மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 மார்ச், 2016

தொடரும் சூப்பர் பதிவர்கள்...

ரியாதைக்குரிய முத்து நிலவன் ஐயா பிரபலங்கள் மற்றும் புதியவர்கள் என பதிவர்களை அறிமுகம் செய்து... அறிமுகம் என்பதைவிட, மிகச் சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி பகிர்ந்து நீங்களும் உங்களுக்குப் பிடித்த எழுத்துக்காரர்களைப் பகிருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார். அதில் என்னையும் இழுத்து விட்டிருந்தார். நிஷா அக்கா அவருக்குப் பிடித்த எழுத்தாளர்களில் என்னையும் சொல்லியிருந்தார். இந்த தொடர்பதிவு பலரால் எழுதப்பட்டு நாம் வாசிக்கும் பலரையும் அறிமுகம் செய்து விட்டார்கள். 

ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட எழுத்துக்காரர்களை வாசிக்கிறேன்... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புப் பெற்றவர்கள்.. ஒருவர் அழகிய தமிழில் அசத்தினால் மற்றொருவர் அசரடிக்கும் எழுத்து நடையில் கவர்வார்... ஒருவர் கவிதையில் கலக்கினால் இன்னொருவரோ கதையில் வாழ்வார்... ஒருவர் இலக்கியம் பேசுவாரென்றால் மற்றொருவர் இலக்கணம் பேசுவார்... ஒருவர் நகைச்சுவையில் நம்மை ஈர்த்தால் மற்றொருவரோ சோகத்தில் அசரடிப்பார்... இப்படியாக.. நிறைய... நிறைய வித்தியாசமான எழுத்துக்காரர்களை எல்லாம் வாசித்து வருகிறோம். எல்லாரையும் சொல்வதென்பது ஒரு பதிவில் முடியாதது... அதானால் நான் எழுத்து என்று ஒரு பகிர்வு ஆரம்பித்து வாராவாரம் ஒரு சிலரை அறிமுகம் செய்ய நினைத்தேன். அது ஆரம்பித்த ஒரு வாரத்தோடு கிடப்பில் கிடக்கு. சரி வாங்க இந்தத் தொடருக்காக, சிலரைப் பற்றி பார்க்கலாம். இங்கு சொன்னவர்கள் தவிர மற்றவர்கள் எல்லாரும் எனக்குச் சிறப்பானவர்களே... சொல்லலைன்னு வருந்தாதீங்க... மனசுல இருக்கீங்க...

ஆம்... நான் வாசிக்கும் எல்லாருமே எனக்கு பிரபலங்கள்தான்... மேலும் பிரபலங்கள் என்று தனியாக பிரிக்கும் அளவுக்கான பிரபலங்களுடன் நான் எப்போதும் தொடர்பில் இருப்பதில்லை. மிகப் பெரியவர்கள் என்று நினைக்கப்படும் எல்லாருமே அடுத்தவர் பதிவுக்கு போவதில்லை... வாசிப்பதில்லை... அதனால் நான் அந்த பிரபலங்கள் வட்டத்தை விட்டு வெளியேதான் நிற்பேன். இப்போது நானும் அதிகம் கருத்திடுவது இல்லை என்பதால் என்னையும் பிரபல வட்டத்துக்குள் நுழைக்காதீர்கள்... வேலைப்பளுவின் காரணமாகவும், மனச்சோர்வினாலுமே வாசிப்பதில் தடை, மற்றபடி அனைவரையும் தொடர்ந்து வாசிப்பேன்.

இது மொய்க்கு மொய்க்கு என்ற நிலையில் பயணிக்கும் எழுத்து உலகம்தான் என்று சொன்னால் யாராலும் அப்படியில்லை என மறுக்க முடியாது. கடந்த ஒரு மாதமாகவே என்னால் யாருக்கும் சரியான முறையில் கருத்து இடமுடியவில்லை... ஏன் பலரை வாசிக்க கூட முடியவில்லை... எல்லாம் என் பக்கத்து பிரச்சினைகள்தான்... அதிலிருந்து மீளும்போது எப்பவும் போல் எல்லாருடைய எழுத்திலும் வலம் வருவேன் என்பது எனக்குத் தெரியும்... ஆனால் நான் வாசிக்கும் என்னை வாசிக்கும் நண்பர்களுக்குத் தெரிவதில்லை... இப்போதே பலரைக் காணோம்... இன்னும் சில மாதங்கள் கடந்தால் ஒரு சிலர் மட்டுமே என்னோடு தொடர்பில் இருக்கலாம். நான் கருத்துக்காக எழுதவில்லை... கருத்து வேண்டும் என்றும் நினைப்பதில்லை... இருந்தாலும் அடுத்தவர் தளத்தில் கருத்திடும் நண்பர் நம் பக்கம் வரவில்லையே என்ற எண்ணம் எழத்தானே செய்கிறது.  அந்த நினைப்பின் இறுதியில் 'மொய்க்கு மொய்' கண் முன்னே வர, சரி என்னைக்கு நாம மொய் வைக்கிறோமோ அன்னைக்கு அந்த நண்பர் வரட்டும் என விட்டுவிட்டேன்.

நம் எழுத்தை காப்பி செய்வது குறித்து நான் எழுதியதற்கு நிஷா அக்கா, 'நம்ம எழுத்து பிடித்துத்தானே வாசிக்கிறார்கள்.. பகிர்கிறார்கள்... விட்டுவிடுங்கள்' என்று சொல்லியிருந்தார். அதெப்படி விட முடியும்.... நம் எழுத்தை இவர் எழுதியது எனக்குப் பிடித்ததால் பகிர்கிறேன் என்று சொன்னால் பரவாயில்லை ஆனால் அவர்கள் பெயரில் பகிரும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? மேலும் இதை புத்தகமாக்க வேண்டும் என நமக்கு கனவு இருக்கும் அது நிறைவேறுவதற்குள் அவர்கள் அதை புத்தகமாக்கிவிட்டால் நாம் என்ன செய்ய முடியும்...? சொல்லுங்கள். நம் எழுத்து நமக்கானது... பிடித்தால் இவர் எழுதியது என்று சொல்லி பதியட்டும்... ஆனால் காப்பி பேஸ்ட் செய்வதை எப்படி ஏற்பது...?

தேவா சுப்பையா : வாசிக்கும் போதே நேசிக்க வைக்கும் எழுத்து... மெல்ல மெல்ல நம்மைத் தின்னும் எழுத்து.. படித்து முடிக்கும் போது பரவசத்தை அள்ளிக் கொடுக்கும் எழுத்து... என்ன எழுதினாலும் அதை ரசனையோடு கொண்டு செல்லும் எழுத்து... திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்லும் எழுத்து... நீங்களும் வாசித்து பாருங்களேன்.


ஜோதிஜி: தேடல் நிறைந்த மனிதர்... ஒவ்வொரு பதிவிலும் பகிரும் கருத்துக்களுக்கான தேடல் அதிகம்... இவரின் பகிர்வில் நிறைய விவரங்களை அறியலாம். பல தரப்பட்ட தகவல்களைத் தேடி பகிர்வாக்கும் இவரின் மின்நூல்கள் மிகப்பெரிய வரவேற்ப்பைப் பெற்றிருக்கின்றன. இப்போது வலையில் அதிகம் எழுதுவதில்லை. இருப்பினும் வாசிக்க வேண்டிய பகிர்வர் இவர்.

பா.ராஜாராம்: கதையாகட்டும் கவிதையாகட்டும் அதில் லயிக்க வைக்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர். அவ்வளவு அருமையான எழுத்துக்காரர்... இவரின் எழுத்தை வாசித்து பிடித்துப் போய் ஆனந்த விகடனில் அடிக்கடி கேட்டு வாங்கிப் போட்டார்கள்.  நான் சித்தப்பா என்று சொல்லும்  இவரின் எழுத்து வாசித்தால் வசப்படுத்தும். நிச்சயம் ஒரு நல்ல எழுத்தை வாசித்த மனத்திருப்தி கிடைக்கும். இவர் சாகித்ய அகாதெமி வாங்கக் கூட அளவுக்கு உயர வேண்டியவர் ஏனோ இவர் கடந்த இரண்டு வருடங்களாக எழுதுவதில்லை. 

தேனம்மை லெட்சுமணன் : நல்ல எழுத்து... நிறைய புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன... பத்திரிக்கைகளில் எழுத்துப் பணி... இப்படி நிறைய நிறைவான பயணங்களுக்கு இடையே வலையிலும் தொடர்ந்து எழுதுகிறார். இவரின் எழுத்துக்கள் உங்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

கரிசல்மண்ணைச் சேர்ந்தவங்களுக்கு நாங்கதான் அதிகம் சாகித்ய அகாதெமி வாங்கியவங்க... எங்களில்தான் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமை எப்போதும் உண்டு. அதை தமிழின் கர்வம் என்று கூடச் சொல்லலாம். இதை இங்கு சொல்லக் காரணம்... அதை பலரிடத்தில் பார்த்திருக்கிறேன்... சமீபத்தில் கூட ஒரு புத்தக அணிந்துரையில் படிக்க நேர்ந்தது. அவர்களின் கர்வம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. நான் மேலே சொன்ன என் மண்ணின் சொந்தங்கள் போல் இன்னும் பலர் எங்க சிவகங்கை சீமையில் உண்டு... இவர்களின் எழுத்துக்களும் ஒரு நாள் சாகித்ய அகாதெமி வாங்கும்... அன்று எனக்குள்ளும் கர்வம் குடிகொள்ளும்.

இனி வாசிக்க வேண்டியவர்கள் சிலர்...

ஜெயசீலன் : துளசிதரன் சார் சொல்லிட்டாங்க... நல்ல எழுத்துக்காரர். நிறைய விஷயங்கள் பேசுவார். என்ன அடிக்கடி காணாமல் போய் விடுவார்.

வருண் : கருத்துப் போர் நிறைந்த மிகச் சிறந்த எழுத்தாளர், சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை என்பதால் கருத்து இடாமல் வந்துவிடுவேன். ஆனல் பல  விஷயங்கள் கருத்துச் செறிவு மிக்கவை. இவரின் பதிவுகளுக்குப் போனால் நான் வாசிப்பது வந்திருக்கும் கருத்துக்களையும் அதற்கான இவரின் பதில்களையும்தான்...

மேனகா சத்யா : இவர் வலையில் பெரிய சாப்பாட்டுக்கடை அதிபர்... இங்கு போனால் விதவிதமாக சமைக்கக் கற்றுக்கலாம். வெரைட்டி வெரைட்டியாக செய்து அதை படமெடுத்து போட்டு நம்ம வயிற்றெரிச்சலை (ஆமா.. பார்த்ததும் சாப்பிடும் ஆசை வந்து வயிறு புடுங்க ஆரம்பிச்சிடும்ல அது வயிற்றெரிச்சல்தானே...) கிளப்பி விடுபவர்.போய் பார்த்து புதிது புதிதாய் சமைத்துச் சாப்பிடுங்க.

நிஷா அக்கா சொன்னது போல் மீரா செல்வக்குமார் அண்ணாவின் செல்லங்கள் 'ஓடி விளையாடு பாப்பா' சக்தி மற்றும் 'சின்னவள்' சூர்யா மற்றும் முத்துநிலவன் ஐயா பகிர்ந்திருந்த கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரி மாணவி செல்வி. வைசாலி பபோன்று இன்னும் நிறையப் பேர் வாசிக்கப்பட வேண்டியவர்கள்.

இன்னும் இன்னுமாய் காணாமல் போன நல்ல எழுத்தாளர்கள் நிறையப் பேரைச் சொல்ல எண்ணம்... எல்லாரையும் அடுக்க முடியாது... அதனால் கவிதைகளில் கொள்ளை கொள்ளும் 'வானம் வெளித்த பின்னும்' ஹேமா அக்கா, பார்ப்பவற்றை எல்லாம் சிறந்த பதிவாக்கும் 'வேடந்தாங்கல்' கருண், முகநூலில் குட்டிக் குட்டியாய் மௌனச் சிதறல் தொடுக்கும் கவிதையில் ஜொலிக்கும் 'எண்ணச் சிதறல்' அனிதா ராஜ், கவிதைகளின் நாயகன் என் ஆருயிர் நண்பன் 'இதயச் சாரல்' தமிழ்க்காதலன் என இவர்களையும் வாசியுங்கள்.

ஆன்மீகத்தில் எங்க 'தஞ்சையம்பதி' துரை. செல்வராஜூ ஐயா மனதுக்கு நிறைவாய் படங்களுடன் கலக்கலான, நாம் அறியாத தகவல்களை அள்ளித் தருவார். அங்கிட்டும் போய் ஆன்மீகம் பருகுங்கள். ஐயாவைப் போல் ஆன்மீகத்தில் அழகிய படங்கள் இணைத்து 'மணிராஜ்' என்ற அழகிய ஆன்மீகத் தளத்தை நடத்திய அம்மா இராஜராஜேஸ்வரி அவர்களைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சில நாட்கள் முன்னர் அவரின் தளத்தில் வந்திருந்த பகிர்வு கண்டு, ரொம்ப நாளைக்கு பின்னர் அம்மா வந்திருக்காங்களேன்னு போனா, அவங்க போன மாதம் இறந்த செய்தியை அவரின் பிள்ளைகள் பகிர்ந்திருந்தாங்க. ரொம்ப வருத்தமாப் போச்சு... முகம் தெரியாவிட்டாலும் எழுத்தின் மூலம் அம்மாவாய் மனசுக்குள் நிறைந்தவர்... இனி அவர் எழுதப் போவதில்லை என்ற நினைவு வாட்டுகிறது. அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அப்புறம் நாம கொஞ்சப் பேரை பிடிச்சவங்களை எழுதுங்கன்னு கூப்பிடணுமாம்... உங்க மனசுக்குப் பிடித்த பதிவர்களை நீங்க எழுதுங்க... எல்லாரும் எழுதலாமே...

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 11 ஜனவரி, 2016

பயணங்கள் முடிவதில்லை_ தொடர் பதிவு

தொடர்பதிவுகள் முடிவதில்லை என்பது போல் கடவுளைக் கண்டு கேட்ட கேள்விகள் இன்னும் முடியாதபட்சத்தில் இப்போ பயணங்கள் முடிவதில்லை எனும் தலைப்பில்  சகோதரி மகிழ்நிறை மைதிலி ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இது நம்ம பக்கமெல்லாம் வராது... புதுக்கோட்டைப் பக்கமாத்தான் சுத்தும்ன்னு நினைச்சேன்... ஆனா சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ்கிட்ட நம்ம ஆல்ப்ஸ் தென்றல் நிஷா அக்கா மாட்டிக்கிட்டதும் இல்லாம நம்மளையும் மாட்டிவிட்டுட்டாங்க... சரி அழைத்தாச்சு... எழுதுறதுதான் மரியாதை... அப்படியே நமக்கும் ஒரு பதிவு தேறும்... அதுபோக நாம ரெண்டு அப்பாவிகளை மாட்டிவிடலாமே... சரி வாங்க ஒரு ரவுண்ட் போகலாம்...


1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

நாம இருந்தது தமிழகத்தின் கடைக்கோடியில்... கல்லூரி, பல்கலைக்கழகம், பின்னர் தேவகோட்டை கல்லூரியில் பணி என என் வாழ்க்கை வயலோடும் வரப்போடுமே திருமணம் வரை பயணித்தது. எங்கு சென்றாலும் பேருந்துப் பயணமே... ரயில் பயணம் என்பது திருமணத்திற்குப் பின்னர்தான். முதல் பயணம் சென்னையில் இருந்து டெல்லிக்கு என்னோட சான்றிதழ்களில் அமீரக தூதரகத்தில் கையெழுத்துப் பெறுவதற்காக மனைவியின் மாமா மற்றும் உறவினர் பையனுடன் போனேன். மிகவும் அருமையானதொரு பயணம்... ஒரு ராணுவ வீரரின் குடும்பத்துடன் பேசியபடி பயணித்தோம்.  இரண்டு நாட்கள் பயணம்... சந்தோஷமான பயணம்.

 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

மறக்கமுடியாத பயணம்ன்னா நிறைய இருக்கு... ஒவ்வொன்னாப் பார்ப்போமே... ரயிலில் என்றால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு சென்ற பயணங்கள்... அதிலும் குறிப்பாக நான், மனைவி, என் மகள் ஸ்ருதி என மூவரும் பயணித்த பயணங்கள்... ஸ்ருதிக்கு சன்னல் வழியே செழிப்பான, விளைந்து நின்ற வயல்களைக் காட்டியபடி பயணித்தது மறக்க முடியாதது.

பேருந்தில் என்றால் எம்.சி.ஏ., பண்ணும் போது காரைக்குடியில் இருந்து என்.என்.எல் பேருந்தில் பயணித்த தினங்கள்... பிடித்த பாடல்கள்... எங்களது நட்புக்கூட்டம், கண்டக்டருடன் அரட்டை, எங்களுக்காக பேருந்தை நிறுத்தி வைத்து ஏற்றி வருவது என அது ஒரு சந்தோஷமான பயண அனுபவம்தான் போங்கள்.

வேனிலோ காரிலோ என்றால் அம்மா, அப்பா, அக்காக்கள், அண்ணன்கள், தம்பி  என எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் அழகர் கோவில் சென்று அப்படியே மீனாட்சியை தரிசித்து வரும் அந்த நாட்கள் என்றுமே மகிழ்ச்சியான நாட்களே... அப்படி ஒரு பயணம் சென்ற முறை அழகர்கோவிலுக்கு ஏற்பாடாகி பின்னர் சிலகாரணங்களால் முடியாமல் போக பின்னர் திருச்செந்தூருக்கு அதேபோல் ஒரு பயணம் அமைந்தது. இப்ப இருக்கும் குடும்ப பிரச்சினைகளில் இனி அது போன்றதொரு பயணம் அமையுமா என்று தெரியவில்லை... ஆனால் அந்தப் பயணம்தான் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியான பயணம்.

பைக்கில் என்றால் எங்கள் கணிப்பொறி மையம் பள்ளிகளில் வகுப்பெடுக்கும் போது கிட்டத்தட்ட  20, 25 கிலோ மீட்டரில் இருக்கும் கிராமத்துப் பள்ளிகளுக்கு நானும் என் நண்பன் முருகனும் ஆளுக்கொரு வண்டியிலோ அல்லது ஒரே வண்டியிலோ முன்னால் கணிப்பொறி மற்றும் கீபோர்டை வைத்து ஓட்ட பின்னால் ஒருவர் சிபியூ பிடித்திருக்க பயணிப்போம். அந்தப் பயணம் கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கும்.

சைக்கிளில் என்றால் கல்லூரி படிக்கும் போது நாங்கள் பத்துபேர் ஒரு குழுவாய் இருப்போம்... நல்ல நட்பு வட்டம்... கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு தேவகோட்டையில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சைக்கிளில் சென்றோம். அது மிகவும் இனிமையான பயணம்.. கல்லூரி வாழ்க்கையை நினைத்தால் மனசுக்குள் நவநீ, ஆதி, திருநா, ராம்கி, பிரான்சிஸ், முத்தரசு, அண்ணாத்துரை, சேவியர் என எல்லாரும் வந்து செல்லும்போது இந்த சைக்கிள் பயணமும் வந்து மலர்ச்சியை மனதில் புகுத்திச் செல்லும். அதேபோல் தினமும் தேவகோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நண்பர்களுடன் நானும் ராம்கியும் மட்டும் சைக்கிளை மெதுவாக ஓட்ட மற்றவர்கள் நடந்துவர பயணித்த மூன்று வருடங்கள் மறக்கமுடியாதது.

நடைப்பயணம் என்றால் பழனிக்கு நடந்த அந்த ஆறு ஆண்டுகள், சபரிமலை சென்ற நான்கு ஆண்டுகள், திருப்பரங்குன்றம் சென்ற பயணம் மறக்க முடியாதது. 

3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

நமக்கு பேருந்துப் பயணத்திலே அலாதி இன்பம்... அதுவும்  பின்புற வழிக்கு முன் இருக்கையோ அல்லது பின் இருக்கையோதான் என்னோட தேர்வு. காற்றும் வேண்டும் அதே நேரம் வேடிக்கை பார்த்தபடி பயணிக்க வேண்டும் எனவே சன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணிக்கவே பிடிக்கும். பேருந்தில் நின்று கொண்டோ அல்லது படியில் தொங்கிக் கொண்டோ பயணிக்கப் பிடிப்பதில்லை.

4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

ராசாதான்..... 80, 90களில் ராசாவின் ஆதிக்கம் மேலோங்கிய பாடல்கள்தான் ரொம்பப் பிடிக்கும். அதுவும் மனநிலையைப் பொறுத்து மெலோடியோ அடிப்பாடலோ கேட்கத் தோன்றும். ராமராஜனின் பாடல்கள் எல்லாம் விருப்பம்... வேனில் பயணித்தால் நான் தேடித்தேடி பதிந்து வைத்திருக்கும் கேஸெட்டுக்களை அள்ளிக் கொண்டு போய்விடுவேன். அதுதான் காலை முதல் இரவு திரும்பும் வரை.... இப்பவும் எனக்கு ராசா பாடல்களே...

5.விருப்பமான பயண நேரம்?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை... எப்பக் கிளம்ப வேண்டும் என்றாலும் ரெடிதான்.. இந்த நேரத்தில்தான் பயணிக்கனும் என்று எண்ணுவதில்லை.

6. விருப்பமான பயணத்துணை?

படிக்கும் காலத்தில் ஏதாவது வார, மாத இதழ்கள். இப்போ பெரும்பாலும் மொபைலில் சேமித்து வைத்திரும் பாடல்கள். 

7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?

பயணத்துக்கு என தனி புத்தகம் எல்லாம் எடுப்பதில்லை... பெரும்பாலும் வார மாத இதழ்கள்தான்.

8.  விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

மழையில் நனைந்தபடி சைக்கிளில் அல்லது வண்டியில் பயணிப்பது.... அதுவும் மழை அடித்துப் பெய்யும் போது முழுக்க நனைந்தபடி முகத்தில் சுளீரென பட்டுத் தெறிக்கும் மழையை ரசித்தபடி பயணிப்பதே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

 9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

அப்படியெல்லாம் எதுவுமில்லை... கேட்க்கும் பாடல் வரியும் வார்த்தையும் மாறாமல் அப்படியே முணுமுணுப்பேன்... அதே ராகத்திலும். அது இப்பவும் உண்டு. அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது காதில் நுழையும் பாடல் வாய் வழியாக வெளியே வந்து கொண்டுதான் இருக்கும். சில நேரங்களில் பிடித்த பாடலென்றால் சத்தமாகவும் வரும்.

10. கனவுப் பயணம் ஏதாவது ?

கனவுப் பயணம் என்றெல்லாம் எதுவும் இல்லை... நிறையக் கனவுகளைக் செயலாக்க நினைத்து இன்னும் ஏமாற்றத்தில்தான் இருக்கு. அதனால் கனவுப் பயணம் என்றெல்லாம் எதுவும் இல்லை. மனைவி, குழந்தைகளுடன் எங்காவது பயணிக்க வேண்டும்.

(மழையும் சரிதாவும் பிடிக்கும் என்பதால் இந்தப்பாடல்)

சரி.. நம்ம பயணம் முடிவுக்கு வந்தாச்சு... அடுத்த டிரைவரை மாற்றி விட்டுட்டு நாம இறங்கணும்.. அப்படி மாட்டபோற ரெண்டு பேரு... ம்... கில்லர்ஜி அண்ணாவை மாட்டலாம் என்றால் நிஷா அக்கா முந்திக்கிட்டாங்க... அதனால நாம மாட்டிவிட்டா ஏன் எதுக்கு என்று கேட்காமல் நாலு மாசம் ஆனாலும் எப்படியும் எழுதி முடிக்கும் என் அன்பு அண்ணன்கள் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அவர்களையும் சந்தித்ததும் சிந்தித்ததும் வெங்கட் நாகராஜ் அவர்களையும் மேடைக்கு அழைக்கிறேன். இருவரும் நேரம் கிடைக்கும் போது மெதுவாக என்னைத் திட்டாமல் (திட்டமாட்டாங்க) எழுதுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 

இதுல என்ன விஷேசம்ன்னா நான் சொல்லியிருக்கும் இருவருக்குமே பயணம் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதனால் இருவரின் பகிர்வும் பக்காவாக இருக்கும் என்பதை இங்கு சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்.

-'பரிவை' சே.குமார்.

சனி, 14 நவம்பர், 2015

கடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)


டவுளைக் கண்டேன் அப்படின்னு ஒரு தொடர்பதிவு ஒண்ணு இப்போ சென்னை மழை மாதிரி எல்லாப் பக்கமும் அடிச்சி விளையாடுது. வலையுலகிற்கு வந்த புதிதில் வாரம் ஒரு தொடர்பதிவு வரும். அதன்பின் மெல்ல மெல்ல தொடர்பதிவுக் கலாச்சாரம் குறைந்து விட்டது. பெரும்பாலும் தொடர்பதிவில் ஒரு சிக்கல் என்னவென்றால் இதற்கு எழுதுங்கள் என்று சொல்லும் போது எழுதுவது சிரமம். அதைவிட மிகப்பெரிய சிரமம் என்னவென்றால் பத்துப் பேரை எழுதச் சொல்லுங்கள், ஐந்து பேரை எழுதச் சொல்லுங்கள் என்பதுதான். ஆரம்பத்தில் எழுதுபவர்கள் ஆட்களை பிடித்து விடுவார்கள். மெதுவாக எழுதுவோமே என்றிருந்தால் விவசாயி இப்போது களை எடுக்க ஆள் தேடுவது போல்தான்...   

கடைசியாக வந்த தொடர்பதிவு கில்லஜி அண்ணாவின் கனவில் வந்த காந்தியின்னு நினைக்கிறேன். ஆளு கோர்த்து விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறதில் கில்லாடி.... காந்தி கூட சுத்தி சுத்தி அடிச்சி ஆடி அரை சதம் போட்டதாக நினைவு.  இந்த முறை கடவுளைப் பார்த்து நம்ம ஆசையைச் சொல்லணுமாம். என்னங்க ஆசையிருக்கு... முதல்ல இந்த ஊரில் இருந்து கிளம்பி பொண்டாட்டி, பிள்ளைகளோட சந்தோஷமாக இருக்கணும்ங்கிற பெரிய ஆசைதான் ரொம்ப நாளா ஓடுது. ஆனா கடவுள் கண்டுக்கவே இல்லை. அப்படியிருக்கு... அது வேண்டும் இது வேண்டுமென பதிவிற்காக பந்தலிடலாம்.  எல்லாம் கிடைக்குமா..?

நான் ஒருநாளைக்கு நூறு தடவைக்கு மேல் (நல்லா கவனிங்க ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்ன மாதிரி இல்லை... உண்மையிலேயே நூறு தடவை) 'ஸ்ஸ்ஸ்... அப்பா... முருகா என்னை மட்டும் காப்பாத்துன்னு சொல்வேன்' இது பல வருடங்களாக தொடரும் சொல். எங்க வீட்டில், நட்பில் எல்லாம் 'சாமிக்கிட்ட எல்லாரும் நல்லாயிருக்கணுமின்னுதானே வேண்டுவாங்க நீ என்னடான்னா உன்னையை மட்டும் காப்பாத்தச் சொல்றே..?' அப்படின்னு கேப்பாங்க. நான் சிரித்துக் கொண்டே 'என்னையை கடவுள் காப்பாத்தினா... நான் பத்துப் பேருக்காச்சும் நல்லது(?) செய்வேன்.... அந்தப் பத்துப் பேரு நூறு பேருக்கு.... நூறு பேர் ஆயிரம் பேருக்கு.... இப்படி போகும்ல்ல.... அதை விட்டுட்டு எல்லாரையும் காப்பாத்துப்பான்னு சொன்னா... அவரு இவனைப் பார்ப்போமா... அவனைப் பார்ப்போமான்னு மாறி மாறி பாத்து அம்புட்டுப் பேரையுமே காப்பாத்தாம விட்டுவாருல்ல...' என்று சொல்வேன். 'அடேங்கப்பா... என்ன ஒரு வில்லத்தனம்...' என்று சிரிப்பார்கள். அப்படிப்பட்ட நான் கடவுளிடம் என்னோட ஆசைகளைச் சொல்றேன். அவரு நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு....

அதுக்கும் முன்னால கில்லர்'ஜி' அண்ணா நகச்சுத்திக்காக ஆஸ்பிடல் போய் ஆபரேசன் தியேட்டருக்குள்ளே போனதும் மேலோகத்துக்கு போயி இறைவனிடம் தனது ஆசைகளை அடுக்குகிறார்... அதெல்லாம் மிகப் பெரிய ஆசைகள்... அங்கிட்டு கீதா அக்கா, சகோதரி தேன் மதுரத்தமிழ் கிரேஸ், அன்பு ஐயா செல்வராஜூ, திண்டுக்கல் தனபாலன் அண்ணா, பழனி கந்தசாமி ஐயா என பலரும் கடவுளைப் பார்த்து தங்கள் ஆசைகளைச் சொல்லியிருக்கிறார்கள்... நானும் அடுக்குகிறேன்... அதற்கு முன்னர் நேற்றிரவு கடவுளுடன் நடந்த உரையாடலைச் சொல்லி விடுகிறேன்.  தூக்கம் வராமல் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்போது அறையெங்கும் ஒரு பிரகாசம்... 'லைட்டெல்லாம் அமர்த்தியாச்சே... என்ன வெளிச்சம்...?' என யோசிக்கும் போதே....

"என்னப்பா... அறையில் தனியாக இருக்கிறாய்..?" என்றொரு குரல். இரவு 1.30 மணிக்கு திடீரென கேள்விக்கணையை தனி ஒருவனாய் இருந்த என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வேன்... ஆம் பயந்து அலறிவிட்டேன்... அறை பூட்டியிருக்கு... நான் மட்டுமே இருக்கிறேன்... எப்படி இன்னொரு குரல் வியர்வை என்னை நனைக்க...  எனக்கு கைகால் எல்லாம் டைப் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

"ஏனப்பா பயப்படுகிறாய்..? நாந்தான் கடவுள்..." என்றார்.

"என்னது...!? கடவுளா...? " பயம் மறைந்து சிரிப்பு வந்தது. பின்னே சிரிப்பு வராம ராத்திரி 1.30 மணிக்கு எந்தக் கடவுளய்யா வரும்... கனவா இருந்தாக்கூட பரவாயில்லை... கில்லர்ஜி அண்ணா தொடுத்த கடவுளைக் கண்டேன் தொடர்பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தேன்... அப்பத்தான் யோசித்தேன்... ஆங்... அட நம்ம ஆசையைக் கேட்க வந்திருக்காரு போல என்றெண்ணி "அமருங்கள்" என்றேன். சிரித்துக் கொண்டே என் கட்டிலில் எனக்கருகே அமர்ந்தார்.

"கில்லர்ஜி என்னைப் பார்த்து ஆசைகளைக் கேட்டதோடு இல்லாமல் சுத்தி விட்டுட்டாப்ல... இப்ப நாந்தான் தூக்கமில்லாமல் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுறேன்... இந்தப் பதிவர்கள் எல்லாமே தூங்கவே மாட்டானுங்களா... ராத்திரியெல்லாம் கடவுளைக் கண்டேன்னு எழுதிக்கிட்டே இருக்காப்ல... இனி கொஞ்ச நாளைக்கு எனக்கு தூக்கம் கூட கனவுதாம்ப்பல... சரி உங்க  ஆசைகளை சொல்லுங்க..."

"ம்... என்னோட ஆசைகள்..? எல்லாருக்கும் சொந்த ஆசைகளும் இருக்கும்... அது இப்படி இருக்கணும்... இது அப்படியிருக்கணும் எனக் கேட்கும் போது எனக்கும் எனக்கே எனக்கென சில ஆசைகள் இருக்கும் அதனால் எல்லாந்தான் கேப்பேன்... சரியா..?" என்றேன்.

"ஓகே... " என்றபடி நன்றாக அமர்ந்து கொண்டார்.

முதலில் எனக்கே எனக்கான ஆசைகள் சில என்றபடி ஆசைகளை அடுக்க ஆரம்பித்தேன்.

ஆசை...1 : 'எங்க வீடு இருக்கும் பகுதியில் இன்னும் சரியான ரோடு இல்லை... மழை நேரத்தில் குழந்தைகளைப் பள்ளிக்குக் கூட்டிப்போக என் மனைவி மிகவும் சிரமப்படுகிறார். வண்டியை அந்த தொறுத்தொறு சகதியில் ஓட்டிச் செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. முதலில் எங்க கவுன்சிலருக்கு மனசு வந்து அந்த ரோடைப் போட வேண்டும்.'

ஆசை...2 : 'நான் இனிமேலா பிறக்கப் போகிறோம் என எல்லோருடனும் பகையில்லாமல் வாழ நினைப்பவன்... என் மனைவியும் அப்படியே... ஆனால் உறவுகள் நடக்கும் விதங்கள் எல்லாம் மனக்காயங்களையே ஏற்படுத்துகின்றன. இந்த உறவே வேண்டாம் என ஓதுங்க வைத்து விடுகின்றன... இப்படிப்பட்ட சூழலிலும் சண்டையோ, சமாதானமோ அவரவர் அவரவர் பாதையில் பயணிக்க வேண்டும். அவன் நல்லாயிருக்கக் கூடாது... இவன் நல்லாயிருக்கக் கூடாதென நினைக்காமல் இருக்க வேண்டும்.'

கடவுள் : 'ஆஹா... ஆஹா... ஆசம்...' என்றார். 

"நீங்க வேதாளம் படம் பாத்தீங்களா...? சூரி சொல்ற மாதிரி ஆசம் சொல்றீங்க...?"

கடவுள் : 'ஆமா... பின்ன எவன்டா என்னைக் காண்பான்னு காத்திருக்கும் போது... வைகுண்ட ஏகாதசிக்கு நீங்களெல்லாம் ராத்திரி எல்லாம் படம் பார்த்து கண் முழிக்கிற மாதிரி நானும் படம் பார்த்துத்தான் கண் விழிக்கிக்றேன்..."

"ஆசம்... ஆசம்... சரி அடுத்த ஆசைகள் ஊருக்கானது..." என்றபடி தொடர்ந்தேன்.

ஆசை...3 : 'கருவை மரங்களால் சூழப்பட்டிருக்கும் எங்க ஊர் 42 ஏக்கர் நிலத்திலும், நான் படிக்கும் காலத்தில் இருந்தது போல பச்சை மெத்தை விரித்தது போல்... நெல் மணிகள் தலையாட்ட வேண்டும். சலசலவென நீர் ஓடி, அருகம்புற்கள் அலையோடு ஆடிப்பாடிய அந்த நாட்கள் மீண்டும் வர வேண்டும்.'

ஆசை...4 : 'நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது ஏன் சில ஆண்டுகள் வரை கம்பீரமாக, எங்களுக்கு முன்னோடிகளாக இருந்த எங்கள் ஊர் மனிதர்களில் சிலர் மறைந்து விட்டார்கள்... இருக்கும் சிலரும் வயோதிகத்துக்குள் வசப்பட்டு விட்டார்கள். எங்களை அறிவுரைகளாலும் அன்பாலும் வளர்த்த அந்த மனிதர்கள் இன்னும் சில காலமேனும் கஷ்டப்படாமல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்.'

கடவுள் : "சூப்பர்ய்யா... நல்ல ஆசைகள்... ஆசம்... ஆசம்..."

"நன்றி... இனி எங்க மாவட்டத்துகான ஆசைகள் சிலவற்றைச் சொல்றேன்"

ஆசை...5 : 'இந்தியாவுக்கு நிதியமைச்சரை பலமுறை கொடுத்த எங்கள் மாவட்டத்தில் எந்த ஓரு தொழில்துறையும்... முன்னேற்றங்களும் இல்லை... மாவட்டத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல, மக்களின் 'பசி' நீக்க, நல்லதொரு எம்.பியும் எம்.எல்.ஏவும் கிடைக்க வேண்டும். இது நிறைவேறாத ஆசைதான் என்பது தெரியும். இருந்தாலும் நிறைவேறினால் நல்லா இருக்கும்...'

ஆசை...6 : 'சென்னை எங்கும் மழை நீரில் தத்தளித்தாலும் எங்கள் மாவட்டம் வறட்சியில்தான் வாடிக்கொண்டிருக்கிறது. அதைப் போக்கும் விதமாக, விவசாயிகளை வாழ வைக்கும் விதமாக மாதம் மும்மாரி பொழிய வேண்டாம்... விவசாயம் பொய்த்துப் போகாமல் வருடா வருடம் விளைச்சல் பெருகும் வண்ணம் மழை பெய்ய வேண்டும்' (இதை எழுதி முடித்துவிட்டு ஊருக்குப் பேசும்போது மழை கொட்டித் தீர்ப்பதாய் கேள்வி - அப்பா ஒரு ஆசை கொஞ்சம் நிறைவேறிடுச்சுன்னு நினைக்கிறேன்)

கடவுள் : "முதல் ஆசை... ரொம்பக் கஷ்டம்ய்யா... நானே தேர்தல்ல நின்னாக்கூட என்னையும் மாத்திருவானுங்க... ரொம்பக் கஷ்டம்... ரெண்டாவது ஆசை.... ரொம்ப நல்ல ஆசை... விவசாயம் பொய்த்துப் போகக்கூடாதுதான்... ஆசம்... ஆசம்..."

"அதான் நானே சொல்லிட்டேனே... அந்த ஆசை கொஞ்சமல்ல... ரொம்ப அதிகப்படியானதுதான்... சரி அடுத்த ஆசைக்கு வாங்க... இது என் தமிழகத்துக்கானது..." 

ஆசை...7 : 'மக்கள் முதல்வர் என்று சொல்லிக் கொண்டு மக்கள் சிந்தனையே இல்லாமல் இருக்கும் முதல்வரும்... கேலித்தனமான அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகளும் எங்களை முட்டாளாக்கி கோடிகளில் புரள்கிறார்கள். எங்கள் மக்களுக்கு மக்கள் முதல்வராய் இல்லாமல் மக்களுக்கான முதல்வர் கிடைக்க வேண்டும். வளர்ந்த தமிழகத்தை காலொடித்துப் போட்டிருக்கும் கயவர்கள் கூண்டோடு அழிய... மன்னிக்கவும் நாடு கடத்தப்பட வேண்டும்.'

ஆசை...8 : 'சாராயத்தில் சிக்கி சாகும் என் தமிழன் டாஸ்மார்க் என்னும் வட்டத்துக்குள் இருந்து வெளியே வரணும்... ரோட்டில் விழுந்து கிடப்பவனும் கூத்தடிப்பவனும் குறைய வேண்டும்... கோடி வசூல் என்று மார்தட்டும் அரசுக்கு நாமம் போட வேண்டும்... அதற்கு குடி..குடி என்ற எண்ணம் எம் தமிழனின் சிந்தையில் இருந்து அகல வேண்டும்.'

கடவுள் : "இது ரெண்டுமே ரொம்பச் சிக்கலானது... மக்களின் முதல்வர் வருவதெல்லாம் இனி கேள்விக்குறிதான்... டாஸ்மார்க் வேண்டான்னு தமிழன் சொல்லணுமா... நல்ல கதை போ... முன்னெல்லாம் காலையில குளிச்சி எங்களைப் பார்க்க கோவிலுக்கு வருவாங்க... இப்போ ஆம்பளை, பொம்பளை, ஸ்கூல் பசங்கன்னு ரொம்பபேரு காலையிலயே கட்டிங் போடப் போறானுங்க... உங்க மக்கள் முதல்வர் 500 கோடி நிர்ணயம் பண்ணினா நீங்க 600 கோடிக்கு குடிக்கிறீங்களேப்பா... ஆசம்... ஆசம்..."

"ஆமா... ஆமாம்... நாங்களெல்லாம் அரசை வாழ வைக்கும் சாமிகள்... இந்த விஷயத்துல மட்டும் அரசியல்வாதிகள் எங்களை கடவுளாகப் பார்ப்பார்கள்... சரி என் நாட்டுக்கான ஆசைகளைப் பார்ப்போமா..?"

ஆசை...9 : 'எல்லாரும் ஓர் இனம்... எல்லோரும் ஓர் குலம்... எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்.. என்று வாழ்ந்து வருகிறோம். நாங்கள் மன்னர்களாக வேண்டாம்...  சாதியும் மதமும் எங்களைப் பிரிக்காமல் இருக்கட்டும்... எங்கள் சகோதரத்துவ உறவு ஒரு சில கயவர்களால் பிரிக்கப்படாமல் இருக்க வேண்டும்... எப்போதும் எல்லாரும் அன்போடும் உறவோடும் வாழ வேண்டும்... தீவிரவாதங்கள் திசைக்கொன்றாய் ஓடவேண்டும்...'

ஆசை...10 : ' எங்காவது ஒருவன் பெரிய பதவிக்கு வந்தால்... அவன் நாட்டை விட்டே போயி நாலைந்து தலைமுறைகள் ஆயிருந்தாலும் தமிழன் என்றும் இந்தியன் என்றும் மார்தட்டிக் கொள்ளும் நாங்கள் திருந்த வேண்டும். எங்கள் இந்தியா... எங்கள் இந்தியன்... உலக அரங்கில் உயரத்தில் வலம் வர வேண்டும்...'

கடவுள் : "ஆசம்... ஆசம்..."

"நீங்க ரொம்ப மோசம் போங்க..."

கடவுள் : "என்னய்யா... டப்புன்னு திட்டிப்புட்டே..."

"பின்ன என்னங்க... எத்தனை வருசமா உங்ககிட்ட கேட்டுக்கிட்டு இருக்கேன்... என்னை என் மனைவி மக்களோட வாழ வையுங்க... இந்த வாழ்க்கை போதும்ன்னு... காது கொடுத்தே கேட்கமாட்டேங்கிறீங்க... எப்படியாச்சும் என்னோட எழுத்துக்களை புத்தகமாக்கி எல்லோரையும் கஷ்டப்பட வைக்கணுமின்னு கேட்கிறேன்... அதுக்கும் இன்னும் செவி சாய்க்கலை... இந்தப் பத்தும் நீங்க செய்யிறதுக்குள்ள... நீங்க இங்க உக்காந்திருக்க மாதிரி நான் அங்கே வந்து உக்காந்திருப்பேன்" என்று மேலே கையைக் காட்ட கடவுள் சிரித்தார்.

"என்ன சிரிக்கிறீங்க...?"

"உன்னோட ஆசைகள் எல்லாம் நடக்கும்ய்யா... ஆனா அரசியல் சம்பந்தமான ஆசைகள் ரொம்பக் கஷ்டம்..." என்றவர் "சரிய்யா... கீழே டாக்ஸி கிடைக்குமா.... நான் அப்படியே முரூர் போயி கில்லர்ஜிக்கிட்ட உன்னோட ஆசைகள் எல்லாத்தையும் சொல்லிட்டு கிளம்புறேன்... ஏன்னா அவருதான் புத்தகம் போட்டு எழுதுறாப்ல.. அடுத்து எந்த ஊரோ... ? எந்த நாடோ...? " என்று எழுந்தார்.

"ரொம்ப டயர்டா இருக்காப்ல தெரியுது.... அந்தப் பெட்டுல படுத்து கொஞ்சம் கண் அயர்ந்துட்டுப் போங்க..."

"தூக்கமா... அதெல்லாம் வேண்டாம்ய்யா... கிளம்புறேன்... உன் ஆசைகள் எல்லாம் சீக்கிரம் நிறைவேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..."

"அடப்பாவி... அப்ப நீங்க யாரு...?"

"நான் கடவுள்..." என்றபடி மறைந்தார். வராத தூக்கம் என்னை ஆட்கொள்ள, ஆழ்ந்து உறங்கினேன்.

அட மறந்துட்டேனே... யான் பெற்ற இன்பம் பெறுக இப்பதிவுலகம்ன்னு பத்துப்பேரை சந்திக்கு... சாரி பந்திக்கு இழுக்கணுமாமே... இதோ அந்தப் பத்து...

1. சிறந்த எழுத்துக்களை கருத்துக்களாய் பகிர்ந்து வலையுலகிற்குள் காலெடி எடுத்து வைத்திருக்கும் எனதருமை 'ஆல்ப்ஸ் தென்றல்' நிஷா அக்கா. 

2. குறும்படங்களில் ஜெயித்து வெள்ளித்திரை இயக்குநராகக் காத்திருக்கும் எனதன்பு 'குடந்தையூர்' ஆர்.வி.சரவணன் அண்ணன் 

3. நாம் அவர் தளம் செல்லாவிட்டாலும் உரிமையுடன் வந்து கருத்துச் சொல்லும்  பாசமிகு 'கனவும் கமலாவும்' கமலா ஹரிகரன் அக்கா. 

4. கவிதையில் ஆழ்ந்த கருத்தை வைத்து நம்மை ஆராய வைக்கும் என் தம்பி 'கலியுகம்' தினேஷ் குமார்

5. சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்  கவிதாயினி  எனதருமை 'தூரிகைச் சிறதல்' காயத்ரி அக்கா.

6. தனது பயணக் கட்டுரைகளால் நம்மையும் பயணிக்க வைக்கும் நேசமிகு 'சந்தித்ததும் சிந்தித்ததும்' வெங்கட் நாகராஜ் அண்ணா.

7. சமையல் குறிப்புக்களில் அசத்தும் அன்பின் 'சமைத்து அசத்தலாம்' ஆசியா அக்கா 

8. அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரரும்... சிறந்த சிந்தனைவாதியுமான எனது பாசத்துக்குரிய, எங்கள் மண்ணின் 'தேவியர் இல்லம்' ஜோதிஜி அண்ணா. 

9. சிறப்பான எழுத்துக்குச் சொந்தக்காரரான அன்பின் 'அருணா செல்வம்' அருணா அக்கா

10. படிக்கும் போதே வசியம் செய்யும் எழுத்துக்குச் சொந்தக்காரரான, எங்கள் மண்ணின் பாசமிகு 'வாரியர்' தேவா சுப்பையா அண்ணா.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஷப்பா.... நாம விரும்பு அம்புட்டுப் பேரையும் எழுதச் சொல்லணுமின்னு ஆசையிருந்தும் பத்து பேருங்கிற குறீயீட்டுக்குள் இருக்க வேண்டிய சூழலில் இவரா அவரா என தேடித்தேடியே ரெண்டு பதிவு எழுதுற நேரம் போச்சு. மேலே சொன்னவர்கள் தவிர எல்லாரும் எழுதலாம்.... சொன்னவர்களும் கட்டாயம் எழுத வேண்டும் இல்லையென்றால்... அப்படி மிரட்டல் எல்லாம் இல்லை. முடிந்தால்... முடியும் போது எழுதுங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 17 நவம்பர், 2014

தொடர் பதிவு : கனவில் வந்த காந்தி

ங்கள் தேவகோட்டையின் அஞ்சா நெஞ்சர் அண்ணன் கில்லர்ஜி அவர்கள் மிகவும் சிறந்த வலைப்பதிவர்களில் ஒருவர். இவர் கனவில் வந்த காந்திஜி கேட்ட கேள்விகளுக்கு சுவையாகவும் சிந்திக்கும் வண்ணமும் அழகான பதில்களைக் கொடுத்து அதனை தொடருமாறு பத்து மிகப் பெரிய அறிஞர் பெருமக்களை அழைத்திருந்தார். சரி இது சுத்தி வரும் எல்லாருடைய எண்ணங்களையும் படிக்கும் மாணவனாக இருக்கலாம் என்ற பெரிய நம்பிக்கையில் இன்று பதிவிட்ட அன்பின் ஐயா தஞ்சையம்பதி செல்வராஜூ அவர்களும் அன்பிற்குரிய ஆசான் ஐயா கரந்தையார் அவர்களும் என்னையும் இதில் இழுத்து விட்டு விட்டார்கள். எனக்கென்ன கவலையின்னா முத்து நிலவன் ஐயா முதற்கொண்டு பெரும் பெரும் அறிஞர் பெருமக்கள் எல்லாம் எழுதிய... எழுதும் தொடர் பதிவில் நம்ம என்னத்தை எழுதப் போறோம்ன்னுதான்... இருந்தும் முயற்சித்துப் பார்ப்போம் என்று கோதாவில் குதித்தாச்சு... நான் குதிச்சது சேற்றிலா அல்லது சந்தனத்திலான்னு நீங்கதான் சொல்லணும். நம்ம என்னத்தைச் சொல்லப் போறோம்... அதனால அடிப் போட்டவரு... அவரை பின்பற்றினவங்க பதிவுகளைப் படிச்சிட்டு அப்புறமா நம்ம பதிவுக்குள்ள வரலாம்.

த்தனையோ தொடர் பதிவுகள் வந்திருந்தாலும் வித்தியாசமான இந்த தொடர்பதிவு ஓட்டத்தை துவங்கி வைத்த அண்ணன் கில்லர்ஜியின் பதிவைப் படிக்க



டுத்து ஆன்மீகப் பதிவுகளின் இந்து மகா சமுத்திரம் தஞ்சையின் மைந்தர் திரு. செல்வராஜூ ஐயா அவர்களின் பதிவைப் படிக்க...



ப்புறம் இலக்கியப் பெட்டகம் எங்கள் கரந்தையார் ஆசான் திரு. ஜெயக்குமார் ஐயா அவர்களின் பதிவைப் படிக்க...

My Photo


************************
ரி, இனி நமக்கிட்ட அண்ணல்ஜி(G) அவர்கள் இப்படிப்பட்ட கேள்வியை கேட்டிருந்தா... எப்படி சமாளித்திருப்போமுன்னு பார்க்கலாம்.

"என்ன தம்பி... தூக்கமோ?" - இது கனவில் வந்த காந்திஜி.

"ஆம் ஜி... நல்ல இளங்காலைக் குளிரில் தூக்கம் அடித்துப் போட்டது போல் வருமல்லவா... இதில் தூக்கமோ என்ற கேள்வி எதற்கு?" - இது அடியேன்.

"ம்... தூங்கு... நான் கேட்கப் போகும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே தூங்கு..."

"சரி... கேள்விகளை தாங்கள் கேட்கிறீர்களா இல்லை நான் கேட்கட்டுமா..."

"அடேய்... தூங்க மூஞ்சி நாந்தான் கேக்குறேன்னு சொன்னேன்..."

"சரி... கேளுங்க.. கேளுங்க... நான் ரெடி... நீங்க ரெடியா... அந்த கண்ணாடியை சரியா மாட்டிக்கிட்டு கேளுங்க..."

"லொள்ளு... பதில்ல இருக்கட்டும் இந்த பேச்செல்லாம்... "

"ம்க்கும்... கேள்வி கேக்கிறது ஈசி... பதில் சொல்றதுதானே கஷ்டம்... பெரிய பெரிய ஆளுக எல்லாம் சூப்பர பதில் சொல்லும் போது நான் சொதப்பிட்டா..."

"என்னவோ பண்ணு... எல்லாரும் கேட்ட உடனே பதிலைச் சொல்லி கலக்குறாக... நீ என்னடான்னா... சரி ஆரம்பிக்கிறேன்" என்ற அண்ணல் அதிரடியாய் கேட்க ஆரம்பித்தார்.

1. மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என விரும்புகின்றாய்?

று பிறவியா? இந்தப் பிறவியில என்ன சாதித்து விட்டோம்... அடுத்த பிறவி எடுத்து சாதிக்க...

அப்படியே மறு பிறப்பு இருந்தால் எங்கள் சிவகங்கை சீமையில் தேவகோட்டைக்கு அருகே இருக்கும் எங்கள் ஊரில் இதே பெற்றோருக்கு மகனாகவும்... இந்தப் பிறப்பில் நான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் என் அன்பு மனைவிக்கு கணவனாகவும் (அவரு விருப்பமும் இதுவாத்தான் இருக்கும்ன்னு ஒரு நம்பிக்கை) எனது இரண்டு செல்வங்களுக்கும் மீண்டும் தந்தையாகவும் பிறக்க ஆசை ஜி.

அண்ணல் : வெரிகுட்... வெரிகுட்...

2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால்..?

நானா... விட்டுருவானுங்களா... அப்பன் மகன விடமாட்டேங்கிறான்... அண்ணன் தம்பிய விட மாட்டேங்கிறான்... இதுல கிராமத்துல பொறந்து அரசியல் அரிச்சுவடே அறியாத என்னையா விடுவானுங்க... திருப்பாச்சி அருவாள தீட்டி வச்சிருவானுங்க ஜி... கொஞ்ச காலமாச்சும் வாழ ஆசை... சரி... உங்க விருப்படி ஆட்சியாளனாக ஆனால்... லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தும் திரு.சகாயம் ஐ.ஏ,எஸ். அவர்களைப் போன்றோரின் துணையுடன் லஞ்ச மற்ற, வறுமையற்ற வளமான பாரதத்தை உருவாக்கப் முயற்சி செய்வேன்... பின்னால குழி தோண்டாத அமைச்சர்கள் இருக்கும் பட்சத்தில் அதில் வெற்றியும் பெறுவேன்.

அண்ணல் : சகாயத்தை கிரானைட் கொள்ளையவே விசாரிக்க விடமாட்டேங்கிறாங்களே... சரி விடு... நல்ல பதில்... நல்ல பதில்...

3. இதற்கு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்?

திர்ப்பு எங்க இல்லாம இருக்கு சொல்லுங்க ஜி... கல்யாணமா இருந்தாலும் சரி... காது குத்தா இருந்தாலும் சரி... எவனாவது ரெண்டு பேர் எதிர்க்கத்தான் செய்கிறான்... அவ்வளவு ஏன் வலைப்பதிவர் மாநாடு நடத்துனா அங்க ரெண்டு பேரு என்னைக் கவனிக்கலைன்னு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க... உள்நாட்டுக்காரனே எதிர்ப்பான்... வெளிநாட்டுக்காரன் எதிர்க்காமலா இருப்பான்... எதிர்ப்பில் எதிர்த்து வெற்றி நடை போட்டால் எதிர்ப்பெல்லாம் புஸ்வானமாகிவிடும்... இந்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கு... அதனால எவன் எதிர்த்தாலும் அதையெல்லாம் பற்றி கவலையே படமாட்டேன்... என் பாதையில் நான் பயணிப்பேன்..

அண்ணல் : ஆமா... ஆமா... எனக்கு எம்புட்டு எதிர்ப்பு இருந்துச்சு தெரியுமா... அத்தனையிலும் வெற்றி பெறலையா... சரி... என் பாதையில் நான் பயணிப்பேன்னு சொன்னே பாரு... கிரேட்... கிரேட்...

4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?

ளைஞனுக்கு திட்டம் தீட்டினாலே செயலாக்க முடியலை... அப்புறம் முதியவர்களுக்கு என்ன திட்டம் தீட்டுறது. ஆனா பாருங்க... பெரியவங்க வயசாயிடுச்சின்னு கவலைப்படாம இருக்க... கையில ஆளுக்கு ஒரு லேப்டாப் கொடுத்து கேம் விளையாடுங்க... மனசுல பட்டதை இதுல பதிஞ்சி வையுங்கன்னு சொல்லி அவங்களை சுறுசுறுப்பா செயலாற்றச் செய்வேன். முடங்கிக் கிடக்காமல் மூச்சிருக்கும் வரை எதாவது செய்து கொண்டே இருங்கள் என்று சொல்லி அவர்களை இளைஞர்களாக வாழச் செய்வேன்.

அண்ணல் : நல்லது.... நல்லது... 

5. அரசியல்வாதிகளுக்கு என்று புதிய திட்டம் ஏதாவது?

வனுகளை சுத்தம் பண்ணுறதுங்கிறது ரொம்பக் கஷ்டம் ஜி... ஒரே வழி வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். இப்ப இருக்க மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாத்தையும் விரட்டிட்டு படிச்ச பயபுள்ளகளுக்கு மட்டுமே அரசியல்வாதியாகிற தகுதி இருக்குன்னு சட்டம் கொண்டு வருவேன். அதற்காக ஆன்லைனில் தேர்வு எழுதி சான்றிதழ் வாங்க வேண்டும் என்பதையும் நடைமுறைப்படுத்துவேன். கல்வி அறிவிருந்தால் மட்டுமே ஒரு நல்ல அரசை அமைக்க முடியும்ன்னு செயல்படுத்திக் காட்டுவேன்.

அண்ணல் : (அப்ப அருவா உறுதிடி...) நல்ல திட்டம்.... சாத்தியப்படுத்தினால் நன்று.

6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதி மன்றங்களுக்குப் போனால்?

ன்லைனில்தானே பரிட்சை எழுதப் போகிறார்கள். வினாக்களை நிறைவு செய்யும் போது நீ பாஸா பீஸான்னு சிஸ்டமே சொல்லிடும். அப்புறம் மதிப்பெண் தவறுன்னு எப்படி சொல்லுவாய்ங்க... எவனும் நீதி மன்றம் போக முடியாது... அதுக்கெல்லாம் அம்மா பாலிடிக்ஸ் மாதிரி அதிரடி சட்டம் போட்டுருவோமுல்ல... சிவகங்கை சீமையில இருந்து வந்தோம்ன்னு சொன்னா 'பசி' மாதிரி பதுங்கியே இருப்போமுன்னு நினைச்சிடாதீங்க... மருதுபாண்டியன் மண்ணுல பிறந்தவன் எல்லாம் 'பசி' மாதிரி இருக்கமாட்டான். அம்புட்டுக்கும் ஆப்பு கரெக்டா ரெடி பண்ணி வச்சிருவோம்.... நீதிமன்றத்துல இருக்கவனெல்லாமே இப்படி பரிட்சை எழுதி வந்தவனாத்தான் இருப்பான். இந்த மாதிரி கேசை எடுத்து வாதாட நினைக்கவே மாட்டான். ஏன்னா இந்த மாதிரி வழக்கு தொடுத்தால் அதற்கான தண்டனைகளை கடுமையாக்குவோம்.

அண்ணல் : இங்க எதுக்கு அரசியல்... பசியே இப்ப ருசி மாத்தப் பாக்குது... சரி... சரி... கேக்க நல்லாத்தான் இருக்கு... கேப்பையில நெய் வடியுமா?

7. விஞ்ஞானிகளுக்கு என்று ஏதும் இருக்கின்றதா?

விஞ்ஞானிகளுக்கு எப்பவும் போல்தான்... அவர்களுக்கு புதிதாக எதுவும் செய்யும் எண்ணம் இல்லை... ஆனால் விவசாயிகளுக்குச் செய்வேன்... கருவை மண்டிக்கிடக்கும் நிலங்களை எல்லாம் சீர் செய்து மீண்டும் பசுமை மணக்கச் செய்வேன்.. நாட்டில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி நீக்கமற விவசாய பொருட்கள் கிடைக்கச் செய்வேன்... அதற்காக லட்சங்களை அல்ல கோடிகளையும் கொடுத்து லட்சியத்தை நிறைவேற்ற வைப்பேன்.

அண்ணல் : பலே... பலே... விவசாய நிலமெல்லாம் வீடுகளாகி வருவது வருத்தமே... இது ரொம்ப நல்ல திட்டம்...

8. இதை - உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்களும் செய்வார்களா?

செய்ய வைக்க என்னென்ன முயற்சிகள் உண்டோ அத்தனையும் செய்து வைத்து விடுவேன். ஆட்சிக் காலத்தில் மக்கள் கையை ஓங்கச் செய்வேன்... அடுத்து வருபவன் செய்யத் தவறினால் அவர்கள் கையை ஓங்குவார்கள் இல்லையா.

அண்ணல் : அடடே... சூப்பருடா...

9. மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக?

ந்தியனாய் நாம் எது செய்தாலும் புதுமைதானே ஜி... எல்லா நாட்டுலயும் எல்லாம் இருந்தாலும் நமக்கிட்ட இருக்க வளம் எல்லாம் எல்லா நாட்டுலயும் இல்லையில்ல... அதையெல்லாம் பாதுகாத்து ஒரு வளம் நிறைந்த பாரதத்தை... வளமையான பாரதத்தை உருவாக்குவேன். அப்புறம் ஐயா கரந்தையார் சொன்னது போல நூறு சதவிகித வேலை வாய்ப்பை உருவாக்குவேன்.

அண்ணல் : பதிலில் காப்பி அடிக்கிறாயா?

நான் : பதிவையே காப்பி அடிக்கிறானுங்க... நான் ஐயாவோட பதிலைத்தானே காப்பி செய்திருக்கிறேன்.. விடுங்க ஜி...

அண்ணல் : பதில் தெரியுதோ இல்லையோ நல்லாச் சமாளிக்கத் தெரியுது... ஆனா இந்தியனாய் அப்படின்னு சொன்னே பாரு... அந்த ஒற்றை வார்த்தையே போதுமே... ஆஹா... வளமான பாரதம் காண வாழ்த்துக்கள்.

10. எல்லாமே சரியாக சொல்வது போல இருக்கின்றது. ஆனால் - நீ மானிடனாகப் பிறந்து நிறைய பாவங்களைச் செய்து விட்டாய். உனக்கு மீண்டும் மானிடப் பிறவி கொடுக்க முடியாது. ஆகவே வேறு என்ன பிறவி வேண்டும்? -  என இறைவன் கேட்டால்..?

ஹா... ஹா... இம்புட்டும் செய்தால் இன்றைய இந்தியாவில் பாவம் செய்தவனாகிவிடுவேன் என்பது உண்மைதான்... என்ன இங்க இருக்க அரசியல் வியாதிகளுக்கு பாவி ஆவேன்னு நினைச்சால் இறைவனுக்குமா... அது சரி... மறு பிறவியாக வேறு பிறவியா... வேண்டாம் ஜி... வேண்டவே வேண்டாம்... மானிடனாய் பிறந்து மற்றவர்களை இம்சித்தது போதும்... மானிடன் அல்லாத மறு பிறப்பும் வேண்டாம்.

அதுசரி... மறுபிறவியில் நீ எங்கு பிறக்க வேண்டும் என்று நினைக்கிறாய்ன்னு ரெண்டாவதா ஒரு கேள்வி கேட்டீங்க... நானும் அதே ஊரில் பிறக்கணுமின்னு சொன்னேன். இங்க மானிடப் பிறவி இல்லைங்கிறேள்... முரணாக இருக்கிறதே... சரி... சரி... தூக்கக் கலக்கம் இருவருக்கும்... கொஞ்சம் மாற்றி வந்திருக்கலாம்... விட்டுடுவோம். 

அண்ணல் : எங்கு பிறக்கணுமின்னு கேட்டேன்... மானிடனாய்ன்னு சொல்லலையே (சமாளிப்பு) கடைசி கேள்விதானே விடு... விடு... எல்லோரும் மறுபிறவி கேட்கும் போது நீ வேண்டாங்கிறே... சரி உன் விருப்பம் அதுவெனில் நான் என்ன செய்ய முடியும். எல்லாம் இறைவன் சித்தம்.

அம்புட்டுத்தானே... ஆளை விடுங்க சாமி.

இரு... நல்லா பதில் சொன்னாய்... இனி உன்னோட நண்பர்கள் முகவரி கொடு... அவர்கள் கனவில் போய் நான் காலாய்க்கணும்... என்ற அண்ணல் நான் கொடுத்த இஞ்சி டீயை ருசித்துக் கொண்டிருக்க, நானோ நண்பர்கள் முகவரியைத் தேடினேன்... கிடைத்ததில் முத்துக்கள் பத்தை முன்னே வைத்தேன். 

அன்புச் சகோதரி ஸஷிகா கிச்சன் மேனகா சத்யா அவர்கள்

பாசமிகு அண்ணன்  WARRIOR  தேவா  அவர்கள்

அன்பின் ஐயா அசை போடுவது வலைச்சரம் சீனா  அவர்கள்

நேசமிகு அண்ணன் தேவியர் இல்லம் ஜோதிஜி  அவர்கள்

அன்பான அக்கா வானம் வெளித்த பின்னும் ஹேமா  அவர்கள்

எனது இனியவன் இதயச்சாரல் தமிழ்க் காதலன்  அவர்கள்

பாசக்கார அண்ணன் குடந்தையூர் ஆர்.வி. சரவணன்  அவர்கள்

அருமை அண்ணன் வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்கள்

கவிதை நாயகன் தம்பி  கலியுகம் தினேஷ் குமார் அவர்கள்

எனதுயிர் அக்கா  தூரிகைச் சிதறல் காயத்ரி  அவர்கள்...

ம்... அப்புறம்...

அண்ணல் : போதும் போதும் பத்தாச்சு... பத்தாச்சு...

நான் : ஐயோ பத்தாச்சா.... கனவுல வந்து இப்படி பத்து மணி வரைக்கும் படுக்க வச்சிட்டிங்களே... இனி வேலைக்குப் போனா மாதிரித்தான்...

அண்ணல் : அடேய்... கிறுக்கா... பத்து பேர் ஆச்சு... மத்தவங்களுக்கும் வேணுமின்னு சொல்ல வந்தேன்... சரி... ஓகே... இனி இந்தப் பத்து பேரையும் உண்டு இல்லைன்னு பண்ணனும்... அதுக்குள்ள எத்தனை பத்து வருதோ தெரியலயே... ஒருத்தனை கனவுல கேள்வி கேக்கப் போக இப்படி மாட்டிவிட்டு தூங்காம அலைய வச்சிட்டாரே...

நான் : (மனசுக்குள் : அதான் எங்க தூக்கத்தை கெடுத்துட்டீரே..) என்னது உங்களுக்குப் பத்தா?

அண்ணல் : அப்பா... சாமி... ஆளைவிடு... விட்டா எல்லா நோயும் இருக்கானான்னு கேப்பே போல... வர்றேன்... எந்திரிச்சி வேலைக்குப் போ... பை..பை... சியூ...

நான்.. சியூவா... வேண்டாம்... வேண்டாம்... வேண்டவே வேண்டாம்...

பக்கத்து கட்டில்காரர் (சத்தமாக) : ஏன்டா நாதாரி... நைட் வேலை பாத்துட்டு வந்து படுத்தா... விடிஞ்சிம் எந்திரிக்காம வேண்டாம் வேண்டான்னு கத்தி தூக்கதைக் கெடுக்குறே...?

ஐயோ.... விடிஞ்சிருச்சா... ஓடுறா.. ஓடுறா குமாரு... பாத்ரூமுக்குள்ள வேற எவனாச்சும் நுழைஞ்சிருக்கப் போறான்னு அவசரமாக பாத்ரூம் அருகே ஓட உள்ளே பூட்டியிருந்தது.

நான் வாசலில் காத்திருக்கிறேன்...

தொடர் பதிவை ஆரம்பித்த அண்ணனுக்கும் என்னை அதில் கோர்த்து விட்ட ஐயாக்களுக்கும் ஆவலாக எழுதும் நட்புக்களுக்கும் என்னைத் தொடர்ந்து எழுத இருக்கும் நட்புக்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்...

(ரொம்ப பெரிசா போச்சு... கோவிக்காதீங்கோ... மீ எஸ்கேப்... ரெண்டு நாளைக்கு)

-'பரிவை' சே.குமார்.

சனி, 10 ஆகஸ்ட், 2013

தொடர் பதிவு : பாடி வா... பாடி வா... ஆடி வா...

பதிவுலகில் இப்போ தொடர்பதிவு ஆடி மாதத்து திருவிழாக்கள் போல தொடர்ந்து மேளதாளத்துடன் அரங்கேறி வருகின்றன. இப்போதுதான் சந்தோஷ தருணங்கள்ன்னு தென்றல் சசிகலா அக்கா சொல்லச் சொன்னாங்க. ஒரு வழியா சொல்லி முடிச்சிட்டு ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பாடான்னு உக்காந்தா எங்கள் ப்ளாக்  ஸ்ரீராம் அண்ணா அடுத்து மாட்டிவிட்டுட்டாரு... பாடி வா.... கபடி... கிரிக்கெட்டுன்னு எழுதச் சொல்லிட்டாரு...

சரி ஆசையா கூப்பிட்டுட்டாங்க... எதாவது எழுதிட்டு ரெண்டு பேரை மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆயிடுவோம்...

சரி வாங்க பாடுவோம்...

நுங்கு வண்டி, கண்டொளிஞ்சு, சில்லு நொண்டி, தவட்டாங்கம்பு, டயரு வண்டி, ஓடிப்புடிச்சு, கோழிக்குண்டு, பம்பரம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, தாயம் இப்படி சீசன் விளையாட்டுக்கள் எங்கள் கிராமத்தை அலங்கரித்து இருந்த நேரம்... மாலை நேரத்தில் கபடியும் உண்டு. ம்.... அது ஒரு கனாக்காலம். இப்போ பசங்களெல்லாம் கம்ப்யூட்டர் கேம்ஸ் மட்டும்தான் விளையாடுறாங்க... எத்தனை விதமான விளையாட்டுக்கள்... கண்மாய்த்தண்ணிக்குள் விளையாண்ட விளையாட்டுக்கள் எல்லாம் எத்தனை சுகமானவை. இன்னைக்கு ஷவர்ல குளிக்கிற நமக்கு அதெல்லாம் எங்கே தெரியப்போகுது...


கபடி... எங்கள் ஊரில் இரவு மாரியம்மன் கோவிலருகே எல்லாரும் கூடி சந்தோஷமாக விளையாடுவோம். எங்களுக்கு மூத்த குரூப் அதாவது எங்க அண்ணன்கள் குரூப்பில்தான் கபடி அனல் பறக்கும். மணிச் சித்தப்பா கபடி பாடும் அழகே தனி... பாண்டி மச்சான், செல்வ அண்ணன், எங்க அண்ணன் என இரண்டு குழுவாக... அதாவது ஆட்கள் அதிகமிருந்தால் ஏழு பேராக பிரிப்பார்கள்... இல்லையென்றால் இருப்பவர்களைப் பிரித்து விளையாடுவார்கள். ஆட்டம் அனல் பறக்கும்... கபடி... கபடி என்ற சத்தம் அங்கு நிறைந்திருக்கும்.... நேரம் ஆக ஆக ஒவ்வொரு வீட்டிலும் இருந்து அழைப்பு வர ஆரம்பிக்கும். ஒவ்வொருவராய் கிளம்ப ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும்.

என்னடா அண்ணன்கள் விளையாண்டதே சொல்றானேன்னு பார்க்கிறீங்களா... நம்ம எப்பவுமே அதிகமா விளையாடுறது இல்ல... கபடி எப்பவாவது விளையாடுவோம். கல்லூரியில் வேலை செய்யும் போது ஆசிரியர்களுக்கான கபடி போட்டியில்  எங்க அணி கோப்பை வெல்ல காரணமாய் இருந்தவன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாம்... அருமையான போட்டி அது... மணல் அதிகம் போடாமல்... கை காலெல்லாம் சிராய்ப்பு ஏற்ப்பட்டுடுச்சு... இருந்தாலும் பரிசு வாங்கும்போது வலி தெரியலை...

கபடி பாடும்போது கபடி.. கபடின்னு மூச்சை விடாமல் பாடவேண்டும் ... எதிர் அணியினர் நிற்கும் இடத்தில் ஒரு கோடு போட்டிருப்பார்கள் பாடிப் போயி அதைத் தொட்டு காலைத் தூக்க வேண்டும். அதாவது வலது கால் கோட்டில் வைத்தால் இடது காலைத் தூக்க வேண்டும். தொடாமல் வந்தால் பாடிப்போனவர் அவுட். இப்பக்கூட எங்கள் ஊர்ப்பக்கம் கபடிப் போட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நல்லா விளையாடுபவனை குறிவைத்துத் தூக்கி அடித்து கைகால் மூட்டுக்களை இறக்கிவிடுவார்கள்... இருந்தாலும் தமிழர்களின் விளையாட்டான கபடி இன்னும் கிராமங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது சந்தோஷம்தான்...


அடுத்து கிரிக்கெட்... கிரிக்கெட் போட்டி என்றால் இன்றும் இரவு எத்தனை மணி ஆனாலும் பார்த்துவிட்டுத்தான் படுப்பேன். அந்த அளவுக்கு கிரிக்கெட் பைத்தியம்... ஊரில் என் தம்பி கிரிக்கெட் விளையாட்டில் கில்லி... அண்ணாமலை படத்தில் இடுப்பில் துண்டைக்கட்டி வருவது போல் கைலிக்கு மேல் எல்லாருடைய இடுப்பிலும் குத்தாலம் துண்டு இருக்கும்... கைலி அவுறவே அவுறாதுல்ல... இடப்பற்றாக்குறை காரணமாக கட்டம் போட்டு அந்தக் கட்டத்துக்குள்தான் எங்கள் ஊரில் கிரிக்கெட் விளையாடுவார்கள்.... சிக்ஸ் அடிச்சா அவுட்... இதுக்குப் பேர் ஹண்ட்ரம்ஸ்ஸோ என்னவோ சொல்லுவாங்க மறந்து போச்சு...

கிரிக்கெட் மேல உள்ள ஆர்வத்துல நானும் முருகனும் பசங்களைச் சேர்த்து எங்க ஊர்ல கிரிக்கெட் போட்டி நடத்தினோம்... அதுக்காக கொல்லைக்காட்டுப் பக்கம் ஆவரஞ்செடி, காராஞ்செடி எல்லாம் வெட்டி சுத்தம் செய்து கொட்டகை போட்டு இனிமே நடத்தக்கூடாது என்ற முடிவுடன் போட்டி நடத்தி முடிச்சோம்... அதுக்குக் காரணம் நானும் முருகனும் கையைச் சுட்டுக்கொண்டோம் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்.

அப்புறம் கல்லூரியில கிரிக்கெட் போட்டி நமக்கும் அதுக்கும் ரொம்பத்தூரம்ன்னு சொன்னாலும் கேட்கலை... கபடியில கலக்குனமாதிரி கலக்குவேன்னு நினைச்சு வம்படியா இழுத்தாங்க.... பீல்டிங்க் அப்போ ரெண்டு போரைத் தடுத்தேன்.. ரெண்டு தடவைதான் பால் நம்ம பக்கம் வந்திச்சு... அப்புறம் பேட்டிங்க் நாலாவது ஆளா இறங்கி நாலு நிமிசத்துல திரும்பி வந்தாச்சுன்னா பாத்துக்கங்களேன்... தோத்துப் பொயிட்டோமுல்ல... இருந்தாலும் ரன்னர் அப்படின்னு ஆளுக்கொரு டம்ளர் கொடுத்தாங்க...

அப்புறம் வாழ்க்கை அப்படியிப்படின்னு சுத்தி அபுதாபிக்கு வந்த போது சில சமயங்களில் இங்கிருக்கும் உறவுகளுடன் புட்பால், வாலிபால் விளையாடுவதுண்டு...

இதுக்கு மேல புராணம் பாட ஒண்ணும் இல்ல... நாமளும் ரெண்டு பேரை கோர்த்து விடணுமாம்... யாரைக் கோர்க்கலாம்.... ம்.. யோசித்ததில் சிக்கியவர்கள்...

1. குடந்தையூர் - ஆர்.வி. சரவணன் அண்ணா
2. வாரியர் - தேவா அண்ணா  

அண்ணாஸ்... நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்... அடுத்து என்ன தொடர்பதிவு வரப்போகுதே தெரியலையே...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

தொடர்பதிவு : மகிழ்வான தருணங்கள்...

மகிழ்வான தருணங்கள் அப்படின்னு ஒரு தொடர்பதிவை தென்றல் சசிகலா அக்கா அவர்கள் தனது மகிழ்வான தருணங்களை எழுதி அதில் நம்மையும் எழுத அழைத்து மாட்டிவிட்டுவிட்டார்கள்... நானும் ஐந்து பேரை மாட்டிவிடணுமாம்... இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை எழாமல் ஆண், பெண் இருவரும் சமமாக ஆறு பேரை அழைக்கிறேன். பதிவிற்குள் செல்லும் முன்னர் மேளதாளம் முழங்க மாட்டிக்கொண்டவர்களை அழைத்துவிட்டு மெதுவாக பதிவிற்குள் செல்லலாம்....

மனசு முழுவதும் சந்தோஷமாக கீழே கொடுத்துள்ள உறவுகளை இந்தப் பதிவைத் தொடர அழைக்கிறேன்.



அப்பா இப்பத்தான் சந்தோஷமாக இருக்கு.... யான் பெற்ற இன்பம் இவர்களும் பெறுக...!

சரி வாங்க... நம்ம சந்தோஷ தருணங்களைப் பார்ப்போம்...


கணிப்பொறி மையம் வைத்திருந்த போதும் கல்லூரியில் வேலை பார்த்த போதும் பெரும்பாலும் விசுவல் பேசிக், ஜாவா, சி++ என்ற வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்ததால் பொழுது போக்குகள் நிறைந்த வலைப்பூவையோ முகநூலையோ பற்றி அறிந்து கொள்ளும் எண்ணம் எழவில்லை. 

தேவகோட்டையிலிருந்து சென்னை வந்து சிலகாலம் வேலை பார்த்து அங்கிருந்து என்னைப் பயணிக்க வைத்த வாழ்க்கைத் தேடல்  அபுதாபியில் கொண்டு வந்து நிறுத்தியபோது மனைவியும் பாப்பாவும் அம்மாவின் வயிற்றில் இருந்த விஷாலும் மட்டுமே மனசெல்லாம் நிரம்பி இருந்தார்கள்... 

இங்கும் இயந்திரத்தனமான வேலை... வேலை முடிந்ததும் களைப்பில் எப்படா அறைக்குச் செல்வோம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்... வேலை... அறை என்ற இயந்திர வாழ்க்கைக்குள் இறுக்கமாய் அமர்வதாய் மனசுக்குள் தோன்ற கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அதிகம் தொடராத எழுத்தை மீண்டும் தொடர ஆரம்பித்தேன்... அதிகமான கதைகள் எழுதினேன். 

அந்தச் சமயத்தில் எனது நண்பன் கணேசன் வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்தான். அதைப் பார்த்ததும் எனக்கும் ஒரு ஆசை நாமளும் எழுதினால் என்ன என்ற எண்ணம் மேலிட எப்படி வலைப்பூ ஆரம்பிப்பது எனக் கேட்டு நண்பனுக்கு மின்னஞ்சல் செய்தேன். அவனும் எனக்கு உதவ, 2009 ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி கிறுக்கல்கள் என்ற வலைப்பூவை ஆரம்பித்து சின்னச்சின்ன கவிதைகளைப் பதிய ஆரம்பித்தேன்,  எனது முதல் பதிவிற்கு நிலாமதி அவர்கள் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தினார்கள். 

அதன் பின்னர் பின்னூட்டங்களும் நண்பர்கள் வட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட பதிவு போதை தந்த உற்சாகத்தில் கிறுக்கல்களோடு நெடுங்கவிதைகள், சிறுகதைகள், மனசு என நான்கு தளங்களை ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். எனது கிறுக்கல்கள் தளத்தில் பதிந்த கவிதை ஒன்றை நாடோடி இலக்கியன் அவரது பகிர்வில் சிலாகித்திருந்தார். இதுதான் மற்றொரு தளத்தில் எனது பதிவிற்குக் கிடைத்த முதல் அங்கிகாரம்... நம்ம எழுத்தும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு ஒரே சந்தோஷம்தான் போங்க... அம்மா இன்னைக்கு தோசை சூப்பரா இருக்குன்னு சொன்னா உடனே அம்மா சந்தோஷத்துல நம்ம புள்ள இன்னொரு தோசை சாப்பிடமாட்டானான்னு வேகமாக அப்போ முறுகலா ஒரு தோசை வாங்கிக்கன்னு கூடுதலா ஒண்ணு வைப்பாங்களே... அது மாதிரி கிறுக்கித் தள்ளியாச்சு...

அப்புறம் ஒரு தடவை பனித்துளி ஷங்கர் அவர்கள் நாலு வலைய வச்சிக்கிட்டு ஏய்யா நீ மாரடிக்கிறதுமில்லாம எங்களையும் வதையுங்கொலையும் வாங்கிறேன்னு செல்லமா சொன்னாரு... இவருக்கு பொறாமையா இருக்குமோன்னு நானும் விடாம நாலையும் இறுக்கிப் பிடிச்சிக்கிட்டேன்... அப்புறம்தான் தெரிஞ்சது அவரு சொல்றது உண்மைதான்... எல்லாத்தையும் ஒரு தளத்துல பதியலாமேன்னு முடிவு பண்ணி எதில் பதிவதென யோசித்தபோது நண்பர்களுடன் நடத்திய மனசு கையெழுத்துப்பிரதி அனுபவம் எப்போதும் சந்தோஷத்தின் உச்சம் என்பதால் மனசில் தொடர முடிவெடுத்து ஒரு தளத்துக்கு மாறினேன்.

அப்புறம் சீனா ஐயா அவர்களின் ஆசியோடு வலைச்சர ஆசிரியனாய் ஒரு வாரம்... அதீதத்தில் சிறுகதைகள்... கல்லூரியில் படிக்கும் போதே பத்திரிக்கைகளில் எழுதியிருந்தாலும் மீண்டும் பத்திரிக்கைகளில் சிறுகதைகள், கவிதைகள்... வம்சி வெளியிட்ட காகங்கள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் என்ற சிறுகதைத் தொகுப்பில் எனது கருத்தப்பசு சிறுகதை... கதம்பமாலையில் எனது கவிதைகளை சென்ற வார டாப்-10 என தொகுக்கும் ஆசிரியர் தொடர்ந்து இருமுறை மூன்றாவதாக தேர்ந்தெடுத்து பகிர்ந்தது, வலைச்சரத்தில் அதிகமுறை எனது பதிவுகளை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியது என எனக்கு வலைப்பூ கொடுத்த வசந்தம் அதிகம். 

குறிப்பாக இதன் மூலம் நமது சுக துக்கங்களில் பங்கெடுக்கும் உறவுகளைப் பெற்றது... நமது எழுத்தின் நிறை குறைகளை மனசார சொல்லிச் செல்லும் உள்ளங்களைப் பெற்றது... பெரும்பாலான நேரங்களில் மனவலியைக் குறைக்கும் மருந்தாக இருப்பது என வலைப்பூ வாழ்வில் முக்கியமானதாய் ஆகிப் போனது என்பதே உண்மை. 

வலைப்பூவிற்கு வரும் முன்னரே பத்திரிக்கைகளில் கதை, கவிதை எழுதியிருந்தாலும் கல்லூரியில் படிக்கும்போது 'ஒரு கட் அவுட் நிழலுக்குக் கீழே' என்ற எனது கவிதை முதன் முதலில் தாமரையில் வெளியான அந்த தினம் கொடுத்த சந்தோஷம் இன்னும் மறக்க முடியாத சந்தோஷம்....

இன்று எனது எழுத்துக்கள் உங்களால்தான் செம்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை என் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் சொல்லிக் கொள்கிறேன்... 

கடைசியாக... என்ன வலைக்குள் நுழைந்தால் வலையில் சிக்கிய மீனாக வெளியில் வரமுடியாமல்... வர நினைக்காமல் அதிலேயே மனம் லயிப்பது ஒருவித போதை என்றாலும் இந்தப் போதை தரும் சுகம் சந்தோஷமானது என்பதால் மனம் மகிழ்வுடன் மற்ற நண்பர்களின் எழுத்துக்களை வாசித்துக் கொண்டே இருக்கிறது....

சரி... இத்தோடு  நிறுத்திக்கலாம்.... சசிகலா அக்கா அவர்களின் அழைப்பை ஏற்று எழுதியாச்சு.... எனது அழைப்பை ஏற்று எல்லாரும் எழுதிருங்க... 

திண்டுக்கல் தனபாலன் சாருக்கு... உங்களை யாராவது அழைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏன்னா வலைப்பூக்களில் சுறாவளி சுற்றுப்பயணம் செய்பவர் நீங்கள்... அப்படி யாருமே உங்களை அழைக்கவில்லை என்றால் நீங்களும் எழுதுங்கள்....
-'பரிவை' சே.குமார்

சனி, 23 மார்ச், 2013

பக்... பக்... பய அனுபவம் - தொடர்பதிவு


வாழ்க்கையில் சந்தித்த பய அனுபவத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும்படி ஆசியா அக்கா அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்து நாட்களாகிவிட்டது... இனிமேலும் எழுதாமல் இருந்தால் அக்கா கோவமாயிடுவாங்க. அதனால பய அனுபவம் பற்றி கொஞ்சம் பேசலாம்.

பய அனுபவத்துல நிறைய சரக்கு இருக்குங்க... எதை சொல்வது எதை விடுவது... சரி கட்டுரையின் நீளம் கூடாமல் பகிரலாம்.



எட்டாவது வரைக்கும் ஒரு நடுநிலைப்பள்ளியில்தான் படிப்பு... மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைங்க எல்லாம் போங்க என்று விரட்டி விடுவார்கள். அதனால் நாலாவது படிக்கும் போது மரக்குரங்கு விளையாண்ட ஒருத்தன் மரத்தில் இருந்து குதிக்கும் போது நம்ம மேல விழுந்து கை ஒடிந்து அம்மாவின் திட்டுக்குப் பயந்து வீட்டுக்கு வந்து கை வலியோடு ரென்டு உதையும் வாங்கியது தவிர... வேறெந்தப் பய அனுபவமும் வரவில்லை..

ஒன்பதாவது வேறு பள்ளி... வேறு சூழல்... நாங்கள் படித்த பள்ளியில் இருந்து மற்ற பள்ளிகளுக்குப் போனால் முதல் வருடம் தேர்ச்சி பெறுவது என்பது ஒரு சிலருக்குத்தான் மணி மகுடம் பலருக்கு காவடிதான்... அப்படியிருக்கும் போது மதிப்பெண்களை பள்ளியில் தலைமையாசிரியர் வந்து வாசித்து வீட்டுக்கும் லெட்டர் அனுப்பி... போச்சு இந்த வருடம் நாமளும் காவடிதான் என்று நினைத்து தோல்வியை தோல்வி அடையச் செய்தது ஒரு புறம் இருந்தாலும் இரவு 7 மணிக்கு தேவகோட்டையில் டியூசன் முடித்து சைக்கிளில் எங்க ஊருக்குப் பயணிக்க வேண்டும்... 

அப்போது பாதி தூரம் வரை ரோடு இருக்காது... (இப்போது தேவகோட்டையில் இருந்து தார்ச்சாலை) விளக்கு வெளிச்சமும் இருக்காது... ஊருக்குள் இருக்கும் விளக்குகளும் எப்போதாவதுதான் எரியும்... பாதி தூரத்துக்கு மேல் அதாவது எங்க ஊர் பஞ்சாயத்து எல்லைக்குள் சரளை ரோடு இருக்கும். ரோடில்லாத பகுதியில் மாட்டு வண்டி ஓட்டிய சாலையில்தான் போக வேண்டும்.... எல்லா பக்கமும் ஆவாரஞ்செடிதான்...

அமாவாசை இருட்டாக இருந்தாலும் சைக்கிள் மட்டும் சும்மா எங்க பள்ளம் இருக்கு... எங்க மேடு இருக்குன்னு சரியான பாதையில் செல்லும்... இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் பகலில் செயின் அடிக்கடி கழண்டாலும் இரவில் அப்படி எதுவும் ஆகாது... அப்படியே ஆகி மாட்டமுடியாமல் போனால் அப்புறம்.... ஐயையோ.... அப்புறம் வேர்த்து... விறுவிறுத்து.... சரி கதைக்கு வருவோம்... 

சுடுகாட்டை கடக்கும் போது எதாவது ஒரு சாமி பாடல் சத்தமாக வரும்.... அப்படித்தான் ஒருநாள் இரவு எட்டுமணிக்கு மேல இருக்கும்... ஊர்ல அம்மன் கோவில்ல காப்புக் கட்டியிருந்தாங்க... தேவகோட்டையில் இருந்து போனால் சத்திரத்தார் ஊரணி என்ற இடத்துல ஒரு மேட்டில் இறங்க வேண்டும்... அந்தப் பகுதியில் அப்போது நரிக்குறவர்கள் இருந்தார்கள்... நல்ல இருட்டு வேற... பயம் கவ்விய மனசு வேற... படபடன்னு அடிக்க.... வேர்வையில் தெப்பலாய்... வேகமாக சைக்கிளை மிதித்துப் போனேன்... 

அந்த சறுக்கல்ல இறங்கி வலது பக்கமாக திருப்பினேன்... பயபுள்ள எதுவோ இருட்டுக்குள்ள பாதையில நின்னிருக்கும் போல லேசாத் தட்டிவிட அது கீழ விழுந்து கத்த ஆரம்பிக்க.... நிக்கலையே... நின்னா சட்டினிதாண்டியின்னு நெனச்சிக்கிட்டு வேகமாக மிதிக்க ஆரம்பிச்சேன்... கூ...கூ...ன்னு கத்திக்கிட்டு கல...புல... கல.. புலன்னு பேசிக்கிட்டு கூடிட்டாய்ங்க... நாந்திரும்பவே இல்லை.... வேகமாக மிதிச்சா.... திடீர்ன்னு லைட்டு வெளிச்சம் நம்ம மேல விழுகுது... ஆத்தாடி கொன்னுபுட்டாங்களேன்னு வேகமா ஓட்டுனா... முயல் பிடிக்கிற லைட்டை தலையில் கட்டிக்கிட்டு நாலஞ்சு பேரு இருட்டுக்குள்ள தப...தபன்னு ஓடியாராய்ங்க... பிடிபட்டா தொலஞ்சேடா குமாருன்னு சொல்லிக்கிட்டு.... சாமிகளை வேண்டிக்கிட்டு ஓட்டினா.... விடாம வெரட்டி வாறாய்ங்க.... கொஞ்சத் தூரத்துக்கு அவங்கனால அப்புறம் ஓட முடியலை.... நானும் வேகமாக வீட்டுக்குப் போயி சேர்ந்துட்டேன்... ஊரில் சாமி கரகம் எடுத்து வந்து கோவிலில் வைத்து சாமி கும்பிட தயாராகிக் கொண்டிருந்தார்கள். 

என்னோட கோலத்தைப் பார்த்த எங்கம்மா, பயந்தோளிப் பயலே எதுக்கு இப்படி பேயரஞ்சமாதிரி வந்திருக்கேன்னு திட்ட... எனக்குத்தானே தெரியும்... உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்ததுன்னு நினைச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் வீட்டில உக்காந்துட்டேன்... அப்புறம் பயலுக டேய் வெளியில வாடான்னு கூப்பிட (இப்படியா கூப்பிட்டாய்ங்க....) அடைக்கோழி மாதிரி உள்ள இருக்காம வெளிய வான்னு அன்பா கூப்பிட்டாய்ங்க... 

வெளிய வந்து அரட்டைக் கச்சேரியில ஆஜரானா... மொசப்புடிக்கிற மாதிரி குமாரை தேடிக்கிட்டு வந்துட்டாய்ங்க... சாமி இப்ப ஒரு ஆளு சைக்கிள்ல வந்துச்சுல்லன்னு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க... போச்சுடா சனி சம்மணம் போட்டு உக்காந்திருக்குடான்னு நெனச்சுக்கிட்டு மெதுவா வேப்ப மரத்துக்குப் பின்னால பொயிட்டேன்.... அப்படி யாரும் வரலைன்னு பயலுக சொல்லிட்டாய்ங்க... சரி நாளைக்கு ராத்திரி வரும் போது பாத்துக்கிறோம்ன்னு சொல்லிட்டுப் பொயிட்டாய்ங்க.... 

அடுத்த நாள் காலையில போகும் போது பயமா இருந்துச்சு எங்க மோப்பம் புடிச்சிருவாய்களோன்னு... ஒரு நரிக்குறவர் என் முகத்தை உற்றுப் பார்க்க ஆஹா.... கண்டுபிடிச்சுட்டானோன்னு வடிவேல் மாதிரி நானும் பார்க்க, ராத்திரி புள்ள மேல சைக்கிள்ல மோதிப்புட்டாங்க சாமி ஆருன்னு தெரியல... இந்தப் போறவங்கதான்னு சொல்ல... ஐய்யையோ ரொம்ப அடியோன்னு கேட்டுட்டு மெதுவா ஜகா வாங்கிட்டு அதுக்கு அப்புறம் ஒரு வாரத்துக்கு மேல் இரவுப் பயணத்தை ரத்து செய்து டியூசனை காலையில் மாற்றியாச்சு... 

சுற்றுலா செல்லும் போது கேரளாவில் டாடா சுமோவோடு பள்ளத்தாக்கில் விழ இருந்த இன்னொரு பய அனுபவம் இருக்கு... யாராவது மீண்டும் எழுதச் சொன்னால் எழுதலாம்..

அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.... கல்லூரி படிக்கும் போது பேராசான் பழனி இராகுலதாசன் இல்லத்தில் நண்பர், நண்பிகள் என எல்லாருமாய் பேசி மகிழ்ந்து அங்கயே சாப்பிட்டு அப்புறம் அக்கா வீட்டுக்குப் பொயிட்டு இரவு 10,11 மணிக்கெல்லாம் போக ஆரம்பிச்சாச்சு பயமில்லாமல்....

தொடர நினைக்கும் பயந்த அனுபவஸ்தர்கள் எல்லாரும் தொடரலாம்...

-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 17 ஜூலை, 2011

மனசுக்குள் மண்வாசம்...


மண் வாசம் சுவாசிக்கும் முன்னர் சில வரிகள்...

எனது வலைப்பூவில் இன்னும் சில பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை... பலருக்கு பின்னூட்டம் இட்டாலும் சிலருக்கு இடமுடியவில்லை... குறிப்பாக 'விடிவெள்ளி' செண்பகம், தமிழ்க்காதலன், அப்பாவி தங்கமணி அக்கா என இந்த பட்டியலில் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் படைப்புக்களை படித்தது பின்னூட்டம் இடும் போது பிரச்சினை வருகிறது. எனவே நட்புக்களே பின்னூட்டம் வரவில்லை என்றதும் நான் வருவதில்லை என்று என்ன வேண்டாம். உங்கள் பதிவுகளை படிக்கிறேன்... படிக்கிறேன்... படிக்கிறேன்... (இப்படி கூவ காரணம் நாம போகலையின்னு நிறையப் பேர் நம்ம பக்கம் காணுமப்பா... அதான்... இதெல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்...)

சரி மண் வாசத்துக்குள்ள போவோம்....


(மாரியம்மன் கோவில் - திருவிழா நாளில்...)


நம்ம மண்ணைப் பற்றி எழுதணுமுன்னு மலிக்கா அக்கா அன்புடன் அழைத்திருந்தார்கள். அவர்கள் அழைப்பை ஏற்காமால் இருப்பது மரியாதை இல்லை என்ற காரணத்தால் எங்கள் கிராமத்தையும் அது சார்ந்த நகரத்தையும் பற்றி எழுதியிருக்கிறேன். அதிகமெல்லாம் என்னால சொல்ல முடியாது... ஏதோ என்னால முடிந்ததை சொல்லி தொடர்பதிவு எழுதியிருக்கிறேன். அழைப்பு விடுத்த அக்காவுக்கு நன்றி.

தேவகோட்டைக் காரங்களோ, சிவகெங்கை மாவட்டத்துக்காரங்களோ (நம்ம பாரா சித்தப்பா, தேவா அண்ணா... இன்னும் நிறைய...) தவறு இருந்தால் வெளிய சொல்லி மாட்டி விட்டுறாதீங்க.

எங்கள் சிவகெங்கை மாவட்டம் வானம் பார்த்த செம்மண் பூமி, இந்தப் பூமியின் முதல் நகராட்சி என்று பெயர் பெற்ற தேவகோட்டை, அது என்னங்க தேவர்களின் கோட்டை எதுவும் இருக்கான்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. தேவி கோட்டை என்ற பெயர் மருவி தேவகோட்டை என்றாகிவிட்டது.

சரி விசயத்துக்கு வருவோம். தேவகோட்டைக்கு அருகில் 3 கிமீ தூரத்தில் இருக்கும் ஊர்தான் எங்க ஊர்... ஒரு அழகிய சின்ன கிராமம்.... சூதுவாது அறியாத வெள்ளந்தியான மக்கள்... ( இதெல்லாம் இப்ப இல்லைங்க... எங்க அப்பா சின்ன பிள்ளையா இருக்கும் போது) ஊருக்குள் வீட்டுக்கு வீடு இருக்கும் எருமை, பசு மாடுகள், கோழிகள், ஆடுகள், நாய்கள்... (இதுவும் இப்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக... ) என ஒரு அப்பட்டமான கிராமம்.

தேவகோட்டையில் இருந்து கண்டதேவி செல்லும் சாலையில் பிரியும் கிளைச் சாலையில் பயணித்தால் கண்மாக் கரைக்கும் வயலுக்கும் இடையில் செல்லும் தார்ச்சாலையில் கண்மாய்க்குள் இருக்கும் முனீஸ்வரர் வரவேற்க... சற்றே தூரத்தில் வீடுகள் அணிவகுக்கும் சிறிய கிராமம்தான் எங்கள் பரியன் வயல்.

இங்கயும் நீங்க கேட்கலாம் அது என்ன பரியன் வயல்... பரியாத வயல்ன்னு... இருங்க சொல்றேன் எங்க ஊர்ல விவசாயம் நல்லா இருக்குமா... பரிஞ்சு பொதி கட்டி நிக்கிற பயிரைப் பாக்கிறப்போ கிடைக்கிற சந்தோஷம் இருக்கே அதை அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும். அப்படி விவசாயம் கொழித்ததால எங்க ஊருக்கு பரியன் வயல்ன்னு பேர் வந்ததாக முன்னோர்கள் சொல்லக் கேள்வி.

இப்ப எங்க ஊருக்கு பேர் வைக்கச் சொன்னா கருவ வயல்ன்னு வைக்கலாம்... ஆமாங்க சில வருடங்களாக விவசாயம் இல்லாத வயல்கள் இந்த முறை ஊருக்குப் போனபோது கருவ மரங்களால் சூழப்பட்டிருப்பதை பார்த்த போது மனசு வலிக்கத்தான் செய்தது....

என்ன செய்ய எங்கள் ஊர் விவசாயம் பொய்க்க இரண்டு காரணம்.. ஒன்று நாங்களெல்லாம் வாழ்க்கையின் பின்னால் ஓட வேண்டிய கட்டாயத்தால் பொழப்புக்காக வெளியிடங்களில் இருக்க, எங்களைப் பெற்றோர் மட்டுமே ஊருக்குள் இருப்பது... ரெண்டாவது எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் தாழையூர் பெரிய நாயகி அம்மன் கோவில் மாடுகள் விளைந்த வயலில் அறுபடை செய்து விடுவதால் விளைந்ததை வீட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை என எங்கள் ஊர் விவசாயம் அறுபட்டுப் போய்விட்டது.


(கரகம் எடுத்தல் - முளக்கொட்டு)

இப்பல்லாம் எங்க ஊரில் எல்லோரும் கூடுவது திருவிழாக்களில் மட்டுமே. வருடம் ஒருமுறை நடக்கும் இதுமாதிரியான விழாக்கள்தான் எங்கள் கிராமத்தின் அடையாளமாய் இன்னும் இருக்கின்றன. பசுமையான வயல்கள், நீர் நிறைந்த கண்மாய்... உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள் என்றிருந்த எங்கள் ஊர் இன்று பலவீனமாக இருக்கிறது.

நாங்கள் படிக்கும் காலத்தில் ஒத்தையடிப் பாதை, அடி குழாய் தண்ணீர் என்றிருந்த எங்கள் ஊர் இன்று தார் ரோடு, ஊருக்குள் குடிநீர்த் தொட்டி, வீட்டுக்கு வீடு பைப் வசதி என்று வளர்ந்திருந்தாலும் விவசாயமிழந்த வயல்கள் போல... வறண்டு கிடக்கும் கண்மாய் போல... மக்கள் மனதிற்குள் வன்மம் குடி கொள்ள ஆரம்பித்திருப்பதுதான் வருத்தமான விஷயம்.ஆனால் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் ஊர் திருவிழாவில் எல்லாரும் ஒன்றாக இருந்து கொண்டாடும் போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது.

இந்த வருடம் ஊருக்கு வந்திருந்த போது என்னைக் காண வந்த எனது நண்பன் தமிழ்க்காதலன் விவசாயமற்ற ஊரைப் பார்த்து வருத்தப்பட்டான். ஆனால் எங்கள் ஊர் அம்மன் திருவிழாவில் கரகம் எடுப்பதும் முளக்கொட்டுவதும் அவனை ஆச்சரியப்பட வைத்ததுடன் அவனுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. (இது குறித்து தனிப்பதிவு எழுதுவதாய்ச் சொன்னான்... மறந்துட்டான் போல...)

இவ்வளவுதான் எங்கள் ஊர் பற்றிய என் பார்வை....

நண்பர்களே நீங்க வளர்ந்த... வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற உங்கள் ஊரைப் பற்றி எழுதுங்கள்... யாரையாவது நாமளும் மாட்டிவிடணுமாமே... சரி நம்ம "இதயச்சாரல்...!" தமிழ்க்காதலன், "கலியுகம்" தினேஷ், அன்புடன் ஆனந்தி மூன்று பேரை என் பங்கிற்கு களத்தில் இறக்கி விடுகிறேன்.

நன்றி... மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 20 மார்ச், 2011

பேரு... பெத்த பேரு... (தொடர் பதிவு)

உனக்கு ஏன் இந்தப் பெயரை வைத்தார்கள் என்பதை உண்மையாக... சத்தியமாக... உள்ளதை உள்ளபடி பதிவுலகுக்கு தெரிவிக்க வேண்டும் என எனது அன்பு அக்கா சுசி அவர்கள் விடுத்த அன்புக் கட்டளைக்கு செவி சாய்த்து மீண்டும் ஒரு தொடர் பதிவு எழுத வேண்டிய கட்டாயம். அழைப்பு விடுத்த அக்காவுக்கு நன்றி.

இப்பதான் நண்பர் அக்பரின் அழைப்பை ஏற்று காதல் பதிவு ஒன்று எழுதினேன். அந்த சூடு குறைவதற்குள் அடுத்த தொடர் பதிவு... சரி... நம்ம பேரைச் சொல்ல என்னங்க கஷ்டம்... சொல்லிட்டா போச்சு...

நாம் பொறந்தப்போ எல்லாரும் கூடி விழா எடுத்தோ... இல்ல நியூமராலஜி பார்த்தோ நமக்கு பேர் வைக்கலை. ஏன்னா சாலை வசதி கூட சரியா இல்லாத (இப்ப வசதிகள் பரவாயில்லை) ஒரு சிறிய கிராமத்தில் வானம் பார்த்த பூமியை நம்பி வாழ்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன்.

நாங்க மொத்தம் ஏழு பேருங்க... அதுல ஆறாவதுதான் நான். எனக்கு மூன்று அக்கா, இரண்டு அண்ணன், ஒரு தம்பி. அஞ்சாவது பொம்பளப்புள்ளையா பொறந்தா பஞ்சுன்னும் பசங்க பொறக்காம பொம்பளப்புள்ளங்களா பொறந்தா போதும் பொண்ணுன்னும் வைக்கிறது மாதிரி ஆறாவது புள்ளைன்னா முருகன் பேரு வைப்பாங்க.

நாம ஆறாவதா பொறந்ததால எங்க ஐயா (அம்மாவோட அப்பா) முருகன் பேரு வைக்கணுமின்னு ஆறுமுகம் அது... இதுன்னு ஏதேதோ சொல்லி வைக்க, திருத்துறைப்பூண்டியில குமாரசாமி ராஜா வீட்ல கணக்குப்பிள்ளை (Accountant) வேலை பார்த்த அப்பா, அவங்க மொதலாளி மேல உள்ள பாசத்துல குமாரசாமின்னு வச்சிருக்காரு. இதுல அப்பா நினைச்சதும் நடந்தாச்சு... ஐயாவின் ஆசையும் நிறைவேறியாச்சு.

நம்ம ஜாதகத்துல எல்லாம் குமாரசாமிதான். அப்பா வெளியூர்ல வேலை பார்த்ததால் எங்களை எல்லாம் பள்ளிக்கூடத்துல சேர்க்கிற வேலை எங்கம்மாவுக்கே... அவங்க எல்லாருக்குமே வச்ச பேரை வச்சபடியே விட்டுட்டு வீட்டுல கூப்பிடுறபடி பள்ளிக்கூடத்துல சேர்த்துருவாங்க... (நல்ல அம்மா).

அந்த வகையில ராமசாமி ரவிச்சந்திரனாகவும் உமையாள் பிரேமாவாகவும் ஆக குமாரசாமியான நான் பள்ளியில் குமார் என்று சேர்க்கப்பட்டேன். அதன்பின் எல்லா இடத்திலும் குமார் ஆனேன். எங்க ஊரு பெருசுங்களுக்கு குமார் அப்படின்னு கூப்பிட வராது... அதனால எங்க ஆயா முதக் கொண்டு எல்லாருக்கும் கொமருதான்... எங்கள் மக்கள் வஞ்சனையில்லாமல் கொமரு எப்ப வந்தே என்று விசாரிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்புறம் கல்லூரியில் நண்பர்கள் (எங்கய்யா பேரச் சொல்லி கூப்பிட்டாங்க...) எல்லாருக்கும் பங்காளி... ஒருத்தனுக்கு மட்டும் மாப்பிள்ளை... அப்பா பேரு சேதுராமன் என்பதால் சிலருக்கு எஸ்.கே. எங்க தமிழ் ஐயாவும் எனது கல்வித் தந்தையுமான திரு. பழனி ராகுலதாசனுக்கு எப்பவும் தம்பி, மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்கும் போது மட்டும் பரியன்வயலார். என் ஐயா வீட்டில் எனக்கு கிடைத்த நட்புக்களுக்கு பண்ணையார்... இப்படி நிறைய பெயர்கள் கல்லூரி வாழ்க்கையில்...

சில காலம் வாத்தியாராக இருந்ததால் என் நண்பர்கள் சிலர் இன்னும் "வாத்தியாரே" என்றுதான் அழைக்கிறார். எங்கள் ஊரில் ஒரு சிலர் இப்போது சின்ன வாத்தியார் என்று கூப்பிடுகிறார்கள். (எங்க சித்தப்பா தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் அதனால் அவர் பெரிய வாத்தியார் )

தமிழில் எழுதும் போது எனக்கு சே.குமார் என்று எழுதவே பிடிக்கும். எஸ்.குமார் என்று ஐயாவும் S.குமார் என்று சில நண்பர்களும் எழுதுவதுண்டு.

அப்புறம் பத்திரிக்கைகளில் கதை, கவிதை எழுதும் போது பரியன் வயல் சே.குமார் என்று போட்டதுண்டு... ஸ்ருதி என்று மகள் பெயரிலும் சில கதைகள் எழுதியதுண்டு.

அபுதாபிக்கு வந்த பின்னர் எனது அலுவலகத்தில் அரபிகள் கொமார் என்றுதான் ஆரம்பத்தில் அழைத்தார்கள்... இப்ப பரவாயில்லை குமார் என்று அழைக்கிறார்கள்.

பதிவுலகிற்கு வந்த போது சே.குமார் என்றுதான் வைத்திருந்தேன். பின்னர் ஊர் பெயரைச் சுருக்கி 'பரிவை' சே.குமார் ஆனேன். நான்கு வலைப்பூவையும் ஒன்றாக்கி மனசு என்ற வலையில் எழுத ஆரம்பித்தது முதல் பல நண்பர்களுக்கு 'மனசு' சே.குமார் என்றானேன்.

எனது திருமண அழைப்பிதழில் என் பெயரை குமாரசாமி என்றுதான் போட வேண்டும் என அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அம்மாவும் நானும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை... அதிலும் குமார்தான்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதும்போது KUMAR என்று எழுதாமல் KUMAAR என்று எழுது... உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என்றார். எனக்கு அதில் நம்பிக்கையில்லாததால் KUMAR என்றே எழுதுகிறேன்.

இந்தப் பெயர் பணம் காசை சம்பாரித்துக் கொடுத்ததோ இல்லையோ நல்ல நண்பர்களைக் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. நல்ல மனைவி, அருமையான இரண்டு மக்கள் என வாழ்க்கையையும் நன்றாக்கியுள்ளது.

மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றோ... கூப்பிடப் பிடிக்கவில்லை என்றோ... வேறு பெயர் வைத்திருக்கலாம் என்றோ இதுவரை தோன்றவில்லை.

நான் எதாவது செய்தால் குமார் செஞ்சா சரியாத்தான் இருக்கும் என்றும் எதாவது ஒன்றை வெற்றிகரமாக முடித்து விட்டால் வெரிகுட் குமார் என்றும் முடியவில்லை என்றால் சரிடா குமார்... அடுத்துப் பார்த்துக்கலாம் என்றும் எனக்கு நானே சொல்லிக் கொள்வதுண்டு. ஏனென்றால் குமாரை நான் மிகவும் நேசிக்கிறேன்.

இதுவரை யார் யார் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரியாததால் இதை தொடர இதுவரை எழுதாத என் அன்பு நட்புக்களை அழைக்கிறேன்... எல்லாரும் தொடருங்க....

நட்புடன்,
-'பரிவை' சே.குமார்.