காலத்தால் அழியாத செட்டிநாட்டுக் கவிஞன் கண்ணதாசன்... செட்டிய வீட்டில் மாமியார் மருமகள் சண்டை இருந்தாலும் வெளியில் தெரியாது... பெரிய பெரிய வீடுகளில் வாழும் அவர்கள் அப்படியெல்லாம் சண்டை போட்டுக் கொள்ளும் மனிதர்களாகவும் தெரிவதில்லை...
மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..
பார்த்து ரசித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்த்து ரசித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 30 ஏப்ரல், 2020
திங்கள், 7 மே, 2012
'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - திரு. நெல்லை கண்ணன்
முந்தைய பதிவின் தாக்கம் : பாரதி நட்புக்காக குழுவினரை கவிதாயினி மேடையேற்றிய போது வாசித்த பெயர்கள் அனைத்தும் எனது மனதில் இல்லை... மேலும் சங்கரன் என்று அவர் சொன்னார்... ஆனால் அங்கு சங்கர் அவர்கள் வரவில்லை என்பதும் தெரியும்... எழுதும் போது அவர் அழைத்தவர்களில் பலர் வரவில்லை என்று எழுத நினைத்து மறந்துவிட்டேன். குறிப்பாக பாரதி நட்புக்காக அமைப்பின் பொதுச் செயலாளர் திருமிகு. கலீல் ரஹ்மான் அவர்கள் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லை என்பதே உண்மை... எனது பதிவுகளில் அவரை விட்டுவிட்டு போட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை... என்னை எப்பொழுதும் புறக்கணிக்கிறார் என்று எனது சகோதரர் திரு. சுபஹான் அவர்களிடம் அன்புச் சண்டை போட்டிருக்கிறார். உங்களை மேடையில் பார்த்திருக்கிறேன்... பழகியது இல்லை... மறதிதான் காரணமே ஒழிய மறக்கடிக்கப்படவில்லை... உங்க பேரை மனசில் பொறிச்சாச்சு... இனி மறக்காது...என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... சார்... நேரடியாக கேட்டதற்கு நன்றி.
இனி தமிழ்கடலில் மூழ்கி சில முத்துக்களை பார்க்கலாம்...
விசாலி கண்ணதாசனின் பேச்சுக்குப் பிறகு மேடையில் திரையிடப்பட்டது. சினிமாவில் இடைவேளை போல சில மணித்துளிகள் கிடைக்க டீ,காபி,ஸ்நாக்ஸ் விற்பனை படு ஜோராக நடந்தது. திரை விலக்கப்பட, மேடை நடுவில் நாற்காலி,மேசை இடப்பட்டு திரு. நெல்லை கண்ணன் அவர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...
தமிழ்கடல் என்ற அடைமொழிக்கு ஏற்ப ஆழிப் பேரலையாய் கண்ணதாசன், பாரதி, வள்ளுவன் என கலவையாய் தமிழ் மாலை தொடுத்து ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் மேடையை தன் வசப்படுத்தி பார்வையாளர்களை பஞ்சமில்லாமல் சிரிக்க வைத்தார்.
ஆரம்பத்தில் பின் வரிசையில் அமர்ந்து கேட்ட போது பேசுவது புரிந்தும் புரியாதது போல் இருந்தது. பின்னர் சற்றே முன்னோக்கி வந்து அமர்ந்தபோது அவரின் பேச்சை நன்கு கேட்க முடிந்ததோடு வாய்விட்டு சிரித்து ரசிக்க முடிந்தது.
அவர் பேச்சின் இடையே பிறருக்கு உதவுங்கள், இறைவனை நினையுங்கள், வாய்விட்டு சிரியுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் என்ற வாசகங்களை அடிக்கடி சொன்னார்.
"கடவுள் ஒரு குழந்தை பிறக்கும் போதே எல்லா ஏற்பாடும் பண்ணிடுறான்... என்ன படிப்பான், எப்படி , யாரை கல்யாணம் பண்ண வேண்டும் என்று எழுதி வச்சிடுறான்... அதை யாராலும் மாற்ற முடியாது" என்றார்.
"ஒருத்தனுக்கு உடம்பு முடியலைன்ன உடனே பெரிய ஆஸ்பத்திரியில வச்சி ஒரு வாரம் எல்லா ஊசியும் போட்டு எல்லாம் பண்ணிட்டு கடைசியில கடவுள்கிட்ட சொல்லுங்கிறான்... எங்க ஊர்க்காரப்பய அப்பாவுக்கு முடியல...பெரிய ஆஸ்பத்திரியில வச்சி பாத்துட்டு டாக்டர் ரெண்டு லட்ச ரூபாய் பில்ல கொடுத்து உங்கப்பாவை கடவுள்தான் காப்பத்தணுமின்னான். எங்க ஊர்க்காரப் பயலாச்சா, டக்குன்னு அருவாள எடுத்து நீ கடவுள்கிட்ட சொல்லு, நீ முடியாதுன்னு சொல்லியிருந்தா நாங்க அப்பவே கடவுள்கிட்ட சொல்லியிருப்பமே...அவரு உடம்புல இவ்வளவு ஊசி போட்டு, எதையும் சாப்பிடவிடாம பண்ணிட்டியேன்னு அருவாளை ஓங்கவும் அவங்க அப்பாவையும் கொடுத்து ரெண்டு லட்ச ரூபாயும் கொடுத்துட்டாங்க"
"எங்கப்பா எனக்கு சொல்லிக் கொடுத்தது என்ன தெரியுமா... நிறைய நல்லது செய் ... யாருக்கும் தீங்கு நினைக்காதே... இந்த பங்களாவுக்குள்ள யார் வந்தாலும் சோறு போடு... நான் பேச போறப்போ நிறையப் பேரு வருவாங்க... பையன காலேஜ்ல சேர்த்திருக்கேன் பணம் வேணுமின்னு கேப்பாங்க... எவ்வளவுன்னு கேட்டா... இருபதாயிரமுன்னு சொல்லுவாங்க... உடனே கொடுத்துடுவேன். நம்ம கூட நிறைய நல்லவங்க வருவாங்க... இதெல்லாம் தேறாதுன்னு சொல்லுவாங்க... படிக்கத்தானே பணங்கேக்கிறான்... கொடுத்தா என்ன"
"பசியின்னு வாறவன் கடவுள்ளுன்னு நினைங்க...எல்லா இடத்தில் கடவுள் கண்ணாக இருக்கிறான் என்று நினைப்பவன் தவறு செய்யவே மாட்டான் என திருவள்ளுவர் சொல்கிறார் என்றவர், இரண்டாயிர ரூபாய் ஷூவை வெளியில போட்டுட்டு பிள்ளையாரை கும்பிடப் போனவன், 'ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை...' மாப்ளே ஷூ இருக்குமா என்று பிள்ளையாரை கும்பிடவே மாட்டான். பிள்ளையார் பார்ப்பாரு... அந்த நாயை செருப்பால அடிச்சி வெளியில வெறட்டுன்னு சொல்லிடுவாரு..."
" பெத்த அம்மாவை மதிக்க மாட்டான். வீட்ல காளிய கும்பிடுவான். காளி பார்ப்பா, பெத்த தாய மதிக்க தெரியலை... மூதேவியின்னு மிதிச்சிடுவா... பெத்தவங்களை மதிக்கணும்... இப்ப முதியோர் இல்லம் எவ்வளவு கட்டியிருக்கான்யா... பய அப்பாகிட்ட சொல்லுறான்... உங்க காலத்துல இன்னும் வசதியா முதியோர் இல்லம் வந்திரும்ப்பான்னு... எனக்கு இறைவன் கொடுத்த பெரிய வரமே என் தாய், தகப்பனை கடைசிக் காலத்துல பாத்துக்கிற வாய்ப்பை கொடுத்ததுதான்"
'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...' பாடலை விளக்கும் போது "அப்பாவை, அம்மாவை நினைச்ச புள்ள... எல்லாருக்கும் உதவுன புள்ள... நெஞ்செல்லாம் நல்லதே நினைச்ச புள்ள அந்த புள்ளை அவனைப் பாக்கிற... பாத்ததும் இப்படி மாறிடுறா... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல... இதுதாய்யா கவிஞன், அடுத்த வரி போடுறான் பாரு... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... அடி சண்டாளி... சண்டாளி நீ பேசாத பேச்சு பேச்சே அல்ல... இப்ப தமிழ்நாட்டுல ஒரு நடிகைக்கிட்ட கேக்கிறாங்க... நீங்க இப்ப யார் கூட இருக்கீங்க... அவரு கூட இருக்கிறேன்... அவரு இதுக்கு முன்னாடி யார் கூட இருந்தாரு அப்படின்னு கேட்டா... அதுக்கு அவரும் ஏழெட்டுப் பேர் கூட இருந்திருக்காரு அப்படிங்கிறா... இல்வாழ்க்கை இப்படி அமையக் கூடாது. அறமும் பொருளும் சொல்லியிருந்தாலும் காமத்துப்பால்தான் 25 அதிகாரம்... காதல்ன்னா என்னன்னு என்னமா சொல்லியிருப்பாரு தெரியுமா" என்றார்.
கவிஞர் தன் காதலி இன்னொருத்தனை திருமணம் செய்து கொண்டதும் காதலன் பாடுவது போல் எழுதிய 'எங்கிருந்தாலும் வாழ்க...' பாடலை விளக்கும் போது, தன் காதலனிடம் தன் கணவனை அழைத்து வந்து காண்பிக்கிறாள்... எனக்குத் தெரிந்து படத்தின் கதையை ஒரு பாடலில் சொல்லும் திறமை செட்டியாரைத் தவிர்த்து யாராலும் முடியாது என்றார்.
(திரு.தமிழ்கடல் நெல்லை கண்ணன்)
"சிவாஜி ஒரு முறை என்னிடம் செட்டியாருக்கிட்ட பாத்து இருக்கணும்... அதுவும் செட்டியும் நாயுடுவும் (எம்.எஸ்.வி) சேர்ந்துட்டாங்க பாட்டப் போட்டு நம்மள கவுக்கப் பாப்பாங்க... நாம ஒரு படி மேல நிக்கணும். அதே மாதிரி பள்ளத்தூர் ஆச்சி, நாகேஷ் எல்லாம் நாம கொஞ்சம் அசந்தாலும் சாப்பிட்டுப்பிடுவாங்க அப்படின்னு சொன்னாரு."
"நான் சைவப்பிள்ளைமார்... நாங்க சுத்த சைவம்...ஒரு தடவை டி.ஜி.பி ஒருவர் வீட்டுக்குப் பொயிட்டேன். அந்தம்மா சிக்கன் கறி செஞ்சு சாப்பாடு போட்டுட்டாங்க... நான் சாப்பிடமாட்டேன் என்று சொன்னால் வருந்துவார்கள் என்பதால் குழம்பை மட்டும் போட்டு சாப்பிட்டு விட்டு வந்துட்டேன். அப்புறம் அந்தம்மா, அவ்ருக்கு போன் பண்ணி ஐயா சரியாவே சாப்பிடலைன்னு சொல்ல, அவரு என்ன சமைச்சீங்கன்னு கேட்க, சிக்கன்னு சொன்னதும் ஐயோ அவரு சைவமில்லன்னு சத்தம் போட்டாராம். ஒரு சில பேரு இருக்கான், நான் அதை சாப்பிடமாட்டேன்... இதை சாப்பிடமாட்டேன்னு... அப்புறம் எதுக்கு இருக்கணும்... போய் சேர வேண்டியதுதானே"
"நான் கடவுளிடம் கேட்பது என்னவென்றால் நான் இறக்கும் போது ஒரு பத்தாயிரம் பேராவது அழுக வேண்டும். எங்க ஊர்ல ஒருத்தன் இறந்த போது என் பங்காளி ஒருத்தன் அதிகமா அழுதான். ஏன்டான்னு கேட்டா நான் ஒருத்தன்தான் கடன் கொடுக்காம இருந்தேன்... நேத்துத்தான் கொடுத்தேன்னு சொன்னான்...அப்படியிருக் கூடாது."
"ஒருத்தன் தனக்காக தன் மனைவி உயிரையே கொடுப்பாள்ன்னு ஒரு சாமியார்கிட்ட சொன்னான். அந்த சாமியாரு நான் ஒரு மாத்திரை தாறேன்... போட்டுக்கிட்டு படு... செத்த மாதிரி ஆயிடுவே... அப்ப யார்... யார் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாமுன்னு சொன்னாரு... இவனும் அதே மாதிரி செய்ய... மனைவி நானும் வாறேன்னு அழுகிறா... மகனும் , மகளும் நாங்களும் வாறோமுன்னு சொல்ல, அவன தூக்கிட்டாங்க... போகும் போது கல்தூணில் இடிச்சிடுது... எழுந்துவிட்டான். சாமியார்கிட்ட போயி பாத்தீங்களா இவங்க அன்பைன்னு சொல்லியிருக்கான்... அவரு வேற மாத்திரை ஒண்ணு கொடுத்து நீ படுத்து வேடிக்கை பாருன்னு சொல்ல, அதே மாதிரி தூக்கும் போது பாத்து தூக்குங்க கல்தூணில் இடிச்சிறாமன்னு மனைவி சொல்லியிருக்கா,... அப்ப சாமி சொல்லியிருக்காரு... நீங்க உங்க உயிரக் கொடுத்தா அவரை காப்பாத்திடலாமுன்னு மனைவியிடம் சொல்ல, அவுக நேரம் முடிஞ்சி போச்சு... என்ன செய்யிறதுன்னாலாம், மகனோ அப்பா எல்லாம் அனுபவிச்சிட்டுத்தானே போயிருக்காருன்னானாம்... மகளோ ஒரு படி மேல போயி நான் வேற வீட்டுக்குப் போறவ... நான் எப்படின்னாளாம்... அவன் எழுந்து சாமியார்கூட பொயிட்டானாம்"
" கண்ணதாசா என்னை வைத்து எழுது என கவிஞனின் வீட்டு வாசலில் வார்த்தைகள் வந்து தவம் கிடக்கும்... வார்த்தைகளுக்காக அவர் காத்திருந்தது இல்லை... இப்பவும் சில கவிஞர்கள் இன்னும் திரையுலகத்தில் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அடச்சிக்கிட்டு இருக்கான்"
விசாலி கண்ணதாசன் பற்றி குறிப்பிடும் போது கண்ணதாசனின் மறுபிறப்பு என்றவர், அதே நெற்றி... அதே மாறுகண், அதே பேச்சு என்றார்.
"நான் செட்டியார்களிடம் பேசும் போது சொன்னேன்... நீங்கள்லாம் பெரிய அளவுல இருந்தாலும் உலகளவுல எங்க செட்டிய மட்டும்தானேய்யா தெரியுது என்று சொல்வது உண்டு."
"ஒரு பாட்டுல 'ஏனென்று கேட்காமல் வருவான்... நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்' என்றார் கவிஞர், கவிஞருக்கு கடவுள் எங்க போவாருன்னு தெரிஞ்சிருக்கு பாருங்க... பணக்காரன் வீட்டுக்கு கடவுள் போகமாட்டாருன்னு சொல்றாரு. ஏன்னா அவன் கடவுளையும் சந்தேகப்படுவான்."
'புத்தி சிகாமணி பெத்த புள்ள...'பாட்டை பற்றி சொல்லும் போது அதில் முத்துலெட்சுமி , 'வருசம் ஒருபுள்ள பெத்தெடுத்து வயசு இருபத்தி ஆறாச்சுன்னு...' பாடுவாங்க. அப்ப கவிஞன் போட்டான் பாருங்க எம்.ஆர்.ராதா பாடுற மாதிரி ஒரு வரி, "ஆனாலும் நான் கொஞ்சி நாளாச்சின்னு...' சொல்லி சிலாகித்தார்.
"ஒரு முறை கவிஞர் இன்னும் சில தண்ணிப் பிரியர்கள் ஒரு அறையில் தங்க நான் மற்றும் சிலர் வேறு அறையில் தங்கினோம். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவர் அறைப்பக்கம் போனா எல்லாரும் தூங்கிட்டாங்க... செட்டியாரு மட்டும் சந்தோஷமா உலாவிக்கிட்டு இருக்காரு. காலையில அவருக்கிட்ட அண்ணே நேத்து ராத்திரி சந்தோஷமா உலாவுனீங்கன்னு சொன்னதும் முழுசும் பாத்தியான்னு கேட்டவரு, பழனியில அவனும் அப்படித்தானே இருக்கான்ன்னு சொன்னாரு... ஏன்னா முருகன் செட்டியார்ன்னு சொல்லுவாங்க..."
"செட்டியாரு பத்திரிக்கை ஒண்ணு நடத்தினாரு... அருமையான பத்திரிக்கை... நானும் ஏழு லெட்சம் கட்டி ஏஜென்ஸி எடுத்தேன்... போட்டது போட்டதுதான்... அவருகிட்ட ஒரு முறை அண்ணே ஏழு லட்சம்ன்னு சொன்னதும் என்ன நோட்டீஸ் அனுப்ப போறியா... பத்தோடு பதினொன்னுன்னு சொன்னாரு..."
"செட்டியாருக்கு உதவிய வள்ளல் சின்னப்பாதான்... செட்டியார் கஷ்டப்பட்ட போதெல்லாம் அவருக்கு உதவிகளை வாரி வாரிச் செய்தார். அவரு மாதிரி உதவிகளை யாரும் செய்ய முடியாது."
"இப்ப சினிமாவுல சோத்துக்கே வழியிருக்காது ஆனா சுவிட்சர்லாந்துல பாட்டுப் பாடுவாங்க... தமனாவெல்லாம் கிராமத்துப் பிள்ளையாய்யா... வெள்ள வெள்ளேருன்னு இருக்கு... இந்த தனுசு கொடுத்து வச்சவன்யா... ஸ்ரேயா மாமன் கூடவும் டான்ஸ் ஆடுறா... இவன் கூடவும் ஆடுறா..."
கணவன் மனைவி ஊடல், கூடல், கண்ணதாசன் சிவாஜிக்கு எழுதிய பாடல், நாகேஷை புகழ்ந்தது, எம்.ஜி.யாருக்கு எழுதிய 'மாபெரும் சபைதனில் நீ வந்தால்...',நேரு இறந்த போது எழுதிய பாடல் என கவிஞனில் கலந்து இன்னும் நிறைய விஷயங்களை சிரிப்புடன் அருமையாக பேசினார். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.
ஞாயிறு, 29 ஏப்ரல், 2012
'நான் பேச நினைப்பதெல்லாம்... ' - விசாலி கண்ணதாசன்
வெள்ளிக்கிழமை மாலை அமீரகம் வாழ் தமிழர்களுக்கு காலத்தால் அழியாத செட்டி நாட்டுக்கவியின் பாடல்களை அழகிய தமிழுடன் அமுதாய்ப் பருகும் வாய்ப்பை அபுதாபி ‘பாரதி நட்புக்காக’ அமைப்பு வழங்கியது.
தமிழ் வருடப் பிறப்பு சிறப்பு நிகழ்ச்சியாக அபுதாபி இண்டியன் பள்ளி கலையரங்கத்தில் கண்ணதாசனின் நினைவலைகளை பகிரும் விதமாக ‘நான் பேச நினைப்பதெல்லாம்...’ என்ற தலைப்பில் நடந்த விழாவின் தலைப்புக்கு ஏற்றார் போல் கவியரசரின் மகள் கவிதாயினி விசாலி கண்ணதாசன் மற்றும் தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் ஆகியோர் பேச நினைத்ததையெல்லாம் அதிக சிரத்தையுடன் அழகிய தமிழில் மாலையாக தொடுத்து பார்வையாளர்களை கண்ணதாசனின் கவிதைக்குள் கட்டிப் போட்டார்கள்.
விழா நடந்த அரங்கு நிறைந்த கூட்டம் இருக்குமென்று தாமதாமாக சென்ற நாங்கள் நினைத்தோம். ஆனால் கூட்டம் அதிகமில்லை. பாரதி அமைப்பினர் எதாவது ஒரு சினிமா சம்பந்தப்பட்ட ஆட்களை கொண்டு வந்திருந்தால் அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருக்குமோ என்னமோ... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்... எல்லாம் தமிழ்... என்பது பேச்சளவில்தானே இருக்கிறது... சரி விடுங்க... விழாவுக்கு போவோம்...
விழா எப்பவும் போல் சில நடனங்களுடன் ஆரம்பமாகியது. நடனமாடியது சென்ற முறை பார்த்த அதே சிறுவர் சிறுமிகள்தான் என்று நினைக்கிறேன். சந்திரபாபு போல் ஆடிய சுட்டிப்பையன் எல்லோரையும் கவர்ந்துவிட்டான். வழக்கம்போல் இவர்களை எல்லாம் ஆட்டுவித்தவர் திருமதி. ஆஷா நாயர் அவர்கள். அருமையான நடனம் அமைத்த அவருக்கு வாழ்த்துக்கள்..
நடனத்துக்குப் பின்னர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களில் இருந்து காட்சிகள் மேடையின் அருகில் இருந்த சிறிய திரையில் ஒளிபரப்பட்டது. அதன்பின் மேடையேறிய விசாலி கண்ணதாசன், என் தந்தைக்கு நான் மூன்றாவது மனைவியின் மகள், எனது தந்தைக்கு 15 பிள்ளைகள் என்று சொல்வார்கள். என் அம்மாவுக்கு நான் மட்டும்தான் பிள்ளை என்றபடி தனது பேச்சை ஆரம்பித்தார், நான் பெரும்பாலும் வெள்ளைக்காரர்கள் நாட்டிற்குத்தான் போயிருக்கிறேன். அவர்களுடன் சுலபமாக பழகிவிடுவேன். அரபு நாடுகளுக்கு அதிகம் வந்ததில்லை. துபாய் என்பது தெரியும், அதிலும் துபாய் என்றால் எனக்கு ஞாபகத்தில் இருப்பது நம்பர்-5 விவேகான்ந்தர் தெருதான்.
இப்போ அரபு நாடுகளுக்கு அதிகம் வர ஆரம்பித்து இருக்கிறேன். நம்ம பெண்கள் குறிப்பாக தென் இந்தியப் பெண்களுக்கு அழகு சேலைதான். அரபுப் பெண்கள் இருக்கிறார்களே அவர்கள் உடம்பு முழுவதும் மறைத்து கண்ணை மட்டுமே காட்டுகிறார்கள். அவர்களுக்கு வெள்ளைக்காரர்களின் நிறமும் நம்ம கலையும் ஒருங்கே இறைவன் வழங்கியிருக்கிறான். என்ன அழகு... என்ன கம்பீரம் அதனால்தான் ஒரு கவிஞன் ‘அந்த அரபிக் கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே...’ என்று பாடினான் என்று பேசி, பிரியாணி சாப்பிட்டது முதல் அனைத்தையும் சொல்லி, அபுதாபி தமிழர்களுக்காக ஒரு கவிதை ஒன்றை வாசித்த கவிதாயினி, தற்போதைய அபுதாபி வெய்யிலின் தாக்கத்தை குறைக்க வந்த மழையென கவிஞரின் பாடல்களை மேற்கோள்காட்டி அரங்கத்தை தமிழ் மழையால் நனைய வைத்தார். இடையிடையே நிறைய நகைச்சுவைகள், தந்தை பற்றிய நினைவலைகள் என பார்வையாளர்களை தன் பேச்சால் கட்டிப் போட்டார். அவர் பேசியதில் சில துளிகள்...
“நம்ம ஊர் கடலைப் பார்த்த நான் இங்க உள்ள கடலையும் பார்த்தேன்... நம்ம மெரீனாவுல தண்ணி குதிச்சுக்கிட்டு ஆர்ப்பரிக்கும்.. இங்க அலையே இல்லாம அழகா இருக்கு... சொல்லப்போன ந்மம ஊர் கடல் நடிக்க வந்த புதிதில் இருந்த ஐஸ்வர்யாராய் போல ஆர்ப்பாட்டமாய்... இங்கு இருப்பதோ அம்மா ஐஸ்வர்யா போல் சாந்தமாய்... இருந்தும் ஐஸ்வர்யா... ஐஸ்வர்யாதானே...”
“இப்ப மாட்டுக்கு சினிமா நடிகைகள் பேரத்தான் வைக்கிறாங்க... ஒருத்தர் தன்னோட மாட்டை நமீதான்னு கூப்பிட்டாரு... என்ன நமீதான்னு வச்சிருக்கீங்கன்னு கேட்டா... அது கும்முன்னு கவர்ச்சியா இருக்கதால நமீதாவாம்... இதெல்லாம் பரவாயில்லை ஆவின் பால் கொடுக்கிற ஆவுக்கு நம்மாளு வச்சிருக்கிற பேரு அமலாபால்”
“எங்கப்பாவும் கலைஞர் கருணாநிதியும் ரொம்ப நெருக்கம், ஒரு தடவை அப்பாவுக்கு தேர்தல்ல நிக்க ஆசை வந்துடுச்சு., கலைஞர்கிட்ட போயி எனக்கு ஒரு தொகுதி கொடு நானும் நிக்கிறேன்னு சொல்லியிருக்காரு... என்னடா இவன் தொகுதி கொடுன்னு கேட்கிறானேன்னு நினைச்சுக்கிட்டு சரிப்பா எந்த தொகுதி வேணுமின்னு கேட்டாராம்... பாண்டிச்சேரி கொடு நான் நிக்கிறேன்னாராம்... பாண்டிச்சேரியில போயி நிக்கிறேன்னு சொன்னது நீதாய்யான்னு கலைஞர் கிணடலடித்தாராம்....”
“ஒரு தடவை எம்.எஸ்.வி. அப்பாவை பாட்டெழுதச் சொல்லி ரெண்டு மூணு நாளாகியும் அப்பா பாட்டே எழுதலையாம். அப்ப ஒருத்தரு எம்.எஸ்.விக்கிட்ட என்னங்க... கவிஞர் பாட்டே எழுதலைன்னு சொன்னதும் அவரு எழுதலைன்னா வேற ஆள வச்சி எழுதி முடிச்சிடலாம் அப்படின்னு சொல்லியிருக்காரு. இதை அப்படியே அப்பாகிட்ட அந்தாளு சொல்லியாச்சு... உடனே அப்பா எழுதிய பாட்டுதான் ‘சொன்னது நீதானா சொல்... சொல்... என்னுயிரே’ என்ற பாடல்.”
எனக்கு திருமணம் நடந்தபோது என் தந்தையும் தாயும் இல்லை. மாங்காடு கோவிலில்தான் திருமணம் நடந்தது. அப்ப ஒரு அம்மா அப்பாவை பற்றி பேசி நீ நல்லா இருப்பேம்மா... என்று வாழ்த்தினார்கள். இது போல் எத்தனையோ உள்ளங்கள் வாழ்த்த திருமணமாகி 13 வருடமாகிவிட்ட்து. எங்கள் சந்தோஷத்தில் எந்தக் குறையும் வரவில்லை”
“நான் மேடையேறும் போது எத்தனையோ இன்னல்கள். ஒரு பொண்ணு எப்படி பேச வரலாமுன்னு எவ்வளவு இடர்பாடுகள்.... எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு விசாலி இது மாதிரி மேடைகள்ல நிக்கிறேன்னா அதுக்கு எங்கப்பாவோட ஆன்மா எனக்கு துணையா இருக்கிறதுதான் காரணம்.”
“எங்கப்பா என்னைய தனியா விட்டுட்டாரேன்னு நினைச்சேன்... ஆனா இங்க எத்தனை பிள்ளைகளை எனக்குத் துணையா விட்டுட்டுப் போயிருக்காரு...”
“இங்கே தமிழை நேசிக்கத் தெரிந்தவர்கள் வந்திருக்கிறீர்கள். நான் பேசும் போது சப்பதமில்லாமல் கூர்ந்து கவனித்தீர்கள். அது ஒன்றே போதும் மெல்லத் தமிழ் இனி சாகும் என்றார்கள்... ஆனால் தமிழ் எப்போதும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்.”
நம்ம மீசைக்கவிஞன் பாரதி பற்றி பேசாமல் தமிழ் பேச முடியுமா அவரைப் பற்றியும் பேசினார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கவிஞர் தேர்வு செய்து கொண்டிருக்கும் போது பாரதி குறித்து ஒருவர் எழுதிய ஒரு வரி ஹைக்கூ அவரைக் கவர்ந்ததால் அதை நினைவு கூர்ந்தார். அது ‘பாரதி - யானை மிதித்துக் கொன்ற முதல் சிங்கம்’ அவரை வேறு எதுவும் கேட்காமல் தேர்வு செய்ததாக அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் கண்ணதாசன் அவர்களின் சில பாடல்களுக்கு பொருள் விளக்கம் கொடுக்க அந்தப் பாடல்கள் திரையிடப்பட்டன. அழகான தொகுப்பு... அருமையான விளக்கம்.... என எல்லாம் அழகாக இருந்தும் வந்திருந்த பார்வையாளர்களை வீடியோ எடுக்கிறேன் என்று வீடியோக்காரர்கள் இருவர் லைட்டை வைத்துக் கொண்டு படுத்தியபாடு இருக்கிறதே... அப்பப்பா... விசாலி அவர்கள் விளக்கம் கொடுத்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டு திரையில் காட்சி விரியும் அப்போது இவர்கள் லைட்டை திரையிலும் ஆட்கள் மீதுமாக அடித்து பார்க்க விடாமல் செய்துவிட்டார்கள். பாடல்களை அழகாக தொகுத்து வழங்கியவர்கள் துபாய் சங்கமம் தொலைக்காட்சியாம். அருமை.... வாழ்த்துக்கள்.
குழந்தைகளுக்கு திருவாசகம், திருக்குறள் உள்ளிட்ட தமிழ்ப்பாடல்களை சொல்லிக் கொடுக்க்ச் சொன்னார். தமிழ்ப்பெயர் வைக்க்ச் சொன்னார். அப்போது அவருக்கு பூச்செண்டு கொடுத்த குட்டீஸை (பெயர் முத்தழகி என்று நினைக்கிறேன்) பற்றிச் சொன்னார்.
மொத்தத்தில் விசாலி கண்ணதாசன் அவர்கள் அருமையாக பேசினார்கள். தந்தையின் பாடல் வரிகளை எடுத்து கவி தொகுத்து அதை அவருக்கே உரிய பாவனையில் அழகாக வழங்கினார்கள்.
கடைசியாக பாரதி நட்புக்காக அமைப்பின் தலைவர் ராமகிருஷ்ணன், ஜெகன், சித்ரா, சங்கீதா, ரவி, சங்கர் உள்ளிட்ட அனைவரையும் மேடையில் ஏற்றி பார்வையாளர்களை எழுந்து நின்று அவர்களுக்கு கைதட்டி மரியாதை செலுத்தச் சொன்னார்.
மொத்தத்தில் அவரின் பேச்சு அருமையான விருந்தாக அமைந்தது. கடலளவு பேசியதில் கடுகளவை மட்டுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன்.
அடுத்த பதிவில் தமிழ்க்கடல் அவர்களின் பேச்சின் தொகுப்பு இடம் பெறும்.
-‘பரிவை’ சே.குமார்.
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
அபுதாபியில் அமுதைப் பொழியும் நிலவே...
அபுதாபியில் நேற்று மாலை தமிழ் அமுது பருகும் வாய்ப்பு பல தமிழர்களுக்கு கிடைத்தது. பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக தனது இனிய குரலால் தமிழகத்தை மட்டுமல்ல உலகத்தையே கட்டிப் போட்ட சுசிலா அம்மாவுக்கு பாராட்டு விழாவும் அதே நிகழ்ச்சியில் திரு. டெல்லி கணேஷ் அவர்களின் விவாத மேடையும் நடந்தன. ஐயாயிரம் ரசிகர்களுக்கும் குறையாமல் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை 6 மணிக்கு விழா ஆரம்பம் என்று போட்டிருந்ததால் நாங்கள் 6.30 மணிக்கு விழா நடக்கும் இந்திய சமூகக்கூடம் (ISC) சென்றபோது அரங்கமே நிரம்பி வழிந்தது. பாரதி நட்புக்காக அமைப்பு இதுவரை நிகழ்த்திய நிகழ்வின் தொகுப்பு மேடை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த திரையில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
பின்னர் விழா ஆரம்பமானது. வரவேற்புரை நிகழ்த்தியவர் ஆங்கிலத்தில் ஆரம்பித்து பின் தமிழில் பேசி முடித்தார்.பின்னர் சிலரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. பரத நாட்டியம் ஆடிய அனைவரும் மிக சிறப்பாக நடனமாடினர். குறிப்பாக பாரதியார் பாடல் ஓன்றுக்கு திரையில் படம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இரண்டு மாணவிகள் நடனமாடினர். அந்தப்பாடலின் உன்னதத்தை தங்கள் நடனத்தில் கொண்டு வந்தனர். அருமை... அவர்களின் அபிநயம்... குறிப்பாக மழை பெய்வது போலவும் உடம்பு சிலிர்ப்பது போலவும் அந்த மாணவிகள் செய்த அபிநயங்கள் அருமை. நிகழச்சி முடிந்தும் இன்னும் கண்ணுக்குள்.
பின்னர் நிறுவனர், தலைவர் உள்பட சிலர் மேடை ஏற்றப்பட்டு கெளரவிக்கப்பட்டு சில வார்த்தைகள் பேசினர். அப்போது பேசியவர்களில் என்னைக் கவர்ந்தது ETA நிறுவனர் பேச்சுதான். ஆம் அபுதாபியில் எந்த தமிழனுக்காவது உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள். செய்கிறேன் என்றார். பிறக்கு உதவும் அமைப்பாக பாரதி நட்புக்காகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் பேசிய அமைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன் உடனே ஆவண செய்வதாக சொன்னது அரங்கத்தில் கைதட்டல் ஒலி அடங்க அதிக நேரம் ஆனது.
பலத்த கை தட்டலுக்கு இடையே சுசிலாம்மா மேடை ஏற்றப்பட்டு இருக்கையில் அமர்த்தப்பட்டார். அவர் அமர்ந்ததும் முனைவர் திருஞானசம்பந்தம் அவர்கள் சுசிலா அம்மா பற்றி சில வார்த்தைகள் பேசினார். சுசிலாம்மாவுக்கு 'அமுதைப் பொழியும் நிலவே' என்ற விருது வழங்கி கௌரவித்தனர் பாரதி நட்புக்காக அமைப்பினர்.
பின்னர் ஏற்புரை நிகழ்த்திய சுசிலாம்மா கலக்கி விட்டார். அவருக்கும் காலில் காயம் என்று சொன்னார். எனவே மேடையில் அமர்ந்து பேசினார். அவரது குரலுக்கு அப்படி என்ன சக்தி? அப்பா... பேச ஆரம்பித்ததும் மடைதிறந்த வெள்ளம்போல் பேச ஆரம்பித்தார்.
மேடையின் எதிரே அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த டெல்லி கணேஷை புகழ்ந்து பேசினார். தெலுங்கில் இருந்து அவர் தழிழுக்கு, தமிழ் நாட்டிற்கு வந்தது 1950ம் வருடம் என்றும் அடுத்த வருடம் வந்தால் 60 வருடங்கள் நிறைவு பெறுவதாகவும் கூறிய போது கைதட்டல் ஒலியில் அரங்கமே அதிர்ந்தது.
அந்தக் காலத்தில் எல்லாப்பாடல்களும் இரவில்தான் பதிவு செய்யப்பட்டன என்றும் இப்ப இருக்கும் வசதிகள் எதுவும் இல்லாமல் வேர்வையுடன் பாடி முடித்து, அந்தப்பாடல் வெற்றி பெற்றபோது கிடைத்த சந்தோஷங்களை நினைவு கூர்ந்தார்.
அவரது மானசீக குரு லதா மங்கேஷ்கர் என்றும் அவருடன் பிறந்தது நால்வரல்ல என்றும் நானும் அவரது தங்கைதான் என்றும் என்னை தெற்குக்கு அனுப்பிவிட்டான் இறைவன் என்றும் மனம் மகிழ, நெகிழ தெரிவித்தார்.
'சுசிலான்னு ஒரு பொண்ணு பாட்டுக் கத்துக்கிட்டு இங்க வரும் அதுக்கு பாட்டெழுதணும் என்றே எங்கள் செட்டிநாடு கண்டெடுத்த காலத்தால் அழியாத காவியக் கவிஞன் கண்ணதாசனை படைத்ததாக புகழந்தார். 'அத்தான்.. என்னத்தான் அவர் என்னைத்தான்...' என்ற பாடலை சில வரிகள் பாடியபோது 'தான்... தான்...' என்று முடித்த அந்த திறமையை பாராட்டினார்.
அதிகம் பேசினால் பாட மாட்டேன்... பாடினால் பேசமாட்டேன்...' என்றபடி 'என்னைப் பாடச் சொன்னால்...' ,'சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து...' போன்ற சில பாடல்களைப் பாடிய போது அந்த இனிய குரல் இன்னும் சுசிலாம்மாவிடம் அப்படியே இருந்தது.
நகைச்சுவையாகவும் இனிமையாகவும் பாடல்களின் வரிகள், பேச்சு என்று வெளுத்து வாங்கியவர் முடிக்க நினைக்கையில் ஒருவர், பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பாடலை கேட்க, அவர் என்னய மச்சானைப்பற்றி பேச சொல்லுகிறார் என்றார் சிரிப்புடன்... அந்தப் பாடலை அவரது புத்தகத்தில் தேடி கண்டுபிடிக்க இயலாததால் பாடாமல் விட்டுவிட்டார்.
தமிழகம்தான் எனக்கு வாழ்வளித்தது. அங்குதான் என் கடைசி நிமிடங்கள் கரைய வேண்டும் என்ற போது அரங்கத்தில் கை தட்டல் இருந்தாலும் பல மனங்கள் கனத்துக் கிடந்தன என்பதே உண்மை. அவர் எழுந்ததும் மக்களைப் பார்த்து ஒருவர் பேச சொல்ல எழுந்தால் அதிகம் பாட்டு வரும் என்றார் புன்னகையுடன்.
அவர் மேடையை விட்டு இறங்கிய போது ரசிகர்கள் எழுந்து நின்னு கைதட்ட, மேடையில் நின்று கும்பிட்டவர், அப்படியே குனிந்து தரையை தொட்டு வணங்கினார். மேன் மக்கள் மேன் மக்களே..!
அவரது பாரட்டுவிழாவிற்குப் பிறகு டெல்லி கணேஷ் தலைமையில் வாழ்க்கைக்கு உறுதுணையாய் இருப்பது இன்றைய வாழ்க்கை முறை, உறவுகள், நண்பர்கள், பொருளாதாரம் என்ற தலைப்பில் விவாதமேடை நடந்தது. அதில் குழுவுக்கு ஐவர் இருந்தனர். எல்லோரும் நல்லா பேசினார்கள். இடையிடையே டெல்லி கணேஷின் நகைச்சுவை வேறு.
அபிதாபியில் அழகிய தமிழ்பருகினேன் அதற்காக எங்கள் சென்னைத் தமிழ் சரியில்லை என்று சொல்லாதீர்கள். இப்ப உள்ள காலச்சூழலில் என்னப்பா நல்லா இருக்கியா என்று கேட்பதை சுருக்கி 'இன்னா கீறியா..?' என்பதாகவும், ஆட்டோவுல போகும் போது அந்த வலது பக்கம் திருப்புப்பா என்றால் நம்மை திரும்பி பார்த்து 'ரைட்ல போன்னு சொல்லு சார் என்பதாகவும் கலகலப்பாக பேசினார்.
பேசியவர்கள் பெயர் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் அனைவரின் பேச்சுக்களும் ரசிக்கும் விதமாக இருந்தாலும் சிலரின் பேச்சுக்கள் நெஞ்சைத் தொட்டன. குறிப்பாக, இலங்கை நண்பர் ஒருவர் பேசும்போது குற்றுயிர் பூமியில் இருந்து வந்திருப்பதாகவும் நாட்டிற்கு போன் செய்து பெற்றோரிடம் பேசினால் சந்தோஷம் என்றும் அவர்கள் போன் எடுக்கவில்லை என்றால் என்னாச்சோ என்ற பதட்டம் வருவதாகவும் தான் ஊருக்கு வருகிறேன் என்றால் இங்கு நிலமை சரியில்லை என்றும் உன் குரலையாவது கேட்கிறோம். உன்னை இழக்க எங்களால் முடியாது என்றும் சொன்னபோது தமிழர்களாகிய நமது நெஞ்சுக்குள் ஒருவித வலி. அரங்கமே சோகத்தில் ஆழ்ந்தது.
ஒரு பெண் பேசும் போது தனது மகனுக்கு விபத்து ஏற்பட்டபோது நண்பர்கள் உதவியதாகவும் அவன் நன்றாக வந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது பரிசு வாங்கி வந்த போது பரிசைவிட நண்பர்கள்தான் ஞாபகத்தில் வந்ததாகவும் கூறினார்.
எங்கள் நண்பர் சுபான், கந்தசாமி பட பாடலான 'இதெல்லாம் டூப்பு...' பட்டியலில் சில பல சேர்த்து கலக்கி இல்லாம் டூப்பு பணம்தான் டாப்பு என்றும், அவருக்கு பிகர் பிடிக்கும் என்றும் திருமணத்தின் போது நாலு பிகர் இருந்ததாகவும் மனைவியின் அன்பால் ஐந்து, ஆறு என்றாக்கி ஏழை பிடித்துவிட்டதாக சொன்னார். டெல்லி கணேஷ் மிரள பணத்துக்கான சைபரை சொன்னதாக சொன்னார். அவர் இட்ட பட்டியலில் அம்மா, அப்பா இல்லை என்பதை உறவுக்காக பேசிய பெண் பிடித்துக் கொண்டார்.
இன்றைய வாழ்க்கை முறையில் பேசியவர் சற்று குண்டாக இருக்க டெல்லி கணேஷ் கிண்டலாக பேச, அவர் நீங்கள் பெயரில் கணேஷை வைத்திருக்கிறீர்கள்... நான் உருவத்தில் வைத்திருக்கிறேன் என்று போட்டாரே பார்க்கலாம்...
நல்ல நகைச்சுவையுடன் நகர்ந்த விவாதமேடை அதிக நேரம் ஆனதால் கூட்டம் கலைய ஆரம்பிக்க விவாதம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் முடிவுக்கு வந்தது. நடுவர் நட்பே என்று முடித்தார். நல்ல நிகழ்ச்சி நேரமின்மையால் முடிவுக்கு வந்தது வருத்தமாக இருந்தாலும் நல்ல கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி மனநிறைவைத்தந்தது.
'பரியன் வயல்' சே.குமார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







