டிசம்பர் - 3, புதன்கிழமை
அது ஒரு பொன்மாலைப் பொழுது... ஆம் வெயில் தாக்கும் அமீரகம் குளிருக்குள் தன்னை குந்த வைக்க ஆரம்பித்திருக்கும் குளிரான மாலை. அபுதாபியில் இரு பெரும் சிகரங்களுடன் சில மணித்துளிகள் பேசி மகிழ வைத்த பொன்னான மாலை... என்றும் மனசுக்குள் பூத்துச் சிரிக்கும் சந்திப்பாக மாற்றிய அழகிய மாலை...
![]() |
| (வசந்த மண்டபம், Killergee, மனசு) |
வலையில் எழுத ஆரம்பித்து இணைய வழியாகவும் தொலைபேசி வழியாகவும் உறவு கொண்டிருந்தாலும் நேருக்கு நேர் சந்தித்து அளாவளாவும் வாய்ப்பு எட்டாமல்தான் கழிந்து கொண்டிருந்தது. சீனா ஐயா அவர்கள் என்னைச் சந்திக்கும் முன் அம்மாவுடன் என் இல்லம் சென்று வந்தார்கள். அதன் பின்னர் தேவகோட்டை எங்கள் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு வந்தபோதுதான் அவரை நேரில் சந்தித்தேன். விருந்து உபச்சாரம் என்று இருந்ததால் அதிக நேரம் பேசமுடியவில்லை. மதுரை வரும்போது கண்டிப்பாக வீட்டிற்கு வரணும் என்றார். நானும் மதுரை போனேன். ஆனால் ஐயா வீடு செல்லவில்லை. இப்பவும் அவருடன் பேசினால் நித்யா, ஸ்ருதி, விஷால் என தனித்தனியாக பெயர் சொல்லி நலம் விசாரிப்பார்.
மற்றபடி நிலவன் ஐயா, குடந்தை சரவணன் அண்ணன், ஜெயக்குமார் ஐயா, தனபாலன் அண்ணா என நிறையப் பேரை சந்திக்க நினைத்து இன்னும் வாய்ப்பு வராமல் தள்ளிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. அண்ணன் கில்லர்ஜி அவர்களுடன் நட்பான பின் அவரும் அபுதாபியில் இருப்பதை அறிந்து சந்திக்க நினைத்திருந்த வேளையில் மதுரை பதிவர் சந்திப்புக்கு போய் வந்தவர் இங்கு வந்ததும் என்னைச் சந்திக்க ஒரு மாலையில்அன்போடு ஓடி வந்தார். முதல் சந்திப்பு... பரஸ்பரம் பேச்சுக்கள்... பின்னர் சந்திக்கும் போது ஒரு உரிமையுடன் பேச ஆரம்பித்தோம். அதில் இன்னொரு சந்தோஷம் என்னவென்றால் அவர் தேவகோட்டையைச் சேர்ந்தவர் என்றதும் ஊர்ப்பாசமும் சேர்ந்து கொண்டது.
தூத்துக்குடி முத்து 'வசந்த மண்டபம்' மகேந்திரன் அண்ணன் அவர்கள் இரண்டு மாதமாகவே சந்திக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டே இருந்தார். இங்கு இருக்கும் ஒரு மாதமும் அவருக்கு கடலுக்குள் வாழ்க்கை. அதனால நாங்கள் அவரைத் தேடிப் போகவோ அல்லது அவர் எங்களைத் தேடி வரவோ முடியாத சூழல். ஊருக்குச் செல்லும் போதோ அல்லது திரும்பி வரும்போதோ சந்தித்தால்தான். அதனால் அவர் சொல்லியபடி சந்திப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் போனில் எங்கள் உறவு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
![]() |
| (நான், சகோதரர்கள் மகேந்திரன், கில்லர்ஜி மற்றும் கண்ணன்) |
போன வார புதன்கிழமை ஊருக்கு செல்வதற்காக அபுதாபி வருவேன். அப்போது நாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலில் சந்திக்கலாம் என்று அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் போனில் சொன்னார். நானும் கில்லர்ஜி அண்ணாவும் அவரைச் சந்திக்கும் ஆவலுடன் இருந்தோம். புதன்கிழமை அங்கிருந்து கிளம்ப லேட்டாகி விட்டது. நீங்க அபுதாபி மாலுக்கு வாங்க ஒரு பத்து நிமிடமாவது உங்களுடன் பேசிவிட்டுப் போகிறேன் எனச் சொன்னார். அலுவலகத்தில் இருந்து இறங்கும் போது நீங்க நாங்க தங்கியிருக்க ஹோட்டல்கிட்ட வாங்க நான் அங்கே வந்துடுறேன்னு சொன்னார். இதற்கு இடையில் கில்லர்ஜி அண்ணா யாஸ் சென்றவர் அவரை அபுதாபி மாலில் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து அவரைப் பார்த்துட்டேன். நான் யாஸ் பொயிட்டு ஹோட்டலுக்கு வந்துடுறேன். நீங்க வந்துருங்க என்றார்.
என்னைப் பொறுத்தவரை ஒரு இடத்துக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டால் பத்து நிமிடம் முன்னர் போய்விடுவதுதான் வழக்கம். அப்படியே 20 நிமிடம் முன்னதாக மகேந்திரன் அண்ணா சொன்ன ஹோட்டலுக்குச் சென்று வாயில் ஓரமாக வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். சைனா போன் விற்கும் பாகிஸ்தானிகள் சுற்றிச் சுற்றி வந்தார்கள். என் கையில் இருக்கும் போனையும் என்னையும் மாறி மாறி பார்த்தார்கள். எனக்கு அருகே நின்ற ஒரு சீனனிடம் போன் வேண்டுமா என்று கேட்க அவர் தனது மொபைலைக் காட்டி இது போதும் என்று சிரிக்க இடத்தைக் காலி பண்ணினார்கள். நேரம் கரைய என்னையே கூர்ந்து பார்த்த ஒரு பாகிஸ்தானி என்ன இங்கயே நிக்கிறே என்றான். அந்த ஹோட்டல் இரவு நடனங்கள், இரவுக்கிளிகள் என பெயர் போன கச்சடா ஹோட்டல் என்பது தெரியும். அவனின் கேள்வியில் மேலே சொன்னவை தொக்கி நிற்க, என்னோட பிரண்டுக்காக நிக்கிறேன்... உனக்கு என்ன வேணும் என்றதும் ஓகே... ஓகேன்னு சொல்லி நகர்ந்தான்.
சிறிது நேரத்தில் மகேந்திரன் அண்ணனும் அவரின் நண்பரும் மதுரைக் காளவாசல்காரருமான கண்ணன் அண்ணனும் வந்து சேர்ந்தார்கள். கண்ண அண்ணனை மதுரைக்காரர் என்று அறிமுகப்படுத்தியதும் அவரின் பேச்சும் செயலும் மனசுக்குள் ஒட்டிக்கொள்ள மிகவும் நெருக்கமானோம். என்னதான் இருந்தாலும் நம்ம மாமனார் ஊர்க்காரருல்ல.... அதுபோக என்னோட மூத்த அண்ணன் கண்ணன் என்பதாலும் ஒரு ஒட்டுதல் வந்தது. மதுரைக்குப் போனா மாமாவை கடையில் போய் பார்த்துட்டுப் வாங்கன்னு விவரம் சொல்லி விட்டேன்னா பார்த்துக்கங்க.
![]() |
| (தேசிய நாளுக்காக அமைத்த குடிலில் இப்படித்தான் உக்காரணும் எனச் சொன்ன கில்லர்ஜி மற்றும் நாங்கள்) |
மகேந்திரன் அண்ணனுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே யாஸ் சென்ற கில்லர்ஜி அண்ணன் அவர்கள் தனது காரை பார்க் பண்ணிவிட்டு வர எல்லாருமாக அறைக்குச் சென்றோம். கண்ணன் அண்ணன் அவரது அறைக்குச் செல்ல நாங்கள் மூவருமாக அரட்டையில் அமர்ந்தோம். பல விஷயங்கள் பேச, இடையில் மகேந்திரன் அண்ணன் காபி போட்டுக் கொடுத்தார். குடித்தபடி பேசிக் கொண்டிருந்தோம். கடலுக்குள் அவரின் வாழ்க்கை பற்றிப் பேசினோம்... வலைத்தளங்கள் பற்றி பேசினோம்... கொஞ்ச நேரச் சந்திப்பு என்றாலும் நீண்ட நாள் உறவை எங்களுக்குள் தேக்கி வைத்தது.
எங்களுடன் பேசியபடியே கிளம்பிக் கொண்டிருந்த மகேந்திரன் அண்ணனுக்கு ஊரில் இருந்து அழைப்பு... தனது மனைவியுடன் பேசியவர் குமார் வந்திருக்கார்... கில்லர்ஜி வந்திருக்கார் என்று சொல்ல, எங்களைச் சொல்றாரே அவங்களுக்குத் தெரியுமா என்று ஆச்சர்யப்பட்டால் அவங்க எங்க வந்தாங்க... அங்கயா என்று ஆச்சர்யப்பட்டதுடன் கேட்டவரிடம் இந்தா நீயே பேசு எனக் கொடுக்க பல நாள் பழக்கம் போல திருமதி. மகேந்திரன் அவர்கள் எங்களுடன் போனில் பேசினார். எங்களை நல்லாத் தெரியும் என்றார். கூடுதலாக எங்கள் எழுத்துக்களை வாசிப்பேன் என்று சொல்லி சந்தோஷப்பட வைத்தார். எல்லாரையும் தெரியுங்க... ஒரு சிலர் இலக்கியம் இலக்கணம் குறித்த சந்தேகங்களுக்கு அவங்களுக்கு போன் போட்டுக் கேட்பாங்க என மகேந்திரன் அண்ணன் சொன்னார். ஆம் அவங்க தமிழாசிரியர்... எப்படிப்பட்ட உறவு பாருங்கள்... அண்ணனைச் சந்தித்ததே மூன்று மாத முயற்சிக்குப் பிறகுதான் நடந்தது. அவரைச் சந்தித்த அன்றே அண்ணியுடன் பேசும் வாய்ப்பு வேறு... எல்லாரையும் உறவாக்கி வீட்டில் சொல்லி வைத்திருக்கும் மகேந்திரன் அண்ணனின் நட்பு கிடைத்ததும் அண்ணியுடன் பேசியதும் எங்களுக்கு வரப்பிரசாதமே என்றால் அது மிகையில்லை.
பின்னர் கண்ண அண்ணனை அழைத்து போட்டோ எடுக்கச் சொன்னால் அவர் ஒரு போட்டோ சூட்டே நடத்தி முடித்து விட்டார். பின்னர் மேலிருந்து கீழிறங்கி வந்து கில்லர்ஜி அண்ணாவின் ஆசைக்கு இணங்க ரிசப்ஷனில் வைத்து மேலும் போட்டோ சூட்... எல்லாம் முடித்து அவர்களை காரில் ஏற்றி விட்டு ஊருக்குப் போய் மிஸ்டு கால் கொடுங்க... கூப்பிடுறோம் என்று சொல்லி (ஒரு வாரம் ஆச்சு... இன்னும் மிஸ்டுகால் அடிக்க டிரைப் பண்ணுறாரு போல... ஹி.. ஹி... எஞ்சாய் அண்ணா...) நாங்க இருவரும் கிளம்ப, கில்லர்ஜி அண்ணா என்னை எனது அறைக்கு அருகில் இறக்கிவிட்டுச் சென்றார். ஒரு சந்தோஷ சந்திப்பை அனுபவித்த மகிழ்வுடன் அறைக்குச் சென்றேன்.
![]() |
| (சந்திப்பின் நிறைவாக ஹோட்டல் ரிஷப்சனில் அங்கிருந்த தமிழ் நண்பர் எடுத்த போட்டோ) |
சொல்ல மறந்துட்டேனே... நானெல்லாம் தொடர்கதை என்றால் கூட அந்தந்த வார பகுதி அன்றுதான் எழுதிப் பதிவு செய்வேன். ஏன் சந்திப்பு குறித்து எழுதச் சொல்லி அடிக்கடி கில்லர்ஜி அண்ணா ஞாபகப்படுத்தினாலும் வேலை மற்றும் அசட்டையால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நம்ம ஜீயோ இத்தனாம் தேதிக்கு இந்தப் பகிர்வு என எழுதி சேமித்து வைத்திருப்பதைச் சொன்னபோதுதான் வலையில் அவரின் ஆர்வமும் எழுத்து மீதான காதலும் எங்களுக்கு தெரிய வந்தது. உண்மையிலேயே கில்லர்ஜி பாராட்டுக்குரியவர்தான்.
எங்கள் சந்திப்பு குடும்பச் சந்திப்பாக தொடரும் என்ற நம்பிக்கையோடு நட்பின் சந்திப்பை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
-'பரிவை' சே.குமார்.









