மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 25 ஜூன், 2011

உலர்ந்த புன்னகை... உலராத காதல்...



காய்ந்த கண்மாய்க்குள்
காலாற நடந்த போது
தண்ணீர் தூக்கும் உன்
உருவம் கானல் நீராய்..!

பாலத்தில் படுத்து
பால் நிலா பார்த்தபோது
நிலவில் ஊடே உன்
உருவம் கலைந்த மேகமாய்...!

கோயில் சுவற்றில் வரைந்த
ஓவியங்களை வியந்து
பார்த்த கண்ணுக்குள் உன்
உருவம் வரையாத ஓவியமாய்...!

இன்னும் என்னுள்
இறக்காத உன் நினைவுகள்...
அடிக்கடி அழ வைக்கின்றன...

அழுகை ஆண்மைக்கு
அழகல்ல என்பாயே...
அழுக வைத்துச் செல்வது
பெண்மைக்கு அழகா..?

உன்னை கேட்க நினைத்து
உயிருக்குள் புதைத்தேன்...
நினைவுகளை விதையாக்கி
நித்தம் விதைக்கிறேன்...

இழந்த காதலை
இதயத்தில் சுமந்து
உலர்ந்த புன்னகையுடன்
உலகுக்காக வாழ்கிறேன்...

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 20 ஜூன், 2011

உறவுகள் சுகந்தானே...



வணக்கம். எல்லாரும் நலம்தானே..? சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. உடல் நலம் மற்றும் சில காரணங்களால் நீண்ட விடுமுறை. நலம் விசாரித்த நட்புக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உடல் நலம் தொடர்பாக ஊருக்குப் போய் வந்த நிலையில் மனம் எதிலும் நாட்டமின்றி இருக்கின்றது.

சில மாதங்களுக்கு முன்பு வரை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்று எழுதி வந்த நான் இனி அடிக்கடி எழுதுவேன் என்று தோன்றவில்லை... அப்படி ஒரு எண்ணமும் எனக்குள் உதிக்கவில்லை. எனவே இனி இடைவெளியின் பின்னணியில் இயன்றவரை தொடருவேன். விரைவில் வருகிறேன்... எனது படைப்புடன்...



நட்புடன்,

சே.குமார்.

சனி, 9 ஏப்ரல், 2011

சுவடுகள் (நிறைவுப் பகுதி)

எல்லாரும் நல்லாயிருக்கீங்களா... கொஞ்சம் உடல் நலமின்னையும் அதிக வேலைப்பளுவும் வலைப்பூவினை வாசம் செய்ய விடாமல் தடுக்கின்றன... விரைவில் வருகிறேன்... அதுவரை மறக்காமல் இருக்க இந்தப் பதிவு... எப்பவும் போல் எல்லாரும் வாங்க... படிங்க... நான் உங்கள் வலைப்பூக்களுக்கு சில நாளில் வருகிறேன்...

சுவடுகள் முதல் பகுதி படிக்க


அதே நேரம்...

வேகமாக வந்து கொண்டிருந்தவன், கைக்குழந்தையுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் வண்டியின் வேகத்தைக் குறைத்து அவளருகில் வண்டியை நிறுத்தி "கவிதா..?" என்றான்.

"ஆமா நீங்க..." என்று புருவத்தை சுருக்கியவள், "யேய்... நவீன் எப்படிடா இருக்கே" என்றாள்.

"நல்லாயிருக்கேன். கல்யாணம் ஆயிடுச்சா..."

"கையில புள்ளையோட நிக்கிறேன்... கல்யாணம் ஆயிடுச்சான்னு கேக்கிறே..."

"எங்களை எல்லாம் மறந்துட்டேயில்ல... கல்யாணத்துக்குக்கூட கூப்பிடலை... சரி... குட்டி பேரு என்ன..."

"லாவண்யா"

"லாவ்... நல்ல பேரு... சந்தோஷமாயிருக்கேல்ல..."

"சந்தோஷமா இருக்கேன்டா... அவரு இங்க கெமிக்கல் பிசினஸ் பண்றாரு... நல்ல வருமானம்... அம்பத்தூர்ல வீடு. அவரு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்னாரு. அதான்டா இங்க நிக்கிறேன்."

"இப்ப வருவாரா லேட்டாகுமா?"

"இல்ல வந்துடுவாரு?... எதோ அவசரமா போற போல"

"ஒண்ணும் அவசரமில்லை... சும்மாதான்... ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?"

"என்ன..?"

"காலேசு முடிஞ்சதுக்கு அப்புறம் சந்துருவ பாத்தியா..?"

"இல்லடா... பாக்கலை..." முகம் மாறியது.

"சாரி... கேட்டதுக்கு மன்னிச்சுக்க..."

"இதுல என்ன மன்னிக்கிறதுக்கு இருக்கு... நான் காலேசுக்கு வந்த புதுசுல எனக்கு நீ லவ் லெட்டர் குடுத்தே ஞாபகம் இருக்கா?"

"ஆமா... அதுதான் ரிஜெக்ட் ஆயிடுச்சே... "

"உன்னைய ஒதுக்கி அவனை காதலிச்சேன்... பட், அவன் அந்தப் பிரச்சினையில நடந்துக்கிட்ட விதம் பிடிக்கலை. அத்தோட ரெண்டு பேரும் பிரிஞ்சதுதான் அப்புறம் பாக்கவேயில்லை"

"இருந்தாலும் அவன் மேல தப்பில்லையில்ல..."

"இல்லதான்... ஆனா மனசுக்குள்ள சில கீரல் விழுந்தாச்சு... அப்புறம் வாழ்க்கை முழுவதும் அந்தக் கீரல் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லையா? இப்ப என்ன மறந்து அவனும் சந்தோஷமா இருப்பான்ல."

"அவன் உன்னைய மறந்திருப்பான்னு எப்படி சொல்றே... அப்ப நீ அவனை மறந்துட்டியா?"

"..."

"சொல்லு... பதிலக் காணோம்..."

அவள் குனிந்த தலை நிமிர்ந்தபோது கண்களில் கண்ணீர். "சாரிடி.. நீ சொன்னதால கேட்டேன். சரி விடு... அப்பா அம்மால்லாம் நல்லாயிருக்காங்களா?"

"நீ கேட்டது தப்பில்லடா... எதுக்கு பேச்சை மாத்துறே.... பேசலாம்... எனக்கு அவன் ஞாபகம் வராத நாளே இல்லடா... அன்பான கணவர், அழகான குழந்தையின்னு ஆன பின்னாலயும் எம் மனசுக்குள்ள அவன் இருக்கான்டா... யாராவது சந்துருன்னு கூப்பிட்டா என்னையறியாம திரும்பி பாக்கச் சொல்லுதுடா... ஒவ்வொரு வருசமும் ஜனவரி பதினஞ்சு அவன் பேர்ல அர்ச்சனை பண்றதை இன்னும் நிப்பாட்ட முடியலைடா... அப்புறம் நான் எப்படிடா அவனை மறக்கிறது..." பொது இடம் என்பதால் வந்த அழுகையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"சாரிடி... உன்னோட உள் மனசு சோகத்தை நான் அதிகமாக்கிட்டேன்..."

"இல்லடா... இதெல்லாம் யார்கிட்டயாவது சொல்லி அழணுமின்னு ரொம்ப நாளா எனக்குள்ள இருந்துச்சு. இதே ஒரு தோழியா இருந்தா தோள்ல சாஞ்சு அழுது என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியிருப்பேன். நீ தோழனாயிட்டே உங்கிட்ட என் பாரத்தை எறக்கி வைக்க முடியும். இப்ப நான் அழுதா இந்த சமூகத்தோட பார்வையே வேற மாதிரி இருக்கும். அதனால வந்த அழுகைக்குகூட அணைதான் போட முடியுது."

"சரி... அவனை பாக்கணுமின்னு ஆசையிருக்கா?"

"இல்லடா... அவனை சாகுற வரைக்கும் பாக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அவங்கிட்ட என் நெனப்பு இருந்தாலும் குடும்பம் குழந்தையின்னு ஆயிட்டா கொஞ்சம் மாறுவான். அப்புறம் கால ஓட்டத்துல ரெண்டு பேருமே நினைவுகளை பொக்கிஷமாக்கி வாழ்ந்து பழகிடுவோம். நான் தினமும் தெய்வத்துக்கிட்ட வேண்டுறது என்ன தெரியுமா... சந்துருவ மட்டும் என் கண்ணில் காட்டிடாதே... நான் சாகுற வரைக்கும் அவனைப் பாக்கவே கூடாதுன்னுதான்... நானும் நம்ம நண்பர்கள் பலரை இந்த சென்னையில பாத்துட்டேன். அவனும் இங்கதான் எங்காவது இருப்பான்னு மனசுக்குள்ள ஓடுது. என் பிரார்த்தனையோ என்னவோ இன்னைக்கு வரைக்கும் பாக்கலை. இனியும் பாக்க மாட்டேன்னு நினைக்கிறேன்."

"சரிடி... எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இரு. உன் மொபைல் நம்பர் சொல்லு. நான் கால் பண்றேன். அப்புறம் ஒரு நாள் உன் ஹஸ்பண்டோட எங்க வீட்டுக்கு வா... பாத்தோம் பேசினோமுன்னு இல்லாம நம்ம நட்பு இனி தொடரட்டும்... என்ன"

"கண்டிப்பா வாரேண்டா... அப்புறம் ஒருவேளை நீ சந்துருவ சந்திக்கிற வாய்ப்பு வந்தாலும் என்னைய பத்தி சொல்லிடாதேடா... ப்ளீஸ்... அவனுக்கு நான் இங்க இருக்கது தெரிய வேண்டான்டா..."

"சத்தியமா சொல்ல மாட்டேன்... போதுமா... "

"ரொம்ப நன்றிடா... எப்ப கல்யாணம் பண்ணப்போறே?"

"கூடிய சீக்கிரம்... இப்ப என் ஆளைத்தான் பாக்கப் போறேன்..."

"நினைச்சேன் உன்னோட டிரஸிங் பாத்துதான் அவசரமான்னு கேட்டேன்... சென்னையில சேட்டு பொண்ணு எதுவும் மாட்டிருச்சா?"

"சீ... இல்லடி... நம்ம கூட படிச்ச அகிலாதான்... இப்ப இங்கதான் இருக்கா..."

"யாரு நம்ம பட்டா... ரெண்டு பேரும் வெளியில சொல்லாமலே இருந்தீங்களா... ஆனா பசங்க உன்னை கேலி பண்றதை பாத்திருக்கேன்... ஓ.கே. எஞ்சாய்... சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடுங்க..."

"சரி... கிளம்புறேன்டி... இன்னொரு நாள் பேசலாம்."

******************

அந்த பார்க் முன்பாக வண்டியை நிறுத்தினான் நவீன்,அவனுக்கு அருகில் வண்டியை நிறுத்திக் கொண்டிருந்தாள் அகிலா.

"நீங்க சீக்கிரம் வாரவுங்க... நான் இடையில முக்கியமான பிரண்டப் பாத்தேன்... அதான் லேட், இல்லேன்னா நாந்தான் எப்பவும் போல பஸ்ட்."

"நானும் தான் பிரண்டைப் பாத்தேன்... இல்லேன்னா எப்பவே வந்திருப்பேன்... சரி வா... அப்படி யாருடி முக்கியமான பிரண்ட்"

"சொன்னா நம்பவே மாட்டே... நம்ம சந்துருவப் பாத்தேன். எங்க ஏரியாவுலதான்டா இருக்கான். இன்னைக்குத்தான் பாக்குறேன். நல்ல வேலையில இருக்கானாம். இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை... அவங்கிட்ட கவிதா நினைப்பு இருக்கு. ஆனா இல்லாத மாதிரி பேசுறான்..."

"நானும் தான் கவிதாவை..." டக்கென்று நிறுத்தினான்.

"கவிதாவை..."

"இது அந்தக் கவிதா இல்லை... காலேசுல படிக்கிறப்போ கவிதான்னு கையெழுத்துப் பிரதி நடத்துனானே சுபாகர் அவனைப் பாத்தேன்னு சொல்ல வந்தேன். சரி வா உள்ள போலாம்" என்றபடி பேச்சை மாற்றினான்.

-'பரிவை' சே.குமார்.

திங்கள், 28 மார்ச், 2011

சுவடுகள்




"இப்ப எங்க இருக்கே...?"

"கிளம்பிக்கிட்டே இருக்கேன்டி... எப்படியும் நீ வாரதுக்குள்ள நான் வந்துடுவேன்..."

"இப்படித்தான் சொல்லுவே... ஆனா வாராவாரம் நான் தான் போறவனையும் வர்றவனையும் பாத்துக்கிட்டு நிக்கணும்."

"இல்ல இன்னைக்கு உனக்கு முன்னால அந்த இடத்துல நிப்பேன். போதுமா... வந்து சேரு... சும்மா மிரட்டாம..."

"ஆமா... உங்களை மிரட்டிட்டாலும் ஐயா அப்படியே பயந்து அடங்கிடுவிய... அட ஏன் நீ வேற... நான் கிளம்பிட்டேன்... காக்க வச்சிடாதே..."

"சரி தாயே... வந்து சேரு... இன்னும் அரைமணி நேரத்துல நான் அங்க இருப்பேன்" செல்போனை அணைத்து சட்டைப் பைக்குள் போட்டபடி வண்டியை ஸ்டார்ட் பண்ணினான் நவீன்.

***

அதே நேரம் தனது சிவப்பு நிற ஹோண்டா ஆக்டிவாவில் இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள் அகிலா.

'எப்பவும் அவன் வந்து காத்திருந்ததா சரித்திரமே இல்லை. இன்னைக்கு வாராறாம். பாப்போம் அவனா நானான்னு... எங்கயாவது சுத்திட்டு வந்துட்டு டிராபிக் அதிகமா இருந்துச்சு, அப்பா அப்பத்தான் ஒரு வேலை கொடுத்தாரு, அண்ணன் வந்துட்டான்னு ஆயிரங்கதைகள் சொல்லுவான். அவனுக்கு மட்டும்தான் கதைகள் கிடைக்குமா என்ன... நமக்கும்தான் கிடைக்கும், இன்னைக்கு ஒருவேளை லேட்டாப் போனால் நாமளும் ஒரு கதையை எடுத்துவிடலாம் என்று நினைத்தபடி அந்த தெருவில் திரும்பியவள் அவனைப் பார்த்துவிட்டாள். 'இவன் சந்துருதானே...' ஆமா என்று உள்மனசு சொல்ல "ஏய்... சந்துரு... சந்துரு..." என்று கத்தினாள்.

வண்டியை ஸ்லோப் பண்ணி திரும்பியவன் இவளைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.

"ஏய் அகி... எப்படிடி இருக்கே?"

"நல்லா இருக்கேன்டா... ஆமா நீ பாளையங்கோட்டைதானே... எப்படா சென்னைக்கு வந்தே?"

"நாம திருச்சியில படிப்ப முடிச்சதும் கொஞ்சநாள் ஊருப்பக்கம் இருந்தேன். அப்புறம் சும்மா இருந்து என்ன செய்ய... அதான் நண்பன் ஒருத்தனோட உதவியில சென்னை வந்து ஒரு சின்ன கம்பெனியில வேலை பார்த்தேன். இப்ப ஒரு ஆறுமாசமா மல்டி நேசனல் கம்பெனியில வேலை. நல்ல சம்பளம்... பரவாயில்லடி."

"நீ இப்ப வேளச்சேரியிலயா தங்கியிருக்கே...?"

"ஆமாண்டி... பஸ்ஸ்டாண்ட்டுக்குப் பக்கத்து சந்துல பிரண்ட்ஸோட இருக்கேன். ஆமா நீ திருச்சிதானே... இங்க எங்கயும் வேலை பாக்கிறியா?"

"அப்பாவுக்கு கவர்மெண்ட் ஜாப்ல அவருக்கு சென்னைக்கு மாற்றல் கிடைச்சது. அதான் இங்க வந்தோம். கவுஸிங் போர்டுல பி பிளாக்ல இருக்கோம். ஒரு சின்ன சாப்ட்வேர் கம்பெனியில வேலை பாக்கிறேன். அப்புறம் ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாடா...?"

"எல்லாரும் நல்லா இருக்காங்க. எந்தங்கச்சி மேரேசுக்கு நம்ம செட்ல எல்லாருக்கும் பத்திரிக்கை வைக்க நினைச்சேன். யாரும் தொடர்புல இல்லை. சிலருக்கு ஆட்டோகிராப் அட்ரஸை வச்சு இன்விடேசன் அனுப்பினேன். நிறைய ரிட்டனாயிடுச்சு... சில பேர் மட்டும் வந்தாங்க. உன்னைய பாத்ததுல எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?"

"எனக்கும்தான்டா... அதுக்கப்புறம் கவிதாவை பாத்தியாடா..."

அவன் மௌனமாக நிலம் பார்க்க, "ஏண்டா... பாக்கலையா.?"

"இல்லடி... அந்தப் பிரச்சினைக்கு அப்புறம் எங்களுக்குள்ள பேச்சு வார்த்தை இல்லைங்கிறதும் அந்த பிரச்சினைக்கு ஜவகர்தான் காரணம் நான் இல்லைங்கைறதும் உனக்கெல்லாம் தெரியும்தானே.."

"ஆமா.. நாங்கதான் அவகிட்ட எடுத்துச் சொன்னோமே...?"

"சொன்னீங்க... ஏனோ தெரியலை அதுக்கு அப்புறம் அவ என்னைய விட்டு விலக ஆரம்பிச்சா... சரியின்னு நானும் விலகிட்டேன். அப்புறம் அவளுக்கு கல்யாணம் ஆன விவரத்தை மகேசு சொல்லித்தான் தெரிஞ்சுக்கிட்டேன். சரிவிடு... அவ எங்க இருந்தாலும் நல்லாயிருக்கட்டும். காதலிச்ச என்னைய அவ ஒதுக்கிட்டான்னு சாபமெல்லாம் விடுற அல்பையில்லை நான்... ஆமா கல்யாணம் பண்ணிட்டியா..."

"அதுக்குள்ளயும் ஏன்டா அந்த வட்டத்துக்குள்ள விழச் சொல்றே... வீட்ல அலையன்ஸ் பாக்கனுமின்னு நிக்கிறாங்க. நாந்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமின்னு சொல்லி கடத்திக்கிட்டு வாரேன். நீ பண்ணலாமுல்ல... கவிதா நெனப்பா?"

"சே... அப்படியெல்லாம் இல்ல. ஒரு தங்கச்சி மேரேஜ் முடிஞ்சிருச்சு. இன்னொரு தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்கிறாங்க. அப்புறம்தான் மேரேஜ் பத்தி யோசிக்கணும். நீ இங்க யாரையும்..."

"ஏன்டா நிறுத்திட்டே...லவ் பண்றியான்னுதானே கேக்குறே... ஆமா காலேசுல லேசா இருந்துச்சு... உனக்குத் தெரியுமே?"

"ஏய்... நவீன்..."

"ஆமா அவந்தான் இப்ப ரெண்டு பேரும் தீவிரமா இருக்கோம். வீட்ல சொல்லி பெர்மிஷனோட மேரேஜ் பண்ணனுமின்னு ரெண்டு பேருக்கும் எண்ணம்."

"ரொம்ப நல்லவன். அவன் எங்க இருக்கான்?"

"அவங்க பேமிலி இங்கதான் வடபழனியில இருக்காங்க. நவீன் சாப்ட்வேர் கம்பெனியில இருக்கான்"

"அப்படியா... அவனை ரொம்ப கேட்டேன்னு சொல்லு... சரிடி உன் நம்பரைக் கொடு கால் பண்றேன். பிரண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க. இன்னைக்கு சண்டேயில பீச்சுக்குப் பொயிட்டு ராத்திரிதான் வருவோம்."

"உன் நம்பரை சொல்லு மிஸ்டு கால் கொடுக்கிறேன். போன் பண்ணிட்டு வீட்டுக்கு வாடா."

"கண்டிப்பா... வாரேண்டி... பாத்துப்போ..."

"ஒகேடா..."

***

அதே நேரம்...

அடுத்த பதிவில் முடியும்.

**************************

((இது தொடர்கதை அல்ல... சிறுகதைதான்.  இந்தக் கதை சில மாதங்களுக்கு முன்எழுதிய கதை என்பதால் சற்றே பெரியதாக இருக்கின்றது. போன சிறுகதைக்கே நண்பர்கள் நீளம் அதிகம் என்று சொன்னதால் "சுவடுகள்" இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. படித்து கருத்துக் கூறுங்கள்.  மீதி அடுத்த பதிவாக...))

-'பரிவை' சே.குமார்.

Thnaks for Photo : Google

வியாழன், 24 மார்ச், 2011

மாமச்சீரு...




"இங்க பாருங்க நான் சொல்றத சொல்லிப்புட்டே... இதுக்கு மேலயும் அக்கா... நொக்கான்னா நல்லாருக்காது பாத்துக்கங்க..."

"ஏண்டி இப்புடி அத்தெரிஞ்சு பேசுறே... நம்ம குடும்பத்துல நடக்கிற நல்ல விசயம்... அக்காவுக்கு நம்மளை விட்டா யாரு இருக்கா..?"

"போதும் போதும் ஒக்காவுக்கு செஞ்சது... நாம கஷ்டப்படுறப்போ எவ வந்து பாத்தா... நல்லா ஒக்கா போட்டு ஆட்டுறாக..."

"இங்க பாரு... நமக்கு அவுக பாத்தாக பாக்கலை... அத இப்பவா பாக்குறது... முத முதல்ல புள்ளைக்கு கல்யாணம் வைக்கிது... தாய்மாமன் முறைக்கு நாம செய்யிற மொறைய செஞ்சுதானே ஆகணும்..."

"நா... புள்ளயளை வச்சிக்கிட்டு கஷ்டப்பட்டப்ப இந்தா வச்சுக்கண்ணு ஒரு பத்து ரூபா கொடுக்க நாதியில்ல... நாதியத்த பய குடும்பத்துல... இதுல மாமச்சீரூ ஏத்தணுமாம் மாமச்சீரு..."

"அப்ப அவங்க என்ன கோட்டையிலயா இருந்தாக... அவங்களும் கஷ்டப்பட்டுக்கிட்டுதான் இருந்தாக... ஏண்டி பழசையெல்லாம் பேசிக்கிட்டு... மாமச்சீரு செய்யத்தான் வேணும்... உன் பேச்சையெல்லாம் கேக்கமுடியாது..."

"ஆமா... எப்பவும் உங்க குடும்பந்தான் உங்களுக்கு பெருசு... எம் பேச்சை கேட்டிருந்தாத்தான் இன்னும் நல்லாயிருந்திருப்பமே..."

"ஏய்...தேவையில்லாம பேசாம உன் வேலை என்னவோ அதைப்பாரு... அதை விட்டுட்டு வாய்க்கு வந்தபடி பேசினே... மவளே செவுலு பிஞ்சு போயிரும்..."

"அத ஒண்ணுந்தான் இதுவரைக்கும் செய்யலே... அதையும் செஞ்சிருய்யா... உன்ன கட்டிக்கிட்டு நா... என்ன சொகத்தை கண்டேன்... எம் பேச்சுக்கு எப்பவும் மருவாதியில்ல... எங்கப்பனை சொல்லணும்.... நல்லவன்னு சொல்லி நாதியத்துப் போனவன் வீட்டுல கட்டி வச்சுட்டு அவரு பாட்டுக்கு மசுரு போச்சுன்னு போயி சேந்துட்டாரு... நானுல்ல அவதிப்படுறேன்..." என்று இருவது வருசத்துக்கு முன்னர் கல்யாணம் பண்ணி வைத்து வாழ்ந்து மறைந்த அப்பனையும் சேர்த்து திட்டினாள்.

"அம்மா... அம்மோவ்..."

"இருடா வெளங்காதவனுக்கு பொறந்தவனே..."

"அம்மா... இப்ப சாப்பாடு போட வாரியா... நாங் கெளம்பவா... எனக்கு காலேசுக்கு நேரமாச்சும்மா..."

"இரு... வாரேன்... என்ன எக்கேடு கெட்டாலும் அப்பனுக்கும் புள்ளைக்கும் வடிச்சுக் கொட்டத்தானே நா... இருக்கேன்."

"இப்ப என்னம்மா... அப்பா மேல உள்ள கோபத்தை எங்கிட்ட காட்டுறியா... ஒஞ்சோறும் வேணாம்... ஒண்ணும் வேணாம்... சும்மா கத்தாதே..." என்று பதிலுக்கு அவனும் கத்தியபடி சைக்கிளை எடுக்க...

"டேய் வெறுவாக்கெட்ட பயலே... அப்பேம் புத்திதானே உனக்கும் இருக்கும்... போ... போ... ராத்திரிக்கு வா... புளித்தடவி வைக்கிறேன்..." என்று அவள் கத்திக் கொண்டிருக்கும் போதே இதுக்கு மேல இங்க இருந்தா மறுபடிக்கும் வேதாளம் நம்ம மேல தாவும் என்ற நினைப்பில் டீக்கடைப் பக்கமாக நடக்க ஆரம்பித்தார்.

"அவுகதான் காலேசுக்குப் போறாக... நீங்க எங்க போறீக?" என்றவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நடையைக் கட்டினார்.



"வாண்ணே... எப்ப ஊர்ல இருந்து வந்தே..."

"நேத்து வந்தேம்ப்பா..."

"பொழப்புத் தழப்பெல்லாம் எப்புடி போகுதுண்ணே..."

"அதுக்கென்ன நல்லாப் போகுதுப்பா... ஒரு டீக் கொடு..." என்றபடி அன்றைய தினசரியை புரட்ட ஆரம்பித்தார்.

"அடடே... வா செல்லையா... எப்ப வந்தே..." என்றபடி அருகில் அமர்ந்தார் பால்கார சண்முகம்.

"நேத்து வந்தேன் மாமா... அத்தை பசங்களெல்லாம் நல்லாருக்காங்களா.. அப்பறமா வீட்டுப் பக்கம் வாரேன்.."

"சரிப்பா... என்ன திடீர்ன்னு வந்திருக்கே..."

"அக்கா பொண்ணுக்கு நிச்சயம் பண்ணுதுல்ல..."

"அட ஆமா... நாந்தான் மறந்துட்டேன்... உங்க குடும்பத்துல நடக்கிற மொத கல்யாணமுல்ல... மாப்பிள்ளை நல்லா படிச்சிட்டு லண்டன்ல இருக்கானாமே..."

"ஆமா...."

"நல்ல சம்பந்தமா புடிச்சிருக்கு... பரவாயில்லை... சீர் செனத்தி நிறைய செய்யிறாப்புல இருக்கும்... இல்லையா... ஆமா மாமக்காரன் நீ... முத முதலா மொறை செய்யப் போறே... உங்கப்பா இருந்திருந்தா கேக்கவே வேணாம்... அந்தளவுக்கு பண்ணி சபைய நிறைச்சிருப்பாரு... எந்தக் கொறையுமில்லாம நல்லா பண்ணிருப்பா..."

"அதெல்லாம் நல்லா பண்ணிருவேன் மாமா...அதுகளுக்கு என்னைய விட்டா யாரு மாமா இருக்கா..."

"உம் பய மூத்தவனா இருந்தா ரெண்டுக்கும் முடிச்சைப் போட்டிருக்கலாம்... சரி விடு சின்னவ மக படிக்கிதுல்ல... அதை புடிச்சி கட்டி வச்சிடலாம்..."

"அதெல்லாம் நம்ம காலத்துல மாமா... இப்பல்லாம் நாம யாரையும் கம்பல் பண்ண முடியாது.கடவுள் சித்தம் என்னவோ அதுபடித்தான் நடக்கும்."

"ஒம் பொண்டாட்டி மாமச்சீரெல்லாம் ஏத்த முடியாதுன்னு சொன்னதா உங்க அத்த சொல்லிக்கிட்டிருந்தா... அவளுக்கு இதுல சந்தோஷமில்லையா என்ன..." மெதுவான குரலில் கேட்டார்.

"அப்படியெல்லாம் இல்ல மாமா... எதாவது கோவத்துல சொல்லியிருப்பா... "

"அதானே... இருக்கதே ஒரு மாமன்... நீயும் ஒண்ணும் செய்யலைன்னா எப்படி சிறக்கும்ன்னேன்... அப்புறம் சபையில நாலு பேரு நாலு விதமா பேசினா நமக்குத்தானே அசிங்கம்... சரிப்பா... சாயங்காலம் வீட்டுப் பக்கம் வா... தோட்டத்துல நடவு நடக்குது... ஆளுக வந்தாச்சான்னு ஒரு எட்டு பாத்துட்டு ....தலையாரிக்கிட்ட ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கு... அவரு வீட்டுக்கும் பொயிட்டு வாரேன்..."

"சரி மாமா..."

"ஏண்ணே... பெரியக்கா பொண்ணுக்கா கல்யாணம்...."

"ஆமாப்பா... நாளைக்கு நிச்சயம் வச்சிருக்கு..." என்றபடி காசை கொடுக்க

சில்லறையை தேடியபடி, "சின்னப்புள்ளைங்களா நீங்க தோள்ல தூக்கிக்கிட்டே திரிவிய... அதுக்கு கல்யாணம்.... நாளும் பொழுதும் என்னமாப் போகுது..." என்றான்.

"காலத்தை நாம கட்டிப் போட முடியுமா என்ன... சரிப்பா... வாரேன்" என்றபடி மீண்டும் வீட்டுக்கு நடக்கலானார்.



"ஒங்கக்கா போன் பண்ணினாக... தம்பி வந்தாத்தான் போனெல்லாம் வரும்..."

"வந்தோடனே ஒம் பஞ்சாயத்தை ஆரம்பிக்காம என்ன சொன்னுச்சுன்னு சொல்லு..."

"என்னத்தை சொல்லப் போறாக... நாளைக்கு நிச்சயம் பண்றதுக்கு சாமானெல்லாம் வாங்கணுமாம்... வரச்சொன்னாக..."

"சரி... குளிச்சிட்டு வாரேன்... சாப்பாடு போடு..."

"எல்லா ரெடியாத்தான் இருக்கு... திங்கிறதுக்குத்தான் ஆளக்காணும்... சரி உங்கக்காவுக்கு போன் பண்ணி எனக்கு வேலையிருக்கு நீங்க பாத்து வாங்குங்கண்ணு சொல்லுங்க..."

"என்ன வேலையிருக்கு... நிச்சயத்துக்குதானே வந்தேன்... அதுவும் நம்ம வீட்டு விசேசந்தானே... நாமட்டுமில்ல நீயும் கிளம்பு போயிட்டு வந்திடுவோம்..."

"உங்களையே போக வேண்டாங்கிறேன்... என்னையும் கூப்பிடுறீக... எங்கக்கா வாறாளாம்... அவங்க வாறதால நீங்க அங்க போக வேண்டாம்..."

"இங்க பாரு உங்கக்காவை பாக்கிறதவிட எங்கக்கா வீட்டுக்கு போறதுதான் சரி... சும்மா வீம்பு பண்ணாதே.. நீ வேணா இரு... உங்கக்கா வந்தா இருக்கச் சொல்லு... நான் பொயிட்டு வந்திடுறேன்..."

"அதானே எங்க வீட்டு மனுசங்களைத்தான் உங்களுக்கு சுத்தமா புடிக்காதே... இன்னைக்கு நீங்க நல்லா இருக்கீங்கன்னா அதுக்கு எங்க வீட்டாளுங்கதான் காரணம் தெரிஞ்சுக்கங்க..."

"ஆத்தா... நல்லாயிருப்பே... நேத்து வந்ததுல இருந்து இந்தப் பாட்டத்தான் பாடுறே... நீ என்ன பாடுனாலும் நான் செய்யப் போற மாமச்சீருல்ல எந்தக் கொறையும் வைக்கப் போறதில்லை... நீ ஊரு பூராம் சொன்னாலும் சேரி... கல்யாணத்துக்கு வரலைன்னாலும் சேரி... நான் கல்யாணத்துல ஒரு தம்பியா எம்பங்கை செய்யத்தான் போறேன்... சும்மா கத்திக்கிட்டு இருக்காதே..."

"என்னைய மதிச்சிருந்தாத்தான்....." வாசலில் கார் வந்து நிற்கவும் பேச்சை நிறுத்திவிட்டு வாசலுக்கு வந்தாள்.

காரிலிருந்து இறங்கிய அக்காவையும், அத்தானையும் பார்த்ததும் நடந்த சண்டையை முகத்தில் மறைத்து அக்கா, அத்தான் என்றாள்.

"வாங்கண்ணே... வாங்கண்ணி..."

"என்ன தம்பி... எப்ப வந்தீங்க... நிச்சயத்துக்காக வந்திருக்கீங்களோ..."

"ஆமா... உள்ள வாங்க"

சில நிமிட பேச்சுக்களுக்குப் பிறகு, "இருங்கண்ணே... அக்கா வீட்டு வரைக்கும் பொயிட்டு வந்துடுறேன்... "

"ஆமாமா... நிச்சயக்கார வீடு... வேலையிருக்கும் நீங்க பொயிட்டு வாங்க... நாங்க கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறோம்..."

"இருங்க... நான் வந்துடுறேன்... அப்புறம் போகலாம்" என்றபடி சாப்பாட்டை நினைக்காமல் வண்டி எடுத்தான்.

"என்ன வடிவு... மாமச்சீரு செலவு ஒண்ணு வருது... என்ன செய்யப் போறீங்க..."

"அட ஏங்க்கா... இது வரைக்கும் அதுக்காத்தான் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாரு..."

"எதுக்கு சண்டை போடுறீங்க... நல்லா செய்ய வேண்டியதுதானே... நம்ம வீட்டுக் கல்யாணம்..."

"என்னக்கா... அவங்களையெல்லாம் பத்தி உனக்கே தெரியும்... எங்கிட்டு கெடக்கே எடுபட்ட நாயேன்னு கூட திரும்பிப் பாக்காதவங்க... நாங்க கஷ்டப்பட்டப்போ நீங்கள்லாம்தான் தூக்கி விட்டீங்க... அவங்களுக்கு எதுக்கு செய்யணும்..."

"அடியே... அவங்க செஞ்சாங்களா... செய்யலையான்னு... பாக்கிற நேரமாடி இது.அவங்க கூட பொறந்த ஆம்பளைப்பிள்ளை உன்னோட வீட்டுக்காரர்தான்... நாளைக்கு சபை சிறக்க செஞ்சாத்தானே... மாமக்காரன் நல்லா செஞ்சாய்யான்னு ஊரு பேசும்..."

"உங்கக்கா சொல்றதுதான் சரி..." என்று இடையில் புகுந்த அத்தான் "வடிவு... இப்ப நாங்க எங்க போறோம் தெரியுமா... எங்கண்ணன் பொண்ணுக்கு நகை வாங்கத்தான் போறோம்..." என்றார்.

"நகையா..?"

"ஆமாடி... கல்யாணம் வைப்பாரு போல தெரியுது... இன்னைக்கு அவரவிட நாங்க நல்லாயிருக்கோம்... யாருக்கும் யாரும் உதவின்னு செஞ்சுக்கலைன்னாலும் பொறந்த பொறப்புக்குள்ள சண்டை சச்சரவு இல்லாம எல்லா நல்லது கெட்டதுலயும் எல்லாருமா நின்னு செஞ்சிருக்கோம்... புள்ளைங்களும் யாரையும் வித்தியாசமா பாக்காமா எல்லாரையும் அம்மா, அப்பான்னுதான் கூப்பிடுதுங்க... அதான் இவரு கூட கல்யாணத்தப்போ பணமா கொடுத்தா அண்ணனுக்கு செலவுக்கு ஆகுமின்னாரு... ஒரு அஞ்சு பவுனுல நகைய எடுத்துக் கொடுத்த அந்தப் புள்ளயும் சந்தோஷப்படும்... கல்யாணச் செலவுல முன்னப்பின்ன வந்தா அப்ப போட்டு சரி பண்ணிக்கலாமுன்னு சொல்லி கூட்டியாந்திருக்கேன்..."

"...."

"இங்க பாரு சீரு செய்யிறது நம்ம கடமை... அதுவும் மாமன்காரன் முறைய யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது. அந்தப்புள்ள யாரு நீங்க தூக்கி வளத்ததுதானே... அவங்க நமக்கு பாக்கலை அதனால எதுவும் செய்யக்கூடாதுன்னு சண்ட போடுறதுக்கு என்ன இருக்கு... அன்னைக்கு நிலமையில ஓ நாத்தனா கணவனை இழந்துட்டு நின்னப்போ நீ போயி உதவுனியா இல்லையே... ஏதோ சொத்து சொகம் இருந்ததுனால கஷ்டப்பட்டு பால் மாடு வச்சி புள்ளைங்களை படிக்க வச்சி இப்ப நல்ல நிலமையில இருக்கு... அப்ப எல்லாரும் கஷ்டப்பட்டிங்க... இப்ப எல்லாரும் நல்லாயிருக்கீங்க... அப்புறம் எதுக்கு வேண்டாத பேச்சு... நீங்க செய்யிற சீருல சபை சிறக்கணும்... ஆமா சொல்லிப்புட்டேன்... சும்மா அந்த மனுசனுக்கிட்ட கத்துறதை விட்டுட்டு ஓ... வீட்டு கல்யாணமாட்டம் சந்தோஷமா நின்னு செஞ்சு வையி... என்ன நான் சொல்றது..."

"சரிக்கா... நாந்தான் பழசையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு அவருகிட்ட சண்டை போட்டுட்டேன்... சிறப்பா செய்யச் சொல்றேங்க்கா... ஓந்தங்கச்சியா பொறந்தும் ஓ... குணம் இல்லாம போச்சேக்கா... இனிமே இது மாதிரி இருக்க மாட்டேங்க".

"நீயும் நல்லவதாண்டி... கால நேரம் உன்னைய இப்படி சிந்திக்க வச்சிருக்கு... விடு... சரி ஓ... நாத்தனாருக்கு போன் பண்ணி நானும் வாரேன்னு சொல்லிட்டு கிளப்பு நாங்க அப்படியே விட்டுட்டுப் போறோம்... "
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 22 மார்ச், 2011

கிராமத்து நினைவுகள்: தண்ணீர்... தண்ணீர்...




இப்பல்லாம் எழுத நேரம் கிடைப்பதில்லை என்பதைவிட கிடைக்கும் நேரத்தையும் மனச்சோர்வு தின்று விடுகிறது என்பதே உண்மை. சரி விசயத்துக்கு வருவோம்.

நான் முன்பு கிராமத்து நினைவுகள் மற்றும் மனசின் பக்கம் என்ற தலைப்பில் சில பதிவுகள் எழுதினேன். இரண்டுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது என்பது உண்மை. இருந்தும் தொடர முடியாமல் வேலைப்பளூவின் காரணமாக மனச்சோர்வு. அதன் காரணமாக படிப்பது எப்பவோ குறைந்து விட்ட நிலையில் இப்போது எழுதுவதும் குறைந்துவிட்டது.

இன்று உலக தண்ணீர் தினம் என்றதும் கிராமத்து நினைவுகளில் தண்ணீர் குறித்த எழுதலாம் என்று தோன்றியதின் விளைவே இந்த தண்ணீர்... தண்ணீர்...

நாங்கள் படிக்கும் காலத்தில் எங்கள் ஊரில் ஒரே ஒரு அடிபைப் மட்டுமே. அந்தப் பைப் மோட்டார் பொருத்தப்பட்டு இன்றும் எங்களுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் தண்ணீர் அடித்துத்தான் எடுக்க வேண்டும். காலையில் பள்ளிக்குச் செல்லும் முன் 10, 15 குடம் தண்ணீர் எடுத்து வீட்டில் நிரப்பி வைத்துச் செல்ல வேண்டும். தினமும் இதுதான் வேலை. நான் மட்டுமல்ல... என் தம்பி மற்றும் மற்ற பசங்கள் எல்லாரும் தினமும் செய்வோம். அதன்பின் பெரிய இரும்பு வாளிகளில் தண்ணீர் அடித்து நிரப்பி பைப்பின் அருகிலேயே வைத்து எல்லாரும் பேசிக் கொண்டே குளிப்போம்.

அடிபைப் தண்ணீர் குடிக்க அவ்வளவாக நல்லா இருக்காது. சோறு வடித்தால் பழைய சாதம் நல்லாவே இருக்காது. அதனால் நல்ல தண்ணி தனியாக எடுக்கப் போக வேண்டும். சைக்கிள் ஓட்டாத காலங்களில் குடி தண்ணீருக்காக அக்காக்கள் தலையில் குடம் சுமந்து 4,5 கிலோ மீட்டர் நடந்தே சென்று செங்கல் சூளைக்காக வெட்டப்பட்டிருக்கும் கிணறுகளில் அவர்களின் திட்டுக்களை வாங்கிக் கொண்டு தண்ணீர் எடுத்து வருவார்கள். ஊரில் உள்ள இளம் பெண்களும் பெரியவர்களும் வாளியும் கையுமாக செல்லும் போது அந்த வயதில் அவர்களின் கஷ்டமும் வலியும் தெரிவதில்லை.

தினமும் தண்ணீர் எடுக்க வருகிறார்களே... திட்டினாலும் கேக்க மாட்டேங்கிறார்களே என்று கிணறுகளில் செடி கொடிகளை வெட்டிப் போட்டு வைத்து விடுவார்கள். ஒவ்வொரு கிணறாக பார்த்து தண்ணீர் எடுத்து வருகிறோம் என்று சொல்லுவார்கள். அதை கேட்பதோடு சரி... அது குறித்து யோசிப்பதே இல்லை.

நானெல்லாம் பிறக்கும் முன் தண்ணீர் கஷ்டம் போக்க எங்கள் ஊர் கம்மாய்க்குள் கிணறு வெட்டி உரையெல்லாம் இறக்கியிருந்தார்கள். சில காலம் அதில் தண்ணி தூக்கியதாக சொல்வர்கள். அப்புறம் யாரோ சில புண்ணியவான்கள் செத்த ஆடு, மாட்டின் இளங்கொடி என சிலவற்றை அதில் போட, அந்தக் கிணறும் பாழாகிப் போனதால் மீண்டும் குடம் தூக்குவதாக அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். இன்னும் அந்தக் கிணறு பிரயோசனமற்று இருக்கிறது.

ஏழாவது படிக்கும் போட்டு சைக்கிள் ஓட்ட ஆரம்பித்து, எட்டாம் வகுப்பு படிக்கும் போது நல்லா ஓட்டியதால் அப்புறம் சைக்கிளில் தண்ணீர் எடுக்கும் பணியைத் தொடங்கினோம். நாங்கள் நாலஞ்சு பேர் சைக்கிளில் இரண்டு குடங்களை கட்டி தொங்கவிட்டு தண்ணீர் தேடிப் போவோம். நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவோம்.

ஒரு கிணறை பிடித்து வைத்து தொடர்ந்து எடுத்து வந்தோம். எல்லாரும் ஒரே இடத்தில் தொடர்ந்து எடுக்க... அங்கயும் பிரச்சினை வந்தது... அப்புறம் அடுத்த கிணறு.... இப்படியாக நாலைந்து வருடங்கள் சைக்கிள் தண்ணீர் எடுத்து வந்தோம்.

சில நாட்கள் போக மனமின்றி மறுத்தால் நீ புள்ளையா இந்த சேகரு ரெண்டு தடவை எடுத்துக்கிட்டு வந்திட்டான். சரவணன் கூட பொயிட்டான்னு அம்மாகிட்ட திட்டு வாங்கணும். அப்புறம் முனங்கிக்கிட்டே குடத்தை எடுத்து கட்டிக்கிட்டு தண்ணீர் எடுத்து வந்த நாட்கள் கண்ணுக்குள் இன்னும் மின்னிக் கொண்டிருக்கின்றன.

கம்மாய் நிறைந்து இருந்தால் தண்ணீர் எடுக்கப் போகவேண்டியதில்லை. கம்மாத் தண்ணியத் தூக்கிட்டு வந்து தேத்தாங்க் கொட்டை போட்டு சுத்தம் பண்ணி வைத்து பயன் படுத்துவார்கள். அப்பல்லாம் எங்க வீட்ல மண்ணு போட்டு அதுமேல மண் பானை வச்சி தண்ணி வச்சிருப்பாங்க. கம்மாய்த் தண்ணி அதுல ஊத்தி வச்சி வெட்டி வேரு போட்டு இருக்கும். சும்மா சில்லுன்னு இருக்கிற தண்ணிய செம்பு நிறைய மோந்து அப்படியே மடமடன்னு குடிக்கும் போது வயிறும் மனசும் சில்லுன்னு இருக்கும் பாருங்க... அப்பா அந்த சந்தோஷத்துல கடுகளவுகூட இப்ப குடிக்கிற பிரிட்ஜ் தண்ணியில இல்லை.



அதுவும் பள்ளிக்கூடத்துல இருந்து வரும் போது ஓடிவந்து கம்மாயில இறங்கி தண்ணிய லேசா ஒதுக்கி விட்டு அப்படியே வாய் வச்சி குடிச்சா மனசும் வயிறும் நிறையும். ஒரு சில பேரு ரொம்ப சுத்தமானவங்க மாதிரி கையில அள்ளி அள்ளி குடிப்பாங்க... நமக்கெல்லாம் அப்படியே வாயை வச்சி உறிஞ்சதான் பிடிக்கும். அந்த சுவையே தனிதான்.

நல்ல மழை பெய்யும் போது மழையோட நாங்கள்ளாம் கிளம்பி போயி குழக்கால் அங்க இங்க எல்லாம் சரி பண்ணி எங்க கம்மாய்க்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்ப்போம். கம்மாய் நிறைந்திருக்கும் காலத்தில விடுமுறை நாட்களில் மதிய வேளையில் தண்ணீருக்குள் கிடப்பதே ஒரு சுகந்தான். அதுவும் மழை பெய்யும் போது கண்மாய்க்குள் குளித்தால் மேலே சில்லிப்பாகவும் உள்ளே இளஞ்சூடாகவும் இருக்கும் பாருங்க... வாவ்... அதையெல்லாம் அனுபவிச்சாத்தான் அந்த சுகம் தெரியும்.

இப்ப எங்க ஊர் பஞ்சாயத்துத் தலைவரின் சீரிய பணியால் ஊருக்குள் தண்ணீர் தொட்டி கட்டி போர் போட்டு எல்லா வீட்லயும் பைப் போட்டு வச்சிருக்காங்க. காலையிலும் மாலையிலும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இப்ப மழைக்காலத்தில் கண்மாய் நிரம்பினாலும் சில நாட்களில் பாசம் படர்ந்து பயன்படமால் போய்விடுகிறது. சைக்கிளில் குடம் கட்டும் காலம் எங்களோடு போய்விட்டது.

ஊருக்குப் போகும் போதெல்லாம் நாங்கள் அடித்து அடித்து தண்ணீர் எடுத்த அடிபைப்பில் போய் தண்ணீர் பிடித்து அங்கயே குளிக்க ஆசையாக இருக்கும்.... இருந்து வீட்டுக்கே தண்ணீர் வருவதால் இங்கயே குளிடா என்று அம்மா சொல்லுகிறார்கள். எல்லாம் காலத்தின் மாற்றம்.

-'பரிவை' சே.குமார்.

Thanks : Photos from Google