மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

பாடல்கள் தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாடல்கள் தொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 நவம்பர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் : 5

முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் வாசிக்க... 1   2   3  4

ன்னைக் கவர்ந்த பாடல்கள் எழுதி ரொம்ப நாளாச்சு... சில விழாக்கள்... சில புத்தகங்கள் என எழுதியதால் பாடல்கள் குறித்தான தொடரைத் தொடர முடியாமல் போனது. கடவுள் வணக்கம் எல்லாம் முடித்து விட்டோமல்லவா... அடுத்தது... சினிமாதானே என்றால் இல்லை... அதற்கு முன் எல்லாரையும் ஆட வைக்கும் மண்ணின் இசையான நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

பாடல்களுக்குள் போகும்முன் நம் இசையுடன்...


நாட்டுப்புறப் பாடலோ அல்லது இசையோ ஆடாதவரையும் ஆட வைக்கும் தன்மை கொண்டவை... அது திருவிழாவுக்கு என்றாலும் திரும்பாத விழாவுக்கு என்றாலும் இசையில் மாற்றமிருக்குமே ஒழிய ஆட்டம் போட வைப்பதில் இருந்து எப்போதும் மாறாது... 'தாயே கருமாரி...' என வாசித்து அடிக்கும் போதும் ஆடுவோம்.... 'மக்க கலங்குதப்பா...'ன்னு சாவு வீட்டில் வாசித்து அடிக்கும் போதும் ஆடுவோம். நாட்டுப்புற இசை எப்போதும் ஆட்டம் கொடுக்கும் இசைதான்.

அப்படியே பறவை முனியம்மாவின் குரலில் கிராமியப் பாடலைக் கேட்கலாமே...


உருமியும் மேளமும் நாகஸ்வரமும் பம்பையும் தப்பும் கொடுக்கும் இசைக்கு ஈடு வேறு எதிலும் இல்லை. இன்னும் கிராமியப் பாடல்களை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுபவை இந்த இசைக் கருவிகள்தான். கரகாட்டம் ஆடுபவர்கள் எப்படி வேண்டுமானாலும் ஆடட்டும்... ஆனால் கரகாட்டம் ஆரம்பிக்கும் முன் பத்து நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை இசைக் கலைஞர்களின் வாசிப்பு கூட்டத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு வரும்... அப்படி ஒரு ஆர்ப்பரிக்கும் இசையாய் அது அமையும். அதேபோல்தான் கூத்துக்களில் பின்பாட்டுக் குழுவின் இசை, பின்பாட்டுப் பாடுபவர் பாடலைக் கொலையாக் கொண்டாலும் அந்த டோலக், மிருதங்கம் என எல்லாமே அடித்து ஆடும்.


பெரும்பாலும் கிராமியப் பாடல்கள் யாரோ எழுதியதாய் இருக்கும்... கிராமியப்பாடல் பாடும் எல்லாருமே ஒரே பாடலைப் பாடுவார்கள் என்றாலும் ஒரு சில பாடல் இவர் பாடினால்தான் நல்லாயிருக்கும் என்ற பிம்பத்தை உண்டாக்கிவிடும்... அதை மற்றொருவர் பாடும் போது அது பல நேரங்களில் ஓட்டுவதில்லை. தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய 'அங்கே இடி முழங்குது' பாடலை பலர் பல மேடைகளில் பாடினாலும் திருவிழாக்களில் தேக்கம்பட்டியாரின் குரலில் பெரிய பெரிய ஸ்பீக்கர்களில் அங்கே இடி முழங்குது எனப் பாடும் போது பலருக்குள் கருப்பன் பாய்ந்தோடி இறங்கி நிற்பான்.

விஜயலெட்சுமி நவநீத கிருஷ்ணனின் பாடல்கள் ஆட்டம் போட வைக்கக் கூடியவை... அதுவும் மெதுவாக ஆரம்பித்து... மெல்ல வேகமெடுத்து.... வேகமாய் முடியும் பாடல்கள் நிறையப் பாடுவார். சினிமாவில் இவர் பாடிய 'தோசைக்கடை ஓரத்துல தோசை ஒண்ணாங்க...' பட்டிதொட்டியெல்லாம் ஒலித்த பாடல் என்றால் இவருக்கு என தனி மதிப்பைக் கொடுத்த பாடல் என்றால் அது...
ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஒர ஒரமா
பத்திரக்காளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்
முன்னோரையன பேச்சியத்தல மாரியம்மல
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாபண்ணைக்கு அழகு பூபூத்து
ஆத்தா வராலாம் பூஞ்சோலைக்கு...

இன்னும் அழகான அருமையான பாடல்களை எல்லாம் பாடினார் டாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பார்க்கும் போது கணவன் மனைவி இருவருமே தள்ளாத வயதில் இருப்பது போல் எழுந்து நிற்பதில் கூட சிரமப்பட்டதைக் காண முடிந்தது. இன்று அவர்களின் பாடல்களைப் பலர் பல மேடைகளில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும் இவர்களின் குரலுக்கு இருக்கும் ஈர்ப்புத் தனிதான்.

அடுத்து 'ராஜாத்தி உன்னையெண்ணி' பாடலை பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்க விட்ட புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி இணை... இந்தாளு எந்த ஒரு பாடல் என்றாலும் அதை ரசிக்கும்படி பாடக்கூடிய திறமை மிக்கவர். எத்தனை எத்தனை பாடல்களைப் பாடியிருக்கிறார்கள் இந்த இணை.
மஞ்ச செவ்வந்திப் பூவாம்
மன்னார்குடி பூத்த பூவாம்
மன்னார்குடிக்குப் போயி வந்தேன்
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன்.


இவர்களைப் போலவே தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், பறவை முனியம்மா, சிங்கம்புணரி தங்கராசு, கோட்டைச்சாமி ஆறுமுகம் இப்படி நிறையப் பேர் கிராமியப் பாடல்களில் ஒரு காலத்தில் கோலோச்சியிருந்தார்கள். இவர்களுக்குப் பின்னே வந்த புதியவர்கள் எல்லாம் மெல்ல சினிமாவுக்குள் நுழைய ஆரம்பித்து விட்டார்கள்.

அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் 'நாக்க முக்க...' பாடிய சின்னப்பொண்ணு. இப்ப பெரும்பாலான செல்போன்களில் 'கண்ணான கண்ணே...' ரிங்டோனாக இருப்பது போல் சில வருடங்களுக்கு முன் எந்தப் போன் அடித்தாலும் 'மரிக்கொழுந்தே... மல்லிகைப்பூவே...'தான். அந்தளவு அவரின் இந்தப் பாடல் மக்களின் மனங்களில் இடம் பிடித்திருந்தது.

இவரின் பாடல்கள் எல்லாமே கேட்கப் பிடிக்கும் என்றாலும் மகள் அம்மாவுக்கு எழுதும் கடிதம் போன்ற வரிகளை சின்னுப்பொண்ணு பாடும் போது அந்த வரிகளை உணர முடியும்.

ஏதோ நானும் இருக்கிறன்,
உருபிடியா படிக்கிறன்.....
யாரும் இல்ல நமக்கு,
நீ எப்படி இருபன்னு நினைக்கிறன் ..
யாரும் இல்ல நமக்கு,
நீ எப்படி இருபன்னு நினைக்கிறன் ..
அன்பு உள்ளம் கொண்ட அம்மாவுக்கு,
மகள் எழுதும் கடிதம்...


ஆந்தகுடி இளையராஜாவின் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும்... அவரின் பாடல்களில் என்னை ரொம்பக் கவர்ந்த பாடல் 'அத்தமக உன்னை நினச்சி...' இதில் வரிகள் எல்லாம் நல்லாயிருக்கும்... இந்தப் பாடல்கள் எல்லாம் ஆல்பத்தில் இருப்பதால் ஆல்பத்துக்கான இசையிருக்கும். இதே பாடலை மேடையில் பாடும்போது கிராமிய இசைகளுடன் கேட்பதற்கு அருமையாக இருக்கும்.

அத்தமக உன்னை நினைச்சு
அழகு கவிதை ஒண்ணு வடிச்சேன்...
அத்தனையும் மற ந்துபுட்டேன்
அடியே உன்னைப் பார்த்ததுமே...


எங்க ஊர் பக்கம் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி என்றால் அது சேவியர்தான்... இவரிடம் இருந்துதான் இளையராஜாவெல்லாம் வெளியில் வந்திருக்கிறார். இவர் குழுவில் இளையராஜா பாடிக் கேட்டிருக்கிறேன். அருமையான ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவார்.


முத்துச்சிற்பி சிம்மக்குரலோன் என வள்ளிதிருமண நாடகத்தில் பெயர் எடுத்திருப்பவர்... எல்லாப் பாடல்களையும் அருமையாகப் பாடக்கூடியவர். இவரின் முதல் ஆல்பத்தில் ஒரு பாடல்... என்னை ரொம்பவே கவர்ந்த பாடல்... அது குறித்து தனிப்பதிவே எழுதினேன்.

பொறுபுள்ள பூவழகி...
சத்தநேரம் பேசிக்கிறேன்...
பொழுதும் போகவில்லை...
உன்னைத்தான் யோசிக்கிறேன்...


இயக்குநர் செல்ல. தங்கையாவின் இசைக்குழுவில் நல்ல நல்ல பாடல்களாய் பாடியிருக்கிறார்கள்... அதில் அபிராமி பாடியிருக்கும் 'ஏரி நன்னாக்கு' பாடல் அழகு... அதைப் பாடியிருக்கும் அபிராமியின் அபிநயங்களும் அழகு. இந்தப் பாடலைப் பலர் பாடியிருந்தாலும் ஏனோ அபிராமியின் குரலுக்குத்தான் அப்படியே பொருந்தி வருகிறது... எங்க தேவகோட்டைப் பக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் சொல்லவில்லை... இளையராஜா, முத்துச் சிற்பி என எல்லாருமே நம்ம பக்கத்து ஊராளுகதான்.

 ஏரி நன்னாங்கு ஏரிதான்டா மாமா..
எலந்தப்பழ தோப்புத்தான்டா...
ஏறி நல்லா உலுப்பட்டுமா மாமா..
பழத்தை நல்லாப் பறிக்கட்டுமா...


கிராமியப் பாடல்களில் மிகவும் பிரசித்திபெற்ற பாடல்கள் என்றால் 'சட்டி முட்டி கழுவவில்லை... சமையல் வேலை பார்க்கவில்லை...' என்ற பாடல்தான் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் பாடலாய்... இதை கரகாட்டத்தில் அதிகம் பாடுவார்கள். இதே பாடலின் மெட்டில் நிறையப் பாடல்கள் வந்தாச்சு... அதேபோல் 'சின்னஞ் சிறுசெல்லாம் சிகரெட்டு குடிக்குது... சித்தப்பன்மாருக்கிட்ட சிகரெட்டுக் கேக்குது'ன்னு நாடு சும்மா கிடந்தாலும் கிடக்கும் என எத்தனையோ பேர் பாடியிருந்தாலும் பறவை முனியம்மாவின் குரல்தான் நமக்கு ஞாபகத்தில் வரும்.

கிராமியப் பாடல்கள் பாடும் பெண்கள் வரிசையில் மாரியம்மாளும் குறிப்பிடத்தக்கவராய் இருக்கிறார். இவரின் பாடல்களும் கேட்டுத்தாளம் போட வைக்கும்... அவரின் பாடலில் ஒன்று... ரசிக்க.


இன்றைய நாட்டுப்புறப் பாடகர்கள் எல்லாருமே முன்னத்தி ஏர்கள் பாடி வைத்ததைத்தான் மேடையில் பாடுகிறார்கள்... இவர்கள் எழுதி இசையமைத்துப் பாடுவதென்பது எப்போதேனும் நிகழலாம்... எப்போதும் இவர்களுக்குப் பாடல் எழுத ஒருவர் இருக்கிறார்... அல்லது முன்னே எழுதி வைத்து விட்டுச் சென்ற பாடல்களை எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். பறவை முனியம்மா பாடிய பல பாடல்கள் கோனார் என்பவர் எழுதியவையே... இன்றைய இளைஞர்களுக்கு பாடல் எழுத பலர் இருக்கிறார்கள்.

நல்ல நல்ல வரிகளுடன் பாடல்கள் வருவது இனிமைதான்... நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை ஒரு சிலரே செய்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்களின்  பார்வை எல்லாம் சினிமாப் பக்கமே இருக்கிறது. இவர்களின் குரல் வளத்துக்கான பாடல்கள் சில அமைவதுடன் அடுத்தகட்ட நகர்வுக்கான திட்டமிடல் சரியாக இல்லாமல் போகிறதா... அல்லது கிராமத்துப் பாடல் பாடுறவன் என்ற மனநிலை கொண்டவர்களால் வாய்ப்புக்கள் கிடைக்காமல் போகிறதா என்று தெரியாமலேயே காணாமல் போய் விடுகிறார்கள்... ஒரு சிலரைத் தவிர பலர் நிலை இதுதான்.

எல்லாரையும் சொல்லிட்டு நம்ம பக்கத்து கொல்லங்குடி கருப்பாயி பாட்டுப் போடலைன்னா எப்படி... அதனால போட்டுடுவோம்.


இப்ப நிறைய இளைஞர்கள் ஆந்தகுடி இளையராஜா, மதுரை சந்திரன். கொல்லங்குடி கருப்பாயி பேரன், நாரதர் முத்துச்சிற்பி, செந்தில்கணேஷ் இப்படி நிறையப் பேர் வந்தாச்சு... குரல் வளம் இருக்கு இவர்களிடம்... கவுண்டமணி, செந்திலுக்கு நகைச்சுவை எழுதிக் கொடுத்தவரைப் போல இவர்களுக்குப் பாடல் எழுத ஒருவர் இருக்கிறார்.... அந்தப் பாடல்களைப் பாடி ஆல்பம் வெளியிடுகிறார்கள்... வெளிநாடுகளுக்குப் போகிறார்கள்... இவர்களின் வளர்ச்சியை விஜய் டிவி சூப்பர் சிங்கர் மேடைக்கும். கலக்கப்போவது யாரு மேடைக்கும் பயன்படுத்தி, இவர்களையே வெற்றியாளர்களாகவும் ஆக்கித் தன் வருமானத்தையும் டிஆர்பியையும் பெருக்கிக் கொள்கிறது. இவர்களும் சினிமா என்னும் கனவுலகுக்குள் போகவே இந்த முயற்சிகளில் இறங்குகிறார்கள்.

மதுரை சந்திரனின் குரலில்...

மங்கம்மா சாலை மலைமேல
மதுரைக்குப் போறேன் வழி மேல...


அப்படியே இதையும் கேளுங்க... உங்களுக்குப் பிடிக்கும்.


இந்தப் பதிவு துள்ளலுடன் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்... ஒண்ணு சொல்ல மறந்துட்டேனே... எங்க மண்ணுக்கும் நாட்டுப்புற இசைக்கும் அதிகப் பிணைப்பு உண்டு... இப்ப வந்திருக்கும் பலர் தேவகோட்டை, காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள்தான்... சரி சரி... பெருமை பேசலை... விடுங்க... வுடுங்க... வுடுங்க....

அடுத்த பதிவு முதல் சினிமா பாடல்களுடன்...

பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

வியாழன், 24 அக்டோபர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் - 4

முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் வாசிக்க... 1   2   3

சென்ற பதிவில் ஸ்ரீராம் அண்ணன் தனது கருத்தில் 'பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்' பாடலும் ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். உண்மைதான்... பாடலின் வரிகள் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். எனக்கும் ரொம்பப் பிடித்தமான பாடல் அது. அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்...

'அவனை நாடு அவன் புகழ் பாடு
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்
இருப்பது காடு வணங்குது நாடு
அவனைக் காண தேவை பண்பாடு
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்பா சரணம் ஐயப்பா!'


சின்ன வயது முதல் முருகன் மீதுதான் காதல்... அது ஏன்னு எல்லாம் தெரியாது... ஆனாலும் அவர் மீது தீராத தொடரும் பக்தி இப்ப வரைக்கும்... அப்பா முருகா என்ற வார்த்தை உட்காரும் போது, எழும் போது, தும்மல் வரும் போது என எதைச் செய்தாலும் அப்பா முருகா என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. 

படிக்கும் போதெல்லாம்... படிக்கும் போதென்ன இப்போதும் சில நேரங்களில் 'அப்பா... முருகா... என்னை மட்டும் காப்பாற்று...' என்று சொல்வேன். அதென்ன உன்னை மட்டும்ன்னு பக்கத்தில் இருப்பவர்கள் கேட்டால் 'என்னை மட்டும் என்றால்... நான் ஒரு பத்துப் பேருக்கு உதவுவேன்... பத்துப் பேர் நூறு பேருக்கு உதவுவான்... நூறு ஆயிரமாகும்... ஆயிரம் லட்சமாகும்... இப்படியே உதவிகள் போய்க் கொண்டே இருக்கும்... முருகா எல்லாரையும் காப்பாத்துன்னு சொன்னா அவர் எப்படிக் காப்பாற்றுவார்' என்றதும் போதும்ப்பா உன்னோட நல்ல எண்ணம் என எழுந்து போய்விடுவார்கள்.

எங்க பக்கம் பழனிக்கு அதிகம் பேர் நடந்து போவாங்க.... தேவகோட்டை நகரத்தார் காவடிக்கு பழனியில் தனி மரியாதை உண்டு. கூட்டம் கூட்டமாய் பழனிக்கு நடந்து போகும் போது சபரிமலைக்குச் செல்வோர் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. கார்த்திகை மாதம் காவி வேட்டியைப் பார்ப்பதைவிட கருப்பு வேட்டி அதிகமானது. அப்போதும் நமக்கு முருகன்தான்... மார்கழி மாதம் அதிகாலையில் யாரேனும் ஐயப்பன் பாட்டுக் கேசெட் போட்டால் ஓடிப்போய் முருகன் பாடலை மாற்றி விட்டுட்டு வருமளவுக்கு முருகன் வெறியன் நான்.

பழனிக்கு ஆறு வருடம் நடைப் பயணம்... ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு அனுபவம்... அதையெல்லாம் தனிப்பதிவாக எழுதலாம். மறக்க முடியாத நடைப்பயணம் அது.... மீண்டும் ஒரு முறையேனும் நடந்து செல்ல வேண்டும் என்ற ஆவல் இப்போதும் மனசுக்குள்... நடக்கும் என்று நம்புகிறேன்.

முருகன் பிரியத்தில் இருந்த போதும் கல்லூரியில் வேலை பார்க்கும் போது சபரிமலைக்குப் போகலாம் என எங்கள் இயற்பியல்துறை பேராசிரியர் எம்.எஸ். அழைத்ததும் நானும் முருகனும் முதல்முறை சபரிமலைக்கு மாலை போட்டோம்... முதல் பயணம் ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. 

மழை பெய்து கொண்டிருக்கும் போது பம்பையில் குளித்தது... 

லேசான தூறல் இருக்கும் போதே மலையேற ஆரம்பித்தது... 

ஒரு சில இடங்களில் மேலிருந்து கீழ் நோக்கிப் பயணித்த தண்ணியால் மலைப்பாதை வழுக்கிய போதும் பாதுகாப்பாய் நடந்து சன்னதி அடைந்தது... 

லேசான மழை பெய்யும் போதும் நடைபெற்ற படி பூஜையை நனைந்து கொண்டே பார்த்தது... 

மழையோடு பஸ்மக் குளத்தில் குளித்து மகிழ்ந்தது.... 

அடித்துப் பெய்யும் மழை நேரத்தில் ஒரு நாள் முழுவதும் மலையில் அறை எடுத்துத் தங்கியது...

ஐயப்பனுக்கு அபிஷேகப் பொருட்கள் ஊரில் இருந்தே வாங்கிக் கொண்டு போய் அபிஷேகம் செய்து அருமையான தரிசனம் செய்தது என எல்லாமே வித்தியாசமான அனுபவமாய் அமைந்தது. 

நான்கு முறை சபரிமலைக்குச் சென்றிருக்கிறேன். மலையேறியதும் கூட்டமில்லை என்றால் நேரடியாக ஐயப்பனைப் பார்க்க முடியும். நம்ம ஊரில் போல சாமியை அருகில் பார்க்க 100, சற்று தள்ளி நின்று பார்க்க 50, வரிசையில் பார்த்தபடி கடக்க 10, கூட்டத்தில் நசுங்கி, நீந்தி காலையோ தலையையோ அல்லது ஐயரின் பின்புறத்தையோ பார்த்துச் செல்ல தர்ம தரிசன வரிசை என்பதெல்லாம் கேரளாவில் இல்லை. தெய்வத்தின் முன் அனைவரும் சமமே. இங்கு பிரபலம் என்றால் மட்டுமே சாமிக்கு கை கொடுக்கலாம். அத்தியின் தரிசனத்தில் காணவில்லையா... ஏற்றத்தாழ்வுகளை.

படியேறியதும் கண் முன்னே காட்சி தந்த  ஐயப்பனின் அந்த அழகிய குட்டிச் சிலை மனசுக்குள் வந்து அமர்ந்து கொள்ள, பள்ளிக் கட்டு சபரிமலைக்கு என்னும் பாடலும் முருகனின் பாடல்களுடன் எனக்குள் வந்து அமர்ந்து கொண்டது. அதேபோல் மலையில் நடை திறக்க, நடை அடைக்க மட்டுமின்றி பெரும்பாலும் அதிகமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் யேசுதாஸ் அவர்களின் ஹரிவராசனம் பாடல் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இல்லையா அது.

'சரணகீர்த்தனம் பக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா'

இந்த வரிகளை யேசுதாஸ் அவர்களின் குரலில் கேட்டுக்கேட்டு ஐயப்பனைத் தரிசித்த நாம் ஒரு மழலையின் குரலில் கேட்போமே...



ஐயப்பனில் இருந்து மீண்டும் முருகனுக்குப் போவோம்... 

'வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
குஞ்சரி மணாளா - தேவ குஞ்சரி மணாளா
வண்ண மயில் வாகனா முருகா முருகா  
வேலவா வேலவா வேல் முருகா வா வா
சூராதி சூரா சுப்ரமணிய தேவா – சிவ
சுப்ரமணிய தேவா
ஷண்முக சரவணா முருகா முருகா'

வேலவா... வேலவா.... வேல் முருகா வா... வா.. என்ற இந்த முருகனின் பாடலை சிறுமிகள் மிக அழகாகப் பாடியிருப்பார்கள். எனக்கு இந்தப் பாடலும் வீடியோவும் ரொம்பப் பிடிக்கும்... அதையும் கேட்கலாம்.


குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா பாடல் ரொம்பப் பிடிக்கும்... பெரும்பாலும் கச்சேரிகளில் இது போன்ற பாடல்களைப் பாடும் போது கொலையாய்க் கொன்னு எடுத்துருவாங்க... ஒன்னு ராகம் ஒட்டாது... இல்லைன்னா இசை ஒட்டாது... நான் எல்லாரையும் சொல்லவில்லை.... எங்காவது ஒரு சிலர் மிகச் சிறப்பாய் பாடுவார்கள்... பாடியிருப்பார்கள்.

அப்படித்தான் இராமநாதபுர மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்துத் திருவிழாவில் தஞ்சை சின்னப்பொண்ணு கச்சேரி... ஆமா சின்னப்பொண்ணு நாட்டுப்புறப்பாட்டுல்லன்னு தோணலாம்... எந்தக் கச்சேரி என்றாலும் ஆரம்பத்தில் சாமிப்பாடல்கள்தான்... அந்தக் கச்சேரியில் ஒரு இளம்பெண் தான் பாடிய பாடல்களை எல்லாம் சிறப்பாகவே பாடினார். இந்தப் பாடலைப் பாடுபவர் வராததால் நான் முதன் முதலில் பாடுகிறேன் என்று சொல்லித்தான் பாடினார்... அவ்வளவு அருமையாகப் பாடியிருப்பார். என்னிடம் அந்த வீடியோ ரொம்ப நாள் இருந்தது. அடிக்கடி கேட்கும் பாடலாகவும் அது இருந்தது. தேடினால் கிடைக்கவில்லை. கிடைத்தால் பகிர்கிறேன்.

அந்தப் பாடலில் இருந்து சில வரிகள்...

'கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா'

இப்ப நாம சித்ரா அவர்கள் பாடிய மறை மூர்த்திக் கண்ணனைக் கேட்போம்.

அப்படியே புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களையும் கேட்டுவிடலாம்... ரசித்துக் கேட்டு கண்ணனை நினைத்து உருக வைக்கும் பாட்டு இது... சில வரிகள் இங்கே...

'குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்'


சரி அப்படியே வைக்கம் விஜயலட்சுமி பாடிய 'பொம்ம பொம்மைதா' பாடலையும் கேளுங்கள்... இந்தப் பாடலைப் பெங்களூர் ரமணியம்மாள் பாடிக் கேட்டிருக்கிறோம்... மறக்கக் கூடிய குரலா அந்தக் கணீர்க்குரல்... அதே பாடலை விஜயலெட்சுமி எப்படிப் பாடியிருக்கிறார் என்று கேளுங்கள் / பாருங்கள்... நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.

விஜயலெட்சுமி பாடிய, பழனிபாரதியின் வரிகளான 'காற்றே காற்றே நீ மூங்கில் துளைகளில் கீதம் இசைப்பதென்ன..' கேட்காதவர்கள் யாரும் இருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு ரொம்பப் பிடித்தபாடல் அது. திரையிசைப் பாடல்கள் பகிர்வில் அது குறித்து விரிவாய்ப் பார்க்கலாம்.

இப்ப பொம்ம பொம்மைதாவைக் கேட்போம்.


எந்தச் செயலையுமே கணபதியைத் தொடங்கி ஆரம்பிக்கணும்... அப்படித்தான் அரம்பித்து கணபதியிலேயே முடிந்திருக்கிறது சாமிப் பாடல்கள் குறித்த பகிர்வுகள். 

இத்துடன் சாமிப் பாடல்கள் குறித்தான பகிர்வு முடிந்தது. அடுத்த பதிவு முதல் பிடித்த திரையிசை, நாட்டுப்புறப் பாடல்கள் குறித்துப் பார்ப்போம்.

பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

புதன், 16 அக்டோபர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் - 3

வாசிக்காதவர்களுக்காக... என்னைக் கவர்ந்த பாடல்கள் - 1 2

முதல் இரண்டு பதிவுகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி... சிறப்பாக எழுதியிருக்கிறேனா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்... மிகச் சிறப்பாக எழுதணும் என்ற எண்ணத்துடன்தான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன்... தற்போதைய மனநிலை கொடுக்கும் அழுத்தத்தால் எண்ணிய எண்ணப்படி எழுத முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. வரும் பதிவுகளில் கொஞ்சம் மெனக்கெடல் செய்ய முயல்கிறேன்.

இந்தப் பதிவு நாட்டுப்புறப் பாடல்கள் குறித்தான நினைவுகள் என்பதாய் போன பதிவிலேயே சொல்லியிருந்தேன். சென்ற பதிவு பக்திப்பாடல்கள் என்றதால் பிரதிலிபியில் சகோதரி கண்மணி மற்ற மதப் பாடல்கள் குறித்தும் எழுதுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்காக இதிலும் சில பாடல்கள்கள் குறித்தான் நினைவுகள் பக்தி மயமாய்...

நமக்கு எப்பவுமே இந்த சாதி, மதச் சனியன்கள் மீது பெரும் ஈடுபாடெல்லாம் இல்லை... தற்போதைய நாட்டு நடப்புகள் சற்றே ஈடுபாட்டைக் கொடுத்து விடுமோ என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் முகநூலில் மற்ற மதத்தைக் கேலி செய்வதைக் காணும் போதெல்லாம் மனசுக்குள் வருத்தமே மேலிடுகிறது. நான் என் மதம் சார்ந்தவைகளுக்கு முழு உரிமை கொடுப்பேன் என்பவர்கள் மற்ற மதத்தின் தெய்வங்களை எள்ளி நகையாடுதல்... மற்ற மத கோட்பாடுகளைக் கேலி செய்தல் என்பது வருத்தமான விஷயமே. திருந்தாத ஜென்மங்களுக்காக வருந்தி என்ன செய்வது எனக் கடக்க நினைத்தாலும்... நம் மத உணர்வு மெல்ல மேலெழத்தான் செய்கிறது... தடுக்க முடியவில்லை.

நான் எப்பவுமே நல்ல சாப்பாடு கிடைக்குதுன்னா எங்க வேணுமின்னாலும் போகும் ரகம்தான்... சாதியாவது... மதமாவது... மண்ணாங்கட்டியாவது... வயிறு நிறைய வாய்க்கு ருசியா செஞ்சு போடுறியா... 'அது போதும் எனக்கு... அது போதுமே'ன்னு பாடிக்கிட்டு கிளம்பும் நண்பர்கள் எனக்கு வாய்த்தது சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில்.

நாங்க பத்துப்பேர் வகுப்பில் இருந்த ரகுவரன் குழுவிலும் இணையாமல்... நாசர் குழுவிலும் இணையாமல் இரண்டு குழுவுடனும் மய்யமாய் மூன்றாண்டுகள் பயணித்தவர்கள். பத்துப் பேரின் வீட்டுக்கும் திருவிழா, விஷேசங்களுக்குப் போய் மூன்று நான்கு நாட்கள் இருந்து மூக்கு முட்டத் தின்னு தீர்த்தவனுங்க நாங்க.... இராமேஸ்வரம் போக திருவாடானையில் நண்பன் ஆதியின் வீட்டில் தங்கி ஐயர் வீட்டுச் சாப்பாட்டை தினமும் மதியம் சாப்பிட்டிருந்தாலும் என்ன செய்ய எனக் கேட்டு அம்மா செய்து கொடுத்ததை ஒரு பிடிபிடித்தவர்கள் நாங்கள்.

எங்களுக்கு வகுப்பில் மட்டுமின்றி மற்ற துறை நட்புக்களும் உண்டு... மிகப்பெரிய கூட்டமாய்த்தான் கல்லூரிக்குப் போவோம்... வருவோம்... நிறைய வம்பிழுப்போம் என்றாலும் எங்கள் ஆசிரியர்களின் செல்லப் பிள்ளைகள் நாங்கள்... அந்தப் பாசம்தான் இப்போது வரைக்கும் ஆசிரியர்கள் மனதில் நாங்கள் இருக்கக் காரணம்... அடிதடி நடந்தால் இங்க என்ன வேடிக்கை... ஒண்ணு வகுப்புக்குள்ள போங்க... இல்லேன்னா வீட்டுக்குப் போங்க... இங்க எதுக்கு நிக்கிறீங்கன்னு எங்க கே.வி.எஸ். சார் வந்து சொல்லிட்டுப் போவார். ஆமா ஆசிரியர்கள் விரும்பிய மாணவர்கள் நாங்க.

ஆமா இப்ப எதுக்கு இதெல்லாம்...?

பாட்டுப் பகிர்வுதானே போடணும்... பக்கம் பக்கமா என்னைப் பற்றி எழுதக் கூடாதுதானே...

எனக்கு கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம்... இப்பவும் எப்பவும்.... என் மனைவியிடம் கேட்டால் சொல்வார் பல விஷயங்களை... ஏன்னா அவருக்கு எல்லா விபரமும் தெரியும்... நானெல்லாம் எப்பவும் முருகனை அழைப்பவன்... என் மனைவி தும்மினால் அழைப்பது ஏசப்பாவை... ஏன்னா அவங்க படிச்சதும் கிறிஸ்தவப் பள்ளியான ஓசிபிஎம். நாமளும் படிச்சது தே பிரித்தோவுல... பசங்க வீட்டுக்கு அருகே இன்பேண்ட் ஜீசஸ்ல...

நானும் முருகனும்.... இப்ப இவர் நாங்கள் படித்த சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்... படிக்கும் போது கல்லூரியில் வேறு வேறு துறை என்றாலும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்தோம்... மனசு கையெழுத்துப் பிரதி நடத்தினோம்... இருவரும் உணர்வில் வேறாக எப்போதும் நின்றதில்லை... இருவரும் ஒன்றே....

என் கல்லூரி நாட்கள் பெரும்பாலும் இவனுடைய (மரியாதை நட்புக்குத் தேவையில்லை) வீட்டில்தான்... ஆரம்பத்தில் இங்கயெல்லாம் சாப்பிடுவியாய்யான்னு கேட்ட முருகனின் அம்மா அப்புறம் விதவிதமாச் சமைச்சிப் போட்டாங்க... எங்க போனாலும் ஒண்ணாத்தான் சுத்துவோம். அது ஐயா வீடா இருந்தாலும் சரி... அரசியல் கூட்டமா இருந்தாலும் சரி...

அப்ப முருகன் சுபமங்களா, தாமரை, செம்மல்ர் மூன்றுக்கும் ஏஜெண்ட்... புத்தகம் வந்ததும் சைக்கிளில் எடுத்துக் கொண்டு தேவகோட்டையில் வீதி வீதியாய்ச் சென்று புத்தகம் வாங்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வீடுகளில் கொடுத்து வருவோம். அப்போது அருள்சாமி ஐயா, சவரிமுத்து ஐயா வீட்டிலெல்லாம் எங்களுக்கு அம்மாக்கள் தீனி போடாமல் விடுவதில்லை. உங்களுக்காக அம்மா இந்தப் பழத்தைப் பறிக்காமல் மரத்திலே போட்டு வைக்கச் சொன்னாங்க என்றபடி அருவாக் கம்பெடுத்துப் பறித்துக் கொடுப்பார் சவரிமுத்து ஐயா.

ரெண்டு பேருக்கும் மனசு சரியில்லை என்றால் நாங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் எங்கள் தேவகோட்டை சரஸ்வதி வாசகசாலை சர்ச்தான்... மெழுகுவர்த்தியுடன் போவோம்... ஏற்றி வைத்துவிட்டு நீண்ட நேரம் அமைதியாய் அமர்ந்திருப்போம்... மனக்கவலை தீர்ந்தது போல் ஒரு எண்ணம் எழும் போது கிளம்பிவிடுவோம். இது அடிக்கடி நிகழும் நிகழ்வுதான் கல்லூரிக் காலத்தில்.

நிறையப் பாடல்கள் பிடிக்கும்... எப்பவும் மறக்க முடியாத பாடல் என்றால் அது

'மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் 
தாயென்று உன்னைத்தான்
 பிள்ளைக்கு காட்டினேன் மாதா  
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே 
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா...'


இது அச்சாணி என்ற படத்தில் இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடிய பாடல். இதே பாடலை நான் கடவுள் படத்திலும் இளையராஜா பயன்படுத்தியிருப்பார். அதில் அம்மா உன் பிள்ளை நான் என்றொரு பாடலும் இதே மெட்டில் வரும். எனக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். பாடல் வந்த சமயத்தில் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன்.... வலி நிறைந்த வரிகள் ராஜாவின் இசையோடு கலந்து வரும் போது நம்மையும் கலங்க வைக்கும். முழுப் பாடலையும் பகிர ஆசைதான்... வீடியோவாய்ப் பார்த்தல் சிறப்பு என்பதால் பாடலில் இருந்து சில வரிகள் இங்கே.

'காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
தரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே...'


பழனி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்குப் பாதயாத்திரை செல்வது போல் வேளாங்கண்ணிக்கும் பாதயாத்திரை செல்வார்கள். அப்போதெல்லாம் தேவகோட்டையில் இருந்து எங்கள் ஊர் வழிதான் பயணிப்பார்கள்... பயண தூரத்தைக் குறைக்க வயல்களினூடே நடந்து போவார்கள். சில நேரம் ஊரில் தங்கிச் செல்வார்கள். இப்போதெல்லாம் வயல்கள் கருவைகளின் ராஜ்ஜியத்தில் இருப்பதால் ரோடு வழியேதான் பயணப்படுகிறார்கள்.

ஒரு மேடையில் லியோனி எல்லாப்பயலும் பழனிக்கு நடக்குறானுங்கன்னு எங்காளுங்க வேளாங்கண்ணி நடக்க ஆரம்பிச்சிருக்கான்னு கிண்டல் பண்ணுவார். அதுக்கும் நாம் சிரித்திருப்போம். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு... அதைக் கேலி செய்வதில் என்ன கிடைத்து விடப்போகிறது. நான் பழனிக்கு ஆறாண்டுகள் பாதயாத்திரை சென்றிருக்கிறேன்.... சபரிமலை நான்கு ஆண்டுகள்... திருப்பரங்குன்றம் ஒரு ஆண்டு.... நடப்பது எனக்குப் பிடிக்கும்... முருகனையும் அதிகம் பிடிக்கும்.

நாங்கள் குடும்பமாய் வேளாங்கண்ணிக்கு செல்வோம்... மாதாவைக் கும்பிடுவோம்... என் மகள் குட்டியாய் இருக்கும் போது... இப்பவும் குட்டிதான்... பதினோராவது படிக்கும் குட்டி... எல்லாருக்கும் பாப்பாதான் அவர்... ஐயா, ஆயா, அப்பா, அம்மா, ஏன் தம்பிக்கு கூட இப்பவும் பாப்பாதான். மண்ணில் முட்டி போட்டே நடந்து போய் வழிபாடு செய்தார்.... இறுதி வரை எழவேயில்லை.

எனக்குப் பிடித்த இன்னொரு பாடல்...

'நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்'


'கேளுங்கள் தரப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்... இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்றார்' என்ற பாடல் உள்ளிட்ட நிறையப் பாடல்கள் எனக்குப் பிடித்தமானவை... பேசினால் இன்னும் நிறையப் பேசலாம் என்றாலும் இஸ்லாமியக் கீதங்கள் பற்றியும் பேச வேண்டும் என்பதால் இங்கிருந்து மதம் மாறி அங்கே போகலாம்.

இப்ப நமக்குச் சோறு போடுறதே ஒரு இஸ்லாமிய நாடுதான்... இங்கிருக்கும் உறவுகள் எல்லாம் பெரும்பாலும் இஸ்லாமியர்களே... அது தமிழனாக, மலையாளியாக, லெபனானியாக, எகிப்தியனாக, பாலஸ்தீனியனாக, சிரியனாக, பெங்காலியாக, பாகிஸ்தானியாக... யாராகவோ இருந்தாலும் எல்லாருமே மனிதர்களாய் இருப்பதுதான் முக்கியம். இங்கே எல்லாரும் அன்போடும் நட்போடும் இருக்கிறார்கள்... பேதங்கள் பெரும்பாலும் இல்லை... பிழைக்க வந்த இடம் என்பதால் கூட இருக்கலாம்... தமிழனுக்குள்தான் பேதங்கள் இருக்கு இங்கும்.

இஸ்லாமியப் பாடல்கள் என்றால் அந்தக் கம்பீரக் குரல், வசீகரிக்கும் குரல், மைக் இல்லாமலேயே தூரத்தில் இருப்பவனும் கேட்கும் விதமாகப் பாடக் கூடிய நாகூர் ஹனிபாவை மறக்க முடியுமா..? என்ன குரல் அது...? சினிமாவிலும் இவரின் பாடல்கள் தனி முத்திரை பதித்தன... இளையராஜா இவரை ஓரளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எத்தனை பாடல்கள் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும் போது இது எல்லா மதத்துக்கும் பொறுத்தமான பாடல்தானே என்று தோன்றும்... அதில் வரும் 'அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்' என்ற வரியில் அல்லாவுக்குப் பதில் சிவனை, முருகனை, பெருமாளை, கிருஷ்ணனை, கருப்பனை, மாரியைக் , காளியை, மாதாவை, இயேசுவை என யாரை வேண்டுமானாலும் பொருத்திப் பாடிப்பாருங்கள்.... எல்லாத் தெய்வத்துக்கும் உகந்த பாடலாய்த்தான் இருக்கும். முன்பு அடிக்கடி கேட்க்கும் பாடலாகவும் இது இருந்தது.

'இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை'

இங்கே நாகூர் ஹனிபா பாடிய பாடலுக்குப் பதில் அதே பாடலின் வித்தியாசமான வேறொரு வீடியோவைப் பகிர்ந்திருக்கிறேன்.


எஸ்.பி. பாலசுப்பிரமணியனும் நாகூர் ஹனிபாவும் இணைந்து பிரபு - குஷ்பு... குஷ்பு சார்... ராணி அட்டைப் படத்தில் வரும் குஷ்பு போட்டோவை பைத்தியமாய் கட் பண்ணி வைத்திருந்தவங்க நாங்கள்லாம்... வருஷம்-16 எத்தனை தடவை பார்த்திருப்போம்... ஏன் சின்னத்தம்பி, பாண்டித்துரை... அம்புட்டுப் போட்டோவையும் சமீபத்தில்தான் பீரோவில் இருந்து எங்கப்பா, வெறும் பேப்பரா வச்சிருக்கான் பாருத்தான்னு அள்ளி மனைவியிடம் கொடுக்க, அவர் அதைப் பார்த்து நமக்குப் போன் போட்டு ரொம்பச் சந்தோசமாய்ப் (?) பேசிட்டு, த்தூன்னு ஒரு சத்தம் மட்டும் கொடுத்துட்டு கிழித்து ஊரணிக்குள் அள்ளிப் போட்டுட்டார்... ஏங்க குஷ்பு வெறும் பேப்பராங்க... ம்... பொங்கலப் பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள் எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி....

சரி விஷயத்துக்கு வருவோம்... இளையராஜா இசையில் தர்மசீலன் படத்தில் பாடிய பாடல் வரிகள் சில...
'எங்குமுள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்....

மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்...'

பாலு மகேந்திராவின் ராமன் அப்துல்லான்னு ஒரு படம்... அருமையான படம் அது... அதிலும் நாகூர் ஹனிபாவைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா, உன் மதமா என் மதமாங்கிற பாட்டு அது. அருமையான பாடலும் கூட. மதம் பிடித்து அலைபவர்கள் கேட்க வேண்டிய பாடல்... இப்பத்தான் சாதியும் மதமும் இணைய வெளிகளில் எல்லாம் தலை விரித்து ஆடுகிறதே... இணையம் வளர்ச்சிக்கு வித்திட்டதைவிட சாதீய வீழ்ச்சிக்குத் தண்ணீர் வார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

'உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளடா
அந்த ஆண்டவன் தான் கிறிஸ்துவனா...
முஸ்லிம்மா... இல்ல ஹிந்துவா...'


ஊரில் இருக்கும் போது பள்ளி வாசலுக்கும் நமக்குமான தொடர்பு பிள்ளைங்களுக்கு உடல் நலமில்லை என்றால் மிளகு மந்திரித்து கயிறு கட்டி வருவதற்காகச் செல்லுதல், படிக்கும் காலத்தில் நண்பர் கொண்டு வந்து கொடுக்கும் நோன்புக் கஞ்சி குடிப்பது என்ற வகையில்தான் இருந்தது. இங்கு வந்தபின் நிறைந்திருக்கும் பள்ளிகள், தொழுகைக்காய் போடப்படும் 'அல்லாஹூ அக்பர் அல்லா' பாடல் எனத் தினம் தினம் ஒரு நெருக்கத்தோடு நகர்கிறது. நோன்பு நேரத்தில் நோன்புக் கஞ்சி தினமும் பிரியாணி எப்போதேனும் கிடைக்கிறது.

Image result for grand mosque

அமீரகத்தில் அபுதாபியில் இருக்கும் பெரிய பள்ளிக்கு உள்ளே சென்று சுற்றிப் பார்த்து வர முடிகிறது. அதன் அழகை ரசிக்க முடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது அவருடன் பெரிய பள்ளிக்குள் அவர் பேசிக் கொண்டே நடக்க, நாங்கள் கேட்டுக்கொண்டே நடந்தோம்.

அப்படியே நம்ம ஹனிபா செம்பருத்தி படத்தில் பாடிய 'கடலிலே தனிமையில் போனாலும்' பாடலையும் கேளுங்க.... எனக்கு ரொம்பப் பிடித்த பாடல் இது.


பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் - 2

வாசிக்காதவர்களுக்காக... என்னைக் கவர்ந்த பாடல்கள் -1 

****************
ப்பவுமே... எதை ஆரம்பித்தாலும் சாமி கும்பிட்டு ஆரம்பிப்பதே பழக்கம் என்பதால் கவர்ந்த சினிமாப் பாடல்கள் பற்றிப் பார்க்கும் முன் பிடித்த சாமிப் பாடல்களைப் பற்றியும் பார்க்கலாம்தானே...

ஊர்ல திருவிழான்னாலே ஒரு வாரத்துக்கு மைக்செட் கட்டுவார்கள் என்ற சந்தோஷம் பள்ளி செல்லும் நாட்களின் அதிகமாகவே இருக்கும்... குழாய் ரேடியோவில் போடப்படும் பாடல் தூரத்தில் வரும்போதே கேட்கும் என்பதால் பாட்டுப் போட்டாச்சுடான்னு ஓடிவருவோம்... அந்த ஒரு வாரமும் காலையிலும் மாலையிலும் பிடித்த பாடலைப் போடச் சொல்லி மைக்செட் போடுபவரின் அருகிலேயே அமர்ந்திருப்போம்.

அப்போதெல்லாம் எங்க ஊரில் திருவிழா என்பது கேள்விக்குறிதான்... இருப்பதெல்லாம் சித்தப்பன் பெரியப்பன் என்றாலும் செவ்வாய்க் கூட்டம் என்பது பெரும்பாலும் பிரச்சினையில்தான் முடியும். அதை உடைத்து திருவிழா என்பது வருடாவருடம் கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள்தான் கொண்டு வந்தோம். இங்கே நாங்கள் என்பது பசங்க... பயலுக பேசுறதைக் கேட்டு ஆடுறீங்க என போன வருடம் இறந்து போன எங்க சித்தப்பா ஒருத்தர் சொல்லிக் கொண்டே இருப்பார் என்றாலும் திருவிழா என்பது தடையில்லாமல் நடந்து கொண்டுதான் இருந்தது.

எந்த ஊர் அம்மன் கோவில் திருவிழா என்றாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா...', 'அங்காளம்மா எங்க செங்காளம்மா...', 'ஏற்காடு வாழ்ந்திருக்கும்...', 'ஆடும்கரகம் எடுத்து ஆடி வருவோம்...', 'கற்பூரநாயகியே கனகவள்ளி...', 'தாயே கருமாரி... எங்கள் தாயே கருமாரி...' இப்படி எத்தனையோ பாடல்கள் அம்மன் திருவிழாக்களில் அணி வகுக்கும். அதுவும் பால்குடம், பூக்குழி என்றால் இந்தப் பாடல்கள் இல்லாமல்  சாமி வருமா என்ன..? கோவிலின் கூட்ட நெரிசலில் செல்லாத்தாவைக் கேட்டு எத்தனை ஆத்தாக்கள் ஆடியிருப்பார்கள். 


எங்க ஊரில் திருவிழாவே பெரிய விஷயமாய் இருந்த சூழலில் திருவிழாவை ஒரு பிரச்சினையுடன் நடத்தி முடித்த பின் மார்கழி மாதம் முழுவதும் காலையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது என நாங்கள் முடிவு செய்தோம். அதற்கான முயற்சியில் இறங்க, அப்பவும் பயலுக ஆட்டம் போடுறானுங்க... இவனுகளும் அவனுக பின்னாடி நிக்கிறானுங்கன்னு ஒரு சிலர் கிளம்பி எதிர்த்து நின்னார்கள்... எதிரிகளாய்த் தெரிந்தது பசங்கதான்.

ஊர்க்கூட்டம் சரிவரலைன்னு நாட்டு அம்பலம் வீட்டு வரைக்கும் கொண்டு போய் அதுவும் முடியாத நிலையில் போலீஸ் வரைக்கும் கொண்டு போக,  அங்கும் பசங்க செய்வதில் தவறென்ன இருக்கு எனக் கேட்க, மீண்டும் ஆட்களைக் கொண்டு மைக்செட் போட வந்தவரைக் கூப்பிட்டு மிரட்ட, ஊர்ல போடச் சொன்னாங்க நான் போட்டேன்... அவங்க சொன்னா அவுத்துடுறேன்னு அவர் ஒத்தை வரியில் சொல்லி முடிச்சிட்டார்.

அன்னைக்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகள்தான் அவரை உயர்த்திக் கொண்டு வந்தது. அவர்தான் இனி நம்மூருக்கு என எங்கள் மனதில் நிறுத்தியது. ரெண்டு குழாய் ரேடியோவுடன் பரியன்வயல் மாரிக்கு கட்ட வந்தவர் இன்று தேவகோட்டையில் பெரிய மைக்செட் உரிமையாளராய் இருக்கிறார். எங்க ஊர் திருவிழா மட்டுமின்றி வீட்டு விசேசங்களுக்கும் இன்றுவரை அவர்தான்... கணக்குப் பார்த்து அவரும் வாங்குவதில்லை. நாங்களும் கொடுப்பதில்லை. அன்னைக்கு எங்களுடன் நின்றார்...இன்றும் நாங்கள் அவருடன் இருக்கிறோம்.

விஷயத்துக்கு வருவோம்...

மார்கழி மாதத்துக்கு ரேடியோ கட்டியாச்சு... தினம் பொங்கல் வைக்கணும்... சாமி கும்பிடணுமே... என்ன செய்றது..? காலையில் யாரை எழுப்பி பொங்கல் வைக்கச் சொல்வது...? யார் இதைச் செய்ய முன் வருவார்கள்..? ஒரு மாதக் குளிரில் சில நேரம் மழையும் பெய்யும் அதிகாலையில் தினமும் சரி வரச் செய்துவிட முடியுமா..?  விவசாய நேரம் வேறு... யோசித்தோம்.

யாரையும் கேட்பதில்லை... நாமே செய்வோமென வீட்டுக்கு வீடு வசூலித்த காசை வைத்து தினமும் காலையில் நாங்களே பொங்கல் வைத்தோம்... அருகிலிருக்கும் கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவில் மாடு வயலுக்கு வந்து மேய்ந்து விட்டுப் போகாமல் பெரும்பாலானோர் வயலில் காவலிருந்தாலும் நாலு மணிக்கே பொங்கல் வைக்க எழுந்து குளித்து வரும் நாங்களும் போய் பார்த்துக் கொண்டே சாமிக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்தோம்..

தினமும் ஆறு மணிக்கெல்லாம் மணி அடித்தோம்... மழை அன்றைக்கு குடை பிடித்துக் கொண்டு பொங்கல் வைத்திருக்கிறோம்... அப்புறம் அடுத்தடுத்த வருடங்களில் ஊர் அதை எடுத்துக் கொண்டது... தினம் ஒரு குடும்பம் என ஆனது. சீட்டுப் போட்டு யார்யார் என்றைக்கு என்பதை எழுதி ஒட்டினோம். இப்போது எல்லாரும் வெளியில் என்பதால் வேளார் வந்து செய்து செல்கிறார்... மார்கழி மாத சாமி கும்பிடுதலும் தொடர்கிறது. இப்பக் கோவிலுக்கு என மைக்செட் வாங்கி விட்டதால் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் யாரேனும் ஒருவர் பாடலைப் போட்டுவிடுவார்.

தினமும் காலையில் மைக்செட்டில் பிள்ளையார் பாடல்தான் முதல் பாடலாய் ஒலிக்கும்... 
'ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண
பிள்ளையார்பட்டி வரவேண்டும்...
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரைத் தொழ வேண்டும்...'


என்ற பாடல் எப்பவும் முதல் பாடலாய் வரும்.  எனக்கு இப்பவும் பிடித்த பாடல் இதுதான். அடிக்கடி கேட்கும் பாடலாகவும் இருக்கிறது. கேட்கும் போது மனதுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்... மகாநதி ஷோபனா பாடிய பிள்ளையார் பாடல்களும் அருமையாக இருக்கும்.. அவையும் தொடர்ந்து ஒலிக்கும். சாமி கும்பிடப் போகிறோம் என்றால் கந்தர் சஷ்டி கவசம்தான். அதே நடை முறைதான் இப்போதும்...
'துதிப்போர்க்கு வல்வினை போம்... 
துன்பம்போம்... நெஞ்சில் பதிப்போர்க்குச் 
செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும்... 
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை...'

அப்படின்னு பாட ஆரம்பித்தாலே ஒரு சுகம்தான் மனசுக்குள் இல்லையா... அதுவும் நாமும் அதைப் பாடிக்கொண்டே கேட்பது வித்தியாசமான சுகம். எனக்கு மிகவும் பிடித்தவர் முருகன்... எதற்கெடுத்தாலும் முருகான்னுதான் வாயில் வரும். தினமும் பலமுறை அழைத்து விடுவேன் முருகனை... நல்லாத்தான் முருகா போடுறே... ஆறாவதாய்ப் பிறந்ததனால ஆறுமுகம்ன்னு வைக்கணும்ன்னு உங்கய்யா (அம்மாவின் அப்பா) சொன்னாரு... உங்கப்பாதான் குமாரசாமின்னு வச்சாரு... நான் உன்னைய பள்ளியில் சேர்க்கும் போது சாமி எதுக்குன்னு தள்ளி வச்சிட்டு குமார்ன்னு சேர்த்தேன்... அதான் முருகா... முருகான்னு சொல்றே போலன்னு அம்மா இப்பவும் சொல்வாங்க. 

எந்தக் கோவில் என்றாலும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் 'அங்கே இடிமுழங்குது...' பாடலை... ஸ்பீக்கரில் போடும் போது ஆடாதவனையும் ஆடவைக்கும் இல்லையா..? அந்தக் குரலும் இசையும்... அந்தப் பாடலை இதுவரை எத்தனையோ பேர் பாடி விட்டார்கள்... இன்று வரும் கிராமியப் பாடகர்கள்  இந்தப் பாடலையும் ஆக்காட்டி பாடலையும் கண்டிப்பாகப் பாடும் பாடலாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். திருவிழாக்களில் வைக்கப்படும் கிராமிய இசை நிகழ்ச்சிகளில் இது பிரதானமான பாடலாக இருக்கிறது.

எங்களுக்கு அழகர் கோவில் குலதெய்வம் என்பதால் பதினெட்டாம் படிக் கருப்பரும் எங்கள் குலதெய்வமாய்... அவர் மீது பயம் கலந்த தனிப்பாசம் உண்டு. இந்த முறை சென்றபோது சிறு கதவின் வழி உள்ளே பார்த்தபோது எவ்வளவு பெரிய அருவா... இவ்வளவு அருவா இருக்கு என ஆச்சர்யப்பட்டான் விஷால்.

சில நேரங்களில் மனசு நல்லாயில்லை என்றால் முருகன் பாடலுடன் கருப்பரின் பாடல்களைத் தேடித்தேடிக் கேட்பேன். அப்போதெல்லாம் இந்தப் பாடல்தான் முதலாவதாய் ஓடும்... தேக்கம்பட்டியாரின் குரல் கருப்பனை நம்முன்னே இழுத்து வந்து நிறுத்தும் அல்லது நம் கண்ணுக்குள் கருப்பனைக் காட்டும். கருப்பர் சாமி ஆடுபவர்கள் இந்தப் பாடலைக் கேட்டால் துள்ளி ஆட அல்லவா செய்வார்கள்... பிடித்து நிறுத்த முடியாமல் திணற வைத்துவிடும் பாடல் அல்லவா இது.
'அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது...
அங்கே இடி முழங்குது - மகாலிங்கம்
மாளிகபாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது...
வெள்ள நல்ல குதிர மேலே
வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட
வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி...'


பெரும்பாலும் கோவில் பூக்குழிகளின் போது இந்தப்பாடல்தான் ஒலிக்கும்... கருப்பர் அழைப்பின் போதும் இதே பாடல்தான்... இப்போது எப்படி அழகர் வைகையில் எழுந்தருளும் போது வாராரு... வாராரு அழகர் வாராரு பாடல் ஒலிக்கிறதோ அதைப் போல இந்தப் பாடல் சாமி அழைக்கும் இடங்களில் எல்லாம் ஒலிக்கும்.

எங்க ஊர் மாரியம்மன் கோவில் இப்போது கோபுரத்துடன் பிள்ளையார் முருகனுடன் சற்றே பெரிய கோவிலாய் கட்டப்பட்டுவிட்டது. முன்பு ஓட்டுக் கொட்டகைதான்... எங்க அக்கா, அண்ணன் என மாறி மாறி வெள்ளி செவ்வாய் சாம்பிராணி போடுவார்கள். அதன் பின் நான் ரொம்ப நாள் பூசாரி வேலை பார்த்தேன். பீடம்தான் அம்மன்... சிலையாக இல்லை... பீடத்தைக் கழுவுவதற்கு அவ்வளவு பிடிக்கும். அதிலொரு மகிழ்ச்சி.

அப்பறம் சமீபத்தில் பிரபலமான குலசை முத்துராமன் எழுதிய காளியம்மன் பாடல்... இப்ப எல்லாத் திருவிழாவிலும் அடிக்கடி போடப்படும் பாடலாக மாறியிருக்கிறது. சாமி வர வேண்டும் என்றால் இந்தப் பாடலைப் போடலாம் என்ற வரிசையில் இதுவும் அமர்ந்திருக்கிறது.

'கூப்பிட்டா ஓடிவருவளா...
நம்ம காளியம்மா குதி போட்டு ஆடிவருவாளா...
அவ கூப்பிட்டா ஓடிவருவாளா
நம்ம காளியம்மா குதிபோட்டு ஆடிவருவாளா...
ஏய் சின்னஞ்சிறுபிள்ளை போல இருப்பவள்
சேதுபதியை நடுவில் வச்சவ...
தன்னை மறந்துமே தலைகுனிஞ்சவ
தாயமங்களம் மாறி அவ
கூப்பிட்டா ஓடிவருவாளா...'


இந்தப் பாடலை நாடகக் கலைஞர் பபூன் ராதாகிருஷ்ணன் பெரும்பாலான மேடைகளில் பாடி, கூத்துப் பார்க்க வந்திருப்பவர்களைச் சாமியாட வைத்து விடுவார்.

சொல்ல மறந்துட்டேன் பாருங்க... மருதமலை மாமணியே முருகையா பாடலை குழாய் ரேடியோவில் போட, தூரத்தில் இருந்து கேட்டிருக்கிறீர்களா... அப்படிக் கேட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். அருமையானதொரு பாடல் இல்லையா அது..?

இன்னும் இன்னுமாய் நிறைய சாமி பாடல்கள் இருக்கின்றன... எல்லாவற்றையும் எழுத முடியாது... அடுத்த பதிவில் என்னைக் கவர்ந்த நாட்டுப்புறப்பாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

பாடல் தொடரும்.
**********************
மின்கைத்தடியில் எனது மூன்றாவது சிறுகதை பகிரப்பட்டிருக்கிறது. இணை என்னும் இச்சிறுகதையும் எப்பவும் போல் வாழ்க்கையைத்தான் பேசுகிறது. வாசித்து தங்கள் கருத்தை அங்கும் இங்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 10 அக்டோபர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் - 1

Image result for ilaiyaraja

பிக்பாஸ் பற்றி எழுதிய கட்டுரைகள் மிகப்பெரிய தாக்கத்தைக் கொடுத்தன என்பது உண்மை... நிகழ்வை மட்டுமே தொகுக்காமல் விமர்சனப் பார்வையில் நானும் நிறையப் பேசியிருக்கிறேன்னுதான் நினைக்கிறேன். 86 கட்டுரைகளையும் ஒன்றாய் தொகுத்து வைத்து மீண்டும் வாசிக்க வேண்டும். எல்லாமே அலுவலகத்தில் கிடைத்த நேரத்தில் எழுதியவைதான் என்பதால் கண்டிப்பாக பிழைகள் இருக்கும்... மீண்டும் ஒரு முறை பிழை திருத்தித் தொகுத்து வைக்க வேண்டும். 

நகைச்சுவை, கோபம், மகிழ்ச்சி, எதிர்ப்பு என பல விதமாய் எழுதிப் பார்த்திருக்கிறேன். சில பதிவுகளில் அவர்களின் உரையாடலை விடுத்து நானே உரையாடல் எழுதியிருக்கிறேன்... எப்படிப் பார்த்தாலும் இந்த 86 பதிவும் எனக்கொரு புதிய எழுத்து அனுபவம்தான். வாரம் ஒரு பதிவென எழுதலாம் என ஆரம்பித்து பின் தினம் எழுதலாமே என ஆகிப் போகக் காரணம் நான் முன்பே சொன்னது போல் பிரதிலிபி உறவுகள் கொடுத்த உற்சாகமே... 

பிக்பாஸ் முடிஞ்சிருச்சின்னு விட்டுடாம எதாவது எழுதுங்க என அவர்கள் உரிமையுடன் கேட்டார்கள் என்றால் என் பதிவு வாசிக்க ஏதோ ஒரு விதத்தில் சுவராஸ்யமாகவோ அல்லது சுவையாகவோ இருந்திருக்கக் கூடும் அல்லவா..? 

பெரும்பாலும் வலையில் பகிரும் எல்லாவற்றையும் பிரதிலிபியில் பகிர்வதில்லை... இது என் வலை நட்புக்களுக்குத் தெரியும்... தொடர்ந்து இல்லையென்றாலும் எப்போதேனும் இங்கு ஏதாவது கிறுக்கி வைப்பேன்... என்னை உயிர்ப்பாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அப்படித்தான் இந்தத் தொடரையும் இங்கு ஆரம்பிக்கிறேன்... அங்கும் பகிர்வேன். 

பிறந்தது முதல் இதுவரை எத்தனையோ பாடல்களைக் கேட்டிருப்போம்... கேட்டதில் நம்மைக் கவர்ந்த பாடல்கள் குறித்து, அது தொடர்பாக நாம் அனுபவித்ததைக் குறித்து இங்கு பகிரலாம் என்று நினைக்கிறேன். 

பாடல் பிறந்த கதை, எழுத அமைந்த சூழல் என்றெல்லாம் எழுத நம்மால் இயலாது. அதற்காக இணையத்தில் நிறைய மேய வேண்டும்... நாலு பேர் நாலு விதமான எழுதி வைத்திருப்பார்கள்... அதையெல்லாம் மொத்தமாக எடுத்து அதிலிருந்து கலவையாய் ஒரு பாரா எழுதி நான் எழுதியதே சரியெனச் சாதிக்க என்னால் முடியாது. அது தேவையும் இல்லை. 

எனவே பாடல் குறித்தான கருத்தை, எனக்கு அது ஏன் பிடித்த பாடல் என்ற காரணத்தை என் மனசு சொல்வதுபடி இங்கு பகிர்வேன். எல்லாமே என்னோடு தொடர்புடைய நிகழ்வுகளாகவே இருக்கும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

இது தினம் தோறும் வரும் பகிர்வா... அல்லது தோன்றும் போது எழுதும் பகிர்வா... என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யவில்லை.... ஆனால் தொடர்ந்து சில பல பதிவுகளாவது வரும் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். என்னால் முடிந்தளவு தொடர்ந்து எழுதுவேன்.

குடந்தையூர் சரவணன் அண்ணன் பாக்கியராஜ் அவர்கள் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி இது நம்ம பாக்யராஜ்ன்னு முகநூலில் எழுதி வருகிறார். எனவே அதை அறிந்த நட்புக்கள் அவரைப் பார்த்துத்தான் இந்தக் கட்டுரையை நான் ஆரம்பித்திருக்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். இது பல வருடங்களுக்கு முன்னே யோசித்தது.

மேலும் பிக்பாஸ் - 'கக்கூஸ்' கவின் சொன்னது மாதிரி அது வேற 'ZONE' இது வேற ''ZONE. அவர் எழுதுவது ரசனையானது... ரகளையானது... ரம்மியமானது... வாசிக்காதவர்கள் வாசிக்க ஆரம்பிங்க... அருமையாக எழுதுகிறார். புத்தகமாகவோ / பாக்யாவில் தொடராகவோ வரும்பட்சத்தில் அதற்கான இடத்தை அது கண்டிப்பாகத் தக்க வைத்துக் கொள்ளும். வாழ்த்துக்கள் அண்ணா.

சரி நம்ம கதைக்கு வருவோம்... 

என்னுடைய சிறுவயதில் திரையிசையில் ராஜாவின் ஆட்சி என்பதால் அதிகம் விரும்பிக் கேட்கும் பாடலாய் இளையராஜாவின் பாடல்களே இருக்கும். அதன் பின்னே ஏ.ஆர். ரஹ்மான், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், தமன் இன்னும் பலர். 

நாம் கேட்ட, ரசித்த பாடல்களில் நமக்கு மிகவும் பிடித்த பாடல்கள், நம்மைப் பாதித்த பாடல்கள் என தனிப்பட்ட பாடல்கள் நிறைய இருக்கும் அல்லவா. அப்படி எனக்குள் இருக்கும் பாடல்களைப் பற்றித்  தொடர் பதிவாய்ப் பார்க்கலாம்.

எப்பவுமே நம் மனநிலையை மாற்றுவதில் இசைக்குப் பெரும் பங்குண்டு. அதுவும் கிராமத்துத் திருவிழாக்கள், இறப்பு, திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் வாசிக்கப்படும் மேளம், நாதஸ்வரம், தப்பு, உறுமி போன்றவை நம்மை இடம் மறந்து ஆட வைக்கும். அடக்கி வைத்தாலும் தலையோ, கையோ, காலோ தானாக ஆட்டம் போடும்...  அப்படிப்பட்ட இசையை சினிமாப் பாடல்களுக்குள் நிறைத்தவர் என்றால் அது இளையராஜாதான். நானே பெரியவன் என்ற அவரின் பேச்சுக்களும் அதற்கான எதிர்ப்புக்களும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் பாட்டை ரசிக்கும் நமக்கு அது தேவையில்லாதது. நம்மைத் தாலாட்டும் இசைத் தகப்பன் அவர் என்பது மட்டுமே அவரைக் கொண்டாடப் போதுமானது. நாம் 80,90 களின் ராஜாவோடு பயணிப்போம். இப்போதைய மேடைகளில் ராஜாவுடன் நிற்கவேண்டாம்.

எத்தனை பாடல்கள்... எத்தனை ராகங்கள்.... எத்தனை ரகங்கள்... 

அதிலும் குறிப்பாய் சில கூட்டணிகளைச் சொல்லலாம். என்றும் அழியாத ஜீவனுள்ள பாடல்களைக் கொடுத்த இணை இவர்கள்...

இளையராஜா - மோகன்... 

இளையராஜா - முரளி... 

இளையராஜா - சத்யராஜ்...

இளையராஜா - கார்த்திக்... 

இளையராஜா - பிரபு...

இளையராஜா - இராமராஜன்...

இப்படியான  கூட்டணி கொடுத்த பாடல்களை இப்போதும் ரசிக்காமல் இருக்க முடியுமா..? 

இளையராஜா - ரஜினி, இளையராஜா - கமல் கூட்டணியைவிட மேலே சொன்ன கூட்டணிகள்தான் மிகவும் சிறப்பான பாடல்களைக் கொடுத்திருக்கின்றன என்பது என் எண்ணம். ஒரு மேடையில் கமலுக்குத்தான் நல்ல பாடல்களைக் கொடுத்தார் ராஜா என ரஜினி சொல்லியிருப்பார்... அப்படி எதுவும் தெரியவில்லை... இருவருக்குமே சிறப்பான பாடல்கள்தான் கொடுத்திருக்கிறார்.

பட்டிதொட்டியெல்லாம் டீக்கடை, பேருந்துக்கள் என இப்போதும் அவை மக்களைத் தாலாட்டிக் கொண்டுதானே இருக்கின்றன. இரவுப் பயணமென்றால் ராஜா மட்டும் போதும் என்பதாய்த்தான் மனம் விரும்புகிறது இல்லையா...? இதில் 2000க்கு அப்புறம் பிறந்தவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம்...அவர்கள் எல்லாம் 'ஆராமலே...' கேட்பவர்கள்.  அறுபதுகளின் பாடல் நமக்கு சற்றே தள்ளித் தெரிவது போல்தான் தொன்னூறுகளின் பாடல்கள் அவர்களுக்குத் தள்ளியே தெரியும் என்றாலும் எல்லாத் தலைமுறைக்கும் பிடித்த பாடல்கள்தானே அவை.

ரஹ்மான் வித்தியாசனமான இசையைக் கொடுத்தார். ரஹ்மானின் மெலோடிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல் தேவாவின் கானாக்கள்... கேட்டாலே உற்சாகம் கொடுக்கும் பாடல்கள் அவை... தேவாவுக்குப் பின் யார் கொடுத்த கானா கவர்ந்தது என்று யோசித்தால் என்னைப் பொறுத்தவரை தேவா இடத்திற்கு யாரும் நகரவில்லை என்றே சொல்லலாம்.

எனக்குப் பிடித்த பாடல்கள் என்ற வரிசையில் முதல் பாடலை அடுத்த பகிர்வில் பார்க்கலாம் என்பதால் எல்லாருக்கும் பிடித்த தாலாட்டுப் பாடல் பற்றிய என் நினைவுகளைக் கொஞ்சம் இந்தப் பதிவில் பார்க்கலாமே. 

தாலாட்டுப் பாடல்கள், நடவுப் பாடல்கள் குறித்தெல்லாம் தனிப்பதிவு எழுதியிருக்கிறேன். நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து விரிவாய் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்தப் பதிவுகளை இங்கு ஆரம்பித்தேன்... ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கையில் தேடல் என்றால் அது இணைய வழிதான் என்பதால் தேடும் முயற்சியில் ஒரு தொய்வு. அதை அப்படியே கிடப்பில் போட்டிருப்பதால் பதிவு எழுதும் எண்ணம் கனவாய்த்தான் இருக்கிறது. 

தாலாட்டுப் பாடல்கள் எப்பவுமே இனிமையானவை... அதைக் கேட்கும் போது ஏதோ ஒரு உணர்வு நமக்குள் எழும். அதனால்தான் சினிமாக்களில் வரும் தாலாட்டுப் பாடல்களைக் கொண்டாடுகிறோம்... ஏஞ்சாமின்னு உச்சி மோர்ந்து கண்ணான கண்ணேன்னு நாமும் பாடித் திரிகிறோம்.

இன்று தாலாட்டுப் பாடல்களை பெரும்பாலான வீடுகளில் கேட்கமுடிவதில்லை... அழும் பிள்ளையின் கையில் செல்போன் கொடுக்கப்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது. செல்போனைப் பிடிங்கினால் அவன் அழுவான் எனச் சொல்லும் சொந்தங்களையே அதிகம் பார்க்க முடிகிறது. அந்தச் செல்போனால் குழந்தைக்கு விளையப் போகும் கேடு என்ன என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. பட்டால்தானே புத்தி வரும். படும் வரை கொடுத்துக் கொண்டே இருப்போம்.

அவன் யூடியுப் எடுத்து அதுல பாட்டு ஓட விடுவான் தெரியுமான்னு மலர்ந்த முகத்துடன் சொல்வதில் நமக்கு அவ்வளவு பெருமை... அறியாத வயதில் யூடியுப் எடுக்கத் தெரிந்தவன் பத்து போவதுக்குள் பலதும் கற்று காதலுக்குள்ளும் காமத்துக்குள்ளும் போய்விடுகிறான். சமீபத்தில் நான் பார்த்த மலையாளப் படங்களில் நாலு படங்கள் பள்ளிக் காதல் கதைகள்தான்... சினிமாவும் இப்போ அப்படியான இடத்தை நோக்கி நகர்வதால்தான் பள்ளிச் சீருடையுடன் ரோட்டில் முத்தமிட்டுக் கொள்வதைக் காண முடிகிறது. 

எங்க அம்மா பாடும் தாலாட்டுப் பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கும். அதற்காகவே பாடச் சொல்வோம். ஏழு பேர் பிறந்த பெருங் குடும்பம் எங்களது... எங்க வீட்டில் அக்காள்கள் அண்ணன்களின் குழந்தைகளைத்  (இப்ப அவங்க எல்லாம் திருமணம் ஆகி குழந்தைகளுக்குத் தாய் தந்தை ஆகிவிட்டார்கள்) தொட்டியில் இட்டு அம்மா தாலாட்டுப் பாடுவார்கள். அழுகையை நிறுத்தவில்லை என்றால் இடையிடையே பூச்சாண்டி வர்றான், பூனை வருது, மியாவ்... மியாவ்.... என்ற மிரட்டல்களும் இருக்கும்.

'ரே.... ரே.... ரே....' என ஆரம்பித்து 'ஆராரோ.... ஆரிராரோ..' என அழகாய் ராகமெடுத்துப் பாட ஆரம்பிப்பார். நிசப்தமான இரவில் தாலாட்டும் அந்தக் குரலும் ராகமும் கேட்டுக் கொண்டே இருக்கச் சொல்லும்.

'மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூப் பந்தாலே...
அத்தை அடிச்சாரோ அரளிப்பூச் செண்டாலே...'

எனவரிகளில் மாமா, அத்தை, அப்பா என எல்லாருமே வருவார்கள். அவர்களை அடிச்சிடலாம், அவதாரம் போட்டிடலாம் என்றெல்லாம் வரிகளில் வரும். பாடலின் ராகத்தில் பக்குவமாய்க் குழந்தை தூங்கியிருக்கும். சில வேளைகளில் பாட்டு நின்றால் அழ ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு உடல் நலமில்லாத தினங்களில் அம்மா இரவெல்லாம் தூங்காமல் தாலாட்டிக் கொண்டிருப்பார்.

அம்மா இல்லாத நாட்களில் நாங்களும் பாடிப் பார்த்திருக்கிறோம்.... என் குழந்தைகளுக்கு அவ்வப்போது நானும் தாலாட்டுப் பாடலுடன் படப்பாடல்கள் கலந்து கலவையான பாடலைக் கொடுத்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் கிராமங்களில் வீட்டுக்கு வீடு தாலாட்டுப் பாடல் கேட்கும்... ஒவ்வொன்றும் வெவ்வேறு ராகத்தில் இருக்கும்... வரிகள் கூட வித்தியாசப்படும். இப்பல்லாம் தாலாட்டுப் பாடல்களும் இல்லை... பாடியவர்களில் பெரும்பாலானவர்களும் இல்லை... குறிப்பாக கிராமத்து வாழ்க்கையும் கூட்டுக் குடும்பமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.

பிறந்த குழந்தைக்கு காலையில் கண்ணில் நல்லெண்ணெய் ஊற்றி, இளம் வெயிலில் போட்டு வைப்பது என்பது இப்போது எங்கும் இல்லை... கண்ணில் எண்ணெய் விட்டால் ஒத்துக்காது... வெயில் ஒத்துக்காது... தூதுவளை, வேப்பிலை போன்ற மருந்துகள் ஒத்துக்காது... குறிப்பாக மண்ணுக்குள் விளையாடவே கூடாது என நாம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டோம்.... ஒதுங்கி வந்து விட்டோம்.

இங்கு பிலிப்பைனிகள் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பிறந்த குழந்தைக்கு கண்ணில் எண்ணெய் விட்டு கட்டிடத்துக்குக் கீழே கொண்டு வந்து வெயிலில் வைத்திருப்பதைத் தினமும் கடமையாகச் செய்கிறார்கள். அவர்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். இங்கிருக்கும் நம்மவர்கள் தமனா டவுசர் போட்டுப் பெண் பிள்ளைகளை வெளியில் கூட்டிச் செல்வதைப் பெருமையாக நினைக்கிறார்கள்.

நாம் பீட்ஸா, பர்கர்ன்னு பாஸ்ட்புட் அயிட்டத்துக்குள்ள நின்னுக்கிட்டு இருக்கோம்... இங்க பழைய சோற்றையும், நுங்கையும், சப்பாத்திக் கள்ளிப் பழத்தையும், புளியம்பளத்தையும், மிளகு தக்காளிப் பழத்தையும் பாக்கெட்டுல போட்டு வித்துக்கிட்டிருக்கானுங்க... நாம் மண்ணின் மனத்தை மட்டுமல்ல உடல் நலத்தையும் மெல்ல மெல்ல இழந்து கொண்டுதான் இருக்கிறோம்.... தமிழன்டா என்பதை மட்டும் விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு...

கண்மாயில் மடை வழி தண்ணீர் வயலுக்குப் போகாத நிலையில் எரவாமரம் கட்டி தண்ணீர் இறைக்க வேண்டும். பெரும்பாலான வருடங்களில் கதிர் அறுப்புக்கு முன் ஒரு தண்ணியோ அல்லது இரண்டு தண்ணியோ தேவைப்படும் போது இது போலாகிவிடும் அப்போது உடல்வலி தெரியாமல் இருக்கவும் வயலுக்கு இத்தனை மாத்து என்ற கணக்கு இருப்பதால் எவ்வளவு இறைத்திருக்கிறோம் என்பது தெரிந்து கொள்ளவும் பாட்டுப் பாடுவார்கள். ஒன்றிலிருந்து 110 வரை போய் திரும்ப ஒன்றுக்கு வரவேண்டும். 

இப்படிப் பாடுவதில் எங்கய்யா... அதாவது அப்பாவின் அப்பா.... பாடும் பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்... நம்மைக் கவரும் விதமாக, அதே நேரத்தில் நேர்த்தியான ராகத்தோடு, ஏற்ற இறக்கத்தோடு பாடுவார். இரவில் அவர் தண்ணீர் இறைக்கிறார் என்றால் தூரத்தில் போகும் போதே நமக்குத் தெரிந்துவிடும்... எங்கப்பாவும் பாடுவார்.... நாங்கள்ல்லாம்... ஹி.. ஹி... முயற்சித்திருக்கிறோம். எரவா மரம் புடிச்சி தண்ணீர் இறைக்கக் கத்து வைத்திருந்தோமே அது போதாதா..? இரட்டை மரம் போட்டு இறைக்கும் போது அப்பாவுக்குத் துணை மரமாய் நாங்கள் இறைப்போம்.

இதே மாதிரித்தான் நடவுப்பாடல், குலவைப்பாடல், ஒப்பாரிப்பாடல் என எல்லாவற்றுக்கும் பாடல்கள் இருந்தன, பாடினார்கள்... எல்லாமே வாய்வழிப் பாடல்கள் என்பதால் வாழ்வின் இறுதியை நோக்கிப் பயணிக்கும் அந்தத் தலைமுறைக்குப் பின் அந்தப் பாடல்களைப் பாடவும் ஆளில்லை... கேட்கவும் ஆளில்லை... குறிப்பாக பாடலின் வரிகள் முழுமையாத் தெரிந்தவர்கள் இப்போதைய தலைமுறையில் யாருமில்லை. 

இசையுடன் பாடலைக் கேட்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது... இல்லையா..?

அடுத்த பதிவில் இருந்து ஒவ்வொரு பாடலாக, அது தொடர்பான செய்திகளுடன் பார்ப்போம்.

பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.