும் சம காலச் சிறுகதைகள் - விசாகன்
தேனியில் இருக்கும் திரு. விசாகனுக்குப் புத்தகம் அனுப்பச் சொல்லி சகோதரர் நந்தகுமார் சொன்ன போது நானே அனுப்புகிறேன் எனச் சகோதரர் 'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன் அனுப்பி வைத்தார். அதன் பின் அவர்கள் மேடையில் எதிர்சேவை குறித்துப் பேசக் கிடைத்த வாய்ப்பு தட்டிக் கொண்டே போய் இறுதியில் என்னால் செல்ல இயலாமல் வந்துவிட்டேன்.
அவர்களின் அழைப்புக்குச் செல்ல முடியா உடல்நிலை என்பதைச் சொன்னதும் சரி பரவாயில்லைங்க என்று சொன்னவர் புத்தகத்தை வாசித்து சிறப்பானதொரு விமர்சனத்தை தனது முகநூல் பக்கத்திலும் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மேடை பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். இதை எதிர்பார்க்கவில்லைதான்... தொடர்ந்து எழுதணும் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கும் மற்றுமொரு விமர்சனம் இது.
எதிர்சேவையைக் கிழித்துத் தொங்கப் போடுவார்கள் என்று பார்த்தால் எல்லாமே கட்டிப்பிடிக்கும் விமர்சனமாகத்தான் இருக்கிறது.
நன்றி விசாகன் அண்ணா.
நாற்காலியின் பின்னால் ஊக்கால்
என் பெயரை எழுதிவைத்த நினைவு ரம்மியமானது…
--------------------------------------------------------------------------------------
ஈரானிய சினிமாக்களை ஒத்து சிலபல திரைப்படங்கள் ஒரு அரைமணி நேர சம்பவத்தை நேர்த்தியான, காத்திரமான திரைக்கதை அம்சத்தைத் தாங்கி வருவதை நாம் காண்கிறோம். அதுபோன்ற சாயலாகவே, கூடடைந்துவிட்ட பறவை விடியலில் சிறகு சிலிர்த்து எதன்பொருட்டோ வான்வெளியில் பறந்த ஐந்தாவது நிமிடம் ஏதோவொரு சோலையில் அமர்கிறது. அப்பறவை கழித்த அந்த ஐந்து நிமிடங்களைக் ஐந்துபக்கக் கதையாக்குகிறான் படைப்பாளன், ஒரு சித்தாள் ஒருத்தி மாலையில் வேலை முடித்து சோர்வுடன் வீடு திரும்ப எடுத்துக்கொள்ளும் பத்துநிமிடத்தைத் தன் கதைக்குள் அடக்குவதைப்போல. பல படைப்பாளர்கள் இதுபோன்ற முயற்சியனை அழகுறக் கையாள்கிறார்கள். அந்தப் பாணியிலேயே தன்னுடைய “எதிர்சேவை” என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை வாசகர்களுக்காகக் கையளித்திருக்கிறார் பரிவை சே.குமார். பணிநிமித்தம் அபுதாபியில் இருக்கும் குமாரின் இத்தொகுப்பை “கலக்கல் ட்ரீம்ஸ்” பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 12 கதைகளைக்கொண்ட 96 பக்க நூலின் விலை 100.
“ஒருபோதும் அடுத்தவருக்காக எழுத்தை மாற்றியதில்லை, என் எழுத்து எப்பவும் இப்படித்தான்” என்று தன்னுடைய முன்னுரையில் குமார் குறிப்பிடும் நோக்கம், தன் எழுத்தின்பால் வரும் விமர்சனங்களைக் கடந்துசெல்லும் ஒரு பாணியாக இருக்கலாம். எழுத நினைக்கின்றவர்களுக்குத்தான் அவரின் இந்த அறிவுரையே அன்றி, கதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கில்லை என்பதையும் அவருடைய கருத்தில் மறைபொருளாக்கியிருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ளவும் முடியும். அந்த வகையில் குமாரின் கதைகள் வட்டாரமொழியில் பின்னப்பட்டுள்ளன என்றாலும், ஒவ்வொரு கதையிலும் சமுதாயம் சார்ந்த முன்னேற்றத்திற்கான சிந்தனையை முன்வைக்கிறார். அடுக்கடுக்காக நிறைய சமகால அரசியல் சம்பவங்களைத் தன்னுடைய கதைசொல்லும் போக்கில் கோர்த்திருக்கிறார். இத்தொகுப்பில் உள்ள “எதிர்சேவை”, “விரிவோடிய வாழ்க்கை”, “அப்பாவின் நாற்காலி” ஆகிய மூன்று கதைகள் குறித்து சுருக்கமான என்னுடைய குறிப்புகளைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
“எதிர்சேவை”யில், தற்பெருமை பீற்றித்திரியும் தன்னுடைய வெளியூர் மாமாவின் வருகையை வெறுத்து நிற்கும் ஒருவன், மாமாவின் மகளும் அப்படித்தான் இருப்பாள் என்ற எண்ணம் மேலோங்கி நிற்க, அவ்வாறில்லாது அவர்களுக்கிடையிலான மய்யலும் காதல்வசப்படுதலும், அல்லது உள்ளார்ந்த நட்போ இயல்பாக எவ்வாறு தொற்றிக்கொள்கிறது என்று கதைவழி நமக்குச் சொல்லவந்ததில், ஒரு குடும்பத்திற்குள் உருக்கொள்ளும் பிணக்குகள் மற்றும் இணக்கம், அண்ணன் தங்கை நட்பின் அழுத்தம், பாச உணர்வு என விரித்துவைக்கிறார். வைகையில் ஒரு கைளவு தண்ணீரே வந்தாலும் அல்லது அதுவும் வராவிட்டாலும், கள்ளழகர் தன்னுடைய பக்தர்களுக்காக அந்த ஆற்றில் இறங்காமல் போகமாட்டார் என்பதைப்போல, நம்முடைய பாரம்பரியத தொன்மங்களைத் தாங்கி நிற்கின்ற குடும்பங்கள் எத்தனை பிணக்குகளுக்குள் சிக்குண்டு நின்றாலும் உறவுகள் ஏதேனும் ஒருவழியில் ஒட்டிக்கொள்ளத்தான் செய்கின்றன என்பதை உணர்த்துகிறார் கதாசிரியர்.
“விரிவோடிய வாழ்க்கை” ஒரு பிரச்சாரத் தொணியில் இருந்தாலும், நம் முன்னோர்கள் போற்றிவந்த வேளாண்மையின் தற்போதைய நிலை மாற வேண்டும் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்ற கதையாக இருக்கிறது. ஒரு திரைக்கலைஞனான நானா படேகர் “விவசாயிகளே தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுக்காதீர், என்னிடம் வாருங்கள், நான் வழிகாட்டுகிறேன்” என்று சொல்ல முன்வரும்போது, மக்களால் தேர்ந்தெடுத்த ஒரு அரசிற்கு அந்த மனம் வரவில்லையே என்று ஏக்கத்தின் வெளிப்பாடாக இந்தக்கதை இருக்கிறது, விரிவோடிய வாழ்க்கை என்ற தலைப்பே ஒரு மிகப் பெரிய நாவலை உள்ளடக்கியதாகத்தான் நமக்குத் தோன்றுகிறது.
“அப்பாவின் நாற்காலி” தன்னுடைய மிடுக்கான தோற்றம் கொண்டுள்ள அப்பா தன்னுடைய தச்சு ஆசாரி நண்பனிடம் தனக்கான கம்பீரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையிலான வடிவத்துடன் நாற்காலி செய்துதரச் சொல்லி ஊர் நாட்டாமைத் தீர்ப்புச் சொல்ல அதைப் பயன்படுத்துகிறார். பல குடும்பங்களில் அப்பா என்ற பாத்திரத்தின் இதுபோன்ற மிடுக்கான தோரணையும், கடுமையான அச்சத்தைத் தரும் உருவ அமைப்பும் பிள்ளைகளை அவரிடம் நெருங்கவிடாது தடுத்துவிடுகின்றன என்பது கண்கூடு. ஆனால் பாச உணர்வை யார் அல்லது எது தடுத்துவிட முடியும்? அப்பா இறந்துவிட்டாலும் அந்த நாற்காலியில் அப்பா அமர்ந்தே இருப்பதுபோலத்தான் வீட்டின் அமைப்பு தெரிகிறது. ஆண்டுகள் கடந்து அந்நாற்காலி பரண்மேல் ஒதுக்கப்பட்டாலும் அப்பாவின் நினைவுகள் எப்போதும் மகன்களை விட்டுவிலகுவதில்லை. அந்தப்பெருவலியைப் பேரன்கள் உணர்துகொள்ள நியாயமுமில்லை.
இலக்கியத்துறையில் கதைசொல்லும் கதைஞர்களின் தேவையும் வரவும் ஒருசேர எழுச்சியடைந்துவரும் தமிழச்சூழலில், பரிசை.சே.குமாரின் வரவு சிறப்பானது. தன்னளவில் புதிய வடிவங்களையும், கருத்துச் செறிவையும், நவீன நடையையும் தாங்கிவருகின்ற சமகாலச் சிறுகதைகள் பல நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதே நேரத்தில், எழுத்து கைகூடியபின்னர் வாசிப்பை அறவே நிறுத்திக்கொள்ளும் பல தோழர்களைப் பார்க்க முடிவதைப்போல அவ்வாறானவர்களின் எழுத்துப் பயணம் சட்டென நின்றுவிடுவதையும் பார்க்கிறோம். அதுபோல தன்னுடைய எழுத்தும் சுருங்கிச் சிறுத்துவிடாமல் பரந்துபட்ட வாசிப்பின் பின்னணியில் தன்னுடைய எழுத்தாற்றலை மென்மேலும் வளர்த்துக்கொண்டு இலக்கிய உலகிற்கும், மக்களுக்குமான கதைகளைப் படைத்திட வேண்டுமென்று குமாரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
-விசாகன், தேனி.
நன்றி. திரு.விசாகன்.
-'பரிவை' சே.குமார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


