மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

அகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 மார்ச், 2020

மலையாள சினிமாக்களம் (அகல் கட்டுரை - ஜனவரி : 2020)

Image result for மலையாள சினிமா வினீத் ஸ்ரீனிவாசன்

சின்ன வயதில் இருந்தே சினிமா மீது ஒரு தனிப் பிரியம். அது ஏன்னு எல்லாம் தெரியாது... படம் பார்ப்பதும்... பாட்டுக் கேட்பதும் எப்பவுமே பிடிக்கும் ஒன்று. தூறல் நின்னு போச்சு படம் பார்த்துட்டு மறுநாள் பள்ளியில் அடிபட்டு கை உடைந்த போது ‘படம் பார்த்துட்டு அதுல வர்ற சண்டைக்காட்சி மாதிரி செஞ்சு பார்த்திருப்பாக... விழுந்து கையை ஒடச்சிக்கிட்டு வந்திருக்காக’ என வலியும் வேதனையும் சுமந்து நிற்கும் போது அம்மா கொடுத்த அடி எப்போதும் மறக்க முடியாத ஒன்று. சில படங்கள் பார்த்த பின்னணி இன்னும் இனிமையாய் மனசுக்குள்! ம்.... அது ஒரு கனாக்காலம்னு எல்லாம் கடந்து போய்விட முடியாது. ஏன்னா சினிமா பார்ப்பது என்பது இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கு. இப்பவும் அது தொடரும் காலம்தான்!  ​

ஆம் இன்றும் படம் பார்ப்பது தொடர்கிறது என்றாலும் இங்கு நாம் பார்க்க விரும்பும் படங்கள் தியேட்டருக்கு வருவதில்லை. பிரபலங்களின் படங்கள் மட்டுமே வரும். அப்படியே நாம் பார்க்க நினைக்கும் படம் வந்தாலும் கணக்குப் பண்ணி வாழும் வாழ்க்கையில் டிக்கெட் விலைக்கு மூன்று நாள் சாப்பிடலாமே என்றுதான் தோன்றும். ஆம் எது தேவையான செலவோ அதை மட்டுமே செய்து நாட்களை நகர்த்தும் போதே ஏகப்பட்ட நெருக்கடி, தினம் தினம் ஒரு பிரச்சினை. எழும்போதே இன்று என்ன செய்யப் போகிறோம் என்ற நினைப்புடன்தான் எழச் செய்கிறது அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதாரம். இதில் எங்கே சினிமாவுக்கான செலவையெல்லாம் யோசிப்பது? டோரண்டுகளும் சில இணைய வெளிகளுமே சினிமாவை எனக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஊருக்குப் போனாலும் ஒரு மாத விடுமுறையில் சினிமா என்பது யோசிக்கும் விஷயமாகத்தான் இருக்கிறது. பிள்ளைகளுக்காக எப்போதேனும் செல்வதுண்டு.

தமிழ்ப்படங்கள் மட்டுமே பார்த்து நகர்ந்த வாழ்க்கைதான் ஊரில் இருக்கும் வரை! அதுவும் காரைக்குடியில் கணிப்பொறி நிலையத்தில் இருந்த போதும், சென்னையில் வேலை பார்த்த போதும் கிட்டத்தட்ட வெளியான எல்லாப் படங்களையும் பார்த்து விடுவோம், அது மரண மொக்கை என்றாலும் கூட! காரைக்குடி தேவகோட்டையில் எல்லாத் தியேட்டரிலும் படம் பார்த்திருந்தாலும் சென்னையில் கிருஷ்ணவேணியும் ஸ்ரீநிவாசாவும்தான் எங்களை அதனுள்ளே அதிகம் அமர்த்திப் பார்த்திருக்கும். நடந்து போகும் தூரத்தில் எங்கள் அறை என்பதால் நினைத்தவுடன் இரவுக்காட்சிக்குச் சென்று விடுவோம்.

அமீரகம் வந்தபின் தமிழ் தவிர்த்து மற்ற மொழிப்படங்களையும் டோரண்டில் தரவிறக்கம் செய்து நண்பர்கள் பார்க்கும் போது வெட்டித்தனமாய் மாலைகளைக் கடத்த வேண்டிய சூழலில், விளக்கணைக்க பதினோரு மணி என்ற சட்டதிட்டத்துடன் இயங்கும் அறையில், பெரும்பாலும் பனிரெண்டரை, ஒருமணி வரை உறக்கம் வரா உளைச்சலில் வேறு என்ன செய்ய முடியும்? அதுவும் வார விடுமுறை தினங்களில் பிரியாணி சமைத்துச் சாப்பிட்ட பின் நேரத்தைக் கடத்த என்ன செய்வது? எல்லா மொழிப் படங்களும் பரிட்சயமானது இப்படித்தான்.

சமைத்தல், ஊருக்குப் பேசுதல், எழுதுதல் என்பதெல்லாம் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் நீடித்தல் என்பது சாத்தியமில்லை. மகிழ்வான பேச்சுக்குப் பின்னே பணம் என்னும் வார்த்தை வந்தால் நம் இயலாமை எதிர்த்து நிற்கும். மகிழ்வாய் ஆரம்பித்த பேச்சும் இறுதியில் சண்டையில்தான் முடியும் என்பதால் இடைவெளி விட்ட பேச்சே கொஞ்சமேனும் மனசுக்கு மருந்தாக இருக்கக் கூடும் என்பதாலும், எவ்வளவு நேரம்தான் எழுத முடியும்? எழுத்துக்குப் போரடித்துப் போகாதா என்ற நினைப்பாலும் சில நிமிடம் பேச்சும் கொஞ்ச நேர எழுத்துமே சாத்தியமாகிப் போன சூழலில், நேரங்கடத்தி என்பது பெரும்பாலும் கணிப்பொறியில் பார்க்கும் படங்களே! சில நேரங்களில் குறிப்பாக விடுமுறை தினத்தில் அறையில் ப்ரொஜெக்டர் மூலமாக படம் போடுவார்கள். எல்லாரும் ரசித்துப் பார்க்க ஆரம்பிப்பார்கள் ஆனால் இறுதிவரை பார்ப்பது நானும் என் நண்பருமாகத்தான் இருக்கும். மற்ற பக்கமெல்லாம் மழை நேரத்து தவளைபோல குறட்டைச் சப்தங்கள் வர ஆரம்பித்துவிடும்.

நான் பார்த்த முதல் மலையாளப்படம் 'அன்னையும் ரசூலும்' - பஹத்பாசிலும் ஆண்ட்ரியாவும் நடித்தது. அருமையானதொரு காதல்கதை. ரசித்துப் பார்க்க வைத்தது. ஆண்ட்ரியாவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும். இது மலையாளத்தில் அவருக்கு முதல்படம். இந்தப் படம் பார்த்தபின் என் கணிப்பொறித் திரையில் நீண்டநாள் அன்னா இருந்தார். அந்தப்படம் கொடுத்த ஈர்ப்பின் காரணமாக மலையாளப் படங்களைத் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படித்தான் நிறையப் படங்களைப் பார்த்தேன். மலையாளப் படத்தின் மீது தீராக்காதல் வந்தது.

டோரண்டில் புதிய மலையாளப்படம் என்றால் அது எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசித்ததே இல்லை. இப்போதெல்லாம் டிரைலரையோ அல்லது விமர்சனத்தையோ பார்ப்பது உண்டு அப்போது உடனே தரவிறக்கம்தான். எத்தனை படங்கள்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்... குறிப்பாக எல்லாமே நல்ல கதைகளுடன்... என்னு நிண்டே மொய்தீன், அனார்கலி, சார்லி, பிரேமம், மகேஷிண்டே பிரதிகாரம், உஸ்தாத் ஹோட்டல், தொண்டிமுதலும் த்ரிஷாக்சியமும், த்ரிஷயம், டேக் ஆப் இப்படி நிறையப் படங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்பதாலேயே எனது கணிப்பொறியில் சேமித்து வைத்திருக்கிறேன்.

நாம் இன்னமும் மாஸ் நாயகர்களுக்காக கதை என்று ஒன்று வேண்டும் என்பதையே மறந்து படமெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாலு சண்டையும் அஞ்சு பாட்டும் போதும் என்ற மனநிலையில் இருந்து இன்னும் மாறவில்லை. பற்றாக்குறைக்கு சூரி, விவேக், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு போன்றோரின் வறட்சியான நகைச்சுவைகளுமே தமிழ்ச் சினிமாவை எழ விடாமல் அழுத்திப் பிடித்து வைத்திருக்கின்றன.

வடிவேலு என்னும் கலைஞன் இல்லாதது தமிழ்ச் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பு என்று கூட சொல்லலாம் என்றாலும் தொழில் மீது காட்ட வேண்டிய பக்தியை அரசியல்வாதிக்காக காட்டியதால் தானாகத் தொலைந்து போன நகைச்சுவையாளன்தானே அவர். நுணலும் தன் வாயல் கெடும் என்ற பழமொழிக்குப் பாந்தமாய்ப் பொருந்திப் போனவர். இவரால் மட்டும் தமிழ்ச்சினிமா தழைத்து விடாது என்றாலும் சவக்குழிக்குப் போகாமலாவது இருந்திருக்குமோ என்ற ஆதங்கமே கொடுக்கிறது அவரின் சமீபத்திய கமலஹாசன் விழா மேடைப் பேச்சு.

சமீபத்திய தமிழ் படங்கள் இளம் இயக்குநர்களின் கையில் சிக்கி, சாதி என்னும் தரித்திரத்துக்குள் நகர்ந்து கொண்டிருக்கிறது. ‘அடக்கி வச்சே...’, ‘அடிமைப் படுத்தினே...’, ‘எழுந்து வருவோமுடா...’ என நீலம், பச்சை, சிவப்புன்னு சாதிக்கொரு கலர் கொடுத்து இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் சாதீயத் தீயை நன்றே வளர்க்கிறார்கள். இவர்களின் பாதையில் பயணிப்பதாலேயே தன் சாதிப்பெயரை பைக்கில் எழுதிப் பறக்கிறது இளைஞர் கூட்டம். நல்லதைக் கற்றுக் கொடுக்க வேண்டிய சினிமா சாதியை வளர்த்துக் கொண்டிருக்கிறது. இதற்குப் பலர் பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் ஆதாயத்துக்காக! இது எப்போது மாறும் என்பது கேள்விக்குறியே...

நம்மவர்களுக்கு நேர் மாறாய் இருக்கிறார்கள் மலையாள இளம் இயக்குநர்கள்... சின்னதாய் ஒரு கதை... அதை வைத்துக் கொண்டு திரையில் மாயாஜாலம் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றும் வாழ்க்கைக் கதைகளாய் நம்முன்னே நின்று நம்மை வசமிழக்க வைக்கின்றன. அவர்கள் சாதிக்குள்ளோ மதத்துக்குள்ளோ மறந்து நின்றுவிடவில்லை. அதையும் தாண்டிப் பயணிக்கிறார்கள். அரசியல் பேசுகிறார்கள்... அதிகாரத்தைச் சாடுகிறார்கள். அன்பை விதைத்து அநீதியைக் கொல்கிறார்கள். சாதியையோ மதத்தையோ சுமக்கவேயில்லை. சக மனிதனின் வாழ்க்கையைச் சுமக்கிறார்கள். நம் முன்னே அதைச் சுவையுடன் படைக்கிறார்கள்.

தமிழ்ச்சினிமா இன்றைய நிலையில் தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது... ஒரு சிலர் மட்டுமே அதைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. புதிதாய் புதிய கதையுடன் வரும் இயக்குநர்கள் முதல் படத்தை முக்கனியின் சுவையுடன் எடுத்து, தியேட்டர் கிடைக்காமல் படும் அவதியில், தனது நல்ல படம் ஓடாமல் முடங்கிப் போன வருத்தத்தில் அடுத்த படத்தை தமிழ்ச்சினிமாவின் மசாலா பார்முலாவிலோ அல்லது சாதீயப் பார்முலாவிலோ எடுக்க ஆரம்பித்துக் காணாமல் போய்விடுகிறார்கள். மலையாளத்தில் முதல் படம் கொடுத்த பெரும் தாக்கத்துக்கு இணையாக, அதையும் விட இன்னும் சிறப்பாக இரண்டாவது படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஆவலில் பயணிக்கிறார்கள். அதில் வெற்றியும் காண்கிறார்கள்.

இங்கே நாம் மாஸ் நடிகர்களுக்காக கதை எழுதுகிறோம். ஆனால் மலையாளிகளோ தங்கள் கதைக்கான நடிகர்களைத்தான் தேடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்திய படங்கள் எல்லாம் மகா வெற்றியைக் குவித்திருக்கின்றன.  சிறிய படங்களுக்கு இங்கே சரியான விளம்பரம் கிடைப்பதில்லை... ஆனால் அங்கே சிறிய பட்ஜெட் படங்கள்தான் பெரிய இலக்கை நோக்கி நகர்கின்றன.

வினீத் ஸ்ரீனிவாசன் ஒரு நாயகனுக்கு உரிய உடலமைப்பு கொண்டவரல்ல என்றாலும் மிகச் சிறப்பாக, அற்புதமாக நடிப்பவர். நல்ல பாடகர், இயக்குநர். அவர் நடித்தால்தான் சரியாக இருக்குமென வந்த படங்கள் பல. சமீபத்தில் அவரின் 'மனோகரம்' சினிமாவைப் பார்த்தேன். அப்படியான கதாபாத்திரத்தில் நம்மவர்கள் நடிக்க யோசிப்பார்கள். ஆட்டோகிராப்பில் பலர் நடிக்க மாட்டேன் என்று சொன்னதும்தான் சேரன் நடிகனானார். சுப்ரமணியபுரத்தில் சசிகுமார் கதாபாத்திரத்தில் சிலர் நடிக்க மறுத்ததால்தான் அவரும் நடிகனானார்.

மனோகரத்தில் ராசி என்பது என்னவென்றே அறியாத, எதைச் செய்தாலும் தோல்வியே மிஞ்சும் ஒரு பெயிண்டரின் கதாபாத்திரம் வினீத்துக்கு.! மனுசன் அடித்து ஆடியிருப்பார். அந்த உருவத்தை தமிழ்ச் சினிமா என்றால் ஏற்றுக் கொள்ளவே மறுக்கும் ஆனாலும் நாமும் இப்போது மாறித்தானே இருக்கிறோம். சரவணா ஸ்டோர் ஜாம்பவான் அண்ணாச்சியை எல்லாம் நாயகனாக்கி கொடியும் கட்டவுட்டும் வைக்கும் நாளுக்கு காத்துக் கொண்டிருக்கிறோமா இல்லையா? வினீத் எழுதி இயக்கிய 'தட்டத்தீன் மராயத்து' பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லை என்றால் பாருங்கள், அழகானதொரு காதல்கதை.

இவரைப் போல்தான் பஹத்பாசிலும்! நடிப்பு அரக்கன். எவனாவது ஒரு இளம் நாயகன் வழுக்கைத் தலையுடன் படங்களில் நடிப்பானா? இவர் நடித்தார். எதார்த்த நடிப்பென்றால் பஹத் எனத் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டார். ‘அன்னையும் ரசூலும்’ திரைப்படத்தைப் பார்க்கும் போது ‘யார்டா இவன்?’ எனத் தோன்றியது. அடுத்தடுத்த படங்களில் இவரின் நடிப்பு பிரமிக்க வைத்தது. பஹத்தின் ஒவ்வொரு படத்தையும் தேடித்தேடிப் பார்க்க வைத்தது அவரின் அலட்டலில்லாத, ஆத்மார்த்தமான நடிப்பு. இதுவரை அவரின் எல்லாப் படங்களும் பார்த்தாச்சு. தமிழில் வந்ததைத் தவிர.

இதே வரிசையில் ஷௌபின் ஷாகிர் பற்றிச் சொல்லியே ஆகணும்... இவரின் ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ படத்தைப் பார்க்கும் முன்பு வரை ஒரு நகைச்சுவை நடிகனாய்த்தான் இவரைத் தெரிந்து வைத்திருந்தேன்... சத்தியமாக சந்தானத்தைப் போல் இவர் இல்லை. இந்தப்படம் பார்த்தபோது இவரின் நடிப்பு வியக்க வைத்தது. அதன் பின் பார்த்த படங்களில் எல்லாம் ஷௌபின் என் மனம் கவர்ந்த நாயகராய் மாறிப் போனார்... அவர் இருந்தால் அந்தப்படம் பார்த்தே ஆக வேண்டும் என்றாகிப் போனது. கும்பளங்கி நைட்ஸில் மகிழ்ந்து கடந்த போது அம்புலியில் மனுசன் அடித்து ஆடியிருப்பார். அப்படி ஒரு நடிப்பை அந்தக் கதாபாத்திரத்துக்கு இவரைத் தவிர வேறு யாராலும் தந்திருக்க முடியாது. அம்புலி இவரின் வாழ்நாள் சாதனைப்படம் என்றும் சொல்லலாம்.

இப்படியே துல்கர் சல்மான், நிவின் பாலி, சோனு நிகம், ப்ரித்விராஜ், டொவினோ தாமஸ், அஜூ வர்கீஸ், ஜெயசூர்யா, குஞ்சக்கோ போபன் என ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாகப் பேசிக் கொண்டே செல்லலாம். மலையாள சினிமா என்று சொல்லிவிட்டு நாயகர்களின் பின்னே செல்வது முறையல்லவே! மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் வரிசை நாயகர்களுக்குப் பிறகு மலையாளத்துக்கு கிடைத்திருக்கும் இளைஞர் பட்டாளம் மிகச் சிறப்பாக நடிக்கிறது. இவர்களின் தொடர் வெற்றிக்குப் பின்னே நல்ல கதைகள் இருக்கின்றன. அதைக் கொடுப்பவர்கள் புதிதாய் பதியமிடும் இளம் இயக்குநர்களே. மலையாளச் சினிமா உயரத்தை நோக்கி நகர்ந்து செல்ல ஆரம்பித்து நாட்களாகிவிட்டது. நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மலையாள சினிமாவில் ஒவ்வொரு படமும் புதிதான கதைக்களத்துடன்... எதார்த்தமாக எடுக்கப்படுகின்றன. இந்த எதார்த்தக் கதையாடலே அந்தப் படங்களின் வெற்றிக்கு வித்திடுகின்றன. மேலே சொன்னது போல் நாயகனுக்காக கதை என்பதைவிட கதைக்காகத்தான் நாயகன் என்பதில் மிகத் தெளிவாக, உறுதியுடன் இருக்கிறார்கள்... நாயகனுக்காக கதையில் எந்தச் சமரசமும் செய்வதுமில்லை... செய்ய விரும்புவதுமில்லை. அவர்களின் படங்களைக் களங்களே நிர்ணயம் செய்கிறது. காட்சிப்படுத்துதலில் நம்மை வீழ்த்தி விடுகிறார்கள்.

தமிழ்ச்சினிமா, நான் சின்ன வயதில் எப்படிப் பார்த்தேனோ அப்படியேதான் இன்னும் நகர்கிறது. சில நல்ல படங்கள் எப்போதேனும் தலைகாட்டுவதுடன் சரி... மாஸ் நாயகர்களின் படங்களுடன் வெளிவந்து மறுநாளே பெட்டிக்குள் முடங்கி விடுகின்றன. மிக மிக அவசரம், மேற்குத் தொடர்ச்சி மலை, தொரட்டி, ஒத்தைச் செருப்பு போன்ற படங்களையெல்லாம் நம்மில் எத்தனை பேர் பார்த்திருப்போம்? அசுரன் கூட மாஸ் ஹீரோ என்பதால்தான் இமாலய வெற்றி பெற்றது என்பதே வெளிப்படையான உண்மை.

நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா மாஸ் என்னும் கோட்டைக்குள் உட்கார்ந்த பிறகு, ‘கதையா..? அப்படின்னா..?’ என்ன என்று கேட்க வைத்துவிட்டது. நாங்கள் எடுப்பதுதான் கதை... நாலு சண்டை, ஐந்து பாட்டு... கொஞ்சம் பஞ்ச் வசனங்கள் இருந்தால் போதும் கட் அவுட் வைக்கவும் அதுக்குப் பால் ஊத்தவும் அப்படியே தங்களுக்கு வாக்கரிசி போட்டுக் கொள்ளவும் ஒரு கூட்டம் இருக்கு என்பதை உணர்ந்தபின் கதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. அதுவும் குறிப்பாக புதிய இயக்குநர்கள் எல்லாருமே சொல்லி வைத்தாற்போல சாதிகளைச் சுமந்து படமெடுப்பதுதான் கேவலத்தின் உச்சம். அதையும் தூக்கி வைத்துக் கொண்டாடவும் ‘நான் இவன்டா’ எனச் சாதி சொல்லித் திரியவும் ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்கிறது... பின் எப்படி நல்ல கதைகளுக்கு இங்கே மதிப்பிருக்கும்..?

மலையாளக் கரையோரம் இப்படியான சாதீய இயக்குநர்கள் ஒதுங்கவில்லை என்பதே ஆறுதல். நல்ல சிறுகதைகளை வாசிக்கும் போது கிடைக்கும் மனநிறைவு சமீபத்திய மலையாள புதிய இயக்குநர்களின் படங்களில் கிடைக்கிறது என்பதே உண்மை.

சல்லிக்கட்டு, தண்ணீர் மத்தன் தினங்கள், அம்புலி, உயரே, ஜூன், கும்பளங்கி நைட்ஸ், இஸ்க், வைரஸ் எனச் சமீபத்தில் பார்த்து... ரசித்த படங்கள் எல்லாம் மனசுக்குள் இன்னும் தித்திப்பாய்...

முடிந்தால் இந்தப் படங்களைப் பாருங்கள்... மனநிறைவான சிறுகதையை காட்சிப்படுத்திப் பார்த்த அனுபவம் கிடைக்கும்... நிச்சயமாய் வித்தியாசமான அனுபவத்தைப் பெறுவீர்கள். கத்தியும் ரத்தமும் சாதியும் மதமும் இல்லாத ஒரு வாழ்வை ரசிக்க முடியும்.

மலையாளத் திரையில் மண் வாசமும் மனதின் வாசமும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் காலமிது. இந்த வாசம் இன்னும் இன்னுமாய்த் தொடரட்டும். 

 - பரிவை சே. குமார்

திங்கள், 9 மார்ச், 2020

சிறுகதை : சாமியாடி (அகல் மின்னிதழ்-ஜனவரி:2020)

எப்பவும் போல் அகல் மின்னிதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பிய போது கதை கொடுங்களேன் எனக் கேட்டார் நண்பர் சத்யா. இரண்டு கதைகளை அனுப்பினேன். அதற்கு முன் கட்டுரை ஒன்றும் அனுப்பியிருந்தேன். ஒரு கதையையும் கட்டுரையையும் ஜனவரி-2020 அகல் மின்னிதழில் வெளியிட்டிருந்தார். ஊரில் இருந்ததால் அது குறித்துப் பகிர முடியவில்லை. இதோ 'சாமியாடி'யை இங்கே பகிர்ந்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க. அப்படியே அகலிலும் உங்க கருத்தைச் சொன்னா நல்லாயிருக்கும். நன்றி.

அகலில் வாசிக்க, கருத்துச் சொல்ல : சாமியாடி

---------------------------------
ரோட்டோரத்தில் இருந்த சிறிய கீற்றுக் கொட்டகை டீக்கடை முன் வண்டியை நிறுத்தினான் ரவி, அதிலிருந்து இறங்காமலேயே 'இங்க சாமியாடி வீடு எங்கப்பு இருக்கு?' எனக் கேட்டபடி தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் பின்னாலிருந்த சாமியய்யா.

"எந்தச் சாமியாடிப்பு? மேலக்காட்டாரா... இல்ல வடக்கிவூட்டானா?" கடைக்கு முன் கிடந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து தினத்தந்தியில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம்பிள்ளை சத்தமாகக் கேட்டார்.

“இங்க ரெண்டு சாமியாடியா இருக்காவ?" சாமியய்யா ஆச்சர்யமாகக் கேட்டார்.

"ஆமா... நிறையச் சாமியாடிக இருக்கானுக... நண்டு சிண்டெல்லாம் சாமி ஆடுதுவ... ஆனா சாமியாடின்னு பேரெடுத்தவுக அவக ரெண்டு பேருதான்"

"ம்.... இந்த பாதரக்குடியில பொண்ணக் கொடுத்துருக்காருல்ல... பெரியகருப்பத்தேவர்..."

"ஓ.... செரி... செரி... அட நம்ம மேலக்காட்டார்... அதானே... இப்ப ஆரு வடக்கிவூட்டானப் பாக்க வர்றா..."

"வீடு...?"

"நேர போங்கப்பு... கம்மாய்க்கர தாண்டி மேக்கால ஒரு பாத திரும்பும்... அதுல போனீங்கன்னா சோத்தாங்கைப் பக்கமா பச்சக் கேட்டுப் போட்ட தோட்டமிருக்கும்... கேட்டுல கூட குஞ்சரம்மாள் தோட்டம்ன்னு எழுதியிருக்கும் அதுக்குள்ளதான் வீடு... தேவரு இப்பத் தோட்டத்துலயே இருக்காவ"

"சரிங்கய்யா"

"அப்பு காபி சாப்புட்டுப் போறது... நம்ம கடயில சுத்தமான பசும்பாலுங்க." டீ ஆத்தியபடி கேட்டான் கடைக்கார சுப்பு.

"இப்ப காபி வேணாந்தம்பி வரும் போது குடிக்கிறோம்"

"செரிங்கய்யா.... நீங்க வரும்போது ஐசு வந்துரும்... வெயிலுக்குச் சும்மா சில்லுன்னு நன்னாரி வேர் போட்ட தண்ணியில சர்பத்துப் போட்டுத்தாரேன்... அப்புடி ஒரு சர்பத்த வேற எங்கயும் குடிச்சிருக்க மாட்டீங்க" சுப்பு பேசிக் கொண்டிருக்கும் போதே வண்டியைக் கிளப்பினான் ரவி.

வண்டி கம்மாக்கரையைத் தாண்டி மேற்குப் பக்கமாக போன சரளை ரோட்டில் திரும்பி குஞ்சரம்மாள் தோட்டம் என எழுதியிருந்த பச்சைக் கேட்டின் முன் நின்றது. இருவரும் வண்டியில் இருந்து இறங்கி வேட்டியை அவிழ்த்து நல்லாக் கட்டிக் கொண்டார்கள். ரவி சற்று தள்ளிப் போயி ஒரு காரஞ்செடிக்குப் பின்னே அமர்ந்து ஒண்ணுக்கு இருந்தான்.

"அங்கயிருந்து அடக்கிக்கிட்டு வந்தியாக்கும்... கடக்கிட்ட நிக்கிம் போது போயிருக்கலாமுல்ல, வீடு வாச இருக்க இடத்துல பொண்ணு புள்ளங்க வரும் போகும்..." கடுகடுத்தார் சாமியய்யா.

அவரை முறைத்துவிட்டு "இப்ப இங்கிட்டு யாரு வந்தா... சும்மா எப்பப் பாத்தாலும் நய்யி நய்யின்னு" முணங்கிய ரவி கேட்டை நோக்கிப் போனான்.

"தோட்டந் தொரவா இருக்காவ... நாயி கெடக்கும்... பார்த்துத் தொற"

"ம்..." என்றபடி சின்னக் கேட்டைத் திறந்து காலை வைத்தான்.

"வவ்... வவ்...." என மூன்று நாய்கள் பாய்ந்தோடி வர, "ஏய் மணி...." எனக் கத்தியவாறு வாழைகளுக்கு இடையே வேப்பங்குச்சியால் பல் விளக்கியபடி வந்தார் உயரமான பெரியகருப்பத்தேவர்.

அவரின் குரலுக்கு மூன்றும் முறுவலித்தபடி நின்று, அருகே இருந்த தென்னையை ஒட்டி தண்ணி ஓடும் வாய்க்கால் கரையில் படுத்துக் கொண்டன. உள்ளே வந்த இருவரையும் பார்த்து வாயிலிருந்த எச்சிலைத் துப்பிவிட்டு "யாருப்பு நீங்க..? என்ன வெசயம்?" என்றார்.

"மேக்காட்டூர்ல இருந்து வாரோம்... உங்களக் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கோம்... சிறுவாச்சூர் மணிதான் சொல்லிவிட்டாப்புல"

"அடடே மணி சொல்லி வாரீங்களா? நேத்து கூட பேசும்போது சொன்னான், வருவாங்க... பாத்துக் கொடுங்கன்னு... வாங்க... வாங்க" என உள்ளே அழைத்துச் சென்று வாசலில் போட்டிருந்த நீளக் கொட்டகையில் விரித்திருந்த சமுக்காளத்தில் அமரச் சொல்லி, "ஏய் தங்கம் தண்ணி கொண்டாந்து கொடாத்தா' ன்னு சொல்லிட்டு, "'சித்த இருங்க ரெண்டு தண்ணியள்ளி உடம்புல ஊத்திக்கிட்டு வந்துடுறேன்" என மோட்டார் அறைப்பக்கமாப் போனவர், "ஏத்தா வந்திருக்கவுகளுக்கு காபி கொடுங்க... ரொம்பத் தூரத்துலயிருந்து வந்திருக்காவ... கருக்கல்ல கெளம்பியிருப்பாவ... சாப்புட்டாகளா இல்லயான்னு கூடத் தெரியல... கேட்டுச் சாப்பிட எதாச்சும் கொடுங்க... வீட்டுக்குள்ளயே அட காக்காம" எனக் கத்தினார்.

அவர்கள் காபி மட்டும் குடித்திருந்தார்கள்... சாப்பிட மறுத்து விட்டார்கள்... ரவி பொறுமை இழந்து உக்காந்திருந்தான். பசி பொறுக்காதவன் அவன்... காபி குடித்தும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருந்தது அவனுக்கு.

நெற்றி நிறைய விபூதியைப் பட்டையாக அடித்து நடுவில் நிலாவைப் போல பொட்டு வைத்து, சட்டையில்லாத கரிய உடம்பின் மேல் ஒரு குத்தாலம் துண்டு போட்டுக் கொண்டு அவர்களுக்கு எதிரே வந்தமர்ந்தார்.

"சீக்கிரம் வந்தீக, இல்லேன்னா நாங்கிளம்பி வெளிய போயிருப்பேன், சீனமங்கலம் பெரியய்யா வீட்டுக்கு வாரேன்னு சொல்லியிருந்தேன். வண்டி அனுப்புறேன்னு சொன்னாக... இப்ப வந்துரும்.. ம்... சொல்லுங்க... என்ன பெரச்சன" என்றார்.

"பொட்டப்புள்ள... கல்யாணம் வச்சிருக்கேன்... இப்ப பேய்க் கோளாறாட்டம் ஒரு மாரிக்கி உடம்பத் திருகிக்கிட்டு முழிக்கிது... எம்புட்டோ வயித்தியம் பாத்தும் சரிவரல... குறி, கோடாங்கின்னு எல்லாம் பாத்துட்டோம்... எல்லாத்தயும் பொயிட்டு வான்னு சொல்லுது. தங்கச்சி மவனுக்குத்தான் கட்டுறோமுன்னாலும் அவங்க மனசுல தப்பாத் தோனிறக்கூடாதுல்ல... நாளக்கி வாழப்போற எடத்துலயும் இப்படி இருந்தா... அதோட வாழ்க்க போயிருமே... மணிக்கிட்ட விபரம் சொன்னப்போ அதுதான் உங்களச் சொன்னுச்சு... நீங்கதான் எப்படியாச்சும் புள்ளக்கி குணமாக்கி விடோணும்... உங்கள நம்பித்தான் இம்புட்டுத்தூரம் வந்திருக்கோம்... புள்ளய கூட்டியாரச் சொன்னா.... நாள போக நாளான்னக்கி செவ்வாக்கெழம அப்ப கூட்டியாரோம்.... இல்லே நீங்க வர்றதுன்னா... என்ன வாங்கணும்ன்னு சொல்லிட்டிங்கன்னா வாங்கி வச்சிருவேன்" ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சாமியய்யா.

"ம்... எல்லாத்தையும் மொத்தமாக் கொட்டிட்டீக... ம்.... செரி... புள்ளக்கி என்ன வயசாவுது?"

"இந்த அப்பிய வந்தா இருவது முடியுது..."

"ம்... கலியாணத்துல புள்ளக்கி சம்மதம்தானே?"

"அதுக்குப் பிடிச்சதாலதானே தங்கச்சி மவனுக்கு கொடுக்கிறேன்..."

"ம்... எத்தன நாளாயிருக்கு?"

"நெருக்கி ஒரு மாசமா அப்புடித்தானிருக்கு"

"ம்... குறி, கோடாரியெல்லாம் கேக்கலயாக்கும்"

"ஆமா"

"தீட்டுப் போறதுல சமீபமா பெரச்சின எதுவுமிருக்கா?"

"ம்... தீட்டு நிக்காமப் போவுது"

"அதுலதானே அவுக வாசம் செய்வாக விடமாட்டாக... விட்டுப் போகணுமின்னா சொத்தெழுதிக் கொடுன்னு கேப்பாக"

"நீங்கதான் எப்படியாச்சும்..."

"ம்... கருப்பனுக்கிட்ட வந்துட்டியல்ல கவலய விடுங்க... இனி அவன் பாத்துப்பான்... உங்க புள்ளக்கி ஒண்ணும் ஆவாது"

"ம்... புள்ளய பாக்கச் சகிக்கல..." கண்கலங்கினார் சாமியய்யா.

"கலங்காதிய... கருப்பனுக்கு முன்னால கலங்கி நிக்கலாமா.... ம்ம்ம்.... ஆத்தா அந்த விபூதித் தட்ட இங்க கொடு" கத்தினார்.

விபூதித்தட்டு வந்ததும் அதிலிருந்த சூடத்தை தட்டின் நடுவே பத்த வைத்துத் தன் முன்னே வைத்து "படியிறங்கி வாடா பதினெட்டாம் படிக்கருப்பா... பாதை மறிச்சி வாடா பாண்டி முனியா... எங்குரல் கேக்கலையோ ஏழுருக் கருப்பா... மாத்தில் ஆடி வாடா மாரநாட்டுக் கருப்பா... பரியேறி வாடா பரியமயக் கருப்பா..." அப்படின்னு சத்தமாகச் சொல்லியபடி கண் மூடி ஊரில் இருக்கும் கருப்பர்களையெல்லாம் அழைக்க ஆரம்பித்தார்.

அவர் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது.... தலையைத் தலையை ஆட்டினார்....

திடீரெனச் சத்தமாக "அப்பா... தவிச்சி நிக்காதேப்பா... எங்கிட்ட வந்துட்டயில்ல... கவலயெதுக்கு... அல்பாயுசுல மாண்ட கன்னி ஒருத்தி புடிச்சிருக்கா... கல்யாணக் கனவோட போனவ கனவ நெற வேத்த உம்புள்ள உடம்புல ஏறியிருக்கா... எறங்க மறுப்பா... அவளுக்குத் துணையா நாலஞ்சி சேந்திருக்கு... முனியும் எடப்படுறான்... ஒண்ணுமில்ல உம்மவளுக்கு... நாம் பாத்துக்கிறேன்... போ" என்றவர் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

விபூதித் தட்டில் அதுவரை எரிந்த சூடம் அணைந்தது. வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் சொம்புத் தண்ணீரோடு ஓடி வந்து அவர் முன் நீட்டினார். தண்ணியை வாங்கிக் கொஞ்சம் குடித்து விட்டு எழுந்து முகங்கழுவினார். துண்டால் துடைத்தபடி மீண்டும் அவர்களுக்கு முன்னே அமர்ந்தார்.

"நான் இங்க பெரும்பாலும் சாமி அழக்கிறதில்ல, அழச்சா அன்னக்கி முழுவதும் உடம்பு வலியிருக்கும். வேற வேல பாக்க முடியாது, செவ்வா வெள்ளி மட்டுந்தான் பாக்குறது, மணி சொல்லி வந்திருக்கீக, அதான் அழச்சேன், கல்யாணம் நிச்சயமாயி நின்னு போனதால மாண்ட ஒருத்தியும் மரணத்தைத் தானே தேடிக்கிட்ட சிலதுகளும் சேந்து புடிச்சிருக்குக, முனியும் எடப்பட்டிருக்கான், பயமில்ல, நாஞ் சொல்றத வாங்கிக்கிட்டு வெள்ளிக்கெழம புள்ளயக் கூட்டியாங்க, பார்த்து முடிச்சி விட்டுடலாம், கவலப்படாதீக, எல்லாஞ் செரியாகும், கருப்பன மீறுன காரியம் என்ன இருக்குங்கிறேன்" என்றார்.

"ம்... கருப்பன்தான் சரியாக்கணும்... எம்புட்டுச் செலவானாலும் பரவாயில்ல... புள்ளயச் சரியாக்கி விட்டுறணும்"

"கவலயே வேணாம்... வெள்ளிக்கெழம உங்க மகளா வருவா பாருங்க" என்றார்.

"ஆத்தா அந்த பேப்பர் பேனா எடுத்துக்கிட்டு வா" எனச் சத்தமாய் சொல்லி, கொண்டு வந்து கொடுத்த பேப்பரில் எழுதி நீட்டினார். எழுந்து வாங்கிய சாமியய்யா, "இப்ப எம்புட்டுன்னு சொன்னீங்கன்னா" என இழுத்தார்.

"அதான் வெள்ளிக்கிழம வருவீங்கள்ல அப்ப வாங்கிக்கிறேன் போயிட்டு வாங்க"

"மொத மொதல்ல பாத்துட்டு சும்மா போவக்கூடாது"

"அப்புடியா... செரி... உங்க மனசுக்குத் தோணுனத கருப்பனோட விபூதித் தட்டுல வச்சிச்ட்டுப் போங்க." என்றார்.

இருநூற்றி ஒரு ரூபாயை வைத்து விட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் கேட்டைத் திறந்து வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்த மூன்று நாய்களும்... குரைக்கவில்லை. வாசலுக்கு வந்தவுடன் ரவி அந்தச் சிட்டையை வாங்கிப் பார்த்தான்.  

"என்ன இம்புட்டு எழுதியிருக்காரு... இதெல்லாமே வேணுமா? இதுவரக்கிம் செலவழிச்சதை மொத்தமா இவருக்கிட்ட கொடுக்கணும் போல" என்றான்.

"சரியாக்கணுமின்னா சும்மாயில்ல... பெரியகருப்பத்தேவர் பெரிய ஆளு... மணி அப்பவே சொன்னாப்புல... வெளியிலயிருந்து வந்து கூட்டிப் போயிருவாகளாம். அவுகல்லாம் கணக்குப் பாக்காமக் கொடுப்பாகளாம் அதான் தோட்டந்தொறவுன்னு வசதியாயிருக்காரு. செவ்வாவெள்ளி கூட இங்கேயிருக்கேன்னு சொன்னாத்தான் இருப்பாராம். வண்டியெடு... புள்ளக்கிச் சரியானப் போதும்... இதுவரக்கிம் எம்புட்டோ செலவழிச்சிட்டோம்... இதயுஞ்செய்வோம்... இவரு சரியாக்குவாருன்னு எனக்கு நம்பிக்கயிருக்கு" என்றார்.

ரவி வண்டியை எடுத்தான். தேவரைக் கூட்டிப்போக சீனமங்கலத்துக் கார் வந்து நின்றது.

"என்னப்பு ஆளிருந்தாரா?" பாலுக்கு எடைக்கட்டியபடி கேட்டான் சுப்பு.

"ம்... இருந்தாரு"

"உங்க நல்ல நேரம் இல்லேன்னா கருக்கல்லயே கெளப்பிக் கொண்டு போயிருப்பானுவ சாமியாடின்னா அப்படி ஒரு சாமியாடி, முடியும் முடியாதுன்னு மொகத்துக்கு நேர சொல்லிருவாரு முடியும்னு சொன்னா முடிச்சிக் கொடுத்துருவாரு, டீயா, காபியா?"

"டீக்காபி வேணாம்... சர்பத்துக் கொடுங்க... அவனுக்கு என்ன வேணுமோ அதக் கொடுங்க... பசியாருற மாரிக்கி எதுவுமிருந்தாக் கொடுங்க"

"என்ன சுப்பு பெரியகருப்பத்தேவர் பொயிட்டாரா?" என்றபடி வந்தான் அவன். முகத்தில் பெரிய விபூதிப்பட்டை, கழுத்தில் பாசி மாலைகள், காவி வேஷ்டி, சட்டையில்லாத கரிய உடம்பு.

"இப்பத்தான் வண்டி போயிருக்கு இன்னக்கி எங்கயோ சாமி அவருக்கு அள்ளிக் கொடுக்குது ம்ம்ம்... உனக்குந்தான் கொடுத்துச்சு... நீதானே கெடுத்து வச்சிருக்கே சுந்தரம் காலயிலயே சரக்கடிச்சிட்டு வர்றே, அப்புறம் கருப்பன் எப்படி வருவான்"

"எனக்குள்ள வரவேண்டான்னுதான் சரக்கடிக்கிறேன் சுருக்குன்னு ஒரு டீப்போடு" என்றபடி சொக்கலால் பீடிக் கட்டில் இருந்து ஒன்னை உறுவிப் பற்ற வைத்தான் சுந்தரம்.

"பெரியவரே நீங்க சாமியாடி வீட்டுக்கு வழி கேட்டப்போ நாங்க சொன்ன ரெண்டாவது சாமியாடிதான் இவரு. குடிச்சே சாமியை விரட்டுறாரு ஆனா அது போவாம இவரையே சுத்துது உங்க பெரச்சினயச் சொல்லுங்க... இவரு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்"

"அதெல்லாம் வேணாம்பா பெரியவரு எல்லாம் சொல்லிட்டாரு சாமி வேசத்துல காலயிலயே தண்ணி அடிச்சிட்டு நிக்கிறாரு அவருக்கிட்ட போயி மொறயிடச் சொல்லுறே, சர்பத்துப் போடுறியா இல்ல தின்ன ரொட்டிக்கி காசக் கொடுத்துட்டுப் போவா" கோபமானார் சாமியய்யா.

"என்னப்பு கோபப்படுறிய... இவரும் நல்லாச் சொல்லுவாருன்னு சொன்னே விடுங்க இந்தா சூப்பராச் சர்பத்துப் போட்டுத் தாரேன்"

ரவி டீ வாங்கிக் குடித்தான். சுந்தரமும் டீயுடன் எதிரே உக்கார்ந்து சாமியய்யாவையே பார்த்தான். ஜில்லுன்னு சர்பத்தை சாமியய்யா கையில் கொடுத்தான் சுப்பு.

"க்க்.... கெக்... ஹக்கக்... அய்யாவுக்கு எம்மேல ஏன்டா இம்புட்டுக் கோபம்... சாப்புடுற சோத்துல மண்ணா அள்ளிப்போட்டேன்.... க்கே...க்கேக்க்க்கே... ஹக்கஹ்க்கா" சிரித்தான்.

சாமியய்யா பேசாமல் அமர்ந்திருந்தார். டீயை வைத்துவிட்டு அவரையே உற்றுப் பார்த்தான். கண்கள் மேலும் சிவப்பேற, அப்படியே அமர்ந்திருந்தான்.

"மொறக்கிறாருடா., என்னயவே மொறக்கிறாரு எம்பார்வைக்கு ஊரே பயப்படும் இவரு என்னப் பயமுறுத்துறாராம் ஹா..ஹா... கெக்கெக்கே..."

சாமியய்யா தலையைக் குனிந்து கொண்டார்.

"பொட்டப்புள்ள உடம்ப முறுக்கிக்கிட்டுக் கெடக்காளா" அதட்டலாய்க் கேட்டான்.

சாமியய்யா அவனை ஏறிட்டுப் பார்த்தார்... ரவி காலியான டீக்கிளாஸை வைத்துவிட்டு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

"மாண்ட கன்னியோட மத்ததுகளும் சேர, முனியும் முன்ன நிக்கிறானேய்யா" பல்லைக் கடித்தான்.

"புள்ளய கூட்டிப் போறேன்னு நிக்கிறாளேய்யா. விடுவேனா எம்புள்ளய விடுவேனா" பல்லை நறநறவெனக் கடித்தான்.

அவரு சொன்னதையே இந்தத் தண்ணி வண்டியும் சொல்லுது சொல்லிட்டு காசு கொடுன்னு மல்லுக்கு நிக்கும். கொடுத்தா தண்ணியடிச்சிட்டு எங்கயாச்சும் விழுந்து கெடக்கும் என்று நினைத்தவர் சுப்புவிடம் காசு கொடுத்துவிட்டு "ரவி வண்டிய எடு" என்றார்.

"ஏய் உம்புள்ளக்கி ஒண்ணுமில்லப்பா, உன்னோட ஊருக்குப் போற வழியில பொய்யக்கர முனியனுக்கு தேங்காய் ஒடச்சிட்டுப் போ. புள்ள சரியாவா புடிச்சது ஓடிரும் சரியானதும் முனியனுக்கு அந்த புள்ளய வச்சி பொங்க வைக்கச் சொல்லு... போ திரும்பிப் பாக்காதே"

"ரவி வண்டிய எடுன்னேன். குடிச்சிட்டு உளறுறான் அதப்பாத்துக்கிட்டு. நாம தேவரு சொன்னபடி சாமானோடு வெள்ளிக்கெழம வருவோம்"

"சொன்னது புரியல, என்னோட வாக்க நீ மதிக்கலயில்ல? கருப்பன் பொய் சொல்றான்னு நெனக்கிறேயில்ல? போ போற வழியில காட வலமிருந்து எடம் போவும். போ... அப்ப நம்புவே இந்தக் கருப்பன, அப்ப நம்புவேடா இந்தக் கருப்பன" சப்தமாகச் சிரித்தான் சிரித்தான்... சிரித்துக் கொண்டே இருந்தான்.

ரவி வண்டியை எடுத்தான், சாமியய்யா அவனை திட்டிக் கொண்டே வண்டியேறினார்.

"அந்தாளு சொல்ற மாதிரி ஒரு தேங்காய் வாங்கி ஒடச்சிப் பாக்கலாமே, அவராத்தானே சொல்றாரு சரியான நல்லதுதானே"

"போடா தண்ணியப் போட்டுட்டு உளறுறான் அதத் தெய்வ வாக்குன்னு சொல்லிக்கிட்டு"

"எதுக்கு இப்பக் கடுப்பாகுறிக"

"செரி அப்பா ஒண்ணுஞ் சொல்லல பேசாமப் போ"

"போய்க்கிட்டுத்தான் இருக்கோம்"

வண்டி வேகமாய்ப் போனது இருவரும் பேசவில்லை.

"இதுவரக்கிம் தங்கச்சிக்கிப் பாத்தவங்கட்டயெல்லாம் நாமளாத்தான் வெவரஞ் சொன்னோம். அப்புறந்தான் அவங்க இது இப்படி இது அப்புடின்னு சொல்ல ஆரம்பிச்சாக... பணந்தான் செலவாச்சு... பலனில்ல ஏ இப்பப் போயிப் பாத்த சாமியாடிக்கிட்ட கூட நாமதானே வெவரம் சொன்னோம். அவராவா இதுக்குத்தானே வந்திருக்கேன்னு கேட்டாரு? இல்லயில்ல?"

"அவரு கேக்கல ஆனா சரியாச் சொன்னாருல்ல? இந்தக் குடிகாரன் சொன்னததானே அவரும் சொன்னாரு"

"அதேதான்... இவங்க மட்டுமில்ல இதுவர பாத்த எல்லாருமே இதத்தானே சொன்னாக... சாமியாடி பெரியகருப்பத்தேவருக்கிட்ட நாம சொன்னோம். தீர்வு சொன்னாரு. இந்தாளு அவரே இதுதானே உன்னோட பெரச்சினயின்னு சொல்லி அதுக்குத் தீர்வும் சொன்னாரு. நாம எதாச்சும் கேட்டோமா? யோசிங்க. அந்தாளுக் குடிச்சிருக்கதால அவரு சொன்ன சொல்லு சரியில்லன்னு எப்புடி முடிவு பண்ணுவீங்க."

சாமியய்யா யோசிக்க ஆரம்பித்தார். பொட்டக்காட்டில் மொட்டை வெயிலில் வண்டி போய்க் கொண்டிருக்க...

காடை ஒன்று வலமிருந்து இடம் போனது.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

அனுபவக் குறிப்புகள் - வாசிப்பு (அகல் கட்டுரை)

அகல் மின்னிதழ் எப்போது என்னிடம் கட்டுரைக்கான களத்தை மட்டுமே காட்டும். சிறுகதையை விட கட்டுரைகள் அதிகம் எழுதியது அங்கு மட்டுமே. அது ஏனோ தெரியவில்லை நண்பர் சத்யா, 'ஜி அடுத்த இதழுக்கு ஒரு கட்டுரை எழுதுங்களேன்' என்றுதான் முகனூல் அரட்டையில் சொல்வார். அப்படித்தான் தொடர்ந்து கட்டுரைகளாய் அகலில் மட்டும். எனக்கே ஆச்சர்யமாக இருக்கும்... கதைகள் என்றால் ஒகே... கட்டுரை என்னும் போது கொஞ்சம் யோசிப்பேன். இந்த முறை கட்டுரை எழுதி அனுப்பியதும் வாசித்துவிட்டு இப்படி முகனூல் அரட்டையில் சொல்லியிருந்தார். 

'கட்டுரை படிச்சுட்டேன் அற்புதம் ஜி உங்க கட்டுரைகளில் இது தான் டாப். ஆரம்ப கட்ட எழுத்திலிருந்து வேகுவா மெருகேறி சிறப்பா எழுதி இருக்கீங்க...தொடர்ந்து கலக்குங்க ஜி'

நன்றி சத்யா.

சந்தோஷமாக உணர்ந்த தருணம் அது. இன்று அகலில் வெளியாகியிருக்கும் என் கட்டுரை உங்கள் வாசிப்புக்காக.

Image result for வாசிப்பு
வாசிப்பு
வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்தானே..?

வாசிப்புக்கும் எனக்கும் இடையே மிகப்பெரிய தூரம் இருந்தது... அது படிக்கும் காலம் முதல் இப்போது வரை ஏற்ற இறங்கங்களுடன் நகர்ந்தாலும்... பெரும்பாலும் தூரமாகவேதான் இருந்து வந்தது... சமீபத்தில்தான் சற்று பக்கத்தில் வந்திருக்கிறது என்பது கூட மகிழ்வான விஷயம்தானே.

பள்ளியில் படிக்கும் போது வீட்டில் அம்மாவின் விருப்பமாய் 'ராணி' மட்டுமே வாங்கப்படும். செவ்வாய்க்கிழமை கடைகளுக்கு வந்ததும் வாங்கி வர வேண்டும். அதில் அட்டை டூ அட்டை எல்லாரும் வாசிப்போம். சின்னம்மா வீட்டில் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், அம்புலி மாமா முதல் வாராந்திர, மாதப் பத்திரிக்கைகள் நாவல்கள் எல்லாம் வாங்குவார்கள். அங்கு சென்றால் புத்தகங்கள் அள்ளி வரலாம் என்பதால் இரு ஊருக்கும் இடையில் இருக்கும் கண்மாயைக் கடந்து சென்று புத்தக மூட்டையுடன் திரும்பி வருவோம். அப்போதுதான் க்ரைம், பாக்கெட் நாவல்களின் தீவிர வாசிப்பாளன் ஆனது.
Picture
கல்லூரியில் படித்தபோது தமிழ்த்துறையோடு சிறிதான தொடர்பு இருந்ததாலும் நண்பன் முருகன் தழித்துறையில் படித்ததாலும் பழனி ஐயாவுடனான நட்பு, உறவாய் மாறி அவரின் வீட்டுக்குள் அழைத்துச் செல்ல, அங்குதான் பெரிய பெரிய புத்தகங்களாய் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். ஐயா இருந்தால் பேச்சு பல நல்ல விஷயங்களுக்குள் நுழைந்து பயணிக்கும்... அவர் இல்லைன்னா ஒரு பெருங்கூட்டத்தின் அரட்டைதான் அங்கு நிறைந்திருக்கும்... எல்லாருக்கும் காபி, சாப்பாடென அம்மாதான் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்... என்ன கூட்டம் இங்கே... ஐயா இல்லை போங்க என்று ஒரு வார்த்தை எப்போதும் அவர் வாயில் இருந்து வந்ததேயில்லை... என் பிள்ளைகள் என்றுதான் சொல்வார். ஐயா இருந்தாலும் இல்லையென்றாலும் உபசரிப்பு ஒன்றுதான்... அதில் எப்போதும் மாற்றமிருக்காது.

வீடெங்கும் நிறைந்து கிடக்கும் புத்தகத்தில் எதையும் எடுத்துப் படிக்கும் உரிமை எங்களுக்கு இருந்தது... நல்ல புத்தகமெனில் ஐயாவே இதை வாசிங்க என்று சொல்லிக் கொடுப்பார். சில நேரங்களில் நமக்கே நமக்காகவும் அந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிடுவார். இந்த வாசிப்பின் நீட்சியாய் கல்லூரி நூலகத்தில் பாடப்புத்தகம் தவிர்த்து சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் என புத்தகங்களை எடுத்து வாசிக்கவும் முடிந்தது. தோழி சுபஸ்ரீ கல்லூரி நூலகத்தில் உணவு இடைவேளை மற்றும் ஆசிரியர் வராத பாடவேளைகளில் தன்னார்வ சேவை செய்ததால் விருப்பப்பட்ட புத்தகத்தைச் சொன்னால் அவர் எடுத்துக் கொடுப்பார். வாசித்துவிட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்தால் அடுத்த புத்தகம் வரும்.

அதன் பின்னான நாட்களில் வாசிப்பு என்பது மீண்டும் வெகு தூரமாகிப் போனது... பெரும்பாலும் வேலை, வீடு எனச் சென்னையில் வாழ்க்கை நகர்ந்து செல்ல, எழுத்தும் வாசிப்பும் சொல்லாமல் கொள்ளாமல் இனிதே காணாமல் போனது, அமீரகம் வந்த பின்னும் வாசிப்பிலும் எழுதுவதிலும் நாட்டமில்லை... ஏன் வாழ்க்கையிலும் கூட நாட்டமில்லாமலே இருந்தது.

கோவில்களில் தினசரி பூஜை எப்படி நேராநேரத்துக்கு நடக்குமோ அதுபோலானது வாழ்க்கை... அதிகாலை விழிப்பு... குளியல்... அலுவலகம்... மதிய உணவு உண்ணக்கூட அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாத வேலைப்பளு... மாலை அறைக்குத் திரும்புதல்... ஊருக்குப் பேசுதல்... பெரும்பாலும் வருத்தத்தை மட்டுமே சுமக்க வைக்கும் பேச்சு... )வலிகளை இறக்கி வைக்க முடியாமல் வருத்தங்களைக் கூடுதலாய்ச் சுமக்க மட்டுமே முடிந்த வெளிநாட்டு வாழ்க்கையில் எப்போது நிம்மதியான பேச்சுக் கிடைக்கும்) சமையல்... சாப்பாடு... மனசை ஆசுவாசப்படுத்த பாடல்கள் அல்லது படம்... உறக்கம்... மீண்டும் அதிகாலை விழிப்பு... என தினசரி வாழ்க்கை கோவில் பூஜை நேரம்போல சுருங்கிப் போனது.

வெள்ளிக்கிழமை என்பது விடுமுறை தினமான போதும் இதுநாள் வரை அதிக நேரம் தூங்க வேண்டுமென மற்றவர்களைப் போல் நினைத்ததேயில்லை... அதே அதிகாலை விழிப்பு... குளியல் என்பது இப்போதுவரை அப்படியே... சில நாட்கள் மற்றவர்களின் தூக்கம் கெடக்கூடாது என்பதால் மிஞ்சிப்போனால் எழாமல்.... தூங்காமல்... அரைமணி அல்லது ஒரு மணி நேரம் படுக்கையில் கிடக்க வேண்டிய சூழல்...  இருப்பினும் வாட்ஸப்பும் முகநூலும் முந்திக் கொள்ள, அவற்றின் பின்னே படுத்தபடி நகர ஆரம்பித்து விடுகிறேன்.

இங்கு வியாழன் இரவு முதல் சனி விடுமுறை என்றால் சனி இரவு வரை கொண்டாட்டம்தான்... குடி மனிதர்களைக் குடித்து மகிழும் நேரம் அது... ரசித்துக் குடிக்க ஆரம்பித்து அவர்களை குடி ரசித்துக் குடிக்கும் வரை தொடரும்... ஒரு வாரத்துக்கான சரக்கை ஒரே நாளில் குடித்து... ஒட்டகத்தைப் போல சேமித்து வைத்து அடுத்த வாரம் முழுவதும் ஓட்ட வேண்டும் என்பதாய்... குடித்துக் குடித்துக் குடித்துக் கொண்டேயிருப்பார்கள்... அரசியலும் அந்நிய நாட்டு நிகழ்வுகளும் பேச்சாய் ஆரம்பித்து சண்டையாய் முடியும்... சில நேரங்களில் அடிதடி, கத்துக்குத்து, கொலை வரை செல்லும். 

அதிகமான குடியால் எழ முடியாமல்... நடக்க முடியாமல்... போட்டது போட்டபடி அதே இடத்தில் படுத்தாலும் மறுநாள் காலை மணக்க மணக்கக் குளித்து மறுபடியும் குடிக்க ஆரம்பிப்பார்கள். இது ஆறுதலில்லாத வாழ்க்கை... குடி ஒன்றே வலி போக்கும் மருந்தென நினைத்துத் தன்னையே அழித்துக் கொள்பவர்கள் இங்கே 90%க்கு மேல்தான். இந்த வாழ்க்கை குறித்து நிறைய எழுதலாம்... இது வாசிப்புக்கான பகிர்வு என்பதால் மாறிய குடிகாரப்பாதையிலிருந்து மறுபடியும் வாசிப்பு என்னும் வளமான பாதைக்குள் நுழைவோம்.

அமீரகம் வந்த பின் வாழ்க்கை மீதான வெறுப்பு அதீதமாய் துளிர்விட்ட தருணத்தில்தான் வலைப்பூ (BLOG) அறிமுகமானது. அதில் எழுத ஆரம்பித்த பின்தான் சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதை மீண்டும் தூசிதட்ட ஆரம்பித்தேன்... உண்மையிலேயே மனசுக்குப் பிடித்த, வாழ்க்கைக் கதைகள் இங்குதான் எழுத்தாய் மலர்ந்தன... தனிமை இந்த எழுத்தில் தன்னிறைவு பெற ஆரம்பித்தது. கிராமத்து மனிதர்கள் என் கதைக்குள் வலம் வந்தார்கள்... வாழ்க்கை மீதான வெறுப்பு, குடும்பத்தைப் பிரிந்த விரக்தி, அறை... அலுவலகம் என்ற வழக்கமான வாழ்க்கை என எல்லாவற்றையும் இந்த மனிதர்கள்தான் மறக்கச் செய்து எழுத்தின் மூலம் கொஞ்சமாய் எழ வைத்தார்கள். அப்போதும் வாசிப்பு என்பது தூரமாகவே இருந்தது ஆனால் சினிமா மொழி கடந்து இன்னும் நெருக்கமானது. இணையத்தில் புதிய படங்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க நானும் அதிகமாய் சினிமா பார்த்தேன்.

வலைப்பூ வழி நட்பான சகோதரர்கள் தமிழ்வாசி பிரகாஷ், தினேஷ் குமார் மற்றும் நிஷாந்தினி அக்கா மூவரும் புத்தக வாசிப்பில் இறங்க, அவர்களின் பின்னத்தி ஏராய் நானும் இறங்கினேன். பெரும்பாலும் பிடிஎப் பைல்களாகத்தான் அவர்களிடமிருந்தும் மற்ற நண்பர்களிடமிருந்தும் பெற்றேன். வேலைக்குப் போக, வர பேருந்தில் 40 நிமிடத்துக்கு மேலாகும் என்பதால் அதுவே வாசிக்கும் நேரமானது.

கல்கியின் பொன்னியின் செல்வனின் ஆரம்பித்து உடையார், கடல்புறா என பாலகுமார், சாண்டில்யனில் பயணித்து ஏறக்குறைய சாண்டில்யனின் எல்லா வரலாற்று நாவல்களையும் வாசித்து முடித்து, அதைப் பற்றி விவாதித்தல்... வலைப்பூவில் எழுதுதல் என சில மாதங்கள் வாசிப்பின் பின்னே நகர்ந்தது... மகிழம்பூப் போல... மல்லிகைப்பூப் போல... வாசிப்பு அத்தனை வாசமாய் இருந்தது... உண்மையில் வாசிப்பு மகிழ்வைக் கொடுத்தது... வலிகளை மெல்லக் குறைத்தது... குறிப்பாக எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணம் வாசிப்புக்குள் மூழ்கி மெல்லக் கரைந்து போனதும்

பின்னர் ஒரு தொய்வு... வாசிப்பு மீண்டும் தூரமாய்த் தள்ளி நிற்க ஆரம்பித்தது. அமீரக எழுத்தாளர் குழுமத்துக்குள் இணைந்த போது மீண்டும் வாசிப்புக்குள்... பிடிஎப், புத்தகமெனக் கலந்து கட்டி வாசிக்க ஆரம்பித்தோம்... ஆம் அதிகமான வாசிப்பாளர்கள் ஒரு இடத்தில் இருப்பதும் வசதிதான்... இதைப்படி.. அதைப்படி எனச் சொல்லிச் சொல்லி புத்தகங்கள் கிடைத்தன... வாசிப்பு நிறைய நட்பைக் கொடுத்தது... வாசிப்பு நிறைய விஷயங்களை அள்ளிக் கொடுத்தது... ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு விதமாய்... எத்தனை கதைகள்... எவ்வளவு தகவல்கள்... என்ன மாதிரியான எழுத்துக்கள்... வாசிப்பு தொடரத் தொடர ஒவ்வொருவரின் எழுத்தும் வெவ்வேறு விதமாய் மனசுக்குள் தங்கியது. மீண்டும் வாசிப்பில் களம் காண நண்பர்களே முக்கியக் காரணமாக அமைந்தார்கள்.

கிராமத்துக் கதைகள் என்றால் அதனோடு ஒன்றி வாசித்துப் பழகியவன் வரலாற்றுப் புதினங்களையும் ரசித்து வாசிக்க ஆரம்பித்தவன் நமக்கு சரிவராதென்றாலும் தகவல்கள் நிறைந்த நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

தங்களின் எழுத்துக்காக அந்தந்த இடங்களுக்கே சென்று வருடக் கணக்கில் தங்கி, விவரங்களைச் சேகரித்து எழுதப்பட்ட நாவல்களை வாசிக்கும் போது ஒரு நாவலுக்காக இத்தனை மெனக்கெடலா என்று ஆச்சர்யமும் அவர்கள் மீதான மரியாதையும் கூடிப் போனது.

சிலர் வரலாறுகளை ஆராய்ந்து... தீவிரமாய்த் தேடிப் படித்து... விவரணைகளுடன் எழுதியிருப்பதை வாசிக்கும் போது என்னால் எழுத முடியும் என்பதைவிட என்னால் இத்தனை விவரங்களுடன் எழுத முடியும் என்று காட்டும் அவர்களின் திறமை மீதும் தனி மரியாதை உண்டாகியது.

சிலரோ இணையம் சொல்வதை உண்மையென நம்பும் விதமாய் புனைவு எழுதுகிறார்கள்... சிலரின் கதைகள் காமத்துக்குள் காவிரியாய்ப் பாய்ந்து வெளிவருகிறது... சிலரோ வாழ்க்கையைப் படம்பிடித்து எளிய மனிதர்களை நம் கண்முன்னே நடமாட விடுகிறார்கள்... எத்தனை வண்ணமான எழுத்துக்களை இப்போதெல்லாம் வாசிக்க முடிகிறது... இதையெல்லாம் கொடுத்தது எழுத்து மூலம் கிடைத்த நட்புக்களே.

இரா.முருகவேளின் முகிலினி வாசித்தபோது பஞ்சாலையும் அதனோடு தொடர்புடைய மனிதர்களுமெனச் சுற்றி வந்த மனசு, கரன் கார்க்கியின் மரப்பாலம் வாசித்தபோது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்துக்குள் நகர்ந்து சயாம் - பர்மா மரப்பாலம் கட்டும் பணியில் ஜப்பானிடம் மாட்டிய மக்கள்பட்ட துயரக்கடலுக்குள் நீந்திய மனசை, முஹம்மது யூசுஃப்பின் மணல் பூத்த காடு சௌதிக்குள் கைபிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாக வரலாற்றுச் செய்திகளுடன் சுற்றிக் காட்டி அமைதிப்படுத்தியது... ஆசுவாசப்படுத்தியது.

சோளகர் தொட்டி வீரப்பன் வேட்டை என வனக் காவலர்கள் பழங்குடி மக்களைச் சித்திரவதை செய்ததை, அவர்கள் அனுபவித்த நரகவேதனையை நெஞ்சுக்குள் நிறுத்தி இன்னும் என்னை அதிலிருந்து மீளமுடியாமல் வைத்திருக்கிறது... உண்மையில் இந்த நாவலுக்காக அந்த மக்களோடு சில காலம் தங்கியிருந்த ச.பாலமுருகன் அவர்கள் பாராட்டுக்குரியவர். வீரப்பன் வேட்டை மலைவாழ் பழங்குடி மக்களை என்னவெல்லாம் செய்தது என்ற உண்மையை உரக்கச் சொன்ன ஒரே நாவல் இது. இன்னும் ஒருமுறை படிக்க முடியாத வலி என்றாலும் மீண்டும் அந்த மக்களுடன் வலம் வர வேண்டும் என்ற ஆசையிருக்கத்தான் செய்கிறது. நான் வாசித்தவரை என்னை அதிகம் பாதித்த நாவல் இது. இன்னும் மீளமுடியவில்லை... மாதியும் சித்தியும் இன்னமும் கண் முன்னே கதறுகிறார்கள்.

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்... மிக அற்புதமான புத்தகம்... சல்லிக்கட்டு நடக்கும் இடம் மட்டுமே கதைக்களம்... மாடும் அதைப் பிடிப்பவனுமே பிரதானம்... எத்தனை விவரிப்பு... என்ன அழகான காட்சிப்படுத்துதல்... சிறிய நாவல் என்ற போதும் சிறப்பான நாவலாய்... இப்படி ஒரு நாவல் எழுதினால் என்ன என்று தோன்ற வைத்த எழுத்து... குறிப்பாக வட்டார வழக்கில்தான் முழு நாவலும் நகர்கிறது என்றாலும் நம்மை வாடிவாசலில் கட்டிப் போட்டு விடுகிறது என்பதே உண்மை.

சில நாள் முன்பாக முஹம்பது யூசுஃப்பின் இரண்டாம் நாவலான கடற்காகம் வாசித்தேன்... டெல்மா தீவுக்குச் சென்று வந்திருக்கிறேன் என்றாலும் கதையின் மனிதர்களும் அவர்கள் பேசும் இனப்பிரிவினை, சிரியா யுத்தமென வாசிக்கும் போது நிறையத் தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த நாவலில் எழுத்தாளரின் எழுத்துநடை மெருகேறியிருக்கிறது.

தகவலைச் சொல்வதிலும் ஒரு கலை இருக்கத்தான் செய்கிறது. கதையின் போக்கில் சொல்லத் தெரிந்தவர்களின் எழுத்து வீரியம் பெற்று நம் முன்னே உயர்ந்து நிற்கிறது. தகவல்களுக்காக அதிக சிரத்தை எடுக்கும் போது கதை மாந்தர்களுக்குப் பதில் எழுத்தாளனே நம்மிடம் நேரடியாகச் சொல்வது போல் மாறிவிடும் போது அதன் வீரியம் குறைந்து உயரம் தடைபடுகிறது. எது எப்படியென்றாலும் அந்த எழுத்தாளர்களின் தேடுதலுக்காவேனும் அவர்களைக் கட்டி அணைத்து அன்பைப் பரிமாறலாம்... தப்பேயில்லை... அந்தத் தேடுதலில் 1% கூட என்னிடம் இல்லை... நான் தேடுவதெல்லாம் கிராமத்து மனிதர்களின் மனசை மட்டுமே. அப்படியான எழுத்துத்தான் வாய்த்திருக்கிறது.

கலைஞரின் தென்பாண்டிச் சிங்கம் வாசித்த போது அந்த எழுத்து என்னைத் தொடர்ந்து வாசி என ஈர்த்தது. கலைஞரைப் பிடிக்காது என்றாலும் அந்தத் தமிழ் என்னமாய்க் கொஞ்சி விளையாண்டிருக்கிறது... வார்த்தை விளையாட்டுக்களும் அதில் அடக்கம். சிறப்பான தமிழ் புத்தகமும் முழுவதும் விரவிக் கிடந்தது. கலைஞரின் மற்ற நாவல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

விதவிதமான கதைகள்.... வித்தியாசமான எழுத்துக்கள்... பலதரப்பட்ட கதைக்களன்கள் என வாசிப்பின் பாதை நீண்டு கொண்டே போனாலும் வாசிப்பின் மூலம் நம் பார்வை விரிந்து கொண்டு போக ஆரம்பிக்கிறது... நிறையத் தேடல்களை நம்முள்ளே பதியம் போட்டு வைக்கிறது... அடுத்து என்ன... அடுத்து என்ன... என வாசிப்பின் வாசலைத் திறந்து வைக்கிறது. நம் எழுத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரத் தோன்றுகிறது.

வாசிப்பு நிறையக் கற்றுக் கொடுக்கிறது... இப்போதெல்லாம் எதாவது வாசிக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது. விடுமுறை தினங்களில் சினிமா என்னிடமிருந்து விலகி, வாசிக்கச் சொல்கிறது... சில புத்தகங்கள் எடுத்ததும் முடித்தால்தான் கையிலிருந்து விலகுவேன் என்கிறது. வாசிப்பை நான் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்பதை விட வாசிப்பு என்னை நேசிக்க மட்டுமில்லாமல் இழுத்து அணைத்துக் கொண்டு விட்டது. அந்த அணைப்புக்குள் பல புத்தகங்களை மாறி மாறி வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.

வெக்கையின் அறுபது பக்கங்களைக் கடந்து காட்டுக்குள் திரிந்தபடி, பெயரிடப்படாத புத்தகத்தின் ஆறாவது கட்டுரையில் அமிழ்ந்து கிடக்கிறேன்... காடோடியின் பின்னே நூறு பக்கங்களைத் தாண்டி ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கிறேன் மரம் வெட்டச் செல்லும் மனிதர்களுடன்... இடையே நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் கதையை...

வாசிப்பு உங்களின் பார்வையை விரிவாக்கும்... நிறைய கற்றுக் கொடுக்கும்...

வாசியுங்கள்... நிறைய... நிறைவாய்....

வாசிக்க ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடமாட்டீர்கள்.

ஆம்... வாசிப்பு என்பது சுகானுபவம்தான்.

*******
அகலில் வாசித்து அங்கும் கருத்துச் சொல்லுங்க... உங்கள் கருத்தே அம்மின்னிதழை இன்னும் சிறப்பாக பயணிக்க வைக்கும்... அங்கிடப்போகும் கருத்துக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 23 ஜூன், 2019

சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)

Picture

கிராமங்களில் காணலாம் இவர்களை... பெரும்பாலும் கல், பிடித்து வைத்த மண், மரங்களே இவர்களாய் நம் கண் முன்னே. சில இடங்களில் உருவத்துடனும் பல இடங்களில் உருவமற்றும் இருப்பார்கள். கிராமத்தை ஒட்டிய பெரிய கோவில்களிலும் இவர்களைக் காணலாம்... அதிகமாய் யாராலும் கும்பிடப்படாமல் தனித்து இருப்பார்கள்.

இந்தத் தெய்வங்களுக்கு பூசாரி என்றெல்லாம் ஒருவர் இருப்பதில்லை... ஊருக்குள் யாரேனும் ஒருவர் அந்தப் பணியைச் செய்வார். முனீஸ்வரன், அம்மன், கருப்பர் போன்றவர்களுக்கு வேளார் என்று சொல்லக் கூடியவர்கள் முக்கிய தினங்களில் பூஜை செய்வார்கள். மற்ற நாட்களில் எல்லாம் உள்ளூர் ஆட்கள்தான்.

பெரிய கோவில்களில் தெய்வத்தைக்காண காசு கொடுத்துக் காத்திருந்தாலும் மக்கள் கூட்டத்தின் அளவைப் பொறுத்துத்தான் தரிசனத்தின் நிமிடங்கள் அமையும். இங்கு அப்படியில்லை... நம் எதிரே சிறு தெய்வம் இருக்கும்... நாம் அதனருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம்.

பெரும்பாலான கிராமங்களில் அம்மன் கோவில்கள் முதலில் மண் மேடையில்தான் உருவாகியிருக்கின்றன. ஒரு மண் மேடையின் மீது சின்னதாய் மண் பீடம் என்பதே ஆதி உருவாய்... அதன் பின்னான வருடங்களில் ஊர் மக்களின் முன்னெடுப்பில் ஒரு சிறிய ஒட்டுக் கொட்டகைக்குள் அம்மன் பீடமாய்.. அதற்குப் பெயர் அம்மாமடை (அம்மன் மேடை) என்பதாய்...

எங்கள் ஊரில் கூட அம்மன் கோவில் அப்படித்தான் உருவாகியிருக்கிறது. எங்க அண்ணன் வயதொத்தவர்கள் சிறிய மேடை அமைத்து சாமி கும்பிட்டிருக்கிறார்கள். அதுவே பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஓட்டுக் கொட்டகையாய்... சுற்றிலும் கம்பி அடைத்து.. அதற்குள் அம்மன் பீடம் வைத்து... முன்பக்கம் சிறிய கொட்டையும் கட்டப்பட்டிருக்கிறது.

கோவிலுக்கு அருகே வீடு என்பதால் கோவில் சாவி எங்க வீட்டில்தான் இருக்கும். செவ்வாய், வெள்ளி எங்க அண்ணன் சாம்பிராணி போடுவார்,.. பின்னர் அக்கா... அதன் பின் நான்... தம்பி எனத் தொடர்ந்தது. இப்போது நாங்கள் யாரும் அங்கில்லை என்பதால் வேறொருவர் செவ்வாய், வெள்ளி சாம்பிராணி போடுகிறார். சாம்பிராணி போடுவதில் பால் வேறுபாடெல்லாம் பார்க்கவில்லை அம்மன்... பொங்கல் என்றால் முதல்நாள் இரவு வயது வந்த பெண்கள்தான் உள்ளே ஏறிக் கோலம் போடுவார்கள்.

ஊராரின் முன்னெடுப்பில் பிள்ளையார், முருகன் இணைய, ஓட்டுக் கொட்டகை சில வருடங்களுக்கு முன்னர் சிறிய கோபுரத்துடன் கூடிய கோயிலாக மாறியது. கிராமத்துக் கோவில்களில் அம்மன்கள் பெரும்பாலும் உருவமாய் இருப்பதில்லை. பீடமாய்த்தான் இருக்கும். பீடத்தின் வடிவங்கள் மாறும்... அதன் அமைப்பு பெரும்பாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். எங்க ஊரில் கருப்பர்கள் (பெரிய கருப்பன், சின்னக் கருப்பன்) இருவரும் ஒரு கோவிலுக்குள் பீடமாய்த்தான் இருக்கிறார்கள்.

இந்த சிறு தெய்வ வழிபாட்டிலும் சண்டைகள் இருக்கத்தான் செய்யும். சில கிராமங்கள் சேர்ந்து ஒரு தெய்வத்தைக் கும்பிடுவார்கள். வருடம் ஒருமுறை திருவிழா... அதன் தொடர்ச்சியாய் கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், எருது கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என திருவிழா களைகட்டும். இதற்குள்ளும் எங்க ஊருக்குத்தான் முதல் மரியாதை தரணும் என வீண் பிடிவாதங்கள் எழுந்து அதுவே சண்டையாகி திருவிழாவே காணாமல் பூட்டிக்கிடக்கும் கோவில்களையும் காணலாம். எடுத்துச் செலுத்த ஆளில்லாமல் சிதைந்த கிடக்கும் கோவில்களையும் காணலாம்.

எங்க ஊர் ஐய்யனார் கோவிலில் எருதுகட்டு வருடா வருடம் சிறப்பாக நடக்குமாம்... எங்களுக்கு விவரம் தெரிந்தது முதல் நடப்பதில்லை. மேலே சொன்னது போல் இரு ஊர் மரியாதைப் பிரச்சினைதான் காரணம். அதேபோல் கருப்பர் கோவிலில் அவரைக் குலதெய்வமாக வழிபடும் பல ஊர்ப் பங்காளிகள் சேர்ந்து கிடா வெட்டு சிறப்பாக நடத்துவார்களாம். எங்களுக்குத் தெரிய கிடா வெட்டு இல்லை என்றாலும் வருடம் ஒருமுறை கூடி சாமியாவது கும்பிட்டார்கள். அதிலும் பிரச்சினை என்றாக அவரவர் ஊரில் கருப்பனுக்கு கோவில் கட்டி சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள். இப்படித்தான் சிறு தெய்வங்கள் வழிபாடுகளில் சிக்கல்கள் வழிவழி தொடர்கின்றன... தீர்க்கப்படாமலே. 

பங்காளிகளுக்கென்று குலதெய்வம் போக சிறுதெய்வம் அதாவது வீட்டுச்சாமி என்று ஒன்று இருக்கும். இது பெரும்பாலும் உருவமற்ற பெண் தெய்வமாக இருக்கும். அந்தப் பங்காளிகள் வகையில் சில தலைமுறைக்கு முன்னர் பிறந்து மரித்ததாகவோ அல்லது வழிவழியாக கும்பிட்டு வருவதாகவோ இருக்கும்.

இந்தத் தெய்வங்களுக்கு வருடம் ஒருமுறை கோழிப்பூஜை, படையல், கருப்பட்டி பணியாரம், பால்சோறு என சிறப்பாக பூஜை போடுவார்கள். இந்த வீட்டுச்சாமிகள் வழிபாட்டில் பெரும்பாலான இடங்களில் பெண்களே பூஜை செய்வார்கள்... சில இடங்களில் வாயைக் கட்டிக் கொண்டு செய்வதையும் காணலாம்.

இந்த வீட்டுச்சாமி கும்பிடுவதிலும் பங்காளிச் சண்டையால் குழப்பம் வருவதுண்டு. எங்க வீட்டுச்சாமியான உமையவள் (உமையரம்மத்தா சொல் வழக்கு) கூட இப்போது அவரவர் இல்லத்தில் வைத்துத்தான் கும்பிடுகிறோம். பெரும்பாலான வீட்டுச்சாமிகளுக்குப் படைக்கப்படுபவை அவர்கள் தவிர் மற்றவர்கள் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடு கொண்டவைதான். மிச்சமிருந்தாலும் நாய், நரி சாப்பிடாமல் மண்ணுக்குள் புதைக்க வேண்டும்.

மரங்களில் வைத்துக் கும்பிடப்படும் சிறுதெய்வங்களின் கதை சுவராஸ்யமானவை. பெரும்பாலும் அது ஏதோ ஒரு வகையில் காவல் தெய்வமாக இருக்கும். மரத்தில் ஆணி அடித்தோ அல்லது குங்குமம் மட்டும்  வைத்தோ கும்பிடப்படும் தெய்வங்கள் இவை. மரம் பட்டுப் போதல் அல்லது ஏதாவது ஒரு வகையில் சாய்ந்து போதல் நிகழும் பட்சத்தில் அருகிருக்கும் மரம் சாமியைத்  தாங்கும். அரிதாக அந்த மரத்துடன் காணாமல் போன தெய்வங்களும் உண்டு. மக்கள் செல்ல வழியில்லாத கருவைகள் நிறைந்து மறந்து போன தெய்வங்களும் உண்டு. எங்கோ இருக்கும் தெய்வத்துக்கு ரோட்டில் சிதறு தேங்காய் உடைத்துக் கும்பிடும் நிகழ்வும் உண்டு. 

இன்று பரபரப்பாக இருக்கும் பெரிய தெய்வங்களின் கோவில்களில் நின்று மனசார வேண்டிக்கொள்ள அவகாசம் கிடைப்பதில்லை. வரிசையில் வருபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே கும்பிடும் கால நேரத்தின் அளவிருக்கும் அதுவும் 'போ.. போ...' என்று விரட்டும் காவலர் இல்லாத பட்சத்தில் மட்டுமே நிகழும். அதுபோக சாமியைப் பார்க்க பணம் என்ற முறைக்குள் கோவில்கள் வந்த பிறகு சாமிகளுடனான நெருக்கம் குறைந்து போய்விட்டது என்பதே உண்மை. பெரிய கோவில்களில் பரபரப்பில்லாத கோவில்களில் காசு வாங்காத கோவில்களில் நீண்ட் நேர சாமி தரிசனம் கிடைக்கும்.

சிறுதெய்வங்களுடன் நாம் 'நம் கஷ்டத்தைச் சொல்லி அழலாம்... 'நீ என்னைக் காப்பாத்திட்டேடா என சந்தோஷத்தில் கட்டி அணைக்கலாம்... 'இப்படி ஏமாத்திட்டியே' எனத் திட்டலாம்... தொட்டுக் கழுவலாம்... மேல் துண்டால் துடைக்கலாம்... குளித்து ஈரத்துண்டோடு கரையிலிருக்கும் தெய்வத்தை வேண்டலாம்... நினைத்த நேரத்தில் கும்பிடலாம்.. நீண்ட நேரம் அங்கிருக்கலாம்... மனநிறைவோடு திரும்பலாம்.

கிராமங்களில் காவல் தெய்வங்களாய் இந்த சிறுதெய்வங்கள்தான் காத்து நிற்கும். முனியய்யாவும் கருப்பரும் காவல் தெய்வமாய் எல்லாக் கிராமத்திலும் இரு வேறு திசைகளில் எழுந்தருளியிருக்கும். பல கிராமங்களில் கல்லில் மஞ்சளும் குங்குமமும் கொட்டி வைத்து ஏதோ ஒரு பெயரில் சாமி கும்பிடுவதைப் பார்க்கலாம்.
'
'அந்தப் பக்கம் போகதே அங்கிட்டு வனப்பேச்சி இருக்கா...', இந்தா இந்த பனங்காட்டுக்குள்ளதான் வில்லுக்கம்பு வெள்ளச்சாமி இருக்காரு... ராத்திரியில வானத்துக்கும் பூமிக்கும் வெள்ள உருவமா நிப்பாரு...', 'கம்மாக்கரை ஒரம்பா மரத்துல நாகரை வச்சிக் கும்பிடுறாக...' என உருவமற்ற தெய்வங்களுக்கு எல்லாம் உயிரூட்டி வைத்திருக்கும் கிராமங்களில் கருப்பர், அய்யனார், முனியய்யா தவிர பல பெயர் தெரிய சிறு தெய்வங்கள் காணாமலே போய்க் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மை. இன்னும் இரண்டு தலைமுறைகளில் பெரும்பாலான சிறுதெய்வங்கள் பற்றித் தெரியாமலே போகக்கூடும் என்பதும் உண்மையே.
-'பரிவை' சே. குமார்.

புதன், 28 நவம்பர், 2018

மனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது

கல் மின்னிதழ் தீபாவளி மலரில் வெளியான எனது கட்டுரை. வெளியிட்ட நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான எழுத்தாளர் கணேஷ் (சத்யா) அவர்களுக்கு நன்றி.


காலம் மாறிடுச்சு என்ற எஸ்.ரா.வின் கட்டுரை ஒன்றை வாசித்தேன்... மாடுகள் குறித்தும் கிராமங்களில் காணாமல் போன வாழ்க்கை குறித்தும் எழுதியிருந்தார். ஆம்... அதுதான் உண்மை. இன்றைய கிராமங்களின் நிலை மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது அதன் சுயம் இழந்து வெற்றிடமாய் நிற்கிறது.

கிராமம் என்றாலே மாடு, ஆடு, கோழி, விவசாயம் என்பதாய் தான் நம் கண் முன்னே விரியும்... சிறிய கிராமம் என்றில்லை பெரும்பாலான கிராமங்களில் இன்று இவை எதுவுமே இல்லை... ஏன் பெரியவர்கள் தவிர இன்றைய தலைமுறையில் 80% பேர் கிராமங்களில் இல்லை என்பதே உண்மை. சினிமாவில் காட்டப்படும் கிராமங்கள் சில இடங்களில் இருக்கலாம்... கிராமங்கள் தன் தனித்தன்மை இழந்து விட்டன என்பதே உண்மை.

எங்க ஊரையே எடுத்துக்கலாம்...

மிகச் சிறிய ஊர்... நாலு பங்காளிகள் என்றாலும் எல்லாருமே உறவுதான்... சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் நீண்ட நாள் நீடிப்பதில்லை... மொறப்பாடு என்பதும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது... அப்படியான வீடுகளுக்குள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை... சாப்பிடுவதில்லை என்றாலும் பேச்சு இருக்கும்.

அப்போது எல்லாருடைய வீட்டிலும் பசு அல்லது எருமை மாடுகள் இருக்கும்... மாடு இல்லாத வீடு என்பது அரிது. கசாலைகளும், மாட்டுக் கொட்டில்களும், கூட்டு வண்டி மொட்டை வண்டிகளும் பெரும்பாலான வீட்டில் இருக்கும்.

எங்கள் வீட்டில் கூட எனக்குத் தெரிய காளை மாடுகள் இருந்தன... எருமை மாடுகளும் இருந்தன... எங்க அப்பாவின் அம்மா (அப்பத்தா) வீட்டிலேயே பிறந்த நரை எருமையும் அதன் வாரிசுகளும் எங்க வீட்டில் இருந்தன. அதில் ஒன்று வெள்ளை நிறத்திலான எருமை... மனிதர்களில் வெள்ளையாய் பிறந்தால் குறைபாடு என்பார்கள்... அப்படி எங்க ஊருக்கு அருகே இருக்கும் ஊரில் அக்கா, தம்பி இருவரும் பிறந்திருந்தார்கள். மனிதரைப் போல மாட்டிலும் குறைபாடோ என்னவோ... அது வெள்ளை எருமைதான்... எங்களுக்கு ‘வெள்ளச்சி'. வெள்ளச்சி எனக் குரல் கொடுத்தால் எங்கிருந்தாலும் 'ம்மா' என்ற எதிர் குரலோடு நம்மை நோக்கி வரும். அதை விற்கும் போதெல்லாம் நாங்க அழுத அழுகை இருக்கே... மாடும் எங்களில் ஒன்றுதான்.

எங்க வீட்டின் பின்னே மாட்டுக் கசாலை... வைக்கோல் வைத்திருக்கும் வைக்கோல் படப்புக்கள் ஊரணிக்கு அருகே இருக்கும். மாலை நேரங்களில் வைக்கோல் அள்ள படப்புக்குப் போக வேண்டும். விடுமுறை தினங்களில் மாடு மேய்த்தல் என்பது விரும்பிச் செல்லும் வேலையாக இருக்கும். அதுவும் கதிர் அறுப்புக்குப் பின்னர் என்றால் சிதறிய நெல் கதிரைப் பொறுக்கி துண்டில் போட்டு கல்லால் இடித்து உமி ஊதித் தின்பதும், கூட்டாஞ்சோறு சமைப்பதும் என இப்போது நினைத்தாலும் மனசு குதியாட்டம் போடும் நிகழ்வுகள் அவை.... அதையெல்லாம் மறக்க முடியுமா..?

கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்த போது வீட்டில் எருமைகளை வைத்துப் பார்ப்பது கடினமாக இருக்கிறது... ஒரு ஆள் தேவைப்படுது மேய்ப்பதற்கு... தினமும் ஒருவரிடம் சொல்லி விட முடியாது... காணாமல் போனால் தேடிப்பிடிப்பது சிரமமாக இருக்கிறது என அம்மா சொல்ல ஆரம்பிக்க, எருமைகள் வாழ்ந்த கசாலைக்குள் பசுக்கள் குடிபுகுந்தன.

கோழிகளைப் பொறுத்தவரை எல்லார் வீட்டிலும் கோழிக்கூடு இருக்கும்... அதில் நிறைய நாட்டுக்கோழிகளும் இருக்கும். எங்க வீட்டில் நூறு கோழிகளுக்கும் மேல் இருந்தது. எங்க அண்ணனின் திருமண வீடியோவில் ஆரம்பமே எங்களது இரட்டைச் சேவல்கள் ஒன்றோடொன்று பேசிக் கொண்டிருப்பதில்தான் ஆரம்பிக்கும்... இரண்டும் மயில் போல் இருக்கும் அவ்வளவு அழகாய்... கோழிகள் குஞ்சு பொறித்து இருக்கும் போது கரையானுக்காக வயல்களுக்குள் காய்ந்த சாணிகளைத் தேடி சென்ற நாட்கள் இன்னும் இளமையாய்.

கோழிகளுக்கு சீக்கு வராமல் இருக்க சனிக்கிழமைகளில் அருகிலிருக்கும் மாட்டாஸ்பத்திரியில் போய் ஊசி போட்டு வருவோம்... அப்படியும் சீக்கில் அள்ளிக் கொடுத்து விடுவோம். அப்போது இப்ப போல விலை இல்லை... பெரும்பாலும் விற்பதும் இல்லை. விருந்தினர் வந்தால், திருமணமான அக்கா வந்தால், திருவிழா... பண்டிகைகள் என்றால் எல்லாவற்றுக்கும் நாட்டுக்கோழி ரசம்தான். இப்ப வளர்ப்பவர்கள் எல்லாம் விற்பனையையே பிரதானமாக்கி விட்டார்கள். அடிச்சு சாப்பிடுவதைவிட அஞ்சு காசு பாக்கலாம் என்பதாய்! இன்று நாட்டுக் கோழிகளின் விலை மிக அதிகமாய்...

பசு மாடுகள் எங்கள் வீட்டில் மட்டுமல்ல.. ஊருக்குள் பெரும்பாலான வீடுகளுக்கு வர ஆரம்பித்துவிட்டன. எருமைகள் மெல்ல ஒழிந்தன. பசுவ மாட்டை வயலில் ஓரிடத்தில் கட்டிப் போட்டும் மேய்க்கலாம் என்றாலும் சில காலங்களுக்குப் பிறகு அதையும் பார்க்க முடியவில்லை என்ற புலம்பல் மெல்ல எழ ஆரம்பித்தது. காரணம் வயோதிகம். எல்லாரும் படிப்பு முடித்து வேலைக்காக வெளியில் செல்ல ஆரம்பித்ததும்தான்... அம்மா மட்டுமே வீட்டில் என்றாகிப் போனதே முக்கியமானதாய்! எங்க வீட்டில் பசு மாடுகளும் இல்லை என்றானது. கசாலையும், மாடுகள் தண்ணி குடித்த கல் குலுதாளியும் (தொட்டி) காட்சிப் பொருளாகிப் போனது.

இடையிடையே வெள்ளாடுகள் வளர்க்கப்படும். பின் வயலில் இருக்கிற மரங்களை எல்லாம் ஒடித்து ஆட்டுக்குப் போடுகிறார்கள் எனச் சண்டை வரும். அதன் பின் ஊர் கூட்டம். ஆடு வளர்க்கக் கூடாதென முடிவு... பின் கொஞ்ச நாள் ஆடுகள் ஒழிக்கப்படும். மீண்டும் யாரோ ஒருவர் ஒரு குட்டியைக் கொண்டு வருவார்... பின் அவன் மட்டும்தான் வளர்ப்பானா என மெல்ல மெல்ல ஊருக்குள் பல்கிப் பெருகும்... மீண்டும் பிரச்சினை... ஊர் கூட்டம்... கட்டுப்பாடு.... இப்படியாய் தான் நகரும்.

வீட்டுக்கு ஒன்று இரண்டென நாய்கள் இருக்கும். அவை எல்லாம் சில நேரங்களில் கோவிலின் அருகே சண்டை போடும். மனிதர்களைப் போல குழுவாய்ச் சேர்ந்து மல்லு கட்டும். அப்பிராணியாய் மாட்டும் நாய் அன்னைக்குச் சட்னிதான். வேடிக்கை பார்க்கும் எங்கள் கூட்டத்தில் இருந்து நாய்கள் மீது கற்கள் பறக்கும். அடிபட்டு 'வீல்' என கத்தியோட சண்டை முடிவுக்கு வரும். எங்க வீட்டில் ராஜா என்பவன் ஆள்களைக் கடிக்கிறான் என தொன்றிக்கட்டை போட்டு வளர்த்தோம். அதையும் வாயில் கடித்துக் கொண்டு ஆட்களை விரட்டியிருக்கிறான். கடித்தும் இருக்கிறான். ஒரு ஞாயிற்றுக் கிழமை எங்க பெரியப்பா மகனின் தூக்குக் கயிற்றுக்கு இரையாகும் வரை அவனின் ஆட்டம்தான். அதன் பின் நாய் வளர்ப்பதில்லை. இப்ப என் மகன் ரோஸி என்று ஒருத்தியை வளர்த்து வருகிறான்.

ஆடு, மாடு, கோழி, நாய் என இல்லாத கிராமத்து வாழ்க்கை சுவைப்பதில்லை. அதேபோல் விவசாய காலத்து மடை மாற்றிய சண்டைகள், மாடு இறங்கிய சண்டைகள் இல்லாத கிராமத்து வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. மாலை நேரங்களில் கூ... கூவென அதக்குடிக்கி.... இதக்குடிக்கி என கிராமத்துக்கே உரிய கெட்டவார்த்தைப் பிரயோகங்களுடன் நடக்கும் சண்டைகளைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இன்று விவசாயமும் இல்லை... மாடுகளும் இல்லை... அந்தச் சண்டைகளும் இல்லை... குறிப்பாக அந்த மனிதர்களில் பெரும்பாலானோர் இல்லை.

மாலை நேரத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என எல்லாரும் கூடுமிடம் எங்க ஊர் மாரியம்மன் கோவில். அப்போது கோவில் திண்ணை எல்லாரும் ஆட்டம் போடும் இடமாக... அங்குதான் ஆட்டம், பாட்டம், கபடி, பம்பரம், கோலிக்குண்டு, கிட்டி, நொண்டி,அடிதடி எல்லாமே நிகழும்.வீட்டிலிருந்து 'டேய் சாப்பிட வாடா' என்றும் 'வாரியா... வரவா...' என்றும் 'கூப்பிடுறது கேக்குதா இல்லையா வந்தேன் வெளக்குமாறு பிஞ்சிரும்' என்றும் குரல்கள் வந்தால்தான் ‘கண்டு பிடிச்சி விளையாடும்’ விளையாட்டு முடிவுக்கு வந்து வீடு செல்வது வழக்கம். இன்று அம்மன் கோவில் திண்ணை அடைப்புக்குள்... விளையாட பசங்க இல்லை... எல்லாமே வெறுமையாய்...

கம்மாயில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்தாலே மணிக் கணக்கில் குளிப்போம். இன்று ஒரு ஆள் மட்டம் தண்ணீர் இருந்தாக்கூட சிலரே குளிக்கிறார்கள். பலருக்கு அந்தத் தண்ணீர் ஒத்துக் கொள்வதில்லை. நான் உள்பட! என் குழந்தைகள் அதில் இறங்குவதேயில்லை.

பொதிக் கணக்கில் விளைந்த வயல்கள் எல்லாம் கருவை மரங்களின் பிடியில். ‘ஊடு வரப்பை நல்லாக் கட்டுப்பா தண்ணியும் வெளிய போகக்கூடாது. அடுத்த வயக்காரன் நடந்து போக வேண்டாமா’ என்று வரப்பு வெட்டும் போது சொல்வார்கள். இன்று ஊடு வரப்பு மட்டுமல்ல சைக்கிளே போகலாம் என்றிருந்த முக்கியமான வரப்புகள் கூட இருந்த இடம் தெரியவில்லை.

வீட்டின் முன்னே கொட்டகை போட்டு பத்து பதினைந்து நாட்களாய் ஊராரும் உற்றாரும் வேலை பார்த்து திருமணம் முடிந்தும் சில நாட்கள் உறவுகள் எல்லாம் ஒன்றாய் இருந்து மகிழ்ந்தது என்னும் கிராமத்து திருமணங்கள் இப்போதெல்லாம் கிடைப்பதே இல்லை. ஆம் எல்லாமே நகரத்து மண்டபங்களுக்குள் அமிழ்ந்து விட்டன. காலக்கெடுவுக்குள் காரியத்தை முடித்து வெறுமையைச் சுமந்து வீடு செல்லும் காலமாகிவிட்டது.

தீபாவளி என்பது எல்லாரும் கூடிக் கொண்டாடி, கோவிலைச் சுற்றி ஒரே வெடிப் பேப்பர்களாகக் கிடக்க, மறுநாள் கூட்டிக் குவித்து வெடிக்காத வெடிகளை எல்லாம் போட்டு பற்ற வைத்து ‘டப்... டப்...’ என வெடித்து சந்தோஷித்த நாட்கள் எல்லாமே மாறிவிட்டது. இந்த மாற்றத்தை கிராமங்களுக்குள் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சிகள் அன்று கொண்டு வந்தன. இன்றோ ஆட்களற்ற ஊரில் வெடிப்பேப்பர்களுக்கு எங்கே போவது? வெடிப்புக்களை மட்டுமே பார்க்க முடியும்! வயல் வெளியிலும் கண்மாயிலும் சில வீட்டுச் சுவர்களிலும்!

பெரும்பாலானோர் ஊருக்கு வருவதில்லை. வந்தாலும் விருந்தாளி போல் தான் வந்து செல்கிறார்கள். பல வீடுகள் பூட்டித்தான் கிடக்கின்றன. சில வீடுகளில் பெரியவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். சில ஊரில் மருந்துக்குக் கூட ஆடு, மாடு, கோழிகள் இல்லை. அந்த வகையில் எங்க ஊரில் இருக்கும் சிலரிடம் இவை இருக்கின்றன.

பழமை போற்ற சில பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மறைவுக்குப் பின் நகர வாழ்க்கை தின்ற மனிதர்கள் கிராமத்தைத் தள்ளியே வைப்போம். காவல் தெய்வங்கள் கூட காணமல் போகும் காலம் விரைவில் என்பதே நிஜம்.

கேலியும் கிண்டலுமாய்... வயலும் மாடுகளுமாய்... வாழ்ந்த தலைமுறையில் பெரும்பாலானோர் மண்ணுக்குள் போயாச்சு.... இருக்கும் சிலரும் இன்றைய வாழ்க்கை முறையை வேண்டாவெறுப்பாய் ஏற்றுக் கொள்ளப் பழகியாச்சு.

ஊர்க்கூட்டங்களில்தான் எத்தனை சுவராஸ்யங்கள்... இப்ப திருவிழாவுக்கு மட்டுமே கூட்டம்... அதுவும் சுவராஸ்யம் இழந்து அரசியலும்... அடுத்தவன் கதையும் பேசும் இடமாகி விட்டது.

ஊருக்குள் வந்த சேலை விற்பவன், பாத்திரம் விற்பவன், பழைய சாமானுக்கு ஈயம் பூசுறவன், ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழம் கொடுப்பவன், கொடை ரிப்பேர்காரன், அம்மி ஆட்டுக்கல் கொத்துறவன், பாத்திரங்களுக்கு பேர் வெட்டுபவன், ரிக்கார்ட் டான்ஸ் போட வண்டியில் குடும்பத்துடன் வருபவன், பஞ்சாரம் விற்க வருபவன், ஏலம் விட வருபவன், உப்பு விற்க வருபவன், ஐஸ் வண்டிக்காரன் என எவனுமே இப்போது எட்டிப் பார்ப்பதில்லை. எங்க ஊர்ப் பக்கம் மட்டுமல்ல பெரும்பாலான கிராமங்களின் பக்கம்! காரணம் மனிதர்கள் இல்லாத ஊரில் வியாபாரம் எப்படி நடக்கும் என்பதே.

இன்னும் திருவிழாக்கள் மட்டும் உயிர்ப்புடன் இருக்கு. அன்றைய நாளில் எங்கள் ஊர் மீண்டும் தன் இளமையைப் புதுப்பித்து சந்தோஷப்படும். அடுத்த இரண்டு நாளில் மீண்டும் மயான அமைதிக்குள் ஆட்கொள்ளப்படுவோம் என்பதை அறியாமல்!

ஊருக்குள் வீடு வேண்டும் என்பதால் நாங்கள் ஊரிலும் வீடு கட்டியிருக்கிறோம். நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு இருந்த இடத்தில் தம்பியின் புது வீடு முளைத்திருக்கிறது. எல்லாம் மாறி வருகிறது.

இதையெல்லாம் ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆம்... அது காலம் மாறிவிட்டது என்பதாய்!

உள்ளங்கைக்குள் உலகம் என சந்தோஷிக்கும் நாம் நமது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட உலகத்தை இழந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கு அந்த உலகின் சிறப்புகளைச் சொல்லாமலே கிராமங்களை மெல்ல மெல்ல அஸ்தமிக்க வைத்துவிட்டோம்.

திருவிழாவுக்கு வரும் பலூன் வியாபாரி, ‘விக்கவே இல்லை சாமி இப்ப எவனும் வாங்குறதில்லை’ என்ற புலம்பலோடு கடந்து போகும் போது காற்றில் ஆடும் பலூனைப் போல கிராமங்கள் சுயம் இழந்து தவிக்கின்றன.

தலைமுறைகள் மாற்றம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது... இன்னும் சாதி, மதங்களை மட்டும் சுமந்து கொண்டு!

கிராமங்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன, என்ன செய்ய? முன்னாள்!?  கிராமத்தானாய் வருந்தவே முடிகிறது.

“காலம் மாறிவிட்டதுங்க”    
- 'பரிவை' சே. குமார்.

புதன், 4 ஜூலை, 2018

வாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை

லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவதற்கான மனநிலை இல்லை. இனி வலைப்பக்கம் தொடருமா... தொடராதா தெரியாது... ஆனாலும் இதுவரை எழுதியவற்றையாவது தொடர்ந்து வலையில் வைத்திருக்க வேண்டும் என்பதால் பிரதிலிபி போட்டிகளில் கலந்து கொண்ட கதைகள். அகல் மின்னிதழ் சிறுகதைப் போட்டியில் தேர்வான கதை, அகலுக்கு எழுதிய கட்டுரை என கைவசமிருப்பவற்றை அவ்வப்போது பதிந்து வைக்கலாம் என்ற எண்ணம்.

கருத்து இடுவதில்லை... மறுமொழி இல்லை என்றெல்லாம் நினைப்பீர்கள் என்றால் மீண்டு(ம்) வரும் வரை அப்படித்தான் நகரும். சிலரின் வலைப்பக்கத்தை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தொடர்ந்து நட்பில் இருப்பேன்... நன்றி.

நட்புடன்
சே.குமார்.

மே மாத (வைகாசி மின்னிதழ்) அகலில் வெளியான கட்டுரை 'வேயன்னா' இங்கே...

குற்றப்பரம்பரை : வேயன்னா

ரு நாவலை வாசிக்கும் போது அதில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் பின்னே நாம் பயணிக்க ஆரம்பித்தால் அந்த நாவல் வாசிப்பு நிச்சயமாக நமக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். அந்தச் சுவையை பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது வந்தியத்தேவனுடனும்... உடையார் வாசிக்கும் போது இராஜராஜனுடனும்... கடல்புறா வாசிக்கும் போது கருணாகரப் பல்லவனுடனும்... ஜலதீபத்தில் இதயச் சந்திரனுடனும்... யவனராணியில் இளஞ்செழியனுடனும்... சிவகாமியின் சபதத்தில் நரசிம்மவர்மப் பல்லவனுடனும் பயணிக்கும் போது உணர்ந்தேன்... கதைகளைச் சுவைத்தேன். ஒரு சில நாவல்களில் எந்தக் கதாபாத்திரமும் நம்முடன் ஒட்டாது. அப்படியான நாவல்கள் வாசிப்புக்கு அயற்சியைக் கொடுக்கும். அப்படி ஒரு நாவலை சமீபத்தில் வாசித்தேன். அதன் பின் வாசிக்க ஆரம்பித்த குற்றப் பரம்பரையில் ஆரம்பம் முதலே ஒருவரின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தேன்.

அவர்தான் வேலுச்சாமி என்ற வீயன்னா என்ற வேயன்னா.

நண்பர்கள் எல்லாம் சிலாகித்துப் பாராட்டிப் பேசிய நாவல் குற்றப்பரம்பரை. ரொம்ப நாளாகவே வாசிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நாவல். நண்பர்களால் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்து ஒரே நாளில் முடித்தேன்.

“பற்றிக் கொண்டால் பல உயிர்களைக் காவு கேட்கும் தென் மாவட்டத்து சாதிக் கலவரங்கள். தமிழ்நாட்டின் சரித்திரக் கேடு” என்ற வரிகளே நாவலாசிரியரின் முன்னுரையின் முதல் வரிகளாய்... அது முற்றிலும் உண்மை. அதேபோல் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டு எழுதத் துவங்கினேன் என்றும் சொல்லியிருக்கிறார். அந்த பேரன்பையும் பெருங்கோபத்தையும் வேயன்னாவின் பின்னால் பயணிக்கும் போது உணரலாம்.

ஊருக்கு ஒரு மரியாதைக்குரிய மனிதர் இருப்பார் இந்த வேயன்னாவைப் போல... ஊருக்கு ஒரு பிரச்சினைக்குரிய மனிதர் இருப்பார் பெருநாழி பச்சமுத்துவைப் போல...  இது எல்லாக் கிராமங்களிலும் இருக்கும். எங்கள் ஊரில் கூட இது போன்ற மனிதர்களை பார்த்து வளர்ந்திருக்கிறோம்... பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எல்லா ஊரிலும் நல்லது செய்ய ஒருவன் இருந்தால் கெடுதல் செய்வதற்கென ஒருவன் இருப்பான். அவனுக்குப் பத்துப் பேர் என்றால் இவனுக்குப் பத்துப் பேர் இருக்கத்தான் செய்வார்கள். இதனாலேயே ஊர் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் ரெண்டு பட்டுக்கிடக்கும். ஊரில் ஒரு பிரச்சினை என்றால் ஊர்ப்பெரியவர் தலைமையில் ஊர்க்கூட்டம் நடக்கும். ஊர்க்கூட்டத்தில் விதண்டாவாதம் செய்வதே பச்சமுத்து போன்றவர்களின் வேலை. இது குற்றப்பரம்பரையில் இல்லை என்றாலும் கிராமங்களில் வழிவழியாக வந்துகொண்டுதான் இருக்கிறது.

எந்த ஒரு பிரச்சினை என்றாலும் ஊர்த் தலைவர் தலைமையில் ஊர்க்கூட்டம் கூட்டப்பட்டு அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு எடுக்கப்படும். ஊர்க்கூட்டத்தில் பெண்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதுதான் விதி ஆனால் அந்த விதியும் சிலகாலமாக ஆம்பளை இல்லாத வீட்டில் பொம்பளை கலந்துக்கலாம் என மாற்றப்பட்டுவிட்டது. ஊர்க்கூட்டத்தில் முடிவு எடுக்க முடியாத பெரும் பிரச்சினைகள் நாட்டுக் கூட்டத்துக்குச் செல்லும். பல கிராமங்களை உள்ளடக்கியது ஒரு நாடு. கிராமத் தலைவர்கள் எல்லாம் நாட்டுத் தலைவருடன் அமர்ந்து பிரச்சினையை பற்றிப் பேசி, பெரும்பாலும் நல்லதொரு முடிவை எடுத்து விடுவார்கள். இங்கும் முடியாதபட்சத்தில் நீதிமன்றம் நோக்கிச் செல்வார்கள். இந்த நடைமுறை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. இப்ப சின்னப் பிரச்சினைகள் என்றாலும் காவல் நிலைத்திலும் நீதிமன்றத்திலும்தான் நிற்கிறார்கள். இந்த ஊர்க்கூட்டம், நாட்டுக்கூட்டம் எல்லாம் எங்க பக்கம் இன்னும் உயிர்ப்போடுதான் என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால் காவல் நிலையங்களே இப்போது பிரதானமாகிவிட்டது.

சரி இனி வேயன்னாவோட பயணிக்கலாம்.

தங்கள் வாழ்க்கைக்காக... குறிப்பாக மூன்று வேளை சோற்றுக்காக திருடும் மக்கள் அவர்கள். தங்களை அழிக்கத் துடிக்கும் ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைக்க காட்டுக்குள் குழந்தை குட்டிகள், நாய்கள், மாடுகள் என எல்லாவற்றோடும்  ஓடும் மக்கள் பலரை இழந்து சம்பங்கி நதிக்குள் விழுந்து அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டு கரையொதுங்கி கிடக்க, அந்தக் காட்டுக்குள் மாடு மேய்க்க வரும் பெரும்பச்சேரி வட்டத்துரை என்னும் அரிஜனச் சிறுவனால் தங்கள் ஊருக்கு அருகில் சுற்றிலும் வேலிக்கருவை சூழ்ந்த பகுதியில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அதையே கொம்பூதி என்ற பெயருடன் தங்கள் ஊராக மாற்றிக் கொள்ளும் அக்கள்ளர்கள். அங்கிருந்தபடியே தங்கள் திருட்டுத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் தலைவன் தான் வேலுச்சாமி. உயிருக்குப் பயந்து வரும் போது மூத்தமகன் சேதுவைத் தொலைத்து விட்டவரின் இரண்டாவது மகன் வில்லாயுதம். அப்பனுக்குப் பின் அந்த இடத்தில் இவந்தான் தலைவன் என்பதை ஆரம்பம் முதலே அக்கூட்டம் சொல்லி வருகிறது. நாம் செயல் எப்படியும் தலைவராகிவிடுவார் என்றும் முதல்வர் ஆகிவிடுவார் என்றும் கனவு காண்பதைப் போல்தான்... வில்லாயுதமாச்சும் தலைமைப் பண்புக்கு சிறந்தவனாகிறானா என்பதை முடிவில் பார்க்கலாம். இப்ப நாம் பயணிக்க வேண்டியது வேலய்யாவோடுதானே...

தங்களைப் பார்த்ததும் தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து கக்கத்தில் வைத்துக் கொண்டு 'கும்புடுறேன் சாமி' என்று சொல்லிச் செல்ல வேண்டும் என்ற சட்டங்கள் இன்று பல கிராமங்களில் இருக்க, இக்கதையின் காலகட்டத்தில் நீயும் நானும் ஒண்ணுதாம்லே நம்ம அர்ணாக்கயிரை அவுத்துட்டா நமக்குள்ள என்னலே வித்தியாசமிருக்கு என வாழ்ந்திருக்கிறார் இந்த வேயன்னா. இன்று அரசியல் காரணிகளுக்காகவே இந்த இரு சாதிகளும் பிரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எப்படிப் பிரித்தாள வெள்ளையரும் அவருடன் சேர்ந்த பெருநாழிக் கிராமத்தார்களும் முயற்சிக்கிறார்கள் என்பதை கதையை வாசிக்கும் போது அறியலாம்.

தங்களுக்கு வாழ்வளிக்க முக்கியக் காரணியாய் இருந்த பெரும்பச்சேரி வட்டத்துரையை தன் மகனாகத்தான் பார்க்கிறார். சாதி என்னும் சகதியை தன்னுள் அப்பிக் கொள்ளாத மனிதன் வேலய்யா... வட்டத்துரையுடன் சரிசமமாக வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிடுகிறார். தோளில் கை போட்டு நீயும் எம்புள்ளதாம்லே என அணைத்துக் கொள்கிறார். வட்டத்துரையைக் காணோமென்றால் தவிக்கிறார். தன் மகன் வில்லாயுதத்தைக் கூட அருகில் வைத்துக் கொள்ள விரும்பாத மனிதர், வட்டத்துரை இல்லாது எங்கும் செல்ல விரும்பாத மனிதராகவே வாழ்கிறார்.
கொம்பூதி கிராமம் மட்டுமல்ல, பெரும்பச்சேரி கிராமமும் இவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறது. அதற்காக நாட்டமை பாதம் பட்டால் என்றோ, எஜமான் காலடி மண்ணெடுத்து என்றோ பாடவில்லை. மரியாதையை மரியாதையாகவே செய்கிறார்கள். அவரும் அவர்களை மதிக்கிறார்... அவர்களுடன் பேசி மகிழ்கிறார். பெருநாழி உள்ளிட்ட மற்ற ஊர்களில் இவர் மீது பயம் கலந்த மரியாதையே இருக்கிறது... அதுவும் திருட்டுக் கூட்டத் தலைவன் என்ற பயம்.

தங்கள் வீட்டைப் பெரிதாக கட்ட வேண்டும்... பெண்கள் எல்லாம் நகைகளைப் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் எண்ணமில்லை. மண் குடிசைதான் அவர்களின் வீடு... திருடும் பொருள்கள் எல்லாம் பெருநாழியைச் சேர்ந்த பச்சமுத்துவிடம் கொடுக்கிறார்கள். அவரும் இவர்களுக்கு தவசம் உள்ளிட்ட தானியங்களைக் கொடுக்கிறார். அதை வாங்கி தங்களுக்குள் பிரித்துக் கொண்டு சாப்பிடுகிறார்கள். அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. வேயன்னாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு என்பது அந்த ஊரில் இல்லவே இல்லை... அவர் சொல்வதே வேதவாக்கு.

திருடப் போகும் முன்னர் தனது சொந்தத் தங்கை உள்ளிட்ட பெண்களை ஆட்டுக்கறி கொண்டு செல்வது போல் போகவிட்டு யார் வீட்டில் கொள்ளை அடிக்க நினைக்கிறார்களோ அவர் வீட்டில் எந்த அறையில் நகைப்பெட்டி இருக்கிறது என்பதை அறிந்து வரச் செய்து அதன் பின் இரவில் ஊர்க் கோவிலின் முன் நின்று தனது தாய் கூழானிக்கிழவி... இந்தக் கிழவி செமக் கிழவி... கதையை வாசித்தால் இது பண்ணுற அட்டகாசத்தையும் இறுதியில் அது நம்மளை அழ வைப்பதையும் ஒரு சேரப் பருகலாம். இந்த மாதிரி ஆட்டம் போடுற அப்பத்தா ஊருக்கு ஒண்ணு இருக்கும். சுந்தர பாண்டியனில் வருகிற அப்பத்தாக்கள் மாதிரி ரகளையான கிழவி. அது சாமி கும்பிட்டு திருமண் எடுத்துப் பூசிவிட்ட பின்தான் திருடக் கிளம்புகிறார்கள். இரவில்தான் இவர்களின் வேட்டை. சரியான இடத்தில் ஓட்டையிட்டு ஆக்காட்டி குருவியை உள்ளே விட்டு வேவு பார்த்து அதன் பின்னே வேலையைக் கச்சிதமாக முடிக்கிறார்கள். எல்லாத்திலும் மூளை வேயன்னாதான்.

சுற்றுப்பட்டு எங்கிட்டும் உப்புத் தண்ணியாக இருக்க, பெருநாழியில் இருக்கும் கிணறு மட்டுமே நல்ல தண்ணீரைக் கொடுக்கிறது. பெருநாழிக் கிராமத்தில் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தும் பெரும்பச்சேரி மக்களுக்கும் அதுதான் தாகம் தீர்க்கும் சாமி... அவர்கள் தங்களது வயல்களில் உழைத்தாலும் கீழ்சாதிக்காரர்கள்தானே... தீண்டாமை என்னும் தீயை மிகத் தீவிரமாக வளர்க்கும் பெருநாழி ஆண்களும் பெண்களும் பெரும்பச்சேரி பெண்கள் தண்ணீர் எடுக்க வந்தால் குடத்தை தள்ளி வைத்து விட்டு எட்ட நிற்க வேண்டும்.  தண்ணீர் எடுக்க வரும் பெருநாழிப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு வாளிதான் ஊற்றுவார்கள். எப்போது குடம் நிறைகிறதோ அதுவரை காத்திருக்க வேண்டும் என சட்டமியற்றி வைத்திருக்கிறார்கள். காத்திருக்கும் குடங்கள் அரைமணியிலும் நிறையலாம்... அரை நாளிலும் நிறையலாம்... பாவம் வெயில்ல காத்துக்கிடக்காளே என யாரும் ஒரு வாளி சேர்த்து ஊத்துவதில்லை. இந்தக் கிணறுதான் மிகப்பெரிய பிரச்சினைக்கு விதையாகிறது.

ஆம்... கைக்குழந்தைக்காரியான ராக்கு தண்ணியெடுக்கப் போகும் போது இந்த நேரத்தில் யாருமிருக்க மாட்டார்கள் எனப் போய் தானே தண்ணியெடுக்க, அவள் கணவன் துருவனைப் பிடித்து கொதிக்கும் எண்ணெய்க்குள் கிடக்கும் காசை எடுக்கச் சொல்லி, கையை வேக வைத்து உடம்பெல்லாம் சர்க்கரைப் பாகை ஊற்றி எறும்புகள் நிறைந்த மரத்தடியில் கட்டி வைத்து விடுகிறார்கள், கணவனைக் காணவில்லை என வேயன்னாவிடம் முறையீடு செய்ய, வட்டத்துரை இன்னும் சிலர் சகிதம் பெருநாழி சென்று அவனை மீட்பவர் நாளை முதல் பெரும்பச்சேரி சனம் அந்தக் கிணற்றில் தாங்களே நீர் எடுத்துக் கொள்வார்கள் எனச் சொல்லிச் செல்லும் வேயன்னா, மறுநாள் பெரும்பச்சேரி ஊரையே கூட்டிக் கொண்டு கிணற்றுக்கு வர, நீரில் மலம் நிறைந்து மிதக்கிறது. அவமானத்தால் கோபத்தில் தகிக்கும் வேயன்னாவால் பெருநாழி சந்தையும் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டு சந்தை தீக்கிரையாகிறது.

கள்ளர்களை ஒடுக்க பெருநாழியில் கச்சேரி (போலீஸ் நிலையம்) அமைக்கப்பட, முதலில் வரும் வெள்ளக்கார போலீசுக்கு வேயன்னா மீது மிகுந்த மரியாதை, வீயன்னா என அழைக்கும் அவர் கச்சேரிக்கு அழைத்துப் பேசுகிறார் ஆனால் மற்ற போலீசுக்கு வேயன்னாவை பிடித்து உள்ளே போட வேண்டும் என்பதுதான் ஆவா... நல்லவரான வெள்ளைக்கார அதிகாரியை தங்களுக்கு எதிரானவர் என வேயன்னாவின் ஆட்கள் விரட்டி விட, அடுத்து வருகிறவன் எப்படியும் வேயன்னாவை பிடிச்சி உள்ளே போடணும் என்ற எண்ணத்துடனேயே இருக்கிறான். அவனின் மேலதிகாரியும் வேயன்னாவை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்.அதற்குப் பெருநாழி ஆண்களும் துணை நிற்கிறார்கள்.

கிணற்றுப் பிரச்சினைக்குப் பின்னர் பெரும்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் வேலை இல்லை என்றாகிப் போனதால் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட ஆரம்பிக்கிறார்கள். தங்களுக்கு வரும் தவசத்தை அவர்களுக்குக் கொடுக்கச் சொல்கிறார் வேயன்னா.

பெருநாழி ஆசாரியின் வீட்டில் தீப்பிடிக்க இது கொம்பூதி வேயன்னா வேலைதான் என்று ஊரே கூடிப் பேசிக் கொண்டிருக்க, வெள்ளைக்கார போலீசும் எரியும் தீயை வேடிக்கை பார்க்க, வயிற்றுப் பிள்ளைக்காரியான மனைவி தீக்குள் சிக்கியிருக்கும் நிலையில் ஆசாரி தவிச்சி நிற்க, புதிய வெள்ளை அதிகாரியின் அழைப்பை ஏற்று பெருநாழிக்கு கண்மாய் வழியாகச் செல்லும் வேயன்னாவும் வட்டத்துரையும் தீக்குள் புகுந்து ஆசாரி மனைவியைக் காப்பாற்றுகிறார்கள். அந்த வெள்ளை அதிகாரிக்கு வேயன்னா மீது மரியாதை ஏற்பட, அவர் கள்ளத் தொழிலை விட்டால் போதும் என்ற மனநிலைக்கு வருகிறார்.

தங்கள் தொழிலை விட்டுவிட்டு திருந்தி வாழ மாட்டோமென முடிவாய் இருப்பவர்களை எருது கட்டுக்கு மாடு பிடிக்க வரச்சொல்லி அழைத்துத் தந்திரமாக போலீஸ் வளைத்துப் பிடித்து அடிக்கிறது. கொம்பூதி ஆண்கள் எல்லாம் வேயன்னாவின் ஒற்றைப் பார்வைக்கு கட்டுப்பட்டு அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டிருக்க, அவர்களோடு நாமும் உக்கார்ந்திருக்கிறோம் போலீஸ் அடி வாங்கிக் கொண்டு.

அந்த கருத்த உரமேறிய தேகம்... வேல் கம்பு பிடித்து சிங்கமென நடக்கும் மனிதன்... பார்த்தவர் எல்லாம் பயந்து ஒதுங்கிச் செல்லும் மனிதன்... சுற்றிலும் இறுக்கப்பட்ட கயிற்று வலைக்குள் நொறுங்கி அமர்ந்திருக்கும் போது நாமும் அவர் அருகே கண்ணீரோடு அமர்ந்திருக்கிறோம்.

சிங்கத்தை சீண்டிட்டேல்ல.... அது இனி என்ன பண்ணுதுன்னு பாரு அப்படின்னு ஊரில் சொல்லுவாங்க... அப்படி போலீஸ் தீண்ட, அவர்களுக்கு பாடம் கற்பிக்க தன் இளைஞர் கூட்டத்துக்கு கண்ணைக் காட்டுகிறார் வேயன்னா. பெருநாழி ஆசாரி, வேயன்னா மீது கொண்ட மரியாதையின் காரணமாக தன் குழந்தைக்கு வேலுச்சாமி என பெயர் வைத்திருக்கிறார். அதே ஆசாரி போலீசாரையும் பெருநாழி குள்ள நரிகளையும் பலி வாங்க தன் வீட்டில் சட்டி சட்டியாக எண்ணெய் காய வைக்க உதவுகிறார். வித்தியாசமான திட்டத்தால் போலீசாரெல்லாம் எண்ணெய்க்குப் பலியாக, வேயன்னாவைப் பிடிக்க வந்த உயர் அதிகாரி வில்லாயுதத்தால் கொல்லப்படுகிறார்.

மூன்றாவதாக வரும் போலீஸ் அதிகாரி சேது. ஆம் வேயன்னா தப்பி வரும் போது தொலைத்த மகன்தான் அவன். ஐயாவை (அப்பாவை ஐயா என்றழைப்பது பெரும்பாலான கள்ளர்களின் வழக்கம்) தன் பாசத்தால் இனித் திருட மாட்டோம் என சத்தியம் செய்ய வைக்கிறான். அதன் பின் வேயன்னாவின் கொம்பூதி கிராமம் திருடச் செல்லவில்லை. திருடிய மொத்தத்தையும் வாங்கிக் கொண்டு சாப்பாட்டுக்குப் பொருள் அனுப்பும் பச்சமுத்து சும்மா இருப்பாரா என்ன...? அவரின் சித்து வேலைகளால் திருட்டு நடக்கிறது... பழி வேயன்னா மீது விழுகிறது. மகன் எதிரியாகிறான்... தன் கையால் அவரை அடித்து நொறுக்குகிறான்.

வயிற்றுப்பசியால் வாடினாலும் செய்த சத்தியத்தை மீறாத வேயன்னாவும் அவரின் கூட்டமும் வேறு வேலை எதுவும் செய்யத் தெரியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் பெருநாழி பச்சமுத்துவின் திட்டத்தால் செய்தாத திருட்டுப் பழியையும் சுமந்து வருந்தித் திரிகிறது. வேல் கம்புடன் வீறாப்பாய் திரிந்த மனிதன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார் வேதனையுடன்.

இவர்களுக்கு எதிராக சிலர் கிளம்பினாலும் இவர்களோடு இருக்கும் பெரும்பச்சேரி மக்களைப் பிரித்தாலொழிய வேயன்னாவை வீழ்த்த முடியாது... அவர்களுக்குள் மூட்டி விட வேண்டும் என முடிவெடுத்து பெரும்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் மீண்டும் வேலை அது இது என்ன இரு சாதிக்குள்ளும் சா'தீ'யை வளர்க்க ஆரம்பிக்கிறது கச்சேரியும் பெருநாழியும்.

இறுதியில் மிகப்பெரிய சண்டை... பெருநாழியில் பலர் கொல்லப்படுகிறார்கள். கொம்பூதிக்கு வரும் சேது தலைமையிலான போலீஸ் தண்ணீருக்குள் மூழ்கியிருந்து தாக்கும் ஆண்களை எல்லாம் சுட்டுத் தள்ள, மகன் சேதுவால் தண்ணீருக்குள் மறைந்திருக்கும் வேயன்னாவும் கொல்லப்படுகிறார்.

இப்படி மக்களுக்காக, மக்களோடு வாழுந்த மனிதரான வேயன்னாவுக்கு அங்கம்மா என்ற மனைவியும் அன்னமயிலு என்ற அழகிய மகளும் வில்லாயுதம், கூனிக்கிழவி, கணவனை இழந்த தங்கை, அவளின் மகன் ஊமைத்துரை, மகள் சிட்டு என ஏகப்பட்ட சொந்தங்கள் இருந்தாலும் இந்த மனிதர் திருடியது... வாழ்ந்தது... எல்லாமே தன்னை நம்பி வந்த மக்களுக்காகவும் தங்களைக் காப்பாற்றி இருக்க இடமளித்த பெரும்பச்சேரி மக்களுக்காகவும்தான். பெருநாழி பகைக்கிராமமாக இருந்தாலும் அங்கும் பலருக்கு உதவி செய்தவர்தான் இந்த வேயன்னா. மொத்தத்தில் ஊருக்காக வாழ்ந்த மனிதன் வேயன்னா... உறவுக்குக் கட்டுப்பட்டு உயிரை இழக்கிறார்.

கதையை முடித்து அதிலிருந்து வெளிவரும் போது வீரம் செறிந்த மனிதன்... தன்னை நம்பிய மக்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த மனிதன்... என்றோ காணாமல் போன மகன் போலீசாய் வந்து வாங்கிய சத்தியத்தால் வறுமையில் வாடிய மனிதன்... தண்ணீருக்குள் இறந்து கிடக்க, வேயன்னா பின்னால் வட்டத்துரை போல் நடந்தும் ஓடியும் அவரின் கைகாட்டலுக்கு அடித்தும் ஆர்ப்பரித்தும் பயணித்த நாமும் கூழானிக்கிழவி, அன்னமயிலு, அங்கம்மா, சிட்டு, வட்டத்துரை... இன்னும் இன்னுமாய்க் கூடிநிற்கும் கொம்பூதி, பெரும்பச்சேரி மக்களுடன் மக்களாய் நின்று கொண்டிப்போம் கண்ணீருடன்.

இதுவே இந்த நாவலின் மிகப்பெரிய வெற்றி. வட்டார எழுத்தும் ஒரு பரம்பரையின் வாழ்வும் நம்மை ஈர்த்துக் கொள்ளும்... அதிலிருந்து மீள்வது என்பது வேயன்னாவின் மரணத்தில் கண்ணீராய் நாம் வெளியாகும் போது மட்டுமே.

வில்லாயுதம் ஒரு களவைத் தலைமை தாங்கிச் செய்து வேயன்னாவுக்குப் பின் இவன்தான் என்று நிரூபித்தாலும் கதை முழுவதும் அவனின் களம் வஜ்ராயினி, வைரம், முனியின் குடில் என வேறு பாதையில்தான் பயணிக்கிறது. எனக்குச் சரிசமமாக வில்லாயுதம் கூட உட்கார முடியாது ஆனால் வட்டத்துரை உட்காருவான் என வேயன்னா சொல்வதன் உண்மையை கதையினை வாசிக்கும் போது அறியலாம். வில்லாயுதத்துக்கு அப்பாவுடன் அமரவோ பேசவோ நேரம் இருந்தால்தானே சமமாக உட்காரமுடியும். அவனின் போக்கு வேறு பாதையில்...

வட்டத்துரை பிறப்பு குறித்தான கன்னிமார்கள் கேட்கக்கூடாத காளத்தி கதையும் வஜ்ராயினி தொடர்பான வைரத்தேடல் கதையும் கிளைக்கதைகளாய்... அவலமாய் முடியும் கதைகள். இரண்டுமே சோகமயமானது என்றாலும் வஜ்ராயினி கதையின் கழுகு, மான், வைரம், ஆட்டுத் தோலில் வைரத்தை கழுகு எடுத்து வருதல் என ஆபுனைவாய் பயணிப்பது வேயன்னா பின்னால் வேல் கம்புடன் பயணிக்கும் போது நம்மோடு ஒட்டவில்லை.

சேதுவின் வெள்ளைக்கார காதலி... அவர்களின் காதல் என மற்றொருமொரு களம்... இறுதியில் வெள்ளைக்காரக் காதலி எடுக்கும் முடிவால் மனசுக்குள் நிற்கிறாள்.

அன்னமயிலுக்கு வட்டத்துரை மீது சொல்லாத காதல். அதை சில இடங்களில் அவளின் செய்கையால் மட்டுமே ஆசிரியர் உணர்த்தியிருப்பார். சினிமாத்தனமாய் அவனிடம் உன்னைத்தான் கட்டிப்பேன்னு அவளை நிற்க வைக்கவில்லை.

சேது போலீஸ் பயிற்சிக்குச் செல்வதும், அவனுக்கு துப்பாக்கி சுடுவதில் இருக்கும் திறமை குறித்து காதலி வீட்டில் பெருமை பேசுவதும் கதையின் முடிவை நமக்குச் சொல்லிவிடுகின்றன ஆமா எத்தனை சினிமா பார்த்திருப்போம்.

சேதுவின் வருகைக்குப் பின்னர் கதையில் சினிமாத்தனம் குடி கொண்டு விடுகிறது. வேகமான வேயன்னா சத்தியத்தின் பின்னே சாந்த சொரூபியாய் மாறிவிட, கதை மெல்லத்தான் பயணிக்கிறது.

வேயன்னாவாய் அந்த கருத்த தேகமும் வேல் கம்பு தாங்கி கையும் வீரமான நடையும்... கிடாரி, மதயானைக் கூட்டம் படங்களில் நடித்த இந்த நாவலின் ஆசிரியர் வேல ராமமூர்த்தி அவர்கள்தான் இக்கதையை வாசிக்கும் போது எனக்கு முன்னே வேகவேகமாய் நடந்து கொண்டிருந்தார்.

கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் ஜூனியர் விகடனில் தொடர்கதையாக வந்ததுதான் நாவலாகும் போது ஒரு பரம்பரையின் கதையாய்... சீறும் காளையாக பயணிக்க குற்றப்பரம்பரை ஆனது.

பாலா இந்தப் படத்தை எடுக்கும் போது நாயகனைச் சேது, வில்லாயுதம் என இரட்டை வேடத்தில் நடிக்க வைத்துவிட்டு வேல ராமமூர்த்தி அவர்களை 'வேயன்னா' ஆக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.

வேயன்னாவாக வாழ அந்தப் பரம்பரையில் வந்த வேல ராமமூர்த்தி அவர்களால் மட்டுமே முடியும்.

வேயன்னா இன்னும் எனக்குள் வேல் கம்போடுதான் வலம் வருகிறார். ஒருவேளை நீங்கள் வாசிக்கும் போது அவர் எனக்குள் இருந்து உங்களுக்குள் இடம் மாறலாம். 

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 16 ஏப்ரல், 2018

இப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)

சித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்பர் சத்யா அவர்களுக்கு நன்றி. 

அகலில் வாசிக்க "இப்படியும் சிலர்"

*****

ம்மைக் கடந்து செல்லும்... நாம் கடந்து போகும்... மனிதர்களில் சிலர் அவர்களது செய்கையால் நம் மனதுக்குள் வந்து விடுவார்கள். தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்களைப் பற்றி சத்யா அவர்கள் 'முகங்கள்' என்னும் தொடராய் முத்துலெட்சுமி ராகவன் அவர்களின் தளத்தில் எழுதி வருகிறார். இதையே என்னை நேசித்த மனிதர்களைப் பற்றி 'வெள்ளந்தி மனிதர்கள்' என்னும் தலைப்பில் என் தளத்தில் எழுதி வந்தேன். என்னை நேசிப்பவர்களை எழுத எழுதக் குறையாது என்றாலும் என்ன காரணத்தாலோ தொடர் பாதியில் நிற்கிறது.

வாழ்வின் நிமித்தம் ஓடிக்கொண்டிருக்கும் போதும் இங்கும் அன்றாடம் நிறைய முகத்தைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். அதில் சில முகங்கள் அவர்களின் செய்கையால் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறார்கள். இந்த வெளிநாட்டு வாழ்க்கையில் பல முகங்கள் பரிதாப முகங்களே. சமீபத்தில் முகநூலில் ஒரு கவிதை வாசித்தேன். கவிதையின் சாராம்சம் வெளிநாட்டு வாழ்க்கைக்காரர் இருவரின் மனைவியர் பற்றியதாய்... இறுதியில் இரண்டு மனிதர்களும் ஒரே கட்டிட வேலை இவரை மனதை அவர் அறியாது அவர் மனதை இவர் அறியாது வேலை பார்ப்பதாய் முடியும். அதுதான் நிதர்சனம். இனி கட்டுரைக்குள் வருவோமா?

நாங்கள்... நாங்கள் என்றாலும் நானும் இன்னொரு தமிழ் நண்பரும் காலையில் பேருந்து ஏறும் இடத்தில் சற்றே கூட்டம் இருக்கும். இங்கு பேருந்தில் இடம் பிடிக்க வேண்டும் என ஜன்னல் வழியாக துண்டு போடுதல், குழந்தையை வீசுதல் எல்லாம் இருக்காது. அடித்துப் பிடித்து ஏறுதலும் இல்லை என்பதால் ஒவ்வொருவாராக ஏறுவார்கள். இடையில் திடீரென ஒருத்தன் வர ஆரம்பித்தான். அவன் பாகிஸ்தானி, கையில் வைத்திருக்கும் லேப்டாப் பேக்கில் மதிய சாப்பாட்டை வைத்துக் கொண்டு ஏறுவான்.

பேருந்து வந்ததும் ஓடி படியில் நின்று கொள்வான். யாராவது அவனுக்கு முன்னே ஏற முனைந்தால் இடித்துத் தள்ளுவான். ஏறி அமர்ந்து மொபைலில் முகம் பார்த்து அதை அஷ்டகோணலாக்கி என்னென்னமோ செய்வான். அவன் இருக்குமிடத்துக்கு அருகில் அமர்பவர்கள் அவனுடன் உரசி விடாமல் இருக்க, ரோபோ போல் உட்கார்ந்து கொள்வான். அவனைப் பார்த்தாலே பேருந்தில் பயணிக்கும் யாருக்குமே பிடிப்பதில்லை. ஒருநாள் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை என்ற போது மற்றவர்களுக்கு வந்த சிரிப்பைப் பார்க்க வேண்டுமே! இப்படியும் சிலர்.

இங்கு பிச்சை எடுப்பவர்கள் எல்லாம் இல்லை என்றாலும் ரோட்டைக் கடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதையில் எப்போதேனும் சிலர் அமர்ந்து பிச்சை எடுப்பார்கள். சில நாட்கள் முன்னர் ஒருவர் என்னமோ பைபாஸ் சர்ஜரி செய்தது போல் மிகப் பெரிய பேண்டேஜ் ஒட்டி அது தெரிய, சட்டை கழட்டி விட்டு உட்கார்ந்திருந்தான். பார்க்கும் போதே கடுப்பு தான் வந்தது.

அதன் பின்னான ஒருநாள் அலுவலகம் விட்டு பேருந்தில் வந்து இறங்கி நடந்த போது ஒரு அரபிப் பெண்மணி, அரபி என்றாலும் உள்ளூர்க்காரி அல்ல வேறு நாட்டிலிருந்து வந்தவள்தான். ஓரு ஓரமாக உட்கார்ந்து முன்னே ஒரு பிளாஸ்டிக் கவர் வைத்திருந்தார். அதில் சில சில்லறைகளும் கிடந்தன. அவளருகே ரோஜா மலர் போல ஒரு பெண் குழந்தை, மூணு நாலு வயதிருக்கும்... அமர்ந்திருந்தது. அம்மா என்ன செய்கிறாள் என்பது தெரியாமல் அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெண்ணோ மகளுக்கு முத்தம் கொடுத்து அரபியில் ஏதோ சொன்னாள். உண்மையில் அவள் வாழ்வில் ஏதேனும் கஷ்டம் இருக்கலாம் இருப்பினும் குழந்தையை அருகமர்த்தி பிச்சை எடுத்தது மனசுக்கு வருத்தத்தையே கொடுத்தது. இப்படியும் சிலர்.

கழிப்பறைகளை அடிக்கொரு தரம் சுத்தம் செய்ய அதற்கென பணியாட்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் இந்தியர்களும் (குறிப்பாக தமிழர்கள், தெலுங்கர்கள்) வந்கதேசத்தவர்களும் இந்த வேலைக்கு வருவார்கள். அவன்தான் சுத்தம் செய்கிறானே என்ற நினைப்பில் பாத்ரூமைப் பயன்படுத்துபவர்கள் அலங்கோலம் செய்து விட்டுப் போவதைப் பார்க்க வேண்டுமே... சுத்தம் செய்பவனும் மனிதன் தானே என்ற எண்ணம் ஏற்படுவதேயில்லை. அதுவும் சிலர் பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் விடுவதே இல்லை. பாகிஸ்தானிகளோ வெஸ்டர்ன் டாய்லெட்டில் மேலே ஏறி இருந்து... வயல்ல நாத்துப் பறிச்ச மாதிரியே போட்டு வச்சிருப்பானுங்க... இப்படியும் சிலர்.

எங்கள் அறை இருக்கும் கட்டிடத்தில் ஒரு மலையாளி ஹோட்டல். அங்கு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் வேலை செய்கிறார். ஆரம்பத்தில் அவரும் மலையாளி என்றுதான் நினைத்தேன். தினம் செல்வதால் அவருடன் பழக்கம் ஏற்பட, அவர் வேலூர்க்காரர் என்பதை அறிய முடிந்தது. ஒரு ஆள், எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுப் பார்ப்பார். மிகவும் சுறுசுறுப்பானவர். ஊருக்குப் பேத்தியைப் பார்க்கப் போறேன் என்று சொன்னபோது அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஊருக்குப் போய் திரும்பி வந்து விட்டார். இப்போது பம்பரமாக சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியும் சிலர்.

இதுவும் பேருந்து ஏறும் இடத்தில் பார்க்கும் நிகழ்வுதான். சில நாட்களாக நானும் நண்பரும் நிற்கும் இடத்துக்கு அருகில் ஒரு பிலிப்பைனி வந்து நிற்பதும், பெண்கள் சிகரெட் விற்பனையில் இருக்க, சில ஆண்களே பெண்கள் சிகரெட்டை பிடிக்கும் போது இந்தப் பெண்ணோ ஆண்கள் சிகரெட்டை வாயில் வைத்து ஊது ஊது என்று ஊதுவாள். தள்ளி வாங்க விட்டா புகையால நம்மளைக் குளிப்பாட்டிருவா போலன்னு நண்பர் சொல்வார். அதே இடத்தில் சற்று தள்ளி ஒரு பெண்ணும் (ஆந்திரா) மூணு பசங்களும் அடிக்கும் லூட்டி இருக்கே.... அப்பப்பா எல்லாரும் அவர்களைத்தான் பார்ப்பார்கள். நம்ம ஊரா இருந்தா என்ன தங்கச்சி இப்பதான் லாத்துதுன்னு கொமட்டுல ரெண்டு குத்துவிடுவாங்க... இங்க எல்லாம் சகஜம்தானே... அதனால் அவங்க ஆட்டம் நிற்பதே இல்லை. இப்படியும் சிலர்.

இங்கு மலையாளியுடன் வேலை பார்த்தாலும் எகிப்துக்காரனுடன் வேலை பார்ப்பது என்பது மிகவும் சிரமம். அவர்கள் வேலையே பார்க்கமாட்டார்கள். வேலை பார்ப்பவனை ஏறி மேய்வதும், போட்டுக் கொடுத்தலுமே அவர்கள் வேலை. அப்படிப்பட்ட கூட்டத்தில் முன்பு ஒரு நண்பருடன் வேலை செய்தேன். அவன் வேலை செய்யமாட்டான் என்றாலும் நமக்கு மிகவும் நெருக்கமாய் உதவி செய்பவனாகவும் இருந்தான். இப்போது ஒரு நண்பர் அதே போல்... மிகவும் நல்லவர்... இவர் எகிப்துக்காரரா என்று நினைக்கத் தோன்றும். இப்ப புதிதாய் ஒருத்தனும் எங்க புராஜெக்ட்டுக்கு வந்திருக்கான். இவன் நான் எகிப்துக்காரன்டா என வந்த உடனே நிரூபிச்சிட்டான். இப்படியும் சிலர்.

இன்னும் எழுதிக் கொண்டே போகலாம்... பார்த்த பல மனிதர்களை. நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்.

-'பரிவை' சே.குமார்.