மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

மனதில்பட்டது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனதில்பட்டது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஏப்ரல், 2016

நட்புக்காக... அகல் ஒரு பார்வை

வார, மாத இதழ்களுக்கு நிகராக மின்னிதழ்களும் மிகச் சிறப்பாக இணையத்தில் வலம் வருகின்றன.  அப்படி வரும் மின்னிதழ்கள் புதியவர்களை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் நண்பர் சத்யா.GP நடத்தும் அகல் மின்னிதழ் புதியவர்களுக்கான களமாக அமைந்துள்ளது. நண்பரும் மின்னிதழை மிகுந்த சிரத்தையோடு மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்.


அகல்  மின்னிதழுக்கு நான் சென்றது ஒரு சிறுகதைப் போட்டிக்காக... வழக்கம் போல் கதை அனுப்பினேன்... பரிசும் பெற்றது... பின்னர் அந்தப் பக்கம் போகவில்லை... ஒருநாள் புத்தகங்கள் அனுப்ப முகவரி கேட்டார். அன்று முதல் எங்களுக்குள்ளான நட்பு இணைய வழி விரிந்தது.  பிறகு அடிக்கடி முகநூல் அரட்டையில் பேச ஆரம்பித்தோம். இலக்கியம் எங்களை நெருக்கமாக்கியது. முகம் பார்க்க நட்பில் மனதறிந்து பழகும் கூட்டத்தில் ஒருவராய் அவர் என்னோடு இணைந்து கொண்டார்.

அதன் பின் எனது பரிசு பெற்ற கதை, வெளிநாட்டு வாழ்க்கை குறித்த கட்டுரை என எனக்கு அகலில் இடமளித்தார். ஏப்ரல் மாத இதழுக்காக காளையார் கோவில் குறித்து எழுதச் சொல்லி, தயங்கிய போது நீங்க எழுதுங்க நல்லா வரும் என்று சொல்லி எழுத வைத்து அதற்கென எட்டுப் பக்கங்களை ஒதுக்கியிருந்தார். உண்மையிலேயே இது மிகப் பெரிய விஷயம். நம்மேல் உள்ள நம்பிக்கையில் எழுத வைத்து அதை தனது மின்னிதழில் கொஞ்சம் கூட நீளத்தைக் குறைக்காமல் அப்படியே எட்டுப் பக்கங்கள் பகிர்வது என்பது மிகப் பெரிய விஷயம். அப்படிப்பட்ட... எழுதுபவர்களை ஊற்சாகப்படுத்தும் நண்பர் சத்யா அவர்கள் பதிப்புத் துறையிலும் கால் பதித்து திரு. ம. தொல்காப்பியன் அவர்களின் திறனாய்வுப் பார்வையில் ரஜினிகாந்த், திரு. மதுமதி அவர்களின் பொன் வாத்துப் பருக்கள் என்ற இரண்டு புத்தகங்களை அகல் மூலமாக வெளியிட இருக்கிறார். 

சரி இதெல்லாம் இங்க எதற்கு என்று நினைக்கிறீர்களா? அகல் மின்னிதழ் குறித்து சில கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொள்வதுண்டு. இந்த சித்திரைச் சிறப்பிதழைக் குறித்து அவருடன் பகிர்ந்து கொள்வதைவிட ஒரு பதிவாக ஆக்கினால் நட்புக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும் அல்லவா... அதனால் இதழ் குறித்தான பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

81 பக்கங்கள் கொண்ட அகல் தமிழ்ப் புத்தாண்டு இதழ் மிகச் சிறப்பான கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கள், கவிதைகளைத் தாங்கி கலக்கலாய் வந்திருக்கிறது. இதழை மிகச் சிறப்பாக கொண்டு வந்த திரு. GP.சத்யா அவர்களுக்கும் அவருக்கு வடிவமைத்துக் கொடுக்கும் அவரின் நட்பு வட்டத்துக்கும் இதழினை தங்கள் தளத்திலும் பகிர்ந்து கொள்ளும் பிரதிலிபி நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள். 

இனி ONE by ONE - ஆக என் பார்வையில்...


* வழக்கம் போல் சத்யா அவர்களின் முதல் பக்கம் புதிதாய் இணைந்த எழுத்தாளர்களை வரவேற்றும் அகல் வெளியிட்டிருக்கும் இரண்டு புத்தகங்கள் குறித்தும் பேசியிருக்கிறது. இன்னும் நிறைய பேசலாம்...

* கவி ரசிகன் அவர்களின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக் கவிதை மிக அருமை. கவிஞருக்கு வாழ்த்துக்கள். 

* கார்த்திக் குமார் அவர்களின் திருக்குறள் கதைகள் இரண்டும் நன்று. நல்லதொரு முயற்சி... தொடரட்டும். இன்னும் வித்தியாசமாய் பயணப்படலாம் என்று நினைக்கிறேன். அடுத்தடுத்த கதைகளில் அதைச் செய்வார் என்று நம்பலாம்.

* கவிதைப் பக்கத்தை அலங்கரித்த அமுதா சுரேஷ், அகராதி, நிர்மலா கணேஷ், சக்தி கிரி, வேதா பிச்சாண்டி, வேத நாயக், ஷிவ சுப்ரமண்யம் ஆகியோரின் கவிதைகள் அருமை. இதில் அதிகம் கவர்ந்தவை சுயமி, விவசாயி. அதற்காக மற்ற கவிதைகள் சரியில்லையோ என்று நினைக்காதீர்கள். எல்லாக் கவிதைகளும் அருமை... என்னை மேலே சொன்ன கவிதைகள் கவர்ந்தது போல் மற்ற கவிதைகள் உங்களைக் கவரலாம்.

பரிசு பெற்ற சிறுகதையான கூடை ரொம்ப அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. எழுதிய ஹரிஷ் கணபதிக்கு வாழ்த்துக்கள். கதையில் ஒரு பெட்டியில் இருந்து கூடையை எடுத்துக் கொண்டு அடுத்த பெட்டிக்குச் செல்வதாக வரும்போது அந்தப் பெட்டியிலும் இருவர் பேசும் முதல் பெட்டியில் பேசியதன் தொடர்ச்சியாக வசனம் வருவது எப்படி என்று மனசுக்குள் கேள்வி எழுந்தது. அந்த இடத்தை கதையாசிரியர் கவனிக்கவில்லையா... இல்லை நான்தான் சரிவர புரிந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை இருப்பினும் கூடை ரொம்ப எதார்த்தமாய் வந்திருக்கு.

* Dr. நளினி அருண் அவர்களின் சுதந்திரமா... அடிமைகளா...  கட்டுரை இன்றைய நிலையை மிகத் தெளிவாகப் பேசியிருக்கிறது.

* கமலி ஆனந்த் அவர்களின் சித்திரலேகா புதிய தொடர்கதை ஆரம்பம் நல்லாயிருக்கு... போகப்போக வித்தியாசமாய் பயணிக்கும் என்றே உணர்கிறேன்.

* ஈஸ்வரி ரகு அவர்களின் உணவு(ம்) மருந்து கட்டுரை கீழாநெல்லி, நாயுருவி போன்ற நம் வயல்காட்டில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட செடிகள் குறித்துப் பேசியது. சித்தர் பாடலும் அதற்கான விளக்கமும் அருமை. ஒவ்வொரு மாதமும் பயனுள்ள கட்டுரையை பகிரும் எழுத்தாளர் ஈஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

* நிரோஷ் எழுதிய வாழ்வுதான் என் நோய் கதை வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது. கதையின் கருவை தலைப்பில் சொல்லிவிட்டதால் இதுதான் நோய் எனத் தெரிந்து விடுகிறது. தலைப்பை மாற்றியிருந்தால் இன்னும் சுவராஸ்யமாய் இருந்திருக்கும்.

மதுரம் பிரபாகர் அவர்களின் MP'S கிச்சன் நன்று.


* எஸ்.கே.மகேஸ்வரன் அவர்களின் தொடர்கதையான ஜமீன் ஸ்வர்ணம் எப்பவும் போல் கலக்கலாய்...

* பிரியா ராஜூ அவர்களின் மாறுபட்ட புதிய தொடரான கடிதம் மிக வித்தியாசமாய்.... இனி வரும் மாதங்களில் தொடர்ந்து கலக்குவார் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

* திரு. ரிஷபன் அவர்களின் மனிதம் சிறுகதைத் தொகுப்பு குறித்த சாயா சுந்தரம் அவர்களின் வாசிப்பு அனுபவம் நன்று.

* வெட்கங் கெட்ட நிலாவை ராஜா முகமது ரொம்ப சோகமாக முடித்து விட்டார்... முடிவு எதிர் பார்த்ததுதான் என்றாலும் சந்தேகப் பேயை விரட்டி பாஸிட்டிவ்வாக முடித்திருக்கலாமோ என்று என்ன வைத்தது.

* ஹைக்கூ கார்னரை இன்னும் பட்டை தீட்டலாம் என்று தோன்றியது. ஹைக்கூ எழுதும் நண்பர்கள் எழுதி அனுப்புங்கள்... நிறைய... நிறைவாய் வெளியிடலாம்.

* கார்த்திக் ஸ்ரீனிவாசன் அவர்களின் பகலொளி சேமிப்பு நேரம் குறித்த அறிவியல் விசித்திரங்கள் அறியாத விபரங்களை அறியத் தந்தது.

* ஸஃபார் அகமது அவர்களின் அன்புள்ள அப்பா என்ற ஒரு நிமிட சிறுகதை ஓகே ரகம். இன்னும் நிறைய எழுதுங்கள் ஆசிரியரே...

திரு. தமிழ்ச்செல்வன் அவர்களின் செல்வராஜ் அண்ணன் சிறுகதை வாழ்க்கையைப் பேசியது. அகல் ஏப்ரல் இதழில் மனம் கவர்ந்த கதை இது. வாழ்த்துக்கள் தமிழ்ச்செல்வன் சார்.

* சரத் பாபு அவர்களின் கொரியாவுட் என்ற கட்டுரை 'I SAW THE DEVIL' என்ற படத்தைப் பற்றிய விமர்சனப் பார்வை படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. படம் பார்க்க வேண்டும்.

பிரகாஷ் ராம்ஸ்வாமி அவர்களின் நம்பினால் நம்புங்கள்... படப்படப்போடு நகர்ந்தது.... இந்தக் கதையை ஒட்டி மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ஒரு வடக்கன் செல்பி என்ற சினிமா பார்த்த ஞாபகம். அதிலும் இது போல் இறந்தவனின் மெயில் ஐடி பயன்படுத்தி சாட்டிங் நடக்கும். அதை யார் செய்தார்... அந்தப் பெண் என்ன ஆனார்... என விரியும் கதை கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் விரியும்...  ஆனால் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நம்பினால் நம்புங்கள் அருமை.

* சிறகு ரவிச்சந்திரன் அவர்களின் சொக்கட்டான் ஆட்டம் தேர்தல் குறித்துப் பேசியது. அவரின் பார்வையில் ஜெ.. ஜெ... போட்டிருக்கிறார். ஆனாலும் இந்த முறை மக்கள் சிறப்பான முடிவை எடுப்பார்கள் என்றே தோன்றுகிறது.

* ஷாரா சித்தாரா அவர்களின் சோளக்கருது சிறுகதை நாம் வாசித்த கதைகளின் களத்தில்தான் பயணிக்கிறது... புதிதாகத் தெரியவில்லை. சென்ற இதழில் மிகச் சிறப்பாக எழுதியிருந்தார் என்று ஞாபகம். இன்னும் சிறப்பான கதைகளை எழுதலாம்.

* சிவக்குமார் அசோகன் எழுதும் ஜலசாவின் டைரியிலிருந்து எப்பவும் போல் சிறப்பு. நல்லாயிருக்கு... பல நியாபகங்களை கிளறிச் செல்லும்...

* நண்பர் சத்யாவின் சமூக (வலை) தளம் சிறுகதை மிகவும் வித்தியாசமான சிந்தனை... இவர் பெரும்பாலும் அஞ்சலிக் கவிதைகள்... ஐய்யய்யோ இருங்க தப்பா நினைச்சிடாதீங்க... நடிகை அஞ்சலி படம் போட்டு கவிதைகள் எழுதுவார். நிகழ்வுகளை எதார்த்தமாய்ப் பதிவார். இப்பல்லாம் குட்டிக் குட்டியாய் நிறைய கதைகள் எழுத ஆரம்பித்திருக்கிறார். இந்தக் கதை கூட பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸப், சாட்டிங், போன் என கலக்கலாய் நகர்கிறது. வாழ்த்துக்கள் (ஆன்மீக) எழுத்தாளர் சத்யா.

மொத்தத்தில் இந்த அகல் மின்னிதழ் எல்லாம் கலந்து பரிமாறப்பட்டிருக்கிறது. செல்வராஜ் அண்ணன் போன்ற வித்தியாசமான கதைகளுக்கும் தேர்ந்தெடுத்து பதியப்படும் ஹைக்கூக்களுக்கும் முன்னுரிமை கொடுக்கலாம். மற்றபடி கட்டுரைகள்... கவிதைகள்...எப்பவும் போல் சிறப்பாகவே பயணிக்கின்றன. வாசகர் கேள்விப் பதில் இந்த இதழில் ஆரம்பிப்பதாகச் சொல்லியிருந்தார்கள். ஆனால் இந்த இதழில் வரவில்லை... அடுத்த இதழில் வரும் என்று நினைக்கிறேன். இங்கு சொல்லியிருக்கும் கருத்துக்கள் என் மனதில்பட்டவைதான்... இன்னும் எழுதியிருக்கலாம்... பட்டை தீட்டலாம்... என்று சொல்லியிருப்பதை எல்லாம் தவறாக நினைக்க வேண்டாம்... மனதில்பட்டதை எழுதும்போது சிலவற்றை மறைத்து சிலாகிக்கப் பிடிப்பதில்லை... மற்றபடி எல்லா எழுத்தாளர்களுக்கும் கலக்கலாகத்தான் எழுதியிருக்கிங்க... வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

என்னடா இவன் இப்பத்தான் எழுதுறான்னு நினைக்காதீங்க அகல் நட்புக்களே... நேரமின்மை காரணமாகவே எழுத முடியவில்லை.

***
அகலை இணையத்தில் வாசிக்க... அகல் ஏப்ரல்-2016

PDF பைலை தரவிறக்கம் செய்து வாசிக்க...  அகல்

அகலுக்கு எழுத... : agal.emagazine@gmail.com

-'பரிவை' சே.குமார்.

சனி, 22 நவம்பர், 2014

ஜெயக்குமார் ஐயாவின் கரந்தை மாமனிதர்கள் - வாசிப்பு அனுபவம்

வாசிப்பனுபவம் கொடுக்கும் சந்தோஷத்தை மற்ற எதிலும் அனுபவிக்க முடியாது. தேடல் இருக்கும் மனிதனே சிறந்த எழுத்தாளனாக முடியும் என்று எங்கள் பேராசான் சொல்லுவார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவருடன் பழக ஆரம்பித்த பிறகுதான் கொஞ்சம் நல்ல புத்தகங்களை வாசிக்கும் அனுபவம் ஏற்பட்டது. பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள், எங்கள் ஐயாவின் சீனத்துக் கதைகள் மொழிபெயர்ப்பு மற்றும் பொன்னீலன், மீரா, அப்துல்ரஹ்மான், தோப்பில் முகமது மீரான் என பலரின் எழுத்துக்களை அவரால்தான் படிக்க முடிந்தது. 

என்னைப் பொறுத்தவரை பள்ளிக் காலங்களில் எல்லாம் குமுதம். ஆனந்த விகடன், பாக்யா, உதயம், க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்பவையே எனது வாசிப்பில் இருந்தன. கல்லூரிக்கு வந்த பின்தான் தாமரையும் செம்மலரும் சுபமங்களாவும் ஐயாவால் எனது வாசிப்பில் வந்தன. அப்படி வாசிக்க ஆரம்பித்து தாமரையில் கவிதையும் எழுதி எழுத்து வேட்கையையும் ஆரம்பிக்க காரணம் ஐயா. அவரின் வீட்டிற்குச் சென்றால் அவர் இருக்கும் அறைக்குள் எல்லாப் பக்கமும் புத்தகம் அடுக்கி இருக்கும். கீழே அவர் அமர்ந்திருக்கும் இடமும் வைத்தெழுதும் இடமும் தவிர்த்து எங்கும் புத்தகங்கள்... ஐயா எங்கே என்று நம்மளைத் தேட வைக்கும். அப்படி ஒரு சூழலில் அவருடன் அமர்ந்து படித்ததால்தான் இன்னும் எழுத்து என்னோடு உறவாடுகிறது போலும்.

My Photoபேச வந்த விசயத்தை மறந்தாச்சு பாத்தீங்களா..? ஐயா பற்றி பேசினால் அனைத்தும் மறக்கும் அப்படிப்பட்ட அன்பு அவரிடம் இருந்து எனக்குக் கிடைத்தது... கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னது போல் என்னிடம் தேடல் எல்லாம் எப்போது இருந்ததில்லை. இப்போது இங்கு வந்த போது அந்தத் தேடல் இருந்த இடமும் தெரியவில்லை. இணையத்தில் எத்தனையோ நல்ல எழுத்துக்களை வாசிக்கிறேன் என்பதே சந்தோஷம் என்றாலும் புத்தகங்கள் மூலமாக வாசித்து அதன் ருசியை அறியும் நிலை இல்லாதது ரொம்ப வருத்தமான விஷயம். ஏன்னா புத்தகத்தில் வாசிப்பது என்பதற்கும் இணையத்தில் வாசிப்பதற்கும் எனக்கு நிறைய வித்தியாசம் தெரிகிறது.

கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களின் வலைப்பூவை வாசிக்க ஆரம்பித்து அந்த எழுத்தில் லயித்து அவரை நேசிக்க ஆரம்பித்து விட்டேன் என்பதே உண்மை. அவரின் எழுத்துக்கள் பலரையும் இழுக்க முதல் காரணமே அவரது தேடல்தான். கணித ஆசிரியராக இருந்து கொண்டு தமிழ் மீது கொண்ட காதலால் அவரின் தேடுதல் வேட்கை தொய்வின்றி தொடர்கிறது. அவரின் பதிவுகள் பல வரலாற்றைப் பேசும்... இனி வரும் காலங்களில் வரலாறாய் பேசும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

வலையில் தொடர்ந்து எழுதினாலும் அபுதாபி என்ற தீவில் இத்தனை வருடங்களாக தனித்து விடப்பட்டுத்தான் இருந்தேன். வலைப்பூ வாசம் மட்டுமே வாழ்வின் மகிழ்ச்சிகளில் ஒன்றாய் இருந்தது. அமீரகத்தில் இருந்து நிறையப் பேர் வலைப்பூவில் எழுதுகிறார்கள் ஆனால் யாரும் யாரையும் சந்திக்கும் நிலை இல்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் சகோதரி மலிக்கா, ஆசியா அக்கா என வலையில் எழுதும் பெண் சகோதரிகள் கூடி பேசி மகிழ்ந்தார்கள். ஆனால் அது பின்னர் தொடர்ந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஆண் எழுத்தாளர்கள் யாரையும் யாரையும் சந்திக்கவில்லை. காரணம் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் காலை அலுவலகம் சென்றால் இரவுதான் திரும்புகிறோம். இதில் எப்படி ஒருவருக்கு ஒருவர் சந்திக்க முடியும்.

நான் தேவா அண்ணனின் தீவிர வாசகன். இதோ துபாயில்தான் இருக்கிறார். ஆனால் அவருடன் பேசியது கூட இல்லை... சில மாதங்களுக்கு முன்னர் தொடர்பில் வந்தார். இப்போது தொலைபேசி எங்களை இணைத்து வைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான் அண்ணன்கள் கில்லர்ஜி மற்றும் மகேந்திரன் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. எழுத்து குறித்துப் பேச இரண்டு உறவுகள் கிடைத்த சந்தோஷம் என்றும் மறக்காது. நேற்று கில்லர்ஜி அவர்கள் இரண்டு நூலுக்கு விமர்சனம் எழுதியிருந்தார். அவருக்கு இட்ட கருத்தில் எனக்கு அந்தப் புத்தகங்களைக் கொடுங்கள் வாசித்து விட்டு தருகிறேன் என்று சொல்லியிருந்தேன். உங்க பில்டிங்குக்கு கீழ நிக்கிறேன்... வாங்க என ஒரு மணி நேரத்திற்குள் அழைப்பு... அவசரமாக இறங்கிப் போனால் புத்தகங்களைக் கொடுத்து விட்டு இவற்றை நான் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன். புத்தகங்களை மடக்கி கிடக்கி ஏதும் பண்ணீறாதீங்க என்ற நிபந்தனையுடன் கொடுத்தார். அப்போது அவரின் புத்தக நேசிப்பு பிரமிக்க வைத்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு புத்தக வாசிப்பு... இன்று காலை ஜெயக்குமார் ஐயாவின் புத்தகத்தை எடுத்தேன்... வாசித்து முடித்தேன்... எனக்கு என்ன பொறாமைன்னா... நாட்டுல ரொம்பப்பேரு ஊரு பேரைச் சொல்லுறதுக்கே யோசிப்பானுங்க.... நமக்கு எந்த ஊருன்னு கேட்டா... அது தேவகோட்டைக்கு பக்கத்துலங்க... ஒரு ரெண்டு கிலோ மீட்டர் கிழக்கே என்று சொல்லுவாங்களே தவிர கடைசி வரை ஊரைச் சொல்ல மாட்டானுங்க.. ரொம்பக் கேட்டா அது ஒரு ஊரு... தேவகோட்டையிலதான் இருக்கோம் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை எங்கள் ஊர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் இவரோ அங்கு பிறந்து... தவழ்ந்து... வளர்ந்து... படித்து... அங்கேயே ஆசிரியராகி... தன்னை விளைவித்த மண்ணில் இன்று வித்தாக நிற்கிறார். நமக்கு அப்படி ஒரு கொடுப்பினை இல்லையேன்னு ஐயா மேல பொறாமை வரத்தானே செய்யும்.

ஐந்து கட்டுரைகள்... அதில் சொல்லியிருக்கும் ஐவரும் தமிழுக்காக வாழ்ந்தவர்கள். எத்தனை சிறப்பான மனிதர்களை இத்தனை சிறிய புத்தகத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது. கரந்தையில் பிறந்து அங்கு தமிழ்ச்சங்கம் வளர்த்து வானளாவிய புகழை அடைய வைத்த பிரமாக்கள் குறித்த தேடலில் நமக்கு அரிய செய்திகளை அழகாய்த் தந்திருக்கிறார். இந்தக் கட்டுரைகளை இவரது வலைப்பூவில் வாசித்திருக்கிறேன். அற்புதமான தேடல்... அருமையான புத்தகம்... காணாமல் போய்க் கொண்டிருக்கும் வரலாற்றில் சில பக்கங்களை தேடித் தேடி எடுத்து நமக்கு தெவிட்டாத பாலமுதாய் தந்திருக்கிறார்.

செந்தமிழ் புரவலர் தமிழ்வேள் த.வே. உமா மகேசுவரனார் என்ற முதலாவது கட்டுரை அவர் வேலை பார்க்கும் பள்ளியின் நிறுவனரும் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் முதலாவது தலைவராக இருந்த உமா மகேசுவரனார் பற்றியது. இவர் காலத்தில் தமிழுக்கு ஆற்றிய பங்கு, இவரின் பேச்சு மூச்சு எல்லாமே தமிழ் நிரம்பி இருந்தது என விரிவாகச் சொல்கிறார். இவரின் காலத்தில்தான் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு கரந்தை தமிழ் வழக்கு கொண்டு வரப்பட்டது என்றும் சொல்லியிருக்கிறார். 

இரண்டாவது கட்டுரை நேசமே சுவாசமாக... இதில் நட்பின் இலக்கணம் போற்றிய தமிழறிஞர்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். சேரமானும் சுந்தரரும் போல, கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் போல, அவ்வையும் அதியமானும் போல இருந்த நட்பில் கவியரசு அரங்க. வேங்கடாசல்ம் பிள்ளை அவர்களைப் பற்றி சிலாகித்திருக்கிறார். தனது ஆசானான குயிலையா என்ற ஆர்.சுப்பிரமணிய ஐயருக்கு செலுத்தும் குருதட்சணையாக ஆசானாற்றுப்படை எழுதியவர் இவர். சாகும் தருவாயில் கூட கரந்தையில் இருந்து தனது சொந்த ஊரான மோகனூருக்கு சகோதரர் அழைத்தும் செல்லவில்லை என்பதைச் சொல்லி அவர் மகன் கரந்தை தமிழ்ச் சங்கம் மோகனூருக்கு வந்தால்தான் அப்பா அங்கு வருவார்கள் என்று சொன்னதாகச் சொல்லியிருப்பதில் இருந்து அந்த மனிதரின் தமிழ்ப்பற்று நமக்கு புலப்படுகிறதல்லவா?

கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீண்ட பயணம்.. என்ற கட்டுரையில் ஒரு மனிதர் தேடலுக்காக வாலிபத்தையும் வருடங்களையும் தொலைத்த நிகழ்வைப் பகிர்ந்திருக்கிறார். கண்ணகி பயணித்த பாதையில் பயணித்து தேடலைத் தொடங்கிய பேராசிரியர் சி. கோவிந்தராசனார் அவர்கள் ஏதோ சில நாட்கள் தேடலோடு நிறுத்தவில்லை... 17 ஆண்டுகள் மனிதர் கண்ணகியின் அடிச்சுவடை பற்றி நடந்து வேங்கைக் கானல் என்ற இடத்தில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பெற்ற கண்ணகி கோவிலை கண்டு பிடித்தார். அதை தமிழகத்திற்கு கண்டெடுத்துக் கொடுத்த ஐயா கோவிந்தராசனார் 94 வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். காலப்பெட்டகம் ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்.

கரந்தை காந்தி என்ற கட்டுரையில் உமா மகேசுவரனாரின் மைத்துனரான ச.அ.சாம்பசிவம் பிள்ளை பற்றிச் சொல்லியிருக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை பணியாளராக இருந்து தமிழ் மேல் கொண்ட காதலால் ஆங்கிலேயரின் கீழ் அடிமை வாழ்வு வாழணுமா என காந்தி ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த போது வேலையை உதறிவிட்டு கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ஐக்கியமானார். காந்தி மேலாடை துறந்த போது இவரும் துறந்திருக்கிறார். அன்று முதல் கரந்தை காந்தி ஆகிவிட்டார்.

அடுத்த கட்டுரை தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த மருத்துவர் கரந்தை தர்மாம்பாள் பற்றியது. பெண்கள் மாநாட்டிற்கு அவர்கள் அழைத்திருந்த ஆண் சிங்கம் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டத்தை அந்த மாநாட்டில் வைத்து இவர் கொடுத்ததையும் தமிழாசியர்களுக்கு நல்ல ஊதியம் கேட்டு இழவு வாரம் என்ற போராட்டத்தை இவர் நடத்தி வெற்ரி கண்டதையும் பகிர்ந்திருக்கிறார்.

மொத்தத்தில் கரந்தை மாமனிதர்கள் மிகச் சிறப்பான புத்தகம். அதுவும் ஐயாவின் வசீகரிக்கும் எழுத்தில் வாசிக்கும் போது இன்னும் சிறப்பாக இருக்கிறது. இதைப் படிக்கும் போது நாமெல்லாம் பொழுது போக்குக்காக எழுதும் போது இவரிடம் எத்தனை தேடல்... எப்படிப்பட்ட தேடல்... வரலாறை வாழ்விக்கச் செய்யும் மகத்தான தேடல் ஆச்சர்யப்பட வைத்தாலும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

ஜெயக்குமார் ஐயாவுக்கு, இது விமர்சனப் பகிர்வு அல்ல... ஒரு மாணவனின் வாசிப்பனுபவம் மட்டுமே.

வெளியீடு :

பிரேமா நூலாலயம்
சிங்காரம் இல்லம்
48 ஏ, தமிழ் நகர் மூன்றாவது தெரு
மருத்துவக் கல்லூரி சாலை
தஞ்சாவூர்.

விலை : ரூ.50 மட்டுமே.

வலைப்பூ முகவரி : கரந்தை ஜெயக்குமார் 

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 15 செப்டம்பர், 2014

சந்தோஷ விரு(ந்)து

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் எனக்கு விருது. இம்முறை எங்கள் தேவகோட்டைக்காரரான சகோதரர் திரு.கில்லர்ஜி அவர்களிடமிருந்தும் மணப்பாறை ஆசிரியர் அ.பாண்டியன் அவர்களிடமிருந்தும் 'VERSATILE BLOGGER' (பன்முகப் பதிவர்) விருது கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி... சந்தோஷம்... நன்றி.

இந்த வாரத்தில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என்றுதான் முதலில் பதிவை ஆரம்பித்து முடித்திருந்தேன். இந்தப் பதிவை பகிரப் போகும் போது எனக்கு ஒரு பின்னூட்டம் வந்திருக்க... ஆர்வக் கோளாறில் அதை முதலில் திறந்து பார்த்தால்... அட நம்ம சகோதரர் ஆசிரியர் பாண்டியன் அவர்கள் ஒரு விருதை அளித்திருப்பதைத் தெரிவித்திருந்தார். இரட்டிப்பு சந்தோஷத்தோட மூன்றாவதாய் ஒரு சந்தோஷம்... சகோதரருக்கு நன்றி.

முதலாவது சந்தோஷம் சனிக்கிழமை அன்று தேனம்மை இலட்சுமணன் அவர்கள் தனது சும்மா வலைப்பூவில் சாட்டர்டே ஜாலிகார்னர் என்ற பகிர்வுல் என்னைப் பற்றி பகிர்ந்திருந்தார்.  இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தோஷம்  என்னவென்றால் கில்லர்ஜி மற்றும் பாண்டியன் எனக்களித்த விருது.  

இங்கு ஒன்று சொல்லிக்க நினைக்கிறேன். தேனக்கா போன்ற செட்டிநாடு கண்டெடுத்த மிகச் சிறந்த எழுத்தாளரின் மனதில் தம்பியாய் இடம் பிடித்து அவரது வலைப்பூவில் எனக்கான... என்னைப் பற்றிய கட்டுரை வரவும்... எங்க தேவகோட்டைக்காரரான கில்லர்ஜி மற்றும் ஆசிரியர். பாண்டியன் மனதில் எனக்குக் கொடுக்கலாம் என்று தோன்றவும் காரணமாக அமைந்த என் தாய்த் தமிழுக்கு நன்றி. 

இணையத்தில் சுற்றி வரும் இந்த விருது நம்மைப் பற்றி மற்றவர்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாக அமையும் விதமாக விருது பெற்றவர்கள் செய்ய வேண்டியது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்... அதன்படி நாமும் செய்ய வேண்டுமல்லவா... சரி என்ன செய்யணும்... ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்...

முதல்ல என்னைப் பற்றி...

என்னைப் பற்றி நிறையத் தடவை சொல்லிட்டேன்... இருந்தாலும் சபை நாகரீகம் கருதி மறுபடியும் சொல்லிவிடுகிறேன்.. தேவகோட்டைக்கு அருகில் இருக்கும் சிறிய கிராமமான பரியன்வயலில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எழுவரின் நான் ஆறாவது... அதனால் குமாரசாமி என நாமகரணம் சூட்டப்பட்டு பள்ளிப் பதிவேட்டில் குமார் ஆனேன். படித்தது... எம்.சி.ஏ.,  தற்போது ஊரில் இருக்கும் அன்பான மனைவி (நித்யா) அழகான, அறிவான செல்லங்கள் (ஸ்ருதி, விஷால்) பற்றிய முழுநேர நினைவுகளுடன் அபுதாபியில் கணிப்பொறியோடு காலம் கழிக்கிறேன்.   அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி என இறைவன் கொடுத்த சொந்தங்களுடன் சச்சரவுகள் இல்லாமல் கடைசி வரை அன்போடு வாழ வேண்டும் என்று நினைப்பவன் சராசரி விவசாய குடும்பத்தான்.  

மற்றபடி கதை, கவிதை. கட்டுரைகள் எழுதுண்டு... நல்லா எழுதுவேனான்னு எல்லாம் கேட்கக் கூடாது... ஏதோ எழுதுவேன்... எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக சீனா ஐயா வலைச்சரத்தில் எனக்கு இருமுறை ஆசிரியப் பணி கொடுத்ததும் பலரால் பலமுறை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும் மறக்க முடியாத நிகழ்வுகள். மனசு நாங்கள் கல்லூரியில் நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயர். அதையே வலைப்பூவுக்கு வைத்தேன். ஊர்ப் பெயரைச் சொல்வதில் சந்தோஷம் கொள்பவன் என்பதால் பேருக்கு முன்னே 'பரிவை' என சுருக்கமாக வைத்து எழுத ஆரம்பித்தேன். தற்போது வலை நட்புக்களுக்கு 'பரிவை' சே.குமார் 'மனசு' குமாராயிட்டேன். 

நான் கிறுக்கிய சில கிறுக்கல்கள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வந்திருக்கின்றன. இதற்கு மேல் சொல்ல இன்னும் அப்படி ஒன்று பெரிதாக சாதித்து விடவில்லை. சிலதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது இருந்தும் அதற்கான நேரம் இன்னும் வாய்க்கவில்லை... காத்திருக்கிறேன்... காலம் சொல்லும் பதிலுக்காக...

(அப்ப முதலாவது படியைத் தாண்டியாச்சு...)

இரண்டாவதாக தளத்தில் விருதை பதியணும்...

நட்பு கொடுத்த விருதுல்ல... பதிஞ்சிட்டாப் போச்சு... 

(ரெண்டாவது படியை சுலபமாய் கடந்துட்டோமுல்ல..)

மூன்றாவதாக முத்தாக வருவது விருதினைக் கொடுத்த தளத்தைப் பற்றி...

சகோதரர். திரு. கில்லர்ஜி, முகத்தில் விருமாண்டி மீசையுடன் வீரனாய் நிற்கும் இவருக்குள் பொதிந்து கிடக்கும் சோகங்களைப் படித்த போது மனசு வலித்தது. மிகப்பெரிய சோகத்தோடு விலை மதிப்பில்லா இரண்டு பொக்கிஷங்களைச் சுமந்து வாழும் இவர் பூவைப் பறிக்க கோடாரி எதற்கு என்று கேட்டு தனது வார்த்தைகளால் தமிழைத் தழைக்கச் செய்கிறார். 

சகோதரர். ஆசிரியர். அ.பாண்டியன் அவர்கள் சாதாரண வலிப்போக்கனாய் வாழ்க்கையை கடந்து செல்கிறேன் என்று சொல்லி துடிப்புடன் வீரிய விதைகளாய் பகிர்வுகளைப் பகிர்ந்து தமிழ் அரும்புகளை மலரச் செய்து கொண்டிருக்கிறார். 

இவர்கள் இருவரிடமும் நாங்கள் பெற்ற விருதுக்காக என் சார்பாகவும் நண்பர்கள் சார்பாகவும் மீண்டும் நன்றி.

(மூன்றாவதாய் சொன்னது உதட்டளவில் அல்ல... மனசுக்குள் இருந்து... 
அப்படா மூணாவது படியையும் தாண்டிட்டோமுல்ல......) 

இனி கடைசிப் படியான நாலாவது... 10 பேருக்கு விருதைப் பகிரணும்...

இங்கதான் சிக்கலே ஆரம்பம்... யாருக்கு கொடுத்தாங்க... யாருக்கு கொடுக்கலைன்னு கண்டுபிடிக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம்... ஏன்னா இந்த விருது வலைப்பூவில் சுத்தி வருது... வர்ற பதிவெல்லாம் விருது... விருதுன்னு வந்துக்கிட்டே இருக்கு... இவருக்கு கொடுக்கலாம்ன்னு மனசு நினைச்சா அவரு 'ஹையா விருது வாங்கிட்டேன்னு' பதிவை பறக்க விட்டுடுறாரு... தேடித்தேடி பிடிக்கலாம் என்றாலும் நான் நினைக்கும் சிலருக்கு கிடைத்திருக்கலாம்... சிலருக்கு கிடைக்காமலும் இருக்கலாம்.... 

அதனால... 

அதனால... 

அதனால.... 

அட எத்தனை அதனால... என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு... எங்களை வச்சி காமடி கீமடி பண்ணலையேன்னு வடிவேலு கணக்கா நீங்க பாக்குறது தெரியிது... இருங்க சொல்றேன்...

என்னைத் தொடரும் அந்த '311' பேருக்கும் இந்த விருதைச் சமர்ப்பிக்க்றேன்.... எல்லோரும் எடுத்துக்கங்க... 

விருது எடுங்க... கொண்டாடுங்க...

(நாலாவது படியில குதிச்சு ஓடி தப்பிச்சாச்சு... டேய் குமாரு ஓடிருலே...)

அட சொல்ல மறந்துட்டேனே... நன்றி மறப்பது நன்றல்லவே... எனவே  இதுவரை மனசில் வைத்து விருது கொடுத்த பிரம்மாக்களை மீண்டும் ஒரு முறை நினைவில் கொள்கிறேன்

விருது கிடைத்த வரிசையில்...
பத்மாக்கா, பா.ராஜாராம் சித்தப்பா, 'சிநேகிதன்' அக்பர், நண்பர் ஸ்டார்ஜன் (ஷேக்), மனோ அம்மா, சகோதரி ஆனந்தி, சகோதரர் அப்துல்காதர், ஜலீலா அக்கா, சகோதரி. பிரஷா, ஆசியா அக்கா, முனைவர் குணசீலன், ரமா அக்கா, சாகம்பரி அக்கா, நண்பர் எல். கே, ஐயா வை.கோ, தற்போது இந்த வரிசையில் அண்ணன் கில்லர்ஜி, சகோதரர். அ.பாண்டியன்.

அப்புறம் இந்தப் பகிர்வின் முடிவாய்...

ஏதோ எழுதினோம்... பத்திரப்படுத்தினோம்... பத்திரிக்கைகளுக்கு அனுப்பினோம்... என்று இருந்த எனக்கு இன்று வலைப்பூவின் மூலமாக உலகின் மூலை முடுக்கெல்லாம் உறவுகள்... அறிஞர்கள், புலவர்கள், பேராசியர்கள், தமிழாசிரியர்கள், ஆசிரியர்கள், ஐயாக்கள், அம்மாக்கள், அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், தம்பிகள், தோழன்கள், தோழிகள் என உறவுகளைக் கொடுத்தும்... சந்தோஷத்திலும் துக்கத்திலும் முகம் தெரியாமல் மனம் கொடுத்து வாழும் உறவுகளொடு என்னைப்  பயணிக்கவும் வைத்த இறைவனுக்கும் தமிழுக்கும் நன்றி. 

(உங்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட இந்த விருது இன்னும் சில தினங்களில் விருது அலமாரியை அலங்கரிக்கப் போய் விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்) 

-'பரிவை' சே.குமார்.

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

எனக்குள் பாரதி



செப்டெம்பர் 11 மகாகவி பாரதியின் நினைவு தினம். நேற்று நண்பர்களின் பகிர்வில் எல்லாம் எட்டையபுரத்துக் கவி பாரதிதான் நிறைந்திருந்தார். நானும் பாரதி நினைவு நாளில் பகிர எண்ணிய கட்டுரைதான் இது. பதினோரு மணி நேரம் வேலை செய்து வீட்டுக்கு வந்ததும் கட்டுரை ஆரம்பிக்கும் போதே நித்திரை அழைத்து விட்டது. அதனால் இன்று பகிர்கிறேன். நாள் மாறினாலும் நானும் பாரதியை மறக்கவில்லை அல்லவா?

பாரதி... பள்ளிப் பருவத்தில் இந்த மூன்றெழுத்தின் மீது காதல் எல்லாம் இல்லை. பாடத்தில் இருக்கும் பாரதியின் வரிகளை மட்டுமே பரிட்சைக்காக மனப்பாடம் செய்வதோடு சரி. பாரதி குறித்து அறிந்தது போதுமென தமிழய்யாக்களுடனும் அதிக தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.

கல்லூரிக்கு வந்தும் பெரிதாக தமிழ் மீதான ஆர்வம் வரவில்லை. பழனி ஐயாவிடம் பழகும் முன்னர் என் நண்பன் முருகனின் மூலமாக தமிழார்வம் கொஞ்சம் தழைக்க ஆரம்பித்தது. அப்போதுதான் ஐயாவிடம் நெருக்கம் ஏற்பட்டு அவரோடு நிறைய விவாதிக்கும் மாலை நேரங்கள் அமைந்தன.

ஐயா வீட்டில் நாங்கள் அனைவரும் கூட்டமாக மாலை நேரங்களை ஆக்கிரமிக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் பாரதி என்னும் மீசைக் கவிஞன் என் நட்புக்கள் மற்றும் ஐயா மூலமாக என்னுள் புக ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில்தான் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் முருகன் உறுப்பினரானான். அவன் உறுப்பினரானதும் என்னையும் உறுப்பினராக்கினான். அப்போதெல்லாம் எனக்கு அந்தளவுக்கு ஈடுபாடு இல்லை. எதோ அவனுக்காகவும் ஐயாவுக்காகவும் அவர்களோடு பேசியபடி மாதக் கூட்டங்களுக்குச் செல்வேன்.

பாரதி கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களில் முருகன் கதை, கவிதை என எல்லாம் வாசிப்பான். அவனுக்கு பேசிக் கொண்டே இருப்பது பிடிக்கும்... எனக்கு பேசாமல் இருப்பது பிடிக்கும் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அதனால் அவன் மேடையில் வாசிப்பான்... நான் பார்வையாளனாய் ரசிப்பேன் இரண்டாவது முறையாக... அதென்ன இரண்டாவது முறையாக என்று யோசிக்கிறீர்களா? முதல் முறைதான் வீட்டில் என்னை உட்கார வைத்து ஏற்ற இறக்கத்தோடு பேசிக் காட்டிவிடுவானே. அதான் இரண்டாவது முறை ரசித்தேன் என்று சொல்கிறேன். பாரதி குறித்து பக்கம் பக்கமாகப் பேசுவான்.. அரங்கம் அதிரும் கைதட்டல்களை அள்ளுவான். பாரதியை பருக இவனும் முக்கியக் காரணிதான் எனக்கு.

சவரிமுத்து ஐயா என்னிடம் நீங்களும் ஏதாவது வாசியுங்கள் என்று சொல்வார். ஆனால் வாசிப்பதில்லை... பாரதி விழா வருடம் ஒருமுறை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்... ஊர்வலம் கவியரங்கம் என எல்லாம் நடத்தப்படும். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வோம். திரு. பொன்னீலன், கவிஞர் மீரா, அப்துல்ரஹ்மான் என இன்னும் நிறைய அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொள்வார்கள்.  எல்லோருடனும் பழகும் வாய்ப்பு பாரதி என்னும் மீசைக் கவிஞனை நேசிக்க ஆரம்பித்த போதுதான் கிடைத்தது.

கதை, கவிதை எல்லாம் எழுதி வந்தாலும் மேடை ஏறுவது என்பது ஒவ்வாத காரியமாகவே இருந்த வேளையில் ஒரு பாரதி நினைவு நாள் அன்று ஆர்ச் பூங்கா அருகில் பொதுவெளியில் சவரிமுத்து ஐயா தலைமையில் சிறிய கவியரங்கம். முருகன், பாலண்ணா என பெரிய ஆட்கள் வாசிக்க இருக்கும் கவியரங்கம். இந்த முறை சவரிமுத்தய்யா என்னை அழைத்து 'தம்பி நீங்க கண்டிப்பாக கவிதை வாசிக்கிறீங்க' என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார். பாரதி விழா நடக்கும் இராம ஏகம்மை மண்டபத்துக்குள்ளயே வாசிக்கப் பயப்படுவோம்... வெட்டவெளியிலா என்று யோசித்தாலும் ஐயாக்களின் விடாப்பிடி சரி வாசித்துப் பார்ப்போம் என ஜாம்பவான்களுடன் களத்தில் இறங்க வைத்தது.  

அவர்கள் எனக்குக் கொடுத்த தலைப்பு மறந்துவிட்டது... அந்தத் தலைப்பை ஒட்டி கவிதை என்று ஒன்றை எழுதி முருகனிடம் வாசித்துக் காட்டி இது எனக்குத் தேவையா... விழாவுக்கு வராமல் இருந்திடவா என அவனிடம் கேட்டு திட்டு வாங்கி அவன் கையால் திருத்தங்கள் செய்து அதை மீண்டும் ஐயாவிடம் கொடுத்து திருத்தம் செய்து விழா நாளில் மாலை வெட்டவெளியில் வாசித்தாயிற்று.

வாசிக்கும் போதே கை காலெல்லாம் ஆட்டம் எடுத்துவிட்டது. இருந்தும் பயத்தோடு முடித்து அமர்ந்ததும் கைதட்டல் கேட்க சந்தோஷமாக இருந்தது. விழா முடிந்து எல்லோரும் கிளம்பியதும் ஐயா அருகே வந்து தோளை அணைத்து 'நல்லாத்தானே வாசிச்சீங்க... கொஞ்சம் சத்தமாக வாசித்திருக்கலாமே... பயத்துல சத்தம் வரலையா?' என்றார். 

பாரதி... கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது எனக்குள் நுழைந்து இன்றும் என்னுள்ளே கவிதை ஆளுமாக சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கிறார். நேற்று நிறையக் கட்டுரைகள் படித்தேன்... அதில் தேவா அண்ணனின் கட்டுரையும் ஜெயக்குமார் ஐயாவின் கட்டுரையும் என்னை மிகவும் கவர்ந்தன. அருமையான கட்டுரைகள்.... அந்தளவுக்கு என்னால் பாரதி குறித்து எழுத முடியாது. இருந்தும் எனக்குள் பாரதியை என்னால் சொல்ல முடிந்தளவு சொல்லியிருக்கிறேன்...

சொல்ல மறந்துட்டேனே... இன்று கதைகள் கவிதைகள் எழுதினாலும் பாரதிக்காக பாரதி விழாவில் நான் வாசித்த கவிதையே மேடையில் நான் வாசித்த முதலும் கடைசியுமான கவிதை. பின்னர் வந்த நாட்களில் எனது கதைகளை பாரதி மன்றத்தில் அறிஞர்கள் முன்னர் வாசித்து விமர்சனங்களையும் கேட்டிருக்கிறேன்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி...
எட்டையபுரத்துக் கவி பாரதி...
கண்ணம்மாவைக் காதலித்த பாரதி...
செல்லம்மாவின் கணவன் பாரதி...
பெண் விடுதலை பேசிய பாரதி...
காணி நிலம் கேட்ட பாரதி...
விடுதலை வேள்வி பாரதி...
மீசைக் கவிஞன் பாரதி...
முண்டாசுக் கவிஞன் பாரதி...
எங்கள் நேசக் கவிஞன் பாரதி...

பாரதியை நினைவு நாட்களிலோ பிறந்த நாட்களிலோ நினைக்காமல் எல்லா நாளிலும் நினைவில் நிறுத்துவோம்...

வாழ்க நீ எம்மான்...

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 16 ஜனவரி, 2014

விஜய் டிவி நிகழ்ச்சி : பெண்களே வரம்பு மீறலாமா?

ன்று தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கின்றன. இப்போதெல்லாம் பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 

இந்தப் பொங்கலுக்கு விஜய் தொலைக்காட்சியில் நடந்த கேவலமான ஒரு நிகழ்ச்சி குறித்து நம்ம முத்துநிலவன் ஐயா அவர்கள் தனது பகிர்வில் வருந்தியிருந்தார்கள். ஐயாவின் பகிர்வு பார்த்ததும் நானும் அந்த இணைப்பில் போய் பார்த்தேன். கேவலத்தின் உச்சம் அது. இன்று முகநூலில் கூட பல நண்பர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.



இந்த நிகழ்ச்சி பார்த்தபோது எனக்குத் தோன்றியது ஒன்றே ஒன்றுதான்... இவ்வளவு கேவலமாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்து கொள்ளும் இந்தப் பெண்களுக்கு குடும்பம் என்று ஒன்று இருக்கும்தானே... கூத்தடித்து விட்டுப் போனால் ஆஹா... மகளே குடும்பக் கௌரவத்தை காப்பாற்றிவிட்டாய் என  உச்சி முகர்ந்து திருஷ்டி சுற்றிப் போடுவார்களோ என்பதுதான்.

ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்று சொல்கிறோம். உண்மைதான் இங்கு பெண்களை அடிமைப்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற நிலை எல்லாம் இப்போது இல்லை. இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் ஜெயிக்கிறார்கள்... ஜொலிக்கிறார்கள். இந்த வளர்ச்சி... வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வீறு நடை போடும் இந்த எழுச்சி பாராட்டுதலுக்குரியது. 

உலகமெங்கும் பார்க்கப்படும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வளவு கீழ்த்தரமாக படிக்கும் பெண்களால் நடந்து கொள்ள முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறது சிவகார்த்திகேயனை வைத்து விஜய் தொலைக்காட்சி வழங்கிய எங்க வீட்டுப் பிள்ளை என்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி.

இந்தத் தொலைக்காட்சியில் அது இது எது என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமாக சினிமாவுக்குள் போய் தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழ்ச் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் சிவகார்த்திகேயன். அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது என்பது எல்லாரும் அறிந்ததே. தங்கள் தொலைக்காட்சி மூலமாக மிகப்பெரிய இடத்தை அடைந்த ஒருவரை வைத்து நிகழ்ச்சி நடத்தி தங்களது டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொள்ளச் செய்யும் நிகழ்ச்சிதான் இது என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் சிவகார்த்திகேயனை கேவலப்படுத்தியதுடன் நமது கலாச்சாரத்தையும் கழுவி ஊற்றிவிட்டார்கள்.

எத்தனையோ நல்ல நிகழ்ச்சிகளில் பெண்கள் இன்று கலக்கி வருகிறார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பெண் பொங்கல் ஊட்டிவிட்டு விட்டு தனக்கும் ஊட்டிவிடு என்று அடம்பிடிக்கிறாள். இங்கு இவர்களை ஒருமையில் சொல்லவே தோன்றுகிறது. எனக்கு ஒருமையில் சொல்வதென்பது பிடிக்காத ஒன்றுதான் இருந்தும் அவர்களில் அநாகரீகச் செயலுக்கு மரியாதையாய் எழுத மனம் வரவில்லை. இன்னொருத்தியோ முறுக்கு மீசை வைத்துப் பார்க்கிறாள். ஒருத்தியோ இவற்றிக்கெல்லாம் மேலாக கன்னத்தைக் கிள்ள வேண்டும் என்று சொல்லி கிள்ளி... தொகுப்பாளினியில் வேண்டுதலுக்காக மீண்டும் ஒருமுறை கிள்ளுகிறாள். உடனே நான் மட்டும் கிள்ளினேன்... நீங்க என் கன்னத்தைக் கிள்ளுங்க என்கிறாள். அவரும் நாணிக் கோணி கிள்ளுகிறார்.

இதற்கெல்லாம் உச்சமாக அவர்கள் கேட்ட கேள்வி ஒன்று இருந்தது. அதற்கு சிவகார்த்திகேயன் சொன்ன பதிலும் அதற்கு அவர்களும் தொகுப்பாளினியும் அளித்த பதில் என ஆபாசத்தின் உச்சம். அதை இங்கு சொல்ல விரும்பவில்லை. நிகழ்ச்சி பார்த்தவர்களுக்குத் தெரியும். பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த சிறப்பு மிக்க கேள்வியை கேட்ட பெண் சிவகார்த்திகேயன் சரியான பதிலைச் சொல்லவில்லை எனச் சொல்லி அதற்குத் தண்டனையாக தன்னைத் தூக்கிக் கொண்டு சுற்றி வர வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறாள். அவர் மறுக்க உடனே ஒரு பனியனில் லிப்ஸ்டிக் உதடை பதிய வைத்து அதை அணிந்து கொள்ளச் சொல்கிறார்கள். அபத்தத்தின் அரங்கேற்றம் இது.


சிவாவைப் பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகர் என்றாலும் தாய் வீட்டில் செய்யச் சொன்ன நிகழ்ச்சி என்பதால் மனம் வருத்தத்துடன் செய்திருக்கலாம் என்று தோன்றினாலும் இதெல்லாம் செய்வோம் என நிகழ்ச்சிக்கு முன்னரே அவரிடம் சொல்லியிருப்பார்கள். அப்படிச் சொல்லியிருந்தால் ஒரு குழந்தைக்கு தந்தையான அவர் எப்படி இதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் அவரும் என்னய வீட்டுக்குப் போக விடமாட்டீங்க போலவேன்னு எல்லாம் சொன்னார் என்றும் நாசூக்காக மறுத்தார் என்றும் நாம் அவருக்கு ஆதரவாகப் பேசலாம். சின்னக் குழந்தைகள் என்றால் பரவாயில்லை குமரிகளுடன் கூத்தடிப்பதற்கு நடிகனுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று நினைத்து கூத்தடித்தாரோ?

நடிகன் என்பவன் மனிதன் என்பதை ஏன் மறக்கிறீர்கள். ஒரு கூட்டம் நடிகனுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டு திரிகிறது. அதற்கு நடிகர் ஒருவரும் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். குடும்பம் குழந்தை குட்டி என்று ஆனாலும் இதுபோல் நடிகனின் பின்னால் அலையும் கும்பலை என்னவென்று சொல்வது? இதே நிலைதான் இன்று இந்தப் பெண்கள் மத்தியிலும்... அவனைப் பிடிக்கும் என்றால் அவனது படத்தைப் பாருங்கள்... ரசியுங்கள்... வேண்டாம் என்று சொல்லவில்லை... தெரு நாய்களாக பொதுவெளியில் நடக்காதீர்கள். அசிங்கம் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாழ்க்கையை அடியோடு பிய்த்துப் போட்டுவிடும்.

உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் என்பது நம் பண்பாடா என்ன... இப்படி கூத்தடித்ததை நீங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்... உங்கள் உறவுகளும் சந்தோஷப்படலாம். திருமண வாழ்க்கைக்குப் பின் உங்கள் துணை இந்த கிளிப்பிங்கைப் பார்த்தால் என்னவாகும் யோசித்தீர்களா? இதெல்லாம் இருந்தால்தான் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்கும் என்று அடித்துச் சொன்னீர்கள் என்றால் நாளை உங்கள் வாழ்க்கை நடுவீதியில் அல்லவா நிற்கும். சிந்தியுங்கள் பெண்களே... வெற்றி முழக்கமிடும் செயல்களில் முன் நில்லுங்கள்... நடிகனின் பின்னால் நாயாக அலையாதீர்கள்...இன்றைய சந்தோஷத்தைப் பார்க்காதீர்கள் நாளைய வாழ்க்கையையும் சேர்த்துப் பாருங்கள்.

இதே விஜய் தொலைக்காட்சியில் முன்பொருமுறை திவ்யதர்ஷிணி கமலஹாசனிடம் முத்தம் வேண்டும் என முத்தம் வாங்கினார். இங்கு நிகழ்ச்சியை நடத்தும் பெண்களுக்கு வேண்டுமானால் பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் கலந்து கொள்ளும் பெண்கள் வரம்பு மீறாமல் இருப்பதுதான் நல்லது. எந்த ஒரு காரியத்தையும் செய்துவிட்டு பின்னால் வருந்தி பலன் இல்லை. 


சில தினங்களுக்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர் பாடும்போது பார்வையாளர்கள் வரிசையில் இரண்டு குடும்பப் பெண்கள் ஆட்டம் போட்டார்கள். நிகழ்ச்சிக்காக சொல்லி ஆடினார்களா என்று தெரியாது. நடுவராக வந்திருந்தவர் சூப்பரா ஆடுனீங்கம்மா... குட் எண்டர்டெயின்மென்ட்... நான் ரொம்ப ரசிச்சேன் என்றார். அவர் ரசிக்கலாம்.... ஆனால் இதை பார்க்கும் உங்கள் சுற்றமும் நட்பும் கண்டிப்பாக ரசிக்காது. 

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை நல்ல செயல்களில் தட்டிக் கொடுங்கள்... இது போன்ற கேவலமான செயல்களுக்கு தடை போடுங்கள்... ஒரு போதும் ஊக்குவிக்காதீர்கள்... தொலைக்காட்சிகளே தயவுசெய்து உங்கள் டி.ஆர்.பிக்காக நமது கலாச்சாரத்தையும் கன்னியத்தையும் கொச்சைப்படுத்தாதீர்கள்.

முத்து நிலவன் ஐயா அவர்களின் இடுகையைப் படிக்க  இங்கே கிளிக் பண்ணுங்கள்.

நம்மை உலகுக்கு காட்டிய அந்த உன்னத நிகழ்ச்சியைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்..

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 2 ஜனவரி, 2014

கோ-ஆப்டெக்ஸ் நாயகன் சகாயம்


ருக்கு ஒரு கோ-ஆப்டெக்ஸ் இருக்கும். அதில் துணிகள் மற்றும் கைவினைப் பொருட்களை வைத்து விற்பனை செய்வார்கள். தேவகோட்டையிலும் ஒன்று இருந்தது. நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் சரஸ்வதி திரையரங்கிற்கு எதிரே கோ-ஆப்டெக்ஸ்ன்னு போட்டு வண்ணத்துப்பூச்சி படம் போட்டிருக்கும். பெரிய கடையா இருந்தது, ஆளில்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறேன்னு சொல்லுற கணக்கா ரெண்டு பேரு உக்காந்திருப்பாங்க. மீனில்லாத கம்மாயில துண்டியப் போட்டுட்டு உக்காந்திருக்க மாதிரி மீனுக்காக காத்திருப்பாங்க. பக்கத்துக்கடைக்காரன் அழிஞ்ச கண்மாயில மீனை அள்ளுற மாதிரி அள்ளிக்கிட்டு இருப்பான். 

தீபாவளிக்கு எல்லாக் கடையிலும் விற்பனை சூடு பிடிக்கும். இங்க என்னடான்னா கடைக்கு முன்னாடி எவனாவது வெடிக்கடை போட்டிருப்பான். சரி தீபாவளிக்கு இப்படின்னா பொங்கலுக்கு அதே கடைக்கு முன்னால கரும்பு விற்பனை சூடு பிடிக்கும். கல்லூரியில் படிக்கும் போது கோ-ஆப்டெக்ஸின் இருப்பிடத்தை சரஸ்வதி திரையரங்கிற்கு அருகில் இருந்து லெட்சுமி திரையரங்கிற்கு அருகில் மாற்றினார்கள். அப்போது அதே நிலைதான்.... 

எங்க தமிழ் ஐயாவுடன் அடிக்கடி அங்கு செல்வேன். அங்கிருப்பவர் எங்க ஐயாவின் தோழர், இருவரும் இலக்கியம் பேசுவார்கள். நாங்கள் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருப்போம். வாரத்தில் இரண்டு முறையாவது அங்கு செல்வோம். ஐயா பெரும்பாலும் கோ-ஆப்டெக்ஸில் வாங்கும் கதர் சட்டையும் பேண்ட்டும்தான் அணிவார். என்னைப் பொறுத்தவரை ஊதுபத்தி வாங்கியிருக்கிறேன்.

கோ-ஆப்டெக்ஸ் என்பது டாஸ்மார்க் போல் ஒரே நாளில் கோடிகளை அள்ளும் துறையாக இல்லை. இத்தனை வருட காலத்தில் கோடிகளில் லாபம் பெறவில்லை என்பதைவிட லாபமே இல்லாமல் நஷ்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த துறை என்றுதான் சொல்ல வேண்டும். எப்பவுமே நேர்மையான அதிகாரிகளை ஆளும் வர்க்கம் ஓரிடத்தில் இருக்க விடாது என்பது எல்லோரும் அறிந்ததுதானே. அந்த வகையில் இவரையும் இதுவரை 18 முறை இடமாற்றம் செய்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன.


மதுரையில் தீயாய் ஜ்வாலை விட்ட நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூட்டுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார். இது தேறாது என்று ஒதுக்கப்பட்ட துறை என்பதால் இவர் நாற்காலியில் உட்கார்ந்து நாட்களை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்று நினைத்தவர்களின் நினைப்பை தவிடுபொடியாக்கும் உத்வேகத்துடன் புதுமைகளைப் புகுத்தி காய்ந்து கிடந்த நெசவுத் தொழிலை பசுமையாய் துளிர்க்கச் செய்தார்.

கடந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸின் மொத்த வர்த்தகம் 245 கோடியாம். இத்தனை நாளாக நஷ்டத்தில் இருந்த ஒரு துறை இவர் பொறுப்பேற்ற ஒரு வருடத்தில் இரண்டே கால் கோடி லாபம் ஈட்டியிருக்கிறது என்பது இந்த மனிதரின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதில் ஒரு கோடியை பாடுபட்ட நெசவாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கி அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக பல முயற்சிகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் தமிழக கோ-ஆப்டெக்ஸ் 2013-ஆம் ஆண்டில் அதிக அளவில் கைத்தறித் துணிகளை உற்பத்தி செய்தமைக்காகவும் உற்பத்தியில் மகத்தான பங்களிப்பை தந்ததற்காகவும் மத்திய அரசின் இரண்டு தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது. இத்தனை வருடங்கள் சாதிக்க முடியாததை ஒற்றை வருடத்தில் சாதித்திருக்கிறார் இந்த நெஞ்சுரமிக்க தமிழர். திறமையுள்ளவன் எங்கும் ஜெயிப்பான் என்பதற்கு திரு. சகாயம் அவர்கள் சிறந்த உதாரணம்.

'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்பதை வாழ்க்கை கோட்பாடாக வைத்திருக்கும் திரு.சகாயம் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை என்ற கிராமத்தில் உபகாரம் என்பவருக்கு பிறந்த ஐந்து மகன்களில்  கடைக்குட்டி பெற்றவர்களின் ஆசை விதை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தனது அண்ணனுடன் கடக்கும் சமயத்தில் எல்லாம் ஒரு நாள் இந்த அலுவலக மாவட்ட ஆட்சியர் நாற்காலியில் அமர வேண்டும்' என நெஞ்சுக்குள் முளை விட்டு வளர ஆரம்பித்திருக்கிறது.

அந்த எண்ணம்.... முளைவிட்ட அந்த விதை.... இன்று விருட்சமாய் வளர்ந்து எண்ணத்தில் எண்ணியதை எட்டி இன்று தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது. எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் ஒரு புன்னகையோடு அதை எதிர்கொண்டு வெற்றி பெற்ற திரு. சகாயம் அவர்கள் நம்மில் ஒருவர் என்று நினைக்கிறபோது நெஞ்சை நிமிர்த்தி வாழ்த்தச் சொல்கிறது.

திறமையுள்ளவன் எங்கு போனாலும் ஜெயிப்பான் என்பதற்கு திரு. சகாயம் அவர்கள் மிகப்பெரிய உதாரணம் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லி லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தி தமிழனாய் வாழும் திரு.சகாயம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 31 டிசம்பர், 2013

2013 - கொடுத்ததும் மறுத்ததும்

வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

(இளமை இதோ இதோ - புத்தாண்டுப் பாடல் உங்களுக்காக)

ன்னும் சில மணி நேரங்களில் 2014 பிறக்கப் போகிறது. கடந்து செல்ல இருக்கும் 2013 நல்லதையும் கெட்டதையும் கலந்தே கொடுத்தது என்பதை பெரும்பாலான பதிவுகளிலும் முகநூல் பக்கங்களிலும் காண முடிகிறது.

இந்த ஆண்டு என் வாழ்வில் செய்தது என்ன என்று சற்றே பின்னோக்கிப் பார்த்தால் முதலில் வருவது எங்கள் வீடுதான். ஆம் 2012 வீடு கட்டுவதென முடிவெடுத்து வங்கியில் கடன் வாங்கி ஆரம்பித்தோம். 2013 மே மாதம் எங்கள் சொந்த இல்லத்தில் குடியேறினோம். கடன் தலைமேல் இருந்தாலும் நம்ம வீடு என்கிறபோது கவலைகள் மறக்கத்தான் செய்கிறது.

இந்த வருடத்தில்தான் மனசு வலைப்பதிவில் அதிக பகிர்வுகளைப் பகிர்ந்திருக்கிறேன். 2010ல்தான் முதல் சதம் அடித்தேன். மொத்தம் 101 பதிவுகள். 2011ல் 61, 2012ல் 38 பதிவுகள் மட்டுமே பகிர்ந்தேன். இந்த முறை இந்தப் பதிவுடன் சேர்த்து மொத்தம் 314 பகிர்வுகள் (அட கூட்டுத் தொகை 8... நமக்கு பிடித்த எண்). இது நான் நினைத்துப் பார்க்காத ஒன்று. அடுத்த ஆண்டு இது தொடருமா தெரியாது. 

இந்த வருடத்தில் சோதனை முயற்சியாக கலையாத கனவுகள் தொடர்கதை எழுத ஆரம்பித்து அதுவும் 37 பகுதிகளைக் கடந்துவிட்டது. கதை எப்படி என தொடர்ந்து வாசித்து கருத்திடும் யோகராஜா சாரைத்தான் கேட்கணும். தொடர்கதையை 50 பேர் படிப்பது என்பதே அரிதாக இருக்கிறது. தொடர்ந்து வாசிக்கும் அந்த 35 பேருக்கும் நன்றி. இடையில் நிறுத்திவிடலாம் என்று கூட நினைக்க வைத்தது என்றாலும் முயற்சியை கைவிட வேண்டாம் என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் என்னை க்ரைம் கதை எழுதச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறார் மேனகா அக்கா, மற்றுமொரு தொடர்கதையா... யோசிக்க வேண்டிய விஷயம்.

இந்த வருடத்தில் வலைச்சரத்தில் மீண்டும் ஒரு முறை ஆசிரியராய் பணியாற்றும் வாய்ப்பை மதிப்பிற்குரிய சீனா ஐயா கொடுத்தார். அவரின் மனம் மகிழும் வண்ணம் பகிர்வுகளை வழங்கியது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. நான்கைந்து முறை மற்ற ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப்பட்டேன். ஐயாவின் பின்னூட்ட வாழ்த்தில் சில வரிகள்...
"...பதிவு அருமை - வடிவமைப்பு கண்ணைக் கவரும் வண்ணம் புது விதமாக இருக்கிறது. சிறு பகிர்வு - எட்டின் மகிமையை எடுத்துரைத்தமை நன்று.  காணொளியினை அறிமுகப் படுத்திய நன்று. குறுங்கவிதை மிக மிக அருமை. பதிவரின் பெயர், தளத்தின் பெயர், கவர்ந்த பதிவுகளின் சுட்டிகள், பதிவில் இருந்த கவர்ந்த சில வரிகள், பதிவினைப் பற்றிய கருத்து - என எழுதியது தங்களீன் ஈடுபாட்டினைக் காட்டுகிறது... " 
உங்களது மனம் திறந்த வாழ்த்துக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.

மறைந்த கிராமியக் கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவர்களைப் பற்றி நான் பகிர்ந்த பதிவு குறித்து மதிப்பிற்குரிய முத்துநிலவன் ஐயா தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை நான் மிகப்பெரிய சந்தோஷமாகக் கருதுகிறேன். அதிலிருந்து...
"....நன்றி நண்பர் சே.குமார் அவர்களே!  தொலைதூரத்தில் இருந்துகொண்டு அந்தக் கிராமியக் குயிலை நினைத்துக் கொள்கிறீர்களே இதுதான் நம பாவலர் ஓம் முத்துமாரியின் உண்மையான சொத்து!      நீங்கள் வாழ்க!..." 
இது போன்ற வாழ்த்துக்கள்தான் எங்களுக்கு உண்மையான சொத்து. மிகுந்த சந்தோஷம் ஐயா.

நிறைய படிக்க நினைத்து கொஞ்சமேனும் படிக்க முடிந்ததில் சந்தோஷமே.

இந்த வருடத்தில் மனங்கவர்ந்த சில சிறுகதைகளை எழுத முடிந்தது. கல்லூரியில் படிக்கும் போது எழுதிய கதைகளுக்கும் தற்போதைய கதைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணரமுடிகிறது.

என்ன சந்தோஷங்களே தொடருதுன்னு பார்க்காதீங்க வருத்தமும் இருக்கத்தான் செய்கிறது. 

இந்த வருடத்திலாவது குடும்பத்தை இங்கு கூட்டி வர வேண்டும் என்று நினைத்து முடியாமல் போய்விட்டது. வீட்டுக் கடன், கம்பெனியில் சம்பள உயர்வு இல்லாமை என எல்லாம் தடுத்துவிட்டது. இதனால் புரிந்து கொண்ட இதயங்களுக்குள் அடிக்கடி மனஸ்தாபம் வருவதை தவிர்க்க முடியாமல் போனது. வரும் 2014ல் ஆவது நடக்க வேண்டும்... எல்லாம் இறைவன் சித்தம்.

சிறுகதைத் தொகுப்பு கொண்டுவர நினைத்து அகநாழிகை வாசு அண்ணன் மற்றும் வம்சி சைலஜா மேடத்திடமும் பேசி இருந்தேன். வீட்டு வேலை, கடன் இவைகள் முன்னுக்க வர புத்தக எண்ணம் பின்னுக்குப் போய்விட்டது. பிறக்கும் வருடத்தில் நடக்கும் என்று நம்புகிறேன்.

வேறு வேலைக்கு தொடர்ந்து முயற்சித்தும் தட்டிக் கொண்டே போகிறது. இன்னும் எதுவும் நடக்கவில்லை. 

வருடம் ஆரம்பிக்கும் போது சந்தோஷமாக இருந்தாலும் இந்த மாதத்தில் என் கையிருப்பு சில சில்லறைகளாகவே இருந்தது. மிகவும் கஷ்டமான சூழலில் டிசம்பர் மாதம் கடந்து கொண்டிருந்தது. 

(நல்லோர்கள் வாழ்வைக் காக்க - புத்தாண்டுப் பாடல் உங்களுக்காக)

சரி நண்பர்களே... எனது அன்பிற்குரிய அனைவருக்கும் வரும் புத்தாண்டு மிகச் சிறப்பான ஆண்டாக அமைய எல்லாம் வல்ல  இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 30 டிசம்பர், 2013

2013 - அரசியல் சினிமா விளையாட்டு

2013 ஆம் ஆண்டின் நிறைவு நாளுக்கு வந்துவிட்டோம்.  2014-ல் அடியெடுத்து வைப்பதற்கு இன்னும் ஒரு தினமே இருக்கிறது. 

சினிமா:

திரையுலகைப் பொறுத்தவரை சில சிறப்புக்களும் பல வருத்தங்களையும் கொடுத்த ஆண்டாகவே இது அமைந்தது. கமல் மற்றும் விஜய் தங்களது படங்களை வெளியில் கொண்டு வருவதற்குள் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது. சினிமா நூற்றாண்டு விழாவை அரசியல் விழா போல் அம்மா நடத்த மூத்த கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். கோச்சடையான் வரும்... வரும்... என சொல்லிக் கொண்டே இருந்தார்கள் ஆனால் படம் வெளிவரவில்லை. 

இளம் நாயகர்களான விஜய் சேதுபதியையும் சிவகார்த்திகேயனையும் முன்னணி நாயகர்கள் வரிசையில் நிறுத்தியது. எதிர்பார்ப்புக்களுடன் வந்த தங்கமீன்கள். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. நகைச்சுவைப் படங்களுக்கான ஆண்டாக இது அமைந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கண்ணா லட்டு தின்ன ஆசையா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. 


நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு இந்த ஆண்டில் படங்களே இல்லாததால் சந்தானமும் சூரியும் அந்த இடத்தை பிடித்து வைத்திருந்தாலும் சந்தானத்தின் காமெடி பெரும்பாலும் காமநெடியாகவே இருப்பதால் முகம் சுளிக்க வைத்தது. இமானின் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்தன. குறிப்பாக ஊதாக் கலரு ரிப்பன் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. 

நடிகர்களைப் பொறுத்தவரை சிவகார்த்திகேயனுக்கு இது ஏறுமுகமான ஆண்டாக அமைந்தது. அவரின் டைமிங் காமெடி நன்றாகவே கை கொடுத்தது. ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தார். விஜய் சேதுபதியும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். சத்தியராஜ் சிறப்பான வேடங்களை தேர்வு செய்து தன்னை குணச்சித்திர நடிகராக நிலை நிறுத்திக் கொண்டார். இன்னும் நிறையப் பேர் வந்தார்கள்... சிலர் வென்றார்கள்... பலர் சென்றார்கள்.

அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பருக்கு இந்த ஆண்டும் வரவேற்பு இருந்தது. ஆரம்பம் அதிரடி வெற்றி பெற்றதை தொடர்ந்து பொங்கல் வரவான வீரம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்க்கு துப்பாக்கி கொடுத்த வெற்றியை தலைவலியோடு வந்த தலைவா கொடுக்கவில்லை. கமலைப் பொறுத்தவரை விஸ்வரூப வெற்றி பெற்றார். சூர்யாவைப் பொறுத்தவரை சிங்கம்-2 சிறப்பான வெற்றி பெற்றது. 


தனுஷூக்கு எதிர் பார்க்கப்பட்ட மரியான் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. நய்யாண்டியும் நமத்துப்போச்சு. ஆனால் இந்தியில் தனுஷின் முதல் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கார்த்தியைப் பொறுத்தவரை இந்த வருடம் மொத்தமாகவே சிறப்பாக அமையவில்லை. விமலுக்கு வெற்றிப் படங்கள் அமைந்தன. ஆர்யாவுக்கு இரண்டாம் உலகம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

நடிகைகளில் முதல் இடத்தைப் பிடித்தவர் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமான தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யா. தனது நடிப்பால் திரையுலகைக் கவர்ந்தார். இவரைப் போலவே கேரளத்து வரவான லஷ்மிமேனன் ஒரு நல்ல நடிகை என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டார். நயன்தாராவைப் பொறுத்தவரை இரண்டாவது ரவுண்டிலும் கல்லாக் கட்ட ஆரம்பித்துவிட்டார். காஜலுக்கு கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். ஹன்சிகா, அனுஷ்கா, திரிஷா, அமலாபால் என மற்ற முன்னணி நடிகைகளும் தாங்கள் இருப்பதை ஒரு சில படங்கள் மூலம் புதுப்பித்துக் கொண்டார்கள். அஞ்சலிக்கு பிரச்சினைகள் சூழ்ந்த ஆண்டாக அமைந்தது.

மணிவண்ணன், மஞ்சுளா, குள்ளமணி என சினிமா நட்சத்திரங்கள் பலரைக் காவு கொண்ட ஆண்டாக இது அமைந்தது.


அரசியல் :

அரசியலில் மோடி அலை வீச வைத்த ஆண்டாக இது அமைந்தது. ஆளும் காங்கிரஸ்க்கு மரண அடியைக் கொடுத்தது. ஊழலுக்கு எதிராக துடைப்பத்துடன் வந்த ஆம் ஆத்மியை அரியாசனத்தில் ஏற்றி அழகு பார்த்தது. தமிழகத்தில் எதிர்ப்பால் காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமரை செல்ல விடாமல் செய்தது. தமிழனுக்காகவோ இசைப்பிரியாக்களுக்காகவோ வாய் பேசாத மத்திய அரசை தேவயானிகளுக்காக தேவைக்கு மேல் வீரம் காட்ட வைத்தது. 

தமிழகத்தைப் பொறுத்தவரை அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம் எதிர் அணியினரை அவமானப் படுத்துதல் என அம்மாவின் அதிரடி அரசியல் அரங்கேறிக் கொண்டுதான் இருந்தது. எம் இனம் மடிந்தால் என்ன என் ரத்தத்துக்கு சீட்டு வேண்டும் என காங்கிரஸ் காலில் விழுந்த முன்னாள் முதல்வரை ஞானம் பெற்றது போல் இலங்கைப் பிரச்சினை குறித்தும் இசைப்பிரியா குறித்தும் பேச வைத்தது. 


தேமுதிகவைப் பொறுத்தவரை அதன் முதுகெலும்பாக இருந்த பண்ருட்டியார் பக்குவாய் வெளியேறினார். குடும்பம் சூழ்ந்த கட்சியாக இருந்தாலும் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜகவும் திமுகவும் கூட்டணிக்காக அதிகம் எதிர்பார்க்கும் கட்சியாக தேமுதிகவை திகழ வைத்தது. பாமக தனித்துப் போட்டி என சொல்லிக் கொண்டு பாஜக பக்கம் சாய வைத்தது. 

சாதி அரசியலில் காதல் (தற்)கொலைகளும் அடிதடிகளும் அதிகம் அரங்கேறியது.  மின்சாரம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை இருட்டில் வைத்தது. இடைத்தேர்தல்களில் மக்களுக்கு பணத்தை வாரி இறைக்க வைத்தது. ஆளுங்கட்சிக்கு அமோக வெற்றியை பெற்றுத் தந்தது, முக்கியமாக தேர்தலை முன்னிருத்தி எல்லா அரசியல்வாதிகளையும் இலங்கை பிரச்சினையை கையில் எடுக்க வைத்தது. 

விளையாட்டு:

சச்சின் என்னும் சகாப்தத்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கபடியில் உலகக்கோப்பை வென்றது. விஸ்வநாதன் ஆனந்த உலக சாம்பியன் பட்டத்தை கோட்டைவிட்டது. இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் மரண அடி வாங்கியது என விளையாட்டிலும் 2013 ஏற்றத் தாழ்வுகளைக் கொடுத்தது.



என் வாழ்வில் 2013 நாளைய பகிர்வாக வருகிறது. ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா எப்படியாச்சும் பதிவைத் தேத்தணுமே....

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 19 டிசம்பர், 2013

திருமணமும் மூடநம்பிக்கையும்...

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்கிறோம் ஆனால் அதை நிறைவேற்றும் சாவியை நம் கையில்தானே வைத்திருக்கிறோம். சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட எத்தனையோ திருமணங்களை நாம் முடித்தும் வைத்திருக்கிறோம் முறித்தும் வைத்திருக்கிறோம் என்பதை எல்லோரும் அறிவோம்.

நமக்கு முந்தைய தலைமுறையில் பெண் பார்த்து திருமணம் முடியும் வரை பெண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துக் கொள்வது இல்லையாம். ஆனால் இன்று அப்படியா இருக்கிறது... இதுதான் பெண் இதுதான் மாப்பிள்ளை என்று முடிவானதும் செல்போனில் செல்லச் சிணுங்கல்களை ஆரம்பித்துவிடுகிறார்கள். திருமணம் என்பது இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கிறது. மணிக்கணக்கில் பேசி மானசீகமாக கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்து விடுகிறார்கள்.

இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தான் தேவன் அன்று என்று பாடிவைத்தான் கவிஞன் இது முற்றிலும் உண்மைதானே... இல்லை என்றால் இன்னாருக்கு இன்னார்தான் என்று நிச்சயம் பண்ணி வைத்து நாம் அதற்கான வேலையில் இறங்கும் போது இறைவன் போட்ட முடிச்சு வேறு மாதிரி வேலை செய்ய ஆரம்பித்து விடுவதை இப்போது செய்திகளிலும் வாழ்க்கையிலும் பார்க்கத்தானே செய்கிறோம்.

கிராமங்களில் முன்பெல்லாம் திருமணங்களை நிச்சயித்தவுடனேயே நடத்தி முடித்து விடுவார்கள். காரணம் நிச்சயித்து வைத்து சில மாதங்கள் கடந்து திருமண தேதி குறிக்கும் போது அந்த இடைப்பட்ட நாட்களில் ஊருக்குள்ளோ அல்லது உறவிலோ யாராவது இறந்துவிட்டால் அந்த துக்க வீட்டிற்கு செல்ல முடியாது. அது நெருங்கிய உறவாக இருந்தால் மிகவும் சிக்கல். திருமணம் நிச்சயித்த வீட்டில் இருந்து துக்கத்திற்கு செல்லக் கூடாது என இருக்க நினைத்தாலும் உறவின் உன்னதம் மனசுக்குள் வந்து மிகவும் கஷ்டப்பட வைக்கும். அதனால் இப்போதெல்லாம் பேசி மட்டும் வைத்துக் கொண்டு திருமணத்துக்கு முன்தினம் நிச்சயம் பண்ணிக் கொள்கிறார்கள்.

நமது அண்ணன்மார்களின் பெண் பார்க்கும் படலமெல்லாம் கோவில் திருவிழாக்களிலேயே முடிந்து விடும். கூட்டத்துக்குள் நுழைந்து இவர் இங்கிருந்து எட்டிப் பார்க்க... அந்தப்பக்கம் இருந்து அவரும் மெதுவாகப் பார்க்க பெண் பார்க்கும் படலம் முடிந்து விடும் பின்னர் திருமணத்தின் போதுதான் இருவரும் பார்த்துக் கொள்வார்கள். கணவன் மனைவி ஆகிவிட்டாலும் பேசுவதற்கு ஒரு நாளோ இரண்டு நாளோ எடுத்துக் கொள்வார்கள்.

அப்புறம் காலம் கொஞ்சம் மாறியது... மாப்பிள்ளையை பெண்ணைப் பார்க்க அவர்கள் வீட்டுக்கே கூட்டிப் போனார்கள். கொஞ்ச நேரம் இருவரையும் பேசவும் விட்டார்கள். இப்போதோ நிலமை வேறு... நிச்சயம் பண்ணியதும் பையன் செல்போன் வாங்கிக் கொடுத்து விடுகிறான். இருபத்து நான்கு மணி நேரமும் இருவரும் போனில்தான் குடியிருக்கிறார்கள். பெற்றோரும் அந்தப் பையன் பேசுறார் என்று பெருமையாகச் சொல்கிறார்கள். அத்தை, மாமா என எல்லாருடனும் செல்போன் எளிதான உறவைக் கொடுத்துவிடுகிறது.

இதுபோக முகநூலிலும், ஸ்கைப்பிலும் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். இப்போது திருமணங்கள் நிச்சயம் பண்ணி வைத்து ஆறு மாதம் ஒரு வருடம் என நாட்களைக் கடத்தி திருமணங்களை நடத்தும் போது இருவரும் ஒருவருடமாக போனில் பேசி ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதால் திருமண மேடையில் எந்தவித பதட்டமோ பயமோ இன்றி அருகிலிருப்பவர்களைப் பற்றிய கவலையின்றி வாய் ஓயாது பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் நிச்சயம் செய்ததும் மாப்பிள்ளை வீட்டில்... (நன்றாகக் கவனிக்கவும்) மாப்பிள்ளை வீட்டில் எதாவது துக்க சம்பவம் நிகழ்ந்தால் அந்தப் பெண்ணை நிச்சயித்ததும்தான் இப்படியாகிவிட்டது என்று திருமணத்தை நிறுத்திவிடுவார்கள். பெண் வீட்டில் இதுபோல் நிகழந்தால் நூற்றில் ஒரு திருமணம் நிறுத்தப்படலாம். இது கிராமங்களில் அதிகமாக நடக்கும். நானே எனது சிறிய வயதில் இதுபோல நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். அதன்பின் அந்தப் பெண்ணை ராசியில்லாதவள் என்று முத்திரை குத்திவிடுவார்கள்.  தனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே என்று வருத்தும் பெண்ணுக்கு கயிறோ, விஷமோ வாழ்க்கையை முடித்துக் கொள்ள போதுமானதாகிவிடும்.

இது போன்ற மூடநம்பிக்கைகள் கொஞ்சம் குறைந்து தற்போது அப்படியான நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கின்றன. பெரும்பாலான இடங்களில் அந்தப் பெண் என்ன பண்ணும் இது நடக்கணுமின்னு இருந்திருக்கு நடந்திருச்சு... அந்தப் பெண்ணை நிச்சயம் பண்ணாவிட்டாலும் அவரது விதி மாற்றி எழுதப்பட்டுவிடுமா என்ன என்று முற்போக்காக சிந்தித்து நிச்சயித்த தேதியில் திருமணத்தை நடத்தியவர்களையும் பார்த்திருக்கிறேன். அந்தப் பெண் என்ன செய்வாள்... அவளா இப்படி ஒரு துக்க நிகழ்வு நிகழ வேண்டும்  என நினைத்தாள். இதெல்லாம் விதியின் முடிவுதானே...

இது போன்ற ஒரு நிகழ்வு தற்போது எனக்குத் தெரிந்த இடத்தில் நடந்திருப்பதுதான் வேதனையான விஷயமாகும். ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நிச்சயித்து இருவரும் செல்போனில் பேச ஆரம்பித்து... அதை எல்லாரும் ஏற்றுக் கொண்டு... இருவரும் மாற்றி மாற்றி பரிசுப் பொருட்களை வழங்கிக் கொண்டு... உனக்கு நான் எனக்கு நீ என செல்பேசியில் செல்லப் பேச்சுக்கள் பேசி... எதிர்காலத்தில் தங்கள் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பது குறித்து தங்களுக்குள் ஒரு கனவை வளர்த்துக் கொண்டு ஆயிரம் கனவுகளோடு காத்திருந்தனர்.

இவர்களின் நிச்சயித்த காதலுக்கு எதிராக இறைவனின் செயல் களம் இறங்கியது. பையனின் வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகள் திருமணத்தையே புரட்டிப் போட்டுவிட்டது. முதல் நிகழ்வு நடந்ததுமே அந்தப் பெண்ணைப் பேசியதும் இப்படியாகிவிட்டது என்று இவர்கள் பேசிவிடக்கூடாதே என்று நினைத்தேன். ஆகக்கூடாது என்று நினைத்தது இப்போது ஆகிவிட்டது... கிராமத்து மனிதர்கள்... இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை மூட்டையாய் கட்டிச் சுமப்பவர்கள்... வெள்ளந்தியான மக்கள் என்று எங்களை நாங்களே சொல்லிக் கொண்டாலும் மூடநம்பிக்கைகளை சுமக்கும் மக்களாகத்தான் இன்னும் இருக்கிறோம் என்பது வேதனையான உண்மை.

சரி விஷயத்துக்கு வருவோம்... முதல் நிகழ்வின் போது நிகழாத அசம்பாவிதம் இரண்டாவது நிகழ்வில் நிகழ்ந்துவிட்டது. அந்தப் பெண்ணின் ஜாதகத்தை மறுபடியும் தூசி தட்ட அந்தப் பெண் பருவம் அடைந்த நேரம் சரியில்லை... உன் வீட்டுக்கு வந்தால் குடும்பத்துக்கு நல்லதில்லை என்று நாளை நடப்பதை இன்றே சொல்கிறேன் என்று சொல்லிக்கொள்ளும் ஜோசியக்காரன் கொளுத்திப் போட்டுவிட்டான். அது பெரும் தீயாக ஜ்வாலைவிட்டு எரிந்து பெண் வீட்டாரிடம் திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் பையனைப் பெற்ற அன்னை. இந்த விஷயத்தில் பையன் எதுவுமே சொல்லாதுதான் மிகவும் வருத்தமான விஷயம்... படித்தும் முட்டாள்களாக இருக்கிறார்களே என்று நினைக்கும் போது இந்த சமுதாயம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மூடநம்பிக்கைச் சகதிக்குள் சிக்கித் தவிக்கும் என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.

பையனுக்கு இன்னுமொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆகும்... அந்தப் பெண்ணுக்கு...? அவளை ராசியில்லாதவள் என்று ஊர் இந்நேரம் முத்திரை குத்தியிருக்கும். அவளின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை ஏன் பையனைப் பெற்ற பெண்ணுக்கு எண்ணத் தோன்றவில்லை. அவளுக்கு ஒரு ராஜகுமாரன் இனிமேலா பிறக்கப் போகிறான்... பிறந்திருப்பான்... ஒரு நாள் வருவான்... என்று சொன்னாலும் அந்த ராஜகுமாரன் இந்த மூட நம்பிக்கைகளை எல்லாம் உடைத்தெரிந்து வந்து அந்தப் பெண்ணை கைபிடிக்கும் நாள் விரைவில் கூடி வருமா?

வருத்தத்துடன் சொல்கிறேன்... இது போன்ற விஷயங்களின் பழமைவாதிகளின் மூட நம்பிக்கைகளை உடைத்தெரிந்து சுயமாய் முடிவெடுங்கள்... வாழ்க்கை சுகமாய் இருக்கும்... அவன் அங்கு போகவில்லை என்றால் இது நடந்திருக்காது என்று சொல்வதை நம்பாதீர்கள். ஏனென்றால் என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது எங்கிருந்தாலும் நடந்துதான் தீரும் எனவே தீர்மானமாய் இருங்கள்... சிரித்துப் பேசி சிந்தை மயக்கி... காதலால் கசிந்துருகி... வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை அவளுக்குக் காட்டி குடும்பத்தாரின் மூடநம்பிக்கைக்கு அவளைக் கொன்றுவிடாதீர்கள்... படித்தும் முட்டாள்களாகவும் மூடநம்பிக்கைக்கு விலை போகிறவர்களாகவும் இருக்காதீர்கள்... 

-மீண்டும் மனசு பேசும்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 16 டிசம்பர், 2013

மனசின் பக்கம் : ரஜினி போலீஸ் - பழனி நண்பர்கள்

ம்மில் பலர் இப்போது இருக்கும் நிலையில் இருந்து இதற்கு முன் இருந்த நிலையைத் திரும்பிப் பார்க்கதை எதோ பெரிய குற்றம் போல் பார்ப்பார்கள். சின்ன வயதில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருந்தாலும் இப்போது தங்க ஸ்பூனில் சாப்பிடும் நிலையில் இருப்பதால் அப்பவே பித்தளை ஸ்பூனில் சாப்பிட்டதாக அள்ளிவிடுவார்கள். பெரும்பாலும் நடிகைகள் நான் டாக்டராகியிருப்பேன், எஞ்சினியராகியிருப்பேன் என்று உதார்விடுவார்கள். ஆனால் எவன் ஒருவன் தான் முன்பிருந்த நிலையை எப்போதும் நினைத்துப் பார்க்கிறானோ அவனே மிகவும் உயரத்தை அடைவான் என்பதுதான் உண்மை. 

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் என்.டி.டிவியின் மிகச்சிறந்த இந்தியர் விருதினைப் பெற்ற திரு.ரஜினிகாந்த் அவர்கள் பேசும் போது ஒரு சாதாரண கண்டக்டர் இன்றைக்கு இந்த நிலையை அடைந்திருக்கிறேன் என்பது மிகப்பெரிய அதிசயம். வாழ்க்கையில் இது போன்ற அதிசயங்கள் நடக்கலாம் என்பதற்கு என் வாழ்க்கை ஒரு உதாரணம்' என்றார். உண்மையிலேயே ஒரு மேடையில் இப்படிச் சொல்ல தன்னை நன்கு உணர்ந்தவரால் மட்டுமே முடியும். இதை ரஜினி சொன்னார் என்பதற்காக நான் இங்கு பகிரவில்லை. யார் சொன்னாலும் பகிர்ந்திருப்பேன். ஏனென்றால் நான் ரஜினி ரசிகன் இல்லை. வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை என்றும் மறக்காமல் இருந்தாலே உயர்ந்த நிலையை அடைவோம்.

----------------------

னது மனைவி சொன்ன ஒரு செய்தி, நேற்று பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் ஐஸ்கிரீம் கேட்டிருக்கிறார்கள். அவர்களைக் கூட்டிக்கொண்டு கடைக்குப் போயிருக்கிறார். தேவகோட்டையில் பிரச்சினைகள், பசங்களின் அடாவடி, சில பிரச்சினைகள் என எல்லாவற்றிற்கும் மேலாக போக்குவரத்தை ஒழுங்கு பண்ணும் விதமாக நிறைய போக்குவரத்துப் போலீசாரைப் போட்டிருக்கிறார்களாம். அதுவும் தியாகிகள் சாலையில் இருபுறம் வண்டிகளை நிறுத்திவிட போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். அதனால் அங்கு ஒருபக்கம் வண்டி நிறுத்துமாறு செய்திருக்கிறார்கள். இவரும் அங்கு வண்டியை நிறுத்தியிருக்கிறார். அப்போது ஒரு போலீஸ்காரர் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். இவரும் கடைக்குள் போய் அமர்ந்து ஐஸ்கிரீம் வாங்கும் போது அந்த போலீஸ்காரர் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். என்னடா இவன் தெரிஞ்சவன் மாதிரியும் இல்லை.. இந்தப் பார்வை பார்க்கிறானே... கருமம் பிடிச்சவன் என்று நினைத்தபடி ஐஸ்கீரிமை வாங்கிக் கொண்டு வந்து வண்டியை எடுக்கும் வரை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். 

மாலை ஒரு வேலையாக கடைக்குச் செல்ல இப்ப அந்தப் போலீஸ் இந்தக் கடைப்பக்கம் நின்றிருக்கிறார். மீண்டும் வண்டியை நிறுத்தி எல்லாம் வாங்கி வண்டியை எடுக்க வரும்வரை அதே பார்வை... இவனுக்கு என்னடா வேணும் என்று யோசிக்கும் போதே... 'மேடம் உங்ககிட்ட லைசென்ஸ் இருக்கா?' என்று கேட்டிருக்கிறார். உடனே லைசென்ஸைக் கொடுக்க, இது இப்போதான் வாங்கியிருப்பீங்க போலன்னு கேட்டிருக்கிறார். இது பழசுதான் சார்... நல்லா தேதியை பாருங்க என்றதும் வண்டியை கயித்துக்கு உள்ளே வைக்கனும் இப்படி வச்சிட்டுப் போகக்கூடாது என அடுத்த அஸ்திரத்தைப் உபயோகித்து இருக்கிறார். இப்ப என்னோட வண்டி எப்படி நிக்குது சார்... இந்த வரிசையில எதாவது ஒரு வண்டி கயித்துக்கு உள்ளே நின்னா நான் எவ்வளவு அபராதம் கட்டணுமோ கட்டிட்டுப் போறேன் என்று சொல்லவும், இப்பன்னு இல்லை காலையிலயும் நீங்க இப்படித்தான் வச்சிட்டுப் போனீங்கன்னு சொல்லியிருக்கிறார். 

உடனே காலையில நான் எங்க போறேன்னுதானே பார்த்தீங்க... அப்பவே சொல்ல வேண்டியதுதானே... இப்ப சொல்றீங்க... உங்களுக்கு என்ன சார் வேணும்... என்கிட்ட லைசென்ஸ் இருக்கு... வண்டிக்கு ஆர்.சி.புக் இருக்கு... உங்களை என்னய எங்க போறேன் வாறேன்னு பாக்கச் சொல்லியிருக்காங்களா என்ன என்று சூடாக கேட்கவும்  நீங்க போங்க மேடம் என்று சொல்லி கிளம்பிவிட்டாராம். எதிர்த்த பூக்கடைக்காரர் எங்களுக்குத் தெரிந்தவர், அவரிடம்தான் தொடர்ந்து பூ வாங்கிக் கொண்டிருக்கிறோம். அவர் என் மனைவி பேசப்பேச சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.  போலீஸ்காரர் போனதும் 'நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்டேம்மா... இப்படித்தான் கேட்கனும்' என்றாராம். நேற்று போனில் பேசும் போது என்னிடம் சொல்லிச் சிரித்தார். நான் சொன்னது இதுதான் 'நாங்களும் மதுரைதான்னு சொல்லாம சொல்லிட்டு வந்திருக்கிறார்.' ஆனால் எதற்கும் பயப்படாத என்னவளின் அந்தக் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

-------------------

நேற்று பழனியில் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதைப் பற்றி ஒரு பகிர்வு போட்டிருந்தேன். அதற்கு நண்பர் யோகன் பாரிஸ் அவர்கள் எழுதியிருந்த பின்னூட்டம் இது, 

"எங்கள் உறவுகள் இலங்கையிலிருந்து வந்திருந்தார்கள். மொத்தம் 20 கோவில்சென்றோம். பிள்ளையார் பட்டி தவிர எங்குமே காசுபறிப்பில் குறியாக இருந்தார்கள். பிள்ளையார் பட்டி அர்ச்சகர் எங்களுடன் வந்த வயது முதிர்ந்தோரை உள்ளே வந்து தரிசனம் செய்யும் படி கேட்டபோதும், ஏனைய கோவில்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் தவிர்த்து விட்டோம். அத்தனை கோவிலிலும் எங்களை "மலேசியாப் பார்ட்டி" வருது என அடையாளப்படுத்திக் காசு கறப்பதிலேகண்ணாக இருந்தார்கள். எங்கள் குழுவில் 5 முதியோர் 5 குழந்தைகள் அதுபற்றிய எந்த அனுதாபமும் இல்லை, காசு,காசு,காசு.

திருச்செந்தூரில் கோவில் கடையில் அர்சனைத் தட்டு நானே வாங்கினேன். ஒவ்வொரு தட்டுக்கும் பற்றுச் சீட்டு பெற வேண்டுமென்ற போது அவற்றையும் பெற்று , இத்துடன் ஏதாவது நாம் கொடுக்க வேண்டுமா? எனக் கேட்டபோது , கட்டாயமில்லை. விரும்பினால் உங்கள் விருப்பம் போல் பூசகருக்குக் கொடுக்கலாம், என்றார்கள். அர்சனை செய்யத் தட்டுகளைக் கொடுத்ததுமே 5 தட்டுக்கும் 500 என்றார்கள். நான் மறுத்த போது 250 என்றார்கள். கட்டாயம் உங்களுக்கு கொடுக்கத் தேவையில்லை எனக் கூறினார்களே என்ற போது, காசு இல்லாவிட்டால் அர்ச்சனை இல்லை. என்றார்கள். பின் நாம் திரும்பி வரும் போது ஒரு அர்ச்சகர் என்ன? என விசாரித்து தான் செய்து தருவதாக தருவதைத் தாருங்கள் என்றார்.தட்டுகளைக் கொண்டு சென்று விட்டு அடுப்படியில் தான் தேங்காயை உடைத்தாரோ தெரியாது. காசு கேட்டார். இப்போ நாங்களும் மிக வெறுத்து விட்டோம். 50 ரூபா கொடுத்தோம். அது போதாது எனச் சத்தமிட்டார்.நாம் வந்து விட்டோம்.

இனிமேல் தமிழ்நாட்டில்கோவில் என்றாலே பயப்படுமளவுக்கு ஆக்கிவிட்டார்கள். தமிழகத்துக்கு கோவிகளுக்குப் போனால் கோவணத்துடன் போவதே மேல்.அந்த அளவு எத்தர்களின் கூடாரமாகிவிட்டது. அற்புதமான தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை பார்த்து அனுபவிக்க விடுவாரில்லை.தமிழகம் எங்கும் எங்கள் பேச்சின் மூலம் நாம் வெளிநாட்டவர் என்பதை உணர்ந்து காசுபறிப்பதிலும் ஏமாற்றுவதிலும் கண்ணாகவே இருந்தது.எனக்கு மிக ஏமாற்றத்தைத் தந்தது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர் நாயமாக நடந்தார்கள். அரசு கோவில்களில் ஒழுங்கீனங்களை அனுமதிக்கக் கூடாது." 

இதைப் படிக்கும் போது நமது தமிழக கோயில்களில் தலைதூக்கியிருக்கும் ரவுடியிச அட்டகாசம் நம்மை தலைகுனிய வைக்கிறது.

-------------------

இது நண்பர்களுக்காக...

கோதரர்கள் ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி நடத்துகிறார்கள். இவர்களுக்கு திரு.தனபாலன் சாரும் உதவியாக செயல்படுகிறார். அது குறித்த விபரம் அறிய இங்கே கிளிக்கி ரூபனின் தளத்தில் சென்று பார்த்து விபரம் அறிந்து விரைந்து எழுதுங்கள்... வெற்றி வாகை சூடி பரிசை அள்ளுங்கள்.

anigif


புதாபியில் வரும் வெள்ளிக்கிழமை மாலை பாரதி நட்புக்காக அமைப்பு நடத்தும் திண்டுக்கல் ஐ.லியோனியின் சுழலும் சொல்லரங்கம் நடைபெறுகிறது. துபாய், அபுதாபி, அலைனில் இருக்கும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்.

Displaying Thiru.Leoni & Team event_20.12.2013.jpg

மீண்டும் அடுத்த பகிர்வில் சந்திப்போம்...
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

கொள்ளையர் பிடியில் பழனியாண்டவர்....


ழனியில் அடாவடியாக பணம் பறித்ததாக ஒரு சகோதரி முகநூலில் சொல்லியிருந்ததை கே.ஆர்.பி.செந்தில் அண்ணன் பகிர்ந்திருந்தார். பழனியில் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது உண்மையே...  ஆனால் இவர்கள் எதிர்க்காமல் எதற்காக கிட்டத்தட்ட 4000 ரூபாயைக் கொடுத்துவிட்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. இறைவனைத் தரிசிக்கச் சென்று விட்டு ரவுடிகளின் பிடியில் சிக்கி இருக்கும் காசை இழந்து விட்டு வருபவர்கள் அந்தச் சகோதரி போல் நிறையப் பேர் உண்டு. நாங்கள் பழனிக்கு நடந்து செல்லும் போது கீழே மாலை வாங்கி மேலே சென்றால் மலையில் ஏறியவுடன் கடைசிப் படியில் நிற்கும் ஐயர் மாலையை வாங்கிக் கொள்வார். அந்த மாலை மீண்டும் கடைக்கு வந்துவிடும் இது கண்கூடாகப் பார்த்த காட்சி. இப்படி ஏமாற்றிப் பிழைப்பவர்களின் கூடாரமாக ஆகிவிட்டது அழகன் முருகனின் திருத்தலம் என்பது எல்லாரும் அறிந்ததே.

ஒரு முறை என் மனைவியின் மாமா குடும்பத்துடன் பழனி சென்றார். பேருந்தில் போய் இறங்கியதும் குதிரை வண்டியில் போக ஆசைப்பட்டு ஒரு வண்டியில் ஏறியிருக்கிறார். வாடகை பார்த்துக் கொடுங்க... கூடவா கேட்கப் போறேன் என்று அந்த வயதான மனிதர் சொல்லியிருக்கிறார். இவரும் நம்பி அவருடன் போக நன்றாக பேசியபடி வந்திருக்கிறார். அப்போது அவர் நீங்க எதாவது ஒரு கடையில அர்ச்சனைச் சாமான் வாங்கப் போனீங்கன்னா ஏமாத்திருவானுங்க... அதனால நமக்குத் தெரிந்த கடையில சொல்லி விடுறேன்னு சொல்லியிருக்காரு. இவரும் சரின்னு சொல்லிட்டாரு.

அந்தக் கடை வாசல்ல வண்டியை நிறுத்தி இவர்களை இறக்கி விட்டிருக்கிறார். எவ்வளவு பணம் என்றதும் இது நமக்குத் தெரிந்த கடைதான் அங்க கொடுத்துடுங்க அப்புறம் வாங்கிக்கிறேன்னு சொல்லியிருக்கிறார். இவருக்கு அப்பவே இது உள்ளடி வேலையா இருக்குமோன்னு சந்தேகம் வந்திருக்கு. கடையில் சோகவும் அந்தச் சகோதரி சொன்னதும் மாதிரி 'சார் செருப்பெல்லாம் இங்க விடுங்க... லக்கேஜை எல்லாம் அப்படி வையுங்க' அப்படின்னு ஒரே உபச்சாரமா இருந்ததாம்.

அப்புறம் அர்ச்சனைச் சாமான், அபிஷேகப் பால் என எல்லாம் வைத்து மாலை பக்கத்துக் கடையில் இருந்து அவர்களே வாங்கி வந்து வைத்து 'இந்தாங்க சார்... போய் நல்லா சாமி தரிசனம் பண்ணிட்டு வாங்க'ன்னு சொல்லியிருக்காங்க. இவரும் அங்கயும் எவ்வளவு பணம்? என்று கேட்டிருக்கிறார். என்ன சார் இப்படி கேட்டுட்டிங்க... பணத்தைக் கொண்டுக்கிட்டு ஓடவா போறீங்க... மலை ஏறி சாமி கும்பிட்டு வாங்க... என்று சொல்ல இவருக்கு சந்தேகம் அதிகமாயிருக்கு. 'அலோ எவ்வளவு பணம்ன்னு சொல்லுங்க?' என்று இவர் உரக்கச் கேட்டிருக்கிறார். உடனே நாலைந்து பேர் என்ன... என்ன.. அப்படின்னு வந்திருக்காங்க.. இவருக்கு சரி இவனுக பணத்துக்கு அடிப்போடுறானுங்கன்னு நினைச்சு 'எம்புட்டுன்னு சொல்லுங்கங்க...' என்று குரலை உயர்த்தியிருக்கிறார். 

இவர் ஆள் வாட்டசாட்டமாக போலீஸ் போல் இருப்பார். அவரது உடல்வாகும் உயர்த்திய குரலும் அவர்களுக்கு சற்று பயத்தைக் கொடுத்திருக்கிறது. எதாவது அரசாங்க உத்தியோகத்துல இருப்பார் போல என்று நினைத்து எல்லாத்துக்கும் சேர்த்து 1500 ரூபாய் கொடுங்க சார் என்று சொல்லியிருக்கிறார்கள். இவர் எதுக்கு 1500, ஒவ்வொன்னுக்கும் என்ன விலை என்று விலாவாரியாகக் கேட்க, சார் பைனல் 1500தான் கொடுத்துட்டுப் போங்க அப்படிங்கவும் எனக்கு எதுவும் வேண்டாம் வா போலீஸ் ஸ்டேசன் போவமா? என்று ஒருவனை கேட்கவும் அவர்கள் சார் குதிரை வண்டிக்கும் அர்ச்சனைக்கும் 300 ரூபாயைக் கொடுங்க என்றதும் அவரது மனைவி கொடுத்துட்டு வாங்க என்று சொல்லியிருக்கிறார். 300 ரூபாயோட போச்சு என்று மலையேறி முருகனைத் தரிசித்து விட்டு திரும்பியிருக்கிறார்.

இன்னுமொரு நிகழ்வு என்னுடன் பணி செய்யும் கேரளா நண்பன் பழனிக்கு நண்பர்களுடன் வந்திருக்கிறான். காரை நிப்பாட்டியதும் உங்களுக்கு கோயில் மேலே கூட்டிப் போய் தரிசனம் முடிக்கிற வரைக்கும் நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி ஒருவர் வர, இவர்களும் சரி என்று அவரைக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். சாமி கும்பிட்டு வந்ததும் காருக்கு அருகில் வர, இவர்களுடன் வந்த நபருடன் நான்கைந்து பேர் கூட, இவர்கள் அந்த நபரிடம் பேசிய இருநூறு ரூபாயை எடுத்துக் கொடுக்க, எனக்கு 500, கார் பார்க் பண்ணினதுக்கு 300, காரில் முருகர் படம் வரைந்ததற்கு 500, உங்களுக்கு உதவிய இவங்களுக்கு 300 மொத்தம் 1600 வருது. 1500 கொடுங்க என்று சொல்லியிருக்கிறார்.

என்னங்க அநியாயமா இருக்கு, உங்ககிட்ட பேசினது 200தானே என்று சொல்ல, இப்ப கொடுக்குறியா இல்லையா என்று ரவுடித்தனத்துக்கு மாறியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இளைஞர்களாக இருந்ததால் அந்த ஆளின் கையில் 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு இருவர் பேச, ஒருவர் வண்டியை எடுக்க அவர்களும் பேசியபடி காரில் ஏறியிருக்கிறார்கள். அங்கிருந்து தப்பி வந்தது பெரிதல்ல...  அப்படியே மதுரை போயிருக்கிறார்கள்... அவர்கள் பேசுவதை வைத்து ஒரு அர்ச்சனை 250 ரூபாய் என மிளகாய் அரைத்திருக்கிறார்கள்.

அவன்  இங்கு வந்ததும் தமிழ்நாட்டுல பழனி அம்பலத்துக்குப் போகவே கூடாது... என்ன ஒரு கள்ளத்தனம் பண்ணுறாங்க... எல்லாத்துலயும் கள்ளத்தனம்... எங்க நாட்டுல அம்பலத்துல கொள்ளை அடிக்க மாட்டாங்க... மீனாஷி அம்பலத்துல ஒரு அர்ச்சனை அதுவும் அர்ச்சனைத் தட்டு இல்லாமல் 250 ரூபாய் வாங்கிட்டாங்கன்னு அவன் இங்க வந்து சொன்ன போது நமக்குத்தான் வெட்கமாக இருந்தது.

பழனியில் நடக்கும் இத்தகைய அயோக்கியத்தனத்துக்கு அறங்காவல் குழு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. இல்லை அறங்காவல் குழுவுக்கும் இவர்களுடன் தொடர்பு இருக்குமா? தமிழகத்தின் மிக முக்கியமான கோவிலான பழனியில் நடக்கும் இத்தகைய பகற்கொள்ளையை அரசு தடுக்குமா... இல்லை இந்தக் கொள்ளை தொடருமா?


பெரும்பாலான தமிழக கோயில்களில் இது போன்ற பகல் கொள்ளை நடந்தாலும் பிள்ளையார்பட்டியில் மட்டும் இப்படிப்பட்ட பகல் கொள்ளைகள் இல்லாமல்தான் இருக்கிறது. சாமியை அருகில் பார்க்க 50,100 கொடு என்று சொல்லும் தமிழக கோயில்களில் இருந்து இன்னும் பிள்ளையார்பட்டி விலகியே இருக்கிறது என்பது பெருமையான விஷயம்.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

மனசின் பக்கம் : தேர்தல் முதல் செல்லுலாய்டு வரை

ன்றைய தேர்தல் முடிவுகள் ஆளும் காங்கிரசுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது என்றால் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த வளர்ச்சி என்பது அவர்களின் செயல்பாட்டுக்கு கிடைத்தது என்றாலும் காங்கிரசின் மீதான மக்களின் அதிருப்தி அலையும் சேர்ந்ததுதான் என்பதே உண்மை. இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள தலைநகரில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் தங்கள் கட்சியின் செயல்பாட்டை வளர்க்க வேண்டும். இந்த மடம் இல்லை என்றால் அந்த மடம் என்ற நிலையை மாற்றும் கட்சியாக உருவாக வேண்டும். இதுவரை தமிழக கட்சிகள் செய்யத் தயங்கியதை செய்து காட்டிய விஜயகாந்த், வாங்கிய ஓட்டுக்களைப் பற்றி கவலைப்படாமல் சொன்னது போல் தலைநகர் வாழ் தமிழர்களுக்காக பாடுபடவேண்டும். காங்கிரஸ் தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது என்று ஞான தேசிகன் சொல்லியிருக்கிறார். விழுந்துட்டோம் ஆனா எங்க மேல மண்ணே ஒட்டலைன்னு சொன்னா நம்புறதுக்கு நாங்க என்ன காங்கிரஸ் தொண்டர்களா? விரைவில் பெரிய அடியை தமிழக மக்கள் கொடுப்பார்கள் தேசிகரே... அப்போதும் இப்படியே சொல்லுங்கள்.

விலைவாசி என்பது இப்போது கட்டுக்குள் இல்லை என்பதை நினைக்கும் போதே பயமாக இருக்கிறது. இன்று எங்கள் ஊரில் வாரச் சந்தை, காலையில் சந்தைக்குச் சென்ற மனைவி சொன்ன விலைகளைக் கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டேன். ஒரு சின்ன சுரைக்காய் - 15 ரூபாய், கால்கிலோ கேரட் - 25 ரூபாய், ஒரு மாதுளம் பழம் - 25 ரூபாய் இப்படி அடுக்கிக் கொண்டே போனார். கொண்டு போன 600 ரூபாயில் ஒரு ரூபாய் கூட மிச்சமில்லை என்ற போது பேசாமல் இந்தப்பக்கமே இருந்துவிடலாம் என்று தோன்றியது.

ன்னல் ஓரம் படம் பார்த்தேன். லாஜிக்கே இல்லாமல் ஏகப்பட்ட காட்சிகள் இருந்தாலும் ஆரம்பத்தில் பார்த்திபன் விமல் கூட்டணியின் ரகளையில் கதை பயணித்தது பார்க்கும்படி இருந்தது. எந்த ஊரில் பெண்கள் குளித்துவிட்டு அப்படியே பஸ்ஸில் ஏறி வருகிறார்கள்? இதை இயக்குநர் இரண்டு இடத்தில் வேறு வைத்திருக்கிறார். கொலை, போலீஸ் கைது, கொலையாளியை கண்டுபிடித்தல் எனப் போகும் கதையில் கடைசியில் கொலையாளி இவன்தான் எனும்போது போலீஸ் பக்கமே போகாமல் கதை முடிகிறது. மொத்தத்தில் ஜன்னல் ஓரம் அரசுப்பேருந்தில் பயணிப்பது போலிருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம் என்ற ரகம்தான்.

ங்க ஊருக்கு விஷால் போனாலே 'நீ குமாரு மகனாடா... அவன மாதிரியே இருக்கே'ன்னு எல்லாரும் கேக்குறாங்களாம். ஒரு வாரம் முன்பு எனக்கு அத்தை முறை வேண்டிய ஒருவர், 'அப்படியே குமாரு மாதிரியே இருக்கேடா'ன்னு சொல்லியிருப்பாங்க போல. உடனே 'நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா... குமாரு மகனா... குமாரு மகனான்னு... தொல்லை தாங்க முடியலை'ன்னு பொரிந்து தள்ளிட்டானாம். உடனே அவங்க 'எங்க மாப்பிள்ளை இப்படியெல்லாம் பேசாது. நீ அது மாதிரி இல்லை' என்று சொல்லிவிட்டார்களாம். ஏன்டா அப்படிச் சொன்னேன்னு கேட்டா, 'ஆமா குமாரு மகனா... குமாரு மகனான்னு கேட்டா... குமாரு மகன்னு தெரியுதுல்ல அப்புறம் எதுக்கு கேக்கிறாங்க... எப்பப் போனாலும் எல்லோரும் இதேதான் கேக்குறாங்க'ன்னு கோபமாச் சொல்லுறான்.. ஊர்க்காரர்கள் எல்லாம் அவனை இப்படி கேட்டுக் கேட்டு சூடாக்கிட்டாங்க போல. இப்போ பிரண்ட்ஸ்கிட்ட பேச சாம்சங்ல சின்னதா டச் போன் வேணுமாம். வாங்கிட்டிங்களாப்பான்னு இப்போ போன் பண்ணிக் கேட்கிறார். படிப்பது யூ.கே.ஜி தான். ஒண்ணும் புரியலை போங்க.

லையாள சினிமாவா செல்லுலாய்டு பார்த்தேன். மலையாளத்தில் முதல் சினிமா எடுத்த இயக்குநர் ஜே.சி. டேனியலைப் பற்றிய கதை. மலையாளத்தில் அவர் எடுத்த முதல் படத்தில் நாயகியாக ரோசம்மா என்ற கீழ்ஜாதிப் பெண் நடித்ததால் படத்தை ஓட விடாமல் செய்து அந்தப் பெண்ணின் குடும்பத்தை அடித்து உதைத்து வீட்டிற்கு தீவைக்க அந்தப் பெண் அங்கிருந்து தப்பியோடுகிறாள். தான் நடித்த படத்தை பார்க்கவே இல்லை என்பது வேதனையான விஷயம். பின்னர் டேனியலும் தமிழ்நாட்டுக்கு வந்து பல் டாக்டராகி கஷ்டப்பட்டு இறக்கிறார். தான் எடுத்த படத்தின் பிலிம் சுருளை தனது ஆறு வயது மகன் எரித்துவிட, மலையாளத்தின் முதல் சினிமா எரிந்து சாம்பலாக, சாதி ஆதிக்கத்தில் வேறொருவரின் படம் முதல்படமாக, ஒரு பத்திரிக்கை ஆசிரியர் முதல்படம் டேனியல் எடுத்த விஹத குமாரன்தான் என உலகுக்கு வெளிப்படுத்துகிறார். நல்லதொரு படம். 

-மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.