மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

கட்டப்பொம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டப்பொம்மன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஜனவரி, 2011

வரி கொடுக்கா மறவன்



கட்டப்பொம்மன் என்றால் நமக்கெல்லாம் நடிகர் திலகம் சிவாஜியைத்தான் ஞாபகத்தில் வரும். உண்மையான கட்டப்பொம்மனை பள்ளிக்கூட வரலாற்றுப் புத்தகத்தில் எதாவது ஒரு பக்கத்தில் அரைப்பக்க விளக்கத்தில் மட்டுமே படித்திருப்போம். அவர் எப்படியிருப்பார் என்று யாரையாவது கேட்டால் வீரபாண்டிய கட்டப்பொம்மன் படம் பார்த்தியா அதுல வார சிவாஜி மாதிரி இருப்பார் என்று சொல்லுபவர்களும் உண்டு.

வெள்ளையர்கள் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரி கொடுக்க மறுத்த குறுநில மன்னன். பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட மறத்தமிழன். மருதிருவர் அமைத்த வெள்ளையர் எதிர்ப்பு குழுவில் முக்கியப் பங்காற்றியவன். தாய் நாட்டுக்காகவும் தம் மக்களுக்காகவும் தூக்குக்கயிரை முத்தமிட்ட வேங்கை... இப்படி கட்டப்பொம்மன் குறித்து அடுக்கிக் கொண்டே போகலாம்.

தெலுங்கு வம்சாவழியான கெட்டிப்பொம்மு நாயக்க வம்சாவழி மன்னரான ஜெகவீரபாண்டியனின் அவையில் அமைச்சராக இருந்தார். இவரது பெயர் மருவி கெட்டிப் பொம்மு என்பது கட்டப் பொம்மு என்று மாறியது. நாளடைவில் பொம்மு பொம்மன் ஆனது.

இன்று நாம் யாதவ், தேவர், நாயக்கர், கவுண்டர், என்று பெயருக்குப் பின்னால் ஜாதியை இணைப்பதுபோல் அதன்பின் அந்த வம்சத்தில் வந்தவர்கள் எல்லாருடைய பெயருக்குப் பின்னாலும் கட்டப்பொம்மன் இணைந்தே வந்தது. அந்த வகையில் திக்குவிஜய கட்டப்பொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியினருக்கு 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்தவர்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு.

தனது 30வது வயதில் அதாவது 1790ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கட்டப்பொம்மன் 9 வருடங்களுக்கு மேல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். இவரது மனைவி வீரசக்கம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

ஆர்க்காடு நவாப் வாங்கிய கடனுக்காக வெள்ளையரிடம் நாட்டை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளப்பட, அந்த தருணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வெள்ளையர்க்ள வரி வசூலிக்கும் அதிகாரத்தை நவாப்பிடம் இருந்து பறித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல மக்களிடம் வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். மக்களிடம் வரி வசூலித்துக் கொடுக்காத பாளையக்காரர்கள் துன்புறுத்தப்பட்டனர். கட்டப்பொம்மன் ஆட்சிக்கு வரும் வரை இந்த நிலை தொடர்ந்தது. மக்களிடம் ஒற்றுமையின்மை இருந்தால்தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று நினைத்த வெள்ளையர்கள் தங்களுக்கே உரிய சில சதி வேலைகளை மேற்கொண்டு பயனும் அடைந்தனர்.

இப்படி பிரச்சினைகள் நிறைந்த கால கட்டத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கட்டப்பொம்மன் வரி வசூலித்துக் கொடுப்பதை நிறுத்தினார். எவ்வளவோ முயன்றும் அவரை அவரது நிலையில் இருந்து வெள்ளையர்களால் மாற்ற முடியவில்லை. எனவே வஞ்சகமாக அவரை மடக்க திட்டமிட்டனர். நாம் சமாதானமாக போகலாம் அதற்காக ஒரிடத்தில் கூடி பேசலாம் என கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினர். ராமநாதபுரத்தில் சேதுபதி ராஜா அரண்மனையில் நிகழ்ந்த அந்த சந்திப்பில் வெள்ளையர்கள் சார்பாக பேச வந்தவர்தான் ஜாக்சன் துரை. அங்கு நடந்த பிரச்சினையில் பாஞ்சாலங்குறிச்சிக்காக இன்னுயிரை ஈந்தவரும் கட்டப்பொம்மனின் நம்பிக்கைக்கு உரியவருமான மந்திரி தானாதிபிள்ளை கைது செய்யப்பட கட்டப்பொம்மன் தப்பிவந்தார்.

அதன்பின்னான நாட்களில் ஜாக்சன் பதிவி நீக்கம் செய்யப்பட்டார். திருநெல்வேலி ஆட்சியர் ஏன் வரி கொடுக்கவில்லை என காரணம் கேட்டு கட்டப்பொம்மனுக்கு கடிதம் எழுத... வரிக்காக வைத்திருந்த பணம், தானியம் எல்லாம் கொள்ளை போய்விட்டது. அதனால் வரி கட்ட முடியவில்லை என்று பதில் அனுப்பினார். இந்தப் பதில் வெள்ளையர்களை மேலும் வெறியேற்றியது. எனவே கட்டப்பொம்மனை நாட்டின் பொது எதிரி என்று அறிவித்தனர்.

இதன்பின் வெள்ளையர்களின் காலை நக்கும் நாயாக மாறிய எட்டப்பனை வைத்து கட்டப்பொம்மனின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டனர். சரியான சமயம் பார்த்து இராணுவத் தளபதி பாணர்மேன் உருவாக்கிய திட்டத்தின்படி கர்னல் கொலினிஸ் என்பவர் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். கட்டப்பொம்மனின் வீரர்கள் திருப்பி தாக்கிய தாக்குதலை கண்டு வெள்ளையர்கள் ஆடிப்போய்விட்டனர். அதனால் பின்வாங்கிய வெள்ளையர்படை மேலும் ஆயுதங்கள் வேண்டும் என மேலிடத்தில் முறையிட்டது. இந்த சமயத்தை பயன்படுத்தி கட்டப்பொம்மன் தப்பிச் சென்றார். அவர் தப்பியதை அறிந்த வெள்ளையர்கள அவர் தலைக்கு விலை வைத்தனர்.

அதன்பின் புதுக்கோட்டை ராஜாவிடம் பாதுகாப்புக்காக தஞ்சம் புகுந்த கட்டப்பொம்மன், ஒரு கட்டத்தில் வெள்ளையரின் சூழ்ச்சியால் சரணடைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

1799 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி வெள்ளையர்களால் கைது செய்யப்பட்ட கட்டப்பொம்மன் மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் தூக்கிலடப்பட்டார்.

முப்பது வயதில் ஆட்சிப்பொறுப்பேற்று வெள்ளையனை எதிர்த்துப் போராடி 39வது வயதில் மக்களுக்காக இன்னுயிரை ஈந்த வீர மறவனை போற்றுவோம்.

கட்டப்பொம்மன் நினைவாக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் கயத்தாறில் இருக்கும் அவரது சிலையும் அவரின் வீரத்தை மக்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

நடிகர்கள், அரசியல்வாதிகளின் பிறந்த தினங்களை நினைவில் நிறுத்திக் கொண்டாடும் நாம் நமக்காக வாழ்ந்து தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களின் பிறந்த தினங்களை நினைவிலாவது கொள்ளலாமே...

இன்று பிறந்தநாள் காணும் பாஞ்சாலங்குறிச்சி சிங்கம், மக்களுக்காக உயிரை கொடுத்த மறவன், வெள்ளையனை பீதிக்கு ஆளாக்கிய வேங்கை வீரபாண்டிய கட்டப் பொம்மனை நினைவில் நிறுத்துவோம்.

கட்டப்பொம்மன் அவர்களுக்கு கவிஞர். 'இதயச்சாரல்' தமிழ்க்காதலன் அவர்களின் கவிதையான............ 'விடுதலை தமிழன்'

கட்டப்பொம்மன் அவர்களுக்கு கவிஞர். 'கலியுகம்' தினேஷ்குமார் அவர்களின் கவிதையான...... 'விண்ணிறங்கி வாராயோ'.

கட்டப்பொம்மன் குறித்து வேறு நண்பர்கள் பதிவிட்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை நான் படித்த கவிதைகளை உங்களுக்காக இணைப்புக் கொடுத்துள்ளேன்.

கட்டப்பொம்மன் படத்தை கூகிளில் தேடியபோது சரத்குமாரும், சிவாஜியும்தான் வந்தார்கள் என்பது வருத்தமான விசயம்.

-'பரிவை'. சே.குமார்.