மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

மன்றில் தேர்வு : நிர்மலாவின் முடிவு (சிறுகதை)

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் திரு. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் 'மன்றில் சிறுகதைப் பட்டறை' ஒன்றை நடத்துகிறார். அதில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று ஒரு கரு கொடுக்கப்படும். அதற்கு புதன்கிழமைக்குள் எழுதப்படும் கதைகளில் இருந்து ஒரு கதை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறியதாய் ஒரு பரிசுத் தொகையும் அவர்கள் கொண்டு வர இருக்கும் சிறுகதைத் தொகுப்பில் அக்கதைக்கு ஒரு இடமும் வழங்கப்படும். கருவுக்கு எழுதுதல் என்பது சற்று கடினமே என்பதால் நான் தொடர்ந்து எழுதுவதில்லை. முதல் முறை எழுதிய போது பரிசுக்குத் தேர்வாகவில்லை என்றாலும் நல்ல கதை என அவர் போன் பண்ணிப் பேசினார். அதன்பின் இடையில் இருமுறை எழுதிப் பார்த்தேன் ஒரு பயிற்சிக்காக.

சனி, 30 மே, 2020

தப்புக்கணக்கு (பரிசு பெற்ற கதை)

ணேஷ்பாலா அண்ணன் அவர்கள் முகநூலில் படத்துக்கு கதை எழுதும் திடீர் போட்டியை அறிவித்தார். இரண்டு நாட்கள் மட்டுமே போட்டிக்கான கதைகளைப் பதியக் கொடுத்திருந்த காலக்கெடு. ஒருவர் இரண்டு கதைகள் அனுப்பலாம் என்றும் சொல்லியிருந்தார். ஒரு கதை எழுதுவதே கடினம் இதில் இரண்டு எங்கிட்டு எழுத என்று நினைத்து பார்வையாளனாய் நிற்கிறேன் என்றதும் அதெல்லாம் வேண்டாம் நீ எழுது என்றார். வெள்ளி விடுமுறை என்பதாலும் போட்டிக்கான இறுதிநாள் என்பதாலும் மதியச் சாப்பாட்டுக்குப் பின் அமர்ந்து எழுதி, தலைப்பைக் கூட பதியாமல் அப்படியே முகநூலில் தூக்கிப் போட்டுவிட்டேன்.

திங்கள், 9 மார்ச், 2020

சிறுகதை : சாமியாடி (அகல் மின்னிதழ்-ஜனவரி:2020)

எப்பவும் போல் அகல் மின்னிதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பிய போது கதை கொடுங்களேன் எனக் கேட்டார் நண்பர் சத்யா. இரண்டு கதைகளை அனுப்பினேன். அதற்கு முன் கட்டுரை ஒன்றும் அனுப்பியிருந்தேன். ஒரு கதையையும் கட்டுரையையும் ஜனவரி-2020 அகல் மின்னிதழில் வெளியிட்டிருந்தார். ஊரில் இருந்ததால் அது குறித்துப் பகிர முடியவில்லை. இதோ 'சாமியாடி'யை இங்கே பகிர்ந்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க. அப்படியே அகலிலும் உங்க கருத்தைச் சொன்னா நல்லாயிருக்கும். நன்றி.

அகலில் வாசிக்க, கருத்துச் சொல்ல : சாமியாடி

---------------------------------
ரோட்டோரத்தில் இருந்த சிறிய கீற்றுக் கொட்டகை டீக்கடை முன் வண்டியை நிறுத்தினான் ரவி, அதிலிருந்து இறங்காமலேயே 'இங்க சாமியாடி வீடு எங்கப்பு இருக்கு?' எனக் கேட்டபடி தோளில் கிடந்த துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் பின்னாலிருந்த சாமியய்யா.

"எந்தச் சாமியாடிப்பு? மேலக்காட்டாரா... இல்ல வடக்கிவூட்டானா?" கடைக்கு முன் கிடந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து தினத்தந்தியில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம்பிள்ளை சத்தமாகக் கேட்டார்.

“இங்க ரெண்டு சாமியாடியா இருக்காவ?" சாமியய்யா ஆச்சர்யமாகக் கேட்டார்.

"ஆமா... நிறையச் சாமியாடிக இருக்கானுக... நண்டு சிண்டெல்லாம் சாமி ஆடுதுவ... ஆனா சாமியாடின்னு பேரெடுத்தவுக அவக ரெண்டு பேருதான்"

"ம்.... இந்த பாதரக்குடியில பொண்ணக் கொடுத்துருக்காருல்ல... பெரியகருப்பத்தேவர்..."

"ஓ.... செரி... செரி... அட நம்ம மேலக்காட்டார்... அதானே... இப்ப ஆரு வடக்கிவூட்டானப் பாக்க வர்றா..."

"வீடு...?"

"நேர போங்கப்பு... கம்மாய்க்கர தாண்டி மேக்கால ஒரு பாத திரும்பும்... அதுல போனீங்கன்னா சோத்தாங்கைப் பக்கமா பச்சக் கேட்டுப் போட்ட தோட்டமிருக்கும்... கேட்டுல கூட குஞ்சரம்மாள் தோட்டம்ன்னு எழுதியிருக்கும் அதுக்குள்ளதான் வீடு... தேவரு இப்பத் தோட்டத்துலயே இருக்காவ"

"சரிங்கய்யா"

"அப்பு காபி சாப்புட்டுப் போறது... நம்ம கடயில சுத்தமான பசும்பாலுங்க." டீ ஆத்தியபடி கேட்டான் கடைக்கார சுப்பு.

"இப்ப காபி வேணாந்தம்பி வரும் போது குடிக்கிறோம்"

"செரிங்கய்யா.... நீங்க வரும்போது ஐசு வந்துரும்... வெயிலுக்குச் சும்மா சில்லுன்னு நன்னாரி வேர் போட்ட தண்ணியில சர்பத்துப் போட்டுத்தாரேன்... அப்புடி ஒரு சர்பத்த வேற எங்கயும் குடிச்சிருக்க மாட்டீங்க" சுப்பு பேசிக் கொண்டிருக்கும் போதே வண்டியைக் கிளப்பினான் ரவி.

வண்டி கம்மாக்கரையைத் தாண்டி மேற்குப் பக்கமாக போன சரளை ரோட்டில் திரும்பி குஞ்சரம்மாள் தோட்டம் என எழுதியிருந்த பச்சைக் கேட்டின் முன் நின்றது. இருவரும் வண்டியில் இருந்து இறங்கி வேட்டியை அவிழ்த்து நல்லாக் கட்டிக் கொண்டார்கள். ரவி சற்று தள்ளிப் போயி ஒரு காரஞ்செடிக்குப் பின்னே அமர்ந்து ஒண்ணுக்கு இருந்தான்.

"அங்கயிருந்து அடக்கிக்கிட்டு வந்தியாக்கும்... கடக்கிட்ட நிக்கிம் போது போயிருக்கலாமுல்ல, வீடு வாச இருக்க இடத்துல பொண்ணு புள்ளங்க வரும் போகும்..." கடுகடுத்தார் சாமியய்யா.

அவரை முறைத்துவிட்டு "இப்ப இங்கிட்டு யாரு வந்தா... சும்மா எப்பப் பாத்தாலும் நய்யி நய்யின்னு" முணங்கிய ரவி கேட்டை நோக்கிப் போனான்.

"தோட்டந் தொரவா இருக்காவ... நாயி கெடக்கும்... பார்த்துத் தொற"

"ம்..." என்றபடி சின்னக் கேட்டைத் திறந்து காலை வைத்தான்.

"வவ்... வவ்...." என மூன்று நாய்கள் பாய்ந்தோடி வர, "ஏய் மணி...." எனக் கத்தியவாறு வாழைகளுக்கு இடையே வேப்பங்குச்சியால் பல் விளக்கியபடி வந்தார் உயரமான பெரியகருப்பத்தேவர்.

அவரின் குரலுக்கு மூன்றும் முறுவலித்தபடி நின்று, அருகே இருந்த தென்னையை ஒட்டி தண்ணி ஓடும் வாய்க்கால் கரையில் படுத்துக் கொண்டன. உள்ளே வந்த இருவரையும் பார்த்து வாயிலிருந்த எச்சிலைத் துப்பிவிட்டு "யாருப்பு நீங்க..? என்ன வெசயம்?" என்றார்.

"மேக்காட்டூர்ல இருந்து வாரோம்... உங்களக் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கோம்... சிறுவாச்சூர் மணிதான் சொல்லிவிட்டாப்புல"

"அடடே மணி சொல்லி வாரீங்களா? நேத்து கூட பேசும்போது சொன்னான், வருவாங்க... பாத்துக் கொடுங்கன்னு... வாங்க... வாங்க" என உள்ளே அழைத்துச் சென்று வாசலில் போட்டிருந்த நீளக் கொட்டகையில் விரித்திருந்த சமுக்காளத்தில் அமரச் சொல்லி, "ஏய் தங்கம் தண்ணி கொண்டாந்து கொடாத்தா' ன்னு சொல்லிட்டு, "'சித்த இருங்க ரெண்டு தண்ணியள்ளி உடம்புல ஊத்திக்கிட்டு வந்துடுறேன்" என மோட்டார் அறைப்பக்கமாப் போனவர், "ஏத்தா வந்திருக்கவுகளுக்கு காபி கொடுங்க... ரொம்பத் தூரத்துலயிருந்து வந்திருக்காவ... கருக்கல்ல கெளம்பியிருப்பாவ... சாப்புட்டாகளா இல்லயான்னு கூடத் தெரியல... கேட்டுச் சாப்பிட எதாச்சும் கொடுங்க... வீட்டுக்குள்ளயே அட காக்காம" எனக் கத்தினார்.

அவர்கள் காபி மட்டும் குடித்திருந்தார்கள்... சாப்பிட மறுத்து விட்டார்கள்... ரவி பொறுமை இழந்து உக்காந்திருந்தான். பசி பொறுக்காதவன் அவன்... காபி குடித்தும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருந்தது அவனுக்கு.

நெற்றி நிறைய விபூதியைப் பட்டையாக அடித்து நடுவில் நிலாவைப் போல பொட்டு வைத்து, சட்டையில்லாத கரிய உடம்பின் மேல் ஒரு குத்தாலம் துண்டு போட்டுக் கொண்டு அவர்களுக்கு எதிரே வந்தமர்ந்தார்.

"சீக்கிரம் வந்தீக, இல்லேன்னா நாங்கிளம்பி வெளிய போயிருப்பேன், சீனமங்கலம் பெரியய்யா வீட்டுக்கு வாரேன்னு சொல்லியிருந்தேன். வண்டி அனுப்புறேன்னு சொன்னாக... இப்ப வந்துரும்.. ம்... சொல்லுங்க... என்ன பெரச்சன" என்றார்.

"பொட்டப்புள்ள... கல்யாணம் வச்சிருக்கேன்... இப்ப பேய்க் கோளாறாட்டம் ஒரு மாரிக்கி உடம்பத் திருகிக்கிட்டு முழிக்கிது... எம்புட்டோ வயித்தியம் பாத்தும் சரிவரல... குறி, கோடாங்கின்னு எல்லாம் பாத்துட்டோம்... எல்லாத்தயும் பொயிட்டு வான்னு சொல்லுது. தங்கச்சி மவனுக்குத்தான் கட்டுறோமுன்னாலும் அவங்க மனசுல தப்பாத் தோனிறக்கூடாதுல்ல... நாளக்கி வாழப்போற எடத்துலயும் இப்படி இருந்தா... அதோட வாழ்க்க போயிருமே... மணிக்கிட்ட விபரம் சொன்னப்போ அதுதான் உங்களச் சொன்னுச்சு... நீங்கதான் எப்படியாச்சும் புள்ளக்கி குணமாக்கி விடோணும்... உங்கள நம்பித்தான் இம்புட்டுத்தூரம் வந்திருக்கோம்... புள்ளய கூட்டியாரச் சொன்னா.... நாள போக நாளான்னக்கி செவ்வாக்கெழம அப்ப கூட்டியாரோம்.... இல்லே நீங்க வர்றதுன்னா... என்ன வாங்கணும்ன்னு சொல்லிட்டிங்கன்னா வாங்கி வச்சிருவேன்" ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் சாமியய்யா.

"ம்... எல்லாத்தையும் மொத்தமாக் கொட்டிட்டீக... ம்.... செரி... புள்ளக்கி என்ன வயசாவுது?"

"இந்த அப்பிய வந்தா இருவது முடியுது..."

"ம்... கலியாணத்துல புள்ளக்கி சம்மதம்தானே?"

"அதுக்குப் பிடிச்சதாலதானே தங்கச்சி மவனுக்கு கொடுக்கிறேன்..."

"ம்... எத்தன நாளாயிருக்கு?"

"நெருக்கி ஒரு மாசமா அப்புடித்தானிருக்கு"

"ம்... குறி, கோடாரியெல்லாம் கேக்கலயாக்கும்"

"ஆமா"

"தீட்டுப் போறதுல சமீபமா பெரச்சின எதுவுமிருக்கா?"

"ம்... தீட்டு நிக்காமப் போவுது"

"அதுலதானே அவுக வாசம் செய்வாக விடமாட்டாக... விட்டுப் போகணுமின்னா சொத்தெழுதிக் கொடுன்னு கேப்பாக"

"நீங்கதான் எப்படியாச்சும்..."

"ம்... கருப்பனுக்கிட்ட வந்துட்டியல்ல கவலய விடுங்க... இனி அவன் பாத்துப்பான்... உங்க புள்ளக்கி ஒண்ணும் ஆவாது"

"ம்... புள்ளய பாக்கச் சகிக்கல..." கண்கலங்கினார் சாமியய்யா.

"கலங்காதிய... கருப்பனுக்கு முன்னால கலங்கி நிக்கலாமா.... ம்ம்ம்.... ஆத்தா அந்த விபூதித் தட்ட இங்க கொடு" கத்தினார்.

விபூதித்தட்டு வந்ததும் அதிலிருந்த சூடத்தை தட்டின் நடுவே பத்த வைத்துத் தன் முன்னே வைத்து "படியிறங்கி வாடா பதினெட்டாம் படிக்கருப்பா... பாதை மறிச்சி வாடா பாண்டி முனியா... எங்குரல் கேக்கலையோ ஏழுருக் கருப்பா... மாத்தில் ஆடி வாடா மாரநாட்டுக் கருப்பா... பரியேறி வாடா பரியமயக் கருப்பா..." அப்படின்னு சத்தமாகச் சொல்லியபடி கண் மூடி ஊரில் இருக்கும் கருப்பர்களையெல்லாம் அழைக்க ஆரம்பித்தார்.

அவர் உடம்பெல்லாம் வேர்க்க ஆரம்பித்தது.... தலையைத் தலையை ஆட்டினார்....

திடீரெனச் சத்தமாக "அப்பா... தவிச்சி நிக்காதேப்பா... எங்கிட்ட வந்துட்டயில்ல... கவலயெதுக்கு... அல்பாயுசுல மாண்ட கன்னி ஒருத்தி புடிச்சிருக்கா... கல்யாணக் கனவோட போனவ கனவ நெற வேத்த உம்புள்ள உடம்புல ஏறியிருக்கா... எறங்க மறுப்பா... அவளுக்குத் துணையா நாலஞ்சி சேந்திருக்கு... முனியும் எடப்படுறான்... ஒண்ணுமில்ல உம்மவளுக்கு... நாம் பாத்துக்கிறேன்... போ" என்றவர் பேசாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

விபூதித் தட்டில் அதுவரை எரிந்த சூடம் அணைந்தது. வீட்டுக்குள் இருந்து ஒரு பெண் சொம்புத் தண்ணீரோடு ஓடி வந்து அவர் முன் நீட்டினார். தண்ணியை வாங்கிக் கொஞ்சம் குடித்து விட்டு எழுந்து முகங்கழுவினார். துண்டால் துடைத்தபடி மீண்டும் அவர்களுக்கு முன்னே அமர்ந்தார்.

"நான் இங்க பெரும்பாலும் சாமி அழக்கிறதில்ல, அழச்சா அன்னக்கி முழுவதும் உடம்பு வலியிருக்கும். வேற வேல பாக்க முடியாது, செவ்வா வெள்ளி மட்டுந்தான் பாக்குறது, மணி சொல்லி வந்திருக்கீக, அதான் அழச்சேன், கல்யாணம் நிச்சயமாயி நின்னு போனதால மாண்ட ஒருத்தியும் மரணத்தைத் தானே தேடிக்கிட்ட சிலதுகளும் சேந்து புடிச்சிருக்குக, முனியும் எடப்பட்டிருக்கான், பயமில்ல, நாஞ் சொல்றத வாங்கிக்கிட்டு வெள்ளிக்கெழம புள்ளயக் கூட்டியாங்க, பார்த்து முடிச்சி விட்டுடலாம், கவலப்படாதீக, எல்லாஞ் செரியாகும், கருப்பன மீறுன காரியம் என்ன இருக்குங்கிறேன்" என்றார்.

"ம்... கருப்பன்தான் சரியாக்கணும்... எம்புட்டுச் செலவானாலும் பரவாயில்ல... புள்ளயச் சரியாக்கி விட்டுறணும்"

"கவலயே வேணாம்... வெள்ளிக்கெழம உங்க மகளா வருவா பாருங்க" என்றார்.

"ஆத்தா அந்த பேப்பர் பேனா எடுத்துக்கிட்டு வா" எனச் சத்தமாய் சொல்லி, கொண்டு வந்து கொடுத்த பேப்பரில் எழுதி நீட்டினார். எழுந்து வாங்கிய சாமியய்யா, "இப்ப எம்புட்டுன்னு சொன்னீங்கன்னா" என இழுத்தார்.

"அதான் வெள்ளிக்கிழம வருவீங்கள்ல அப்ப வாங்கிக்கிறேன் போயிட்டு வாங்க"

"மொத மொதல்ல பாத்துட்டு சும்மா போவக்கூடாது"

"அப்புடியா... செரி... உங்க மனசுக்குத் தோணுனத கருப்பனோட விபூதித் தட்டுல வச்சிச்ட்டுப் போங்க." என்றார்.

இருநூற்றி ஒரு ரூபாயை வைத்து விட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் கேட்டைத் திறந்து வெளியேறுவதைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்த மூன்று நாய்களும்... குரைக்கவில்லை. வாசலுக்கு வந்தவுடன் ரவி அந்தச் சிட்டையை வாங்கிப் பார்த்தான்.  

"என்ன இம்புட்டு எழுதியிருக்காரு... இதெல்லாமே வேணுமா? இதுவரக்கிம் செலவழிச்சதை மொத்தமா இவருக்கிட்ட கொடுக்கணும் போல" என்றான்.

"சரியாக்கணுமின்னா சும்மாயில்ல... பெரியகருப்பத்தேவர் பெரிய ஆளு... மணி அப்பவே சொன்னாப்புல... வெளியிலயிருந்து வந்து கூட்டிப் போயிருவாகளாம். அவுகல்லாம் கணக்குப் பாக்காமக் கொடுப்பாகளாம் அதான் தோட்டந்தொறவுன்னு வசதியாயிருக்காரு. செவ்வாவெள்ளி கூட இங்கேயிருக்கேன்னு சொன்னாத்தான் இருப்பாராம். வண்டியெடு... புள்ளக்கிச் சரியானப் போதும்... இதுவரக்கிம் எம்புட்டோ செலவழிச்சிட்டோம்... இதயுஞ்செய்வோம்... இவரு சரியாக்குவாருன்னு எனக்கு நம்பிக்கயிருக்கு" என்றார்.

ரவி வண்டியை எடுத்தான். தேவரைக் கூட்டிப்போக சீனமங்கலத்துக் கார் வந்து நின்றது.

"என்னப்பு ஆளிருந்தாரா?" பாலுக்கு எடைக்கட்டியபடி கேட்டான் சுப்பு.

"ம்... இருந்தாரு"

"உங்க நல்ல நேரம் இல்லேன்னா கருக்கல்லயே கெளப்பிக் கொண்டு போயிருப்பானுவ சாமியாடின்னா அப்படி ஒரு சாமியாடி, முடியும் முடியாதுன்னு மொகத்துக்கு நேர சொல்லிருவாரு முடியும்னு சொன்னா முடிச்சிக் கொடுத்துருவாரு, டீயா, காபியா?"

"டீக்காபி வேணாம்... சர்பத்துக் கொடுங்க... அவனுக்கு என்ன வேணுமோ அதக் கொடுங்க... பசியாருற மாரிக்கி எதுவுமிருந்தாக் கொடுங்க"

"என்ன சுப்பு பெரியகருப்பத்தேவர் பொயிட்டாரா?" என்றபடி வந்தான் அவன். முகத்தில் பெரிய விபூதிப்பட்டை, கழுத்தில் பாசி மாலைகள், காவி வேஷ்டி, சட்டையில்லாத கரிய உடம்பு.

"இப்பத்தான் வண்டி போயிருக்கு இன்னக்கி எங்கயோ சாமி அவருக்கு அள்ளிக் கொடுக்குது ம்ம்ம்... உனக்குந்தான் கொடுத்துச்சு... நீதானே கெடுத்து வச்சிருக்கே சுந்தரம் காலயிலயே சரக்கடிச்சிட்டு வர்றே, அப்புறம் கருப்பன் எப்படி வருவான்"

"எனக்குள்ள வரவேண்டான்னுதான் சரக்கடிக்கிறேன் சுருக்குன்னு ஒரு டீப்போடு" என்றபடி சொக்கலால் பீடிக் கட்டில் இருந்து ஒன்னை உறுவிப் பற்ற வைத்தான் சுந்தரம்.

"பெரியவரே நீங்க சாமியாடி வீட்டுக்கு வழி கேட்டப்போ நாங்க சொன்ன ரெண்டாவது சாமியாடிதான் இவரு. குடிச்சே சாமியை விரட்டுறாரு ஆனா அது போவாம இவரையே சுத்துது உங்க பெரச்சினயச் சொல்லுங்க... இவரு என்ன சொல்றாருன்னு பார்ப்போம்"

"அதெல்லாம் வேணாம்பா பெரியவரு எல்லாம் சொல்லிட்டாரு சாமி வேசத்துல காலயிலயே தண்ணி அடிச்சிட்டு நிக்கிறாரு அவருக்கிட்ட போயி மொறயிடச் சொல்லுறே, சர்பத்துப் போடுறியா இல்ல தின்ன ரொட்டிக்கி காசக் கொடுத்துட்டுப் போவா" கோபமானார் சாமியய்யா.

"என்னப்பு கோபப்படுறிய... இவரும் நல்லாச் சொல்லுவாருன்னு சொன்னே விடுங்க இந்தா சூப்பராச் சர்பத்துப் போட்டுத் தாரேன்"

ரவி டீ வாங்கிக் குடித்தான். சுந்தரமும் டீயுடன் எதிரே உக்கார்ந்து சாமியய்யாவையே பார்த்தான். ஜில்லுன்னு சர்பத்தை சாமியய்யா கையில் கொடுத்தான் சுப்பு.

"க்க்.... கெக்... ஹக்கக்... அய்யாவுக்கு எம்மேல ஏன்டா இம்புட்டுக் கோபம்... சாப்புடுற சோத்துல மண்ணா அள்ளிப்போட்டேன்.... க்கே...க்கேக்க்க்கே... ஹக்கஹ்க்கா" சிரித்தான்.

சாமியய்யா பேசாமல் அமர்ந்திருந்தார். டீயை வைத்துவிட்டு அவரையே உற்றுப் பார்த்தான். கண்கள் மேலும் சிவப்பேற, அப்படியே அமர்ந்திருந்தான்.

"மொறக்கிறாருடா., என்னயவே மொறக்கிறாரு எம்பார்வைக்கு ஊரே பயப்படும் இவரு என்னப் பயமுறுத்துறாராம் ஹா..ஹா... கெக்கெக்கே..."

சாமியய்யா தலையைக் குனிந்து கொண்டார்.

"பொட்டப்புள்ள உடம்ப முறுக்கிக்கிட்டுக் கெடக்காளா" அதட்டலாய்க் கேட்டான்.

சாமியய்யா அவனை ஏறிட்டுப் பார்த்தார்... ரவி காலியான டீக்கிளாஸை வைத்துவிட்டு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

"மாண்ட கன்னியோட மத்ததுகளும் சேர, முனியும் முன்ன நிக்கிறானேய்யா" பல்லைக் கடித்தான்.

"புள்ளய கூட்டிப் போறேன்னு நிக்கிறாளேய்யா. விடுவேனா எம்புள்ளய விடுவேனா" பல்லை நறநறவெனக் கடித்தான்.

அவரு சொன்னதையே இந்தத் தண்ணி வண்டியும் சொல்லுது சொல்லிட்டு காசு கொடுன்னு மல்லுக்கு நிக்கும். கொடுத்தா தண்ணியடிச்சிட்டு எங்கயாச்சும் விழுந்து கெடக்கும் என்று நினைத்தவர் சுப்புவிடம் காசு கொடுத்துவிட்டு "ரவி வண்டிய எடு" என்றார்.

"ஏய் உம்புள்ளக்கி ஒண்ணுமில்லப்பா, உன்னோட ஊருக்குப் போற வழியில பொய்யக்கர முனியனுக்கு தேங்காய் ஒடச்சிட்டுப் போ. புள்ள சரியாவா புடிச்சது ஓடிரும் சரியானதும் முனியனுக்கு அந்த புள்ளய வச்சி பொங்க வைக்கச் சொல்லு... போ திரும்பிப் பாக்காதே"

"ரவி வண்டிய எடுன்னேன். குடிச்சிட்டு உளறுறான் அதப்பாத்துக்கிட்டு. நாம தேவரு சொன்னபடி சாமானோடு வெள்ளிக்கெழம வருவோம்"

"சொன்னது புரியல, என்னோட வாக்க நீ மதிக்கலயில்ல? கருப்பன் பொய் சொல்றான்னு நெனக்கிறேயில்ல? போ போற வழியில காட வலமிருந்து எடம் போவும். போ... அப்ப நம்புவே இந்தக் கருப்பன, அப்ப நம்புவேடா இந்தக் கருப்பன" சப்தமாகச் சிரித்தான் சிரித்தான்... சிரித்துக் கொண்டே இருந்தான்.

ரவி வண்டியை எடுத்தான், சாமியய்யா அவனை திட்டிக் கொண்டே வண்டியேறினார்.

"அந்தாளு சொல்ற மாதிரி ஒரு தேங்காய் வாங்கி ஒடச்சிப் பாக்கலாமே, அவராத்தானே சொல்றாரு சரியான நல்லதுதானே"

"போடா தண்ணியப் போட்டுட்டு உளறுறான் அதத் தெய்வ வாக்குன்னு சொல்லிக்கிட்டு"

"எதுக்கு இப்பக் கடுப்பாகுறிக"

"செரி அப்பா ஒண்ணுஞ் சொல்லல பேசாமப் போ"

"போய்க்கிட்டுத்தான் இருக்கோம்"

வண்டி வேகமாய்ப் போனது இருவரும் பேசவில்லை.

"இதுவரக்கிம் தங்கச்சிக்கிப் பாத்தவங்கட்டயெல்லாம் நாமளாத்தான் வெவரஞ் சொன்னோம். அப்புறந்தான் அவங்க இது இப்படி இது அப்புடின்னு சொல்ல ஆரம்பிச்சாக... பணந்தான் செலவாச்சு... பலனில்ல ஏ இப்பப் போயிப் பாத்த சாமியாடிக்கிட்ட கூட நாமதானே வெவரம் சொன்னோம். அவராவா இதுக்குத்தானே வந்திருக்கேன்னு கேட்டாரு? இல்லயில்ல?"

"அவரு கேக்கல ஆனா சரியாச் சொன்னாருல்ல? இந்தக் குடிகாரன் சொன்னததானே அவரும் சொன்னாரு"

"அதேதான்... இவங்க மட்டுமில்ல இதுவர பாத்த எல்லாருமே இதத்தானே சொன்னாக... சாமியாடி பெரியகருப்பத்தேவருக்கிட்ட நாம சொன்னோம். தீர்வு சொன்னாரு. இந்தாளு அவரே இதுதானே உன்னோட பெரச்சினயின்னு சொல்லி அதுக்குத் தீர்வும் சொன்னாரு. நாம எதாச்சும் கேட்டோமா? யோசிங்க. அந்தாளுக் குடிச்சிருக்கதால அவரு சொன்ன சொல்லு சரியில்லன்னு எப்புடி முடிவு பண்ணுவீங்க."

சாமியய்யா யோசிக்க ஆரம்பித்தார். பொட்டக்காட்டில் மொட்டை வெயிலில் வண்டி போய்க் கொண்டிருக்க...

காடை ஒன்று வலமிருந்து இடம் போனது.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 17 நவம்பர், 2019

வீராப்பு (பரிசு பெற்ற கதை)

வீராப்பு...

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை. கிராமத்து மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையும் எப்பவுமே வீம்பும் வீராப்பும் நிறைந்ததாய்த்தானிருக்கும். 

அப்படியான அவர்களின் வாழ்க்கையை, எதார்த்த வாழ்க்கையை, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாழ்க்கையை, அறியாமை நிறைந்த வாழ்க்கையை, நேசம் நிறைந்த வாழ்க்கையை, ஆடு, மாடு, கோழி, நாயென அரவணைத்து வாழும் வாழ்க்கையை, தெய்வங்களுடனான பிணைப்பு, திருவிழாக்கள், துக்கம், சந்தோஷம் என எல்லாம் கலந்த வாழ்க்கையைத்தான் எனது பெரும்பாலான கதைகள் பேசும்... அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் இக்கதையும் பேசியது. 

இன்று பாலாஜி அண்ணா தனது வலைப்பூவான 'போற போக்குல'யில் இது குறித்து எழுதி, முகநூலில் பகிர்ந்த பின்னர்தான் கதைகளைப் பகிர்வதில்லை என்ற விரதத்தைச் சற்றே விலக்கி வைத்து வீராப்பை இங்கே இறக்கி வைத்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க.... அதுக்கு முன் பாலாஜி அண்ணாவின் வலையில் 'வீராப்பு' பற்றி எழுதியிருப்பதை வாசிக்க இங்கே சொடுக்குங்க. நன்றி பாலாஜிண்ணே.

இனி... 
வீராப்பு

ம்ப்பு... ஒனக்கு வெசயம் தெரியுமாப்பு...என்றபடி பொழுது பளப்பளன்னு விடியும் போதே சாமிநாதன் வீட்டு வாசலில் நின்றார் சேதுக்கரசு.

"என்னப்பா... படுக்கய விட்டு எந்திரிச்சி வாறவனுக்கு என்ன வெசயந் தெரியப்போவுது... ஒனக்குத் தெரிஞ்சிதானே இம்புட்டுத்தூரம் வந்திருக்கே... அது என்னன்னுதான் சொல்லுவேப்பா..." என்றபடி கையிலிருந்த சொம்புத் தண்ணீரை முகத்தில் அடித்துக் கழுவி, வாய் கொப்பளித்து தோளில் கிடந்த துண்டால் துடைத்துக் கொண்டார்.

"ஒனக்குத் தெரியாதுன்னுதான் சொல்ல ஓடியாந்தேன்..." என்றபடி இடுப்பு வேட்டிக்குள் இருந்த நிஜாம் லேடி புகையிலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்து, விரல் விட்டு கொஞ்சமாய் கிள்ளி எடுத்து, கையில் வைத்துத் தேய்த்து வாய்க்குள் அதக்கிக் கொண்டு "போயெல வேணுமாப்பா..." என பாக்கெட்டை சாமிநாதனிடம் நீட்டினார்.

"இப்ப வாணாம்... காப்பித்தண்ணி குடிக்காம போயெல போட்டா நல்லாத்தேன் இருக்கும்... அது இருக்கட்டும் வெசயத்தோட வந்தவன் அப்பறம் என்னத்துக்கு கேள்வி கேக்குறே... என்னான்னுதான் சொல்லுவே..." ஏதோ விவகாரம் என்பதால் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருந்த சாமிநாதனிடம் காபியை நீட்டினாள் பேத்தி அனன்யா.

"ஏம்ப்பா காப்பி...” என்றவர், “அதான் நீ போயெலயப் போட்டுட்டியே... இனி எங்கிட்டு காப்பி..." என்றபடி டம்ளரை வாயில் வைத்து 'உருட்' என உறிஞ்சினார்.

"செலுவப்பய மவன் நட்ட நடுநிசியில வந்துருகானாமப்பு... ஊரெல்லாம் டமாரமாக் கெடக்கு... ஒனக்குத் தெரியுமோ என்னமோன்னுதான் வெள்ளக்கம்மாப் பக்கமா வெளிய இருக்கப் போனவன் சொல்லிட்டுப் போகலாம்ன்னு இங்கிட்டு வந்தேன்..."

"ஆறு மணிக்கெல்லாம் ஊரு பூராம் பரவிருச்சாக்கும்... எனக்கெங்கப்பா தெரியுது... இங்கிட்டு தோட்டத்துப் பக்கம் வந்துட்டு ஊரு வெசயம் ஒன்னய மாதிரி ஆளுக யாராச்சும் சொன்னாத்தான் தெரியுது..."

"ம்..."

"ஆமா அவளும் வந்திருக்காளாமா....?" என்றபடி மீண்டும் காபி டம்ளரை வாயில் வைத்து 'உருட்'டினார்.

"ஆமா குடும்பத்தோடதான் வந்திருக்கானாம்..."

"அப்ப நீ பாக்கலயா...?"

"இல்ல.... பார்வதியக்கா... பால் வாங்க வந்தப்போ சொல்லிட்டுப் போச்சு..."

"ம்... செலுவம் வரச் சொல்லாமயா வந்திருப்பான்... என்ன தயிரியமிருந்தா அவளயும் கூட்டிக்கிட்டு வந்திருப்பான்... சும்மா விடக்கூடாது... ஊர்க் கூட்டத்தக் கூட்டி உண்டு இல்லன்னு பண்ணாம விடக்கூடாதுங்கிறேன்.."

"அட இருப்பு... இன்னும் வந்திருக்கது அவன் மட்டுந்தானா... இல்ல அவளயும் கூட்டியாந்திருக்கானா... எதுக்கு வந்திருக்கான்... என்ன வெவரம்ன்னு எதுவுமே சரியாத் தெரியல... அதுக்குள்ள எதுவுந்தெரியாம நாம அருவா எடுத்து... எப்படியும் இன்னக்கி வெசயம் வெளிய வந்துதானே ஆவணும்..."

"அட கூமுட்ட... நீதானே பார்வதியக்கா சொன்னுச்சுன்னு சொன்னே...." காபி டம்ளரை கட்டைச் சுவற்றில் வைத்தார். காத்திருந்த ஈக்கள் காபி குடிக்க டம்ளருக்குள் சண்டை போட்டன.

"அட அது ஒரு வெவரங்கெட்ட மனுசி... ஒண்ணுக்குப் போக எந்திரிச்சி வந்துச்சாம்... அப்ப ஆளுக காருலயிருந்து எறங்கிப் போனாவளாம்... இருட்டுல யார்யாருன்னு தெரியலன்னு சொன்னுச்சு..." என்றபடி வாயில் இருந்த புகையிலை எச்சியை 'புளிச்'சின்னு தரையில் துப்பினார். அது மண்ணில் உருண்டு திரண்டது. ஈக்கள் அதன் மீதும் உட்கார்ந்து பறந்தன.

"நல்லாத்தேன்... எவுக எறங்கிப் போனாவனே தெரியாம... செலுவம் மவன மட்டும் தெரிஞ்சிச்சாக்கும் அந்த முண்டச்சிக்கி..."

"அதுதான் சொல்லுது... எனக்கென்னதத் தெரியும்... பாப்பம் யாரு வந்திருக்காவன்னு வெளிய தெரியாமயாப் போவும்..."

"ம்... நீ சொல்றது செரிதான்... வெவரந் தெரியாம நாம முந்திக்கிட்டுப் போக்கூடாதுதான்... "

"ஆமாமா... அப்ப நா வாரேம்ப்பா..." என்ற சேதுக்கரசு, வாசலில் நின்ற வேப்ப மரத்தில் குச்சியை ஒடித்து பல் விளக்க கையில் வைத்துக் கொண்டு கிளம்பினார்.

திண்ணையில் அமர்ந்த சாமிநாதன் மனசுக்குள் செல்வம் மகன் செய்தது நினைவில் ஆடியது.

ஏழு பங்காளி வீட்டுக்குன்னு ஒரு நடமொற இருந்துச்சு... நாலஞ்சு ஊருல இருந்தாலும் கருப்பன் கெடா வெட்டுக்கு மட்டும் எல்லாரும் இங்க வந்து கூடிருவாக... அவங்களுக்குள்ள பொண்ணு எடுக்கவோ, கொடுக்கவோ கூடாதுகிறது தலமொற... தலமொறயாத் தொடந்துக்கிட்டு இருக்க பழக்கம்.  'அந்தப் பழக்கத்தை உடச்ச பயதானே செலுவம் மயன்...' என்று நினைத்தவர் 'க்க்கும்...' என்று செருமியபடி தோளில் கிடந்த துண்டால் முகத்தில் அரும்பிய வேர்வையைத் துடைத்துக் கொண்டார். அவரின் மனசுக்குள் சில வருடங்களுக்கு முன்  தன் முகத்தில் கரி பூச்சிய அந்த நிகழ்வு காட்சியாய் விரிந்தது.

"வாங்க சித்தப்பா... என்ன கருக்கல்ல வந்திருக்கீக... ... ராஜாத்தி சித்தப்பாவுக்கு காப்பி போடு..."

"காப்பியெல்லாம் வேணாந்தா.... இப்பத்தான் குடிச்சிட்டு வாரேன்... ஏஞ் செலுவம்... எங்காதுக்கு அரசபுரசலா ஒரு சேதி வந்திருக்கு... ஓனக்கு எதுவுந் தெரியுமா...?"

"என்ன சேதி சித்தப்பா..?"

"எல்லாப் பக்கமும் பேசுறாய்ங்க... நீ தெரியாதுங்கிறே... எங்க ஒம்மவன்..."

"ம்.... அதுவா...? தெரியிஞ் சித்தப்பா... என்ன செய்யச் சொல்லுறீய..?"

"அப்ப ஒத்துக்கிறியா...? ஏழு பங்காளிக்குன்னு ஒரு மொற இருக்குடா... நாளாப்பின்ன ஊரு, நாட்டுக் கூட்டத்துல நம்மளுக்கு மதிப்பிருக்குமா..?"

"என்ன பண்ண சித்தப்பா... சொல்லிப் பாத்தாச்சி... அடிச்சிப் பாத்தாச்சி... செத்துருவேன்னு மிரட்டுறான்... என்னய என்ன செய்யச் சொல்லுறீய...."

"என்ன செய்யச் சொல்லுறீய... என்ன செய்யச் சொல்லுறீயன்னா... நீயே கட்டி வப்பே போல..."

"இந்தாங்க மாமா காப்பி..." என காபியை நீட்டியவளிடம் "அதான் வாணாமுன்னு சொன்னேனுல்ல... ஏம் போட்டே... செரி குடுத்தா...." என்றபடி வாங்கிக் கொண்டார்.

"அவுகளும் சொல்லிப் பாத்தாச்சு... அடிச்சி மெரட்டியெல்லாம் பாத்துட்டாக... அவளத்தான் கட்டுவேன்... இல்லேன்னா ரெண்டு பேரும் வெசத்தக் குடிச்சிட்டு செத்துப் போவோமுன்னு மிரட்டுறான்.... இதுக்கா பெத்து வளத்தோம்... என்ன செய்யுறதுன்னு தெரியல மாமா..." சேலை முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டாள். கண்ணீர் தாரைதாரையாக கன்னத்தில் ஓடியது.

"இப்ப எதுக்கு நீ அழுவுறே... செத்தாச் சாவட்டும் மயிருப்புள்ள... இப்படிப்பட்ட புள்ள இருந்தாயென்ன... செத்தாயென்ன..." என்றவர் குரலைத் தாழ்த்தி "இங்கேரு செலுவம்... அந்தப்பய நாளக்கி விடியயில இங்க இருக்கப்படாது... எதாச்சும் நல்லதச் சொல்லி எங்கிட்டாச்சும் விரட்டிவிடு கழுதய... சோறு தண்ணிக்கி நாயாத் திரிஞ்சி வேல பாத்தா சூத்துக் கொழுப்பு தன்னால அடங்கும்... நாஞ் சொல்றத சொல்லிப்புட்டேன்... அம்புட்டுத்தான்... அவன் ஏதாவது நாடுமாறித்தனம் பண்ணிப்புட்டா அப்புறம் ஊரு ஒறவுன்னு நீதான் பதில் சொல்ல வேண்டி வரும் பாத்துக்க..." என்றபடி காபி டம்ளரை வைத்துவிட்டு, துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

"வாங்க சித்தப்பா... என்ன இம்புட்டுத்தூரம்...?" கட்டுத்தொரையில் எருக்கூட்டிக் கொண்டிருந்த வசந்தா, கட்டை விளக்குமாறைப் போட்டுவிட்டு சேலை முந்தானையில் கையைத் துடைத்தபடி வரவேற்றாள்.

"சும்மாதாந்தா... மேலக்கொள்ள ராசப்பன ஒரு வேலயாப் பாக்க வந்தே... ஒ ஞாபகம் வந்திச்சி... இம்புட்டுத் தூரம் வந்துட்டு ஒன்னய பாக்காம போலாமா... அதான் ஒரு எட்டு பாத்துட்டுப் போலாமுன்னு... ஆமா எங்க எம்பேத்தியா... ஆளில்லயோ..." என்றபடி துண்டால் திண்ணையில் கிடந்த தூசியைத் தட்டிவிட்டு அமர்ந்தார் சாமிநாதன்.

"உள்ளதான் இருக்காவ... அவுகளுக்கு இப்ப எங்க மரியாத கொடுக்கணுமின்னில்லாம் தெரியுது... அவுக போக்குலதானே போறாவ... நாலெழுத்துப் படிக்க வச்சது எந்தப்பு..." பொறுமினாள்.

"இந்தா... இப்ப என்ன நடந்து போச்சுன்னு ஒப்பாரி வக்கிறவ... அந்த வெசயத்த நானும் அரசல்புரசலாக் கேள்விப்பட்டேந்தான்... காலயில செலுவத்துக்கிட்ட கூட இது வெசயமாத்தான் பேசிட்டுத்தான் வாரேன்.... ஏழு பங்காளிக்கின்னு ஒரு நடமொற இருக்குல்ல... அத மாத்த முடியாதுல்ல... ரெண்டு பேருக்கும் கேலி மொறதான்... கட்டி வக்கலாந்தான்.... ஆனா வழிவழியா வந்த மொறய விட்டுட முடியுமா...?"

"அதான் சித்தப்பா... அதனாலதான் நானும் தலதலயா அடிச்சிக்கிறேன்... பித்துப் பிடிச்சவ மாதிரி இருக்கா... எதுனாச்சும் பண்ணிப்பாளோன்னு பயமா வேற இருக்கு..."

"நீ ஏன் அப்புடி நெனக்கிறாவ... இங்க வா.... அவளுக்கிட்ட எதுவும் பேச வேணாம்... காதுங்காதும் வச்ச மாதிரி ஒரு பயலப் பாத்து சட்டுப்புட்டுன்னு அவ கல்யாணத்த முடிச்சிப்புட்டா சோலி முடிஞ்சிச்சி... அந்தப் பயலயும் நாளக்கி எங்கயாச்சும் வெளிய அனுப்பச் சொல்லிட்டுத்தான் வாரேன்... எல்லாஞ் செரியாகும்... கருப்பன் இருக்கானுல்லாத்தா... நடமொறய மாத்த விட்டுருவானா என்ன... நீ கவலப்படாத..."என்று மெல்லப் பேசியவர், "சரித்தா கொஞ்சந் தண்ணி கொடு... நாங்கெளம்பணும்" என்றார்.

"இருங்க காப்பி போட்டுக்கிட்டு வாரேன்."

"அதெல்லாம் வேணாம்... விடிஞ்சுட்டு ரெண்டு மூணு காப்பி குடிச்சாச்சு... தண்ணி மட்டும் கொடு போதும்..." என தண்ணி வாங்கிக் குடித்துவிட்டு வந்த வேலை முடிந்த சந்தோசத்தில் கிளம்பினார்.

மறுநாள் விடியல் அவருக்கு செல்வம் மகனும் வசந்தா மகளும் ஓடிப்போயிட்டாக என்பதாய்தான் விடிந்தது.

'ம்மொகத்துல கரியப் பூசிட்டுப் போனதுக திரும்பி வந்திருக்குக... விடக்கூடாது...' எனச் சொல்லிக் கொண்டு முகத்தைத் துடைத்தவர். 'எதுக்கு வெவரம் தெரியட்டும்ன்னு காத்திருக்கணும்... அங்க போன வெவரம் தெரியப்போகுது... என்ன ஆனாலுஞ் செரி நேர போயி பாத்துட்டு வந்துடலாம்' என்ற முடிவோடு செல்வம் வீட்டை நோக்கி நடந்தார்.

"வாங்க சித்தப்பா... நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்..." என்றபடி சேரெடுத்துப் போட்டான் செல்வம்.

"என்னப்பா... காலயில எனக்கு வந்த சேதி உண்மதானா...?" கோபத்தோடு கேட்டார்.

"ஆமா சித்தப்பா... ஒங்க பேராண்டி வந்திருக்கான்..."

"பேராண்டி... எவன்டா எம்பேராண்டி... அம்புட்டு ஒங்கிட்டச் சொல்லிட்டுப் போயும் எம் மொகத்துல மறுநாளே கரியைப் பூசுனவன் பேராண்டியா...?" கோபமாய்க் கேட்டார்.

"இப்ப என்ன செய்யணுங்கிறிய சித்தப்பா... அவனை வெட்டிப் போட்டுடவா... அப்படிப் போட்டுட்டா ஏழு பங்காளிக்கு அவனால ஏற்பட்ட களங்கம் போயிருமா...?"

"என்னடா பேசுறே... அப்ப நீ அவன ஏத்துக்கிட்டுத்தான் வரச்சொல்லியிருக்கே... இல்லயா...?"

"ஆமா நாந்தான் வரச்சொன்னேன்... ரெண்டு பேரும் விரும்புனாங்க... ஓடிப்போனாங்க... ரெண்டு புள்ளயும் பெத்துட்டாக... இனியும் ஒதுக்கி வச்சி என்னாகப் போகுது... அதான் இங்க வரச் சொன்னேன்..."

"... புரட்சி பேசுறியோ... அப்ப நடமொற... பழக்க வழக்கமெல்லாம் தேவயில்லன்னு சொல்றே... அப்படித்தானே..."

"என்ன சித்தப்பா நடமொற... இதெல்லாம் நாம ஏற்படுத்துனதுதானே... வெள்ளச்சாமி மவன் கெளெக்குள்ள கெளெதான் கட்டிக்கிட்டான்.... அன்னக்கி ஊரு குதிச்சிச்சு... இப்ப எவன் கெளெக்கிள்ள கெளெ கட்டாம இருக்கான்.... இல்ல நல்லது கேட்டதுன்னா எவன் அவமூட்டுல போயி நிக்காம இருக்கான்... அன்னக்கி சாதிக்குள்ளயே பாகுபாடு பாத்தாங்க.. அந்த பிரிவுல நாங்க கொடுக்கிறதில்ல... இந்தப் பிரிவுல நாங்க கொடுக்கிறதில்லன்னு சொன்னாக... இன்னக்கி எந்த பிரிவுல கொடுக்காம இருக்காக சொல்லுங்க..."

"அதுக்காக ஒம்மவன் பண்ணுனத ஞாயப்படுத்துறியா... ஏழு பங்காளி வகயறாவே தல  குனிஞ்சு நின்னுச்சுடா... மறந்துட்டியா..."

"ஞாயப்படுத்தல சித்தப்பா... இப்ப இருக்க காலகட்டம் அப்படின்னு சொல்ல வந்தேன்.... நாளக்கி கருப்பனுக்கு கெடா பூச போடுறேன்... அப்ப இந்தக் கலியாணம் தப்புன்னா கருப்பன் அதுகளுக்குத் தண்டன கொடுக்கட்டும்... ரெண்டு ரத்தமும் சேந்து மூணாவது ரத்தங்களும் வந்தாச்சு.... இன்னமும் நாம எதுக்கு எதுத்துக்கிட்டு கெடக்கணும்... என்னத்த கொண்டு போப்போறோம் சித்தப்பா..."

"ஒனக்கு வசந்தா பரவாயில்ல... செத்தாலும் அவ மொகத்துல முழிக்கமாட்டேன்னு சொன்னவ அப்புடியே போயிச் சேர்ந்துட்டா... நீ கூட்டியாந்து ஒறவ வளக்குறியாக்கும்.... பங்காளிகளுக்கிட்ட கலந்து பேசி ஒன்னய ஏழு பங்காளிகள்ல இருந்து ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கும் பாத்துக்க..."

"அட ஏஞ்சித்தப்பா இன்னமும் பழய நடமொறயவும் பழக்க வழக்கத்தயும் தூக்கி வச்சிக்கிட்டு திரியிறிய... சின்னஞ்சிறுக மனசுக்குப் பிடிச்சி கட்டிக்கிருச்சுக... பழசச் சொமக்காம அதுக நல்லாயிருக்கட்டும்ன்னு வாழ்த்துறதுல என்ன வந்திறப் போவுது... நானும் வீம்பாத்தான் இருந்தேன்... என்னத்தக் கொண்டு போப்போறோமுன்னுதான் அவனோட பெரண்டு மூலமாப் பேசி இங்க வரச்சொன்னேன்... இங்கயே அவுக தங்கப் போறதில்ல... ஆனா வரப்போக இருக்கத்தான் செய்வாக... ஊரு என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுறேன் சித்தப்பா...."

"ம்... எடுக்கும்... எடுக்கும்... எடுக்க வப்பேன் " என்றபடி வேகமாய் சேரைத் தள்ளிவிட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார் சாமிநாதன்.

"இந்த வீராப்புனாலதானே ஏழு பங்காளி வீட்டு செல்லத்தாயி... அதான் ஒங்க தங்கச்சி... எங்க அத்த... ஒரம்பா மரத்துல தொங்குச்சு.... அன்னக்கி என்னய்யா நடமொறன்னு எங்கய்யனோ... அப்பனோ... இல்ல நீங்களோ  தூக்கி வீசிட்டு... எங்க அத்த ஆசப்படி சேத்து வச்சிருந்தா அல்பாயுசுல அது போயிருக்காதுல்ல... இன்னமும் வாவரசியா வாழ்ந்துக்கிட்டு இருந்திருக்குமுல்ல..." செல்வத்தின் குரல் அவரின் முதுகுக்குப் பின்னே அறைந்தது.

அந்த வார்த்தைகள் அவரின் நெஞ்சுக்குள் சுருக்கென குத்தியது.

செல்லத்தாயி நினைவில் கண் கலங்கியது.

கண்ணைத் துடைத்தபடி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தார்...

அவர் செல்லத்தாயி உயிரைப் பறித்த ஒரம்பா மரம் நின்ற இடத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்...  ஊர்க் கூட்டத்தைக் கூட்டுவேன் என்ற வீராப்பை அந்த இடத்தில் இறக்கி வைத்துவிட்டுச் செல்வாரா அல்லது சுமந்து செல்வாரா என்பது அவரைத் தவிர யாருக்கும் தெரியாது... ஏறு வெயிலில் வேகமாக நடந்தார்.

-'பரிவை' சே.குமார்.