மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 24 ஜூலை, 2012

சிறு பூக்கள்..!




சாமிக்குப் படையலாய்
கறியும் சாராயமும்...
கும்பிட்ட மனங்களுக்கு
படையலே சாமியாய்..!

*************************

தவளைகள் தாலாட்டும்
மழை இரவு...
உறங்காமல் தவிக்கும்
உன் நினைவுகள்..!

*************************

சாம்பலாய் உதிர்ந்தது
இதயப் பந்து...
உதட்டில் உக்கிரமாய்
சிரித்தது சிகரெட் நெருப்பு..!

*************************

சப்பரத்தில் சாமி
அனாதையாய்...
மல்லுக்கு நிற்கிறது
சாதி ஆரவாரமாய்..!

*************************

தழுவிய காற்று
சங்கடப்பட்டது...
மொட்டையாய் மரம்..!

-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 10 ஜூலை, 2012

விவசாயியின் வேதனை



வாய்க்கா வரப்பு பாக்கயிலே
வயிரெல்லாம் எரியுதடா..!
கருவ மண்டிக் கிடக்கிறது
காண மனசு சகிக்கலைடா..!

நீர் நிறையும் கண்மாயும்
வறண்டு போய் கிடக்குதடா..!
வானம் பார்த்த பூமி இப்போ
வனமாகிப் போச்சுதடா..!

மடை திறந்து தண்ணி
பாய்ச்ச மனசு நினைக்குதடா..!
சறுக்கை உடைப்படச்ச காலம்
கரையேறிப் போயாச்சுடா..!

களையெடுப்பு கதிரறுப்பு
காண விருப்பமடா..!
உரம் போட்டு மருந்தடிக்க
உள்ளம் மறுகுதடா..!

நெல் குவிந்த களத்து மேடு
கரைஞ்சுதான் போச்சுடா..!
வைக்கோல்போர் இருந்த இடம்
கருவைக்கு வீடாச்சுடா..!

நெல் சுமக்கும் குதிரெல்லாம்
காற்றைச் சுமக்குதடா..!
நெல் அவிக்கும் அண்டாவும்
பரணில் தூங்குதடா..!

புண்ணாக்குத் தண்ணி சுமந்த
தொட்டி குப்புறக் கிடக்குதடா..!
கோழிகள் குலவிய கூடும்
வெறுமையை சுமக்குதடா..!

உழவுக்கு காளைமாடு...
பாலுக்கு பசுவமாடு...
எப்போதும் ரெண்டெருமை...
விளையாடும் வெள்ளாடு...
எல்லாம் வளர்த்த கசாலை
இடிந்து போய் நிக்குதடா..!

எங்கயும் போகாம
இங்கயே இருக்கமடா..!
எங்க ஊரு எங்க மண்ணு
எங்களுக்கு உலகமடா..!

எங்களுக்கும் எம்எல்ஏ...
எம்பி எல்லாம் இருக்காங்கடா...
கண்ணுலதான் காணவில்லை
களவாணிப் பயலுகளை..!

முன்ன மழையால விவசாயம்
அழிஞ்சப்போ வருவாங்கடா..!
கண் துடைப்பு காசையும்
எங்களுக்குத் தருவாங்கடா..!

இப்ப இங்க விளையவில்லை
அதனால அவங்க வரலையடா..!
எப்போ ஓட்டுத் தேவையோ
அப்போ ஓடி வருவாங்கடா..!

விளஞ்ச பூமி வெடிப்பு போல
விரிஞ்சு கிடக்கு எங்க நெஞ்சம்..!
வெடிப்பு இனி மாறாது...
வேதனையும் சொல்லித் தீராது..!

-'பரிவை' சே.குமார்.

படம் வழங்கிய கூகிளுக்கு நன்றி.

செவ்வாய், 3 ஜூலை, 2012

அதீதத்தில் "தங்க விழுதுகள்" - சிறுகதை

“என்னப்பா ஆகுற காரியத்தப் பாக்க வேண்டியதுதானே… அதுதான் வர வேண்டிய சொந்த பந்தமெல்லாம் வந்தாச்சில்ல… அப்புறம் என்ன… ஏம்ப்பா… சொர்ண… நீ என்ன சொல்றே…” என்றபடி சொர்ணம் அருகில் வந்தார் சுதர்சனம்

“செய்ய வேண்டிய காரியத்தை செஞ்சுதானே ஆகணும்… பயலுககிட்ட கேளுங்க வேற யாரும் வரவேண்டியது இருக்கான்னு…” அருகில் நின்ற சின்னையாவிடம் “ஏப்பா… வெளிய நிக்கிற குமரேசனக் கூப்பிடு…” என்றார்.

குமரேசன் சோகம் தாங்கிய முகத்துடன் அவர் அருகில் வந்து “என்ன மாமா…” என்றான்.

“என்ன மாப்ளே… யாரும் வரணுமா… நேரமாகுதுல்ல ஆக வேண்டியதப் பாத்தாத்தானே இருட்டுறதுக்குள்ள முடிக்க முடியும்…”

“பாக்கலாம் மாமா… யாரும் வரவேண்டியதில்லை…”

“சின்னவன் எங்கே…?”

“வெளியிலதான் இருக்கான்…”

“அவன கூப்பிடு”

“நீங்கதானே கூப்பிடுங்க… நா அவங்கிட்ட பேசுறதில்ல மாமா…”

“ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தன் பேசாம இருந்தா எப்படிப்பா… மறுபடியுமா பொறக்கப் போறீங்க…”

“மாமா… அவங்கிட்ட பேச என்ன இருக்கு… நானும்தான் மாசாமாசம் பணம் அனுப்புறேன்… கேட்டா ஒண்ணுமே கொடுக்கலைம்பான்… நீங்களே அவங்கிட்ட கேட்டுட்டு ஆக வேண்டியதப் பாருங்க…”

“சரி அதெல்லாம் இப்ப எதுக்கு… அதை பேச நேரம் காலம் இருக்குப்பா…” என்றவர் வெளியே வந்து கதிரேசனிடம் “என்ன கதிரேசா… உனக்கும யாரும் வரவேண்டியது இருக்கா… இல்ல ஆக வேண்டியதைப் பாக்கலாமா…”

“பாக்கலாம் மாமா… அதுக்கு முன்னாடி கொஞ்சம் பைசல் பண்ணிக்கிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்…”

“உனக்கு என்னப்பா பைசல் பண்ணனும்?”

“இங்க பாருங்க ஆத்தாவுக்கு இம்புட்டு நாளா நாந்தான் பாத்தேன்… மூத்தவன் சல்லிக்காசு தரலை…”

“சரிப்பா… அதுக்கு என்ன இப்போ… அதை பேசுறதுக்கு இது நேரமில்லைப்பா… எதா இருந்தாலும் காரியம் முடிஞ்சதும் நாலு பேரு உக்காந்து பேசலாம்ப்பா…”

“இல்ல மாமா… இதுவரைக்கும் ஆத்தா எப்படியிருக்கான்னு கூட கேக்காதவன் இன்னைக்கு வந்துக்கிட்டு வாடிப்பட்டி மேளத்த வச்சி பேரெடுத்துட்டுப் போகலாமுன்னு பாக்கிறான்… இப்பவே அவனையும் வச்சி எல்லாத்தையும் பேசிடுறது நல்லது… எம்பொண்டாட்டி மூத்தரம் பீயெல்லாம் அள்ளி குளிப்பாட்டி பாத்துக்கிட்டா இன்னைக்கு மூத்தவ பவுசா வந்து தலமாட்டுல உக்காந்து அழுவுறா… எல்லாரும் பாத்துக்கிட்டுதானே இருக்கீங்க…”

“அவந்தான் பாக்கலை… உன்னய பெத்த மாதிரித்தானே அவனையும் பெத்தா… பெத்தவங்களுக்கு பாக்க எல்லாரும் கொடுப்பினை இருப்பதில்லை… அதுக்கு நீ சந்தோசப்படணும்ப்பா… சரி வா… நீர்மாலை எடுக்கப் போகணும்… காரியம் முடிஞ்சதும் நானே எல்லாத்தையும் பேசி சரி பண்ணுறேன்…”

“இல்ல மாமா… நாளைக்கி பேசலாம்ப்பான்னு சொல்லுவீங்க… வேல முடிஞ்சா எல்லாரும் போயிருவீங்க… எனக்கு இப்பவே பேசணும்…”

“என்னப்பா நீ… இங்க பாரு நாலு சனம் வந்திருக்கயில வரவு செலவப் பத்தி பேசினா யாருக்கு அசிங்கம்… உங்க ரெண்டு பேருக்கும் அசிங்கமாத் தெரியலைன்னாலும் பெத்த உசிரு ரெண்டுக்கும் அசிங்கமில்லையா… பெத்தவ பொயிட்டா… உங்கப்பன உசிடரோட கொல்லுற மாதிரி இல்லையா… நீ புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன்.”

அவர் அப்படி சொன்னதும் கதிரேசன் ஒன்றும் சொல்லாமல் அவருடன் சென்றான்.

ல்லாம் முடிந்து மூன்றாவது நாள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு எல்லாரும் சாப்பிட்டு சென்றதும் சொர்ணத்துடன் சில சொந்தங்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெற்றிலை காம்பைக் கிள்ளியபடி வந்த சுதர்சனம், “ஏம்ப்பா சொர்ணம், கதிரேசன் ஏதோ பைசல் பண்ணனுங்கிறான்…”

“என்னவாம் அவனுக்கு…” என்றார் நெற்றியை சுருக்கியபடி.

“உங்க ரெண்டு பேருக்கும் அவந்தான் இதுவரைக்கும் நல்லது கெட்டது பாத்திருக்கான்…”

“ஆமா… பெத்தவங்களுக்குத்தானே பாத்தான்…”

“ஆமா… ஆமா… இல்லேன்னு சொல்லலை… ஆத்தவோட நகையெல்லாம் அவனுக்கு வேணுங்கிறான்”

“….”

“என்னப்பா ஒண்ணும் பேசமாட்டேங்கிறே…?”

“அவரு என்ன சொல்றது. ஆத்தாவோட நகையை ரெண்டு பங்கா வைக்கணும்” என்றான் குமரேசன்.

“பாத்ததெல்லாம் நானு… பங்கு போட வந்திட்டிட்டாரு… பங்கு போட…” கோபமாக வார்த்தைகளை விட்டான் கதிரேசன்.

“நானும்தான் மாசா மாசம் பணம் அனுப்பியிருக்கேன்… இப்ப ரெண்டு நாளா எம்புட்டு செலவு தெரியுமா?”

“இப்ப பாத்தது ரெண்டு பேருக்கும் பாதி பாதிதானே… அதை கணக்குப் பண்ணி வாங்கிட்டுப் போயிடுவேயில்ல… அப்புறம் என்ன…”

“ஏம்ப்பா என்னது… பாசத்தை வெல பேசிக்கிட்டு… அதுக்கு சண்டை வேற போட்டுக்கிட்டு… உக்காருங்கடா… ” கோபமாக கத்திய சுதர்சனம், “இங்க பாரு சொர்ணம்… உம்பொண்டாட்டி நகையை நீயே ஒங்காலத்துக்கும் வச்சிக்க… நீ யாருக்கு கொடுக்கணுமின்னு நினைக்கிறியோ… அவங்களுக்கு கொடுத்துக்க… இப்ப இருக்க சூழ்நிலையில இதுதான் நல்லது”

“வேணாம் சொர்ணம்… அவ கிடந்த கஷ்டப்படும் போது போய் சேரக்கூடாதான்னு நானே சத்தம் போட்டிருக்கேன். ஆனா இன்னைக்கு அவ இல்லாத உலகத்துல நா தனிச்சிருக்கணுமேன்னு நினைக்கும் போது… இப்ப நடக்கிறதைப் பார்க்கும் போதும் பேசாம அவ கூட போயிருக்கலாமோன்னு தோணுது. இதையெல்லாம் பாக்க வேண்டியது இல்லாம போயிருக்குமே…” பேசமுடியாமல் துண்டால் வாயை பொத்திக் கொண்டு அழுதார்.

“சரி விடு… அவனுகளுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்… நாந்தான் பாப்பேன்… இல்ல நாந்தான் பாப்பேன்னு பாசத்தை பங்கு போட்டுக்கிட்டாங்கன்னா சந்தோஷப்படலாம்… சரி விடு… என்ன பண்ணலாம் அதை சொல்லு…”

“இதுல நா சொல்றதுக்கு என்ன இருக்கு… பொம்பளப்புள்ளைக்கு இனி இவங்க எதுவும் செய்ய மாட்டாங்க… அதனால அதுகிட்ட எதாவது ஒரு தங்கத்தை கொடுத்திடுப்பா”

“அதெப்படி முடியும்… அதுக்கெல்லாம் கொடுக்க முடியாது… நாளக்கி அவரு வாங்கி வச்சிருக்க கடனை அவ அடைக்க வருவளா… நாங்கதானே அடைக்கணும் ரெண்டு பங்கா மட்டும் வையிங்க மாமா” குமரேசன் வேகமாக பேசினான்.

“எனக்கு ஒண்ணும் வேண்டாம்… எங்க ஆத்தாவுட்டு நகையின்னு ஒண்ணு கொடுத்தா கொறஞ்சா போயிடுவீங்க… என்னத்தை செஞ்சிட்டிங்க…” என்று கத்தியவள், “ஒரு நகை கொடுக்க மனசில்ல… இவனுகளோட என்ன உறவு வேண்டிக்கிடக்கு… இனி இவனுக கூட எனக்கு ஒட்டும் இல்ல… உறவும் இல்ல… நா இப்பவே போறேன்” என்று கிளம்ப… பார்த்துக் கொண்டிருந்த மாப்பிள்ளை, “ஏய் இருக்க பிரச்சினை பத்ததுன்னு நீ வேற… சும்மா கத்தாம உள்ள போ…”

“ஆமா… இப்ப நா என்ன சொல்லிப்புட்டேன்…”

“போடின்னா… போ… நாலு பேர் பேசிக்கிட்டு இருக்கும் போது வாய்க்கு வாய் பேசிக்கிட்டு… நீங்க பேசுங்க சித்தப்பா…”

“குமரேசா… நான் சொல்றதை கேளு… உனக்கு பசங்கதான்… சின்னவனுக்கு ரெண்டு பொம்பளப்புள்ளங்க இருக்கு… அதுக அப்பத்தாவுட்டு தங்கமுன்னு போட்டுட்டுப் போகட்டுமே… சின்னவங்கிட்ட செயினை கொடுப்போம்… அப்புறம் பொம்பளப்புள்ள… அதுக்கு இனி உங்க அப்பனாலயும் ஒண்ணும் செய்ய முடியாது… நீங்களும் இனி செய்வீங்கன்னு சொல்ல முடியாது அதனால அதுக்கிட்ட காப்பை கொடுக்கலாம்… ஆத்தாவிட்டு தங்கமுன்னு பொம்பளப்புள்ளக்கி கல்யாணம் பண்ணும் போது போடுமில்ல… உனக்கு மோதிரத்தை வச்சிக்க… என்ன குமரேசா…”

“அதுவும் எதுக்கு… அதையும் சின்னவனுக்கே கொடுங்க… நாங்க இனி நல்லது கெட்டது எதுக்கும் வரலை… ” கோபமானான் குமரேசன்.

“ஏய் என்னப்பா நீயி… இன்னும் ஒரு முடிவுக்கு வரலை… கேட்டதுக்கே இம்புட்டு கோபப்படுறே…”

“மாமா நா… ஆத்தாவுக்கு பாத்ததுக்காக நகையை கேக்கலை… அவன் பாக்கலையேங்கிற கோவத்துலதான் கேட்டேன்… அவங்கிட்டே கொடுத்திருங்க… எனக்கு வேண்டாம்” திடீரென கதிரேசன் நல்லவனாக மாறினான்.

“இல்லப்பா… பஞ்சாயத்துன்னு வந்திட்டா மூணு பேருக்கும்தான் கொடுக்கணும்… நீ காப்ப வச்சிக்க… பெரியவன் செயின எடுத்துக்கட்டும்… அக்காவுக்கு அந்த ரெண்டு மோதிரத்தையும் கொடுத்திடுங்க… என்ன சொர்ணம் நாங்க சொல்றது சரிதானே…”

சொர்ணம் பதில் சொல்லாமல் சிரித்தார்.

“என்னப்பா ஒண்ணும் சொல்லாம சிரிக்கிறே?”

“இல்ல… அவ இழுத்துக்கிட்டு கெடந்தப்போ இதுவரை பாத்த சின்னவன் பால ஊத்தியும் உயிரு போகலை… நா… பேரப்பய… எல்லாரும் ஊத்தியாச்சு…ம்… பாவி மனுசி போகமாட்டேனுட்டா… அப்ப நீதான் சொன்னே பெரியவனை நெனச்சுக்கிட்டே இருக்கு போல… அவன் பேரை சொல்லி ஊத்துங்கன்னு… அப்புறம் சின்னவன் நான் குமரேசன் வந்திருக்கேந்தான்னு….” பேசமுடியாமல் அடைத்த அழுகையை அடக்கிக் கொண்டு “வந்திருக்கேந்தான்னு ஊத்துனதும்தான் அந்த மூச்சி நின்னுச்சு… பாவி மனுசி பாசத்தை வச்சிக்கிட்டு தவிச்சா… ஆனா இதுக தங்கத்தைத்தானே பாக்குதுக… சுதர்சனம் அப்படியே என்னய மூணு பங்கா வக்கிறாகளா இல்ல யாராவது ஒருத்தர் எடுத்துக்கிறாங்களான்னு கேட்டு சொல்லுப்பா… அவ இல்லாத உலகத்துல அவதிப்படணுங்கிறது என் தலையெழுத்து… மகராசி கஷ்டப்பட்டாலும் நான் இருந்தேன் பாக்க… இப்ப எனக்கு இனி யாரு இருக்கா… கஷ்டப்படணுங்கிறது எந்தலையெழுத்து… அதை மாத்த முடியாதே…” உடைந்து அழுதார்.

பஞ்சாயத்து பேசியவர்கள் எல்லாரும் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தனர். அவரது வாரிசுகள் வாயடைத்துப் போயி நின்றனர்.

*************************

குறிப்பு : இந்தக் கதை ஜூலை-01 அதீதம் இதழில் வெளியாகி இருக்கிறது. எனது கதையை வெளியிட உதவிய  திருமதி.ராமலக்ஷ்மி அக்கா அவர்களுக்கும் நண்பர். எல்.கே உள்ளிட்ட அதீதம் குழுவினருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

அதீதத்தில் படிக்க... "தங்க விழுதுகள்" 

உங்கள் கருத்துக்களை இங்கும், மறவாமல் அதீதத்திலும் பதியுங்கள் உறவுகளே... கருத்துக்களே எனது ஆக்கங்களை செப்பனிடும் கருவி.

-’பரிவை’ சே.குமார்.

Thanks ----  Google (PHOTO)

சனி, 30 ஜூன், 2012

சிறு பூக்கள்..!





அலையவிட்ட மனங்களை
அறியவில்லை...
அலையும் கூந்தல்..!

***

குளிக்க மறுத்தது
உன் உதடு தொட்ட
என் கைக்குட்டை..!

***

மேகம் விலகியதால்
வெட்கப்பட்டு சிரித்தது
முழு நிலவு..!

***

உணர்வுகளெல்லாம்
அவளாகிப் போக
உறவுகள் எல்லாம்
அந்நியமாய்..!

***

ஆடும் மயிலென
நாசி தட்டிச் செல்கிறது
முன் இருக்கைப்
பெண்ணின் கூந்தல்..!

-'பரிவை' சே.குமார்

திங்கள், 25 ஜூன், 2012

மனசின் பக்கம்: எழுத நினைப்பவையும் சில வலிகளும்

அது என்னமோ தெரியலைங்க நிறைய சேமித்து நாளை... நாளை... என்று நாளைக் கடத்தி சட்டி காலியானதும் அகப்பையை விட்டு தேடுவதே பொழப்பாகிப் போச்சி... இப்படி யோசிச்ச கதைகளெல்லாம் காணாமலே போச்சுன்னா... நிறைய டைப் பண்ணி, பென் டிரைவ்ல போட்டு வச்சி ஒரு பென் டிரைவ்வை தெரியாம குப்பையில போட்டாச்சு... அடுத்ததை ஆபீஸ்ல பைல் காப்பி பண்றதுக்கு ஒருத்தனுக்கு கொடுத்து வாங்கி நம்ம சிஸ்டத்துல போட்டா பிளாங்கா இருக்கு... என்னென்னமோ பணணியாச்சு... எதுவும் வரலை... அம்புட்டுத்தான்னு நினைக்கிறேன். நிறைய இப்படியே தவற விட்டாச்சு.

நம்ம ஊர்ல சின்னச் செடிய ஒரு இடத்துல இருந்து பிடுங்கி இன்னொரு இடத்துல நட்டால வளருமான்னு சந்தேகம். ஆனா இங்க (அரபு நாட்டில்) பெரிய பெரிய பேரீச்சம்பழ மரங்களை பிடுங்கி நட்டு வளர்த்துப்புடுறாங்க... அதுவாவது பரவாயில்லை அலைனில் நாங்க இருக்கும் ஏரியாவில் ஒரு வேப்ப மரம் சாய்ஞ்சு வளந்து இருந்துச்சு... நான் தினமும் அந்த மரத்தைக் கடந்துதான் அலுவலகம் செல்வேன். ஒரு நாள் நான் போகும்போது ஒரு பாகிஸ்தானி அந்த மரத்தின் கிளைகளை வெட்டி தூரின் ஓரத்தில் குழி பறித்துக் கொண்டிருந்தான். சரி மரத்தை வெட்டப் போறாங்கன்னு பாத்துக்கிட்டே போனேன். நான் பெரும்பாலும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக மதியம் அந்த வழி வருவதில்லை. அதனால் அடுத்த நாள் அந்த மரம் இன்று இருக்காது என்று நினைத்தபடி போனால் அதே இடத்தில் வளைந்து நின்ற மரத்தை நேராக நிறுத்தி சுற்றி மண் அணைத்து தண்ணீர் விட்டிருந்தார்கள். இதுவாவது வளர்றதாவது அப்படிங்கிற நினைப்பில் தினமும் அந்த வழியே கடந்து கொண்டிருந்தேன். சில நாட்களாக அழகாக கிளைகளை விட்டு வளர்கிறது. இதை நண்பர் ஒருவரிடம் சொன்னபோது அவர் வா நான் ஒரு இடத்துக்கு கூட்டி போறேன் என்று கீரீன் முபாஸரா என்ற இடத்திற்கு செல்லும் வழியில் கூட்டிச் சென்றார். ஓரிடத்தில் ரோட்டோரமாக சுமார் 20 மரங்களை வேறிடத்தில் இருந்து கொண்டு வந்து நட்டிருக்கிறார்கள். சில மரங்கைள் தழைத்து வளர்ந்து இருக்கின்றன. என்னால் நம்பவே முடியவில்லை.

இங்க நல்ல வெயிலுங்க... கொல்லோ கொல்லுன்னு கொல்லுது.. நான் வரும் பாதையில் பேருந்து வசதி அவ்வளவாக இல்லாததால் நடந்தே அறைக்கு வந்துவிடுவேன். அப்படி வரும் போது ரோட்டின் ஓரத்தில் இருக்கும் புல்தரையில் மெஷின் மூலமாக புல் வெட்டிக் கொண்டிருந்தார் ஒரு நண்பர். பார்க்க இந்தியர் போலத்தான் இருந்தார். இது போல் புல் வெட்டுபவர்களைப் பார்த்திருக்கிறேன். நாலு சக்கர வண்டியில் அமர்ந்து அதை புல் இருக்கும் ஏரியாவில் ஓட்டி வெட்டுவார்கள். ஆனால் இவர் இந்த வெயிலில் காலை முதல் மாலை வரை நம்ம ஊரில் மொசைக் போடுவதற்கென்று ஒரு மிஷின் வைத்திருப்பார்களே... அதுபோல மோட்டாரை ஆன் செய்து ஓட்டி ஓட்டி புல் வெட்டிக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த மிஷினை மேலாக ஓட்டினால் வெட்டாது போல முழுப் பலமும் கொடுத்து அதை தள்ளுகிறார். சுட்டெரிக்கும் வெயிலில் வேர்வைக் குளியலில் அவர் கஷ்டப்பட்டு வேலை செய்வதை பார்க்கும் போது மூன்று மணி வரை ஏசி அறையில் இருந்து விட்டு ஒரு இருபது இருபத்தைந்து நிமிடம் நம்மால் வெயிலில் நடக்க முடியவில்லையே என்று நினைத்து அவரைப் பார்த்தால் அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் எதோ மர்மம் இருந்தது... என்னவாக இருக்கும். நாம தான் இப்படி கஷ்டப்படுறோமுன்னா வெள்ளையுஞ் சொள்ளையுமா காச மிச்சப்படுத்திக்கிட்டு இந்த வேகாத வெயில்ல போறாம் பாருன்னு நினைச்சிருப்பாரு போல... சரி விடுங்க.

நாட்டுப்புறப் பாடல்கள் இப்போது ஒரு சிலரால் மட்டுமே வாழ்கின்றன என்பதே உண்மை என்றாலும் இன்னும் கிராமங்களில் இந்தப் பாடல்கள் அழியாமல் இருப்பதில் சின்ன சந்தோஷம். சினிமாவில் வரும் நாட்டுப்புறப்பாடல்களும் படத்தின் வெற்றியை மையமாக வைத்தே எழுதப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டுப்பாடல், குலவைப்பாடல், ஒப்பாரிப்பாடல், நலுங்குப்பாடல், திருவிழாப்பாடல், குலவைப்பாடல், நடவுப்பாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவைகளைப் பற்றி நாட்டுப்புறப்பாடல்கள் என்ற தலைப்பில் ஒரு சில பதிவுகள் எழுத எண்ணம். ஆனால் இது குறித்து எழுத நிறைய தகவல்கள் திரட்ட வேண்டும். மதியம் வரும்போது இன்று எழுதலாம்... இன்று எழுதலாம் என்று நினைத்து வந்து யோசனைக்கு தலையணை கொடுத்து விடுகிறேன். பார்க்கலாம் விரைவில் எழுத எண்ணம்... எப்படியும் சில பகிர்வுகளாவது பகிருவேன் என்று நம்புகிறேன்.

இதே போல் ஒரு கல்லூரிக் கதையும் உறங்கிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் உண்மை நிறைய கற்பனை கலந்து ஒரு தொடராக குறிப்பிட்ட நாளில் கொண்டு வர எண்ணம். ஆனால் செங்கோவி போல் தொடர் எழுத இன்னும் உத்வேகம் வரவில்லை. நீண்ட நாளாக கிடப்பில் இருக்கும் இந்த (தொடர்) கதை, நேற்று தேவா அண்ணனின் என் பிரண்டைப் போல யாரு மச்சான் படிச்சதும் மனசுக்குள் ஏறி உக்காந்து எழுத சொல்லி அடம்பிடிக்குது... இதுக்கு தலையணை கொடுத்தாலும் படுக்க மாட்டேங்குது... இதையும் எழுத எண்ணம்... பார்க்கலாம்...

விஷால் இப்போ பள்ளிக்கூடம் போறாருங்க... அவரைப் பற்றி எழுத நிறைய இருக்கு... பள்ளிக்கூடம் கிளம்புற வரை நல்லபிள்ளைதான் அப்புறம் அழுத ரணகளப்படுத்துறதுல நாறப்புள்ளையாயிடுவாராம். பள்ளிக்கூடத்துக்குப் போகமா இருக்க அவரு கேக்குற கேள்விகள் இருக்கே... அடேங்கப்பா... அவங்க அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க... போன வாரம் அக்கா கிளம்பும் போதே கிளம்பி தயாராயிட்டு தூங்கிட்டாராம். எழுப்பினதும் எல்லாருக்கும் அப்பா ஸ்கூலுக்கு வருவாங்க... எனக்குத்தான் அப்பா இல்லையே... நான் மிஸ் கேட்டா என்ன சொல்றதுன்னு மழலையா கேட்க, அம்மணி ஆடிப்போயிட்டாங்களாம். அப்பா துபாயில இருக்காங்கன்னு எல்லார்கிட்டயும் சொல்லுவியல்ல அது மாதிரி மிஸ்கிட்டயும் சொல்லு அப்படின்னு சொல்ல... இங்க வரமாட்டாங்கள்ல... என்ன சொல்றதுன்னு ரொம்ப கவலைப்பட்டாராம்... இப்படி நிறைய இருக்கு... கொஞ்சம் கொஞ்சமா பாத்தாத்தான் சுவராஸ்யம்.

இப்படி எழுதலாம்... எழுதணும்... எழுத வேண்டும் என்று மனசுக்குள் நிறைய தேங்கிக் கிடக்க... எழுத முடியாமல் இழுத்துக் கொண்டே போகக் காரணம் பின்னால் சொல்பவைதான் என்பதே உண்மை... கூடுதல் வேலைப்பளூ மனச்சோர்வை கொடுப்பதாலும்... நாம் எல்லாரும் வேண்டும் என்று மரியாதை வைத்திருக்கும் நபர்கள் எல்லாம் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுகிறார்களே என்ற நினைப்பின் நீங்கா வலியும்... நம்ம வளர்ச்சி கண்டு சந்தோஷப்பட வேண்டிய இடத்தில் இருக்க வேண்டிய நெருங்கிய சொந்தங்கள் எப்படி வளர்கிறீர்கள் பார்ப்போம் என்று சவால் விடுவதை நினைத்து வெம்பும் மனதின் வேதனையும்... இன்னும் சில் வலிகளும் சேர்ந்து எழுத நினைப்பவைகளை அழித்து மறைக்கின்றன. நான் மேலே சொன்ன வலிகள் எல்லாம் நாங்கள் வீடு கட்ட அஸ்திவாரம் போட நினைக்கும் போது கட்டிடமாக வளர்ந்த வலிகள்... எவ்வளவு பேச்சுக்கள்... எத்தனை சவால்கள்... சாபங்கள்... இத்தனைக்கும் நானும் என் மனைவியும் எல்லாரும் வேண்டும் என்று நினைப்போமே தவிர யாரையும் தாழ்த்தியோ தூற்றியோ வாழப் பிடிக்காதவர்கள்... வாழ நினைக்காதவர்கள்.  சொந்தங்களின் சாபம் எங்களை ஒன்றும் செய்யப் போவதில்லை... அட ஏழு வயசு முதியவளிடம் சவால் விடுகிறார்கள் 50 வயதைக் கடந்த இந்தக் குழந்தைகள்.  இதை எங்க போய் சொல்றது?.

மனசின் பக்கம் இன்னும் சில பகிர்வுகளுடன் என்றாவது ஒரு நாள் தொடரும்...

-'பரிவை' சே.குமார்.
கூகிள் : படத்துக்கு நன்றி

வெள்ளி, 22 ஜூன், 2012

மழை நேரத்து வானம்


நேற்றிரவு ஆரம்பித்த மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. சற்று நேரம் அமைதி காப்பதும் பின்னர் சோவென்று அடித்துக் கொண்டு ஊத்துவதுமாக தொடர்கிறது. வீதியெல்லாம் வெள்ளக்காடாக தண்ணீர் நிற்கிறது. இந்த மழை தூறலாக ஆரம்பிக்கும் போதே முதலில் போவது கரண்ட்தான். நேற்றிரவு போனது இன்னும் வரவில்லை. நல்லவேளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் வேலைக்கு செல்ல வேண்டியதில்லை. இல்லையென்றால் இந்த மழையில் ரொம்ப சிரமப்பட வேண்டியிருந்திருக்கும். சை இந்த மழை எப்பத்தான் விடுமோ தெரியலை. வெயில் தாங்க முடியாமல் மழை வந்தா பரவாயில்லையின்னு நினைப்பு வரும். ஆனா மழை தொடர்ந்து பெய்தால் ஏன் தான் இந்த மழை வருதோன்னு நினைப்பு வர ஆரம்பிச்சிருது என்று மனசுக்குள் நினைத்தபடி கட்டிலில் படுத்திருந்தான் கணேசன்.

திவ்யா,  பிறந்த ஊர்க்  கல்யாணத்துக்கு நேற்றுப் போனவள் நாளைதான் வருவதாக சொல்லியிருந்தாள். இந்த நேரத்தில் அவள் இருந்தால் மழை நேரத்தில் சாப்பிடுவதற்கென்றெ சில பதார்த்தங்களை செய்து தருவாள். வேலைக்காரப் பெண் காலையில் வந்து தோசை வார்த்துக் கொடுத்து மதியத்துக்கும் சமைத்து வைத்துவிட்டு மாலை வருகிறேன் என்று சொன்னபோது இந்த மழையில் இனி நீ வரவேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். தண்ணீருக்குள் நீந்தி வரவேண்டியதில்லை என்பதில் அவளுக்கும் சந்தோஷம்தான்.

மழையின் சோவென்ற சப்த்தத்தை கேட்டபடி எவ்வளவு நேரம்தான் படுத்திருப்பது டிவி பார்க்கலாம் என்றால் கரண்டு வேறு இல்லை. பழைய புத்தகங்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் கொஞ்ச நேரத்தில் அவனுக்குப் புளித்துவிட்டது. உடனே அவனது புத்தகங்கள் அடுக்கியிருக்கும் செல்பை திறந்து கல்லூரியில் அவனுக்கு மற்ற நண்பர்கள் போட்டுக் கொடுத்த ஆட்டோகிராப் டைரியை எடுத்துப் படிக்கலானான். எத்தனை முறை படித்தாலும் நண்பர்களின் எழுத்துக்கள் அலுப்பதேயில்லை. ஒவ்வொரு பக்கமாக படித்துக் கொண்டே வந்தவன் ஒரு நண்பன் எழுதியிருந்ததைப் படித்ததும் சிரித்துக் கொண்டே 'ஆம் நண்பா நீ சொன்னது சரிதான்... நீதி நேர்மை என்று போனால் நடுவீதிதான்' என்று சத்தமாக சொல்லிக் கொண்டான்.

அடுத்த பக்கத்தை திருப்பியவன் நீண்ட பெருமூச்சை விட்டான். எங்கே இருக்கிறாய்? எப்படியிருக்கிறாய்?? மனசுக்குள் கேள்வி கேட்டான். எனக்குள் விதைத்து நீயே அறுத்துச் சென்றுவிட்டாயே நியாயமா? அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொல்லிக் கொண்டான். என் உயிரின் உறவே ஆரம்பத்திலேயே படிப்பவர்களுக்குப் புரிந்துவிடும் அவன் உயிர் அவளென்று... தொடர்ந்து படித்தவன் அப்படியே அந்தப் பக்கத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டு படுத்தான்.

அந்த உயிரின் உயிர் காயத்ரி கல்லூரியில் மூன்றாண்டுகள் அவனுக்குள் அழிந்திருந்தவள். இப்படியிருப்போம்... அப்படியிருப்போம்... என்றெல்லாம் பேசியவள்... ஏனோ தெரியவில்லை... கரைந்து போனாள். காயத்ரியுடனான காதல் திவ்யாவுக்கு தெரியும். பல முறை அவள் இந்தப் பக்கங்களைப் படித்து இருக்கிறாள். இதெல்லாம் இல்லையின்னா கல்லூரி வாழ்க்கையே வேஸ்ட்டுங்க என்று அவனுக்கு ஆதரவாக பேசுவாள். அவர்களுக்குள் சண்டை வந்தால் கூட தப்பித்தவறி நீ ஒருத்திய காதலிச்சவந்தானேன்னு சொல்லமாட்டா. அவனுக்கு கிடைத்த அருமையான மனைவி. இவள் கிடைக்கத்தான் அவள் விலகினாளோ என்று அவன் பலமுறை நினைத்திருக்கிறான்.

சூடா காப்பி போட்டு சாப்பிடலாம் என்ற போது அவனது செல்போன் கூப்பிட்டது. எடுத்து யாரென்று பார்த்தவன் மச்சான் என்பதை பார்த்ததும் "என்னடா மச்சான்?" என்றான்.

எதிர் முனையில் சுரேஷ், "மாப்ளே என்ன பண்றே... தனியாத்தானே இருக்கே?"

"ஆமா... போரடிக்குதுடா... கரண்ட் வேற இல்லை... உன் தங்கச்சி வேற ஊருக்குப் போயிருக்காளா தனியா குர்றான்னு உக்காந்திருக்கேன். இப்பத்தான் காபி போட்டு சாப்பிடலாமுன்னு நினைச்சேன்."

"பீச்சுக்கு ஒரு டிரைவ் போகலாமா?"

"என்னடா சொல்றே இந்த மழையில பீச்சுக்கா?"

"ஆமா... நம்ம ஆளு ஒருத்தி இருக்கா. பேமிலி பிகர்தான்... அவளோட ஜாலியா பீச்சுக்குப் பொயிட்டு எஞ்சாய் பண்ணிட்டு வரலாம்..."

"பொண்ணு கூடவா... அய்யய்யோ..."

"என்ன நொய்யய்யோ... நீ இதுக்கு முன்னால் ஜாலி ட்ரைவ் வந்ததில்லையாக்கும்"

"அ...அது கல்யாணத்துக்கு முன்னாடி... உந்தங்கச்சி வந்ததுக்கு அப்புறம் இது மாதிரி ட்ரைவ் எல்லாம் விட்டுட்டேன்ல்ல..."

"இப்பதான் தங்கச்சி இல்லையில்ல... மழை வேற கொட்டிக்கிட்டு இருக்கு... நாம ஒரு முறை மகாபலிபுரம் போனோம் பாரு... அது மாதிரி ஒரு சூப்பர் ட்ரைவ்... எனக்கு ரொம்ப குளோஸ் இந்தப் பொண்ணு... மேரேஜ் ஆனவதான்... அவ பிரண்டையும் கூட்டிக்கிட்டு வாறேன்னு சொன்னா... என்ன சொல்றே... சும்மா மழையில ஒரு ஜாலி... அவங்கள கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாறேன்... கிளம்பி இரு..."

"இல்லடா... நான் வரலை... நீ பொயிட்டு வா..." என்றபடி போனை கட் பண்ணினான்.

காபி போட்டவன் மனசுக்குள் நண்பன் சொன்னது டிக்காசனாக இறங்கியது. ஜாலி டிரைவ்... மகாபலிபுரம் போனது மாதிரி... ஆமா... அன்னைக்கு கூட வந்தது கிளாஸ்மேட் மல்லிகா, எஞ்சாய்ங்கிற வார்த்தைக்கு அன்னைக்குத்தான் அர்த்தமே புரிஞ்சது. அதுக்கப்புறம் அது மாதிரி ட்ரைவ் எதுவும் அமையலை. ஆனா இன்னைக்கு மறுபடியும்... யோசித்தான்... யோசனை அவனை வென்றது. போன் செய்து தானும் வருவதாக சொன்னான்.

வாசலில் காரை நிறுத்திக் கொண்டு சுரேஷ் மிஸ்டு கால் கொடுக்கவும் வேகவேகமாக் வீட்டை பூட்டிக்கொண்டு மழையில் ஒடிப்போய் காரின் முன்பக்கம் ஏறிக் கொண்டான்.

"என்னடா... ஆரம்பத்துல சாமியார் மாதிரி பேசினே... வெளக்கெண்ண... தங்கச்சியிருந்தா நாங்களே கூப்பிட்டிருக்க மாட்டோம்... சரி பின்னால பாரு... சிவப்பு சுடி மஞ்சு என்னோட பிரண்ட்... பக்கத்துல இருக்கது காயத்ரி... அவளோட பிரண்ட்... இது உன்னோட காயத்ரி இல்ல... இது வேற காயத்ரி..." சொன்ன சுரேஷ் பலமாக சிரித்தான்.

"ஹாய்" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான்.

"என்ன சுரேஷ் உங்க பிரண்ட் பேச காசு கேப்பாரு போல..."

"அவன் கொஞ்சம் மூடிடி... கொஞ்ச நேரமானா சரியாயிடுவான்..." என்ற போது கணேசனின் செல்போன் அடித்தது.

"டேய் உந்தங்கச்சிடா"

"மஞ்சு யாரும் பேசாதீங்க... பேசுடா... இது எதையும் உளறிடாதே"

"ம்..." என்றபடி போனை ஆன் பண்ணினான்.

"என்னம்மா... என்ன பண்ணுறே?"

"இருக்கேன். நீங்க என்ன பண்ணுறீங்க... மழை விட்டிருக்கா?"

"எங்க விடுறது...பேய் மழை பேயுது..."

"வேலக்காரப் பொண்ணு வந்தாளா?"

"ம் வந்தா... காலையில தோசை, மத்தியானத்துக்கு சமைச்சு வச்சா... பாவம் இந்த மழையில இனி வர வேண்டான்னு சொல்லிட்டேன்."

"நீங்க என்ன செய்வீங்க... தோசை சுடுறேன்னு கை கால்ல சுட்டுக்குவீங்க... நம்ம பஞ்சண்ணன் கடை நம்பர் பிரிட்ஜ் மேல இருக்க டைரியில இருக்கு, போன் பண்ணி எதாவது டிபன் நைட்டுக்கு வாங்கிக்குங்க..."

"ம்..."

"வீட்லயா இருக்கீங்க...?"

"இல்ல... அது வந்து..."

"என்ன வந்து... எங்க இருக்கீங்க?"

"உங்க அண்ணன் கூட பீச்சுக்குப் போறேன்..."

"சுரேஷ் அண்ணன் கூடவா... இந்த மழையிலயா... சரியாப் போச்சு... சாதரண குளிர் காத்து வீசினால ஆயிரத்தெட்டு தும்மல்... இதுல... ஏங்க எதையாவது இழுத்துக்காதீங்க... நானும் பக்கத்துல இல்ல..."

"இல்லம்மா...சும்மா மழை நேரத்துல பீச்சு எப்படியிருக்குன்னு பாத்துட்டு அப்படியே..."

"நீங்க அண்ணங்கிட்ட போனை குடுங்க"

"இந்தாடா உங்கிட்ட பேசணுமாம்..."

"என்னம்மா... அப்பா அம்மால்லாம் நல்லாயிருக்காங்களா?"

"ம்... ஏண்ணே... அவரைப் பத்திதான் உங்களுக்கு தெரியுமே... சைனஸ் வேற இருக்கு... மழையில நனஞ்சு எதையும் இழுத்துக்கிட்டுறாமா.... பேசாம அவரை வீட்டுல விட்டுடுங்கண்ணா... ப்ளீஸ்"

"இல்லம்மா... வண்டியவிட்டு இறங்கமாட்டோம்..."

"அவருகிட்ட கொடுங்க..."

"ஏங்க கீழ இறங்காதீங்க... காத்தும் மழையுமா இருக்கு... அங்க ரோடெல்லாம் தண்ணியா கிடக்கும். எது குழி எது ரோடுன்னு தெரியாம இருக்கும்... இந்த நேரத்துல பீச்சுக்குப் போகலைன்னு யாரு அழுதா... நீங்க திரும்பி வீடு போற வரைக்கும் எனக்கு படக்குப் படக்குன்னு இருக்கும்... வீட்டுக்குப் போனதும் போன் பண்ணுங்க.... கீழ இறங்காதீங்க... வீட்டுக்குப் போனதும் கையில சுட்டுக்காம சுடுதண்ணி வச்சி அதை குடிங்க... இல்ல வேணாம்... கெட்லர் இருக்குல்ல அதுல தண்ணி சூடு பண்ணிக்கங்க... சரி வக்கிறேன். பாத்துப் போங்க..." திவ்யா போனை வைக்கவும்

"என்னடா தங்கச்சிக்கிட்ட வீட்டுல இருக்கேன்ன்னு சொல்ல வேண்டியதுதானே... எரும..."

"இல்லடா அவகிட்ட பொய் சொல்ல வராது..."

"அப்புறம் நாங்க கூட இருக்கதை சொல்லலை... மறைக்கிறதும் பொய்தானே..." என்றாள் மஞ்சு.

"அது..."

"ஏய்... அவன வாறாதே... அவன் கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப நல்லபுள்ள..."

"உங்க பிரண்ட பின்னால வரச்சொல்லுங்க... அந்த நல்ல புள்ளய பாப்போம்."

"பின்னால போறியாடா..."

"வேண்டாம்... போடா..."

சிறுது நேரத்தில் அவனது செல்பேசி மீண்டும் அழைக்க... "அப்பா... தங்கச்சியாத்தான் இருக்கும்... வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன்... போனதும் போன் பண்ணுறேன்னு சொல்லு... இப்ப பேசுனதோட பீச்சு பொயிட்டு வாற வரைக்கும் போன ஆப்பண்ணிப் போடு..."

"சரி இருடா... சத்தம் போடாம இருங்க..." என்றபடி போனை ஆன் செய்து "என்னம்மா... நீதான் சொல்லிட்டியல்ல... உங்க அண்ணன் கூடத்தான் வந்திருக்கேன். நீ சொன்ன பின்னால நான் இறங்க நினைச்சாலும் அவன் இறங்க விடமாட்டான். சும்மா ஒரு ரவுண்ட் பொயிட்டு மழை நேர பீச்சைப் பாத்துட்டு அப்படியே திரும்பிடுவோம்... நீ பயப்படாம இரு... வீட்டுக்கு வந்ததும் உனக்கு கூப்பிடுறேன். ஓகே... " என்றபடி போனை வைத்தவன்

என்ன நினைத்தானோ தெரியவில்லை. "மச்சான் ஒரு பஸ் ஸ்டாப் ஓரமா நிப்பாட்டு நான் பஸ் இல்லேன்னா ஆட்டோவுல வீட்டுக்குப் போய்க்கிறேன். நீங்க பீச்சுக்குப் பொயிட்டு வாங்க" என்றான்.

"என்ன மச்சான்... என்னடா ஆச்சு..."

"இல்லடா... ஏதோ பழைய சபலத்துல வந்துட்டேன்... உன் தங்கச்சிக்கு உயிரெல்லாம் இங்கதான் இருக்கும்... நான் வீடு திரும்பிப் போற வரைக்கும் அவ ஆயிரம் போன் பண்ணீருவா... எத்தனை சாமிக்கு நேர்த்திக்கடன் வச்சாளோ தெரியாது... கர்ப்பமா இருக்க அவ படபடப்போட டென்சனாவே இருப்பா... கல்யாணம் ஆகி இந்த ஆறு மாசத்துல அவ அப்பா, அம்மா எல்லாம் ரெண்டாம்பட்சமாயாச்சு... நாந்தான் அவளுக்கு உலகம். இன்னைக்கு ஒரு நாள் சந்தோஷத்துக்காக அவகிட்ட பொய் சொல்லிட்டு அவ கூட இருக்க ஒவ்வொரு நிமிசமும் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு புழுங்கணும். வேண்டான்டா... அவ ஊருக்குப் பொயிட்டு நான் ஒரு போன் பண்ணினதுதான்... ஆனா அவ எத்தனை தடவ பண்ணியிருப்பா தெரியுமா... எனக்குள்ள இருந்த ஜாலி ட்ரிப் ஆசை இன்னையோட செத்திருச்சிடா... சாரிடா... என்னய இங்கயே எறக்கிவிடு... இனி மழையில நனஞ்சாலும் எனக்கு ஒண்ணும் ஆகாது." என்ற அவனது பேச்சில் மனைவியின் நேசம் மறைக்காமல் தெரிந்தது.

-'பரிவை' சே.குமார்
கூகிள் : படத்துக்கு நன்றி