மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

சினிமா : நெடுஞ்சாலையில் பிரணயக்கதா

சில படங்களைப் பார்க்கும் போதே இதுக்கு மேல் எதற்காக நேரத்தைச் செலவிட வேண்டும் என மூடி வைத்துவிடத் தோன்றும். அப்படி கால்வாசி படம் போகும் போதே கடுப்பாகி கணிப்பொறியில் இருந்து 'ரெட் ரெயின்' என்ற மலையாளப் படத்தை தூக்கி விட்டுவிட்டு பார்த்த படம்தான் 'ஒரு இந்தியன் பிரணயக்கதா'. பஹத் பாசில் மற்றும் அமலா பால் நடித்திருக்கும் படம். மம்முட்டி மோகன்லால் படங்கள் எல்லாம் பிடித்ததோ இல்லையோ பஹத் பாசில் படம் என்றால் மிகவும் பிடித்துவிடுகிறது. இதற்கு முன் பார்த்த படங்களைவிட இது கொஞ்சம் சுமார்தான் இருப்பினும் பஹத்தின் நடிப்பில் படம் நம்மை ஈர்க்கிறது.


அனாதை இல்லத்தில் இருந்து வெளிநாட்டுத் தம்பதிகளால் எடுத்து வளர்க்கப்படும் அமலாபால் தன்னைப் பெற்றவர்கள் யாரென்று கண்டுபிடித்து ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு வளர்ப்புப் பெற்றோரின் இறப்புக்குப் பின் இந்தியா வருகிறார். அரசியலில் பெரியாளாக வேண்டும் என தில்லாலங்கடி வேலைகள் பார்க்கும் பஹத், தனக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் வெறொரு பெண்ணுக்கு கொடுக்கவும் கட்சிப் பணிகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நினைக்கிறார். அந்த சமயத்தில் பொய்யான காரணம் சொல்லி உதவி கேட்கும் அமலாபாலுக்கு உதவப் போய் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பளத்தில் டிரைவராகிறார்.

ஒரு கட்டத்தில் அமலாபால் எதற்காக வந்திருக்கிறார் என்கிற உண்மை போலீஸ் மூலமாக வெளிவர, பஹத் அவரை விட்டு விலகுகிறார். இதற்கிடையே அவருக்கு தனியாக ஒரு காதல் டிராக் போய்க்கொண்டிருக்கிறது. அது எல்லாப் படத்திலும் போல் வெறொரு மாப்பிள்ளைக்கு மனைவியாவதில் முடிகிறது. பின்னர் அமலாவின் அப்பா அம்மாவை கண்டுபிடிக்க பஹத் உதவினாரா இல்லையா?. அமலா பெற்றோரைப் பார்த்தாரா இல்லையா?. இருவருக்கும் இடையே காதல் வந்ததா வரவில்லையா? பஹத்தின் அரசியல் கனவு என்னாச்சு என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். 

பஹத்தின் நடிப்பு சொல்லவே வேண்டாம். மனுசன் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அன்னாவும் ரசூலுமில் கவர்ந்து நிறையப் படங்களை தேடிப்பிடித்துப் பார்க்க வைத்தார். அமலா பாலும் நன்றாகவே செய்திருக்கிறார். சில லாஜிக் இல்லாத காட்சிகள், சினிமாத்தனமான கிளைமாக்ஸ் என எல்லாம் இருந்தாலும் ஒரு இந்தியன் பிரணயக்கதா ரசிக்கவே வைத்தது.

அடுத்ததாகப் பார்த்தது நெடுஞ்சாலை. 


ரு கார் விபத்தில் பெற்றோரை இழந்து பிறக்கும் நாயகன் ஆரி இரவு நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் லாரிகளில் கொள்ளை அடிக்கிறார். இவரை வைத்து தனக்கு லாபம் ஈட்டிக் கொள்ளும் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சலீம் குமார், இவர்களது வாழ்க்கையில் நெடுஞ்சாலையில் தாபா நடத்தும் மலையாள வரவான ஷிவதாவும் கஞ்சாப் பேர்வழியான இன்ஸ்பெக்டர் பிரசாந்த் நாராயணனும் புக, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளே கதைக்களம்.

ஷிவதாவின் மீது போலீசுக்குக் ஒரு கண், அவளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது காலை ஒடித்துவிடுகிறார். இதனால் அவளுக்கு விபசாரி பட்டம் சுமத்தி நீதிமன்றத்தில் நிறுத்துகிறார். இங்கு சாட்சியாக வரும் ஆரி அவளைக் காப்பாற்ற, இன்ஸ்பெக்டருக்கும் ஆரிக்கும் இடையில் பற்றிக் கொள்கிறது. நாயகனை ஒரு கட்டத்தில் தனது உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நின்று நாயகி காக்கிறாள். அதன் பிறகு அவன் தனது கொள்ளைத் தொழிலை விட்டானா... காதலில் விழுந்தானா... இன்ஸ்பெக்டரிடமிருந்து தப்பித்தானா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா.

லாரிகளில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் அருமை என்றாலும் ஏணி போன்ற சாதனத்தை தங்களது வண்டியில் இருந்து லாரியில் மாட்டும் போது லாரி டிரைவருக்கு தெரியாமல் இருக்குமா என்ன? ஒவ்வொரு முறை திருடும் போதும் லாரி டிரைவர்கள் கண்டுகொள்வதே இல்லை என்பதே சறுக்கல்தான். இருந்தாலும் கொண்டு சென்றவிதம் அருமை.

ஆரிக்கு இதில் தார்ப்பாய் முருகன் என்ற கதாபாத்திரம், நன்றாகச் செய்திருக்கிறார். பல இடங்களில் பருத்திவீரன் கார்த்தியை நினைவூட்டுகிறார். ஷிவதாவுக்கு தாபா நடத்தும் மங்கா கதாபாத்திரம், மலையாளக்கரை கொடுத்த ஜில் வரவு... இயக்குநர்களுக்கு ஏற்ற நடிகை, நன்றாக நடிக்கவும் செய்திருகிறார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் நிலையான இடத்தைப் பிடிக்கலாம். இந்தப் படத்தில் கேமரா இவர் மீது மேய்வதை வைத்துப் பார்க்கும் போது கதைக்காக இவரை புக் செய்வதைவிட கவர்ச்சிகாகவே பெரிதும் பயன்படுத்தப்படுவார் என்றே தோன்றுகிறது. 

போலீஸாக வரும் பிரசாந்த் நாராயணன் அருமையான வில்லன், சலீம் குமார், தாபா மாஸ்டராக வரும் தம்பி ராமையா, கும்கி அஸ்வின், தாபாவில் வேலை செய்யும் சிறுவன் என எல்லாரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.


நிறைய இடங்களில் வசனத்தின் சப்தம் குறைக்கப்பட்டுள்ளது. அதெல்லாம் மோசமான வார்த்தைகள் என்பது வாயசைப்பில் தெரிகிறது. பெரும்பாலான இயக்குநர்கள் எதார்த்தம் என்ற போர்வையில் கேவலமான வார்த்தைகளை வைப்பதை விரும்புகிறார்கள். பிரசாந்த் நாராயணன் உள்ளிட்ட சிலரின் பேச்சு டப்பிங் படம் பார்ப்பது போன்ற எண்ணத்தைக் கொடுக்கிறது. ஒருவேளை  கேரள எல்லையை ஒட்டி நடக்கும் கதை என்பதால் அப்படி பேசியிருப்பார்களோ?

படத்தில் ஒரு காட்சியில் மீசைக் கோனார் மாட்டுக்கறி விற்கிறார். கோனார்கள் மாடு வளர்ப்பார்கள்... பால் வியாபாரம் செய்வார்கள். தாங்கள் தெய்வமாகப் பார்க்கும் மாட்டை வெட்டி விற்கமாட்டார்கள். பெரும்பாலும் கோனார்கள் மாட்டிறைச்சி சாப்பிடவும் மாட்டார்கள். ஏன் இயக்குநர் மாட்டிறைச்சி விற்பவருக்கு அப்படிப் பெயர் வைத்தார் என்று தெரியவில்லை என்ன கோபமோ... கோனாரு மகளை லவ்வி இருப்பாரோ என்னவோ. இது போன்ற காட்சிகளை யாருமே எதிர்க்கவில்லையே ஏன்? நாமளும் கொளுத்திப் போட்டுப் பார்ப்போம்.

படத்தின் இறுதிக் காட்சி பல படங்களில் பார்த்ததுதான்... முக்கிய வில்லன் அவர்களை விடும்போது அடுத்து என்னவாகும் என்பது நமக்குத் தெரிவதால் சுவராஸ்யமில்லாமல் போகிறது. எதற்காக எல்லா இயக்குநர்களும் ஒரே மாதிரியே சிந்திக்கிறார்கள் என்று தெரியவில்லை... கதை மக்களின் மனதில் நிற்க வேண்டும் என்பதற்காக இதுபோல் முடிவுகளை வைக்கிறார்கள் போல.. இப்படியே போனால் படங்கள் சரிவை நோக்கித்தான் செல்லும். இருப்பினும் நெடுஞ்சாலையில் ஒரு இரவு நேரப்பயணம் போய் வரலாம்... அலுப்புத் தெரியவில்லை.

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே... மனசுல இது 600-வது பதிவு... மொத்தத்தில் 795-வது பதிவு... எல்லாம் உங்களால்தான் சாத்தியமானது... நன்றி.

-'பரிவை' சே.குமார்.

வடிவேலுவை மிரட்டினால்... : சீமான் எச்சரிக்கை


டிகர் வடிவேலு நடித்திருக்கும் 'தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி சில அமைப்புகள் அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவருடைய வீட்டை முற்றுகை இடப் போவதாகவும், அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால் வடிவேலு மீது தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் எனவும் சில அமைப்புகள் மிரட்டி வருகின்றன. 

இன்னும் படமே வெளிவராத நிலையில், கிருஷ்ண தேவராயர் பாத்திரம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் காதுக்கு வந்த தகவல்களை வைத்துக்கொண்டு ஒரு தமிழ்க் கலைஞனை அவனுடைய மண்ணிலேயே மிரட்டுகிற இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 

படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் உண்மையாகவே தவறாகச் சித்தரிக்கப்பட்டிருந்தால் அதனை முறைப்படி சொல்லி தகுந்த விதத்தில் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, படத்தில் என்ன இடம் பெற்றிருக்கிறது என்பதே தெரியாமல் அடிப்போம் உதைப்போம் என ஆவேசம் பாடுவது எந்த விதத்தில் நியாயம்? 

கிருஷ்ண தேவராயர் பாத்திரம் குறித்து குரல் எழுப்புபவர்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். உண்மையிலேயே கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சொல்லப்பட்டிருந்தால் அதை நீக்கச் சொல்லிப் போராடுபவர்களுக்குப் பக்க பலமாக நாங்களும் நிற்போம். எந்த இனத்தவர்களின் மனதையும் புண்படுத்தி ரசிக்கும் கொடூர மனம் தமிழர்களுக்கு ஒரு போதும் கிடையாது. 

படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் சித்தரிக்கபடவில்லை என்றும், கற்பனைக் கதையாகவே படம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் படத் தயாரிப்பு தரப்பு அறிவித்திருக்கும் நிலையில், அதைக் காது கொடுத்துக் கேட்காமல் வடிவேலுவுக்கு எதிராக கொந்தளிப்பு கிளப்புவது ஒரு கலைஞனை புண்படுத்தும் செயல். 


ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ தமிழர்களுக்கு எதிரான சித்தரிப்பு செயல்கள் நடக்கிறபோது அம்மாநிலக் கலைஞர்கள் எவரையேனும் எதிர்த்து அங்கு பெருமளவில் வாழும் தமிழர்கள் ஒருமித்து திரண்டுவிட முடியுமா? அங்கிருக்கும் ஒரு கலைஞனுக்கு எதிராக ஒரு வார்த்தை உதிர்த்தாலும், அது எத்தகைய விளைவுகளை அந்த மாநிலத்தில் ஏற்படுத்தும்? 

ஆனால், மண்ணின் மைந்தனாக பல கோடி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் வடிவேலுவை சில அமைப்புகள் இங்கே மிரட்டுவது, தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடுகிற செயல். தமிழர்களின் தன்மானத்தை உரசிப் பார்க்கும் செயல். 

தமிழினத்தின் பெருமைமிகுந்த கலைஞன் வடிவேலு. அவரை எவ்வித இக்கட்டும் சூழாதபடி காப்பாற்ற வேண்டியது நம் இனத்தின் கடமை. திரையில் வேண்டுமானால் வடிவேலு ஒரு நகைச்சுவை நடிகராக இருக்கலாம்; ஆனால், உண்மையில் எங்கள் இனத்தின் கதாநாயகன் வடிவேலு. 

பலகோடி தமிழ் மக்களின் பெருமைமிகு கலைஞனாக இருக்கும் வடிவேலுவை அவ்வளவு சீக்கிரத்தில் அச்சுறுத்திவிட முடியும் என யாரும் கனவு காணக்கூடாது. தற்போதைய அரசியல் சூழலில் வடிவேலுக்கு ஆதரவாக யாரும் இல்லை என எண்ணி, சிலர் அவரை மிரட்டி உருட்டி பணிய வைத்துவிடலாம் என நினைக்கிறார்கள். 

மொத்த தமிழ்ச் சமூகமும் இந்த விவகாரத்தில் வடிவேலுவின் பின்னால் நிற்கும் என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். இதையும் தாண்டி வடிவேலுவை மிரட்டுகிற செயல்கள் தொடர்ந்தால் அவருக்கு அரணாகத் திரளவும், சம்பந்தப்பட்ட மிரட்டல் அமைப்புகளுக்கு தக்க பாடம் புகட்டவும் நாம் தமிழர் கட்சி கொஞ்சமும் தயங்காது. 

நன்றி : தட்ஸ் தமிழ் இணைய இதழ்
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 7 ஏப்ரல், 2014

மனசு பேசுகிறது : தமிழன் என்பதில் தயக்கம் ஏன் மக்களே?


ரண்டு தினங்களுக்கு முன்னர் வேலைக்குச் செல்லும் போது பள்ளி செல்லக் காடத்திருந்த குழந்தைகள் தங்கள் அன்னையரிடம் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். பெற்றவர்களோ அவர்களின் மழலைப் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது காரணம் இங்கு பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்பா அம்மா என்று கூப்பிட்டாலே முறைப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். அம்மா என்று அழைத்தால் அரபிக் குழந்தைகளைப் போல் மம்மா என்று அழைக்கப் பணிக்கும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். 

தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தமிழ் ஆட்களுடன் பேசும்போது ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்பும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன்.  குழந்தைகளிடம் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினாலும் ஆங்கிலத்துக்கு தமிழ் அர்த்தத்தை தங்கள் கைப்பேசியில் தேடிப்பிடித்துப் பேசி ஆங்கிலம் வளர்க்கும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு மத்தியில் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதும் தமிழில் பேசுவதை ரசிக்கும் பெற்றோரை இதுபோல் எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. அப்போதெல்லாம் என்னை அறியாமல் சந்தோஷம் புகுந்து கொள்கிறது. மனதுக்குள் அந்தக் குழந்தைகளையும் அவர்களைப் பெற்றவர்களையும் வாழ்த்தியபடி கடந்து செல்றேன்.

மேலே சொன்ன சந்தோஷ அனுபவத்துடன் அலுவலகம் சென்றவன் ஒரு வேலையாக எங்களது தளத்தில் இருந்து மற்றொரு தளம் சென்றேன். அங்கு புதிதாக ஒருவன் வேலைக்கு வந்திருந்தான். அவன் தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். எங்கள் அலுவலக எகிப்து நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன். நம்ம பையன் அதுவரை என் பக்கம் திரும்பவே இல்லை. 

கிளம்பும் போது சரி நாமே பேசலாம் தமிழந்தானே என்று அவனிடம் கை கொடுத்து நீங்க தமிழ்நாடான்னு கேட்டேன். என்னமோ நீதான் கொலை பண்ணினியான்னு கேட்ட மாதிரி ஒரு பார்வை பார்த்தான். என்னங்க நீங்க தமிழ்தானேன்னு மறுபடியும் கேட்டான். வேண்டா வெறுப்பாக 'ம்' என்றான். அத்துடன் வந்திருக்கலாம். நான் தேவகோட்டை நீங்க எந்த ஊர் என்றேன். எதுக்குடா இதைக் கேட்கிறே என்பது போல் தஞ்சாவூர் என்றவன் ஆமா நான் தமிழ்ன்னு உங்களுக்கு யார் சொன்னான்னு கேட்டான். தமிழன்னுதான் மூஞ்சியில எழுதி ஒட்டியிருக்கேன்னு நினைச்சிக்கிட்டு கேள்விப்பட்டேன்னு சொன்னேன். பதில் சொல்லாமல் வேலை செய்வது போல் கணிப்பொறியை சீரியஸாகப் பார்த்தான். தமிழனுடன் பேசலாம்... தமிழன் என்று சொல்வதற்கே கூச்சப்படுபவனுடன் என்ன பேச... போடா ம.... அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டு கிளம்பி வந்துட்டேன். 

அப்புறம் நேற்றும் அங்கு செல்ல வேண்டி வந்தது... போனேன்... என் வேலையைப் பார்த்தேன்... பக்கத்திலிருந்த பாகிஸ்தானியுடன் பேசினேன்... அவனைப் பார்க்கவும் இல்லை... பேசவும் இல்லை.... தேவையில்லாமல் ஒரு புன்னகையை வீணாக்காமல் திரும்பி வந்தேன். அப்படியே அவனைப் பார்க்க நேர்ந்தாலும் இனி என் தமிழ் தன்மானம் இழக்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறது. தமிழன் என்று சொன்னால் தரம் தாழ்ந்து விடுவோம் என்று நினைக்கும் தரங்கெட்ட மனிதருடன் நமக்கு அப்படி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு.

பெரும்பாலும் இங்கு தமிழர்கள் தமிழர்களுடன் பேசுவதற்கு யோசிக்கிறார்கள் என்பதே வேதனையான விஷயம்தான். இதில் என்ன கௌரவக் குறைச்சல் வந்துவிடப் போகிறது என்று தெரியவில்லை. மலையாளி இன்னொரு மலையாளியிடம் மலையாளத்தில்தான் பேசுகிறான். கன்னடாக்காரன் கன்னடத்தில்தான் பேசுகிறான். ஆந்திராக்காரன் தெலுங்கில்தான் பேசுகிறான். ஆனா நம்மவன் மட்டும் நம்மளைப் பார்த்தால் ஆங்கிலத்துக்கு தாவிவிடுகிறான். அதில் என்ன அப்படி ஒரு ஆனந்தமோ தெரியலை. நாங்கள் இப்போது இரண்டு ஆந்திராக்காரர்களுடன் வேலை செய்கிறோம். ஒருவனுகு தமிழ் நன்றாகத் தெரியும் என்பதால் என்னைப் பார்த்தால் தமிழில்தான் பேசுவான். ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாலும் தமிழுக்கு மாறிவிடுவான். அவனுக்கு அதில் ஒரு சந்தோஷம். நம்மவர்களுக்கு தமிழ் என்றால் தோஷம்... என்ன செய்ய....

'தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா'

- என்பதெல்லாம் பாடநூலில் பாட்டாக மட்டுமே இருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது வருந்தத்தான் முடிகிறது. 

-மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்..

சனி, 5 ஏப்ரல், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 59

முந்தைய பதிவுகளைப் படிக்க...



59.  பிரிவே சுகம் தரும்

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் புவனாவின் அம்மா கல்யாணப் பேச்சை தள்ளிப் போட்டு மகள் படிக்க சம்மதிக்கிறாள். படிப்பு மற்றும் காதல் தொடர்பாக பேச புவனாவுக்கு மல்லிகா மூலமாக அழைப்பு விடுகிறான் ராம்கி.

இனி...

"வா ராம்கி..." கதவைத் திறக்கும் போதே வரவேற்றாள் மல்லிகா.

"எப்படியிருக்கே மல்லிகா... அம்மா எங்கே?"

"நான் நல்லாயிருக்கேன்... எல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க.... உள்ள வா..."

"இல்ல பெரியவங்க இல்லாம நாங்க இங்க வந்து பேசுறது நல்லாயிருக்குமா? ஐயா வீட்டுக்கு வரச்சொல்றியா... நான் அங்க இருக்கேன்..."

"அடச்சீ வா... யாரு என்ன பேசப்போறாங்க... என்னைப் பற்றி எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும்... நீ உள்ள வா..." என்றதும் பேசாமல் உள்ளே போய் சோபாவில் அமர்ந்தான்.

மல்லிகா கொடுத்த காபியைக் குடித்தபடியே "புவி வந்துருவாளா?" என்றான்.

"கண்டிப்பா வருவா... இதுல என்ன சந்தேகம்... ஆமா அப்படி என்ன முக்கிய விஷயம்? ரெண்டு பெரும் எஸ்கேப் ஆகப் போறீங்களா?"

"என்ன மல்லிகா நீயே இப்படிக் கேக்குறே...? படிப்பு சம்பந்தமா பேசத்தான் வரச்சொன்னேன்.."

"ஏய் சும்மா கேட்டேன்... சீரியஸா எடுத்துக்கிட்டே... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா... சரவணன் எதாவது சொன்னானா?"

"சரவணனா... ஒண்ணும் சொல்லலையே... என்ன விசயம்... நீ சொல்லேன்..."

"சரவணன் எனக்கு புரப்போஸ் பண்ணினான்..." என்றபடி அவன் முகத்தை நோக்கினான்.

"இது எப்போ... அவன் ஒண்ணும் சொல்லலை... ஆமா அதுக்கு நீ என்ன சொன்னே?"

"என்ன சொல்லச் சொல்றே... எனக்குன்னே எங்க மாமா மகன் காத்திருக்கான்... இது சின்ன வயசுல முடிவு பண்ணினது... எங்க அப்பா அம்மாவோட முடிவு மட்டுமில்ல எனக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும்... அப்படி இருக்க எப்படி ஏத்துக்க முடியும்... சாரிப்பான்னு சொல்லிட்டேன்..."

"ம்.. இதுவரைக்கும் அவன் இதுபற்றி சொல்லவேயில்லை...."

"ஒருவேளை நான் ஓகே சொல்லியிருந்தா உங்ககிட்ட சொல்லியிருப்பான்... இதை எப்படி சொல்லுவான்... நீ போயி எதுவும் கேக்காதே... " என்று சொல்லும் போதே புவனாவின் சைக்கிள் வாசலில் வந்து நின்றது.

"வந்துட்டா உன்னோட ஆளு... பார்றா முகத்துல ஆயிரம் சந்திரன் வந்தாச்சு...."

"பாத்து நாளாச்சுல்ல... ஆயிரத்துக்கு மேல வரும்ல்ல...."

"ஹாய் மல்லிகா, ஹாய் ராம்..." என்றபடி உள்ளே வந்தவள் சோபாவில் அவனுக்கு அருகே அமர மல்லிகா எழுந்து கொண்டாள்.

"ஏய் ஏன் எழுந்துட்டே?" எனக் கேட்டாள் புவனா.

"நீங்க பேசுங்க... நான் எதுக்கு இங்க... உனக்கு ஒரு சூப்பர் காபி போட்டுக்கிட்டு வாறேன்...." என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

"என்னப்பா எப்படியிருக்கே? நல்லாயிருக்கியா... பாத்து எத்தனை நாளாச்சு...?" என்றபடி அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். அந்த ஸ்பரிசம் ராம்கிக்குள் ஆனந்த அலையை அள்ளி வீசியது.

"நல்லாயிருக்கேன் புவி... நீ என்ன கெறங்கிப் பொயிட்டே...?"

"அதெல்லாம் இல்ல ராம்... நல்லாத்தான் இருக்கேன்..."

"மேல படிக்கிறதுக்கு வீட்ல என்ன சொன்னாங்க?"

"ஒத்துக்கிட்டாங்க.... அதுவும் அம்மாவே அப்பாக்கிட்ட பேசினாங்கன்னா பாத்துக்கோங்களேன்... ஆமா எங்கம்மாக்கிட்ட அப்படி என்ன பேசினீங்க..?"

"ஏன் அத்தை மாறிட்டாங்களா..?"

"என்னைய படிக்க வச்சா எம் பக்கமே திரும்பிப் பார்க்கவே மாட்டேன்னு சொன்னீங்களாமே?" என்றவளின் கை விரல்களில் விளையாடிக் கொண்டிருந்தான்.

"ம்க்கும்" என்ற சத்தம் கேட்டதும் படக்கென்று அவளது கையை விட்டான். அவனுடன் ஒட்டி அமர்ந்திருந்த புவனா சற்றே தள்ளி அமர்ந்தாள். "சாரி" என்றபடி மல்லிகாவைப் பார்த்தான் ராம்கி.

"இதுல என்ன சாரி வேண்டிக் கிடக்கு... பிரிந்தவர் கூடினால் பேச மனம் வருமா என்ன... சரி இந்தா புவி காபி... பின்னால தோட்டத்துல மாமரத்து காத்தை வாங்கிக்கிட்டே பேசுங்க... மத்தியானத்துக்கு சமைக்கிறேன்... ரெண்டு பேரும் சாப்பிட்டுப் போகலாம்..."

"அய்யய்யோ சாப்பாடெல்லாம் வேண்டாம்... இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்... அவசரமாப் போகணும்" என இருவரும் கோரஸாகச் சொல்ல, "பார்றா ஒத்துமையை" என்று சிரித்தபடி வாசலுக்குப் போனாள் மல்லிகா, இருவரும் எழுந்து பின்பக்கம் போனார்கள்.

"அப்ப காரைக்குடியில படிக்க பிரச்சினை இல்லை... அப்படித்தானே?"

"ம்... என்னோட படிப்புக்கு இப்போ பச்சைக்கொடி காட்டிட்டாங்க... இனி படிப்பு முடியும் வரை திருமணப் பேச்சு இருக்காது..."

"சந்தோஷமான விசயமாச்சே..."

"சந்தோஷமான விசயந்தான்... ஆனா படிப்பு முடிச்சதும்...." புவனா மெதுவாக இழுத்தாள்.

"அப்போதைக்கு பாத்துக்கலாம் புவி... இப்ப நம்ம பிரச்சினைக்கு கொஞ்சம் கால அவகாசம் கிடைச்சிருக்குல்ல..."

"ம்... நீங்க காரைக்குடியிலதானே படிக்கப்போறீங்க..?"

"அது... அது வந்து..."

"என்ன இழுக்குறீங்க..?"

"இல்ல புவி என்னோட குடும்பச் சூழல் இன்னும் ரெண்டு மூணு வருசம் படிக்கிற மாதிரி இல்ல... அண்ணோட சம்பளத்தை வச்சி எல்லாமே பாக்க வேண்டியிருக்கு... இனி மறுபடியும் அவருக்கு பாரமா இருக்கணுமா... அதனால..."

"அதனால..." கோபமானாள்.

"திருப்பூர்ல சேவியர் இருக்கான்... அவனோட போய் இருந்திக்கிட்டு மதுரையிலயோ திருச்சியிலயோ கரஸ்ல படிக்கலாம்ன்னு நினைக்கிறேன்..."

"என்னது கரஸ்ஸா... அப்ப நான் படிக்கலை... இப்பவே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்... எங்கிட்டாவது போயிடலாம்... படிப்பும் வேண்டாம்... ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்..." அவன் தோளில் சாய்த்திருந்த தலையை எடுத்தபடி கோபமாகச் சொன்னாள்.

"ப்ளீஸ் புவி.... இப்ப இருக்க சூழலுக்கு ரெண்டு பேரும் ஒரு இடத்துல படிக்கிறது அவ்வளவு நல்லதில்லை... அது போக உங்கம்மாக்கிட்ட சொன்ன மாதிரி ரெண்டு பேரும் கொஞ்ச நாள் விலகி இருக்கலாம்... அப்பத்தான் பெத்தவங்களை புரிஞ்சிக்க வைக்க முடியும்..."

"என்ன ராம் உங்களை கொஞ்ச நாள் பாக்காம இருக்கதே பெரிய விஷயமா இருக்கு... இதுல நீங்க ஒரு ஊர்ல நான் ஒரு ஊர்லன்னா எப்படி... ப்ளீஸ் ரெண்டு பேரும் ஒரே இடத்துல படிப்போம்... உங்களுக்கு நானும் உதவுறேன்..."

"காசுக்காக பேசலை புவி.... நம்ம காதலுக்காக பேசுறேன்...இன்னைக்குச் சூழல்ல உன்னைய படிக்க வைக்கிறேன்னு உங்கம்மா இறங்கி வந்திருக்கதே பெரிய விஷயம்... இதுல நாம ஒரே இடத்துல படிச்சு... ரெண்டு பேரும் ஒண்ணாப் போகயில யாராவது பாத்து வத்தி வச்சிட்டா அது பெரிய பிரச்சினையில முடியும்... ஏன் உனக்கு அவசரக் கல்யாணம் பண்ணுற வரைக்கும் கூட போகும். "

"அதுக்காக..."

"இப்ப என்ன நான் இங்க அடிக்கடி வரப்போறேன்... உன்னைப் பாக்கப் போறேன்... போன்ல பேசப்போறோம்... ரெண்டு மூணு வருசம் சீக்கிரமே ஓடிடும்மா..."

"ம்... இதெல்லாம் தேவையா?"

"இப்போதைக்கு இதுதான் தேவை...."

"எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ராம்... " கண்கள் கலங்க அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். பற்றிய கைகளை ஆதரவாக தடவியபடி " இன்னைக்கு நமக்கு வர்ற கஷ்டம் நாளைக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் புவி..." என்றபடி அவளது நெற்றியில் இச் பதித்தான்.

"ம்... பேச்சு பேச்சா இருக்கும் போது ஐயாவுக்கு முத்தம் கேக்குதோ..?"

"என்ன பண்றது... கிடைக்கத்தான் மாட்டாது... கொடுத்தாவது வைப்போமேன்னுதான்..." என்று சிரித்தான்.

"அதுசரி... கெடைக்க வேண்டிய நேரத்துல சரியாக் கிடைக்கும்... அந்த மணி ரொம்ப சீரியஸா இருக்கானாம்... எனக்கு உங்களை எதாவது பண்ணிருவானுங்களோன்னு பயமா இருக்கு.... அப்பாக்கூட வைரவனை மதுரைக்குப் போகச் சொல்லிட்டாரு... அவனுக்கும் சம்பந்தம் இருக்கும்ன்னு பேச்சு அடிபட்டதா யாரோ அப்பாக்கிட்ட சொன்னாங்களாம்... பாத்து இருங்க..."

"என்ன புவி நான் அவனை அடிக்க ஆள் வச்சேன்னா என்ன... ஆனா என்னைய அடிக்கணுமின்னு பேசின விவரம் தெரிஞ்சு மச்சான்தான் போட்டிருக்கணுமின்னு நம்ம பசங்களும் பேசினாங்க... ஆனா மச்சான் பண்ண வாய்ப்பில்லை... ஏன்னா இது பலநாள் திட்டம் போல இருக்கு... மச்சானுக்கு கோபம் வருந்தான்... ஆனா இந்தளவுக்கு போகமாட்டாரு... அவரு இங்க இல்லாம இருக்கதுதான் இப்போதைக்கு நல்லது"

"என்னது மச்சானா.... வைரவன் அண்ணன் எங்க போனாரு... மச்சானாயிட்டாரு...?"

"ஆமா உன்னைய லவ்விக்கிட்டு அவரை அண்ணன்னு சொன்னா நல்லாவா இருக்கு... எப்படியிருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள்ல மச்சான்னு கூப்பிடப் போறோம்... அதை இப்பவே கூப்பிட்டா என்ன..." என்றபடி அவள் தோளில் கைபோட்டு இழுத்து அணைத்தான்.

"அப்பா ராசா... இன்னைக்கு ஒரு மாதிரித்தான் இருக்கீங்க... ஆளை விடுங்க சாமி... " என்றபடி எழுந்தாள்.

"அப்ப இதுக்கு நீ ஓகேதானே...?"

"எதுக்கு?" அவனை முறைத்தாள்.

"ஏய் நீ தப்பா புரிஞ்சிக்கிட்டே நான் கேட்டது படிப்புக்கு..."

"ம்... நா வேற என்னமோன்னு நினைச்சிட்டேன்.. அதான் சொல்லிட்டீங்களே... என்ன பண்றது... அவனவன் காதலிச்சமா... கல்யாணத்தைப் பண்ணினோமான்னு இருக்கான்... இங்க என்னடான்னா பிரிஞ்சிருந்து புரிய வைக்கிறாராம்...."

"புவி நம்மளோட இந்த முயற்சி கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்... சரி வா போகலாம்..."

"ம்..."

"என்ன பேசியாச்சா?" என்றபடி டிவியை ஆப் பண்ணினாள் மல்லிகா.

"பேசியாச்சு... அப்பக் கிளம்புறோம்..." என்றான் ராம்கி.

"அட இருங்க சாப்பிட்டுப் போகலாம்... ஆமா புவி முகம் சரியில்லையே ஏன்?"

"ஆமா... இவரு திருப்பூர் போறாராம்... அப்புறம் எப்படி சந்தோஷமா இருக்கச் சொல்றே?"

"என்ன ராம்கி என்னாச்சு?" என்றதும் ராம்கி விவரமாகச் சொன்னான்.

"இங்க பாரு புவனா... ராம்கி சொல்றதுதான் சரியின்னு படுது... எல்லாம் நல்லா முடியும்... உங்க வீட்ல இருந்து பேச முடியலைன்னா காலேஜ் முடிச்சிட்டு இங்க வந்து பேசலாம்... நானும் காரைக்குடிதானே வர்றேன்... கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பின்னால சந்தோஷமா இருக்கலாம்..." என்று மல்லிகா சொல்ல புவனா ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.

"ரெண்டு பேரும் ஒண்ணாவா போறீங்க... ராம்கி முன்னால போகட்டும் புவனா நீ அப்புறம் போகலாம்..." என்று மல்லிகா சொல்ல இருவருக்கும் அதுதான் சரியெனப்பட்டது. ராம்கி கிளம்ப, சற்று நேரம் அமர்ந்திருந்த புவனா தனது சைக்கிளை வீட்டை நோக்கிச் செலுத்தினாள்.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

மனசின் பக்கம் : இப்படியும் ஏமாற்றலாம்

பதிவுக்குள் செல்லும் முன்...

நன்றி:

நான் எழுதிய கௌரவக் கொலைகள் கட்டுரையைப் படித்து என்னைப் பாராட்டிய திரு. முத்து நிலவன் ஐயா அவர்கள் அதே செய்தியை வைத்து தனது தளத்தில் அருமையானதொரு வேதனைக் கவிதையைப் பகிர்ந்திருக்கிறார். பெரியவர்களின் வாழ்த்து கிடைப்பது என்பது சாதாரணம் அல்ல. ஐயாவிடம் இரண்டாவது முறையாக வாழ்த்தைப் பெற்றிருக்கிறேன். முன்னர் கிராமியக் கலைஞர் மறைந்த திருமிகு. முத்துமாரி அவர்களைப் பற்றி எழுதியபோது முதல் முறை ஐயாவின் வாழ்த்தைப் பெற்றேன். மற்றவர்களின் எழுத்தை சுவாசித்து வாழ்த்துவதற்கு மனசு ரொம்ப முக்கியம்... அதுவும் எனது பதிவு குறித்த பகிர்வுடன்....இது எல்லாருக்கும் வருவதில்லை. கூக்கு படம் குறித்து மிகப்பெரிய எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் எழுதிய அருவெறுப்பான வார்த்தைகளுடன் கூடிய விமர்சனத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். முத்து நிலவன் ஐயாவிடம் பாராட்டுப் பெறுவது என்பது மிகச் சிறப்பானதொரு தருணம். இது போன்ற சந்தோஷத் தருணங்கள் கிடைக்கக் காரணமாக எழுத்துத் துறைக்குள் அழைத்து வந்த எனது கல்வித் தந்தைக்குத்தான் நன்றி சொல்லணும்.

ஐயாவின் பதிவைப் படிக்க... தாலாட்டு ஏன் ஒப்பாரியானது? 

வருத்தம்:

நண்பர் ஸ்கூல்பையன் அவர்கள் தனது முகநூலில் எழுத்தைத் திருடி தன் பெயரை இட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காப்பி பேஸ்ட் நண்பரைப் பற்றி சொல்லியிருந்தார். ரொம்பப் பேருடைய கற்பனைகளை தனக்குள் உதித்தது போல எழுதி பாராட்டுக்களை வாங்கியிருக்கிறார். அவரது முகநூலில் நமது நண்பர்கள் குழு கிடாவெட்டி கோலாகலமாகக் கொண்டாடி விட்டார்கள். அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார். நம்ம கதைகளும் அங்கு இருக்காம். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

-------------------

பதிவுக்குள் செல்வோமா...

இரண்டு தினங்களுக்கு முன்னர் உறவினர் ஒருவர் விடுமுறையில் ஊருக்குப் போனதால் நகை வாங்கப் போனோம். அப்போது எங்களது அண்ணன் குடும்பத்துடன் வந்திருந்தார். கடையில் இருந்து வரும்போது கணவன் மனைவி என குடும்ப சகிதமாக வந்திருப்பவர்களுக்கு பரிசுக் கூப்பன் கொடுக்கிறோம். இதை பூர்த்தி செய்து தாருங்கள் என்று கொடுத்தனர். பூர்த்தி செய்து போட்டு விட்டு வந்தாச்சு. மறுநாள் காலையில் தாங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு கண்ட்ரி கிளப் (COUNTRY CLUB) ஒரு வாரம் ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்து தரும். அவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்று சொல்ல, உறவினருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

இதில் என்ன கூத்து என்றால் நகை வாங்கியவர் கொண்டு போன பையில் பூர்த்தி செய்த கூப்பனின் அடிப்பகுதி போய்விட்டது. அதை அவர்களிடம் சொன்ன போது அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை குடும்பத்துடன் எங்கள் கிளைக்கு வந்து செல்லுங்கள். உங்கள் பரிசின் விவரம் தெரிவிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே அவர் எங்களுக்குப் போன் செய்து விவரம் சொல்லி அழைக்க அப்போதே நான் வரவில்லை என்று சொன்னேன்... 

இரவு எங்கள் அறைக்கே வந்து அட வாங்க... சாப்பாடெல்லாம் போடுவானுங்க... போய்ட்டு வரலாம் என்று என்னையும் மற்றொரு அண்ணனையும் அழைத்துச் சென்றார். அங்கு போய் கார் பார்க் பண்ண இடம் கிடைக்காமல் அழைந்து அவர்களுக்குப் போன் செய்தால் ஆள் அனுப்பி கார் பார்க்கிங் பண்ண ஏற்பாடு செய்து எங்களை லிப்டில் அவர்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். உள்ளே நுழைந்ததும் வரவேற்று விவரங்கள் கேட்டு 9 மணி முதல் 10 மணி வரை உங்களுக்கு எங்களது கவுன்சிலிங் இருக்கு அதை முதலில் முடியுங்கள் என்றார்கள். 

உள்ளறையில் இருந்து ஒரு பெண் வந்து அழைத்துச் சென்று ஒரிடத்தில் அமர வைத்து 'நீங்க தமிழா... மலையாளத்தில் சம்சாரிச்சா ஓகேயான்னு' அப்படின்னு நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசினாள். நாங்கள் ஓகே என்று சொன்னதும் ஒரு மலையாளி பையனை எங்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப் பணித்தாள். நான் அந்த அறைக்குள் அங்காங்கே கவுன்சிலிங்கை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தவரகளைப் பார்த்தேன். ஆட்டை வெட்ட ரெடியா குளிப்பாட்டி வச்சிருக்கானுங்கன்னு புரிந்தது. எங்களக்கு அந்த மலையாளி விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

'எல்லாரும் ஒரு பேமியா?' 

'எந்தக் கம்பனியிலயான்னு சோலி?' 

'எந்தா சோலி இவட?'

'நாட்டுல எவட யானு?'

'நாட்டுக்குப் போகணுன்டா?' 

'பாரியாள் பணி எடுக்குதா இல்ல ஹவுஸ் வைப்பா?' என ஆரம்பித்து உங்களுக்கு 7 நாளைக்கு ஹோட்டல்ல தங்க நாங்க ஏற்பாடு பண்ணுவோம். நீங்க 4000 ரூபாய் மட்டும் கட்டினால் போதும் என்றார். இங்கதானே ஹோட்டல் ரூம் கொடுக்கும் என்று கேட்க, கேரளா, பெங்களூரு, சென்னை, கோவா, பாங்காங் இந்த ஊர்களில் எங்கு வேணுமானாலும் தங்கலாம் என்றார். எனக்கு இவர்கள் ஏமாற்றுப் பேர்வழி என்று புரிய கவனத்தை மற்ற பக்கம் திருப்பினேன்.

எல்லா மேஜைகளிலும் வந்தவர்களை எப்படியாவது மடக்கிவிட ரொம்ப சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எங்களைக் கூட்டிப்போனவள் ஒரு இளைஞனுடன் அமர்ந்தபடி எங்களையே நோட்டம் விட்டாள். அவ்வப்போது பேசுபவனைப் பார்த்து மர்மப்புன்னகை செய்தாள். அவனும் பலவித வாசனைத் திரவியங்கள் போட்டு குளிப்பாட்டிப் பார்த்தான். நீங்கள் இதை ஏற்றுக் கொள்வதென்றால் எங்களிடம் 7000 திர்ஹாம் கட்டி உறுப்பினராகனும். தினமும் உடற்பயிற்சி, டான்ஸ் என எல்லாம் செய்யலாம். இது லைப்டைம் உறுப்பினர் கட்டணம் இந்தச் சலுகை இன்று மட்டும்தான் நாளை என்றால் 25000 திர்ஹாம் . இதையேதான் எப்போது போனாலும் சொல்லுவானுங்கன்னு நமக்குத் தெரியாத என்ன... இதுபோல் எத்தனை பேரைப் பார்த்திருப்போம். நான் அவனது பேச்சில் கவனம் செலுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்தேன். 

ஒரு மணி நேரத்திற்கு முன்னர் கிளம்ப அனுமதியில்லை. அவனும் ஒரு மணி நேரம் மூளைச்சலவை செய்து பார்த்தான். அண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் கொஞ்சம் ஆசை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. ஐயா வலையில விழுந்திடாதேன்னு காலை நோண்டி கண்ணைக் காண்பிக்க, அவர் மயக்கத்தில் இருந்து மீண்டார். பின்னர் எங்களிடம் அவர்களது சேவை எப்படி, ஏன் இப்போது சேரவிருப்பம் இல்லை என எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு நாங்கள் அவர்களது கிளப்பில் இணைந்திருப்பதாகச் சொல்லி மற்றவர்களை ஏமாற்றி கைதட்டினார்கள். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. எப்படியெல்லாம் பொழப்பு நடத்துறானுங்க.... 

மின்னஞ்சலில் உங்களுக்கு ஒரு கோடி கிடைத்திருக்கிறது... நான் என்னோட பணத்துல பாதியை உங்களுக்குத் தர நினைக்கிறேன்... என்று வருவது போல நேர கூப்பிட்டு அமுக்கப் பார்க்கிறானுங்க... போதும்டா சாமி ஆளைவிடு என்று வெளிய வர அம்புட்டு நேரம் அவனுக சொன்னதை எல்லாம் கேட்டுக்கிட்டு இருந்ததால நளாஸ் ஆப்பக்கடையில சாப்பிட 50 திர்ஹாம் கூப்பன் கொடுத்தானுங்க... எல்லாரும் வெளியில் வந்து சிரித்தபடியே காரில் ஏற, ரொம்ப அன்பாக் கூப்பிட்டானுங்க... வாங்க வாங்கன்னு சொல்லி வரச்சொல்லி எப்படியெல்லாம் தொழில் பண்ணுறானுங்க பாருங்க... என்றபடி வண்டியை எடுக்க இரவு 11 மணிக்கு அறைக்குத் திரும்பி மலையாளி கடை புரோட்டாவை மதியம் வச்ச மீன் குழம்பில் ஊறவைத்து சாப்பிட்டுவிட்டு படுத்தோம்.

மனசின் பக்கம் தொடரும்...
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மனசு பேசுகிறது : கௌரவக் கொலைகள்

''நான் தான் கொன்றேன்''... பெண் சாப்ட்வேர் என்ஜினியரை கவுரவக் கொலை செய்த தந்தை ஒப்புதல்

காதலை ஏற்காத பெற்றோர் பெண்ணையோ பையனையோ கொலை செய்தால் அதைக் கௌரவக் கொலை என்று அழைக்கிறார்கள். எது கௌரவக் கொலை? ஒரு உயிரை எடுப்பது என்பது கௌரவமா? தன் மகனோ மகளோ வேற்றுச் சாதியினரையோ மதத்தினரையோ காதலித்து மணம் புரிந்தால் அவர்களைத் தந்திரமாக கூட்டி வந்து கொல்வதில் எந்தக் கௌரவம் காக்கப்படுகிறது? காதலிப்பது என்பது தாங்கள் வளர்த்த வாரிசைக் கொல்லும் அளவுக்கு பாவச் செயலா?

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் வைதேகி என்ற பெண் தனது பக்கத்து வீட்டில் குடியிருந்த சுரேஷ் குமார் என்பவருடன் சிறுவயது முதலே பழகியிருக்கிறார். இந்தப் பழக்கம் காதலாக மாற இருவரும் மதுரையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு கேரளாவுக்கு சென்று வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். கபட நாடகம் ஆடி ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த வைதேகியையும் சுரேஷையும் தேனிக்கு வரவழைத்து பெண்ணை மட்டும் வீட்டுக்குக் கூட்டிச் சென்று கர்ப்பத்தைக் கலைக்கச் சொல்லி மிரட்ட, அதற்கு அடிபணியாததால் கொலை செய்திருக்கிறார்கள். மனைவியைக் கூட்டிப் போனார்கள் காணவில்லை என கணவன் நீதிமன்றத்துக்குப் போக இந்தக் கொலை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஹைதராபாத்தில் பெற்ற தகப்பனே மகளைக் கொலை செய்திருக்கிறார். இதுவும் காதல் திருமணத்தினை ஏற்க்காமல் கபட நாடகத்தால் நடந்த கொலைதான். பெண்ணின் காலில் இட்ட மருதாணி அழியும் முன்னரே உயிரை எடுத்திருக்கிறார். மேலே போட்டிருக்கும் படத்தைப் பார்க்கும் போது மனசு வலிக்கிறது. இதைக் நாந்தான் கௌரவத்தைக் காக்க கொலை செய்தேன் என்று பெருமையாகச் சொல்லியிருக்கிறார். இதே போல் பத்திரிக்கைச் செய்திகளில் தினம் ஒரு செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது. தனது பெண்ணோ பையனோ காதலித்ததால் தங்களது சாதிக்கும் மதத்துக்கும் கௌரவக் குறைச்சல் வந்து விட்டது என்று தரங்கெட்ட மனிதர்கள் செய்யும் மகாபாதகக் கொலைகளை பத்திரிக்கைகள் கௌரவக் கொலைகள் என்று அழைப்பது எந்த விதத்தில் நியாயம்?

ஒரு உயிரை எடுப்பதால் தங்களது கௌரவம் காக்கப்பட்டுவிட்டது என்று கொண்டாடும் இந்த வெறியர்களின் கௌரவம் எந்த விதத்தில் காக்கப்பட்டது என்பதை இந்தக் கொலையாளிகள் சொல்வார்களா? இல்லை இதன் பின் இந்தச் சாதியிலோ அல்லது மதத்திலோ கௌரவம் காக்கப்பட வேண்டும் என்பதால் காதல் முளைவிடாமல் இருக்குமா? இந்த வெறி பிடித்த மிருகங்களுக்கு குலக் கௌரவத்தைக் காத்துவிட்டாய் என அவர்கள் சார்ந்த சாதியும் மக்களும் வெண்சாமரம் வீசலாம்... நீ வீரன்டா என வசனம் பேசலாம்... பார்த்துப் பார்த்து வளர்த்த உயிர் போனதால் கிடைக்கும் இதெல்லாம் ஒரு வெற்றியா... இல்லைவே இல்லை இது இரத்தத்தில் ஊறிய சாதி வெறி.

தனது இரத்தத்தை பாலாக்கி மாரில் போட்டுத் தாலாட்டிப் பாலூட்டிய தாய்... தனக்கு இல்லை என்றாலும் இருப்பதை எல்லாம் பிள்ளைக்கு வைத்து பட்டினி கிடக்கும் தாய்... இப்படி பிள்ளையின் வளர்ச்சியில் சந்தோஷம் காணும் தாய்க்கு தன் பிள்ளை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழப் பொறுக்காமல் கொலைக்கு உடன்படும் மனம் எங்கிருந்து வருகிறது..? கௌரவம் என்பது பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பிள்ளையை விட பெரியதாகத் தெரிவது எப்படி? கொலைக்கு உடன்படும் தைரியத்தைத் தருவது அவர்களின் குலக் கௌரவமா?

தோளில் தூக்கி வளர்த்த பிள்ளை... மாரில் மிதித்த பிள்ளை... விளையாட்டாய் செய்வதில் எல்லாம் சந்தோஷிக்கும் அப்பா... படிக்கும் காலத்தில் அம்மாவுக்குத் தெரியாமல் பணம் கொடுக்கும் அப்பா... பிள்ளையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் சந்தோஷப்பட்டு தனது மீசையை முறுக்கிக் கொள்ளும் அப்பா... தனது பிள்ளைக்குப் பிடிக்கும் என்பதால் கையில் காசிருந்தாலும் இல்லாவிட்டாலும் வாங்கி வரும் அப்பா.... வேற்று சாதியினரை காதலிக்கும் போது மட்டும் பாசத்தை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு கௌரவத்தை அணிந்து கொள்வது ஏன்? தான் பெற்ற பிள்ளையை தானே கொலை செய்யும் அளவுக்குப் போவது ஏன்? தனது உயிரான பிள்ளையின் உயிரைவிட குலக் கௌரவம் பெரிதாகப் போவது எப்படி?

காதல் என்பது இன்று நகரத்தில் மட்டுமல்ல கிராமங்களிலும் வேர்விட ஆரம்பித்து விட்டது. எத்தனையோ காதல்கள் ஜெயித்திருக்கின்றன. நிறைய இளவரசன்களும் காதல் என்னும் வலையில் சிக்கி சாதி என்னும் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறார்கள். நாம் எப்பவும் பிரபலங்கள் காதலி ஜெயித்தால் போற்றுகிறோம்... வாழ்த்துக்கிறோம்... அதே நம் குடும்பத்தில் என்றால் கொலை செய்யும் அளவுக்குப் போகிறோம். நயன்தாரா- சிம்பு காதல் விவகாரமா வாய் கிழியப் பேசுவோம். சிம்பு ஏமாத்திவிட்டான்... அவன் அப்படித்தான் என்று எள்ளி நகையாடுவோம். இதே நம் சாதிப் பெண் என்றால் ஏமாற்றாமல் காதலித்தவன் கைபிடித்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வந்து காதும் காதும் வைத்தது போல் கமுக்கமாக வேலையை முடித்துவிட்டு விடிந்ததும் எப்பவும் போல் வேலை பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். 

சினிமாக்களிலும் கௌரவக் கொலைகளை... மன்னிக்கவும் இந்தப் பாதகக் கொலைகளை காட்டுகிறார்கள். குறிப்பாக தென்மாவட்டம் சார்ந்த கதைக் களங்கள் அமைந்த படங்களில் இப்படிப்பட்ட கொலைகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் விழிப்புணர்வுக்காகச் செய்கிறார்களா இல்லை ஊக்குவிக்கிறார்களா என்பது தெரியாமல் நாமும் உச் கொட்டி ரசிக்கிறோம். முதலில் பத்திரிக்கை உலகம் இது போன்ற கொலைகளை கௌரவக் கொலைகள் என அச்சில் ஏற்றுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஒரு உயிரை எடுப்பதில் என்ன கௌரவம் வேண்டிக் கிடக்கிறது. கௌரவத்திற்காக சாக வேண்டும் என்றால் பெற்ற பிள்ளை இப்படி ஓடிப்போயிருச்சேன்னு குலக் கௌரவத்தைக் காக்க நீ செத்துப் போ... ஒரு உயிரை துடிக்கத்துடிக்க கொலை செய்யும் உரிமையை உனக்கு யார் கொடுத்தா? அந்தளவுக்கு சாதியும் மதமும் உன்னை ஆட்கொள்கிறதா?

சாதி இல்லாத சமுதாயமும் மதம் இல்லாத மனிதமும் மலர வேண்டும் என்றால் இந்தக் கௌரவக் கொலைகளை ஒழிக்க வேண்டும். இந்தப் புற்று ஒன்று இரண்டென எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. மொத்தமாக புற்றையே அழிக்க வேண்டும் என்றால்  எங்கள் குலக் கௌரவம் காக்க நாந்தான் கொலை செய்தேன் என்று பெற்ற தாயோ, தந்தையோ, உடன்பிறப்புக்களோ, மாமனோ, மச்சானோ, சித்தப்பனோ, பெரியப்பனோ சொல்லும் போது அவர்களது குரல்வளையை அறுக்க வேண்டும். அப்போதுதான் கௌரவம் காக்க கொலை செய்தேன் என்று எவனும்/எவளும் மார்தட்டிக் கொள்ளமாட்டார்கள்.

தங்கள் பிள்ளைகள் காதலித்தால் அது பிடித்திருந்தால் அவர்களை வாழ்த்தி வாழ வையுங்கள்... இல்லையா அவர்கள் கண்கானாத இடத்தில் உயிருடன் வாழவாவது விடுங்கள்... இந்த மண்ணில் காதல் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல... உங்களின் ரத்தம்... உங்களின் செல்லம்... உங்களின் வாரிசு வாழட்டும் என்பதற்காக...

மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்.