மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஜனவரி, 2018

மனசு பேசுகிறது : மாமல்லனும் பரஞ்சோதியும்

ந்தப் பதிவு 'சிவகாமி ஏமாற்றப்பட்டாளா?' என்ற கட்டுரை அகலுக்கு எழுதுவதற்கு முன்னர் எழுதியது. சில நாட்களாகவே எதிலும் ஒட்டுதல் இல்லை... வலைப்பக்கம் அதிகம் வரவில்லை... யாருக்கும் கருத்து இடவில்லை... எதுவும் எழுதவில்லை... சில கதைகள் எழுத நினைத்து எதிலும் நாட்டமின்றி... என்னவென்று சொல்ல முடியாத ஒரு மனநிலையில்தான் மனசு இருந்தது.

இன்னும் அப்படித்தான் நகர்கிறது... இந்த வெளிநாட்டு வாழ்க்கை மீதான காதல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.

இன்று காலை கணிப்பொறியில் பலவற்றை அழித்தபோது இந்தக் கட்டுரையும் அதில் வர, வாசித்துப் பார்த்து 'அட... எழுதியதை மறந்து விட்டோமோ' என்று நினைத்த போது சரி வலைப்பூவில் பதியலாமே... நாமும் இருக்கிறோம் என்பதை அவ்வப்போது பதியும் பதிவு மூலமாவது வலை உறவுகளுக்குச் சொல்வேமே என இங்கு பகிர்ந்தாச்சு.

அப்புறம் விஷால் பிறந்த தினத்துக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி. அவன் சார்பாகவும் நன்றி. உங்கள் வாழ்த்து அவனை நல்லவனாய் வளர்க்கட்டும்.

இனி கட்டுரைக்குள்....

Image result for சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தாலும் மனசுக்குள் ஒட்டிக் கொள்ளும் கதாபாத்திரங்களில் என் மனதில் முன்னணியில் நிற்பவர்கள் பரஞ்சோதியும் மாமல்லன் என்ற நரசிம்மவர்மப் பல்லவனும்தான்.

முரடனாக இருப்பதாலும் கல்வி அறிவு இல்லாததாலும் தன் மகளைக் கட்டிக் கொடுக்க மாமன் ஒத்துக்கொள்ளமாட்டான் என்பதால் கல்வி பயில சோழ தேசத்தின் திருச்செங்காட்டாங்குடியில் இருந்து காஞ்சிக்கு வரும் பரஞ்சோதி, காலத்தின் கோலத்தால் மகேந்திரவர்ம பல்லவரின் அன்புக்குப் பாத்திரமாகி அவரின் நேசத்துக்குரிய படைத்தலைவனாகி, பின்னாளில் பல்லவ இளவரசனான மாமல்லனின் நண்பனாகவும் சேனாதிபதியுமாகி  இரண்டாம் புலிகேசியை வென்ற போரில் முக்கியமானவராகிறார்.

மாமல்லனோ அப்பாவின் மீது அதீத பாசம் கொண்ட இளவரசனாய் இருந்து... தன்னை அப்பா போர்க்களத்துக்குப் போக விடமாட்டேங்கிறாரே... அரண்மனையில் பெண்களுடன் இருக்கச் சொல்லிவிட்டாரே என்று மனசுக்குள் குமைந்து கிடப்பவர், சேனாதிபதியாய் பரஞ்சோதி வந்த பின்னர் துர்வநீசனை எதிர்த்து படையுடன் போகச் சொல்லி மன்னரின் ஆணை வந்த பின் வெறி கொண்ட வேங்கையாய் பயணித்து...  தன் தந்தையின் சாவுக்கு காரணமான... சிவகாமியை தூக்கிச் சென்ற இரண்டாம் புலிகேசியை வாதாபியில் போய் வென்று வாதாபி கொண்டான் என்ற பட்டப் பெயர் பெறுகிறார்.

பரஞ்சோதி தன்னந்தனியாக கிளம்பி வரும்போது அவர் பின்னே பயணித்த மனசு, அவர் சிறையில் அடைபட்ட போது அவரோடு அடைபட்டு... விந்தியமலைக்கு குதிரையில் புறப்படும் போது அவருடன் பயணப்பட்டு... புலிகேசியிடம் ஓலையுடன் மாட்டிக் கொள்ளும் போது மாட்டி... பின்னர் மகேந்திரவர்மரிடம் படைத் தலைவனாகும் போது அந்த படைத் தலைவனோடு பயணப்பட்ட மனசு...  போரை வெறுத்து சிவபக்தராய் அவர் மாறும் வரை அவர் பின்னே தொடர்கிறதா..? என்ற கேள்வி எழும்போது என்னைப் பொறுத்தவரை இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது.

ஏன் தொடரவில்லை... தம்பி கலியுகம் தினேஷ் கூட பரஞ்சோதி பின்னே பயணித்தேன் என்று சொன்னானே... பின் ஏன் நம் மனம் பயணிக்கவில்லை...?

பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் பின்னால் பயணித்த மனசு... உடையாரில் இராஜராஜசோழன் பின்னால் பயணித்த மனசு... சாண்டில்யனின் நாவல்களில் பெரும்பாலும் கதை நாயகர்களுடன் பயணித்த மனசு... இதில் மட்டும் ஏன் நாயகனான பரஞ்சோதி பின்னே பயணிக்கவில்லை... என்று யோசித்தால்... அந்த யோசனையின் பின்னே மாமல்லன். ஆம் மாமல்லனேதான்.

சிவகாமியைக் காதலிக்கிற... அப்பாவின் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாத... இளவரசன் மாமல்லன்... ஒரு சாதாரண காதலனாக, அப்பாவின் மீது நேசம் கொண்டவராக இருக்கும் வரை தமிழ்ப்பட நாயகன் போலத்தான் தெரிகிறார். ஆதர்ஷ நாயகனாக இல்லை.  எப்போது துர்விநீசனை புறமுதுகிட்டு ஓடச் செய்கிறாரோ... காஞ்சிக் கோட்டை பாதுகாப்பில் அவரின் திறமையை இரண்டாம் புலிகேசி வியந்து நோக்குகிறானோ அப்போது அதுவரை பரஞ்சோதி பின்னே பயணித்த மனசு மெல்ல மெல்ல மாமல்லன் பின்னே பயணிக்க ஆரம்பிக்கிறது.

ஒருவர் காதலியின் சபதத்துக்காக ஒரு அரசனை வெற்றி கொள்ள ஒன்பதாண்டுகள் படை பலத்தை திரட்டி, இங்கிருந்து வாதாபி நோக்கிச் சென்று தன் தோழனும் சேனாதிபதியுமான பரஞ்சோதியின் திறமையைப் பயன்படுத்தி வெற்றி பெறுகிறான் என்றால் எப்படிப்பட்ட வைராக்கியமான மனசு அவருக்கு இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. 

அப்படி நினைத்தாலும்... தன் தந்தை சொன்னார் என்பதற்காக காதலியைக் காப்பாற்ற படையெடுத்துச் செல்வதாக கதையின் போக்கில் இருந்தாலும் தன் தந்தையின் மரணத்துக்கு காரணமாய் இருந்தவனை வெல்ல வேண்டும் என்ற வெறியே அவருக்குள் உண்மையில் இருந்திருக்க வேண்டும். அந்த வெறி கொடுத்த வேகம்தான் வாதாபி வரை செல்லச் சொல்லியிருக்கிறது. காதல் இரண்டாம்பட்சம்தான் என்பதே என் எண்ணம். அதுவும் சிவகாமி கதாபாத்திரம் என்பது நாவலின் சுவை கூட்டத்தான் இல்லையா...

மல்லர்களை வென்று மாமல்லன் என்ற பட்டப்பெயர் பெற்றிருந்த போதிலும் தன் தந்தையின் ஆணைப்படி துர்விநீசனை வென்று தன் வெற்றித் தீபத்தை ஏற்றி வைத்த மாமல்லர் வாதாபியை தீக்கிரையிட்டு அங்கு தன் சிங்கக் கொடியை பறக்க விட்டதில் தீபத்தை மேலும் அழகாக எறிய வைத்து தன் வாழ்நாளில் தோல்வியே காணாத இந்திய மன்னர்கள் 12 பேரில் ஒருவராய் திகழ்ந்திருக்கிறார். நரசிம்மவர்ம பல்லவனைப் பற்றி செய்திகள் அறியும் விதமாக தேடியபோது கிடைத்த விபரம் இது. இராஜராஜன், ராஜேந்திரன் போல் இவரின் வீரமும்தான் எத்தகையது என்ற வியப்பு நமக்குள் ஏற்படுகிறது.

தான் கட்டிக் கொள்ள நினைத்த திருவெண்காடு நங்கையை மகேந்திரரின் ஆசியுடன் திருமணம் செய்து கொள்கிறார் பரஞ்சோதி, ஆனால் மாமல்லனோ உயிருக்கு உயிராய் காதலித்த நாட்டிய மங்கை... ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி, வாதாபிச் சிறையில்  இருக்கும் போது தந்தையின் சொல்லைத் தட்ட முடியாமல் பாண்டிய இளவரசி வனமாதேவியை மணமுடிக்கிறார். இந்த இடத்தில் மாமல்லனைவிட பரஞ்சோதி உயர்ந்து நிற்கிறார்.

வாதாபி நோக்கிச் செல்லும் போது மாமல்லருடன் பலர் இருந்தாலும் மாமல்லரின் புத்தி சாதூர்யமும் பரஞ்சோதியின் திறமையும் சேர்ந்தே வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை மாமல்லருக்குப் பெற்றுத் தருகிறது. இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகும். தமிழர்கள் வீரத்திலும் தீரத்திலும் நிகரில்லாதவர்கள் என்பதை பறைசாற்றும் வெற்றியாகும். காஞ்சிக்கு தேடி வந்து வெல்ல முடியாமல் நட்பு போற்றி, கேவலமாக நடந்து கொண்ட புலிகேசியை அவன் தலைநகரில் வைத்துச் சாய்த்து வெற்றி கொள்ள எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் பரஞ்சோதியுடன் பயணிக்கும் மனசு பின்னர் மாமல்லருடன் பயணித்து வாதாபி நோக்கிச் செல்லும் போது இருவருடனும் பயணிக்கிறது,

வாதாபி போருடன் சிவனடியாராகிவிடும் பரஞ்சோதி பின்னாளில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக, சிறுதொண்டராக மாறும் போது நம் மனதில் நிறைந்து நிற்கிறார் என்றாலும் மாமல்லர் தன் வீரத்தாலும் திறமையாலும் அவரோடு இணைந்தே நம்முள் நிற்கிறார்.

மொத்தத்தில் மாமல்லர் பாதி, பரஞ்சோதி பாதியாய் பயணித்து இருவரோடும் கதையின் முடிவில் இணைய வைக்கிறது கல்கியின் எழுத்து.

****

பிரதிலிபி போட்டியில் இருக்கும் கட்டுரை வாசிக்க 'இங்கு' சொடுக்குங்கள்.

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 12 ஜனவரி, 2018

என் வரலாற்றுப் பார்வை - அகல் மின்னிதழ் கட்டுரை

சிவகாமி ஏமாந்தாளா..? ஏமாற்றப்பட்டாளா..?

சிவகாமி ஏமாந்தாளா..? அல்லது ஏமாற்றப்பட்டாளா..?

இப்படி மொட்டையாக் கேட்டா... எந்தச் சிவகாமி..? அவள் எதில் ஏமாந்தாள்..? அல்லது யாரால் ஏமாற்றப்பட்டாள்..? என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

இவள் பல்லவ சாம்ராஜ்யத்தின் மதிப்புமிகு சிற்பியான ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி.

இந்தச் சிவகாமி, மாமல்லன் என்ற பட்டப் பெயர் பெற்ற நரசிம்மவர்மப் பல்லவனைக் காதலித்தவள்.

ஆம்... சிறு வயதில் ஒன்றாக விளையாடி, பதின்மத்தில் நட்பு காதலாக நரசிம்ம பல்லவனை தீவிரமாக்க் காதலித்தவள்... பரதக் கலையில் சிறந்தவள்...  ஆயனச் சிற்பி செதுக்கிய சிற்பங்களெல்லாம் இவளின் அபிநய வடிவம் தாங்கி நின்றவைதான். மகேந்திர பல்லவருக்கு மிகவும் பிடித்த ஆடலரசி... இவளின் நாட்டியம் உலகெங்கும் பேசப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அவர். ஆனாலும் காதல் என்று வரும்போது...? அதுவும் தான் கண்டு வைத்திருக்கும் கனவுக்குப் பங்கமாக தன் மகனையே காதலித்தாள் என்றால்...?

சிவகாமியின் காதலுக்குள் போகும் முன் கொஞ்சமாய் பொதுப்பார்வை பார்த்துச் செல்வோமே. காதல் என்பது வெற்றி பெறுவதை விட அதிகம் தோல்வியைத்தான் தழுவி வருகிறது என்பது அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை தொடரும் சோகம்தானே. என்னதான் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் தங்கள் பிள்ளையின் காதல் என்று வரும்போது முற்போக்கு பிற்போக்காகி விடுவதுண்டு. காதலித்துத் திருமணம் செய்தவர்கள் கூட தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட யோசித்ததை ஏன் அதைக் கிள்ளியெறிந்ததைப் பார்த்திருக்கிறேன்.

இன்றைய காதல்கள் ஆணவக் கொலைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறது... மேலும் பதின்ம வயதுக் காதல்கள் பல  உடல் பசியைத் தீர்த்துக் கொள்வதுடன் முடிந்து விடுவதும் உண்டு... சில உயிரை எடுப்பதும் உண்டு...  

காதல் சாதிக்குள் நிகழ்ந்தால் சந்தோஷம்... அதுவே சாதி மாறும் போது சங்கட்டம். அந்த சங்கட்டமே மரணம் வரை விஸ்வரூபம் எடுக்கும். அப்படியிருக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட ராஜாக்களின் காதல்களில் பிரச்சினைகள் இல்லாமல் எப்படியிருக்கும்..? எத்தனையோ அரசுகள் பெண் காதலால் வீழ்ந்ததுண்டு அல்லவா..?

அப்ப சிவகாமியின் காதல்...?

ஆம் அவளின் காதலுக்கும் பிரச்சினை வரத்தான் செய்தது... அதுவும் நரசிம்மவர்மனின் அப்பா மகேந்திரவர்மரால்...

சிவகாமியின் நடனத்தின் மீது அதீத விருப்பம் கொண்ட மகேந்திரருக்கு தன் மகன் மீது அதீத விருப்பம் கொண்டிருக்கும் சிவகாமியை எப்படி வெட்டி விடுவது என்பது குறித்து தீவிர சிந்தனை ஏற்படுகிறது. அதற்குக் காரணம்... தான் அமைத்த சாம்ராஜ்யத்தை தன் மகனும் அவனுக்குப் பின்னான வாரிசுகளும் கட்டிக் காக்க வேண்டும் என்பதால் அவரின் விருப்பம் சிவகாமியைத் தவிர்க்க வேண்டும் என்பதாய்த்தான் இருக்கிறது.

அவரின் ஆசையும் சரியானதுதானே...? சோழர்களை தங்களுக்கு கப்பம் கட்ட வைத்து, பாண்டியர்களைத் தங்களைச் சீண்ட முடியாத அளவிற்கு பயமுறுத்தி வைத்து சேரர்களையும் பல்லவர்களை எதிர்க்க வேண்டும் என யோசிக்கக் கூட நினைக்க விடாமல் வைத்திருப்பதுடன் வடக்கே மிகப்பெரிய அரசனான ஹர்ஷவர்த்தனன், புலிகேசி என எல்லாருக்கும் பல்லவன் என்றால் ஒரு பயத்தை உண்டாக்கி வைத்திருக்கும் நிலையில் அந்தச் சாம்ராஜ்யம் ஆண்டாண்டு காலத்துக்கு அதன் தன்மை இழக்காது இருக்க வேண்டும் என்றால் சிலவற்றைச் செய்துதானே ஆக வேண்டும். அதுதானே ராஜ தந்திரம்.

ராஜாக்களின் தியாகங்கள் நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல... தங்கள் நாட்டைக் கட்டிக் காக்கவும்தானே... அப்படியிருக்க மகேந்திரர் நினைத்தது எப்படித் தவறாகும்..?

பாண்டியனின் மகளை நரசிம்மவர்மன் மணம் முடித்துக் கொண்டால் பாண்டியனின் உறவு தனது ராஜ்யத்தைக் கட்டிக்காக்க உதவியாக இருக்குமே... அப்படியிருக்க இந்த சிற்பி மகளைக் கட்டிக் கொண்டால் போருக்கு கிளம்பி வரும் புலிகேசிக்கு ஒருவேளை பாண்டியன் உதவி செய்யும் பட்சத்தில்... சில சிற்றரசர்களும் அவர்களுக்கு உதவியாகும் பட்சத்தில்... தங்களுக்கு கப்பம் கட்டும் சோழ அரசும் எதிராக எழும் பட்சத்தில்... காஞ்சி மட்டுமல்ல, பல்லவ ராஜ்யமே சுனாமிக்குள் சிக்குமே என யோசிக்கக் கூட முடியவில்லை என்றால் அவன் எப்படி மிகப்பெரிய அரசனாய்... தந்திரசாலியாக... மாறுவேடம் போட்டு எதிரி கண்ணில் விரலை விட்டு ஆட்டுபவனாக இருந்திருக்க முடியும்...?

மாமல்லனை விழுந்து விழுந்து காதலிக்கிறாள்... அவனும் சிவகாமியை மனதார காதலிக்கிறான்... அவளைப் பார்க்காது அவனால் இருக்க முடியாது.... அவளை குளக்கரையிலும் அவளின் வீட்டிலும் காணும் போதெல்லாம் அவர்களின் கண்கள் ஆயிரம் காதல் பேசுகின்றன. அந்த இடத்தில் தமிழ் சினிமா காதல் என்றால் சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் காதல் பறவைகள் பறந்து இருக்கும். ஆனால் இது ராஜ காதல் என்பதால் அழகிய பூங்காக்களிலும் சிற்பக் கூடத்திலும் காஞ்சி வீதியிலும் காதலாய் கசிந்துருகுகிறது.

காதலைப் பிரிக்க புலிகேசியின் படையெடுப்பு உதவியாய் அமைய அதைப் பயன்படுத்தி காதலர்களைப் பிரிக்கிறார். பிரிக்கிறார் என்பதை விட பிரிக்கும் முயற்சிக்கு விதை இடுகிறார். இந்த இடத்தில் அவர் செய்யும் செயல்கள் நம் நம்பியாருக்கும் ரகுவரனுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் முன்னோடியாய்... எப்படிப் பிரித்தாலும் மகன் சிவகாமியை விட்டு விலக மாட்டான் என்பதை அறியும் போது எப்படி இந்தக் காதல் மோகத்தை உடைத்தெறிவது என யோசித்து தன் படைத்தலைவன் பரஞ்சோதியையும் பயன்படுத்திப் பார்க்கிறார். மாமல்லனின் காதல் எப்போதும் போல் துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

சிவகாமிக்கு வில்லனாய் வருகிறான் புலிகேசி... தன் வில்லன் சிவகாமிக்கு வில்லனாகியதில் மகேந்திரனுக்கு மனதுக்குள் மகிழ்ச்சி என்றாலும் ஆடலரசி என தான் போற்றியவள் புலியிடம் மாட்டியிருப்பதில் அவருக்கு மிகுந்த வருத்தம். அவளை அப்படியே விட்டுவிட்டால் அந்த அழுக்கு எப்பவும் பல்லவர்கள் மீது தங்கி விடுமே என்பதால் அவளை மீட்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே... அப்படி மரணப் படுக்கையில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்...  தன் ராஜ்யத்தை காக்கும் விதமாக பாண்டிய இளவரசியை மகன் கட்டிக்கொள்ள வேண்டும் என்று வரம் வாங்கிக் கொண்டு சிவகாமியை எப்படியேனும் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் சொல்லிச் சாகிறார்.

Picture
(போட்டோவுக்கு நன்றி அகல்)
இப்ப சிவகாமிக்கு வருவோம்...

பெண் புத்தி பின் புத்தி என்று நிரூபித்தவள் இவள்... தன் காதலைப் பிரிக்க மன்னர் எடுக்கும் முயற்சிகளை அறிந்திருந்த போதும் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிய பேதை இவள். இவளுக்கு ஆடலரசி என்ற கர்வம் உண்டு... நரசிம்மன் தன்னை விடுத்து வேறு பெண்ணைக் கட்டமாட்டான் என்று நம்பியதில் தமிழ் சினிமாவின் இரண்டாவது கதாநாயகி இவள். பெரும்பாலும் தமிழ் சினிமாவின் இரண்டாம் நாயகி உயிரை விடுவாள். இவளோ புலிகேசியின் உயிரை வாங்குகிறாள் அவ்வளவுதான் வித்தியாசம் என்றாலும் மீண்டும் சொல்கிறேன் பெண்புத்தி பின்புத்திதான்.

தன்னைத் தேடி வந்து என்னுடன் வாவென நரசிம்மன் அழைத்த போது வர மறுத்து வாதாபி எரிய வேண்டும்... புலிகேசி மடிய வேண்டும் என வசனம் பேசுகிறாள்... தன் காதலன் தன்னைத் தேடி பல மைல் கடந்து வந்து என்னுடன் வந்து விடு அன்பே என்று நிற்கும் போது எந்தப் பெண்தான் நான் இங்குதான் இருப்பேன்... நீ என்னைக் கொண்டு வந்தவனின் ரத்தத்தை இந்த மண்ணில் வடிய விடு... அப்போதுதான் வருவேன் என்று சொல்வாள்...?

இவள் சொல்கிறாள்... இதுதான் சிவகாமியின் சபதமாம்... 

என்னய்ய சபதம் வேண்டிக் கிடக்கு... தன் வாழ்க்கையைப் பார்ப்பதை விட சபதம் பெரிதா... ஒருவேளை சிவகாமி என்றாவது ஒருநாள் புலிகேசியை வென்று வாதாபியை தீக்கிரையாக்க வேண்டும் என்று சொல்லி நரசிம்மனுடன் வந்திருந்தால் மகேந்திரர் மகனிடம் வரம் கேட்கும் போது காதல் வென்றிருக்கும்... மகேந்திரரின் வில்லத்தனமும் முடிவுக்கு வந்திருக்கும். சிவகாமியும் பல்லவ பேரரசின் அரசியாகியிருப்பாள்.

அப்படி ஆகியிருந்தால் பல்லவ பேரரசு என்ன ஆயிருக்கும்...?

நரசிம்மன் சதா சர்வ காலமும் போராடிக் கொண்டிருக்க வேண்டியிருந்திருக்கும். பாண்டியன் சேரனுடன் சேர்ந்து மோதியிருப்பான்... சோழன் பார்த்தீபன் வெகுண்டெழுந்த வேளையில் அவனுக்கு மற்றவர்களும் உதவியாய் இருந்திருப்பார்கள். இராஜராஜன் காலத்தில் புகழ்பெற்ற சோழப் பேரரசு பார்த்தீபன் காலத்திலேயே வளர்ச்சிப் பாதையில் பயணித்திருக்கும். வாதாபி எரிந்ததற்கு புலிகேசியின் வாரிசு எவனாவது ஒருவன் கிளம்பி வந்திருப்பான். ஆனால் இதெல்லாம் நடக்கவில்லை... காரணம் சிவகாமியின் காதல் மரணித்ததால் நரசிம்மனின் பாதை மாறியது என்பதுதானே.

சபதமிட்டு ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தானே வாதாபி எரிகிறது... சிவகாமி சிறை மீட்கப்படுகிறாள். இளம் வயதில் சிறை சென்றவள் இளமை கடந்துதான் மீட்கப்படுகிறாள். நரசிம்மன் இளவரசனாய் இருக்கும் போது சிறை பிடிக்கப்பட்டவள்... தன்னைத்தானே சிறைக்குள் வைத்துக் கொண்டவள் மீட்க்கப்படும் போது அவனோ ஒரு நாட்டின் மன்னனாய்... பாண்டிய வானமாதேவியின் கணவனாய்... இரு குழந்தைகளின் தந்தையாய்... மாறியிருக்கிறான்.  சிவகாமி இன்னும் மாறாதிருக்கிறாள்... இளவரசன் நரசிம்மனின் காதலியாய்.

சிவகாமி போட்ட சபதத்தின் காரணமாக புலிகேசியை எதிர்த்துப் போனான் என்று நினைத்தாலும் அந்த சபதத்தை மட்டும் தூக்கிச் செல்லவில்லை அவன். தன் தந்தையைக் கொன்ற புலிகேசியை பலிக்குப்பலி வாங்கவே அவன் பெரும்படையுடன் செல்கிறான். அப்படிப்பட்ட வெறியோடு சென்றவனின் மனசுக்குள் சிவகாமியின் காதலும் ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது.

சிவகாமியைப் பொறுத்தவரை காதல் தோல்விதான்... ஏமாற்றப்பட்டவளதான்... அரச குடும்பம் எப்பவும் இப்படித்தான்... தன் நினைவில் நரசிம்மன் தாடி வளர்த்து யோகதாசாக இருக்கவில்லைதான்... தன்னை மீட்டுக் கொண்டு வரும் போது ஒரு மன்னனாகத்தான் வருகிறான் என்பதை அவள் உணரும் தருணத்தில் தன்  காதல் முறிந்ததை அறிந்து, அந்த வலியின் உச்சத்தில் நரசிம்மன் தன்னை ஏமாற்றிவிட்டதாக மனசு துடித்திருக்கலாம்.

ஆனால் நரசிம்மனைப் பொறுத்தவரை... சிவகாமியின் காதலை விட வானமாதேவியின் உறவால் பாண்டியனின் உறவு... அதன் காரணமாக தன் சாம்ராஜ்யப் பாதுகாப்பு.... எவரை எதிர்த்து நின்றாலும் வெற்றி மாலை.... பல்லவ சாம்ராஜ்யத்தின் மிகச் சிறந்த பேரரசன்... எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவன்.... இப்படியான ஒரு நிலையை அடைய சிற்பியின் மகளை இழந்தது தவறில்லைதானே.

சிவகாமியைக் கட்டியிருந்தால் அவளின் ஆடல் கலையில் கட்டுண்டு காஞ்சியையும் இழந்திருப்பான் நரசிம்மன்... அப்படியெல்லாம் நடக்காமல் வரலாறு வாழ்ந்திருக்கிறது. ஆம் பல்லவ வரலாறு அதன் பின்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும் சிவகாமியைப் பொறுத்தவரை அவள் ஏமாந்தாள்... ஏமாற்றப்பட்டாள் என்றாலும் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டிக்காக்க இந்தக் காதல் முறிக்கப்பட்டதில்... முறிபட்டதில் யாருக்கும் வருத்தமில்லை. 

நரசிம்மன் கூட மனைவி மக்களுடன் சந்தோஷமாகத்தான் வாழ்ந்திருக்கிறான். காதல் தோல்வியை தூக்கிச் சுமக்காததால்தான் தன் வாழ்நாளில் தோல்வியைச் சந்திக்காத பனிரெண்டு மன்னர்களில் ஒருவனாய்  அவனால் திகழ முடிந்திருக்கிறது... எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்க முடிந்திருக்கிறது.

சிவகாமி பல்லவ அரசி ஆவதைவிட  நடன அரசியாகத் திகழ்ந்ததே சரியானது... அவள் ஏமாந்தாள்... அல்லது ஏமாற்றப்பட்டாள் என்பதைவிட ஒரு சாம்ராஜ்யம் அமையக் காரணமாக இருந்தாள் என்றே நினைத்துக் கொள்வோம்.

-------------------------

கல் பொங்கல் சிறப்பிதழில் எனது 'நினைவிலே கரும்பு' என்ற கிராமியக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட அகல் மின்னிதழ் ஆசிரியர் குழுவுக்கு நன்றி.

நினைவிலே கரும்பு வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 4 நவம்பர், 2016

நந்திபுரத்து நாயகி

ல்கியின் பொன்னியின் செல்வனில் வாழ்ந்த சோழ நாட்டு நட்சத்திரங்களை...  அதில் அவர் விட்ட இடத்தில் இருந்து ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்ததா..? வந்தியத்தேவன் - குந்தவை காதல் திருமணத்தில் முடிந்ததா..? அருண்மொழிவர்மன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தாரா..? என்பதை தன் பாணியில்  நந்திபுரத்து நாயகியில்  கதை சொல்லியிருக்கிறார் கலைமாமணி விக்கிரமன்.

Image result for நந்திபுரத்து நாயகி

கல்கியின் பொன்னியில் செல்வனில் பலரைக் கவர்ந்த வல்லவரையன் வந்தியத்தேவன்... துறுதுறுப்புக்கு பெயர் போன இளைஞன்... வேகமும் விவேகமும் கொண்டவன்... அதிபுத்திசாலி...  துடிப்பான இளைஞனாகப் பார்த்த வந்தியத்தேவனை உடையாரில் வயதானவனவராக, குந்தவையின் அன்புக் கணவராக,   இராஜராஜனுக்கு உறுதுணையாக இருப்பவராக பார்க்க முடியும்.  ஆனால் பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் குந்தவை திருமணம் குறித்து எதுவும் சொல்லியிருக்கமாட்டார் என்பதால் அப்போது வாசித்தவர்கள் இருவரும் இணைந்தார்களா... இல்லையா என்பதை அறிய ஆவலாய் இருந்திருப்பார்கள்.  அதை இளைய பிராட்டி குந்தவையை மையமாக வைத்து இந்த நாவலில் பூர்த்தி செய்திருக்கிறார் விக்கிரமன்.

சுந்தரச்சோழர் உடல் நலமில்லாத நிலையில்... ஆதித்த கரிகாலன் பாண்டிய ஆபத்துதவிகளால் கொல்லப்பட்ட பின் மதுராந்தகச் சோழருக்குத்தான் அரசுரிமை என்ற குரல்கள் ஓங்கிய நிலையில் அருண்மொழிவர்மன் தான் பட்டம் சூட்டிக் கொள்ளாமல் மதுராந்தகருக்கு (சேந்தன் அமுதன்) பட்டம் சூட்டி வைப்பதாக கல்கி சொல்லியிருப்பார். ஆதித்த கரிகாலன் கொலைச் சதியில் இந்த மதுராந்தகருக்கும் பழுவேட்டயர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதாகவும் பொன்னியின் செல்வன் சொல்லிச் செல்லும். ஆனால் சுந்தரச் சோழருக்குப் பிறகு அருண்மொழிவர்மன் ஆட்சிக்கு வர 12 ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆட்சிப் பீடத்தில் இருந்த மதுராந்தகர் பற்றி வரலாற்றுக் குறிப்பில் சரிவர இல்லை என்பதாலும் அந்தக் காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தில் எந்த குறையும் இல்லை என்பதாலும் மதுராந்தகர் நல்லவராகவே இருந்திருக்க வேண்டும் என்பதால் அவரை நல்ல மனிதராகவே காட்டியிருப்பதாக தனது முன்னுரையில் சொல்லியிருக்கிறார் விக்கிரமன்.

மதுராந்தகர் அரியணையில் அமர, செம்பியன் மாதேவியிடம் பேசி அவரைச் சம்மதிக்க வைக்கும் குந்தவை தனது தம்பி அருண்மொழிவர்மனை கடல்க டந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளச் சொல்கிறாள். அப்போது அவருக்கும் வானதிக்கும் திருமணமாகி இருக்கிறது. வானதியை தன் கண்ணின் இமைபோல் பார்த்துக் கொள்கிறாள்  இளம் மனைவியைப் பிரிந்து... ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேல் கடல் பயணமாக எங்கெங்கோ வணிகர் போல் சென்று அருண்மொழிவர்மர் திரும்பும் நேரம் சோழப் பேரரசு கடல் கொள்ளையர்கள், பாண்டிய ஆபத்துதவிகள், பார்த்திபேந்திரன் என நிறைய பிரச்சினைகளைச் சந்திக்கிறது.

இந்தப் பத்தாண்டு காலத்தில் வந்தியத்தேவன் எங்கிருந்தார். என்றால் பாதாளச் சிறையில்... ஆம்... ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தது தொடர்பாக பார்த்திபேந்திரப் பல்லவனின் சதிக்கு சின்னப்பழுவேட்டயரையும் உடந்தையாகி சிறையில் தள்ளிவிடுகிறார்கள். குந்தவை வெளியில் வாட, வந்தியத்தேவனை பாதிக்கதை வரை சிறையில் வாட வைத்து விடுகிறார். சிறையிலிருந்து வெளியில் வந்து குந்தவையோடு முறைத்துக் கொண்டு திரிகிறார். இருவரையும் இணைக்கவே அருண்மொழி நந்திபுரத்துக்கு தனித்தனியாக அனுப்புகிறான். அங்குதான் கோபதாபங்கள் தீர்ந்து மீண்டும் காதலில் விழுகிறார்கள்.

சுந்தரச் சோழரின் இறப்பு, வந்தியத்தேவன் சிறையிலடைப்பு என எதுவும் தெரியாமல் கடல்கடந்து முல்லைத் தீவுக்குப் போகும் அருண்மொழிவர்மனுக்கு அங்கிருக்கும் இன்பவல்லி மீது காதல் ஏற்படுகிறது. இன்பவல்லியோ நாட்டியத் தாரகை... பாடல் அரசி... அங்கிருக்கும் சில நாட்கள் இன்பவல்லியோடு இன்பமாய் கழிய, திரும்பி வந்து உன்னை அழைத்துச் செல்வேன் எனச் சொல்லிச் சென்றவர் வருடங்கள் கடந்து முல்லைத்தீவு வந்தபோது அது கொள்ளையர்களின் வெறிக்கு வீழ்ந்து கிடக்கிறது... இன்பவல்லி மட்டுமல்ல... அங்கிருந்த மக்கள் யாருமே இல்லை.

சின்னப்பழுவேட்டயரின் மகளை மதுராந்தகர் மனமுடித்திருந்தாலும் அவளுக்கு பட்டத்து ராணியாகும் வாய்ப்பு இல்லை.... சரி அவளது குழந்தை நாளை அரசாளுவான் என்றால் அதற்கும் வழியில்லை... குழந்தையே இல்லை.... இதனால் பழுவேட்டயர்கள் வம்சம் சோழ ராஜ்ஜியத்தில் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கும் சின்னப்பழுவேட்டையர் தன் அரவணைப்பில் வளரும் பெரியபழுவேட்டையரின் மகளான பட்டவன்மாதேவியை அடுத்து அரசணையில் ஏறப்போறவருக்கு மணமுடிக்க நினைக்கிறார். அடுத்தது யார் மதுராந்தகனின் மகன் மதுரனா...? அருண்மொழிவர்மனா...? எனத் திண்டாடி... மதுரன்தான் அடுத்து அரசாளவேண்டும் என்று தூபமிட, பட்டவன்மாதேவியோ மதுரனை விரும்பி பின்னர் சிற்றப்பனின் ஆசைக்கு இணங்க, ராஜராஜனை விரும்புவதா..?வானதிக்கு துரோகம் செய்யலாமா...?  என்றெல்லாம் யோசிக்கிறாள்.

தனிநாடு வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் பல்லவ வம்சத்தை நிலைநாட்ட, பல்லவக் கொடி பறக்கவிட ஆசைப்பட்டு பார்த்திபேந்திரன் படைகளைத் திரட்ட, வல்லவரையன் தவறிழைக்காதவன்... நாம்தான் பார்த்திபேந்திரன் சொல்லைக் கேட்டு தவறிழைத்து விட்டோம் என்பதை அறிந்து சிறையிலிருந்து வந்தியத்தேவனை வெளியில் கொண்டு வரும் சின்னப்பழுவேட்டையர் தானே முன்னின்று பார்த்திபேந்திரனுடன் மோதுகிறார். பார்த்திபேந்திரன் இறக்க, பழுவேட்டையர் காயமடைந்து மரணத் தருவாயில் தன் மகளைக் கட்டிக் கொண்டு பட்டத்து அரசியாக்க வேண்டும் எனச் சத்தியம் வாங்கி இறக்க, பட்டவன் மாதேவியை கரம் பிடிக்க வேண்டிய சூழல்... வானதியின் நிலை என்ன...? இன்பவல்லி என்ன ஆனாள்...? பட்டவன் மாதேவி பட்டத்து அரசியானாளா...? எனப் பயணப்படும் கதையில் நந்திபுரத்துக்கும் தஞ்சைக்கும் குந்தவை மாறிமாறி பயணித்துக் கொண்டிருக்கிறாள்.

இதற்கிடையே ஆதித்த கரிகாலனைக் கொன்ற பாண்டிய ஆபத்துதவிகள் ரவிதாசன் தலைமையில் சோழப் பேரரசின் முக்கியத் தலைகளை வீழ்த்த கங்கணம் கட்டித் திரிகின்றனர். வீரபாண்டியனின் மனைவியா... மகளா என்பதை சரியாக விளங்கிக்கொள்ள முடியாமல் பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி (இங்கு இவரை வெளியில் காட்டாமல் திரைக்குள் வைத்துவிடுகிறார் அதனால் பெயர் எதுவுமில்லை... தலைவி என்பதாய்ச் சொல்கிறார்... இறுதியில் அருண்மொழிவர்மனை சகோதரா என அழைத்து ஓலை அனுப்புகிறாள்... அப்படி எனில் சுந்தரச்சோழர் காதல் கொண்ட ஊமைராணியின் மகளாகவும் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது) வளர்க்கும் பாண்டியனின் மகன் அமரபுஜங்கன் தலைமையின் கீழ் காட்டுக்குள் அதற்கான நேரத்தை எதிர்பார்த்து தங்களைச் தாயார் செய்கிறார்கள். இதற்காக சேரனின் உதவி நாடிப் போகும் அமரபுஜங்கனுக்கு சேரனின் மகள் மீது காதல்... ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டார்.

பாண்டிய ஆபத்துதவிகளுக்கு உதவுவதாய் ஒரு காளமுகர் வருகிறார். அவரை ராஜராஜன் பார்த்துப் பேசும் போதே நமக்கு யாரென்று தெரிந்து விடுவதால் அந்த சஸ்பென்ஸ் உடையும் போது இதுதான் தெரியுமே என்றுதான் தோன்றுகிறது. அதேபோல் இன்பவல்லிக்கு சோழப் பேரசுக்கும் தொடர்பு இருப்பதாய் சொல்லி, அவளது அப்பா குறித்துப் பேசி... அவர்தான் இன்பவல்லியை குழந்தாய் என அரவணைத்து சோழ தேசத்தில் பாதுகாக்கிறார்... ஆனால் இறுதிவரை அவர்தான் அவளின் அப்பா எனச் சொல்லாமல் விட்டது ஏனோ தெரியவில்லை... நந்திபுரத்து நாயகி யார்...? குந்தவைதானே... எனவே கதை அவரைச் சுற்றியே நகர்கிறது என்றாலும் பொன்னியின் செல்வன் போல் முடிச்சுக்களும் அதை அவிழ்த்துப் பயணிக்கும் அழகும் இதில் இல்லை.

உடையாரின் பாலகுமாரன் கிளைக்கதைகளால் படிப்பவர்களுக்கு அயற்சியைக் கொடுத்தார் என்றால் இதில் விக்கிரமன் இரண்டு கதாபாத்திரங்கள் சந்திக்கும் போது அவர்களுக்கு அதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதைச் சொல்லிச் செல்வது விறுவிறுப்புக்குத் தடை ஏற்படுத்துகிறது. இது இதில் மட்டுமில்லை... அவரின் கதைகளில் எல்லாம் இப்படித்தான் கதை சொல்வார் என்பதை மற்றொரு கதையான தெற்குவாசல் மோகினி வாசிக்கும் போது அறிய முடிந்தது. 

உடையாரில் வரும் பஞ்சவன் மாதேவி, சிதம்பரத்தில் நடனமாடும் தேவரடியாள் வகுப்பைச் சார்ந்த பெண் என்றும் அவரை இராஜராஜன் பார்த்து, சிநேகித்து திருமணம் செய்து கொள்ள, பட்டத்து இளவரசி பட்டவன் மாதேவி, உள்ளம் கவர்ந்த வானதி (வானவன் மாதேவி) இருந்தாலும் அரசியலில் இராஜராஜனுக்கு பக்க பலமாக இருந்தவர் பஞ்சவன்மாதேவிதான்... தஞ்சைக் கோவிலில் இருக்கும் 107 சிவ நடன சிற்பங்களுக்கு மாதிரியாக நின்றவர் பஞ்சவன்மாதேவிதான்... அவருக்கு இராஜேந்திர சோழன் ஒரு கோவில் கட்டினான் அதற்கு கல்வெட்டுச் சாட்சியமும் கோவிலும் இருக்கு என்று சொல்லியிருப்பார். அவரைத்தான் விக்கிரமன் இன்பவல்லி எனச் சொல்கிறார் என்பதை கதையின் போக்கில் அறியலாம்.

ஆரம்பம் முதல் வந்தியத்தேவனை சிறையில் வைத்து... பின்னரும் குந்தவையுடன் சேராமல் நம்மைத் தவிக்க வைத்து... இருவரும் நந்திபுரத்தில் தங்கியிருக்க, சரி இனி திருமணம்தான் என்று நினைக்கும் போது ரவிதாசனிடம் மாட்ட வைத்து... எப்படியோ இறுதியில் இருவரையும் உல்லாசப் படகில் ஏற்றி அனுப்பி வைத்துவிட நந்திபுரத்து நாயகி வானதியை இழந்து சுபமாய் முடிகிறது.

அருண்மொழிவர்மனை குந்தவை உள்ளிட்ட அனைவரும் அவர்... இவர்... என மரியாதையுடன் அழைப்பதாய் எழுதிய ஆசிரியர் கூட மரியாதையாய்த்தான் எழுதியிருக்கிறார். வந்தியத்தேவனை மட்டும் அவன் இவன் என்றே எழுதியிருக்கிறார். மன்னர்களுக்கு இருக்கும் மரியாதை சிற்றரசர்களாக இருந்து... அதை இழந்த பரம்பரைக்கு இல்லை போலும்.

அது என்னவோ தெரியலை எல்லா வரலாற்றுப் புதினங்களிலும் கண்டவுடன் காதல் வந்துவிடுகிறது. உதவி கேட்டு சேரநாடு போகும் பாண்டியனுக்கு சேரன் மகள் மீது பார்த்த மாத்திரத்தில் காதல்... படை வீரன் சங்கரத்தேவனுக்கு தன் அன்னையின் தோழி மகளும் குந்தவையின் வேலைக்காரப் பெண்ணுமான சுமதி மீது பார்த்ததும் காதல்... மதுரனைப் பார்த்ததும் மயங்கும் பட்டவன்மாதேவி...  அருண்மொழிவர்மனைப் பார்த்த மாத்திரத்தில் இன்பவல்லிக்கு காதல்.... இவை எல்லாமே கதையின் சுவை கூட்ட மட்டுமே என்பதுதான் உண்மை... வரலாற்றில் மட்டுமல்ல.... இன்றைய வாழ்விலும் கூட தமிழ்பெண்கள் பார்த்த மாத்திரத்தில் வீழ்ந்து விடுவதில்லை... தமிழ் சினிமா இதில் விதிவிலக்கு.

சோழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்ட புதினங்களை வாசித்ததில் கல்கிதான் முதலிடத்தில் நிற்கிறார். அதற்கான காரணம் கல்கி கதையை அதன் போக்கில் அழகிய முடிச்சிட்டு அந்த முடிச்சை நாசூக்காக அவிழ்த்து... முன்னே பின்னே என்று அலையாமல் நேர்த்தியாய் நகர்த்தியமையால்தான் பொன்னியின் செல்வன் காலம் கடந்தும் கவர்ந்து இழுக்கிறது. பாலகுமாரனோ உடையாரில் தஞ்சைக் கோவில் கட்டுமானப் பணிகளை மிகச் சிறப்பாகச் சொல்லியிருந்தாலும்... ஒற்றன் என்றால் ஒரு கதை... வேளாளன் என்றால் ஒரு கதை என ஒவ்வொன்றிற்கும் ஒரு கிளைக்கதை வைத்து பக்கங்களை நிரப்பி வாசிப்பில் அயற்சியை ஏற்படுத்திவிட்டார். அதானாலேயே உடையார் என்றால் பலர் காத தூரம் ஓடுவதைப் பார்க்க முடிகிறது.  விக்கிரமனோ எழுத்தில் கவர்ச்சி காட்டினார் என்றால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதோ... இல்லை ஒருவரைப் பற்றிய கதை பயணிக்கும் போதே அங்கு வருவதற்கு முன்னர் நிகழ்ந்ததைச் சொல்ல ஆரம்பித்து மீண்டும் நிகழ்காலப் புள்ளிக்கு வருகிறார். இது அழகாய் நகரும் தேருக்கு கட்டை கொடுத்து நிறுத்துவது போல ஆகிவிடுவதால் முன்னோக்கி பின்னோக்கி நகர்வதில் கதை ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. நரசிம்மாவோ மிகச் சிறப்பாய் கற்பனை செய்து தமிழ் சினிமாவை மிஞ்சும் விதமாக கதை அமைத்து... பொன்னியின் செல்வனுக்கு எதிர்மறையாய் களம் அமைத்து வாசித்தவரை இனி வாசிப்பே எனக் கேட்கவைத்து விட்டார்.

நந்திபுரத்து நாயகியில் வந்தியத்தேவன், குந்தவை, வானதி, மதுராந்தகர், பழுவேட்டையர், சம்புவரையர், மலையமான், இராஜராஜன், செம்பியன்மாதேவி, ரவிதாசன், பிரம்மராயர் என எல்லாரும் இருந்தும்... இராஜராஜன் கடல் கடந்து செல்வது முதல் இராஜேந்திரன் பிறப்பு வரை சென்றாலும் ஏனோ வாசிக்கும் ஆவலை அதிகம் தூண்டாமல் மெல்லத்தான் பயணிக்கிறது.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

மனசு பேசுகிறது : 'உடையார்' வாசிப்பிலிருந்து...

Image result for உடையார்

பேராசிரியர் கல்கியின் வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' கொடுத்த ஒரு விறுவிறுப்பை... ஈர்ப்பை.... வாசிக்கும் ஆவலை... ஏனோ திரு. பாலகுமாரன் அவர்களின் 'உடையார்' கொடுக்கவில்லை என்றாலும் வாசித்தே தீருவேன் என்ற ஆவலில் வாசித்து முடித்தேன். 

பொன்னியின் செல்வனைப் போல் கல்கியின் சோலைமலை இளவரசியும் வாசிப்பை நிறுத்த முடியாத ஒரு ஈர்ப்பைக் கொடுத்து ஒரே மூச்சில் வாசித்து முடிக்க வைத்தது... ஒருவேளை இதற்குக் காரணம் அந்த எழுத்தின் ஈர்ப்பாய் இருக்கலாம்... சொல்லிச் சென்ற விதம்... கற்பனையாய் பயணிக்கும் வார்த்தைகளின் ஜாலம்... இப்படி ஏதோ ஒன்று நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம்... இப்போது கூட சில பதிவர்களின் எழுத்துக்கள் இப்படி நம்மைக் கட்டிப் போடுவதுண்டு... வாசிக்க ஆரம்பித்தால் அதற்குள் நம்மை ஈர்த்துக் கொள்ளும். 

உடையார் அப்படி ஈர்க்காததற்கு காரணம் என்ன..? 

இந்தக் கேள்வியை எனக்குள்ளே கேட்ட போது... ஒரு அறிமுகத்துக்கு முன்னும் பின்னுமாய் நகரும் கிளைக்கதைகளே முக்கியக் காரணம் என்பதுதான் எனக்குக் கிடைத்த விடை... கதையின் போக்கில் சம்பந்தமில்லாமல் கிளைக்கதைகள் பயணிப்பதும்... வளவளவென்ற வர்ணனைகளும்தான் வாசிப்பில் ஒரு அயற்சியை ஏற்படுத்தின... 

உடையாருக்குப் பின் 'சங்கதாரா' வாசித்தேன்... கீழே வைக்கவிடாமல் வாசிக்க வைக்கும் எழுத்து.... பரபரவென்று நகரும் நாவல்... ஆனால் தமிழ் சினிமாவை மிஞ்சும் டுவிஸ்டுகள்... நல்லவர்கள் எல்லாம் கெட்டவர்களாய்... ஒரு நாகரீகத்தை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அப்படி... இனி சோழனை வாசிப்பாய் என்ற கேள்வி முன்னே நின்று சிரிக்க, நாவலை முடித்த போது ஆசிரியர் சினிமாக் கதை ஆசிரியராய் மிளிர்கிறாரே என்று யோசித்தால் ஆசிரியர் குறிப்பில் திரைப்பட இயக்குநர் சித்ராலயா கோபுவின் மகன் என்பதை அறிந்தேன். பின்னே அவரின் எண்ணங்கள் சினிமாக்கதை புனையும் நோக்கில்தானே அமையும்.

வரலாறுகளை புதினமாக்கும் போது அந்தக் கால கட்டத்துக்கு பயணிக்க மட்டும் முடியும் என்பதே உண்மை... என்ன பேசியிருப்பார்கள்... எப்படி பேசியிருப்பார்கள் என்றெல்லாம் எப்படி கண்டுபிடிக்க முடியும்... வரலாறுகளைப் பற்றிய செய்திகள், கல்வெட்டுக்கள், ஓலைச் சுவடிகள், செப்புத் தகடுகள், வரலாறுகளைச் சொல்லும் புத்தகங்கள் என எல்லாவற்றையும் உள்வாங்கி எழுத ஆரம்பிக்கும் போது அந்தக் காலகட்டத்துக்கு பயணிக்கும் எழுத்தாளர் இதுதான் கதை... இதுதான் களம்... என்பதை வைத்து தங்கள் மனதுக்குள் தோன்றுவதை களத்தை மாற்றாமல் கதையை மட்டும் பக்கம் பக்கமாக இலக்கியச் செறிவோடு இப்படிப் பேசியிருப்பான்... அப்படிச் சண்டை  போட்டிருப்பான்... என தங்கள் சிந்தையில் விளைந்ததை அறுவடை செய்திருப்பார்கள். அப்படி ஒரு இராஜராஜனைத்தான் பாலகுமாரன் படைத்திருந்தார். 

உடையாரில் இராஜராஜன் என்பவன் மக்களுக்கு அருகில் இருந்தவன்... மக்களோடு மக்களாக வாழ்ந்தவன்... அவர்களோடு பேசி... சிரித்தவன்... உண்டு... உறங்கியவன்... ஏன் அவர்களுடன் இணைந்து தஞ்சைக் கோவில் வேலையும் செய்தவன் என்பதை ஆறு பாகத்தில் சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு அரசன் அமைய குடிமக்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கொடுப்பினை சோழ தேசத்து மக்களுக்கு இருந்தது என்பதாய் சொல்லியிருப்பார்.

இன்றைக்கு நம்ம தெரு கவுன்சிலரைப் பார்க்கவே ஆயிரம் அல்லக்கைகளைத் தாண்ட வேண்டியிருக்கு... அப்படியும் அவரை பார்ப்பது என்பது அரிது. மக்கள் பிரதிநிதியாம் தமிழக முதல்வர் எப்படியிருக்கிறார்..? என்ன ஆனார்...? மீண்டு(ம்) வருவாரா..? என்று தமிழக மக்கள் ஒன்றும் தெரியாமல் தவிக்கும் நிலையில் நாடு இருக்கும் போது ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் சக்கரவர்த்தியாய் பெரிய தேசத்தைக் கட்டி ஆண்ட இராஜராஜன் மக்களோடு மக்களாய் இருந்தார் என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம். 

அன்றே சாதிகளுக்குள் பிரச்சினை இருந்தது என்பதை எனக்கு அது வேண்டும்... எனக்கு இது வேண்டும் என்று ஒவ்வொரு சாதிக்காரரும் மன்னரிடம் கேட்பதில் கொண்டு வந்து விடுகிறார்... சாதீயம் தலை விரித்தாடும்படிதான் எழுதியிருக்கிறார்... மக்களிடம் ஒற்றுமை இல்லை என்பதை சொல்லி விடுகிறார். மன்னரை மக்கள் மதிக்கவில்லை என்பதாகவும் சொல்லிச் செல்கிறார். எந்த வித இயந்திரங்களும் இல்லாமல் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய மக்களிடம் அன்றே சாதீய வேறுபாடுகள் இருந்திருக்குமா..? என்ற யோசனை எழாமல் இல்லை... இருப்பினும் ஆசிரியர் சாதீய பிரச்சினைகளை வைத்து பல பக்கங்களை நிறைத்திருப்பதால் சா'தீ' அன்றே கிளை பரப்பியிருக்கிறது என்று நினைக்க வைத்துவிடுகிறது.

அரசனுக்கு அடி பணியும் மக்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால் இங்கே அரசர் அந்தணர்களுக்கு அடி பணிகிறார்... அவர்களே பெரியவர்கள் என்று இராஜராஜன் வாயால் சொல்ல வைக்கிறார்... சில இடங்களில் அரசரை அவர்களே வழி நடத்துகிறார்கள் என்பதாய் காட்டுகிறார். போருக்குச் சென்ற இடத்தில் ஒருவன் சாவான் என்று முன்கூட்டியே சொல்லத் தெரிந்த இராஜராஜனுக்கு... இது இப்படித்தான் நடக்கும் என்று சொல்லத் தெரிந்த இராஜராஜனுக்கு... தொண்டை நாட்டு அந்தணர்கள் வேலை பார்க்கிறேன் பேர்வழி என்று கொள்ளை அடிப்பது தெரியவில்லை... தங்க மண்வெட்டி முதல் கொண்டு நிறைய சுருட்டுவதைப் பற்றி நாவலின் இறுதி வரை யாருமே கண்டு கொள்ளவில்லை... 

அப்பனும் மகனும் எப்பவும் முட்டி மோதுபவர்கள்தான் என்று காட்டுகிறார்... அப்பன் கோவில் கட்டுவது மகனுக்குப் பிடிக்கவில்லை... மகன் கோவில் கட்டுவதில் அப்பனுக்கு விருப்பமில்லை... எப்போது பேசினாலும் இருவருக்கும் ஒத்துவராமல் சண்டையில்தான் முடியும் என்பதாய் எழுதியிருக்கிறார்.... ஒரு தேசத்தின் சக்கரவர்த்திக்கும் அவரின் ஒரே மகனான இளவரசனுக்கும் முட்டல் மோதல் என்பதெல்லாம் யோசிக்க முடியவில்லை.... ஒருவேளை அப்பனுக்கும் மகனுக்கும் சின்ன சின்ன வாக்குவாதங்கள்... பேதங்கள் இருந்திருப்பதாய் ஆசிரியர் எங்கேனும் வாசித்திருக்கலாம்.

தான் அருண்மொழிப்பட்டனை விரும்புவதாய் இராஜராஜி, பஞ்சவன்மாதேவியிடம் சொல்லும் போது அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதாய் பஞ்சவன்மாதேவி சொல்வார். அருண்மொழி கருவூர்தேவரிடம் பேசும்போது மனைவி குழந்தைப் பேறுக்காக மாமனார் வீடு சென்றிருக்கிறாள் என்றும் சொல்ல, மனைவி இருக்க உன்னை விரும்பும் பெண்ணையும் கட்டிக்கொள்... உன் எதிர்கால வாழ்க்கைக்கு உதவியாக இருப்பாள் என்று கருவூர்த்தேவர் இரண்டாம் திருமணத்துக்கு வித்திடுவார். ஆனால் அருண்மொழியும் இராஜராஜியும் ரொம்ப நாளாய் காதலிப்பதாகவும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை ஏற்காத பிரம்மராயர் குந்தவையிடம் சொல்ல, அவள் இராஜராஜியை அழைத்துப் பேசுமிடத்தில் அருண்மொழிக்கு அவனது அத்தை பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்து வைத்திருக்கிறார்கள் என்பாள்... இதில் எது முன்னே...? எது பின்னே...? என்ன ஒரு குழப்பம். நான் புரிந்து கொண்ட விதம் தவறா...? ஒரு முறைக்கு மேல் படிக்கு எண்ணம் இல்லை என்பதால் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

முத்தான பொன் நங்கை..  கரூவூர்த்தேவரின் வீட்டு வேலைக்காரப் பெண்.... இரண்டு மூன்று இடங்களில் இவர் வருவார். பின்னர் கதை நகர்தலில் கருவூர்த்தேவருக்கே அப்ப அப்ப வாய்ப்பு என்ற போது வேலைக்காரி எங்கே போனால் நமக்கென்ன... என நாமும் மறந்து பயணிப்போம்... குந்தவை வீட்டில் இருக்கும் அதிகாரிச்சி ஒருத்திக்கு இதே பெயர் வரும்... அவள் பாண்டிய வீரனை திருமணம் செய்து கொள்ள விரும்புவாள்... ஆனால் அதெல்லாம் கதையில் தொடராது.... அது இருக்கட்டும் எப்படி ஒரு நாவலில் இருவருக்கு ஒரு பெயர் என்று சிந்தித்துக் கொண்டிருந்தால் குழப்பமே மிஞ்சும் என்பதால் ஒரு ஊருக்குள் கருப்பையாக்கள் பலர் இருப்பதில்லையா என்று சமாதானமாக்கிக் கொண்டு நகர்ந்து விட்டேன்.

பாண்டிய வீரன் குணசீலன் கோவில் வேலை மட்டுமின்றி, கல் தூக்கி வர, தேர் செய்ய என எல்லாவற்றிலும் பெரும் உதவியாக இருக்கிறான்... அப்புறம் என்ன ஆனான்...? இராஜராஜனைக் கொல்வோம் என சூளுரைக்கும் இரவிதாசனின் தம்பி சாம்பவானும் அவர்களின் மகன்களும் என்ன ஆனார்கள்...? (ஒருவேளை இறுதியில் கைது செய்யும் சேர நாட்டு நம்பூதிகளுடன் இவர்களும் இருந்தார்களோ என்னவோ...?). கருமார்கள் திரும்பி வந்தார்களா...? ம்ஹூம் எதுவும் சொல்லலையே... 

ஒற்றைக் கை இல்லாதவன் மரம் ஏறுவான்... தன் அடையாளத்தை உடனே மாற்றிக் கொள்வான்... கோவில் கோபுரத்தில் ஏறுவான்... ஒரு கையால் மண்ணை நோண்டியே பிணங்களைப் புதைப்பான்... அது எப்படி... அதெல்லாம் அப்படித்தான் என நகர்ந்தாலும் இப்படியும் முடியுமான்னு ரொம்ப யோசிக்கலை... காரணம் தமிழ் சினிமா நாயகன் 100 அடி தூரத்தில் இருந்து பறந்து போய் இரயிலைப் பிடிக்கலையா...?

அரசன் கதையைவிட அந்தணர்கள் கதையே உடையாரை ஆக்கிரமித்திருந்தது.... யாதவன் மாடு மேய்க்க... வேளாளன் விவசாயம் செய்ய... வணிகர்கள் வியாபாரம் செய்ய... கருமார்கள் ஆயுதம் தயாரிக்க... மறவர்கள் போர் செய்ய... என இருக்கும் போது எந்த வேலையும் பார்க்க மாட்டோம்... வேதம் ஓதுவதே எங்கள் வேலை என்று அரசனை எதிர்க்கும் அந்தணர்கள் மட்டுமே படித்தவர்கள்... பண்பானவர்கள்... அரசரை கேள்வி கேட்கும் வல்லமை இவர்களுக்கு மட்டுமே உண்டு என்பதாய் கதை நகருமே ஒழிய இராஜராஜனை மையப்படுத்தி நகராது... அரசனை கேலி கிண்டல் எல்லாம் செய்வார்கள்.... இராஜராஜன் பெரும்பாலும் புலம்பிக் கொண்டு திரிபவனாக கதையில் காட்டப்பட்டிருக்கும்.

தான் பார்த்துப் பார்த்துக் கட்டிய தஞ்சைக் கோவிலை விட்டுப் போனதும் இராஜராஜன் தஞ்சைக்கே வரவில்லை என்பதாய் சொல்வது ஏன்... இதற்கு எதுவும் சான்றுகள் இருக்கா...? ஒவ்வொரு வேலையையும் ரசித்து இறைப்பணியே என் பணி என விரும்பிக் கட்டியவன் ஒரு முறை கூடவா வந்திருக்கமாட்டான்... ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

எது எப்படி என்றாலும் பல இடங்களில் அவர் தொட்டுச் செல்லும் விஷயங்கள் நம்மை அப்படியே அசரடிக்கும். இரவில் குதிரையில் தனியே பயணித்து பஞ்சவன்மாதேவி உயிர், உடம்பு குறித்து அறியும் நிலை, இராஜராஜன் தனது மரணத்துக்கு முன்னால் மனசுக்குள் பேசும் பேச்சு... கோவில் கருவறைக்குள் பிரமாண்ட லிங்கத்தை நிறுவும் பணி... மேலைச் சாளுக்கியத்துடனான போர்... என நம்மை கட்டிப் போடும் பக்கங்களும் உண்டு... குறிப்பாக இறப்பு குறித்தான ஆசிரியரின் பார்வை நம்மை கண் கலங்கி பயணிக்க வைக்கும்.

உடையார் ஒரு வரலாற்றை அதன் வடிவத்தில் கொடுக்கவில்லை என்றாலும் ரொம்ப பொறுமை இருந்து  வாசித்தால் சில விஷயங்களை அறிந்து கொள்ளலாம் என்பது உண்மை. 

பெண்களை கேவலமாக, போகப் பொருளாக உருவகித்திருந்தாலும் குந்தவை, பஞ்சவன்மாதேவி, சீரடியாள், ராஜராஜி எனச் சிலரை ஆட்கொண்டவர்களாகவும் ஆட்சி செய்தவர்களாகவும் காட்டியிருப்பார். 

மொத்தத்தில் உடையாரில் பலவற்றை தனக்காக உடைத்து தான் நினைத்த இராஜராஜனை நம்முன்னே வைத்திருக்கிறார் பாலகுமாரன்.என் எழுத்து எப்படியிருந்தாலும் படிப்பார்கள் என்ற எண்ணம் எந்த எழுத்தாளனுக்கும் இருக்கக் கூடாது. தானே பெரியவன் என்னை மிஞ்சி எவனும் இல்லை என்ற நினைப்பு எவனுக்கும் வரக்கூடாது.  அந்த எண்ணம் வந்தால் என்ன எழுதி என்ன புண்ணியம் சொல்லுங்கள்... உடையாரில் இருக்கும் எழுத்துக்கள் பல இடங்களில் நானே பெரியவன் என்று சொல்லாமல் சொல்லி சிரிக்கின்றன... வாசித்த நாம்தான் வரலாறுகள் எப்படி புனைவுகளாய் சிதைந்து போய் நிற்கின்றன என உடைந்து போகிறோம்.

உடையார் வாசியுங்கள்... கூட்டுக்கறியைப் போல் ஒரு வரலாற்றையும் அதன் நாகரீகத்தை  தனது எண்ண ஓட்டத்தில் கிளைகளைப் பரப்பி பக்கம் பக்கமாய்ச் சொல்ல முடியும் என்பதையும் அறிவீர்கள்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 5 அக்டோபர், 2016

வரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா?

Image result for குந்தவை நாச்சியார்

'என்னப்பா திடீர்ன்னு வரலாற்று நாவல்கள் படிக்கிறேன்னு இறங்கிட்டே... என்னாச்சு உனக்கு...?' என்ற நண்பரின் கேள்விக்கு 'அட வரலாறை அறிந்து கொள்வோமேன்னுதான்...' மெல்ல இழுத்தேன்.

'பொன்னியின் செல்வன்... உடையார்.... சங்கதாரா... என வரிசையாக சோழ வரலாற்றுக்குள் மூழ்கி எழுத்தியே முத்தெடுத்தியா..? அடுத்தது என்ன நந்திபுரத்து நாயகியா...?'

'இல்ல கடல் புறா பக்கமாகப் போகலாம்ன்னு நினைக்கிறேன்...'

'ஏன் என்னாச்சு... சோழம்... சோழம்ன்னு ஓடினே.... நந்திபுரமும் வாசிச்சிட வேண்டியதுதானே...?'

'அய்யய்யோ இப்ப அதையும் வாசிச்சா நான் யாருன்னே மறந்து போகுமப்பா... முடியல... ஆளாளுக்கு ஒரு கதை சொல்லி இனி வரலாற்று புதினம் வாசிப்பே... வாசிப்பேன்னு சுளீர் சுளீர்ன்னு அடிக்கிறாங்கப்பா... கடல் புறா சோழனோடு பயணித்தாலும் இளைய பல்லவனைச் சுற்றி பிண்ணப்பட்ட கதையாம்...'

'ஹா.. ஹா.... அப்பவே சொன்னேன்... புதினங்கள் எல்லாம் கற்பனையே... அதில் வரலாறுங்கிற ஊறுகாயை வைத்து பெரிய விருந்தே சமைப்பாங்கன்னு கேட்டாத்தானே....'

'சொன்னே.... இருந்தாலும் ஏதோ ஒரு ஆசையில வாசிச்சேன்... முடியல...'

"என்னாச்சு...?'

'கல்கி... பாலகுமாரன்... டி.ஏ.நரசிம்மன்... மூன்று பேரும் எடுத்திருந்த களம் சோழர்கள்தான்... ஆனால் நம்மளை சுழற்றிச் சுழற்றி அடிச்சிட்டாங்க...'

'ம்... அவங்க அவங்க எண்ணத்தில் என்னமாய் நினைத்தார்களோ அதை எழுதியிருப்பாங்க'

'கல்கியும் பாலகுமாரனும் கொஞ்சம் ஒத்துப் போனால் நரசிம்மன் தள்ளி நிற்கிறார்.'

"ஹா...ஹா... மூவருக்கும் இடையில் வித்தியாசம் என்ன...? சொல்லு...'

'ஆதித்த கரிகாலன் சம்புவரையர் மாளிகையில் இறந்தார் என்று கல்கியும்... ஆற்றில் பிணமாக மிதந்தார் என்று பாலகுமாரனும் சொல்ல, தஞ்சை மாளிகையில் கொலை செய்யப்பட்டு சம்புவரையர் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நரசிம்மன் சொல்றார்...  '

'ம்... '

'கல்கி எடுத்தது பொன்னியின் செல்வனான அருண்மொழியோட கதை... அதனால அவர் ஆதித்த கரிகாலன் பின்னே அதிகம் பயணிக்கலை... பாலகுமாரன் எடுத்தது தஞ்சைக் கோவில் கட்டும் கதை... இதுவும் இராஜராஜனான அருண்மொழியோட கதை என்பதால் ஆதித்த கரிகாலனோட இறப்பை மட்டுமே சில இடங்களில் சொல்றார்... ஆனா நரசிம்மர் ஆதித்த கரிகாலம் இறப்பின் மர்மத்தை உடைக்கிறேன்னு தமிழ் சினிமாவைவிட ரொம்ப மோசமா எழுதியிருக்கிறார்.... இது வரலாற்று உண்மைங்கிறதை ஏற்றுக்க முடியலை... என்னைப் பொறுத்தவரை வரலாறு இங்கே கொல்லப்பட்டுவிட்டது.'

'ம்... அப்புறம்...?'

'ஆதித்த கரிகாலனின் உற்ற தோழன் வந்தியத்தேவன் என கல்கியும்... சோழநாடு போனால் பிழைத்துக் கொள்ளலாம் என வந்தவன் என பாலகுமாரனும்... வீரபாண்டியனைக் கொல்ல உதவி செய்து ஆதித்தனுக்கு நண்பனாகி... சோழ தேசத்தை அழிக்க வந்தவன் என்று நரசிம்மனும் சொல்றாங்கப்பா... வந்தியத்தேவன் மிக நல்லவர் என்று படித்ததை எல்லாம் மாற்றி... வில்லனாக்கி... முடியலை... அதுவாவது பரவாயில்லை.. குந்தவையோடு காதல் கணவனாய் வாழ்ந்தவர்ன்னுதான் வரலாற்றுக் குறிப்பு.. ஆனா அவரு வல்லத்துல இன்னொரு திருமணம் பண்ணி அங்கு அதிகம் தங்கியதாகவும்... குந்தவையோடு திருமணத்துக்குப் பின் கூடல் இல்லை என்றும் சொல்லி.... ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா முடியல சாமி... இங்கும் வரலாறு படுத்துருச்சு...'

'வல்லவராயன் வந்தியத்தேவன் வில்லனாவும் குந்தவையை விடுத்து வேறு  ஒருத்தியை கட்டியவராகவும் நினைக்கத் தோணலை... மேல சொல்லு...'

'குந்தவை மிகச் சிறந்தவள்... அவள் என்ன சொல்கிறாளோ அதன்படியே இராஜராஜன் ஆட்சி செய்தான் என்றும் சொன்னதில் கல்கியும் பாலகுமாரனும் ஒத்துப் போனாங்க... ஆனா தமிழ் சினிமா மாதிரி குந்தவையை நல்லவள் போல் காட்டி மிகப்பெரிய வில்லி ஆக்கி.... அய்யோ என்ன கொடுமை இது ஆட்டை தூக்கி குட்டியில போட்டு குட்டியை தூக்கி ஆட்டுல போட்டு மிக மோசமாக சோழ வரலாற்றைக் கதையாக்கி குழப்பிட்டாரு மூன்றாமவர்...'

'அடேங்கப்பா... குந்தவை கொலைகாரியா...?'

'சொன்னா நம்பமாட்டே.... ஆதித்த கரிகாலனைக் கொன்னது குந்தவைதான்னு சொல்லியிருக்கிறார்.... அதுவும் தஞ்சையில கொன்னு சம்புவரையர் மாளிக்கைக்கு எடுத்துப் போனதை படிச்சேன்னு வச்சிக்க வடிவேலு மாதிரி உனக்குத் தேவையா... உனக்குத் தேவையான்னு நீயே கேட்டுப்பே...'

'ஹா..ஹா... ஒரு வழி ஆயிட்டேன்னு சொல்லு....'

'ஆமா...'

"அடுத்து உத்தம சோழன்ங்கிற மதுராந்தகன்... இளவரசர் ஆதித்த கரிகாலன் மறைவுக்குப் பின்... சக்கரவர்த்தி சுந்தரசோழர் நிலமை ரொம்ப மோசமாக, அவரின் அண்ணன் மகனான மதுராந்தகர் 15 வருடம் ஆண்ட பிறகே இராஜராஜர் ஆட்சி பீடத்தில் ஏறினார் என்பது வரலாறுன்னு நினைக்கிறேன் . கல்கி உண்மையான மதுராந்தகர் பூங்குழலியின் அத்தை மகனான சேந்தன் அமுதன் எனச் சொல்லி அவனை அருண்மொழியே பதவி ஏற்க வைத்தான் என்று சொல்வார்... பாலகுமாரன் மதுராந்தகனான உத்தம சோழன் அரசனாக வேண்டும் என அவன் அம்மா தில்லு முல்லு வேலைகள் செய்வதாகவும் இராஜராஜன் விட்டுக் கொடுத்து விலகிச் செல்வதாகவும் சொல்லியிருப்பார்... நரசிம்மரோ காணாமல் போன கண்டராதித்தன்... காணாமல் போன அவரின் மகன் மதுராந்தகன்...  என்றெல்லாம் சொல்லி... மதுராந்தகனை அரியணை ஏற்றுகிறார்... இதில் என்ன கூத்துன்னா மதுராந்தகரான  உத்தம சோழனை, சுந்தர சோழரின் மகன் என்றும் குந்தவையின் தம்பி என்றும் சொல்கிறார்... எது உண்மைன்னு நாம குழம்பி நிக்கிற மாதிரி ஆயிருச்சு...'

'ரொம்ப யோசிக்காதே... படிச்சதோட நிறுத்து...'

'ஹா.... ஹா... இன்னும் இருக்கு... அருண்மொழியோட இலங்கைப் படையெடுப்பை கல்கி அருமையாய் விவரித்திருப்பார்.... அருண்மொழி இலங்கையில் இருந்து திரும்பிய பின்னரே மதுராந்தகருக்கு பட்டாபிஷேகம்... பாலகுமாரனோ மதுராந்தகரை அரசராக்கிய பின்னர்  அருண்மொழியை இலங்கைக்கு போர் தொடுக்கச் செல்ல வேண்டும் என்று சொல்வதாக பட்டும்படாமலும் சொல்லியிருப்பார். நரசிம்மரோ இலங்கை கதையை தொட்டிருக்கமாட்டார்... காரணம் அவர் களம் ஆதித்த கரிகாலனின் கதை என்கிறார். ஆனால் இராஜராஜனுக்கு பட்டம் கட்டாமல் மதுராந்தகர்தான் பட்டத்துக்கு வரவேண்டும்... என்று சொல்லி அவரை அரசனாக்கி மற்றவரையெல்லாம் துரோகியாக்கியிருப்பார்.'

'ம்... அப்புறம்...?'

'அருண்மொழி.... மிகச் சிறந்த வீரன்... என்பதை மூவருமே ஒத்துக் கொண்டிருப்பார்கள்... அவன் சுந்தர சோழரின் மகன், ஆதித்த கரிகாலன் மற்றும் குந்தவையின் தம்பி என்பதை கல்கியும் பாலகுமாரனும் சொல்லியிருப்பார்கள்... தஞ்சை கல்வெட்டுக்களில் கூட 'யான் கொடுத்ததும் அக்கன் கொடுத்ததும்' என்று இராஜராஜன் பொரித்து வைத்திருப்பதாக பாலகுமாரன் சொல்லியிருப்பார். நரசிம்மன் அவர்களோ அருண்மொழி குந்தவையின் தம்பி என்று சொல்லி கதை நகர்த்தி இறுதியில் குந்தவையின் மகன் என்று சொல்வார்... ஏற்க முடியாத ஒன்று... அதற்கு அவர் சொல்லும் காரணங்கள்... சினிமாவை மிஞ்சும் கேலிக்கூத்து...'

'ஆட்டைக் கடிச்சி... மாட்டைக் கடிச்சி... கடைசியில் இராஜராஜனையே கடிச்சிட்டாரா...?'

'ஆமாம்... ஒரு தேசத்தை கட்டி ஆண்ட... நம் நாகரீகத்தை உலகம் அறியச் செய்த... மிகப்பெரிய கற்கோவிலைக் கட்டிய... மாவீரன் இராஜராஜன் சுந்தர சோழனின் மகன் என்பது வரலாறு.... நாம் வரலாற்றை வரலாறாய்ப் பார்ப்போம்... புதினங்கள் எல்லாமே ஆசியர்களின் கற்பனையே என்பதாய்ப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்துட்டேன்..'

'அதுதானே உண்மை... புதினங்கள் எல்லாம் கற்பனையே... அது சரி... அப்ப இனி சோழ சக்கரவர்த்தி இராஜராஜன் பற்றி வாசிக்க மாட்டியோ...?'

'வாசிப்பேன்... உண்மையான வரலாறு கிடைத்தால் வாசிப்பேன்... அது வரைக்கும் பொய்க்கதைகளுக்குள் புதைய மாட்டேன்...'

'ஓகே...'

'சரி... இந்த வாரம் தஞ்சை கோவிலுக்குப் போறேன் வாறியா...?'

'வரலாமே...'

'பாலகுமாரன் நாவலின் பிரமாண்டத்துக்காக கோவில் வேலைகளை ரொம்பவே கற்பனை கலந்து எழுதியிருந்தாலும் அந்த கற்கோவிலின் பிரமாண்டத்தை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்... எத்தனையோ முறை பேருந்தில் தஞ்சை பெரிய கோவிலைக் கடந்திருக்கிறேன்... பார்க்கணும்ன்னு தோணலை... உடையார் முடித்ததும்  பார்த்தே ஆகணும்ன்னு ஆசை வந்திருச்சு... இந்த வாரம் இராஜராஜன் பாத்துப் பாத்து கட்டிய கோவிலைப் பார்த்துட்டு வரலாம் சரியா..'

'ஓகே... இப்ப என்ன பண்றே...?'

'அதான் சொன்னேனே... கருணாகரப் பல்லவனோடு கடல் புறாவில் பயணிக்கிறேன்....'
-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சுதந்திரம்...

அனைவருக்கும் 
இனிய 
சுதந்திர தின வாழ்த்துக்கள்.


திரு. நேதாஜி அவர்களின் பேச்சு...





திரு. அண்ணாத்துரை அவர்களின் உரை....


பள்ளி மாணவ, மாணவியரின் சிறப்பான பேச்சு...








பாரதி படத்தில் இருந்து ' கேளடா மானிட ஜாதியில்...'



-'பரிவை' சே.குமார்.

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுதந்திரத் தியாகி மாவீரன் பாஷ்யம்


இந்திய சுதந்திர தினம் என்பது கொடியேற்றி இனிப்பு வழங்கும் நாள் என்றும் நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டிகளும் உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒரு சினிமாவுமாக கழியும் விடுமுறை நாள் என்றும் மட்டுமே இன்றைய சூழலில் வந்து செல்கிறது. இதற்குப் பின்னால் தியாகிகள் என்ற பட்டத்துடன் பிரபலமான சிலரும் பிரபலமாகாமல் சுதந்திரப் போராட்டத்தில் அடி வாங்கி... மிதி வாங்கி... சிறைப்பட்டு இன்றும் தியாகி பென்சன் கிடைக்காமல் அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வாங்கிக் கொடுத்த சுதந்திரம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது சுதந்திர நாடு எனக்கு எல்லாச் சுதந்திரமும் இருக்கு என்று வெற்றுப்பந்தா காட்டிக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரனுடன் வேலித் தகராறு, வெட்டிப் பேச்சு என கழிக்கிறோமே தவிர சுதந்திர தினத்தில் எத்தனை பேர் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை கொடுத்த மாவிரர்களாம் நம் முன்னோர்களை நினைக்கிறோம் சொல்லுங்கள்.

பாஷ்யம் என்கிற ஆர்யா - இவரும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்தான். 1932-ம் வருடம் தமிழக தலைமைச் செயலகமாக செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த 140 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, நமது தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர்.

1907-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள சேரங்குளம் என்னும் ஊரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த தேசபக்தர் ஏ.ரங்கசாமி அய்யங்காரின் உறவினர் ஆவார். மன்னார்குடியில் படித்துக் கொண்டிருந்த பாஷ்யம், தனது 11வது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் காரணத்தால் வெள்ளையர் மீது தணியாத கோபம் கொண்டு சுதந்திர போராட்ட கருவறைக்குள் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

திருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பாடப்புத்தகங்களை படித்தாரோ இல்லையோ தேசபக்தி நூல்களை அதிகம் படிக்கலானார், அவர் தேடிப் படித்த புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை லஜபதிராயின் 'துரதிஷ்ட இந்தியா', விவேகானந்தரின் சொற்பொழிவுகள், அரவிந்தர் வரலாறு, வ.வே.சு. அய்யர் வரலாறு, வீர சாவர்கரின் '2857- இந்திய சுதந்திரப் போர்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இங்கிலாந்திலிருந்து சைமன் குழு இந்தியா வந்தபோது காங்கிரஸ் மற்றும் இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் விடுத்த அழைப்பின் பேரில் நாடெங்கும் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போகச்சொல்லி போராட்டங்கள் வெடித்தன. சைமன் குழு திருச்சி வந்தபோது தேசியக் கல்லூரி மாணவர்கள் பாஷ்யம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டம் முடிந்து கல்லூரி திரும்பிய மாணவர்களுக்கு இரண்டு ரூபாய் அபராதமும் தலைமை தாங்கிய பாஷ்யத்துக்கு ஐந்து ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் பணம் கட்டியபோதும் பாஷ்யம் கட்ட மறுத்தார். பின்னர் கல்லூரி முதல்வர் திரு.சாரநாதன் அவருக்கான ஐந்து ரூபாய் அபராதத் தொகையை கட்டியதால் அது தனது தேசபக்திக்கு இழுக்கு என்று கல்லூரியை விட்டு வெளியேறினார்.

தேசிய விடுதலையே தனது உயிர் மூச்சு என தீவிரம் காட்டிய பாஷ்யம், அய்யலூர் ரயில் நிலையம் அருகில் இருக்கும் பஞ்சந்தாங்கிப் பள்ளத்தாக்கில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். இதற்காக மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பரான திரு. முத்துக் குமாரசாமிப் பிள்ளையின் தொடர்பின் மூலம் துப்பாக்கிகள் வாங்கிக் கொண்டார். 'யுனிவர்சிட்டி டிரைனிங் கோர்' படையினால நடத்தப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் பின் தனது நண்பர்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். புதுவை விடுதலை வீரர் திரு வ. சுப்பையா அவர்களை சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். காளி படத்துன் முன் ரத்தக் கையெழுத்து இட்டு உறுதிமொழி எடுத்து புரட்சி அமைப்புகளுடன் இணைந்தார். 

நாட்டு விடுதலைக்காக எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்போடு இருந்த பாஷ்யம், சிதம்பரத்தில் நடராஜர் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த கவர்னர் மார்ஷ் பாங்ஸ் என்பவரை சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட முயன்று முடியாமல் போனதை தனது நண்பரான தஞ்சை கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி வருந்திய போது அவரை இது போன்ற காரியத்தில் இனி ஈடுபடாதே என்று கடிந்து கொண்டதுடன் மகாத்மாவை பின்பற்றும்படி அறிவுரை கூறினார்.

விடுதலைப் போராட்டத்துக்கு பணம் தேவைப்பட்டதால் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மதுரை இம்பீரியல் வங்கியில் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டார். நண்பர்கள் அவசரப்பட்டு செயலில் இறங்கி மாட்டிக் கொண்டனர். போலீஸாரின் சித்திரவதை தாங்கமுடியாமல் பாஷ்யத்தை காட்டிக் கொடுத்ததால் கைது செய்து இரண்டு மாதம் சித்திரவதை செய்து ஆதாரம் இல்லையென விடுதலை செய்யப்பட்ட போதிலும் சதிகாரக் கேடி என்ற பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது.

சென்னையில் தனது சகோதரர் வீட்டில் தங்கி இருந்த போது போலீஸ் கண்காணிப்பையும் மீறி கதர் ஆடை அணிந்து அந்நியத்துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தபடி கதர் துணிகளை விற்பனை செய்தார். இதனால் கோபம் கொண்ட கடைக்காரர்கள் வெற்றிலை எச்சிலை இவர் மீது துப்பினர். மேலும் சிகரெட் துண்டுகளை நெருப்புடன் வீசினர். இதேபோல் ஐஸ்ஹவுஸ் பகுதியில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட போது கள்ளுக்கடைக்காரர் இவர் மீது கள்ளுப் பானையைப் போட்டு உடைத்தார். 

சென்னை வந்த இந்துஸ்தான் சேவாதளத் தலைவர் டாக்டர் ஹார்டிகார் தனது சேவாதளத் தொண்டராக சேர்த்துக் கொண்டார். தனது தொண்டர்களுக்கு பகல்கோட் என்ற இடத்தில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அப்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளால் அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்டன எனவே தனது சேவாதளத்தை கலைத்த ஹார்டிகார் தொண்டர்களை போராட்டத்தை தொடரும்படி கூறி அவர் அவர் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

ஜனவரி 26ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திரதினமாக கொண்டாடும்படி பண்டித நேரு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை தனக்காக விடுத்த அழைப்பாக எண்ணி தானே ஜனவரி 25 மாலை 7 மணியளவில் பெரிய தேசியக் கொடியொன்றை தயாரித்து அதன் நடுவில் மையினால் ராட்டை வரைந்து அதன் கீழ் இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது என்று எழுதி எடுத்துக் கொண்டு சுப்பிரமணிய சிவாவின் மருமகனும் தனது நண்பருமான வேணுகோபாலை அழைத்துக் கொண்டு சினிமா பார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு காவலர் உடையில் கோட்டையின் தென்புற வாயில் வழியாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரமும் 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார், கலங்கரை விளக்க ஒளிபடும் நேரத்தில் தன்னை கம்பத்தில் மறைத்துக் கொண்டு ஏறி யூனியன் ஜாஜ் என்ற ஆங்கிலேயரின் கொடியை இறக்கிவிட்டு தான் மறைத்துக் கொண்டு வந்த இந்திய தேசியக் கொடியை ஏறிவிட்டு தப்பியோடிவிட்டார். காலையில் பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடியை பார்த்த ராணுவத்தினர் பதட்டமடைந்து கவர்னருக்கு செய்தி அனுப்பினர். இதனைச் செய்தவரை கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அரசாங்க ஆவணங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் காற்றை சுவாசிக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்த பாஷ்யம், 1942ல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கிய போது துப்பாக்கிகளை கடத்துதல், தண்டவாளங்களை தகர்த்தல், பாலங்களை வெடி வைத்து தகர்த்தல் என எல்லாக் காரியங்களிலும் ஈடுபட்டார். மேலும் அவர் கம்யூனிஸ்டுகளாக இருந்த அமீர் ஹைதர்கான், சி.எஸ்.சுப்பிரமணியன், புதுவை சுப்பையா ஆகியோரோடு தொடர்பு வைத்திருந்தார்.

சிறந்த ஓவியரான பாஷ்யம் அரசியல் கருத்துப் படங்கள், கதைகளுக்கான சித்திரங்கள், புத்தகங்களுக்கான முகப்புப் படங்கள் என பல்வகை ஓவியங்களை ஆர்யா என்ற புனைப் பெயரில் வரைந்து வந்தார். இவர் வரைந்த மகாகவி பாரதியின் படம் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் வளைய வருகிறது. 1945ல் முழு நேர ஓவியரான  பாஷ்யம். "யுனைடெட் ஆர்ட்ஸ்" என்னும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். காந்தி, நேதாஜி ஆகியோருடைய படங்களையும் இவர் வரைந்திருக்கிறார். காந்தியின் உருவச்சிலையையும் இவர் வடித்துள்ளார்.
 
தனது வாழ்நாள் முழுவதையும் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அர்ப்பணித்த பாஷ்யம் போன்ற எத்தனையோ தியாகிகளின் தேசியப் பற்றுத்தான் இன்று நம்மை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்துள்ளது. தியாகிகளை நினைவில் நிறுத்தி சுதந்திரத் திருநாளை சிறப்பாய் கொண்டாடுவோம்.


குண்டு துளைக்காத காரில் வந்து 
குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று
சுதந்திரக் கொடியை சுதந்திரமில்லாமல்
ஏற்றும் தலைவர்களும்...
குடிக்க கஞ்சியும் உடுக்கத் துணியும் இன்றி
சுதந்திரமாக வாழும் மக்களும்

நிறைந்த எங்கள் சுதந்திர இந்தியாவின்
கடைக்கோடி இந்தியனுக்கும்
என் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். 

ஜெய் ஹிந்த்..!

திரு.பாஷ்யம் குறித்த செய்திகளை படிக்க உதவிய தமிழ் விக்கிபீடியா மற்றும் சில தளங்களுக்கு நன்றி.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

நேதாஜி... எங்கள் நேதாஜி...


சுதந்திர வேள்வியில்
காந்திக்கு அப்பாற்பட்டு
மக்களுக்குள் மலர்ந்த மாணிக்கமே..!

பெருங்'குடி'யில் பிறந்ததால்
மக்களைப் பிள்ளைகளாய்
அரவணைத்துச் சென்றாயோ...?

இந்திய தேசிய ராணுவத்தை
பிறப்பித்த பெருமை உனக்கு...
உன்னில் கலந்து உயிர் நீத்த
பெருமை எம் மறவர்களுக்கு..!

வங்கம் தந்த சிங்கம்
என்பவர்கள் அறியவில்லை
நீ பாரதம் பெற்ற பகலவன் என்பதை..!

இந்தியாவில் பிறந்து... தைவானில் இறந்து...
இன்னும் வாழ்கிறாய்... ஜப்பானில் அஸ்தியாய்..!

ஊழல்கள் மலிந்துவிட்ட நாட்டில்
உத்தமன் உன் அஸ்திக்கு இடமில்லை...

பாரதி இறப்புக்கு பத்துக்கு மேல்...
உன் அஸ்தி கண்டதோ பத்துக்கு கீழ்...

உலகம் சுற்றும் தலைவர்களுக்கு
உன் அஸ்தி காண என்ன அசதியோ...?

இருந்தும் வாழ்கிறாய்
எங்கள் இதய சிம்மாசனத்தில்...
தியாகச் சுடராய் மட்டுமல்ல
தீச்சுடராகவும்...!




(நேதாஜி. சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினமான இன்று ( பிறந்த தேதி : சனவரி-23, 1897) அவர் குறித்து பதிவிடும்படி நண்பர் தமிழ்க்காதலன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சுதந்திர தியாகி நேதாஜிக்கு இந்த கவிதை போன்ற சில வரிகள் சமர்ப்பணம். - நமக்காக உயிர்நீத்த தியாகச் சுடரை மனதில் நிறுத்துவோம்)

-'பரிவை'. சே.குமார்.

செவ்வாய், 4 ஜனவரி, 2011

வரி கொடுக்கா மறவன்



கட்டப்பொம்மன் என்றால் நமக்கெல்லாம் நடிகர் திலகம் சிவாஜியைத்தான் ஞாபகத்தில் வரும். உண்மையான கட்டப்பொம்மனை பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகத்தில் எதாவது ஒரு பக்கத்தில் அரைப்பக்க விளக்கத்தில் மட்டுமே படித்திருப்போம். அவர் எப்படியிருப்பார் என்று யாரையாவது கேட்டால் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படம் பார்த்தியா அதுல வார சிவாஜி மாதிரி இருப்பார் என்று சொல்லுபவர்களும் உண்டு.

வெள்ளையர்கள் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரி கொடுக்க மறுத்த குறுநில மன்னன். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மறத்தமிழன். மருதிருவர் அமைத்த வெள்ளையர் எதிர்ப்பு குழுவில் முக்கியப் பங்காற்றியவன். தாய் நாட்டுக்காகவும் தம் மக்களுக்காகவும் தூக்குக்கயிரை முத்தமிட்ட வேங்கை... இப்படி கட்டப்பொம்மன் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம்.

தெலுங்கு வம்சாவழியான கெட்டிப்பொம்மு நாயக்க வம்சாவழி மன்னரான ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக இருந்தார். இவரது பெயர் மருவி கெட்டிப் பொம்மு என்பது கட்டப் பொம்மு என்று மாறியது. நாளடைவில் பொம்மு பொம்மன் ஆனது.

இன்று நாம் யாதவ், தேவர், நாயக்கர், கவுண்டர், என்று பெயருக்குப் பின்னால் ஜாதியை இணைப்பதுபோல் அதன்பின் அந்த வம்சத்தில் வந்தவர்கள் எல்லாருடைய பெயருக்குப் பின்னாலும் கட்டப்பொம்மன் இணைந்தே வந்தது. அந்த வகையில் திக்குவிஜய கட்டப்பொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியினருக்கு 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்தவர்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு.

தனது 30வது வயதில் அதாவது 1790ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கட்டப்பொம்மன் 9 வருடங்களுக்கு மேல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். இவரது மனைவி வீரசக்கம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

ஆர்க்காடு நவாப் வாங்கிய கடனுக்காக வெள்ளையரிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட, அந்த தருணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வெள்ளையர்க்ள வரி வசூலிக்கும் அதிகாரத்தை நவாப்பிடம் இருந்து பறித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல மக்களிடம் வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். மக்களிடம் வரி வசூலித்துக் கொடுக்காத பாளையக்காரர்கள் துன்புறுத்தப்பட்டனர். கட்டப்பொம்மன் ஆட்சிக்கு வரும் வரை இந்த நிலை தொடர்ந்தது. மக்களிடம் ஒற்றுமையின்மை இருந்தால்தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று நினைத்த வெள்ளையர்கள் தங்களுக்கே உரிய சில சதி வேலைகளை மேற்கொண்டு பயனும் அடைந்தனர்.

இப்படி பிரச்சினைகள் நிறைந்த கால கட்டத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கட்டப்பொம்மன் வரி வசூலித்துக் கொடுப்பதை நிறுத்தினார். எவ்வளவோ முயன்றும் அவரை அவரது நிலையில் இருந்து வெள்ளையர்களால் மாற்ற முடியவில்லை. எனவே வஞ்சகமாக அவரை மடக்க திட்டமிட்டனர். நாம் சமாதானமாக போகலாம் அதற்காக ஒரிடத்தில் கூடி பேசலாம் என கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினர். ராமநாதபுரத்தில் சேதுபதி ராஜா அரண்மனையில் நிகழ்ந்த அந்த சந்திப்பில் வெள்ளையர்கள் சார்பாக பேச வந்தவர்தான் ஜாக்சன் துரை. அங்கு நடந்த பிரச்சினையில் பாஞ்சாலங்குறிச்சிக்காக இன்னுயிரை ஈந்தவரும் கட்டப்பொம்மனின் நம்பிக்கைக்கு உரியவருமான மந்திரி தானாதிபிள்ளை கைது செய்யப்பட கட்டப்பொம்மன் தப்பிவந்தார்.

அதன்பின்னான நாட்களில் ஜாக்சன் பதிவி நீக்கம் செய்யப்பட்டார். திருநெல்வேலி ஆட்சியர் ஏன் வரி கொடுக்கவில்லை என காரணம் கேட்டு கட்டப்பொம்மனுக்கு கடிதம் எழுத... வரிக்காக வைத்திருந்த பணம், தானியம் எல்லாம் கொள்ளை போய்விட்டது. அதனால் வரி கட்ட முடியவில்லை என்று பதில் அனுப்பினார். இந்தப் பதில் வெள்ளையர்களை மேலும் வெறியேற்றியது. எனவே கட்டப்பொம்மனை நாட்டின் பொது எதிரி என்று அறிவித்தனர்.

இதன்பின் வெள்ளையர்களின் காலை நக்கும் நாயாக மாறிய எட்டப்பனை வைத்து கட்டப்பொம்மனின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டனர். சரியான சமயம் பார்த்து இராணுவத் தளபதி பாணர்மேன் உருவாக்கிய திட்டத்தின்படி கர்னல் கொலினிஸ் என்பவர் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். கட்டப்பொம்மனின் வீரர்கள் திருப்பி தாக்கிய தாக்குதலை கண்டு வெள்ளையர்கள் ஆடிப்போய்விட்டனர். அதனால் பின்வாங்கிய வெள்ளையர்படை மேலும் ஆயுதங்கள் வேண்டும் என மேலிடத்தில் முறையிட்டது. இந்த சமயத்தை பயன்படுத்தி கட்டப்பொம்மன் தப்பிச் சென்றார். அவர் தப்பியதை அறிந்த வெள்ளையர்கள அவர் தலைக்கு விலை வைத்தனர்.

அதன்பின் புதுக்கோட்டை ராஜாவிடம் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்த கட்டப்பொம்மன், ஒரு கட்டத்தில் வெள்ளையரின் சூழ்ச்சியால் சரணடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

1799 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி வெள்ளையர்களால் கைது செய்யப்பட்ட கட்டப்பொம்மன் மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தூக்கிலடப்பட்டார்.

முப்பது வயதில் ஆட்சிப்பொறுப்பேற்று வெள்ளையனை எதிர்த்துப் போராடி 39வது வயதில் மக்களுக்காக இன்னுயிரை ஈந்த வீர மறவனை போற்றுவோம்.

கட்டப்பொம்மன் நினைவாக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் கயத்தாறில் இருக்கும் அவரது சிலையும் அவரின் வீரத்தை மக்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

நடிகர்கள், அரசியல்வாதிகளின் பிறந்த தினங்களை நினைவில் நிறுத்திக் கொண்டாடும் நாம் நமக்காக வாழ்ந்து தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களின் பிறந்த தினங்களை நினைவிலாவது கொள்ளலாமே...

இன்று பிறந்தநாள் காணும் பாஞ்சாலங்குறிச்சி சிங்கம், மக்களுக்காக உயிரை கொடுத்த மறவன், வெள்ளையனை பீதிக்கு ஆளாக்கிய வேங்கை வீரபாண்டிய கட்டப் பொம்மனை நினைவில் நிறுத்துவோம்.

கட்டப்பொம்மன் அவர்களுக்கு கவிஞர். 'இதயச்சாரல்' தமிழ்க்காதலன் அவர்களின் கவிதையான............ 'விடுதலை தமிழன்'

கட்டப்பொம்மன் அவர்களுக்கு கவிஞர். 'கலியுகம்' தினேஷ்குமார் அவர்களின் கவிதையான...... 'விண்ணிறங்கி வாராயோ'.

கட்டப்பொம்மன் குறித்து வேறு நண்பர்கள் பதிவிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை நான் படித்த கவிதைகளை உங்களுக்காக இணைப்புக் கொடுத்துள்ளேன்.

கட்டப்பொம்மன் படத்தை கூகிளில் தேடியபோது சரத்குமாரும், சிவாஜியும்தான் வந்தார்கள் என்பது வருத்தமான விசயம்.

-'பரிவை'. சே.குமார்.