மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

என்னைக் கவர்ந்த பாடல்கள் - 2

வாசிக்காதவர்களுக்காக... என்னைக் கவர்ந்த பாடல்கள் -1 

****************
ப்பவுமே... எதை ஆரம்பித்தாலும் சாமி கும்பிட்டு ஆரம்பிப்பதே பழக்கம் என்பதால் கவர்ந்த சினிமாப் பாடல்கள் பற்றிப் பார்க்கும் முன் பிடித்த சாமிப் பாடல்களைப் பற்றியும் பார்க்கலாம்தானே...

ஊர்ல திருவிழான்னாலே ஒரு வாரத்துக்கு மைக்செட் கட்டுவார்கள் என்ற சந்தோஷம் பள்ளி செல்லும் நாட்களின் அதிகமாகவே இருக்கும்... குழாய் ரேடியோவில் போடப்படும் பாடல் தூரத்தில் வரும்போதே கேட்கும் என்பதால் பாட்டுப் போட்டாச்சுடான்னு ஓடிவருவோம்... அந்த ஒரு வாரமும் காலையிலும் மாலையிலும் பிடித்த பாடலைப் போடச் சொல்லி மைக்செட் போடுபவரின் அருகிலேயே அமர்ந்திருப்போம்.

அப்போதெல்லாம் எங்க ஊரில் திருவிழா என்பது கேள்விக்குறிதான்... இருப்பதெல்லாம் சித்தப்பன் பெரியப்பன் என்றாலும் செவ்வாய்க் கூட்டம் என்பது பெரும்பாலும் பிரச்சினையில்தான் முடியும். அதை உடைத்து திருவிழா என்பது வருடாவருடம் கொண்டாட வேண்டும் என்பதை நாங்கள்தான் கொண்டு வந்தோம். இங்கே நாங்கள் என்பது பசங்க... பயலுக பேசுறதைக் கேட்டு ஆடுறீங்க என போன வருடம் இறந்து போன எங்க சித்தப்பா ஒருத்தர் சொல்லிக் கொண்டே இருப்பார் என்றாலும் திருவிழா என்பது தடையில்லாமல் நடந்து கொண்டுதான் இருந்தது.

எந்த ஊர் அம்மன் கோவில் திருவிழா என்றாலும் எல்.ஆர்.ஈஸ்வரியின் 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா...', 'அங்காளம்மா எங்க செங்காளம்மா...', 'ஏற்காடு வாழ்ந்திருக்கும்...', 'ஆடும்கரகம் எடுத்து ஆடி வருவோம்...', 'கற்பூரநாயகியே கனகவள்ளி...', 'தாயே கருமாரி... எங்கள் தாயே கருமாரி...' இப்படி எத்தனையோ பாடல்கள் அம்மன் திருவிழாக்களில் அணி வகுக்கும். அதுவும் பால்குடம், பூக்குழி என்றால் இந்தப் பாடல்கள் இல்லாமல்  சாமி வருமா என்ன..? கோவிலின் கூட்ட நெரிசலில் செல்லாத்தாவைக் கேட்டு எத்தனை ஆத்தாக்கள் ஆடியிருப்பார்கள். 


எங்க ஊரில் திருவிழாவே பெரிய விஷயமாய் இருந்த சூழலில் திருவிழாவை ஒரு பிரச்சினையுடன் நடத்தி முடித்த பின் மார்கழி மாதம் முழுவதும் காலையில் பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது என நாங்கள் முடிவு செய்தோம். அதற்கான முயற்சியில் இறங்க, அப்பவும் பயலுக ஆட்டம் போடுறானுங்க... இவனுகளும் அவனுக பின்னாடி நிக்கிறானுங்கன்னு ஒரு சிலர் கிளம்பி எதிர்த்து நின்னார்கள்... எதிரிகளாய்த் தெரிந்தது பசங்கதான்.

ஊர்க்கூட்டம் சரிவரலைன்னு நாட்டு அம்பலம் வீட்டு வரைக்கும் கொண்டு போய் அதுவும் முடியாத நிலையில் போலீஸ் வரைக்கும் கொண்டு போக,  அங்கும் பசங்க செய்வதில் தவறென்ன இருக்கு எனக் கேட்க, மீண்டும் ஆட்களைக் கொண்டு மைக்செட் போட வந்தவரைக் கூப்பிட்டு மிரட்ட, ஊர்ல போடச் சொன்னாங்க நான் போட்டேன்... அவங்க சொன்னா அவுத்துடுறேன்னு அவர் ஒத்தை வரியில் சொல்லி முடிச்சிட்டார்.

அன்னைக்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகள்தான் அவரை உயர்த்திக் கொண்டு வந்தது. அவர்தான் இனி நம்மூருக்கு என எங்கள் மனதில் நிறுத்தியது. ரெண்டு குழாய் ரேடியோவுடன் பரியன்வயல் மாரிக்கு கட்ட வந்தவர் இன்று தேவகோட்டையில் பெரிய மைக்செட் உரிமையாளராய் இருக்கிறார். எங்க ஊர் திருவிழா மட்டுமின்றி வீட்டு விசேசங்களுக்கும் இன்றுவரை அவர்தான்... கணக்குப் பார்த்து அவரும் வாங்குவதில்லை. நாங்களும் கொடுப்பதில்லை. அன்னைக்கு எங்களுடன் நின்றார்...இன்றும் நாங்கள் அவருடன் இருக்கிறோம்.

விஷயத்துக்கு வருவோம்...

மார்கழி மாதத்துக்கு ரேடியோ கட்டியாச்சு... தினம் பொங்கல் வைக்கணும்... சாமி கும்பிடணுமே... என்ன செய்றது..? காலையில் யாரை எழுப்பி பொங்கல் வைக்கச் சொல்வது...? யார் இதைச் செய்ய முன் வருவார்கள்..? ஒரு மாதக் குளிரில் சில நேரம் மழையும் பெய்யும் அதிகாலையில் தினமும் சரி வரச் செய்துவிட முடியுமா..?  விவசாய நேரம் வேறு... யோசித்தோம்.

யாரையும் கேட்பதில்லை... நாமே செய்வோமென வீட்டுக்கு வீடு வசூலித்த காசை வைத்து தினமும் காலையில் நாங்களே பொங்கல் வைத்தோம்... அருகிலிருக்கும் கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் கோவில் மாடு வயலுக்கு வந்து மேய்ந்து விட்டுப் போகாமல் பெரும்பாலானோர் வயலில் காவலிருந்தாலும் நாலு மணிக்கே பொங்கல் வைக்க எழுந்து குளித்து வரும் நாங்களும் போய் பார்த்துக் கொண்டே சாமிக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்தோம்..

தினமும் ஆறு மணிக்கெல்லாம் மணி அடித்தோம்... மழை அன்றைக்கு குடை பிடித்துக் கொண்டு பொங்கல் வைத்திருக்கிறோம்... அப்புறம் அடுத்தடுத்த வருடங்களில் ஊர் அதை எடுத்துக் கொண்டது... தினம் ஒரு குடும்பம் என ஆனது. சீட்டுப் போட்டு யார்யார் என்றைக்கு என்பதை எழுதி ஒட்டினோம். இப்போது எல்லாரும் வெளியில் என்பதால் வேளார் வந்து செய்து செல்கிறார்... மார்கழி மாத சாமி கும்பிடுதலும் தொடர்கிறது. இப்பக் கோவிலுக்கு என மைக்செட் வாங்கி விட்டதால் அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் யாரேனும் ஒருவர் பாடலைப் போட்டுவிடுவார்.

தினமும் காலையில் மைக்செட்டில் பிள்ளையார் பாடல்தான் முதல் பாடலாய் ஒலிக்கும்... 
'ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண
பிள்ளையார்பட்டி வரவேண்டும்...
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரைத் தொழ வேண்டும்...'


என்ற பாடல் எப்பவும் முதல் பாடலாய் வரும்.  எனக்கு இப்பவும் பிடித்த பாடல் இதுதான். அடிக்கடி கேட்கும் பாடலாகவும் இருக்கிறது. கேட்கும் போது மனதுக்கு ஒரு திருப்தி கிடைக்கும்... மகாநதி ஷோபனா பாடிய பிள்ளையார் பாடல்களும் அருமையாக இருக்கும்.. அவையும் தொடர்ந்து ஒலிக்கும். சாமி கும்பிடப் போகிறோம் என்றால் கந்தர் சஷ்டி கவசம்தான். அதே நடை முறைதான் இப்போதும்...
'துதிப்போர்க்கு வல்வினை போம்... 
துன்பம்போம்... நெஞ்சில் பதிப்போர்க்குச் 
செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும்... 
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை...'

அப்படின்னு பாட ஆரம்பித்தாலே ஒரு சுகம்தான் மனசுக்குள் இல்லையா... அதுவும் நாமும் அதைப் பாடிக்கொண்டே கேட்பது வித்தியாசமான சுகம். எனக்கு மிகவும் பிடித்தவர் முருகன்... எதற்கெடுத்தாலும் முருகான்னுதான் வாயில் வரும். தினமும் பலமுறை அழைத்து விடுவேன் முருகனை... நல்லாத்தான் முருகா போடுறே... ஆறாவதாய்ப் பிறந்ததனால ஆறுமுகம்ன்னு வைக்கணும்ன்னு உங்கய்யா (அம்மாவின் அப்பா) சொன்னாரு... உங்கப்பாதான் குமாரசாமின்னு வச்சாரு... நான் உன்னைய பள்ளியில் சேர்க்கும் போது சாமி எதுக்குன்னு தள்ளி வச்சிட்டு குமார்ன்னு சேர்த்தேன்... அதான் முருகா... முருகான்னு சொல்றே போலன்னு அம்மா இப்பவும் சொல்வாங்க. 

எந்தக் கோவில் என்றாலும் தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் 'அங்கே இடிமுழங்குது...' பாடலை... ஸ்பீக்கரில் போடும் போது ஆடாதவனையும் ஆடவைக்கும் இல்லையா..? அந்தக் குரலும் இசையும்... அந்தப் பாடலை இதுவரை எத்தனையோ பேர் பாடி விட்டார்கள்... இன்று வரும் கிராமியப் பாடகர்கள்  இந்தப் பாடலையும் ஆக்காட்டி பாடலையும் கண்டிப்பாகப் பாடும் பாடலாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். திருவிழாக்களில் வைக்கப்படும் கிராமிய இசை நிகழ்ச்சிகளில் இது பிரதானமான பாடலாக இருக்கிறது.

எங்களுக்கு அழகர் கோவில் குலதெய்வம் என்பதால் பதினெட்டாம் படிக் கருப்பரும் எங்கள் குலதெய்வமாய்... அவர் மீது பயம் கலந்த தனிப்பாசம் உண்டு. இந்த முறை சென்றபோது சிறு கதவின் வழி உள்ளே பார்த்தபோது எவ்வளவு பெரிய அருவா... இவ்வளவு அருவா இருக்கு என ஆச்சர்யப்பட்டான் விஷால்.

சில நேரங்களில் மனசு நல்லாயில்லை என்றால் முருகன் பாடலுடன் கருப்பரின் பாடல்களைத் தேடித்தேடிக் கேட்பேன். அப்போதெல்லாம் இந்தப் பாடல்தான் முதலாவதாய் ஓடும்... தேக்கம்பட்டியாரின் குரல் கருப்பனை நம்முன்னே இழுத்து வந்து நிறுத்தும் அல்லது நம் கண்ணுக்குள் கருப்பனைக் காட்டும். கருப்பர் சாமி ஆடுபவர்கள் இந்தப் பாடலைக் கேட்டால் துள்ளி ஆட அல்லவா செய்வார்கள்... பிடித்து நிறுத்த முடியாமல் திணற வைத்துவிடும் பாடல் அல்லவா இது.
'அங்கே இடி முழங்குது - கருப்பசாமி
தங்க கலசம் மின்னுது...
அங்கே இடி முழங்குது - மகாலிங்கம்
மாளிகபாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது...
வெள்ள நல்ல குதிர மேலே
வீச்சருவா கையிலேந்தி வேட்டையாட
வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி...'


பெரும்பாலும் கோவில் பூக்குழிகளின் போது இந்தப்பாடல்தான் ஒலிக்கும்... கருப்பர் அழைப்பின் போதும் இதே பாடல்தான்... இப்போது எப்படி அழகர் வைகையில் எழுந்தருளும் போது வாராரு... வாராரு அழகர் வாராரு பாடல் ஒலிக்கிறதோ அதைப் போல இந்தப் பாடல் சாமி அழைக்கும் இடங்களில் எல்லாம் ஒலிக்கும்.

எங்க ஊர் மாரியம்மன் கோவில் இப்போது கோபுரத்துடன் பிள்ளையார் முருகனுடன் சற்றே பெரிய கோவிலாய் கட்டப்பட்டுவிட்டது. முன்பு ஓட்டுக் கொட்டகைதான்... எங்க அக்கா, அண்ணன் என மாறி மாறி வெள்ளி செவ்வாய் சாம்பிராணி போடுவார்கள். அதன் பின் நான் ரொம்ப நாள் பூசாரி வேலை பார்த்தேன். பீடம்தான் அம்மன்... சிலையாக இல்லை... பீடத்தைக் கழுவுவதற்கு அவ்வளவு பிடிக்கும். அதிலொரு மகிழ்ச்சி.

அப்பறம் சமீபத்தில் பிரபலமான குலசை முத்துராமன் எழுதிய காளியம்மன் பாடல்... இப்ப எல்லாத் திருவிழாவிலும் அடிக்கடி போடப்படும் பாடலாக மாறியிருக்கிறது. சாமி வர வேண்டும் என்றால் இந்தப் பாடலைப் போடலாம் என்ற வரிசையில் இதுவும் அமர்ந்திருக்கிறது.

'கூப்பிட்டா ஓடிவருவளா...
நம்ம காளியம்மா குதி போட்டு ஆடிவருவாளா...
அவ கூப்பிட்டா ஓடிவருவாளா
நம்ம காளியம்மா குதிபோட்டு ஆடிவருவாளா...
ஏய் சின்னஞ்சிறுபிள்ளை போல இருப்பவள்
சேதுபதியை நடுவில் வச்சவ...
தன்னை மறந்துமே தலைகுனிஞ்சவ
தாயமங்களம் மாறி அவ
கூப்பிட்டா ஓடிவருவாளா...'


இந்தப் பாடலை நாடகக் கலைஞர் பபூன் ராதாகிருஷ்ணன் பெரும்பாலான மேடைகளில் பாடி, கூத்துப் பார்க்க வந்திருப்பவர்களைச் சாமியாட வைத்து விடுவார்.

சொல்ல மறந்துட்டேன் பாருங்க... மருதமலை மாமணியே முருகையா பாடலை குழாய் ரேடியோவில் போட, தூரத்தில் இருந்து கேட்டிருக்கிறீர்களா... அப்படிக் கேட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். அருமையானதொரு பாடல் இல்லையா அது..?

இன்னும் இன்னுமாய் நிறைய சாமி பாடல்கள் இருக்கின்றன... எல்லாவற்றையும் எழுத முடியாது... அடுத்த பதிவில் என்னைக் கவர்ந்த நாட்டுப்புறப்பாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

பாடல் தொடரும்.
**********************
மின்கைத்தடியில் எனது மூன்றாவது சிறுகதை பகிரப்பட்டிருக்கிறது. இணை என்னும் இச்சிறுகதையும் எப்பவும் போல் வாழ்க்கையைத்தான் பேசுகிறது. வாசித்து தங்கள் கருத்தை அங்கும் இங்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

இசை குறித்தான ஆரம்பம் பக்தியுடன் ஆரம்பித்திருக்கிறது.  

மின்கைத்தடியில் இணை சிறுகதைக்கு வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

உங்கள் சிறுகதைகள் இணை, வீராப்பு, அப்பா, அப்பாவின் நாற்காலி எல்லாம் எனக்கு அனுப்பப்பட்டு வாசித்தேன்.

அனைத்தும் அருமை. பரிசுகள், மின் இதழில் வெளிவருதல் எல்லாவற்றிற்கும் பாராட்டுகள் வாழ்த்துகள். இன்னும் பல சிகரங்களை நீங்கள் தொட வேண்டும்.

இதொடர் இன்னும் வாசிக்கவில்லை. வாசித்ததும் கருத்து இடுகிறேன்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் ஆஹா பக்திப்பாடல்களுடன் தொடக்கமா...முதல் இருப்பாடல்கள் நிறைய கேட்டுள்ளேன். மற்ற இரண்டும் இப்போதுதான் கேட்கிறேன் நீங்க சொல்லிருப்பது போல சாமி வர ஏற்ற பாடல்கள் தான்..

மருதமலை மாமணியே பாடல் எவ்வளவு கேட்டிருக்கிறேன் செம பாடல்....

தொடர்கிறேன் குமார்

கீதா

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கு நன்றிண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா....
வாசித்ததற்கு நன்றிண்ணா...
கருத்துக்கு நன்றிண்ணா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கருத்துக்கு நன்றிக்கா...

Unknown சொன்னது…

கூப்பிட்டா ஓடி வருவாளா,
பாடலை முழுவதும் பதிவுசெய்யவும்

Unknown சொன்னது…

Sir,i want Kupita padal varikal full please help me

'பரிவை' சே.குமார் சொன்னது…

https://www.youtube.com/watch?v=R1XwK1mmBNw

நண்பரே பாடல் வரிகள் கிடைத்ததும் பகிர்கிறேன். இது முழு பாடலின் வீடியோ உங்களுக்காக. நன்றி.