மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 14 மார்ச், 2014

ஒரு மழை நாள்

லேசாகத்தான் ஆரம்பித்தது...
கனமழை வரும் என்று
வானிலை அறிக்கையில்லை...
வெயிலோடுதான் வந்தது...

காக்காவுக்கும் நரிக்கும்
கல்யாணம் சொல்லிச்
சிரித்தார்கள் சிறுவர்கள்...

கேட்டதோ என்னவோ
வெயிலுக்கு விடுப்புக்
கொடுத்தது மேகக் கருப்பு...

எங்கோ ஒரிடத்தில்
இடி விழுந்த சப்தம்
காதுக்குள் சதிராடியது...

உருட்டிய வானம்
மிரட்டிய மிரட்டலில்
சனி மூலையில் ஒரு
மின்னல் கண்ணடித்தது...

மேக்கால கருத்திருக்கு
பே மழ பேயுமுடா...
தூறலில் சொல்லிச்
சென்றார் சின்னையா...

வர்ணஜாலம் காட்டியது
மேகத்தினிடையே வானவில்.
கருத்த மேகம்
கனமழை ஆனது...

சோவென்று ஊற்றியது...
வெள்ளிக்கம்பிகள்
விண்ணுக்கும் மண்ணுக்கும்...

வீட்டுக்கெதிரெ நிற்கும்
பனையின் காய்ந்த ஓலை
ஊசலாடியது மழைக்காற்றில்...

மாமரத்து குயிலின்
குரலில் குளிரின் நடுக்கம்.

நனைந்த மாடுகள்
ஓடோடி வந்த கசாலைக்குள்...

எப்பவும் போல மழையில்
குளித்தது அப்பாவின்
அட்லஸ் சைக்கிள்...

ஓட்டுத் தண்ணீருக்காக
அணி வகுத்தன குடங்கள்...

வீட்டில் இருந்து ஓடும்
தண்ணீரில் தள்ளாடியது
காகிதக் கப்பல்...

மழ வருமின்னு சொன்னா
மனுசன் கேக்குறதில்ல...
நனஞ்சிக்கிட்டு வந்து
நம்ம உயிர எடுப்பாரு...
சொல்லியபடி வாசலை
நோக்கினார் அம்மா...

அடித்துப் பெய்து
அயர்ந்து ஓய்ந்தது...
மறுமழ வாறதுக்குள்ள
வைக்க அள்ளப் போடா...

கோபமாய் படப்புக்குப் போன
சில்லென்ற தண்ணியை
காற்றில் சிந்தியது வேம்பு..

சிலிர்த்துத் திரும்ப
பக்கத்துப் படப்பில்
நின்று சிரித்தாள்
நெஞ்சில் நிறைந்த வடிவு...

இதயத்துக்குள் சாரல்
இன்பமாய் பெய்ய....
பொறுக்காத வானம்
அவசரகதியில் அள்ளித்
தெளித்தது மேகத்தண்ணீரை...

-'பரிவை' சே.குமார்.

வியாழன், 13 மார்ச், 2014

கிராமத்து நினைவுகள் : கரகாட்டம்


சும்மா கிராமத்து நினைவுகளைக் கிறுக்க ஆரம்பித்து இது 25வது பகிர்வு. சென்ற கிராமத்து நினைவுகளில் அண்ணன் ஜோதிஜி அவர்கள் அதிகமான கிராமம் சார்ந்த பதிவுகளைப் பகிர்ந்தது நீயாத்தான் இருக்கும் என்று சொல்லியிருந்தார். எனக்கு என்னவோ எங்க பூமியும் அந்த மக்களும் எப்போதும் மனசுக்குள் மத்தாப்பாய்.... ஊத்தாங்கிணறு என்று சொல்வார்கள்... தண்ணீர் ஊற ஊற இறைத்துக் கொண்டேயிருந்தாலும் அது ஊறிக்கொண்டேதான் இருக்கும்... அது போலத்தான் இன்னும் எங்கள் ஊர் குறித்தான் பல நினைவுகள் என்னுள்ளே எழுதுவதற்காக குவிந்திருக்கின்றன.

எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் செவ்வாய்க்கு எதாவது கலை நிகழ்ச்சி வைப்போம். சிறிய ஊர் என்பதாலும் சுத்துப்பட்டு கிராமங்களும் சிறிய கிராமங்கள் என்பதாலும் எந்த நிகழ்ச்சி என்றாலும் கூட்டம் வருவதில்லை. இப்போதெல்லாம் கலை நிகழ்ச்சிகளை குறைத்துவிட்டோம். நாடகம், ஒயிலாட்டம், திரைப்படம் என வைத்துப் பார்த்து எதுவும் ஒத்து வராததால் கரகாட்டத்தில் இறங்கினோம். முதல் முறை கரகாட்டத்துக்கு பாம்பு நடனம், மயில் நடனம் என வித்தியாசமாகச் செய்து கொண்டிருந்து இரு சகோதரிகளைக் கூட்டி வந்தோம். ஆபாசமோ அருவெறுப்போ இல்லாமல் ரொம்ப அருமையாக இருந்தது. எல்லாருக்கும் மிகவும் பிடித்திருந்தது. என்ன அந்தப் பெண்களுக்கு கொடுத்த காசில் ஒரு கரகாட்டமே நடத்தியிருக்கலாம்.

அதற்குப் பிறகு சாதாரண கரகாட்டக் குழுக்களைக் கொண்டு வந்தோம். அவர்கள் வந்ததும் அவர்களுக்கு சாப்பாடு உபசரிப்பு எல்லாம் முடித்து அவர்களிடம் ஆபாசமாக ஆடக்கூடாது என கண்டிப்புடன் சொல்லிவிடுவார்கள். அப்படியும் நேரம் ஆக ஆக ஊத்திய சரக்கு எங்க போகும்... கொஞ்சம் அப்படியிப்படி ஆட ஆரம்பிச்சிடுவானுங்க... காலையில் பார்த்தால் பெருசுக எல்லாம் எவ்வளவு சொல்லியும் அவன் புத்தியக் காட்டிட்டாம்ப்பா... இனி அடுத்த வருசம் கரகாட்டம் வைக்கக் கூடாது என்று சொல்லுவார்கள்.

கரகாட்டம் என்பது மிகவும் சிறப்பான கலை... ஆனால் அதை பொதுவெளியில் ஆடும் போது ஆபாசமாகவும் அருவெறுப்பாகவும் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் விதத்திலும் ஆட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இப்போது அப்படித்தான் ஆடச் சொல்கிறார்கள். நாங்கள் கரகாட்டத்தை புனிதமாகக் கருதுகிறோம் என்று சொன்னால் அவர்கள் வீட்டில் அடுப்பெரியாது. ஏன் வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, பளக்கொடி, தூக்குத்தூக்கி, அர்ஜூனன் தவசு... இவற்றில் எல்லாம் கலந்த ஆபாசம் அரிச்சந்திர மயான கண்டத்தையும் விடவில்லை. இப்போதெல்லாம் நாடகம் என்றால் இரட்டை அர்த்த வசனம் இல்லாமல் நடத்தப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக வள்ளி திருமணத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை இரட்டை அர்த்த வசனங்கள்தான்.... நாரதரும் முருகரும் வள்ளியும் கூட பேச ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற நாடகங்களில் பபூன் டான்ஸ் வரும்போது மட்டும் இருக்கிறது.

தேவகோட்டை பேருந்து நிலையத்துக்கு உள்ளே வருடா வருடம் தமிழ்ப்புத்தாண்டுக்கு கரகாட்டம் வைப்பார்கள். ஒவ்வொரு வருடமும் போலீஸ் பாதியிலேயே நிறுத்தும் அளவுக்கு மோசமாக பேச ஆரம்பித்து விடுவார்கள். நிலமை மிக மோசமாக இருக்க கடந்த சில வருடங்களாக கரகாட்டத்துக்கு அனுமதியில்லை என்று சொல்லி நடத்த விடுவதில்லை.  கிராமங்களுக்கு அனுமதி கொடுத்தாலும் இரண்டு போலீஸ் வந்து அங்கேயே இருப்பார்கள். அருகில் இருக்கும் கிராமங்கள் என்றால் எஸ்.ஐ. ஒரு விசிட் அடிப்பார். மூவருக்கும் காபி, சாப்பாடு மற்றும் கிராமத்தினரின் கவனிப்பும் கண்டிப்பாக இருக்கும்.

இப்படி கரகாட்டங்கள் வைத்துக் கொண்டு வந்த போது ஒரு வருடம் நம் சகோதரன் ஒருவன் கரகாட்டம் ஏற்பாடு பண்ணும் ஏஜெண்டுடன் நட்பில் இருந்தான். ஊரில் கூட்டம் போட்டு கரகாட்டம் வைக்கிறோம் என்று சொன்ன போது இளைஞர் மன்றம் இந்த வருடம் கரகாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா... ஊர்ல இருந்து கொஞ்சம் பணம் தாறோம். மீதத்தை நீங்க போட்டுக்கங்க என்று சொல்லிவிட்டார்கள். உடனே சகோதரனும் அப்போது மிகப் பிரபலமாக இருந்த தஞ்சை துர்காவைத்தான் குறத்தியாக் கொண்டு வரணும் என்று சொல்லி அதற்கான ஏற்பாட்டில் இறங்கிவிட்டான்.

முதல் நாள் இரவு கோவிலுக்கு எதிரே கிடக்கும் பொட்டலில் சுத்தம் செய்து நான்கு பக்கம் கம்பு ஊன்றி விளக்குகள் எல்லாம் கட்டி சீரியல் லைட்டுக்கள் எல்லாம் போட்டு கோவிலைச் சுற்றி கொடிகள் கட்டும் போது அங்கும் கொடிகள் கட்டி துர்க்காவின் ஆட்டத்தை ரசிக்க ஊரே தயாராகி இருந்தது. எப்பவும் போல் வந்திறங்கியதும் சாப்பாடு உபசரிப்பு எல்லாம் முடிந்து கரகாட்டம் ரொம்ப நல்லா இருக்கணும், ஆபாச பேச்சுக்கள் வேண்டாம்... பொம்பள புள்ளைங்கதான் அதிகம் பார்ப்பாங்க... சாதித் தலைவர்களைப் பற்றி யார் பாடச் சொன்னாலும் பாடக்கூடாது என எல்லாம் சொல்லி விட்டார்கள்.

இந்த சாதித் தலைவர்கள் பற்றி பாடச் சொல்லும் போது தேவரைப் பற்றி பாடச் சொல்லி ஒரு கூட்டம் பணம் கொடுக்கும். உடனே இன்னொரு கூட்டம் இம்மானுவேல் பற்றி பாடு என்று அடுத்து பணம் கொடுக்கும், இதைப்பார்த்த இன்னொரு கூட்டம் வீரன் அழகுமுத்துக் கோன் பற்றி பாடுங்க என்று சொல்லி பணம் கொடுக்கும் இப்படி போட்டியில் ஆரம்பிக்கும் நிகழ்வு பின்னர் அடிதடிக்கு மாறிவிடும். பாக்க வந்த கூட்டம் பத்த வச்சிட்டுப் போயிடும் நிகழ்ச்சி நடத்திய கிராமம் பத்திக்கிட்டு எறியும். அதனால முன்னெச்சரிக்கையா இதெல்லாம் சொல்லிடுவோம். குறவன் வேடம் போடுபவரும் மைக்கைப் பிடித்ததும் இதெல்லாம் சொல்லி விட்டுத்தான் ஆரம்பிப்பார்கள்.

ஆரம்பத்தில் நையாண்டி மேளம் ஒரு அரை மணி நேரத்துக்கு அடிப்பார்கள் பாருங்கள்... அப்பப்பா.... நம்மளையும் ஆட வைத்துவிடும்... அந்த அடி... அதுவும் ஊரைச் சுற்றி கூம்பு ஒலிபெருக்கிகளும்... கோவிலுக்கு அருகே ஆறடி உயர பாக்ஸ்களும் வைத்து சும்மா கும்... கும்ன்னு ஊரே அதிருமில்ல... அப்புறம் இரண்டு பேர் கரகாட்டம் ஆடுவார்கள். அதுக்கு அப்புறம்தான் குறவன் குறத்தி... இவர்களுடன் பபூனும் இணைந்து கொள்வார். அப்புறம் என்ன விடிய விடிய கச்சேரிதான்.

சரி துர்காவை பாதியிலேயே விட்டுட்டோமே... உண்மையிலேயே துர்கா நல்ல சிவப்பா சிம்ரன் (அப்போ) கணக்காத்தான் இருந்துச்சு. ஆரம்பத்துல ரொம்ப நல்லா ஆடுச்சு... ஒவ்வொரு பெருசா கழண்டுக்கிச்சுங்க... எங்க சித்தப்பா மட்டும் எங்க கூட அமர்ந்திருந்தார். அவரும் தம்பிகளா நீங்க யாரும் வீட்டுக்குப் போயிடாம கடைசி வரைக்கும் இருந்து எந்தப் பிரச்சினையும் வராம பாத்துக்கங்க என்று சொல்லி மெதுவாகக் கிளம்பிவிட்டார். நானும் எஸ்கேப் ஆகப் பார்த்தேன்... இளைஞர் மன்றத் தலைவரே போன எப்படின்னு இழுத்து உக்கார வச்சிட்டானுங்க... ஒரளவு கூட்டமும் இருந்துச்சு... எல்லாக் கரகாட்டக்காரிகளுக்கும் போல் துர்க்காவுக்கு கட்டைக் குரல் இல்லை... நல்லாத்தான் பாடுச்சு... ஆனா பாதிப்பாட்டை முழுங்கிரும்... ஒரு மணி ரெண்டு மணி வரைக்கும் நல்லாத்தான் போச்சு.

நம்ம மச்சான் ஒருத்தன் பத்துப் பத்து ரூபாயா மாத்தி வச்சிருந்திருப்பான் போல... அவனும் துர்காதான் இந்த வருடம் என்று கூட்டி வந்த சகோதரனும் துர்காவிடம் டீல் பேசிட்டானுங்க... ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து ஆளைக் கையைக் காமிச்சிட்டானுங்கன்னா போதும் எப்படியும் அந்த ஆளை உண்டு இல்லைன்னு பண்ணிட்டுத்தான் மறுவேலை.... கரகாட்டத்தில் குறத்திகள் எல்லாருமே முன்னால் உக்காந்திருக்கும் நபர்கள் மேல் ஓடிப்போய் அமர்வதும் அவர்கள் கையைப் பிடித்து இழுப்பதும் என எல்லாம் செய்வார்கள். துர்காவும் அதுபோல் ஆட்டத்தை ஆரம்பித்தாச்சு... ஒவ்வொரு ஆளா கையைக் காமிச்சிட்டானுங்க... அவர்களைப் பார்த்துக் கொண்டே ஆடி கொடுத்த பத்துரூபாய்க்கு காரியத்தை கச்சிதமா முடிச்சி வச்சிடும்... 

எனக்குத் தெரியும்... கண்டிப்பாக நம்மளையும் மாட்டிருவானுங்கன்னு... டேய் எனக்குத் தூக்கம் வருது நான் கிளம்புறேன்னு சொன்னதும் நல்லாயிருக்கே.... உங்க சித்தப்பா என்ன சொல்லிட்டுப் போனாரு... நீ போனியன்னா அவரு நாளைக்குத் திட்டுவாருப்பா என்று சொல்லி அடக்கிவிட சரி பலியாடை பக்குவமா பிடிச்சு நிப்பாட்டுறானுங்கன்னு ரொம்ப சூதனமா தள்ளிப் போய் உக்காந்துக்கிட்டேன். இம்புட்டுக் கூட்டத்துல கடைசியா நிக்கிற நம்மளைத் தேடியா வரப்போறான்னு தைரியத்தோட நின்னுக்கிட்டு இருந்தேன். காசைக் கொடுத்து காதுக்குள் எதோ சொல்ல கொஞ்ச நேரத்தில் கிளி என்னை ஒரு லுக்கு விட்டது. ஆஹா கன்னி வச்சிட்டாய்யான்னு கொஞ்சம் மெதுவா பின்வாங்கி நாச்சியம்மத்தா கோவில் வாசலில் போய் அமர்ந்தேன் இனியா வரப்போறான்னு அசட்டுத் தைரியத்தோட.

கொஞ்ச நேரத்தலு மறுபடியும் ஒரு டாப் கியர் கொடுத்து கூட்டத்துல புகுந்தா நானும் டக்குன்னு சுதாரிச்சி எந்திரிச்சி ஓட ரெடியா இருந்தேன். பாத்துட்டானேன்னு மறுபடியும் ஆட்டத்தில் குதித்தாள். கொஞ்ச நேரத்துல டக்குன்னு ஓடியாந்துட்டா... பக்கத்துல அவளைப் பார்த்ததும் நாச்சியம்மத்தா கோவில் ஓரமா எங்க வீட்டுப் பக்கம் கொஞ்சமா முள்ளுக் கிடக்கும்... முள்ளாவது ஒண்ணாவது அதுக்கு குதிச்சி ஓடினா... அவ சுத்திக்கிட்டு விரட்டி வாரா... நேர மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு முன்னால போய் உக்காந்துட்டேன். அவ அந்த டிரஸ்ஸோட கோயில்ல ஏற மாட்டான்னு தெரியும்... வாசல்ல நின்னு சும்மா வா ஒண்ணும் செய்ய மாட்டேன்னு கூப்பிட்டுப் பார்த்தா... ம்ஹூம்... அவகிட்ட மாட்டினா நாளைக்கு ஊருக்குள்ள நம்ம கெத்து என்னாகுறதுன்னு கோயிலை விட்டு இறங்கவே இல்லை... எங்கண்ணன் வீட்டு வாசலில் கயிற்றுக்கட்டிலில் படுத்துக்கிட்டே இதையெல்லாம் பாத்துக்கிட்டே இருந்திருப்பாரு போல. அவளுக்கு ஒரு சத்தம் போட இரு வராமயா போயிடுவேன்னு சொல்லிட்டுப் பொயிட்டா... அதுக்கு அப்புறம் அங்கிட்டு கொஞ்ச நேரம் எட்டிப் பார்த்துட்டு வீட்டுல போயி படுத்துட்டேன்.

மறுநாள் காலையில எல்லாருக்கும் பணம் கொடுக்கணும்... எங்க சித்தப்பா என்னைய கூப்பிட்டாரு... நாங்க எல்லாரும் சித்தப்பா வீட்டு பணம் கொடுக்கப் போனோம். அப்போ துர்கா எங்கிட்ட நல்லாப் பேசிக்கிட்டே வந்துச்சா... அப்போ எல்லாரையும் துரத்தியாச்சும் புடிச்சிருக்கேன்... நீங்கதான் தப்பிச்சிட்டீங்க... கூப்பிடுறேன் அப்புடியும் வரலையேன்னு சொன்னுச்சு... நான் ஒண்ணும் சொல்லலை... அப்போ மச்சான் அவருதான் இப்போ பணம் தரணும்... இளைஞர் மன்றத் தலைவர்... ராத்திரி அவரை துரத்திப் பிடிச்சிருந்தியன்னா உனக்கு இப்போ பணம் கிடைக்காதுன்னு சொன்னதும் அடப்பாவி இதை ராத்திரி நீ சொல்லலைன்னு சொன்னுச்சு...

திருமணமான முதல் வருடமா.... துர்காக்கிட்ட பேசிக்கிட்டுப் போறதை என் மனைவி பார்த்துட்டு வீட்டுக்குப் போனது என்ன அவகிட்ட கொழஞ்சு கொழஞ்சு பேசினீங்க... நீங்களும் உங்க சித்தப்பாவும் விட்டா அவளை வீட்லயே கொண்டு போயி விட்டுட்டுத்தான் வருவீங்க போலன்னு சொல்ல எங்க அண்ணன் ராத்திரி முள்ளுக்குள்ள அவன் விழுந்து ஒடுன ஓட்டத்தை நீ பாக்கலையேன்னு கேட்டு சிரிச்சாரு... அப்போத்தான் எனக்கு கால்ல குத்துன முள்ளு வலிச்சது.

இந்த வருடம் மே மாதம் திருவிழா... மறுபடியும் துர்காவுக்கு பாக்கு வைக்கலாமான்னு பங்காளிக்கிட்ட கேக்கணும்...

நினைவுகள் தாலாட்டும்...
-'பரிவை' சே,குமார்.

புதன், 12 மார்ச், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 55

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                      பகுதி-50     பகுதி-51    பகுதி-52    பகுதி-53

55.  நெஞ்சம் கரைந்ததா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளின் அம்மாவிடம் போனில் பேச பிரச்சினை ஆகிறது.

இனி...

புவனாவின் அம்மா கோபமாகப் பேசியதும் அவனுக்குள் இருந்த தன்மானம் விழித்துக் கொள்ள மீண்டும் போன் அடித்தான். ரிங்க் போய்க் கொண்டேயிருந்தது. சிறிது நேரத்தில் போன் எடுக்கப்பட உலர்ந்த உதடுகளை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டான். எதிர்முனை அலோ என்றதும் குரல் முன்பு பேசியதுதான் என்று உறுதியானது.

"அம்மா நான்தான் பேசுறேன்... ப்ளீஸ் போனை வச்சிடாதீங்க..."

"இப்பத்தானே போனுகீனு பண்ணாதேன்னு சொன்னேன்... உனக்கு விளங்கலையா?"

"ப்ளீஸ்ம்மா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

"என்னப்பா... வீட்ல ஆம்பளை ஆளுங்க இல்லாத சமயமா போனைப் பண்ணி பேசுறியே... எங்க வீட்டு ஆம்பளைகளுக்கிட்ட சொன்னா என்ன ஆகும் தெரியுமா?"

"அப்படியெல்லாம் இல்லம்மா... கொஞ்சம் நான் பேசுறதைக் கேளுங்கம்மா..."

"இங்க பாரு தம்பி.. கண்ட கண்ட எடுபட்ட நாய்ககிட்ட எல்லாம் பேச எனக்கு விருப்பமில்லை... தேவையில்லாம அடி வாங்கிச் சாகப் பாக்காதே..."

"அம்மா... இது உங்க பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சினை... கொஞ்சம் நான் பேசுறதைக் கேளுங்க..."

"என்ன மிரட்டுறியா?"

"நான் எதுக்குங்க உங்கள மிரட்டணும்... அவங்க என் கூட பழகுறாகன்னு சந்தேகப்பட்டு அவங்களுங்கு மாப்பிள்ளை பாக்குறீங்க... அவங்க இன்னும் நிறைய படிக்கணுமின்னு ஆசைப்பட்டாங்க..."

"எங்க சாதியில இவ இது படிச்சதே அதிகம்... நீ எங்களுக்கு புத்தி சொல்ல வேணாம்..."

"இருங்க இன்னும் முடிக்கலை... அதுக்குள்ள குறுக்கே பேசுறீங்க... பேசாம நான் பேசுறைதைக் கேளுங்க..." குரலை உயர்த்தினான்.

அவன் குரல் உயர எதிர் முனை மௌனமானது. ராம்கிக்கு ஆஹா நம்ம பேச்சைக் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க... இனி சக்ஸஸ்தான் என்று தோன்ற, "இங்க பாருங்க... அவங்களை மேல படிக்க வையுங்க... அவங்க மனசுக்குப் பிடிச்ச என்னை உங்க மனசுக்குப் பிடிக்கிற நாள் வரும்... அதுவரைக்கும் உங்க பொண்ணுக்கு என்னால கெட்ட பெயர் வராது..."

"ஏய் என்ன பேசுறே... யார்க்கிட்ட பேசுறே தெரியுமா?"

"தெரிஞ்சுதான் பேசுறேன்... ஆம்பளைங்க அவசர முடிவு எடுக்கலாம்... இப்போ எங்களைப் பிரிச்சி அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிங்கன்னா அவங்க நிம்மதியா வாழ்ந்திருவாங்களா என்ன... சரி கட்டிக்கிட்டுப் போறவனை மனசுக்குப் பிடிக்கலைன்னா தினமும் சண்டை சச்சரவுன்னு இருப்பாங்கன்னு வச்சிக்கங்க... அப்ப பெத்த மனசு அவ மனசுக்குப் பிடிச்சவனோடவாவது வாழ விட்டுருக்கலாம்ன்னு யோசிக்குமா இல்லையா... சொல்லுங்க... இதே உங்க பொண்ணு வாழவெட்டியா வந்து நின்னா... அவங்களோட வாழ்க்கையும் போயி படிச்சி பெரிய ஆளா வரணுங்கிற லட்சியமும் போயி நின்னா நீங்க சந்தோஷப்படுவீங்களா... அப்போ சாதிதான் பெரிசு மக வாழ்க்கை போனா போகுதுன்னு நினைச்சு உங்க சந்தோஷத்தைத் தொடருவீங்களா... இப்படி ஆச்சேன்னு தினம் தினம் சங்கட்டப்பட்டு அழுவீங்களா?"

"...."

"என்ன ஒரே குதியா குதிச்சீங்க... இப்ப மௌனமாயிட்டீங்க... நான் உங்களை அத்தையின்னு கூப்பிடப்போறேன்னா இல்லையாங்கிறது எனக்கு முக்கியமில்லை. என்னோட புவியோட லட்சியம், கனவு பலிக்கணும்... அதை எங்க காதல் காவு வாங்கிடக்கூடாதுன்னுதான் இவ்வளவு தூரம் பேசுறேன்... உங்களை நேர்ல பார்த்துப் பேசத்தான் ஆசை... இருந்தும் சில காரணங்களால இப்போ பேச வேண்டியதாயிருச்சு... தயவு செய்து புரிஞ்சிக்கங்க... புவிக்காக முன்னாடியே கத்திக்குத்தெல்லாம் வாங்கியிருக்கேன்... இன்னும் என்ன வேணுமின்னாலும் வாங்கத் தயாரா இருக்கேன்... நீங்க தூக்கிச் சுமக்கிற சாதியால எங்க காதலை ஒண்ணும் பண்ண முடியாது. எனக்கு உங்க ஆதரவு தேவை. நான் உங்ககிட்ட பேசுறது பத்தி புவிக்கு எதுவும் தெரியாது. ப்ளீஸ் புவியத் தொடர்ந்து படிக்க வையுங்க... அவங்க படிச்சு முடிக்கிற காலத்துக்குள்ள என்னைய உங்களுக்குப் பிடிச்சா உங்க ஆசியோட எங்களை சேர்ந்து வையுங்க... இல்லைன்னா நாங்களாவே பெத்தவங்க முடிவை ஏத்துக்கிறோம்..."

"நீ சொல்றது நல்லாத்தான் இருக்கு... ஆனா இது நடைமுறைக்கு ஒத்து வராது தம்பி... தேவையில்லாம பேசி வாங்கிக் கட்டிக்காதே... இனி தயவு செய்து போன் பண்ணாதே... புவனாவோட அப்பாக்கிட்ட சொல்ற மாதிரி ஆயிடும்..."

"இம்புட்டு நேரம் கேட்டீங்க.... ஆரம்பத்துல சத்தமாப் பேசினீங்க.... இப்போ கொஞ்சம் யோசிச்சுப் பேசுறீங்க... எனக்குத் தெரியும் கண்டிப்பா நீங்க எங்களைப் பற்றி யோசிப்பீங்க... எங்க வாழ்க்கை உங்க கையிலதான் இருக்கு.... சாதியும் கௌரவமும் முக்கியம்ன்னு நினைச்சீங்கன்னா புவிக்கு கல்யாணம் பண்ணி வையுங்க... இல்ல அவங்க ஆசைப்பட்டபடி படிப்பும் வாழ்க்கையும் அமையணுமின்னு நினைச்சீங்கன்னா இன்னும் ரெண்டு மூணு வருசத்துக்கு அவங்க விருப்பப்பட்டபடி விடுங்க... ஆனா இப்பவும் சொல்றேன்.... பெத்தவங்க சம்மதம் இல்லாம நாங்க ரெண்டு பெரும் சேர மாட்டோம் அதுல கடைசி வரைக்கும் உறுதியா இருப்போம்... ஆனா எதாவது வில்லங்கம் வந்தா அதுக்காக நாங்க எங்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்... ஆனா அப்படியெல்லாம் வராதுன்னு நம்புறோம்... நான் பேசின எதையும் யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்... இப்போ போனை வைக்கிறேன்..." என்றபடி அவளது பதிலுக்கு காத்திராமல் போனை வைத்தவன் நம்மதான் பேசினோமா என்று நம்பமுடியாமல் சிரித்துக் கொண்டான். எதுவுமே பேசாமல் இருந்தார்களே... என்ன நடக்கும் என்று யோசித்தபடி கட்டிலில் போய் படுத்தான்.

தே நேரம் போனை வைத்த புவனாவின் அம்மா சேரில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். முகமெங்கும் திட்டுத்திட்டாக வேர்த்திருந்த வேர்வையை புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டாள். 'இந்தப்பய என்னமா பேசுறான்... என்னையவே வாயை அடைக்க வச்சிட்டானே... என்ன தைரியம் அவனுக்கு ரெண்டு பேரும் காதலிக்கிறோம்ன்னு தைரியமாச் சொல்லுறான்...' என்று மனசுக்குள் தானே பேசிக் கொண்டாள். குட்டித் தூக்கம் ஒன்று போட்டுவிட்டு வெளியே எழுந்து வந்த புவனா அம்மா அமர்ந்திருந்த கோலம் பார்த்ததும் பதறினாள்.

"என்னம்மா... என்னாச்சு... ஏன் முகமெல்லாம் வேர்த்திருக்கு... யார்க்கிட்டயோ பேசுற மாதிரிக் கேட்டுச்சு... என்ன எதாவது பிரச்சினையா?" என்று பதறலாய் கேட்டபடி அம்மாவின் அருகில் அமர்ந்து அம்மாவின் புடவைத் தலைப்பால் முகத்தை துடைத்துவிட்டு சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்து குடிக்கச் சொன்னாள்.

அம்மா கொஞ்சம் ஆசுவாசமானதும் "என்னம்மா... என்னாச்சு.... அப்பாவுக்குப் போன் பண்ணி மாத்திரை எதுவும் வாங்கிட்டு வரச்சொல்லவா?"

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா... கொஞ்சம் படபடப்பா இருந்துச்சு... அம்புட்டுத்தான்..."

"சரி கொஞ்ச நேரம் படுங்க... அடுப்புல எதுவும் இருக்கா? நான் பார்த்துக்கிறேன்..."

"எல்லா வேலையும் முடிஞ்சிருச்சும்மா...."

"சரி படுங்க..." என அம்மாவை படுக்கச் சொல்லி காலுக்கு அருகில் அமர்ந்து கொண்டு மெதுவாக காலை அமுக்கிவிட்டாள்.

"புவனா.... அந்தப் பையனை உனக்கு ரொம்பப் பிடிக்குமா?" மெதுவாக மகளைப் பார்த்துக் கேட்டாள்.

"எ... எந்தப் பையனை..." படபடப்பாய் இருந்தாலும் காட்டிக் கொள்ளாது இழுத்தாற்போல் கேட்டாள்.

"அதாம்மா.. அந்த ராமகிருஷ்ணன்... அதென்ன மூச்சுக்கு முன்னூறு தடவை புவி... புவியின்னு சொல்றான்..." மகளின் கைகளைப் பற்றிக் கொண்டபடி கேட்டாள்.

புவனா பதிலெதுவும் பேசாமல் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தாள்.

(சனிக்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 11 மார்ச், 2014

மனசு பேசுகிறது : இப்படியும் மனிதர்கள்


டுத்தவனுக்கு நம்மாலான உதவி செய்யணும்... உதவி செய்ய முடியலைன்னா உபத்திரவம் பண்ணாமலாவது இருக்கணும் என்றுதான் என்னைப் பெற்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் ஊருக்குள் எங்கப்பாவுக்கு மரியாதை இருக்கு என்றால் அவர் நடந்து கொள்ளும் விதம் அப்படி. செய்கிறாரோ இல்லையோ ஆத்தா, அம்மான், சித்தப்பா என அழைக்கும் அந்தப் பாங்கு... அவர்களிடம் அவர் நடந்து கொள்ளும் முறை.... இதுதான் அனைவரையும் அவர்மேல் பாசம் வைக்கச் சொல்கிறது. அவரின் வாரிசாக... அடுத்தவரை மதிக்க வேண்டும்... வீட்டிற்குப் பெரியவர்கள் வந்தால் அவர்கள் போகும் வரை எழுந்து நிற்க வேண்டும்... இல்லையேல் அவர்கள் சேரில் அமர்ந்திருந்தால் நாம் தரையில் அமர வேண்டும் என்ற பண்பைச் சொல்லி வளர்த்தார்கள். அதுதான் எங்களிடம் இப்போதும் இருக்கும் ஒரே சொத்து.

சத்தியமாக ஒருவனை முன்னுக்கு விட்டு பின்னுக்குப் பேசும் குணம் படைத்தவர்கள் அல்லர் நாங்கள். படிக்கும் போதே எனக்கென்று ஒரு நட்பு வட்டம் உண்டு... அதுவும் கல்லூரியில் படிக்கும் போதெல்லாம் பாரதி கலை இலக்கியப் பெருமன்றம், அது இது என்று எல்லாவற்றிலும் இருந்ததால் எப்போதும் அறிவு சால் பெருமக்களுடன் இருக்கும் பழகும் அவர்களின் பிள்ளைகளில் ஒருவனாய் அவர்கள் வீட்டில் நுழையும் வாய்ப்பெல்லாம் எனக்குக் கிடைத்தது. தே பிரித்தோவில் எனக்கு வகுப்பாசிரியராய் இருந்த தமிழாசிரியர்கள் எல்லாம் பின்னாளில்... இன்று வரை எனக்கு ஒரு தகப்பானாய் ஆனார்கள் என்பது எனக்குக் கிடைத்த பாக்கியம். அருள்சாமி ஐயா, சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா, பழனி ஐயா என எல்லா ஐயாக்களிடமும் மாணவனாய் இருந்து இன்று மகனாகிப் போனவர்கள் நாங்கள்.

ஒவ்வொருவர் வீட்டிலும் ஐயாக்களை விட அம்மாக்களுக்கு நாங்கள் என்றால் உயிர். எப்போது போனாலும் எதாவது ஒன்றை சாப்பிட வேண்டும் என்று அன்பாய் வற்புறுத்துவார்கள். பழனி ஐயா வீட்டில் நாங்கள் இன்னும் செல்லப் பிள்ளைகள்.... அடுப்படியில் நுழைந்து என்ன இருக்கிறதோ அதை எடுத்துச் சாப்பிடும் உரிமையை கூடுதலாகப் பெற்றிருந்தோம். இன்னும் பெற்றிருக்கிறோம். எப்போதுமே நல்லவர்கள்... அடுத்தவர்களுக்கு துரோகம் நினைக்காதவர்கள்... அடுத்தவர்கள் வாழ பார்த்துச் சந்தோஷப்படுபவர்கள் சூழ வாழ்ந்த வாழ்க்கை எத்தனை சுகமானது... எத்தனை அன்பானது.... என்பதை இங்கு வந்து இந்த ஐந்து வருடத்தில் சில நாட்களாக உணர்கிறேன்.

சின்னப்பயலா இருக்கான்... பேசாம ஒண்ணாப்புலயே போட்டுடுங்க என்று சொன்ன அம்மாவிடம் எம்புள்ள நல்லாப் படிக்கிறான்... அவனை எதுக்கு ஒண்ணாவதுல போடணும்... ரெண்டாவதுக்கும் நானே ஆசிரியர் அவன் என் கூடவே இருக்கட்டும் என்று சொன்ன எனது முதல் ஆசிரியை மறைந்த மரியம்மை டீச்சர்.... என் பிள்ளைகள் எனக் கட்டிக் கொள்ளும் அன்பான தாசரதி ஐயா.... என்னோட மகன் குமார் என்று கல்லூரி விழாவில் சொன்ன எனது ஆசான் அன்பான தந்தை பழனி இராகுலதாசன் ஐயா... எம்புள்ள எப்படியிருக்கான் என வாஞ்சையுடன் மனைவியை சந்திக்கும் போதெல்லாம் கேட்கும் என்னோட சவரிமுத்து ஐயா.. குமார் எப்படியிருக்கார்? எங்க இருக்கார்?... என நண்பனிடம் விசாரிக்கும் அருள்சாமி ஐயா... எப்பய்யா வந்தே... புள்ளைங்க நல்லா இருக்குகளா என வெற்றிலை வாய்ச் சிர்ப்போடு கேட்கும் பேனாக்கடை லெட்சுமணய்யா... குமாரு... என்று கையைப் பிடிக்கும் கல்லூரிப் பேராசிரியர் எம். எஸ். சார்... டிகிரி முடிச்சதும் இந்தக் கோர்ஸ்தான் படிக்கணும் அதுக்கு நான் முயற்சி பண்றேன் என எனக்காகப் பரிந்து பேசிய எங்கள் கேவிஎஸ் சார்... என எல்லா நல்ல உள்ளங்களுடனும் இந்த ஐந்து வருடங்களாக அதிகம் தொடர்பில்லாமல் போனதற்காக இப்போது வருந்துகிறேன்.

ஊரிலேயே கல்லூரி ஆசிரியனாக காலத்தை ஓட்டியிருந்தால் பச்சோந்தி மனிதர்களிடமிருந்து விலகி மேன்மக்களின் சுவாசத்தை கொஞ்சமேனும் சுவாசித்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பணம் தேடும் வாழ்க்கையில் சுக துக்கங்களைத் துறந்து வெளிநாட்டில் வாழும் போது அருகே நல்ல உள்ளங்கள் இல்லாத சூழல் எவ்வளவு சூனியமானது என்பதை இப்போது உணர்கிறேன். அவன் உனக்கு கெடுதலே நினைத்தாலும் நீ அவனுக்கு நல்லதே நினை என்று சொல்லித் தந்தார்கள் ஆனால் என்னால் அப்படியிருக்க முடியுமா என்பதே இப்போதைக்கு மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

வீடு கட்டினால் லபோதிபோ என்றார்கள்.... லோன் வாங்கியதற்காக ஊரெங்கும் தண்டோரா போட்டார்கள்.... கடன் வாங்கித்தான் கட்டுகிறார்கள் என்று ஏளனமாய்... கடன் என்றாலும் நாங்கள்தான் கட்டப்போகிறோம் என்பதை அவர்கள் அறியாமல் பேசினார்கள் என்று நாங்கள் பொறுத்துக் கொண்டோம்... ஒவ்வொரு விஷயத்திலும் எங்களை போட்டியாக... பொறாமையாகப் பார்த்த போது நாங்கள் எப்பவும் போல் அவர்களிடம் பழகி வந்தோம்... எதையும் காட்டிக் கொள்ளவுமில்லை... கேட்டுக் கொள்ளவும் இல்லை.... எங்கள் பாதையில் நாங்க பயணித்தோம் எப்போது எல்லாரும் வேண்டும் என்ற எண்ணத்தைச் சுமந்தபடி...

என்னைப் பொறுத்தவரை கூடப் பிறந்தவர்கள் என்ன பேசினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டேன். எப்படிப்பட்ட பிரச்சினை என்றாலும் எனக்குள் நான் கேட்டுக் கொள்ளும் கேள்வி 'மறுபடியும் எல்லாரும் ஒண்ணாவ பிறக்கப் போறோம்... இருக்கும் வரைக்கும் கோபதாபங்களை விட்டுவிட்டு சந்தோஷமாக இருப்போமே?' என்பதுதான். அப்படித்தான் இதுவரைக்கும் இருந்து வருகிறேன். இனிமேலும் என் நிலையில் மாற்றம் வராது என்ற நம்பிக்கை எனக்கு.

என்னைப் பொறுத்தவரை இங்கிருக்கும் உறவுகளிடம் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மறைப்பதில்லை. மறைக்க வேண்டும் எனத் தோன்றியதும் இல்லை. ஆனால் ஒருசிலர் ஒரு சில விஷயங்களை மறைப்பதுடன் நம்மைத் தரக்குறைவாக பேசும் போது சே என்ன மனிதர்கள் இவர்கள் என்று எண்ணத் தோன்றினாலும் ஏன் இப்படிச் செய்கிறார்கள்... எதற்காக நம்மிடம் மறைக்கிறார்கள்... அவர்கள் மறைப்பது அவர்கள் சார்ந்தது என்றால் பரவாயில்லை. அதுவும் என் குடும்பம் சார்ந்ததுதான் என்கிற போது வருத்தம் எனக்குள் வந்து போவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இப்போதுதான் எனக்கும் உரைக்கிறது... இனி நாமும் சொல்ல வேண்டியதைச் சொல்லியும் மறைக்க வேண்டியதை மறைத்தும் வாழப் பழக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இப்போதுதான் தோன்றுகிறது. நம்மிடமும் நல்லவர்கள் போல் பேசிக் கொண்டு நம்மைப் பற்றி தப்பாக மற்றவர்களிடம் பேசும் இவர்கள் என்ன மனிதர்கள்? எப்படி இவர்களால் இப்படி இரட்டை வேடம் பூண முடிகிறது.

எல்லாரும் வேண்டும் என்று நினைக்கும் மனம் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது யாருமே வேண்டாம் என் குடும்பம், என் மனைவி, என் பிள்ளைகள் என  'என்'ன்னுக்குள் சுருக்கிவிடுமோ என மனசு பயம் காட்டுகிறது. பச்சோந்தி மனிதர்களிடம் இருந்து விலகி இருத்தல் நலமென நேற்றிலிருந்து என் எண்ணச் சுவற்றில் எழுதித் தீர்க்கிறது இந்த பாழாப்போன மனசு.

வருத்தங்களும் வசந்தங்களும் மாறி மாறி வருவதே வாழ்க்கை என்ற போதிலும்  என்னைச் சுற்றி இப்படிப்பட்ட மனிதர்கள் நிறைந்திருக்கும் இந்த வாழ்க்கை மேல் பற்றற்றுப் போய்விட்டது. பாசாங்கு மனிதர்கள் சூழ் உலகில் பல்லிளித்துக் கொண்டு வாழ எனக்குப் பிடிக்கவில்லை. முகத்துக்கு முன்னே எப்படியிருக்கிறாய் என்றும் முதுகுக்குப் பின்னே நீ எப்படியிருந்தால் என்ன அழிந்தால் சந்தோஷமே என்றும் நினைக்கும் மனிதர்கள் மத்தியில் இதுவரை பாசத்தோடு வாழ்ந்திருக்கிறோமே என்று என்னும் போது வருத்தமாக இருக்கிறது.

உண்மையான பாசத்தை முகமறியாதவர்கள் கொடுக்கும் போது நம்மை அறிந்தவர்கள் நன்கு தெரிந்தவர்கள் பாசாங்கு மனிதர்களாய் வாழ்வது கண்டு வெறுப்பின் உச்சத்துக்குத்தான் செல்ல முடிகிறது. கோபங்களையும் ஆத்திரங்களையும் அடக்கிக் கொண்டு அவர்களிடம் என்னாலும் சிரிக்க முடிகிறது என்றாலும் மனம் ஏனோ வெறுமையை அறுவடை செய்கிறது. 

எத்தனை இதயங்கள் இருந்தாலும் அன்பு சூழ் இதயங்கள் எல்லாம் வெகு தூரத்தில் இருப்பதால் உணரும் தனிமை... எவ்வளவு கொடுமையானது என்பதை சில நாட்களாக உணர முடிகிறது. எனக்கும் என் மனைவிக்கும் தெரியக் கூடாதென அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் எதாவது ஒரு விதத்தில் எங்களுக்குத் தெரிய வரும்போது சே... என்ன மனிதர்கள் இவர்கள்... இவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் நம்மிடம் எதற்காக மறைக்கிறார்கள்... நம் குடும்பம்... நம் உறவுகள் என்று நாம் பார்க்கும் போது நம்மைப் பிரித்துப் பார்க்கிறார்கள் என்ற வருத்தம் வரத்தான் செய்கிறது. 

இத்தனை வருத்தத்திலும் எனக்கு வரமாய் கிடைத்தவர் என் மனைவி... சின்னச் சின்ன கோபங்கள்... மனஸ்தாபங்கள் வந்தாலும் அவருக்கு தெரியக்கூடாதுன்னு நினைக்கிறவங்க ஏன் எங்கிட்ட சொல்ல வாறீங்க என முகத்தில் அடித்தார்போல் கேட்டிருக்கிறார். எப்போதும் என்னை விட்டுக் கொடுக்காத... எனக்காகவே வாழும் என்னவர்.

பாசாங்கு மனிதர்கள் மத்தியில் இருந்து விரைவில் விலகிவிடுதலே நலம் பயக்கும் என தோன்ற ஆரம்பித்துவிட்டது... விடாது கருப்பாக இருந்தாலும் விட்டு விலகிச் செல்லும் போது நமக்கென சில நல் இதயங்கள் கிடைக்காமலா போய்விடும். வேஷதாரிகளின் வெளிப்பேச்சு சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிப் பூவின் வாசமாய் இருந்தாலும் உள் எண்ணம் நம்மை நெருஞ்சியாய் குத்தத்தான் செய்கிறது. இந்தச் சில நாளில் எனைச் சூழ்ந்த நல்ல உள்ளங்களான என அருமை ஐயாக்கள் அருகில் இல்லாத வெறுமையை உணர்ந்தேன். வெறுமை சூழ் உலகு எவ்வளவு கொடியது என்பதை இப்போது நடக்கும் கேவலமான பாசாங்குகளிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

கற்றறிந்த பெரியோரே.... இன்னாருக்கும் நன்னயம் செய்யச் சொல்லும் பேரமையாளர்களே உங்களுடனான உறவுதான் பாசாங்கு மனிதர்களின் போலித் தனங்களில் இருந்து என்னை காத்து வருகிறது என்பதே உண்மை. உங்கள் ஆசிகளும் அறிவுரைகளும் அன்பும் அரவணைப்பும் இப்போது அதிகம் தேவைப்படுகிறது. தாய்கோழியின் சிறகுக்குள் சூடு தேடி பதுங்கிக் கொள்ளும் கோழிக்குஞ்சாய் உங்கள் அன்பினை அசை போட்டபடி அமர்ந்திருக்கிறேன் வெறுமையாய்...

மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 10 மார்ச், 2014

வீடியோ : சுகமான ராகங்கள்

சில பாடல்கள் எப்போது கேட்டாலும் ரம்மியமானவை... அதிக இரைச்சல் இல்லாத இசையோடு மெலோடியான பாடல்களைக் கேட்பது சுகமே...


படம் : வேதம் 
பாடல் : மழைக்காற்று வந்து...




படம் :  M.குமரன் S/O. மகாலஷ்மி
பாடல் : நீயே நீயே...




படம் :  மாயாவி
பாடல் : கடவுள் தந்த அழகிய வாழ்வு...




படம் :  உள்ளம் கேட்குமே
பாடல் : ஓ மனமே... ஓ மனமே...




படம் :  தாஸ்
பாடல் : சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்...




படம் :  தாஸ்
பாடல் : சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்...




படம் : காதலுக்கு மரியாதை
பாடல் : என்னைத் தாலாட்ட வருவாளா...




பாடல்களை ரசித்திருப்பீர்கள்... மீண்டும் அடுத்த பாடல் பகிர்வில் நல்ல பாடல்களோடு இணைவோம்.
-'பரிவை' சே.குமார்.

ஞாயிறு, 9 மார்ச், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 54

முந்தைய பதிவுகளைப் படிக்க...


                                           பகுதி-50       பகுதி-51    பகுதி-52

54.  என்ன செய்யலாம்?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் அவளின் அம்மாவிடம் பேசுவது என நண்பர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கிறான் ராம்கி.

இனி...


"என்னடா சொல்றே... எவன்டா உனக்கு இந்த ஐடியாவைக் கொடுத்தது?" அதிர்ச்சியோடு கேட்டான் சேகர்.

"ஏன்டா... இதுக்கு என்ன?"

"இருந்திருந்து அவளோட அம்மாக்கிட்ட பேசுறேன்னு சொல்றே... நல்லா யோசிச்சுத்தான் சொல்றியா?"

"புவியோட அப்பாக்கிட்டயோ அண்ணன்கிட்டயோ பேசுறதுக்குப் பதிலா அம்மாக்கிட்ட பேசினா சரியா வரும்ன்னு தோணுச்சு...."

"கேனத்தனமான யோசனை... இதுக்கு பொதுக்குழு கூடி முடிவெடுத்தீங்களாக்கும்... அவ அம்மாக்கிட்ட பேசி அவங்க ஒத்துக்கலைன்னா.... இல்ல புவனோட அப்பாக்கிட்ட சொன்னா என்னாகும் யோசிச்சியா?"

"எதுக்கும் அவங்ககிட்ட பேசிப் பாக்கலான்டா... சரி வரலைன்னா வேற முடிவு எடுக்கலாம்..."

"உன்னோட திட்டம் ஒண்ணத்துக்கும் உதவாத திட்டம்... இதனால பிரச்சினை வந்தா அது அயித்தைக்கு தெரிய வரும்... எல்லாப் பக்கமும் பிரச்சினையாகும் பாத்துக்க..."

"வேற என்னடா பண்றது... இதுதான் சரியின்னுபடுது..."

"இது சரியேயில்லைன்னு சொல்றேன்... சரியா வருங்கிறே... முதல்ல அவங்கதான் இந்த பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போட்டவங்க... சரிதானே"

"ம்... ஆமா..."

"அப்புறம் அவங்ககிட்ட பேசி... சரியான முடிவா எடுக்கணும்டா... சும்மா அள்ளித் தெளிச்ச மாதிரி யோசிக்கக்கூடாது... ஒரு காரியத்துல இறங்கிட்டா வெற்றிதான் முக்கியம்..."

"என்ன வெற்றி... என்ன முக்கியம்.." என்றபடி அவர்கள் அருகில் வந்தாள் காவேரி.

"ஒண்ணுமில்ல போடி..." அதட்டினான் சேகர்.

"என்ன அந்தப்புள்ளையப் பத்திப் பேசுனீங்க... அப்புறம் ஒண்ணுமில்லேன்னா..."

"அது... அது வந்து..." வார்த்தைகளை முழுங்கினான் ராம்கி.

"என்னடா... இப்ப பிரச்சினை... எங்கிட்ட சொல்லு... நான் உனக்கு நல்ல பதிலாச் சொல்றேன்..."

"ஆமா இவுக ஐகோர்ட்டு ஜட்ஸ்... போடி அந்தப்பக்கம்..."

"இருடா... புவிக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு நினைக்கிறாங்களாம்... அதை எப்படியாவது தடுக்கணும்..."

"ம்... அதுக்கு..."

"என்ன நொதுக்கு?" கடுப்பானான் சேகர்.

"புவியோட அம்மாக்கிட்ட பேசலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்... மச்சான்கிட்ட சொன்னா சத்தம் போடுறான்..."

"அவ அம்மாக்கிட்டயா... கிழிஞ்சது கிருஷ்ணகிரி... ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டுக்குள்ள ஒளிஞ்ச மாதிரியில்ல இருக்கு..."

"கெழவி மாதிரி பேசுறா பாரு..." 

"சும்மா இருடா... இப்ப என்ன பண்ணலாங்கிறீங்க... போட்டு குழப்புறீங்க..."

"குழப்பல்லாம் இல்ல... நீ போயி அவ அம்மாக்கிட்ட பேசு ஏழரை ஆகுறதுக்கு அவளையே படிக்கணும்மான்னு பேசச் சொல்லு... அதுல சரியா வருதான்னு பாக்கலாம். இல்லைன்னா உங்க ஐயாவை அவ வீட்டுல பேசச் சொல்லு... அதை விட்டுடுட்டு பேசுறேன்னு போயி காரியத்தைக் கெடுத்துறாதே..."

"இங்க பாருடா.... மாடு மேய்க்கப் போனாலும் அறிவாப் பேசுறா"

"ம்... இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு பொலி எருதை மேய்க்கணுமில்ல... அறிவா இருந்தாத்தானே கதைக்கு ஆகும்... நாஞ்சொன்னபடி செஞ்சு பாரு... சரியா வரும்... வீணாவுல பிரச்சினையை ஏற்படுத்திக்காதே..." என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

"காவேரி சொல்றதுதான் சரியின்னு படுது...  புவனாவை பேசச் சொல்லு..."

"ம்... ஒரே குழப்பமா இருக்குடா... முடியலை... ஆமா எதுக்குடா எப்பப் பார்த்தாலும் அவகூட சண்டை போடுறே..."

"இதெல்லாம் ஒரு ஜாலி மச்சான்... அவ எதாவது சீரியஸா எடுத்துக்கிறாளா பாத்தியா... இது செல்லச் சண்டை.... அதைவிடு இப்போ புவனாவை எப்படியாவது அவ அம்மாகிட்ட பேசி அவங்க மனசை மாத்தச் சொல்லு....  எப்படி அவகிட்ட சொல்லுவே..."

"அதான் மல்லிகா இருக்காளே... அவகிட்ட சொன்னா பேசிருவா"

"ம்... முதல்ல செய்யி..."


"என்னடா சொல்றே... பிளான்ல மாற்றமா? அண்ணாக்கிட்ட சொன்னியா... அவன் கத்துவான்டா..." என்றான் சரவணன்.

"இன்னும் சொல்லலை... சேகர்கிட்ட சொன்னப்போ அவன்தான்டா புவியையே பேசச் சொன்னான்... இது நல்லதாத் தெரியுது.... அண்ணாக்கிட்ட சொன்ன கேட்டுப்பான்டா..."

"சரிதான்.... நீ பேசுனா ஒரு முடிவு கிடைக்கும்... அவ பேசினா ஏத்துப்பாங்களா?"

"பேசவிட்டுப் பாக்கலாம்... இல்லைன்னா ஐயாவை பேசச் சொல்வோம்... ஐயா சொன்னா அவ அப்பாம்மா கேட்டுப்பாங்கன்னு தோணுது..."

"ம்க்கும்... நீ வேற.... ஐயாவை மதிப்பானுங்களான்னே தெரியலை.... சரி பேசச் சொல்லு... அண்ணாக்கிட்ட நான் பேசிக்கிறேன்..."

"சரிடா... நான் மல்லிகாகிட்ட சொல்லி புவனாவுக்கு கூப்பிடச் சொல்றேன்..."

"எதுக்குடா சுத்தி வளைக்கிறே.... நீயே புவனா வீட்டுக்குப் போன் பண்ணு... அவங்க அம்மா எடுத்தா புவனாக்கிட்ட பேசணும்மான்னு சொல்லு... வேற யாரும் எடுத்தா கட் பண்ணிடு... சரியா..."

"ஓகேடா..." என்றபடி போனை வைத்துவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அம்மா மாடு மேய்க்கப் போனது ஒரு வகையில் நல்லதாகத் தெரிந்தது. வீட்டில் இருந்தால் புவனாவுடன் பேச முடியாமல் போகலாம். இந்த நேரத்தில் புவனாவின் அப்பா கடையில் இருப்பார். வைரவனும் வீட்டில் இருக்க வாய்ப்பில்லை... எப்படியும் புவனாவோடு பேசிவிடலாம் என்ற மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் மண்பானையில் இருந்த தண்ணீரை சொம்பில் மோந்து மடக் மடக்கென்று குடித்தான். குளிர்ச்சியாக இறங்கிய தண்ணீர் கொஞ்சம் படபடப்பைக் குறைத்து அவனை ஆசுவாசப்படுத்தியது.

போனை எடுத்து புவனா வீட்டு தொலைபேசி எண்ணைச் சுழற்றினான். 'வேறு யாராவது எடுத்தால்...' என்று நினைத்து கட் பண்ணினான். மீண்டும் யோசனைக்குப் பிறகு 'யார் எடுத்தா என்ன?' என நினைத்துக் கொண்டு மீண்டும்  நம்பரை டயல் செய்தான். எதிர்முனையில் ரிங்க் போய்க்கொண்டிருந்தது. ராம்கிக்கு படபடப்பாக இருந்தது.

"அலோ..." என்றது எதிர்முனை.

"அலோ...  புவனா இருக்காங்களா?" படபடப்பை அடக்கி தைரியமாகக் கேட்டான்.

"இருக்கா... நீங்க யாரு தம்பி... என்ன விஷயம்...?" என எதிர்முனை கேட்டதும் புவனாவின் அம்மாவின் குரல் என்பதைக் கண்டு கொண்டான்.

"நான் ராமகிருஷ்ணன் பேசுறேம்மா... அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...?" என்றவனுக்கு உடம்பு ஆட ஆரம்பித்தது.

"என்ன பேசணும்... எங்கிட்ட சொல்லுங்க... சொல்லிடுறேன்..."

"இல்ல அவங்ககிட்டதான் சொல்லணும்... கொஞ்சம் கூப்பிடுங்களேன் ப்ளீஸ்..."

"ம்... என்கிட்ட போன் பண்ணி அவளைக் கூப்பிடச் சொல்றியே உனக்கு எவ்வளவு தைரியம்?"

"அம்மா... கோபப்படாதீங்க... அவங்க மேல்படிப்பு விஷயமாப் பேசணும்... ப்ளீஸ்மா..."

"இங்க பாரு தம்பி... இனி போன் கீன் பண்ணாத... தெரிஞ்சதா.... அவ அப்பாக்கிட்ட சொன்னா புல் பூண்டு கூட முளைக்காமப் பண்ணிடுவாரு... அவ மேல படிக்கல... போதுமா..."

"அம்...." எதிர்முனை டக்கென்று போனை வைத்துவிட ராம்கிக்கு டென்ஷன் ஏறியது. சே... எதையும் கேட்க்கக்கூட மாட்டேங்கிறாங்களே... என்ன மனிதர்கள் இவர்கள்... சாதியும் மதமும்தான் இவர்களுக்குத் தெய்வமா... சொல்வதைக் கேட்கக்கூட இவர்களுக்கு முடியவில்லையா... காதல் தவறு என்பதற்காக அவளின் படிப்பில் மண் விழ வேண்டுமா என்ன... என்று கோபம் கோபமாக வந்தது. நீண்ட யோசனைக்குப் பின்னர் மீண்டும் அதே நம்பரை ரீடயல் செய்தான். ரிங்க் போய்க்கொண்டிருந்தது.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.