மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 3 அக்டோபர், 2018

சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)

'என் உயிர் நீதானே...' என்ற எனது சிறுகதை 'ஐ லவ் யூடா' என்ற பெயரில் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியாகியிருக்கிறது. என் உயிர் நீதானேயை விட ஐ லவ் யூடா ஈர்ப்பாக இருக்கும் என்று நினைத்தார்கள் போல. 

எது எப்படியோ முத்துக்கமலத்தில் இது எனது மூன்றாவது கதை... படைப்பாளர்கள் வரிசையில் எனக்கும் ஒரு இடமும் அதில் என் கதைகளும்... நன்றி முத்துக்கமலம்.

முத்துக்கமலத்தில் வாசிக்க இங்கு சொடுக்குங்கள்.

வாசித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்க... நன்றி.




உயிரே ஒரு கடிதம்
(ஐ லவ் யூடா)
'ப்படியிருக்கே?'

யாருடா இவன் ஒரு லெட்டர் எழுதும் போது எப்படியிருக்கேன்னு ஆரம்பிச்சிருக்கானேன்னு நீ நினைக்கமாட்டேன்னு எனக்குத் தெரியும். அந்த ஒரு வரிக்குள் ஒளிந்திருக்கும் என்னை நீ கண்டுபிடித்து விடுவாய் என்பதை நான் அறிவேன்.

'சரி... எப்படியிருக்கே...?' என் நினைவுகள் பல நேரம் நம் நினைவுகளை மீட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. எத்தனை காலம் ஆனாலும்... இனிக்கும் நாட்களல்லவா அந்த நாட்கள்...? எப்படி மறப்பது... எப்படி அதை வீசி எறிவது..?

'நம் முதல் சந்திப்பு உனக்கு ஞாபகம் இருக்கா...?' அட பைத்தியக்காரா... இது என்னடா கேள்வியின்னுதானே சிரிக்கிறே... உனக்கு ஞாபகம் இல்லாமலா இருக்கும்... மரத்தடியில் நண்பர்களுடன் நிற்கும் எங்களைக் கடந்து செல்லும் பட்டாம்பூச்சிகளில் தேவதையாய் நீ தெரிய, நான் உன்னைப் பார்த்து கை நீட்டி 'இங்கே வா' என்கிறேன். நீ உன் தோழியை துணைக்கழைக்க, 'அவ எதுக்கு... பாத்ரூம்க்கும் அவளை கூட்டிக்கிட்டே போவியா..'? என நான் சொன்னதும் என் நண்பர்கள் எல்லாம் கேலியாய் சிரிக்கிறார்கள். நீ உன் தோழி தவிர்த்து அழகான முகத்தில் கோபத்தின் சிவப்பு சூடி அருகே வருகிறாய்...

'பர்ஸ்ட் இயர்தானே...' என்றதும் 'ஆமாம்' என தலையாட்டினாய்.

'ஆமா நீ பூம்பூம் மாடு... நான் மாட்டுக்காரன்... கேள்வி கேட்ட தலையாட்டுறே... ஊமையா...?' என்றேன் நக்கலாய்... மீண்டும் நண்பர்களின் சிரிப்பொலி.

'ஆமா...' என்றாய்... பர்ஸ்ட் இயரா என்றதற்கு இந்த ஆமாவா இல்லை ஊமையா என்றதற்கு இந்த ஆமாவா என்று ஆராயாமல் 'உன் பேர் என்ன?' என்றேன். நீயும் கோபத்தோடு 'மிருதுளா' என்றாய்.

'டேய் மாப்ள... பிரதர் இன் லா , சிஸ்டர் இன் லாவெல்லாம் தெரியும்... அது என்னடா மிருது லா' என்று சிரித்தான் ரகு. உடனே நீ 'மிருதுளான்னு சொன்னேன் என்றபடி அங்கிருந்து அகன்றாய். கொஞ்சத் தூரம் போய் திரும்பி பார்த்து முறைத்தாய்... நானும் முறைத்தேன்... 

முறைக்கும் கண்கள் விரைவில் ரசிக்கும் என்பதை அப்போது நாம் உணரவில்லை.

நாட்கள்... வாரங்களாகி... வாரங்கள்... மாதங்களாக பயணித்தபோதுதான் நான் ரவுடி என நீயும்.. நீ திமிர் பிடித்தவள் என நானும் நினைத்திருந்தது மெல்ல மாறி முதல் பார்வையின் தவறுதான் அது என்பதை உணர்ந்து சிறு புன்னகையுடன் கடக்க ஆரம்பித்து மெல்ல மெல்லப் பேசி நட்பானோம்.

அன்று... அதுதான் நம்மை உணர வைத்த நாள்... உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. என்னமோ எல்லாமே இவனுக்கு மட்டுந்தான் ஞாபகம் இருக்க மாதிரி ஞாபகம் இருக்கான்னு கேட்கிறானேன்னு நீ சிரிப்பேன்னு எனக்குத் தெரியும்... இருந்தும் கேட்கத் தோணுது  இப்போதைய வாழ்க்கை... சரி வா... நம்மை உணர வைத்த நாளை மீண்டும் உணர்வோம்.

கல்லூரி நண்பனின் தங்கை திருமணம்... நீயும் அங்கு வருவாய் என்று எனக்குத் தெரியும்... என்னைவிட உனக்கு அவனிடம்தான் ஒட்டுதல் அதிகம். அதற்கு காரணம் இருந்தது... அவனும் நீயும் இலக்கியம் பேசுபவர்கள்... எனக்கு அதெல்லாம் புரியாது... தெரியாது. கல்லூரி சார்பாக பல போட்டிகளுக்கு இருவரும் அனுப்பப்பட்டு நிறைய பரிசுகளை வென்று வந்து கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நட்பு வட்டத்தில் நான் வெளியேதான் நிற்க வேண்டியிருக்கும் என்பதை நன்கறிவேன். நான் இன்னும் உன்னுடன் நெருங்கிப் பழகாத தினங்களே அவை... ஒரு புன்னகை., சில வரிப் பேச்சுடனான நட்பு மட்டுமே நமக்குள்... அப்படியிருக்க உன் இலக்கியத் தோழனின் தங்கை திருமணம் வரமாலா இருப்பாய்..?

Image result for மனைவி

அது ஒரு சிறு கிராமம்... பசுமை நிறைந்த வயல்வெளிகள்... பேருந்து வசதி இல்லாத கிராமம்... மெயின் ரோட்டு வழியாக பயணிக்கும் பேருந்தில் கிளைச்சாலையில் இறங்கி கப்பி ரோட்டில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். அதனால் நாங்கள் நண்பர்களின் வண்டிகளில் ரெண்டு மூணு பேர் என அங்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னே கல்லூரி நண்பர்கள் வந்திருக்க, நீ வந்திருக்கிறாயா..? என்று நான் தேடினேன் என்பதை உன்னிடம் அன்றே சொன்னேன். ஞாபகத்தில் இருக்கா..? சரி விடு... இந்த வார்த்தை வேறு அப்பப்ப வந்துவிடுகிறது. தேடிய என் விழிகளுக்குள் நீ சிக்கினாய்... ஆனால் உன் இலக்கிய நண்பனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாய்... ஏனோ விழிகளை விலக்கினாலும் மீண்டும் மீண்டும் உங்கள் பக்கமே நகர்ந்து கொண்டிருந்தது.

சாப்பிடப் போகும் போது ஏதேச்சையாய் பார்ப்பது போல்,'ஹாய் எப்ப வந்தீங்க..?' என்றாய்... இதுதான் நம் நட்பின் ஆரம்பப் பேச்சாய் நான் உணர்ந்தேன்.  'அப்பவே வந்துட்டோம்... நீதான் பிசி' என்றபடி கடந்தேன். அதன் பின்னான நேரங்கள் நண்பர்களுடன் அரட்டையில் கழிந்தது. கிளம்பும் போது 'எங்களை பஸ் ஸ்டாப்ல டிராப் பண்ண முடியுமா?' என்று என்னிடம் வந்து கேட்டாய். எனக்கு ஆச்சர்யம்..? அப்போது பெண்கள் பேசுவதே பெரிய விஷயம்.. வண்டியில் பின்னால் அமர்ந்து வருவது என்பது சாத்தியமேயில்லை. அப்படியிருந்தும் நீ கேட்டதும் என்னால் மறுக்க முடியவில்லை. நண்பனின் வண்டியில்தான் நான் வந்திருந்தேன். அவனிடம் வண்டியை நான் வாங்கி ஸ்டார்ட் பண்ண, நீ என் பின்னே ஏறிக்கொண்டாய். மற்றவர்கள் மற்ற நண்பர்களின் வண்டியில்...

'என்ன எதுவுமே பேசாம வாறீங்க..?' நீதான் கேட்டே, 'ஒண்ணுமில்லை...' என்றேன். சிரித்தவாறே 'ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே..?' என்றாய். வண்டி பள்ளத்தில் இறங்கி ஏறும் போது ஏதேச்சையாய் உன் கை என் தோளைப் பற்றியது. எனக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்... அதிலிருந்து மீண்டு 'என்ன...?' என்றேன். 'இந்த டிரஸ் நல்லாவே இல்லை... இந்தப் பேண்டுக்கு லைட் ஊதாக் கலர் சர்ட்டுன்னா சூப்பரா இருக்கும்' என்றாய். 'ம்... எங்க அக்கா நல்லாயிருக்குன்னு சொன்னுச்சு...' என்றதும் 'அக்காவோட ரசனை சூப்பர்' என்று சிரித்தாய்.

நமக்குள் கொஞ்ச நேர அமைதி "என்ன சார்...பேச யோசிக்கிறீங்க... ராக்கிங் பண்ணினப்போ என்னை ஊமையின்னு சொன்னீங்க... இப்ப யார் ஊமை...' என்று நீ கேட்க, 'அது என்னமோ தெரியலை... வந்த பொண்ணுகள்ல சட்டுன்னு உன்னைப் பிடித்தது... கூப்பிட்டுக் கேட்டேன்... ராக்கிங்ன்னா அப்படித்தான் பேசணும்... அதான்...' என்றதும் நீ சிரித்தாய்.

வேகமா வாங்கடா.. என்ன இப்பத்தான் கல்யாண ஊர்வலம் மாதிரி மெதுவா வாறீங்க என்று முன்னே சென்ற நண்பன் கத்த, வண்டியின் வேகத்தைக் கூட்டினேன். 'மெல்லவே போங்க' என்று என் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்தாய்.

'ஆமா... உன் இலக்கிய நண்பன் கல்யாண வேலையை விட்டுட்டு உங்கிட்ட அப்படி என்ன கடலை போட்டான்.... சிரிச்சு சிரிச்சு பேசினீங்க... இலக்கியமா?' என்றேன் நக்கலாக.

 'என்ன நக்கலா... அவங்க வீட்டுத் திருமணத்துக்கு வந்திருக்கோம்... அவன் வந்து பேசினான்.. தட்ஸ் ஆல்.. ஆமா நீங்க பாத்தீங்களா...?' என்றாய். 'ஆமா... என்ன ஒரு சந்தோஷம் அவன் முகத்துல... கல்யாண மாப்பிள்ளை மாதிரி...' என் பொறுமலை கொட்டினேன். 'ஏய் அவன் என்னோட பிரண்ட்... நீங்க அப்ப என்னையத்தான் பாத்துக்கிட்டு இருந்திருக்கீங்கன்னு சொல்லுங்க...' என்னைச் சீண்டினாய்.

'ஆமா... பெரிய அழகி... கண்ணுக்கு முன்னே கடலை... அதான்...' என்றதும் 'ஏன் நான் இந்த டிரஸ்ல நல்லாயில்லையா...?' என்றவள், 'நீங்க எங்க பக்கம் வந்து உக்காந்து பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு பார்த்தேன்... வரவேயில்லை... அவன்கிட்ட பேசினதால கோபமாக்கும்..' என்றாய். 'நான் எதுக்கு தாயி உங்கமேல கோபப்படணும்... என்னோட பிரண்ட்ஸ்கூட அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தேன்... இப்பக்கூட உதவியின்னு கேட்டீங்க... வந்தோம்... உங்களை கூட்டிக்கிட்டு பவனி போகலாம்ன்னு சந்தோஷத்துல வரலை...' என்றேன்.

உடனே நீ 'ம்க்கும்... நம்பிட்டோம்.... இதே பசங்க கேட்டிருந்தா வந்துருப்பீங்களாக்கும்... சாக்குப் போக்கு சொல்லியிருக்கமாட்டீங்க... பொண்ணுங்கன்னதும் வந்தீங்க... என்ன சார் சரிதானே...?' என்று சிரிக்க, நான் மறுக்க ‘என்னைய ஏத்தாம வேற பொண்ணை உங்க வண்டியில ஏத்தியிருக்கலாமே என் என்னை உங்க வண்டியில ஏத்தினீங்க..’ எனக் கேட்டுச் சிரித்தாய். நான் பதிலேதும் சொல்லாமல் வண்டியை செலுத்த பேருந்து நிறுத்தம் வந்தது.

நீ இறங்கியதும் நான் வண்டியை எடுக்க 'ஒரு நிமிடம்' என்றாய்.. நின்றேன்... அருகே வந்து 'இந்த சாரி எனக்கு நல்லா இல்லையா..?' என்று என் முகம் பார்த்துக் கேட்டாய்... பொய் சொல்ல மனமில்லை எனக்கு... 'நீ ரொம்ப அழகா இருக்காய்..' உண்மை பேசினேன். 'அப்ப அப்படிச் சொன்னீங்க..?' சிறு குழந்தைபோல் கோபமாய்க் கேட்டாய். 'சும்மா' என்று சிரிக்க, 'டேய்... அங்க என்னடா கடலை... வாடா... அவனுங்க காத்துக்கிட்டு இருப்பானுங்க என்ற நண்பனின் அழைப்புக்கு, 'போங்கடா... வாறேன்' என்றதும் 'நடத்துங்க... நடத்துங்க...' என்றபடி அவர்கள் கிளம்ப, 'எங்க நடத்துறது... நான்தான் வகுப்பு எடுக்க வேண்டியிருக்கு' என மெல்ல முணங்கினாய். 'என்ன..?' என்றேன். 'பின்னே' என்று சிரித்தாய்.

'சாரே... அவன் என்னோட போட்டிகளுக்கு வர்றவன் என்ற முறையில்தான் பேசுவேன்... நீங்க பாட்டுக்க காதல் கத்திரிக்காய்ன்னு எல்லாம் நினைச்சிறாதீங்க... எனக்கு என்னைய முதன் முதலில் ராக்கிங் பண்ணின இந்த ரவுடியைத்தான் பிடிக்கும்... அந்த கத்திரிக்காயெல்லாம் இங்கிட்டுக்கூட இருக்கலாம்' என்று சாதாரணமாய் நீ சொல்ல, நான் விக்கித்து நின்றேன்.

'ஏய் வாயாடி... வாயாடுனது போதும்....வாடி பஸ் வருது' என் உன் பிரண்ட்ஸ் குரல் கொடுக்க, 'உங்க கூட வண்டியில வந்த இந்தக் கொஞ்ச நேரம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது, நாளைக்கு இந்த பேண்டுக்கு லைட் ஊதா சர்ட்டுல வாங்க...' என்றபடி ஓடினாய். அதன் பின் கப்பி ரோட்டில் என் வண்டி பறந்தைச் சொல்லவும் வேண்டுமா..?

நம் காதலைச் சுமந்த கல்லூரி...

மைதானத்துப் புங்கை மரத்துக்கு கீழ் இருக்கும் அமரும் திண்டு...

பெண்கள் அறைக்குப் பின்னே இருக்கும் வேப்ப மரம்...

கல்லூரிச் சாலை...

மாலை நேரங்களை விழுங்கிய பாரதி பூங்கா...

என இவையெல்லாம் நம் காதலைப் பருக, ஈருடல் ஓருயிராய் ஆனோம். எல்லாருக்கும் வரும் எதிர்ப்புக்களைச் சந்தித்து  உறுதியாய்... முடிவாய்... நின்று குடும்ப சம்மதத்துடன் குமரன் சன்னிதியில் வாழ்வில் இணைந்தோம்.

அன்று... நம் முதல் இரவு...

எல்லாருமே முதல் இரவு என்றால் அது காமத்திற்கான இரவு என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் அதுதான் நம் வாழ்க்கைக்கான முதல் இரவு...

காதலித்த ஆறாண்டுகள் எவ்வளவோ பேசியிருந்தாலும் அந்த இரவில் நம் வாழ்க்கையைப் பற்றி, பிறக்கப் போகும் நம் குழந்தைகள் பற்றி, செல்ல வேண்டிய தூரம் பற்றி, அடைய வேண்டிய சிகரம் பற்றி... இன்னும் இன்னுமாய் நேரம் கடந்து கொண்டே செல்ல, நம் பேச்சும் கூடிக்கொண்டே போனது உனக்கு நினைவில் இருக்கா?

காதலிக்கும் போது இருக்கும் நேசம், புரிந்து கொள்ளும் தன்மை என எல்லாம் தம்பதிகளானதும் சற்றே மாறித்தான் போகும் என்பதை காதல் திருமணம் செய்த எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றாலும் அந்தப் புள்ளி... பெரிய கோலமாக மாறி... 'அப்பவே சொன்னேன் வேற சாதிக்காரன் வேண்டான்னு... காதல் கத்திரிக்காய்ன்னு சொல்லி நீதானே கட்டிக்கிட்டே... இன்னைக்கு தப்புப்பண்ணிட்டேன்னு புலம்புறே...' என்ற உன் அம்மாவின் வாக்கு வேதவாக்காகி   என் உயிரை எடுத்துச் சென்று விட்டாய்.

விவாகரத்துப் பேப்பர் அனுப்புகிறோம் என்கிறார் உங்கப்பா...

விவாகரத்து...

அது யாருக்கு வேணும்...?

உயிர் போன பின்னால் இனி ரத்து செய்ய என்ன இருக்கிறது..?

நான் மாறிவிட்டேன் என்கிறாய் நீ..? எப்போதும் சுமந்த காதலைத்தான் இப்போதும் சுமக்கிறேன்... முதல் நாள் எனக்குள் பறந்த பட்டாம்பூச்சி இப்போதும் பறந்து கொண்டுதான் இருக்கிறது. என்ன ஒன்று... அன்று இளமைத் துள்ளலுடன் வாழ்க்கை பற்றிய கவலையின்றிப் பறந்தது... இன்று கொஞ்சம் முதிர்ச்சி அடைந்து நம்மளை நம்பிய வந்தவளை கண் கலங்க விடக்கூடாது... என் தேவதையை ராணி மாதிரி வச்சிக்கணும்ன்னு... வாழ்வின் அர்த்தம் கொடுத்தவளுக்காக... உனக்காக... ஓடிக் கொண்டிருக்கிறேன்...

என் தேவதைக்குள் பூக்க இருக்கும் தேவதைகளுக்கா தேனைச் சேமிப்பதற்காக பணம் என்னும் மகரந்தத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். ஓட்டத்தின் வேகத்தில் வார்த்தை தென்றலாவதும் சூறாவளியாவதும் தவறில்லையே... இதயத்துக்குள் உன் மீதான பிரியம் இம்மியளவும் குறையவில்லை... தினம் தினம் இமயம் அளவு கூடிக்கொண்டேதான் போகிறது,

என்னைப் புரிந்தவளே... என் கண்ணம்மா.. இதுதான் நான்... நான் நானாக இருக்கிறேன்... நீ நீயாக இருப்பாய் என்ற நம்பிக்கையில் இன்னும்... கடந்து கொண்டிருக்கிறேன் நீயில்லா மணித்துளிகளை...

உன் உயிரைச் சுமக்கும் உடல் மட்டும் இங்கே... உயிர்...?

என் ப்ரியமானவளுக்கு... என கணவன் எழுதியிருந்த மின்னஞ்சலை வாசிக்க விருப்பமில்லாததால் திறந்து பார்க்காமல் வைத்திருந்தாள். இரவு படுக்கப் போகுமுன் ‘சரி அப்படி என்னதான் கதை விட்டிருக்கிறான்’ என வாசித்துத்தான் பார்ப்பமோ என்று திறந்த மிருதுளா,  'பிரிய நினைத்தால் படிக்க வேண்டாம்... பிரியம் இருந்தால் ஒருமுறை வாசித்துச் செல்' என்று ஆரம்பித்த கடிதத்தைப் படிக்க மெதுவாக வாசிக்க ஆரம்பித்தாள்.

‘நல்லாயிருக்கியா’வில் உருகி...

ஒவ்வொரு ‘நினைவிருக்கிறதா’விலும் கண்ணீரைச் சேர்த்து...

‘என் கண்ணம்மா’வில் கன்னத்தில் இறக்கி...

‘நீ இல்லா மணித்துளி’யில் உடைந்து...

‘கேள்விக்குறியில் நிற்கும் உயிரில்’ பொறுமி...

'ஐ லவ் யூடா...' என்று கதறி அழுதாள்.
-'பரிவை' சே.குமார்.

****
ண்பர் 'தளிர்' சுரேஷின் 'தேன்சிட்டு' மின்னிதழில் வெளியான 'மனிதர்கள்' சிறுகதை விரைவில் பகிரப்படும். அத வாசிக்கவும் நண்பர் இதழை வாசிக்கவும் விரும்பினால் இங்கு சொடுக்குங்கள்.

****

திங்கள், 1 அக்டோபர், 2018

மனசு பேசுகிறது : பொறு புள்ள பூவழகி


'பொறு புள்ள பூவழகி
சத்த நேரம் பேசிக்கிறேன்...

பொழுதும் போகவில்லை
உன்னத்தான் யோசிக்கிறேன்...

மனசெங்கும் பூப்பூத்து
மச்சினியே காத்திருக்கு...

படக்குன்னு நீ வரவே
பாதையிலே பாத்திருக்கு...

திருநா பேரழகே
உனக்காக நான் பொறந்தேன்..'

கிராமியப் பாடல்களை எழுதுவதில் கில்லாடி ராசி.மணிவாசகன் அவர்களின் சமீபத்திய வெற்றிப் பாடல் இது. நாடக நடிகர் (நாரதர்/ முருகன்) முத்துச் சிற்பி சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். இவரின் 'அத்த மக உன்ன நெனச்சி' பாடல் ஆந்தக்குடி இளையராசாவைப் பிரபலமாக்கியது. 'பொறு புள்ள பூவழகி' முத்துச்சிற்பிக்கு கிராமியப் பாடல்களில் முகவரி கொடுத்திருக்கிறது.

(வள்ளி மனோரஞ்சனியுடன் முத்துச் சிற்பி)

கிராமியப் பாடல்களைக் கேட்பதில் எப்போதும் ஒரு சந்தோஷம் எல்லாருக்குமே உண்டுதானே... அதை விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனோ... பரவை முனியம்மாவோ... கொல்லங்குடி கருப்பாயியோ.... புஷ்பவனம் குப்புசாமியோ... அனிதாவோ... கோட்டைச்சாமி ஆறுமுகமோ... இன்னும் யார் யாரோ பாடினாலும் அந்த வரிகளைச் சுமக்கும் கிராமிய இசை அப்படியே அணைத்துக் கொண்டு, நம்மை அறியாமல் ஆட்டம் போட வைக்கும்.

சமீபத்திய கிராமியப் பாடல்கள் முழுக்க முழுக்க கிராமியச் சாயல் இல்லாவிட்டாலும் மிகச் சிறப்பான வரிகளால் நம்மை ஈர்க்கின்றன. இப்போதைக்கு தஞ்சை சின்னப்பொண்ணு... ஆந்தக்குடி இளையராஜா... விஜய் சூப்பர் சிங்கர்... (இப்படிச் சொன்னாத்தான்  தெரியும்ங்கிற மாதிரி ஆக்கிட்டானுங்க) செந்தில் கணேஷ் எனப் பலர் சிறப்பான முறையில் கிராமியப் பாடல்களை மேடைகளில் அரங்கேற்றி வருகிறார்கள். கரகாட்டம் காம ஆட்டமாக மாற, கிராமியப் பாடல்களுக்கான மேடைகள் விரிய ஆரம்பித்துவிட்டன.

முன்னெல்லாம் கிராமியப் பாடல்களை பெரும்பாலும் அவர்களே எழுதி அவர்களே பாடி வந்தார்கள்... அது ஒரு தனிச்சுவை. இப்போது பாடல் வரிகளை எழுதுவதற்கென்றே பலர் இருக்கிறார்கள்... அந்தப் பாடல்களை பல இளம் கலைஞர்கள் மிகச் சிறப்பாகப் பாடி தங்களின் திறமையை நிருபிப்பதுடன் கிராமியக்கலையை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.

புஷ்பவனத்தின் 'ராஜாத்தி உன்னை எண்ணி' பாடலைப் போல ஆத்தங்குடி இளையராஜா பாடிய 'அத்த மக உன்ன நெனச்சி' பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. எந்தத் திருவிழா என்றாலும் யார் நடத்தும் கிராமியக் கலை நிகழ்ச்சி என்றாலும் அதில் 'அங்கே இடி முழங்குது' என கருப்பரை ஆட விடாமல் இருப்பதில்லை. அப்படித்தான் இந்த 'அத்த மக உன்ன நெனச்சி' பாடலும். இந்தப் பாடல் குறித்து முன்பு ஒரு பகிர்வு எழுதியிருந்தேன். அதனால் அத்த மகளுக்கான பதிவு இது இல்லை என்பதால் பூவழகி பின்னே போகலாம்.

'வள்ளி திருமணம்' நாடகம் பார்க்கும் நாடக ரசிகர்களுக்கு நாரதர் முத்துச்சிற்பியைத் தெரியாமல் இருக்காது. தன் குரல் வளத்தால் 'சிம்மக்குரலோன்' என்றும் 'இசையருவி' என்றும்  அழைக்கப்படுபவர், பாடல்களை மட்டுமே பாடி பிரபலம் அடைந்து விடலாம் என்றெண்ணாமல் நிறையப் புராணங்களைப் படித்து மிகச் சிறப்பான தர்க்கம் பண்ணக் கூடிய இளைஞர். இவரோடு தர்க்கம் பண்ணுகிறவர்களோடு பாட்டும் புராணமுமாய், குறிப்பாக அடித்துக் கொண்டு நாறாமல் மிகச் சிறப்பாக நடிக்கக் கூடிய மனிதர். ராதாகிருஷ்ணன், ராஜா, சூர்யா போன்ற பபூன்களுடன் நடத்தும் சிரிப்புத் தர்க்கமும்... கலைமகள், அபிராமி, மனோரஞ்சனி போன்றோருடனான புராணத் தர்க்கமும் சிறப்பாகவே இருக்கும் என்றும்... எப்போதும்.

நல்ல பாடகரான இவரின் முதல் கிராமியப் பாடல்கள் தொகுப்பான 'சிற்பிக்குள்ள முத்தப்போல' சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு பாடல்களாக அவரின் யூடிப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். பகிர்ந்த பாடல்கள் அனைத்துமே சிறப்பாக வந்திருக்கிறது. அம்மாவுக்கு ஒன்று... குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு ஒன்று... காதல் பாடல்கள் என அடித்து ஆடியிருக்கிறார். எல்லாம் அருமையின்னாலும் பூவழகியே எனக்கு முதன்மையாய்.

இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் இன்றைக்கு கிராமத்துப் பாடல்களை எழுதிக் கொடுப்பவர்கள் மிகச் சிறப்பான பாடல்களை எழுதிக் கொண்டிருப்பவர் ராசி.மணிவாசகன்.... அவர் வரிக்கு வரி வசியம் பண்ணுகிறார். வார்த்தைகள் வசதியாய் வந்து அமர்கின்றன அவரின் பேனாவுக்கு... மிகப்பெரிய இடத்தைப் பிடிக்கப் போற கவிஞர், கிராமியப் பாடலாசிரியர். இவரின் வரிகளுக்கு முத்துச்சிற்பி தன் குரல் வளத்தால் உயிர்கொடுத்திருக்கிறார்.

பொறு புள்ள பூவழகியில் என்ன அழகான வரிகள்... அருமையான இசை... முத்துச்சிற்பியின் குரல் அவருடன் இணைந்து பாடும் 'சூப்பர் சிங்கர்' ஸ்ரீநிஷாவின் ஈர்க்கும் குரல் என கலக்கலாய் வந்திருக்கிறது. ராசாத்தி உன்னை எண்ணி போல... அத்தமக உன்ன நினைச்சி போல... இந்த பூவழகியும் இனி எல்லா மேடைகளிலும் வலம் வருவாள்.

பொறு புள்ள பூவழகியில் வசீகரிக்கும் வரிகளாக 'திருநா பேரழகே உனக்காக நான் பொறந்தேன்...', 'வா புள்ள ஒண்ணால பூங்காத்தா மாறணும்...', 'உன்னோடு நான் வாழ பல ஆயுள் தேடுவேன்...', 'மாறாத காதலும் மனசோரம் பாடுது...', 'பருவத்து நேசங்கள முதுமைக்கும் சேர்த்து வைப்போம்...',உருவம் சிதஞ்ச பின்னும் உள்ளத்தால சேர்ந்திருப்போம்...', 'நிலவொன்னு ராத்திரியில் நித்தமும் தேடுதைய்யா...' இப்படி நிறைய வரிகளைக் சொல்லிக் கொண்டே போகலாம்.

(பொறுபுள்ள பூவழகி...)

முத்துச்சிற்பியின் குரல் வளம் குறித்துச் சொல்லத் தேவையில்லை. மைக்கே இல்லாமல் பல மைல் தூரம் கேக்கும். சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷாவிற்கு என்ன ஒரு அருமையான குரல் வளம். அப்படி நம்மையும் பாடலோடு இழுத்துச் செல்கிறது.

மிகவும் அருமையானதொரு ஆல்பம். முதல் முயற்சியிலேயே வெற்றிக்கனியை எட்டிப்பிடித்திருக்கும் முத்துச்சிற்பியை வாழ்த்துவோம்.

-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சினிமா விமர்சனம்: ஒரு குட்டநாடன் பிளாக் (மலையாளம்)

Related image

கிருஷ்ணபுரம்...

கேரளத்தில் இருக்கும் அழகிய கிராமம். அந்தக் கிராமத்து நிகழ்வுகளை 'குட்டநாடன்' அப்படிங்கிற வலைப்பூவில் எழுதி வருகிறார் அவ்வூரைச் சேர்ந்த சித்து. இந்த வலைப்பூ ஊரின் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி பேசுகிறது என்றாலும் குறிப்பாக ஹரியின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றியே வருகிறது.

ஹரியேட்டன் (மம்முட்டி) என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் ஹரி மனைவியை இழந்தவன்... பல வருடங்களாக வெளிநாட்டில் இருந்து விட்டு ஊருக்கு வருகிறான். அவனின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும் இளவட்டம் ஆராவார வரவேற்பைக் கொடுக்கிறது. அதன் பின் அவனைவிட வயது குறைந்த இளவட்டங்களுடன் சேர்ந்து கொண்டு டீக்கடை, குடி என ஆட்டம் போட்டுக் கொண்டு திரிகிறான். இடையிடையே அந்தப் பசங்களின் காதலையும் பெண்ணின் வீட்டாருக்கு வித்தியாசமான முறையில் தெரிய வைத்து சேர்த்து வைக்கிறான். 

ஹரியின் அப்பாவான நெடுமுடி வேணு சாதாரண கிராமத்து மனிதராக வாழ்ந்திருக்கிறார். பையன் சம்பாதித்த பணத்தை இரட்டிப்பாக்கும் விதமாக நகையைப் பிணையமாகப் பெற்று வட்டிக்கு கொடுத்து வருகிறார்.

ஊருக்குள்ள நாலு பேரு தலையில தூக்கி வச்சி ஆடுன்னான்னா மூணு பேருக்கு அது பிடிக்காது... இது கேரளத்தில் மட்டுமல்ல... தமிழகத்திலும்... உலகெங்கிலும்தானே... அப்படித்தான் பஞ்சாயத்துத் தலைவர் லாலு அலெக்ஸ்க்கும், அவர் சார்ந்த மனிதர்களுக்கும் வேண்டாதவரானாகிறான் ஹரி. அவனைப் பலி வாங்கச் சந்தர்ப்பம் கிட்டும் எனக் காத்திருக்கிறார்கள் எதிரிகள்.

ஹரி இல்லாதவருக்கு கொடுத்து உதவ நினைக்கும் குணம் கொண்டவன் என்பதால் அவனின் உதவியால் வாழ்கிறது அவனுக்கு மிகவும் விருப்பமான மாஸ்டரின் குடும்பமும் தன் மனைவியின் அனியத்தி (தங்கை) குடும்பமும். இந்த உதவிகளைக் கூட பெண்களுக்காகவே அவன் செய்கிறான் என்பதுதான் உள்ளூர் பேச்சாக இருக்கிறது... காரணம் உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் மாஸ்டருக்கு இரண்டு பெண்கள், அனியத்தியோ கைம்பெண்.

இவனைப் பற்றியும் நாட்டார் அவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பற்றியும் அறிந்த சப் இன்ஸ்பெக்டரான நீனா (ஷாம்னா காசிம்) வலிய வந்து பேசி நட்பாகிறாள். அதே நேரத்தில் ஹரியின் பள்ளிக்கால தோழி ஸ்ரீஜெயா (ராய் லெட்சுமி) கணவரைப் பிரிந்து ஊருக்கு வருகிறாள். அவளைப் பார்த்ததும் ஹரியுடன் சுற்றும் இளவட்டங்கள் ஏத்திவிட, சின்ன வயதில் காதல் கடிதம் கொடுத்து ஏற்றுக் கொள்ளப்படாத காதலைப் புதுப்பித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான். அதுவும் கைகூடி வருகிறது. நீனாவின் ஆசை கைவிட்டுப் போகிறது.

ஹரிக்கு பெண்களுடன் தொடர்பு உண்டு என்பதான அரசல்புரசலான பேச்சுக்களை உண்மையாக்கும் விதமாக அனியத்தி வீட்டிலிருந்து இரவில் வருதல், மாஸ்டர் வீட்டில் மழை நாளில் தங்குதல் போன்ற நிகழ்வுகள் அமைகின்றன. இதனால் அவனின் எதிரிகள் மட்டுமின்றி அவனுடன் சுற்றும் இளவட்டங்களும்... ஏன் சப் இன்ஸ்பெக்டர் நீனாவும் கூட அவனைப் பெண் பித்தன் என்ற வட்டத்துக்குள் நிறுத்துகிறார்கள்.

கதையின் திருப்பமாக மாஸ்டரின் மூத்த மகள் ஹேமா (அனு சித்தாரா) தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்படும் போது மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூற, காரணம் யார் என்பது கேள்விக்குறியாய்... 

ஹரியாக இருந்தால் ஒரு வழி பண்ணி விடலாம் என்பதால் கர்ப்பத்துக்கு யார் காரணம் என அறியத் துடிக்கிறது கிருஷ்ணபுரம் பஞ்சாயத்து. 

அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து ஹரிதான் என்று சொல்லி விடுகிறாள் ஹேமா... ஹரியை தன் மாப்பிள்ளை ஆக்கத் துடித்துக் கொண்டிருப்பவள்தான் ஹேமாவின் அம்மா என்பதை கர்ப்பத்துக்கு முன்னேயான சில காட்சிகள் சொல்லி விடுகின்றன.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் எதிரிகளுக்கும் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் கிடைத்துவிட, இதுதான் சமயம் என ஹேமாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பிக்கிறார்கள். ஹரியுடன் சுற்றிய இளவட்டங்களும், அப்பாவும் கூட அதையே விரும்புகிறார்கள்.

தான் குற்றமற்றவன் என்று சொல்லி, ஹேமாவுடன் பேச முயற்சிக்கும் ஹரியைத் தடுத்து விடுவதுடன் ஹேமாவையும் ஊர் கடத்தி விடுகிறார் மாஸ்டரின் மாஸ்டர் பிளான் மனைவி.  

இதற்கிடையே நான் உன்னையறிவேன்... சந்தேகிக்கமாட்டேன் என்று சொல்லும் ஸ்ரீஜெயாவைத் திருமணம் செய்து கொள்ளலாமென  பதிவாளர் அலுவலகம் வரச்சொல்லி விட்டு அப்பாவுடன் அங்கு காத்திருக்கிறான் ஹரி. ஊரே அந்த திருமணத்தை எதிர்த்து நிற்க, நீனா காவலாக நிற்கிறாள். வருவாள் என எதிர்பார்த்த ஸ்ரீஜெயாவோ அடமானம் பிடித்து ஹரி வீட்டில் வைத்திருந்த நகைகளை லவட்டிக் கொண்டு பறந்து போய் விடுகிறாள்... ஒரு கடிதத்தை ஹரிக்காக பதிவாளர் அலுவலகம் அனுப்பிவிட்டு..

ஒரு பெண்ணைக் கெடுத்தவன் என்ற அவமானத்துடன் ஊராரின் நகைகளையும் இழந்தவனாகி ஊர் முன் இரட்டைக் குற்றவாளியாகிறான் ஹரி. 

அவன் மீது நம்பிக்கை கொண்ட நீனா மட்டும் அவ்வப்போது அவனுக்காக பேசி, அவனை ஏமாற்றியவர்களைக் கண்டுபிடிக்க கடைசி வரை களத்தில் நிற்கிறாள்.

கர்ப்பத்துக்கு ஹரிதான் காரணம் என்று சொன்ன ஹேமாவைச் சந்தித்தானா..?

நகைகளுடன் ஓடிய ஸ்ரீஜெயாவை கண்டுபிடித்து நகைகளை மீட்டானா..?

சப் இன்ஸ்பெக்டர் நீனாவுடன் காதல் ஏற்பட்டதா..?

ஊராரின் நகைகளைத் திருப்பிக் கொடுத்தானா..?

பஞ்சாயத்துத் தலைவர் ஹரியைப் பலி வாங்கினாரா..?

இப்படி நிறையக் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும் போது படம் முடிவுக்கு வரத்தானே செய்யும்... அப்படித்தான் வந்தது 2.15 மணி நேரங்களுக்கு மேல் மென்று விழுங்கியபடி...

படத்தின் இடையிடையே சௌதியில் ஒரே அறையில் தங்கி இருக்கும் கிருஷ்ணபுரத்து சன்னி வெய்னும் அனன்யாவும் இந்த வலைப்பூவை வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் எதற்காக இந்தக் கதையில் என்று ஆரம்பத்தில் தோன்றிய கேள்விக்கு இறுதிவரை பதிலில்லை... குட்டநாடன் வலைப்பூவை வெளிநாட்டிலும் வாசிக்கிறார்கள் என்று காட்டுவதற்காகவோ... அதற்கு எதற்கு சன்னியும் அனன்யாவும்... புரியலை.. கேரளத்தில் ஒருவர் கூட வலைப்பூவை வாசிப்பதாக காட்டப்படவில்லை.

இடைவேளை வரைக்கும் 'வீடு' படத்தை விட ரொம்ப மெதுவாக நகரும் திரைக்கதை... தொடர்ந்து பார்க்க வேண்டுமா என்று தோன்ற வைக்கலாம்...  வைக்கும்... வைத்தது.

இடைவேளைக்குப் பின்னர் கதையில் சின்னச் சின்னச் முடிச்சுக்கள் விழ ஆரம்பிக்க, வேகமெடுக்கும் திரைக்கதை இறுதிவரை அதே வேகத்தில் பயணிப்பது ஆறுதல்.

பாடல்கள் அருமை. இசை ஸ்ரீநாத். பிரதீப் நாயரின் ஒளிப்பதிவு அருமை.

ராய் லெட்சுமியை பிக்பாஸ் யாஷிகாவை சேலையால் அழகாக்கியது போல் சேலையில் அழகாக காட்டியிருக்கிறார்கள். சமீபகால மம்முட்டி படங்களில் அவருக்கு சரியான ஜோடி ராய் லெட்சுமிதான் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார்.

பல வெற்றிப் படங்களின் திரைக்கதை ஆசிரியரான சேது, தனது முதல் இயக்கத்தில் திரைக்கதையில் குறிப்பாக முதல் பகுதியில் ரொம்பவே சறுக்கிப் பார்ப்பவரை சலிப்படைய வைத்திருப்பது ஏனோ..?

அடுத்த படத்தில் இச்சறுக்கலைச் சரி செய்வார் என்று நம்பலாம்.

மம்முட்டி ரசிகர்கள் பலமுறை பார்க்கலாம். மற்றவர்கள் முதல்பாதி பார்க்கும் பொறுமை இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.

இந்தப் பாடலைக் கேளுங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்..


-'பரிவை' சே.குமார்.

சனி, 22 செப்டம்பர், 2018

நாட்குறிப்பு : அவளும் கவிதையும் கூட அரியரும்

கல் மின்னிதழ் 'நாட்குறிப்பு' போட்டிக்கு எழுதியது. எழுதிய போதே சத்யாவிடம் இது நாட்குறிப்பு மாதிரியில்ல ஜி... சிறுகதை மாதிரி இருக்குன்னு சொன்னாலும் சும்மா அனுப்புங்க என்றார். அது தேர்வாகாது என்பது தெரியும்... ஏன்னா முன்னப் பின்ன செத்தாத்தானே சுடுகாடு தெரியும்ன்னு ஊரில் சொல்வது போல் முன்னப் பின்ன டைரி எழுதியிருந்தா எப்படி எழுதுறதுன்னு தெரியும்... நாம அதெல்லாம் எழுதுவதே இல்லை.... பின்ன எப்படி...? சரி விடுங்க வெற்றி பெற்றவர்களை வாழ்த்தும் அதே நேரத்தில் அந்த நாட்குறிப்பில் நிறைய மாறுதல் செய்து சிறுகதையாகவும் இல்லாமல் நாட்குறிப்பாகவும் இல்லமால் கதைக்குறிப்பாக இங்கு பகிர்ந்தாச்சு. இனி படிச்சி திட்டவோ... கொட்டவோ வேண்டியது உங்க கடமை...


வம்பர்-25, 1996

கல்லூரி விடுமுறை என்றாலும் வீட்டிலும் இருந்த நாள் எப்போதும் இல்லை. இன்றைய நாள் காலையும் அப்படித்தான் கிளம்பினேன் எனது அட்லஸ் சைக்கிளில். வயல்ல பூச்சி மருந்து அடிக்கணும்... வெயில்ல அடிச்சாத்தான் பயிருல சாரும் என்ற அப்பாவின் கத்தலைக் காதில் வாங்காமல்.

நண்பர்கள் சங்கமிக்கும் ஓடியன் சலூன் வாசலில் சைக்கிளை நிறுத்தி பேருந்து நிலையத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது நண்பர்கள் நவநீ, திருநா, ஆதி, அண்ணாத்துரை, சேவியர் என ஒவ்வொருவராய் பேருந்தில் வந்து இறங்கிச் சங்கமித்தார்கள், ராம்கி என்னைப் போல் அவனது புதிய ஹெர்குலிஸ் சைக்கிளில் வந்து சேர்ந்தான்.

“மாப்ள இன்னைக்கு ரிசல்ட் வருதுல்ல...” என்றான் நவநீ.

“ஆமாடா... இதுவரைக்கும் அரியர்ஸ் இல்லை... இது பிப்த் செமஸ்டர்... இதுல மேஜர் பேப்பர் வேற... அரியர் விழுந்தா சிக்ஸ்த்ல எடுத்துட முடியுமான்னு பயமாயிருக்குடா” என்றான் ராம்கி.

“ரிசல்ட் மத்தியானந்தான் வரும்... படத்துக்குப் பொயிட்டு மத்தியானம் காலேஜ்க்குப் போகலாம்” என்றான் ஆதி.

“படத்துக்கா... நா வரல பங்காளி... எனக்கு வேல இருக்கு.... வரும் போது அப்பா வேற மருந்தடிக்கணும்ன்னு சொன்னார்” வேகமாக மறுத்தேன்.

“மாப்ள... நீ மருந்தடிச்சிட்டாலும் இன்னேரம் கருப்பையா உன்னையத் திட்டமுடியாம அம்மாவை நாலு வாங்கு வாங்கிட்டு மருந்தடிக்கிற மிஷினைத் தூக்கிக்கிட்டு கிளம்பியிருப்பாரு... ஏலே நீ எங்க போவேன்னு எனக்குத் தெரியும்... சுப்ரமணி வாத்தியார் வீடு போவே... அவரு இந்நேரம் காலேஜ்ல இருப்பாரு.... அங்க உன்னக்கென்ன வேலைன்னு எங்களுக்குத் தெரியும்... இன்னைக்கி நீ எங்க கூட வர்றே... மவனே இல்லேன்னா காலேஜ் திறந்ததும் உன்னோட மேட்டரை ஓபன் பண்ணி நாறடிச்சிருவோம்...”  என்றான் நவநீ.

“வரலைன்னா விடு மாப்ள... சுப்ரமணி சாருதானே காலேஜ்க்குப் போயிருப்பாரு... அம்மா  வீட்டுலதானே இருப்பாங்க... ரெண்டு மூணு நாளா அவங்களைப் பாக்கலை... அதான் பாத்துட்டு அப்படியே காலேஜ் வந்துடுறேன்...”

“இங்கேருடி... நீ எந்த அம்மாவைப் பாக்கப் போவேன்னு தெரியும்... சுப்ரமணி சாரு வீட்டு அம்மாவை சாயந்தரம் போய் பாத்துக்கலாம்... இப்ப நாம சினிமாப் போறோம்... காலேஜ் அப்பத்தான் வகுப்பைக் கட் அடிக்க மாட்டேன்னு நீயும் ராம்கியும் முறுக்குவீங்க... இப்ப என்ன... லீவுதானே... எங்க கூட படம் பாக்க வந்தா என்ன...” சிகரெட்டைப் பற்ற வைத்தபடி பேசினான் சேவியர்.

“அட ஏன் பங்காளி நீ வேற... அப்படியெல்லாம் இல்ல... சாயந்தரம் போ முடியாது... வீட்டுக்கு லேட்டாப் போனா அப்பா கத்துவாரு... சும்மாவே கோவத்துல இருப்பாரு... அதான் இப்பவே பொயிட்டு வரலாமுன்னு...” இழுத்து மழுப்பினேன்.

“சரி... பங்காளி நீங்க போங்க... விடுங்கடா... அவராவது வாழ்ந்துட்டுப் போறாரு...” என்றான் திருநா.

“இது நல்லாயிருக்கே... எப்பப் பார்த்தாலும் நம்மளவிட இவனுக்கு சுப்ரமணி சாரு வீடுதான் பெரிசாப் போச்சு...” குதித்தான் அண்ணாத்துரை.

“அவரு வீட்டுலதான் ரெண்டு பேரும் சந்திக்கிறது மாப்ள... அப்பத்தானே யாருக்கும் சந்தேகம் வராது...’ நக்கலாய்ச் சொன்னான் ராம்கி.

“நீ இன்னைக்கு எங்க கூட வர்றே... படம் பாக்குறோம்... தங்கச்சியை நாளைக்குப் பார்த்துக்கலாம்...” தோளில் கை போட்டு இறுக்கினான் நவநீ.

இதற்கு மேல் இவர்களுடன் சண்டை போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்து மனசே இல்லாமல் அவர்களுடன் சரஸ்வதி தியேட்டருக்குள் நுழைந்தேன்.

கல்லூரி வாழ்வில் முதல் இரண்டு ஆண்டை விட மூன்றாம் ஆண்டு வந்த போது நிறைய சினிமா பார்க்கிறோம் வீட்டுக்குத் தெரியாமல். பெரும்பாலும் மதிய வகுப்புக்கள் இருப்பதில்லை... எங்களுக்கான இருக்கைகள் லெட்சுமி, அருணா, சரஸ்வதி என மூன்று தியேட்டர்கள் காத்திருக்க ஆரம்பித்தன. சில நேரங்களில் சித்தப்பா, அண்ணன் என சிலரைப் பார்த்து நாற்காலிக்குள் பதுங்கியதும் உண்டு என்றாலும் ஊருக்குள் நம்மைக் கடந்து போகும் போது ‘என்ன படம் நல்லாயிருந்துச்சா’ என்று கேட்கவும் செய்வார்கள்.

டிக்கெட் வாங்கி உள்ளே சென்று அமர, அதிக கூட்டமில்லை. எங்கள் வகுப்புத் தோழி மல்லிகா அம்மாவுடன் வந்திருந்தாள். எல்லாரும் சொல்லி வச்சி வருவீங்களோ... இன்னைக்கு ரிசல்ட் மத்தியானம் காலேஜ் வருவீங்கதானே என்றபடி அம்மாவுடன் கடந்து சென்றாள்.

திரையில் ரொம்ப நாளா பார்க்கணும்ன்னு நினைத்த ரத்தக் கண்ணீர் ஓட்த் தொடங்கியது.

இடைவேளையில் ராம்கி இரண்டு ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டு மல்லிகா இருக்கைக்கு ஓடினான். அவர்கள் இருவரும் காதலிப்பது போல் தோன்றினாலும் இதுவரை சொல்லிக் கொள்ளவில்லை. ராம்கியின் நோட்டில் மல்லிகா என்ற பெயர் பல இடங்களில் ஆக்கிரமித்திருந்தது. ஒருமுறை மல்லிகாவின் நோட்டை வாங்கியபோது அதில் ‘ராமல்லி’ என்று பல இடங்களில் எழுதியிருந்தாள்.

எம்.ஆர். ராதா அள்ளி அள்ளி கொடுத்தேனடி காந்தா என கதறிக் கொண்டிருக்க, சுப்ரமணி சார் வீட்டுக்கு வந்து காத்திருந்து திரும்பிச் சென்றிருப்பாளே என்ற நினைப்பு என் மனசுக்குள் கதறிக் கொண்டிருந்தது.

மதியம் கல்லூரிக்குச் செல்லும் போதே எதிர்பட்ட நண்பன் ரிசல்ட் வந்திருச்சு... கேவிஎஸ் மட்டும்தான் இருக்காரு எனச் சொல்லிச் சென்றான்.

நாம இதுவரை வகுப்பில் முதல் மாணவன் என்ற மிதப்பும் எல்லாத்திலும் பாஸாகி இருப்போம் என்ற செருக்கும் ஒருங்கே எனக்குள். மற்றவர்கள் பயந்து கொண்டிருப்பதைப் பார்த்து கேலி செய்தேன்.

கேவிஎஸ் சாரைப் பார்க்க தமிழ், ஆங்கிலம் மற்றும் எங்கள் துறை ஆசிரியர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்த போது எதிர்ப்பட்ட சுப்ரமணி சார், ‘என்னங்கய்யா ரிசல்ட் பாக்கவா... பாத்துட்டு வாங்க... உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி வச்சிருக்கேன்...’ என்றபடி அலுவலகம் பக்கம் சென்றார்.

‘என்ன சந்தோஷமான செய்தி...?’ என்ற கேள்வி யோசனையில் முளை விட, அதே சிந்தனை மெல்ல வளர ஆரம்பித்தது.

“என்ன மாப்ள... உனக்கும் தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கப் போறாரா..?”  காதுகடித்தான் நவநீ.

“ஆளைப்பாரு... மூதேவி... ரிசல்ட் என்னன்னு முதல்ல பார்ப்போம்...” என அவனை முதுகில் செல்லமாய் அடித்தேன்.

"வாங்க... எங்கடா உங்க குரூப்பைக் காணோமேன்னு பார்த்தேன்" என்ற கேவிஎஸ் ‘ஆமா என்னாச்சு ஏன் இப்படி எனக் கேட்டார்’ என்னைப் பார்த்து.

எனக்கு என்ன என்று விளங்காமல் முழித்தேன். மார்க்கைச் சொல்லச் சொல்ல குறித்துக் கொண்டே வந்தேன். மேஜர் பேப்பரில் ஒன்றில் பெயிலாகியிருந்தேன். எனக்கு ஒன்றுமே புரியலை... இது எப்படி ஆச்சு... ஆங்கிலத்தில் எல்லாம் அரியர் விழலை.. எப்படி... அதுவும் ஏ.வி.சார் சப்ஜெக்ட்டில்.

"ஏன் ஒழுங்கா எழுதலையா..?" என்றவரிடம் "நல்லாத்தான் சார் எழுதினேன்"என்றேன் கண்களில் தழும்பும் நீருடன்.

"சரி... விடுங்க... ரீவால்யூவேசன் போடுவோம்... என்ன இந்த முறை உங்க இடத்தை மல்லிகா பிடிச்சாச்சு... சிக்ஸ்த்ல மீண்டும் முதலிடம் பிடித்தால் டிபார்ட்மெண்ட் சர்டிபிகேட்டும் பணமும் கிடைக்கும்... சரி விடுங்க... எது நடக்கணுமோ அது நடக்கத்தானே செய்யும்" என்றார் ஆறுதலாய்.

மற்றவர்களுக்கு மார்க் சொல்லி முடித்தவுடன் "நாளைக்கு வாங்க... ரீவால்யூவேசனுக்கு பணம் கட்டிருவோம்" என்றார்.

அப்போது அங்கு வந்த சுப்ரமணி சார், "தம்பி எப்படி மார்க் வாங்கியிருக்காக..." என்றார்.

"ஒரு பேப்பர் போச்சு... அதான் எப்படின்னு எனக்கு குழப்பமா இருக்கு... படிப்பு விஷயத்துல தப்புச் சொல்ல முடியாது... ஏதோ தவறு நடந்திருக்கு... அதான் நாளைக்கு ரீவால்யூவேசன் போடுவோம்ன்னு சொல்லியிருக்கேன்" என்றார்.

"ம்... தம்பிக்கு மார்க் போச்சுன்னு கவலையிருக்கும்... அதே சமயம் அவர் எழுதின கவிதை தாமரையில வந்திருக்கு...  சந்தோஷமான செய்தியில்லையா..." என புத்தகத்தை கேவிஎஸ் சாரிடம் கொடுத்தார் சுப்ரமணி சார்.

"அது சரி... கவிதை வந்திருக்கா... எங்களுக்கு ரொம்ப நாளைக்கு இவங்க ஒரு நல்ல செட்... படிப்பு... இலக்கியம்... விளையாட்டுன்னு எல்லாத்துலயும்... இவரும் இவரோட மற்ற துறை நண்பர்களும் நடத்துற கையெழுத்துப் பிரதி அருமையில்லீங்களா..." என்ற கேவிஎஸ் சார் வாங்கி வாசித்து விட்டு "அருமை... அருமை..." என்றபடி சுப்ரமணி சாரிடம் கொடுக்க, அவரோ  என்னிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு "சாயந்தரம் வீட்டுக்கு வாங்க... நேத்தே அம்மா உங்களக் காணுமின்னு கேட்டுக்கிட்டு இருந்தாக" என்றார்.

வெளியில் வந்ததும் நண்பர்கள் பாராட்டியபடி, "உனக்கென்ன அரியர் விழுந்தா வாத்தியாரே ரீவால்யூவேசன் போடுறேன்னு சொல்றார். எங்க மார்க்கை சொல்லும் போது எதாவது சொன்னாரா பாத்தியா..?’ என்று நவநீ சொல்ல, ‘எப்பவுமே பங்காளி மேல கேவிஎஸ்க்கு அதிக பாசம்... எனக்கும்தான் அரியர் விழுந்திருக்கு... பணம் கட்டுறேன்னு சொல்ல வேண்டாம்... ரீவால்யூவேசன் போடுங்கன்னு கூட சொல்லலை..." என்றான் திருநா.

"கேவிஎஸ்க்கு மட்டுமா இன்னொரு எஸ்க்கும் பாசம்தானே மாப்ள மேல" சிரித்தான் நவநீ.

"அட ஏண்டா... இப்ப அரியர் விழுந்திருக்கேன்னு எனக்கு வருத்தமா இருக்கு... நீங்க வேற..."

"அதெல்லாம் பாஸ் பண்ணிடலாம்... நீ வேணா பாரேன் ரீவால்யூவேசன்லயே பாஸ் பண்ணிருவா... விடு... உன்னோட கவிதை புத்தகத்துல வந்திருக்கு... அதுவும் தாமரையில... பின்ன என்ன... மகிழ்ச்சியா இரு பங்காளி" என்றான் ஆதி.

நண்பர்களுடன் சாப்பிட்டு அரட்டை அடித்து விட்டு சுப்ரமணி சார் வீடு சென்ற போது எனக்கு முன்னே வந்திருந்த அவள் முறைத்தாள்.

சாரி சொல்லி சமாதானப்படுத்தி கவிதை வந்ததைச் சொன்னபோது அந்த கண்ணில் அவ்வளவு மகிழ்ச்சி... கவிதை வந்ததற்கு என்னைவிட அவளே அதிகம் சந்தோஷப்பட்டாள்... குதித்தாள்... குதூகலித்தாள்... கை பிடித்துக் குலுக்கினாள்.

மெல்லச் சொன்னேன் அரியர் விவரத்தை...

“எப்படி இப்படி...? நல்லாத்தானே எழுதியிருப்பே... சரி விடு... ரீவால்யூவேசன்ல பாத்துக்கலாம்” என ஆறுதல் சொன்னாள்.

நான் ஒன்றும் பேசாமல் இருக்க, என்னருகே நெருக்கமாய் அமர்ந்து ‘சும்மா மனசைப் போட்டு அலட்டிக்காதே... விடு... உன்னோட கவிதையை அச்சில் பாக்கயிலே எம்புட்டு சந்தோஷம் தெரியுமா...?’. உண்மையான மகிழ்வோடு சொன்னவள் எதிர்பாராத தருணத்தில் என் கன்னத்தில் முத்தமிட்டாள். அவளிடமிருந்து கிடைத்த முதல் முத்தம்.

வாசலில் சுப்ரமணி சார் சைக்கிளை நிறுத்தும் சப்தம் கேட்டு சற்றே தள்ளி அமர்ந்தோம்.

அவருடனும் அங்கு வந்த வேறு நண்பர்களுடனும்ம் பேசிக் கொண்டிருந்து விட்டு வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் போது இரவு எட்டு மணி. அப்பா எடுத்துவிடுவது போல் பார்த்தார். அம்மாவோ ஊரைச் சுத்திட்டு வா... வீடு தங்காதே... என்று கத்தினார்.

‘என்ன படம் பார்த்தே..?’ மெல்லக் கேட்டபடி கடந்தான் தம்பி.

அவனுக்குப் பதில் சொல்லாது அரிக்கேன் விளக்கொளியில் கவிதையை வாசிக்க ஆரம்பித்தேன். கவிதை முழுவதும் அவளே தெரிந்தாள்.

இதோ அவள் குறித்தும் இன்றைய நாள் குறித்தும் டைரியில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்றைய தினம் கவிதை வந்ததற்கு மகிழ்வதா...? அரியர்ஸ் விழுந்ததற்கு வருந்துவதா..?  கேள்விக்குறியோடு முடித்து டைரியை மூடுகிறேன். வெளியில் மழை பெய்வதற்கான மின்னலும் இடியும் பலமாய்.

முத்த ஈரம் காய்ந்த கன்னத்தைத் தடவிக் கொண்டேன். மழை இரவு மகிழ்வாய்...

-'பரிவை' சே.குமார்.