மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 25 அக்டோபர், 2012

மனிதன் : கருப்புசாமி




அவரை எனக்கு இதற்கு முன் தெரியாது. எனது உறவும் இல்லை. தினசரி எதிரெதிரே சந்திப்பவர்களை தொடர்ந்து சில நாட்கள் சந்தித்தால் முதலில் ஒரு சிறு புன்னகை... அப்புறம் மலர்ந்த சிரிப்பு... பிறகு ஒரு ஹலோ... பின்னாளில் 'எப்படியிருக்கீங்க' என ஆரம்பித்து சில நாட்கள் பார்க்காமல் போனால் எந்த பாதிப்பும் இன்றி மீண்டும் புதிதாக பார்ப்பவரிடம் ஒரு புன்னகையில் ஆரம்பிக்கும் தண்டவாளப் பயணமாப் போகும் வாழ்க்கையில் இவரை புகுத்திப் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு பந்தம்... உறவாகிப் போன நட்பு... பாசம் என்னும் வலையை பாசாங்கு காட்டி விரிக்கும் உறவுகள் எத்தனையோ இருக்க என்னில் எதுவும் எதிர் பார்க்காமல எனக்குள் புகுந்த நட்பு இது.
நான் எங்கள் கம்பெனியின் ஒரு வருட பணிக்காக அந்த அரசு அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்து மூன்று  நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் அவரைப் பார்த்தேன். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தின் அருகில் இருக்கும் மீட்டர் வழங்கும் பிரிவில் ஆபீஸ் பாயாக இருக்கிறார். என்னைப் போல் இவரும் வேறொரு கம்பெனியில் இருந்து வந்து வேலை பார்ப்பவர்தான். அவரின் கம்பெனி கொடுக்கும் சொற்ப சம்பளம் கண்டிப்பாக போதாது என்பது எல்லாருக்கும் தெரியும். ஊரில் சித்தாளாக போகும் ஒரு ஆள் ஒரு நாள் 250,300 ரூபாய் வாங்குகிறார்கள் ஆனால் இவர் வேலை பார்க்கும் கம்பெனி கொடுக்கும் ஒரு நாள் கூலி அதைவிட ரொம்ப ரொம்ப குறைவு. இவரைப் போல் நிறைய நண்பர்கள் இதுபோல் கஷ்டப்படத்தான் செய்கிறார்கள். ஊரில் பையன் துபாயில் இருக்கிறான் என்ற பெருமை மட்டும்தான் மிச்சம். இவர்களின் கண்ணீர் யாரும் அறிவதில்லை. இங்கு காலை 6 மணிக்கு வந்து மதியம் 3 மணி வரை வேலை. அதன் பிறகு இரண்டு மூன்று வீடுகளில் பகுதி நேர வேலை என எல்லாம் முடித்து அவர் தங்கியிருக்கும் இடம் செல்ல இரவு 10 மணிக்கு மேலாகும். அப்புறம்தான் துணி துவைக்கிறது, சாப்பாடு எல்லாம். இவர் மட்டுமல்ல அந்தக் கம்பெனியில் எல்லாருடைய வாழ்க்கையும் இப்படித்தான். 
வழக்கம் போல் நான் நடந்து வந்து அலுவலக கேட்டருகே வரும் போது தனது காரை நிறுத்திவிட்டு என்னுடன் பேசியபடி வந்த கேரளாவைச் சேர்ந்த அண்ணன், இவர் எதிர்படவும் என்ன சாமி... என்று மலையாளத்தில் நலம் விசாரித்தார். இவரும் மலையாளத்தில் பேசிவிட்டு எனக்கும் கை கொடுத்துச் சென்று விட்டார். மதியம் வேலை முடிந்து வெளியே வரும் போது என்னைப் பார்த்து சிநேகமாக சிரித்தார். பின்னர் 'சேட்டா நாட்டுல எவட?' அப்படின்னு கேட்டார், நான் காரைக்குடி அறியுமான்னு கேட்டேன். நீங்க காரைக்குடியான்னு தமிழுக்கு தாவினார். நான் ஆமா என்றதும் சரியாப் போச்சு போங்க நான் மேலூருக்குப் பக்கம் என்று கைகளைப் பிடித்துக் கொண்டார். காலையில அவரு கூட வந்ததால நீங்க மலையாளியோன்னு நினைச்சேன் என்று சிநேகமாக சிரித்தார். நானும் உங்களை அப்படித்தான் நினைச்சேன் என்றேன். பிறகு சில விசாரிப்புக்கள்... அவருக்கு வண்டி வர சென்று விட்டார்.
மறுநாள் நான் வரும் போது எனக்காக காத்திருந்து கூப்பிட்டுப் பேசினார். பின்பு ஒரு சகோதரன் போல குடும்பம் விசாரிப்புக்கள்... அவரின் குடும்பக் கதைகள் எல்லாம் சொன்னார். சரி ஒரு பத்து மணி போல வாங்க என்றார். பத்து மணிக்குப் போனால் ரெண்டு பிரட் சாண்ட்விச் ரெடியாக வச்சிருந்தார். போனதும் சாப்பிடச் சொல்லி ஒரு அருமையான காபி போட்டுக் கொடுத்தார். சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கதைகள் பேசிவிட்டு கிளம்ப தினமும் வரணும் நான் சாப்பிட எதாவது ரெடி பண்ணி வைக்கிறேன் என்றார். அட போங்கண்ணே நீங்க வேற... எவனாவது பாத்துட்டு உங்காளுக்கிட்ட சொன்ன அம்புட்டுத்தான். தேவையில்லாத வேலை எதுக்கு நேரம் இருக்கும் போது வந்து பாத்துட்டுப் போறேன்.. ஆனா சாப்பிடன்னு வரமாட்டேன் என்றதும் அட சும்மா வாங்க என்றார். நான் அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் காபி, டீ, சாண்ட்விச் என எதாவது கொடுக்காமல் இருக்கமாட்டார்.
என் மனைவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது நான் அவரைப் பார்க்கவில்லை என்றாலும் போன் பண்ணி எப்படி இருக்காங்க... பேசினீங்களா என்று விசாரிக்கத் தவறமாட்டார். அவருக்கு மகன் பிறந்த போது எனக்கு போன் பண்ணி உடனே வாங்க... எனக்கு பையன் பொறந்திருக்கான் அப்படின்னு சந்தோஷமாக சொன்னார்.  முதலில் இரண்டு பெண் குழந்தைகள் மூன்றாவதாய் பையன் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு பையனுக்குப் பேர் கார்த்தின்னு வச்சாச்சு என்றார். என்ன்ண்ணே நியூமரலாஜி பாத்து வச்சிக்களா என்றதற்கு அட போங்க நீங்க வேற பிறப்புச் சான்றிதழ்ல கார்த்தின்னு கொடுத்துட்டு வேற பேர வச்சோமின்னா நாளைக்கு அவனுக்கு ரெண்டு பேரால பிரச்சினை வரும். அதுக்கு எங்க அண்ணனே சாட்சி அப்படின்னு அந்தக் கதையை வெள்ளந்தியாக சொல்ல ஆரம்பித்தார். பின்பு ஊர் நிலவரங்கள் எல்லாம் என்னிடம் பேசினார்.
இப்படியாக எனக்குள் அண்ணனாக இறங்கியவர்தான் இந்த கருப்புசாமி, வீடு கட்டுவது குறித்தும் அதில் இருக்கும் சின்ன பிரச்சினைகள் குறித்தும் என்னிடம் கேட்கத் தவறுவதில்லை. என்ன பிரச்சினை வந்தாலும் வீடு வேலை நல்லா முடியும் கவலைப் படாதீங்க அப்படின்னு தைரியம் சொல்லி நிறைய பேசுவார். எனக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருக்கும் முசிறியால் பிரச்சினை வந்தபோது அவனை விட்டுதள்ளுங்க... அவனெல்லாம் ஒரு மனுசன்னு நம்ம போக்குல போங்க என்று ஆறுதல் சொல்லி மனசை லேசாக்கினார். 
இன்று காலை அவரை சந்திக்கப் போனபோது எப்போதும் உற்சாகமாக வரவேற்ப்பவர் லேசாக சிரித்தார். என்னண்ணே வருத்தமா இருக்காப்ல இருக்கு என்ன எதுவும் பிரச்சினையா என்றேன். இல்ல ஒரு பெங்காளி வந்து ஜெராக்ஸ் கேட்டான். சரி பாவமுன்னு எடுத்துக் கொடுத்துட்டேன். அப்பன்னு பார்த்து இந்த களவாணிப் பய வந்துட்டான். (அவரு இருக்கும் அலுவலகத்தின் பெரிய ஆள் - சரியான முசுடு) யாருக்கு எடுக்குறேன்னு கேட்டான். நான் இவரு கேட்டாரு அதான்ன்னு சொன்னதும் வேணுமின்ன வேற எங்கயாவது போயி எடுக்கச் சொல்லு. இங்க எதுக்கு எடுத்துக் கொடுக்கிறேன்னு கத்திட்டான். சை ஏண்டா எடுத்தோமுன்னு ஆயிருச்சு... அப்படின்னு புலம்பினார். சரி விடுண்ணே... இதெல்லாம் ஒரு மேட்டரா என்ன அப்படின்னு சொன்னதும்... இது ஒரு வித்தியாசமான உலகம் அவனவன் அவனவன் வேலையைப் பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்கணும். இங்க எவனும் எவனுக்காகவும் இறங்கிப் போகவே இல்ல எதிர்பார்த்துக்கிட்டு இருக்கவோ கூடாது அப்படின்னு சொன்னார். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்திட்டு வந்தேன்.
இந்த உறவு.... எனக்கு சாப்பாடு கொடுத்தார்... எனது கஷ்டத்துக்கு மருந்தாக இருந்தார் என்று மட்டும் நினைக்க வைக்கும்  உறவல்ல... எங்கோ பிறந்து இங்கு வந்து தமிழால் மட்டுமே இணைந்த உறவு... எனக்கு ஒரு நல்ல நண்பனாக... அண்ணனாக கிடைத்த உறவு.... ரயில் சிநேகம் , பேருந்து நட்பு போல பயணிக்கும் காலத்தில் மட்டும் பாச ஊற்று ஊறாமல் இனி தொடரும் எனது காலங்களில் இவரின் நட்பும் என்னுடனே பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. டிசம்பர் வரை இந்த ஆபீஸ்.. அப்புறம் வேறு இடம் வேறு அலுவலகம்... மாறும் பயணத்தில் மறக்க முடியா சில நட்புக்கள் இருக்கும், அந்த நட்பில் கருப்புசாமி அண்ணன் என் குடும்ப நட்பாக... இல்லை உறவாக இருக்க வேண்டும். அதுவே எனது ஆசை.
கருப்பு அண்ணன் போல முகம் பார்க்காமல் அண்ணனாய்... தம்பியாய்... அக்கா... தங்கைகளாய் எத்தனை உறவுகள் எல்லாமே என்றும்  நீடிக்க வேண்டும் என்பதை நான் இறைவனிடம் கேட்கும் ஒன்று.

-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

தண்டவாளப் பூக்கள்



"என்னடி... ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கே... எப்பவும் இருக்க கலகலப்பு இல்லாம எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கே... பன்னெண்டு மணியானாலும் டிவியை ஆப் பண்ணாம பார்ப்பே... ரெண்டு நாளா டிவி கூட பாக்கலை... என்னாச்சுடி... என்ன பண்ணுது..."
"ஒண்ணுமில்லம்மா.... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..."
"சும்மா சொல்லாதடி... பெத்தவளுக்கு தெரியாத பிள்ளை நல்லாயிருக்கா இல்லையான்னு... உனக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன... எதா இருந்தாலும் சொன்னாத்தானே தெரியும்... என்னமோ ஒரு பிரச்சினை உனக்குள்ள இருக்கு.... அதான் ஒரு மாதிரி இருக்கே... என்னான்னு சொல்லுடி..."
"அய்யோ... அம்மா நான் எது மாதிரியும் இல்லை எப்பவும் போல உங்க பொண்ணு நந்தினியாத்தான் இருக்கேன்... போதுமா?"
"ஏண்டி நல்லா இருக்க பிள்ளையை ஒரு மாதிரி இருக்கேன்னு சொல்லி உடம்புக்கு நோவு வர வச்சிருவே போல... இப்ப என்ன உன்னோட பிரச்சினை... அவ டிவி பாக்கலைங்கிறதா.... உன்னைய மாதிரி நாடகங்களை கட்டிக்கிட்டு அழுகாம அவளாவது இருக்கட்டுமே... டிவி பாக்காம இருக்கது நல்லதுதானே... காலேசுக்கு கிளம்புற பிள்ளைக்கிட்ட ஏதாவது சொல்லி வருத்தப்பட வைக்காம சும்மா இரு..."
"ஆமா இவுகளுக்கு மகளை ஒரு வார்த்தை சொல்லிட்டா கோபம் பொத்துக்கிட்டு வந்திரும்... ரெண்டு நாளா அவ ஆளே நல்லாவேயில்லை.... சொல்லப் போனா என்னய கிறுக்கச்சி ஆக்கிருவீங்க.... வேலைக்குப் பொயிட்டு வந்து பாக்குற உங்களுக்கும் வீட்ல இருந்து பாக்கிற எனக்கும் வித்தியாசம் இல்லையா... சும்மா எல்லாத்துக்கும் அவளுக்கு செல்லம் கொடுக்காதீங்க... சொல்லிப்புட்டேன்..."
"இங்கபாரு அவ நல்லாத்தான் இருக்கா... அவளுக்குன்னு நாம இதுவரைக்கும் எதாவது குறை வச்சிருக்கோமா என்ன... அவளுக்கு ஒரு பிரச்சினையின்னா நமக்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறா சொல்லு... சரி நீ காலேசுக்கு கிளம்பும்மா... உங்கம்மா சும்மா நொய்  நொய்யின்னு எதாவது சொல்லிக்கிட்டே இருப்பா"
"சரிப்பா..... அம்மா பை..." என்றபடி வேகமாக ஓடினாள். இதற்கு மேல் நின்றால் அம்மாவும் அப்பாவும் அவளுக்காக சண்டையை தொடர வேண்டியிருக்கும் என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.
*****
ல்லூரிக்குள் நுழைந்த நந்தினி ஏனோ வெறுமையாக உணர்ந்தாள். மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வு அழுத்தத்தைக் கொடுத்தது. வகுப்பறைக்கு எப்பவும் போல் சென்றவளுக்கும் முதல் பாடவேளையே மனசு வகுப்பிற்குள் இல்லாமல் எங்கோ தனியாகப் போய் அமர்ந்து விட்டது. அதற்கு மேல் இருக்க முடியாது என்று நினைத்தவள் தோழியிடம் தலை வலிக்கிறது லேடீஸ் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். மேடம் கேட்டா சொல்லிடு என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். கொண்டு வந்த புத்தகதை லேடீஸ் ரூமில் வைத்துவிட்டு அதற்குப் பின்னால் விளையாட்டு திடலில் இருக்கும் உட்காரும் கல்லில் போய் அமர்ந்தாள்.
இதே கல்லில் அமர்ந்திருக்கும் போதுதான் ராகேஷ் முதன் முதலில் அவளிடம் காதலை சொன்னான். அன்று நந்தினி இந்தக் கல்லில் அமர்ந்து அசைன்மெண்ட் எழுதிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராகேஷ் அவளிடம் எப்பவும் போல் பேசிவிட்டு மெதுவாக 'நந்து... நான் ஒண்ணு சொன்னா என்னை தப்பா நினைக்க மாட்டியல்ல..' என்றான். 'என்னடா நீ நம்ம ரெண்டு பேரும் சின்னப்பிள்ளையில இருந்து பிரண்ட்... உன்னைய நான் இதுவரைக்கும் தப்பா நினைச்சிருக்கேனா என்ன... ஏன் இப்படி ஒரு வார்த்தை கேட்கிறே... என்ன சொல்லப் போறே சொல்லு...' என்றாள்.
அவன் தயங்கித் தயங்கி மெதுவாக அவள் மீதான தன் காதலைச் சொன்னான், அவனைப் பார்த்து சிரித்தாள். அவள் மனம் அவளது காதலை ஏற்க்க மறுத்தது. எல்லாரையும் மாதிரித்தான்டா நீயும் இருந்திருக்கே... என்று சொல்லிவிட்டு அவனது பதில் என்ன என்பதைக்கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பினாள். ராகேஷ் ஒன்றும் சொல்ல முடியாமல் விக்கித்துப் போய் நின்றான்.
தொடர்ந்து வந்த நாட்களில் அவனைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தாள். பல நாட்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளுக்குள்ளும் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிக்க அவனிடம் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள். அதன்பிறகு கல்லூரி வளாகத்துக்குள் ஒரு காதல் ஜோடி சுதந்திரமாக வலம் வந்தது.
சந்தோஷமாக போன அவர்களின் காதல் பயணத்தில் சில நாள் முன்னர் சிக்கல் ஆர்ம்பித்தது. எப்பவும் போல் கல்லூரி முடிந்து அவனுக்காக காத்திருந்தாள். வேகமாக வண்டியில் வந்தவன் 'நந்து உங்கிட்ட முக்கியமா பேசணும்.... வண்டியில ஏறு பார்க் போகலாம்... அங்க தனியா இருந்து பேசலாம்' என்றதும் 'என்ன விளையாடுறியா நான் பார்க்குக்கு எல்லாம் வரலை... எதுவா இருந்தாலும் இங்க சொல்லு நான் வீட்டுக்கு கிளம்பணும்' என்று தனது சைக்கிளை தள்ளியபடி பேசினாள். அவனும் தனது வண்டியை ஆப் பண்ணிவிட்டு அவளுடன் வண்டியை தள்ளியபடி நடக்கலானான்.
"நந்து... எங்க வீட்ல எனக்கு நிச்சயம் பண்ணப் போறாங்க..." மெதுவாக அவன் சொன்னதும் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றாள்.
"எ.. என்ன?"
"ஆமா நந்து எங்க மாமா பொண்ணு உனக்குத் தெரியுமே சரண்யா... அவளுக்கும் எனக்கும்  நிச்சயம் பண்ணி வைக்கப் போறாங்களாம்"
"இன்னும் நீ படிப்பே முடிக்கலை... அவ இப்பத்தானே லெவன்த் படிப்பா... அதுக்குள்ள என்ன அவசரம்?" பதட்டமில்லாமல் கேட்டாள்.
"மாமா இருந்தப்போ அப்பா சொன்னாராம் சின்னவனுக்குத்தான் உன் பொண்ணுன்னு... அவரு இறந்ததும் எங்க நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்னா என்ன பண்றதுன்னு அத்தைக்குப் பயம் வந்திருச்சாம்... அப்பாகிட்ட நாம நினக்கிறதுக்கு மாறா நம்ம பிள்ளைங்க நினைச்சிட்டா என்னண்ணே பண்றது... நாளைக்கு ராகேஷ் எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா அப்ப நான் என்ன பண்றதுன்னு கேட்க... உடனே அப்பா இப்படி ஒரு ஏற்பாடை செய்திட்டாரு..."
அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் அவனே தொடர்ந்தான். "இப்ப நிச்சயம் பண்ணிட்டு நான் படிப்ப முடிச்சதும் கல்யாணம் வைக்கலாம்ன்னு இருக்காங்க..."
"...."
"என்ன நந்து நீ எதுவுமே பேச மாட்டேங்கிறே?"
"இதுல என்ன பேசணுமின்னு நினைக்கிறே... பேசினது உங்க வீட்ல... உனக்கும் சரண்யா மேல ஒரு கண்ணுதானே... அவளையே கட்டிக்க..."
"என்ன சொல்றே நீ... இதுக்குத்தான் லவ் பண்ணினோமா?"
"அப்ப நீ வீட்ல சொல்லியிருக்கணும்... நான் ஒருத்திய லவ் பண்றேன்... அவளைத்தான் கட்டிப்பேன்னு..."
"எப்படி நந்து... இப்போ சொன்னா தேவையில்லாத பிரச்சினை வரும்... யாருடா அதுன்னு கண்டிப்பா கேப்பாங்க... அப்ப நான் உன் பேரை சொல்ல வேண்டி வரும்... வீணாவுல உன் மேல உயிரையே வச்சிருக்கிற உங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் பிரச்சினை வரும். இது போக அத்தை மொத்தமா அத்துக்கிட்டுப் போயிருவாங்க..."
"இவ்வளவு யோசிக்கிற நீ இதை லவ் பண்றேன்னு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்... சரி... சொல்லப் பயமா இருந்தா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை... தாராளமாக அவளையே கட்டிக்க..."
"இங்க பாரு நந்து... அவளைக் கட்டிக்க... அவளைக் கட்டிக்கன்னு சொல்றியே.... அப்படி அவளைக் கட்டுறதா இருந்தா உன்னைய காதலிச்சு இருக்க மாட்டேனே... சரி நீ டென்சனா இருக்கே நந்து... நான் சொல்றதை கோவப்படாம கேளு."
"என்ன..?"
"நாம எங்கயாவது போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் கழிச்சு வந்தால் எல்லாம் சரியாகும்"
"எதுக்குடா உனக்கு இப்படி புத்தி போகுது?"
"வேற என்ன பண்றது சொல்லு... ரெண்டு வீட்லயும் சம்மதம் வாங்கி நாம கல்யாணம் பண்ண முடியாது... சாதி நம்ம காதலுக்கு எதிரியாயிடும்... இல்லேன்னா நிச்சயம் பண்றபடி பண்ணட்டும். மேரேஜ்க்கு முன்னால நம்ம காதலை சொல்லி நிறுத்தப் பாக்கலாம்... அதுலயும் ஒத்துக்கலைன்னா ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கலாம்"
"ஓடிப்போறேன்... ஓடிப்போறேன்னு சொல்லுறியே... ஓடிப்போயி... இப்ப ஓடினா நம்ம படிப்பும் போகும்.... லைப்பும் போகும்... சரி நீ சொல்ற மாதிரி படிப்பு முடிச்சிட்டு காதலை சொல்லி கல்யாணத்தை நிறுத்தப் பார்த்து அதுவும் நடக்கலைன்னு நாம அப்ப ஓடினாலும் வேலை வெட்டி இல்லாம குடும்பம் நடத்த முடியுமா? நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டிங்க இந்தாங்க வேலையின்னு கூப்பிட்டு கொடுப்பாங்களா என்ன... இல்ல நண்பர்கள் உதவுறதுக்கும்... ஒரு பாட்டுல பெரிய லெவலுக்கு வர்றதுக்கும் இது என்ன சினிமாவா...சும்மா ஓடிப்போவோம்... ஓடிப்போவோமுன்னு... புரியாம பேசாதடா"
"அப்ப உன் முடிவுதான் என்ன.."
"இதுல என்னோட முடிவு என்ன இருக்கு... எனக்கா மாப்பிள்ளை பார்த்திருக்காங்க... உனக்குத்தான் நிச்சயம் நீதான் முடிவு பண்ணனும்..."
"நந்து ப்ளீஸ் என்னைக் கொல்லாத..."
"நான் கொல்றேனா... நீ ஒண்ணு செய்யி நம்ம காதலைக் கொன்னுட்டு உங்க வீட்ல நிச்சயம் பண்ற சரண்யாவை கட்டிக்க... நான் வாறேன்... பை..."
"நந்து..."
"அவனது கத்தலை பொருட்படுத்தாமல் சைக்கிளில் ஏறி மிதிக்கலானாள்.
'சை... புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாளே...' என்று நினைத்து தரையில் உதைத்தவன் "சை... என்ன இவள் யாரோ லவ் பண்ணின மாதிரி பேசிட்டுப் போறாள்... சரி டென்சனா இருக்கா... விட்டுப் பிடிப்போம்... ரெண்டு நாள்ல சரியாகும்..' என்று நினைத்தபடி பேசாமல் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.

நினைவில் இருந்து மீண்டவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள். அப்பா அம்மாவா... இல்லை ராகேஷான்னு பார்த்தா எனக்கு அப்பா அம்மாதான் முக்கியம்... ஆனா அவன் காதலிக்கிறேன்னு சொன்னப்பவே முடியாதுன்னு மறுத்திருக்கணும்... அவன் மனசையும் கெடுத்த பாவம் என்னைத்தான் சேரும்... இருந்தாலும் நான்தான் உலகம் என்று இருக்கவங்களை தவிக்க விட்டுட்டு இவனே உலகமுன்னு நம்பிப் போனா இரண்டு பேரையும் கொன்ன கொலைகாரியாயிருவேன்... வேண்டாம்... இதயத்தில் நுழைந்த காதலுக்காக தொப்புள் கொடி உறவை தவிக்க விடணுமா என்ன... இந்தக் காதல் மரித்தால் சில காலம் வலியிருக்கும்... பரவாயில்லை நம்ம பிள்ளை நல்லா படிக்குமின்னு அனுப்புன அப்பா அம்மாவை ஏமாத்திட்டு காதலிச்சதுக்கு தண்டனையா இதை ஏத்துக்கிறேன்... அப்பா இல்லாத அந்தப் பொண்ணு நல்லாயிருக்கணும்... ராகேஷ்கூட நிச்சயம் ஆகி அவனையே நினைச்சு வாழப்போறவளை கல்யாணத்தப்போ நாங்க லவ் பண்றோமுன்னு சொல்லி அவ கனவை கலைக்கனுமா... அது நியாயமா... இல்ல அவளுக்கும் ராகேஷூக்கும் கல்யாணம் நடக்கணும். ராகேஷ் கொஞ்சம் கொஞ்சமா மாறி அவளை நல்லாப் பாத்துப்பான். அவன் நல்லவன்... என்று நினைத்தபடி கல்லில் இருந்து எழுந்தவள் மனதை கல்லாக்கிக் கொண்டு சுடிதாரில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டியவள் காதலையும் அங்கயே விட்டுச் சென்றாள்.

-'பரிவை' சே.குமார்

புதன், 3 அக்டோபர், 2012

ஒலி மூலமாக ஒளி காண்கிறார் ஓர் அமெரிக்கர்


(இது புதிய தலைமுறையில் வெளிவந்த கட்டுரை...  நண்பர் ஒருவர் மூலமாக படித்ததில் பிடித்ததால் பகிர்ந்துள்ளேன்)


நம் எல்லோருக்குமே தெரிந்த அறிவியல் உண்மை இது. வவ்வால்களுக்கு பார்வை இல்லை. ஆனாலும் அவை அடர்த்தியான இரவுகளில் கூட, அனாயசமான வேகத்தில் இரைதேடி பயணிப்பதை கண்டிருக்கிறோம். ஒலி அலைகளை எதிரொலித்து தன்னுடைய புவியியல் சவாலை அவை எதிர்கொள்கின்றன. இதை ஆங்கிலத்தில் echolocation என்கிறார்கள்.

நாற்பத்தியாறு வயது டேனியல் கிஷ் அமெரிக்கர். இவர் பிறந்து பதிமூன்றே மாதங்கள் ஆனபோது கேன்சர் நோயால் முற்றிலும் பார்வை இழந்தார். எக்கோலொகேஷன் முறையில் பார்வையுள்ளவர்களுக்கு இணையாக அன்றாட வாழ்வியலை மேற்கொள்கிறார். இவரே தன்னிச்சையாக, யாருடைய ஆலோசனையுமின்றி பார்வை சவாலை எதிர்கொண்ட முறை இது. இவரது இந்த தன்மையை ஒரு சினிமா ஹீரோவுக்கு சித்தரித்து, தமிழில் ‘தாண்டவம்’ என்கிற படம் வெளியாக இருக்கிறது. அப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னைக்கு வந்திருக்கிறார் டேனியல்.

‘புதிய தலைமுறை’ உடனான பிரத்யேக உரையாடலுக்கு ஒப்புக்கொண்டவரை நட்சத்திர ஓட்டல் அறையில் சந்தித்தோம். யாருடைய உதவியுமின்றி டேனியல் தனியாகதான் தங்கியிருக்கிறார். துணைக்கு யாரையும் ஊரில் இருந்து அழைத்து வரவில்லை. அவர் பார்வையற்றவர் என்கிற எண்ணமே ஓட்டல் பணியாளர்களுக்கு சற்றும் ஏற்படவில்லை. பார்வையற்றவர்கள் வழக்கமாக குளிர்கண்ணாடி அணிவார்கள். அவர்கள் மற்றவர்களை பார்த்து பேசும்போது விழி வேறு திக்கை நோக்கும் என்பதால் உரையாடல் சிரமமாக இருக்கும் என்பதற்காக இந்த ஏற்பாடு. டேனியல் நம் கண்களை நேருக்கு நேராக பார்த்துப் பேசுகிறார். “நீங்கள் ஒளி மூலமாக உலகை எதிர்கொள்வதைப் போல, நான் ஒலி மூலமாக எதிர்கொள்கிறேன். இரண்டுமே ஆற்றல்தான். இவற்றுக்கிடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒளிக்குப் பதிலாக ஒலி. அவ்ளோதான்”

பார்வையற்றவர் என்று நினைத்து அவரை யாரேனும் தொட்டுப் பேசினால் கோபப்படுகிறார். “எப்போதும் மற்றவரை இப்படி தொட்டு தொட்டுதான் பேசுகிறீர்களா? நீங்கள் எதிரே சோஃபாவில் அமர்ந்திருப்பது எனக்கு நன்றாக தெரிகிறது. அங்கிருந்தே பேசுங்கள்” என்று செல்லமாக கடிந்துக் கொள்கிறார். புகைப்படங்களுக்கு இயல்பாகவே ‘போஸ்’ கொடுக்கிறார். “இடது பக்கம் திரும்புங்கள், லேசாக வலது பக்கம்” என்று நம் புகைப்படக்காரரின் கோரிக்கைகளுக்கு மிகச்சரியாக செவிசாய்க்கிறார்.

“சிறுவயதில் தூக்கம் எனக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. பார்வையற்றவனுக்கு எது பகல், எது இரவு என்று தெரியாது இல்லையா? பல நாட்களில் என் பெற்றோர் இரவுகளில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நான் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். இரவுகளில் கேட்கும் ஒலி மிக மிக துல்லியமானதாக இருக்கும். அவற்றை அடையாளம் கண்டு வித்தியாசம் உணர்ந்து, ஒவ்வொரு ஒலிக்கும் கற்பனையில் ஒரு தோற்றம் கொடுக்க ஆரம்பித்தேன். எதையாவது கண்டதுமே உங்கள் மூளைக்குள் ஒரு ‘இமேஜ்’ எப்படி தோன்றுகிறதோ, அதுமாதிரியே எதையாவது கேட்டதும் என் மூளைக்குள்ளும் ஒரு ‘இமேஜ்’ உருவாகிறது.

என் வீட்டுக்குப் பின்னால் நான் விளையாட நீளமான வராந்தா மாதிரியான பகுதி இருந்தது. அது என்னுடைய ராஜ்ஜியம். அந்த வராந்தாவுக்கு அந்தப் பக்கமாக பெரிய காம்பவுண்டுச் சுவார். இங்கே விளையாடும்போது ‘சீட்டி’ அடித்து ஒலியெழுப்பி, அது சுவரில் பட்டு எதிரொலிப்பதை ஆர்வமாக கவனிப்பேன். நாளாக நாளாக இம்மாதிரி சீட்டியடித்து, எனக்கும் எதிரில் இருக்கும் ஏதோ பொருட்களுக்குமான தூரத்தையெல்லாம் சுலபமாக கணிக்க ஆரம்பித்தேன். நாளாக, நாளாக இந்த திறமை எனக்குள் வளர்ந்துக் கொண்டே போனது. பெற்றோரின் அபரிதமான ஆதரவும் இருந்ததால் ஒரு கட்டத்தில் நான் இந்த விஷயத்தில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டேன்.

பள்ளி, கல்லூரிகளுக்கு போகும்போதெல்லாம் நான் மற்ற மாணவர்களைப் போல சாதாரணமாகவே இருந்தேன். பல்கலைக்கழகத்தில் உளவியல் பாடம் தேர்ந்தெடுத்து சிறப்பாக தேறினேன். எனக்கு கார், மோட்டார் பைக் ஓட்டத் தெரியாதே தவிர, சைக்கிளை சிறப்பாக ஓட்டத் தெரியும். சைக்கிளை வைத்து மலைகூட ஏறுவேன் தெரியுமா?”

பேசிக்கொண்டே லேப்டாப்பை திறந்து வேகமாக ஏதோ பணிகளை கவனிக்க ஆரம்பித்தார்.

“லேப்டாப்பெல்லாம் பயன்படுத்துகிறீர்களா?”

“இரண்டுவகையான லேப்டாப்புகளை பயன்படுத்துகிறேன். ஒன்று நீங்கள் பயன்படுத்தும் அதே ஆப்பிள் வகை லேப்டாப். இதில் ஆணைகளை எல்லாம் ஒலியாக மாற்றும் சிறப்பு மென்பொருள் இருக்கிறது. இதைவைத்துதான் என் வேலைகளை பார்த்துக் கொள்கிறேன். ‘தாண்டவம்’ படம் தொடர்பாக உங்கள் ஆட்கள் என்னோடு முழுக்க முழுக்க ஈமெயில் மூலமாகதான் பேசினார்கள். இது தொடர்பாக மட்டுமே கிட்டத்தட்ட இருநூறு ஈமெயில்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். இன்னொரு வகை லேப்டாப் பார்வையற்றவர்களுக்கானது. இது எப்படி இயங்குகிறது என்று உங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை”

“இந்த லேப்டாப்பின் வடிவத்தை நீங்கள் மனதுக்குள் எப்படி உணர்கிறீர்கள்?”

“ஒரு வடிவத்தை நீங்கள் உணர்வதற்கும், நான் உணர்வதற்கும் நிச்சயமாக வித்தியாசமிருக்கிறது. நீங்கள் சொல்வதைப் போல செவ்வகம், சதுரம், வட்டம் என்றெல்லாம் நான் உணர்ந்துக் கொள்வதில்லை. என் மனதுக்குள் ஒவ்வொரு பொருளுக்கும் நான் ஏற்படுத்தி வைத்திருக்கும் ‘இமேஜ்’ வேறானது. தனித்துவமானது. ஆனால் செயற்கையாகவோ, இயற்கையாகவோ உலகில் அமைந்திருக்கும் எல்லாவற்றையுமே நான் உங்களுக்கு இணையாக புரிந்துகொள்கிறேன் என்பதுதான் மேட்டர்”

“பேஸ்புக், ட்விட்டர் மாதிரியான சமூகவலைத் தளங்களில் இயங்குகிறீர்களா டேனியல்?”

“உருப்படியாக பயன்படுத்துவதற்கே நேரம் போதவில்லை. இதெல்லாம் வேறா? மின்னஞ்சலை வாசித்து பதில் சொல்லவே சரியாக இருக்கிறது. ஆனால் எனது நிறுவனத்துக்கு ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கணக்கு உண்டு”

‘வேர்ல்ட் ஆக்சஸ் ஃபார் ப்ளையண்ட்’ என்கிற லாபநோக்கில்லாத நிறுவனத்தை பண்ணிரெண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் டேனியல். உலகமெங்கும் வாழும் பார்வையற்ற குழந்தைகளின் திறனை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கம். சுயமாகவே தான் கண்டறிந்த எக்கோலொகேஷன் முறையை, இதுவரை குறைந்தபட்சம் 500 பார்வையற்றவர்களுக்கு போதித்திருக்கிறார் இவர். வாழும் அதிசயம் என்பதால் இவரது முறை குறித்து பல்கலைக்கழகங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, இவரது மூளை எக்கோலொகேஷன் க்கு ஏற்றவாறாக மாற்றம் கண்டிருப்பதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

“எங்கள் ஊர் எப்படியிருக்கிறது?”

“பார்ப்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்பவரிடம் கேட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். ஏற்கனவே ஒருமுறை கொல்கத்தா சென்றிருக்கிறேன். மற்ற நகரங்களை ஒப்பிடும்போது உங்கள் சென்னை ரொம்ப அமைதியான நகரம். ஒலிமாசு குறைவு. அன்பாகவும், பண்பாகவும் நடந்துக் கொள்கிறீர்கள். கய்யா முய்யாவென்று கத்தாமல் அமைதியாக பேசுகிறீர்கள். சாந்தமான சுபாவம் கொண்டவர்கள் தமிழர்கள்” ஜில்லென்று நம் தலையில் டன் கணக்காக ஐஸ் வைத்தார் டேனியல்.

(நன்றி : புதிய தலைமுறை)

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

தெருக்கூத்து என்ற நாடகம்.



எங்கள் பகுதியில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கோவில் திருவிழா என்றால் எதாவது ஒரு கலை நிகழ்ச்சி இருக்கும்... அது நாடகம் அல்லது கரகாட்டம், ஒயிலாட்டம் என எதாவது ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். திருவிழாவின் நிறைவு நாளில் விருந்து உபசரிப்புடன் விழாவை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகள் வைப்பது என்பது தொடரும் மரபு. இந்த மரபு காலப்போக்கில் மாறியிருக்கிறதே தவிர நிகழ்ச்சி வைக்க வேண்டும் என்பதில் மாற்றம் வரவில்லை. சில வருடங்களுக்கு முன் திருவிழா தினத்தை அலங்கரிப்பதில் எங்கள் பகுதியில் முதலிடம் பிடித்திருந்தது கூத்து எனப்படும் நாடகம்தான். வள்ளி திருமணம், பவளக்கொடி, அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, அர்ச்சுனன் தவசு, தூக்குத் தூக்கி என ஏதாவது ஒரு நாடகம் வைப்பார்கள். பெரிய கோவில் திருவிழாக்களில் மூன்று நான்கு நாடகங்கள் கூட நடத்தப்படும்.
விழாவின் முக்கிய நாளன்று இரவு பத்துமணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிங்கார கலையரங்கில் நாடகம் நடத்தப்படும். ஆர்மோனியம் பின்பாட்டுடன் விடிய விடிய நடக்கும் நாடகத்தை காண வந்திருக்கும் கூட்டம் விடியும் வரை அமர்ந்து பார்க்கும் சிலர் நாடகம் பார்த்த இடத்திலேயே கிடந்து உறங்குவார்கள். பிரார்த்தனைக்காக நாடகம் வைப்பவர்கள் பெரும்பாலும் வள்ளி திருமணம்தான் வைப்பார்கள். ஏனென்றால் மற்ற நாடகங்கள் எல்லாம் சோகமாய் இருக்குமாம். சந்தோஷமானதாகதான் வைக்க வேண்டும் என்பதால் பிரார்த்தனைக்காரர்களின் தேர்வு வள்ளி திருமணம்தான்.
நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வள்ளி திருமணம் நாடகம் வைப்பதற்காக கோவிலுக்கு நேராக வயலில் உயர்வான வரப்புப் பகுதியில் சமன் செய்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. திருவிழா அன்று பகலில் சரியான மழை. இரவில் தென்னங்கீற்று, பனைஓலை போன்றவற்றை போட்டு அமர்ந்து நாடகம் பார்த்ததாக ஞாபகம். அதன் பிறகு நம்ம ஊருக்கு நாடகம் ராசியில்லை என்று ஒதுக்கிவிட்டார்கள். இருப்பினும் இன்றும் அந்த நாடகமேடை அமைந்த இடம் கூத்துப் பொட்டல் என்றால்தான் தெரியும். அதன்பிறகு திருவிழா பேச்சு வந்தால் நாடகம் வைக்க வேண்டும் என்று சொல்லியே நாங்கள் கல்லூரி வரும்வரை திருவிழா நடக்காமலே இருந்ததும் அதன் பிறகு நாங்கள் களத்தில் இறங்கியதும் தனிக்கதை.
சரி அந்தக் கூத்தை விட்டுட்டு இந்தக் கூத்துக்குள் வருவோம். நாடக நடிகர்களில் சிலருக்கு நல்ல பெயர் இருக்கும் 'எப்பா கண்டதேவியில அஞ்சாம் திருவிழாவுக்கு வள்ளி திருமணம் கூத்து வச்சிருக்காகளாம்... நம்ம மணி கடையில நோட்டீஸ் பாத்தேன்' என்று தேவகோட்டையில் இருந்து வரும் ஒருவர் சொன்னால் போதும் 'யாரு முருகன்?' என்று கேட்டு ஒரு கூட்டம் கூடும் இன்னார் என்றால் போதும் நாடகப் பிரியர்கள் வாயெல்லாம் பல்லாக 'அப்ப நல்லாயிருக்கும்' என்று சொல்வார்கள். முருகனுக்கு மணிமாறன், ஸ்ரீராம் என்றால் அப்ப தர்க்கம் நல்லாயிருக்கும் என்பார்கள். வள்ளியா கரூர் இந்திரா வரணும்ப்பா... மணிமாறனும் இந்திராவும் நடிச்சா அந்த நாடகம் அருமையா இருக்கும்... அதோட நாரதருக்கு இப்ப வந்திருக்கான்பாரு உருவாட்டி தமிழரசு அவனைப் போடணும்... ஆளு குட்டையா இருந்தாலும் போற இடமெல்லாம் பிச்சு உதறுரானாமே என்று பெரிசுகள் 'ஜொல்'லுவார்கள். அதேபோல் அரிச்சந்திர மயான காண்டம் என்றால் காமராஜ் நடிச்சாத்தாம்ப்பா நல்லாயிருக்கும் அப்படின்னு நடிகர்கள் பார்த்து நாடகம் பார்க்க கூட்டம் வரும்.
சரி... இந்த நாடகம் இப்போ என்னாச்சு... கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கிப் போகிறது என்றே சொல்லலாம். காரணம் என்னவென்றால் இப்ப திருவிழாக்களில் நாலு மணி நேரம் ஆர்க்கெஸ்ட்ரா வச்சி அதுல நாலு பேரை நடுவில் ஆடவிட்டு விழாவை சிறக்க வைத்துவிடுகிறார்கள். இரவு முழுவதும் விழித்து நாடகம் பார்க்க யாரும் விரும்புவதில்லை. மேலும் கரகாட்டம் என்ற ஒரு அற்புத கிராமியக் கலை நிகழ்ச்சி ஆபாசம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு இரட்டை அர்த்த வசனங்களோடு தன்னை மாற்றிக் கொண்டு வலம் வர ஆரம்பித்ததும் நாடகம் சற்றே எட்டி நின்று வேடிக்கை பார்த்தது. 
போட்டிக் களத்தில் குதிக்க நாடகமும் ஆபாசம் என்னும் ஆடையை கையில் எடுத்தது. ஆரம்பத்தில் பபூன், டான்ஸ் இருவரும் கரகாட்டத்தைவிட கேவலமாக ரெட்டை அர்த்த வசனங்களில் பேச, அதை பார்க்க ஒரு கூட்டம் கூடியது. பபூன் , டான்ஸ் முடிந்ததும் மேடைக்கு முன்பாக அமர்ந்திருக்கும் மக்கள் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்துவிடும். நாடகக்காரர்கள் பார்த்தார்கள் முருகனையும் வள்ளியையும் அரிச்சந்திரனையும் சந்திரமதியையும் ஆபாச கூட்டுக்குள் அடைத்துவிட்டார்கள். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நாடகம் என்ற கலை ஆபாச நிகழ்ச்சியாக மாறிப் போனது. 
இப்போதெல்லாம் இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை திருவிழா நடத்துபவர்கள் விரும்புவதில்லை. நாலைந்து நாடகங்கள் நடத்தும் கோவில் திருவிழாக்களில்கூட ஆடல் பாடலும் ஆர்க்கெஸ்ட்ராக்களும் முக்கிய இடம் பிடிக்க நாடகம் என்பதை மறக்காமல் இருக்க போனால் போகிறது என்று ஒன்று மட்டும் நடத்தப்படுகிறது. எப்படியோ ஒரு சில இடங்களில் நாடகங்கள் நடத்தப்படுவதால் இன்னும் எங்கள் பகுதியில் நாடகக் கலை அழியாமல் காப்பாற்றப்படுகிறது என்பது சற்று சந்தோஷமான விஷயமே.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊரில் நாடகம் வைக்கலாம் என்று முடிவு செய்து வள்ளி திருமணம் வைத்தோம் வடிவேலு சொல்கிற மாதிரி ஆரம்பம் நல்லாத்தான் போச்சு... நல்ல கூட்டம் கூடியிருந்தது. கரகாட்டம் வைத்தாலே கூட்டம் வராத எங்கள் ஊரில் நாடகத்துக்கு எதிர்பார்த்தைவிட அதிகமான கூட்டம் வந்தது கண்டு எங்களுக்கே ஆச்சரியம். ஆனா நேரம் ஆக ஆக எல்லாரும் போயாச்சு... நாலஞ்சு ஆளுக மட்டும்தான் இருந்தாங்க... 
விழாக் கமிட்டிங்கிற பேர்ல இருந்த பெரிசுகள்ல எங்கப்பா, மெதுவா எங்க சித்தப்பாக்கிட்ட தம்பி இருக்கான்... எனக்கு உறக்கம் வருது என்று என்னைய கோர்த்து விட்டுட்டு தூங்கப் போக...  மெதுவாக ஒவ்வொரு ஆளா கழண்டுக்கிச்சு... எங்க ஐயா ஒருத்தரு, நான் எங்க சித்தப்பா, மச்சான், மாமன் என இன்னும் சிலரும் இருக்க முருகனா வந்தவருக்கு வெற்றிடத்தைப் பார்த்து எவ்வளவு நேரம்தான் மேயாத மானைத் தேடுறதுன்னு கஷ்டமாயிருச்சு... எங்க சித்தப்பாக்கிட்ட அண்ணே இதோட முடிச்சுக்குவோம்... யாருமே இல்லாத கடையில நான் எப்படி டீ ஆத்துறதுன்னு கேட்டாரு... சித்தப்பாவும் பாத்தாரு... அவரு சொல்றதுல ஒரு நியாயம் இருக்குன்னு சரியின்னு சொல்ல... ஆறு மணி வரைக்கும் கத்த வேண்டியவரு சந்தோஷத்துல மானையும் தேடலை மத்ததையும் பாக்கலை வேகவேகமாக வள்ளியை கட்டிக்கிட்டு பொயிட்டாரு. 
இன்றைய நிலமையில் கூத்துக் கலை அழிந்து வருவதற்கு சரியான வரவேற்பு இல்லாததுதான் முக்கியக் காரணம் என்றாலும் கால ஓட்டத்தில் கதைகளை குறைத்து இரட்டை அர்த்த வசனங்களை மட்டுமே நம்பி இன்று கலை இழந்து நிற்கிறது என்பதுதான் உண்மை... மேலும் இனி வரும் காலங்களில் யாரும் இரவு முழுவதும் விழித்து நாடகங்களைப் பார்க்கப் போவதில்லை... இப்போது திருவிழாக்களில் ஆடல் பாடல், ஆர்க்கெஸ்ட்ரா போன்றவை தலையெடுக்க ஆரம்பித்ததும் நாடகம் மற்றுமின்றி ஓயிலாட்டம் கரகாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன என்பதே யதார்த்தம்.

-'பரிவை' சே.குமார்

புதன், 19 செப்டம்பர், 2012

சினிமா: சுந்தர பாண்டியன்




இயக்குநர் சசிகுமாரை அவரின் முந்தைய படங்களுக்காக ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. அதனால்தான் புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் அவரே தயாரித்து கதாநாயகனாக நடித்து  இருக்கும் சுந்தர பாண்டியன் படம் வெளிவருவதற்கு முன்னரே ரொம்ப எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் சில குறைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் செய்தது என்றே சொல்லலாம்.

படம் ஆரம்பிக்கும் போது உசிலம்பட்டி மதுரை மாவட்டத்துல புறக்கணிக்க முடியாத ஊரு என்று ஆரம்பித்து உசிலம்பட்டி பற்றி சில விசயங்களைச் சொல்லி  காதலிக்கிறேன்னு பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனை கள்ளிக்காட்டுக்குள்ள கொல்றதைச் சொல்லி கதைக்குள் செல்கிறார்கள்.

கண்டமனூர் பெரிய தலக்கட்டு ரகுபதியோட மகன் சுந்தரபாண்டியனாக சசிக்குமார் இதுவரை நண்பர்களின் காதலுக்காக போராடியவர் இதில் நண்பனின் காதலியை தனதாக்கி கொள்கிறார். ஆரம்பத்தில் வரும் பாட்டில் கொஞ்சம் ஓவராகத் தெரிந்தாலும் நகரும் படத்தில் அலட்டல் இல்லாத நடிப்பால் மீண்டும் ஒருமுறை சபாஷ் போட வைத்திருக்கிறார். 

சசிகுமாருக்கு குரல் மிகவும் கவர்ச்சிகரமாக கணீர் என்று இருப்பது மிகப்பெரிய பலம். வசனங்களை அலட்டலில்லாமல் பேசும் அழகுக்காகவே அவரை எல்லாருக்கும் பிடித்துவிட்டது என்பதே உண்மை. என்ன ஒரே மாதிரி கதாபாத்திரங்களாகவே அவர் நடித்து வருவதை இத்துடன் நிறுத்தி விட்டு தாடிக்கு கொஞ்சம் விடுப்பு கொடுத்து கதாபாத்திரத்தில் மாற்றம் கொண்டு வந்தால் இன்னும் நல்லாயிருக்கும்.

கல்லூரி முடித்து விட்டு வேலை வெட்டிக்குப் போகாமல் டீக்கடையில் அமர்ந்து பெண்களை கேலி பண்ணும் கதாபாத்திரத்தில் பெண்களைப் ஒரு விதமாக பார்ப்பதாகட்டும் கண்ணடிப்பதாகட்டும் நண்பனின் காதலுக்கு உதவப் போகிறேன் என்று பேருந்தில் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டியாகட்டும், சிறையில் இருந்து வரும் போது வீட்டில் என்ன நினைப்பார்களோ என்று வருந்துவதாகட்டும் லட்சுமி மேனனுடனான காதல் காட்சிகளாகட்டும்  கடைசிக் காட்சியில் நண்பர்களிடம் வசனம் பேசுவதாகட்டும் எல்லாவற்றிலும் ஜொலித்திருக்கிறார்.

அவருக்கு பக்கபலமாக வரும் நண்பர்களில் சூரி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். தேர்தல் புயலில் காணமல் போன வடிவேலுவின் இடம் எனக்குத்தான் என்று அப்பா காதாபாத்திரம் ஒன்றை வைத்து வாடா போடா என்று ஏக வசனத்தில் பேசும் சந்தானத்துக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அவரைப் பிடிக்காதவர்கள் எல்லாருக்கும் சூரியை கண்டிப்பாக பிடிக்கும். நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்கள் பட்டியலில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்கும் காலம் விரைவில் வரும்.

சூரி பேசும் வசனத்தை கேட்டு சிரித்து அடங்கும் போது அடுத்த வசனம் நம்மளை மீண்டும் சிரிக்க வைக்கிறது. ஆனால் வசனங்களை அள்ளியெறியாமல் நறுக்கென்று அவரை பேச வைத்திருக்கிறார் இயக்குநர். பாம்பிஞ்சுல இருந்து பல்லுப் போனதுவரை மாப்பிள்ளையாலதான் சந்தோசப்படுத்த முடியும்... மாப்ளே இங்க ஹீரோவெல்லாம் உருவாக்க முடியாது நாமளா ஆயிக்கணும்... ரன்னிங்க்ல செவப்பா இருக்கவன் ஏறினா ஹீரோம்பாளுங்க கருப்பா இருக்கிறவன் ஏறினா காமடியன்னும்பாளுங்க... சச்சினா இருந்தாலும் அடிச்சாத்தான் ரன்னு... எங்களாலதான் மரக்கடையே வச்சிருக்கான் இல்லேன்னா மைக்ரோசாப்ட் கம்பெனிய இவந்தான் நடத்திருப்பான் என படம் முழுக்க கலகலக்க வைக்கும் வசனங்களால் கலக்கியிருக்கிறார்.

கல்லூரியில் படிக்கும் அர்ச்சனாவாக லட்சுமி மேனன், இவருக்கு முதல்படம் பிரபு சாலமனின் கும்கி என்றாலும் சுந்தரபாண்டியன் முந்திக் கொண்டு விட்டது. ஆரம்பக்காட்சியில் அக்காவின் கொழுந்தனுக்கு கட்ட வேண்டும் என்று வீட்டில் பேசும் போது எதிர்த்து பேசி எவ்வளவோ பாத்துட்டோம் இன்னும் பாக்க வேண்டியது நிறைய இருக்கு என்று கண்ணாடி முன் பேசுவதில் ஆரம்பித்து பேருந்துக் காட்சிகளில் படத்தின் மொத்தக் கதையும் அவர் மேல் பயணித்தாலும் தனது தோழியிடம் பேசியபடி கண்களாலேயே நடித்து எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் போது சசிக்குமார் காதலை சொல்லும் போது மிரட்டுவதாகட்டும் அப்புறம் நண்பனின் காதலை சொல்ல வரும் சசிக்குமாரை காதலிப்பதாக சொல்லும்போது முகத்தில் காட்டும் உணர்ச்சியாகட்டும் அருமையாக செய்திருக்கிறார்.  கும்கியிலும் நல்ல கதாபாத்திரம்தான் என்பதால் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு இடத்தைப் பிடிப்பார்.

இசைஞானியின் பொன்மானே... பாடலுடன் கண்டமனூருக்குள் வரும் தாமரை என்ற பேருந்தில் இடைவேளை வரையான படம் கலகலப்புடன் நகர ஆரம்பிக்குது. லட்சுமி மேனனை பேருந்தின் முன்பக்கம் இருந்து காதலிக்கும் நண்பன், அவருக்குப் போட்டியாக பேருந்தின் பின்னால் இருந்து லுக்கு விடும் அழகர்சாமி இவர்களுக்கு மத்தியில் நண்பனின் காதலுக்காக பேருந்தில் பயணிக்கும் சசிகுமார், சூரி , நாயகிக்கு துணையாக அவளின் தோழி, பேருந்துக்குள் சின்னச்சின்ன காதாபாத்திரங்கள் என படம் தொய்வில்லாமல் செல்கிறது.

அழகர்சாமி  பேருந்தில் பின்புறம் நின்றே நாயகி லட்சுமி மேனனை காதலிப்பதாக சசிகுமார் குழுவில் வந்து சொல்லி அவர் சொல்லும் டீலுக்கு ஒத்துக் கொண்டு  ஒரு மாதம் பேருந்துக்குள் அப்படியிப்படி முயற்சித்து முடியாமல் விலகிக் கொள்கிறார். சசிகுமார் நாயகியை காதலிப்பதை அறிந்து வில்லன் போல மாறி மீண்டும் பேருந்தில் ஏறி நாயகியை வம்புக்கு இழுக்கிறார். பேருந்துக்குள் நடக்கும் காதல் சண்டையில் பரிதாபமாக உயிரை விட்டாலும் அதன் பிறகு படத்தின் கதையை டுவண்டி 20 மேட்ச் மாதிரி வேகமெடுக்க வைத்துச் செல்கிறார்.

ஆரம்பக்காட்சிகள் லட்சுமி மேனனை காதலிக்கும் அறிவழகனாக வந்து நண்பன் காதலிப்பதை அறிந்து மனசு வருந்தி பின்பு நண்பனுடனே சுற்றி கிளைமாக்ஸ் காட்சியில் சுயரூபத்தைக் காட்டும் நண்பனாக இனிகோ பிரபாகரன் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்.

 முறைப்பொண்ணாக வந்து முந்திரி வாங்கும் போது யாரு பங்காளிக்கா என்று சசிகுமார் கேட்க, இல்ல பாயாசத்துக்கு என்று சொல்லும் அத்தை பொண்ணு, லட்சுமி மேனனின் அக்கா கொழுந்தனாக வந்து அவளை கட்டிக்கொள்ள நினைக்கும் விஜய் சேதுபதி, பரஞ்சோதி, சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன், லட்சுமி மேனனின் அப்பாவாக வரும் தென்னவன், அப்பத்தா, அம்மாக்கள், அக்கா, சித்தி என அனைவரும் கொடுத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்லாருடைய கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கியிருக்கிறார் புதிய இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இசை என்.ஆர்.ரகுநந்தன் பாடல்களைவிட பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். சி.பிரேம்குமாரின் ஒளிப்பதிவு பல இடங்களில் நம்மையும் படத்தோடு பயணிக்க வைக்கிறது. 

கடைசி காட்சியில் மண்டையில் அடிபட்டும் கத்திக் குத்துப்பட்டும் விழுந்து கிடந்தாலும் பாரம்பரிய தமிழ் கதாநாயகனாக மாறி எல்லாரையும் அடித்து துவைத்து வீர வசனம் பேசியிருக்கிறார் நாயகன் சசிகுமார்.  இது அவரது எல்லாப் படத்திலும் வரத்தான் செய்கிறது. இருந்தும் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அருமை. படத்தின் கதை போகும் வேகத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் சசிகுமார் அன் கோவின் சுந்தர பாண்டியன் வெற்றிக் கோட்டையில் கொடியை நாட்டிவிட்டது, 


சுப்ரமணியபுரம், நாடோடிகள் வரிசையில் சசிக்குமாருக்கு மீண்டும் ஒரு வெற்றிப்படம் இந்த சுந்தர பாண்டியன்.

-'பரிவை' சே.குமார்

படங்கள் வழங்கிய  இணையத்தளங்களுக்கு நன்றி

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

மனசின் பக்கம்: 201வது பதிவை நோக்கி...



எல்லாருக்கும் வணக்கம்.
நான் வலைப்பூ ஆரம்பித்த போது ஆர்வக்கோளாறில் ஹைக்கூ, கவிதை, சிறுகதை, எல்லாம் எழுத என நான்கு வலைப்பூ அரம்பித்து எழுதி வந்தேன். ஒரு கட்டத்தில் எல்லா வலைப்பூவையும் நடத்துவது எளிதல்ல என்பதால் எல்லாத்தையும் மனசு வலைப்பூவில் மட்டும் எழுத ஆரம்பித்தேன். மனசில் இதுவரை 199 பதிவுகள் போட்டாச்சு இது 200-வது பதிவு. மொத்தத்தில் இது (நான்கிலும் சேர்த்து) 395வது பதிவு. எனது வலைப்பூவில் நான் கிறுக்குவதை படித்து கருத்துச் சொல்லும் நண்பர்களுக்கும்,  ஐயா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, தோழன், தோழி என என் மனசை பின்தொடரும் 209 பேருக்கும் தனித்தனியாக நன்றி சொல்லும் மனநிலையில் நான் இப்போது இல்லாத காரணத்தால் அனைவருக்கும் ஒட்டு மொத்த நன்றியை உரித்தாக்குகிறேன். உங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் எனது எழுத்தை வளப்படுத்தி வருகின்றன என்பது 100% உண்மை. இந்த வலைப்பூவின் மூலமாகவும் முகப்புத்தகத்தின் மூலமாகவும் எனக்கு கிடைத்திருக்கும் உறவுகளான உங்கள் முகம் தெரியாவிட்டாலும் அந்த பாசமிக்க மனம் எனக்கு நன்றாக தெரிகிறது. உங்கள் நட்பு என்றும் தொடர வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.


**********

டந்த பதினைந்து நாட்களாக பொக்காலி அம்மா வந்து தனிமையில் கஷ்டப்பட்ட போது மனைவி குழந்தைகளின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்பதை உணர முடிந்தது. அடுப்புக்கிட்ட போகக்கூடாது என்று அம்மாவும் மனைவியும் ஊரில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தாலும் அறை நண்பர்கள் சிறு உதவிகள் செய்தாலும் அம்மை வந்த உடம்போடு நானே கஞ்சி வைத்து குடித்த நாட்கள் மறக்கமுடியாதவை. இந்தக் கஷ்டம் என் எதிரிக்கு கூட வரக்கூடாது என்றுதான் வேண்டினேன்.  அதிகமாக அம்மை வராமல் போனதால் கொஞ்சம் கஷ்டம் குறைந்தது. இப்போ நான் எழுந்து வியாழன் அன்றுதான் வேலைக்குப் போனேன். நேற்று மனைவிக்கு டெங்கு காய்ச்சல் வந்து மதுரையில் மருத்துவமனையில் வைத்து பார்த்து வருகிறார்கள். மாமா வீடு மதுரை என்பதாலும் தற்போது வைத்திருக்கும் மருத்துவமனை மாமா கடைக்குப் பக்கத்தில் இருப்பதாலும் யார் பார்ப்பது என்ற கவலையில்லை. மாமாவின் நண்பரான மருத்துவரும் பரிசோதனைகள் செய்து இது ஆரம்பநிலைதான் பயப்பட வேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறார். நேற்றுக் காலையில் அழுதபடி பேசிய மனைவியிடம் மாலையில் பேசும் போது சற்று நல்ல மனநிலையில் பேசினார். மனசுக்கு இதமாக இருந்தது.

**********

ம்மை வந்திருந்த போது எனக்காக வருந்தி அழுதது மனைவி, குழந்தைகள் மற்றும் எங்கள் ஊரில் இருக்கும் மாரி அம்மன் கோவிலில் தினமும் தண்ணீர் ஊற்றி தீபம் ஏற்றி கும்பிட்ட என் அம்மா ஆகியோர்தான். ஒரு சிலரைத் தவிர மற்ற உறவுகள் எல்லாம் இங்கிருப்பவர்களையும் சேர்த்து போன் பண்ணினால் வந்து விடும் என்று நினைத்தார்கள் போல முதல் இரண்டு மூன்று நாட்கள் போனே பண்ணவில்லை. அப்புறம்தான் போன் பண்ணினார்கள். ஆனால் முகம் தெரியாமல் பாசம் கொண்ட உறவுகள் எல்லாம் எப்படியிருக்கு என்று தினமும் மின்னஞ்சல் மற்றும் முகநூல் வழியாக கேட்டுக் கொண்டே இருந்தார்கள். உண்மையில் இந்த அன்புக்கு நிகர் ஏதும் இல்லை. உங்களது இந்த அன்புதான் எனக்கு ஆறுதலாக இருந்தது என்றால் மிகையில்லை.

**********

டந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கு காருக்குள் பார்க்காமல் விட்டுச் சென்ற குழந்தைகள் இறந்த செய்தியை பத்திரிக்கையில் பார்த்தபோது  அவர்களது பெற்றோர்களின் அலட்சியம் மிகவும் வருத்தப்பட வைத்தது. ஆம் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவர்கள் காரை பார்க் செய்துவிட்டு வீட்டுக்கு சென்று குழந்தையை காணோம் என்று தேடி கடைசியில் காரில் வந்து திறந்து பார்த்தபோது தூங்கிய குழந்தையை தூக்காமல் காருக்குள் விட்டு விட்டு கார் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு கதவை சாற்றியதால் மூச்சடைத்து இறந்த நிலையில் கண்டு அழுதிருக்கிறார்கள். அழுது என்ன பயன்... இளமொட்டு கருகிவிட்டதே. இதே போல் மூன்று நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்தது... என்ன கொடுமை பாருங்கள்.

**********



சிவகாசி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ உதவிக்கு பணம் இருந்தும் மனம் இல்லாதவர்கள் யாரும் செய்ய முன்வராததை மலையாள நடிகர் மம்முட்டி செய்திருக்கிறார். அவரின் இந்தச் செயலுக்காக அவர் நல்லாயிருக்கணும் என்று சொல்வதில் தப்பேயில்லை. இங்க கோடிகளை சம்பளமாக வாங்கும் நம்ம நடிகர்கள் முடியாமல் கிடந்தால் மொட்டை அடிக்கிறோம், வேல் போடுறோம், அவர்களின் படங்களுக்கு பால் அபிஷேகம் பண்றோம். அவர்களும் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன் என்று அறிக்கை விடுகிறார்கள். அம்புட்டுத்தான் அதன் பிறகு அடுத்த படத்துக்கான வேலைக்குப் போய் விடுகிறார்கள். தமிழர்களே இனிமேலாவது நடிக, நடிகைகள் மேல் இருக்கும் அதீத பாசத்தைக் குறைத்துக் கொண்டு குடும்பத்தைப் பாருங்கள். உங்களுக்காக வருந்த உங்கள் குடும்பமும் நட்பும் மட்டுமே... நீங்கள் தலைவா என்று சாஷ்டாங்கமாக தொழும் நடிகர்கள் அல்ல என்பதை உணருங்கள்.

**********

மிழகத்தில் பேருந்து விபத்து என்பது வெகு சாதாரணமாகிவிட்டது. சமீபத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகில் நடந்த விபத்தில் 9 பேருக்கு மேல் இறந்தார்கள். அதில் எனது நண்பரின் தம்பியும் ஒருவர். திருமணமாகி 9 மாதங்கள் ஆன நிலையில் மனைவியை ஆடிக்கு அம்மா வீட்டில் விட்டிருந்தவர் கூட்டிக் கொண்டு திரும்பி வர, பேருந்தில் இடமில்லாததால் மனைவியை பின்புறம் அமர வைத்துவிட்டு அவர் முன்புறம் அமர்ந்திருக்கிறார். விபத்தில் சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. காயங்களுடன் தப்பிய அவரின் மனைவி, கணவன் இறந்தது அறியாமல் தீவிர சிகைச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். வேதனையான விஷயம்தானே... இதை எனக்கு மிக நெருக்கமான ஒருவர் சொன்னபோது துடித்துப் போனேன். விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

**********

என்னையும் வலையில் எழுத வைத்து என் எழுத்துக்களை உங்கள் பின்னூட்டம் என்னும் உந்து சக்தியால் மெருகேற்றி வரும் என் சொந்தங்களுக்கு இந்த 200வது பதிவின் மூலம் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

நன்றி பதிவுலக சொந்தங்களே...


-'பரிவை' சே.குமார்.