மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 7 ஜூன், 2020

ஆன்மீகம் : தினம் ஒரு கோயில் - 2

முகநூலில் தொடரும் பத்து நாள் பத்துக் கோவில் தொடரை இன்றுடன் முடிக்க இருந்தாலும் இன்னும் சில கோவில்கள் குறித்து எழுதலாம் என்ற எண்ணம் மனசுக்குள் இருக்கிறது. இது குறித்தான தேடலில்தான் நிறைய விஷயங்களை அறிய முடிகிறது. பெரும்பாலான கோவில்களுக்கு உண்மையான வரலாறு ஒன்றிருக்க, சாதிக்கொன்றாய் வரலாறுகளும் காணப்படுதல் அபத்தம்... இவர்கள் வரலாறுகளைத் திரித்து எழுதி பிற்காலத்தில் எந்த ஒரு உண்மையான வரலாறும் மக்களுக்குக் கிடைக்காமல் செய்து விடுவார்கள் என்பதே உண்மை.
காளையார் கோவில் பற்றி எழுதும் போது மராமத்துப் பணி பார்த்த தேவகோட்டை செட்டியார் பெயர் தவறாகச் சொல்லியிருக்கிறீர்கள் என தேவகோட்டை நண்பர் கூப்பிட்டுச் சொன்னார். இணையத்தில் இருக்கும் பல கட்டுரைகளில் அதே பெயர்தான் இருந்தது. நான் இணையத்தில் வாசித்தே எழுதுகிறேன்... அத்துடன் எங்கள் பகுதி கோவில்கள் என்பதால் எனக்குத் தெரிந்த, பெரியவர்கள் சொன்ன செய்திகளையும் சேர்த்து எழுதுகிறேன். பின்னர் அவரிடமே கேட்க, சரியான பெயரைச் சொன்னதுடன் காளையார்கோவில் பற்றி நிறைய விஷயங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதெல்லாம் தங்களுடன் பகிர்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு நன்றி.

அதேபோல் நாட்டரசன் கோட்டை பற்றி எழுதியிருந்ததில் ஒரு நண்பர் வந்து பாதிப் பொய் பாதி உண்மை... கள்ளர்களும் செட்டியாரும் உரிமையைப் பறித்துக் கொண்டவர்கள்... வலையர்களே அக்கோவிலுக்கு உரிமையானவர்கள் என்று சொல்லிச் சென்றிருக்கிறார். அவரிடம் இணையத்தில் இருந்து எடுத்துத்தான் பகிர்ந்திருக்கிறேன். உங்களிடம் உண்மையான தகவல் இருந்தால் எழுதுங்கள் நானும் அறிந்து கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். மேலே சொன்னதுதான் சாதிக்குச் சாதி தெய்வங்களின் வரலாறும் சாதியும் மாற்றப்படுகிறது. சாதி தெய்வங்களை ஒரு வட்டத்துக்குள் நிறுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை... இப்பவே வந்தாச்சு.

இந்தக் கோவில் பதிவுகளை முகநூலில் பலர் வாசித்து தங்கள் பக்கங்களில் பகிர்ந்து வருவதுடன் நிறைய நட்பு அழைப்புக்களும் வர ஆரம்பித்திருக்கின்றன. நேற்று நண்பர் சத்யாவுடன் பேசும் போது இவ்வளவு விரிவா எழுதுறதுனால தொகுத்து வையிங்க... பின்னால புத்தகம் ஆக்கலாம் என்றால் ஆக்குறோமோ இல்லையோ விரிவாக எழுதுவதால் தொகுத்து வைத்துக் கொள்ளலாமே.

நேற்று பிள்ளையாரைப் பற்றிப் பார்த்திருக்கிறோம் இன்று அதற்கு அருகில் இருக்கும் குன்றக்குடியைப் பற்றிப் பார்க்கலாம்.

குன்றக்குடி சண்முகநாதன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மேகம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

காரைக்குடி (12 கி.மீ) - திருப்பத்தூர் (16 கி.மீ) சாலையில் பிள்ளையார் பட்டியிலிருந்து 4 கி.மீ தூரத்தில் இருக்கும் குன்றக்குடி (எங்க பேச்சு வழக்கில் குன்னக்குடி) முருகன் கோவிலைப் பற்றிப் பார்ப்போம்.
குன்றக்குடி மலையின் மேலே முருகன் கோவிலும் கீழே குடைவரைக் கோவிலாக சிவன் (தேனாற்று நாதர் - அழகம்மை) கோவிலும் இருக்கின்றன. கீழிருக்கும் கோவிலில் சுந்தரேஸ்வரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்தீசர், சண்டேசர் என மேலும் நான்கு தெய்வங்களும் சிலை வடிவில் இருக்கின்றன. குடைவரைக் கோவில் திருப்பணியை பாண்டிய, சோழ மன்னர்கள் செய்த விபரம் கல்வெட்டில் இருக்கிறது.
குன்றக்குடி மலை ஒரு மயில் படுத்து அடைகாக்கும் வடிவில் இருக்கும்... மலையின் நுழைவாயில் மயில் தோகை போல் இருப்பதால் அங்கிருக்கும் பிள்ளையார் 'தோகையடி விநாயகர்'. அவரை வணங்கி, மலை ஏறினால் முருகனைக் காணும் முன் கார்த்திகை விநாயகர், இடும்பன், வல்லப கணபதி, வீரபாகு ஆகியோரைக் காணலாம்.
மூலவர் ஷண்முகநாதர் ஆறு திருமுகங்கள், பன்னிரு திருக்கரங்களுடன் மயிலின் மீது வலது காலை மடித்தும் இடது காலைத் தொங்க விட்டும் அமர்ந்திருக்கிறார். ஒரே கல்லில் செய்யப்பட்ட மயில்வாகனம், திருவாச்சி, முருகன் என அனைத்தையும் மயிலின் கால்கள் தாங்கி நிற்கும் சிற்பம் பார்க்கப் பரவசம்.
இடப்பக்கம் தெய்வானை, வலப்பக்கம் வள்ளி என இருவரும் தனித்தனி மயில்களில் அமர்ந்திருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சி.
உள் பிரகாரத்தில் சொர்ண கணபதி, தட்சிணாமூர்த்தி, நடராஜர், குழந்தை வடிவேலன், பைரவர் சன்னதிகளும் உண்டு.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்
மலையில் மொத்தம் 149 படிகள் இருக்கின்றன.
குலகிரி, மயூரகிரி, சிகண்டி மலை, மயில்மலை என்ற புராணப் பெயர்களும் உண்டு.
ஸ்தல் விருட்சம் : அரச மரம்
தீர்த்தம் : தேனாறு
பெரிய மருதுக்கு பிளவை நோய் வந்து எந்த வைத்தியத்திலும் குணமாகாத நிலையில் முருக பக்தர் ஒருவர் வந்து பிராத்தித்து துணூறு பூசினால் குணமாகும் என்று சொல்லப்பட, உப்பு வணிகர் காடன் செட்டியாரை அழைத்து வந்து முருகனை வேண்டி துணூறு பூச வைக்க, சில தினங்களில் பிளவைக் கட்டி உடைந்து குணமானதாம்.
நோய் குணமானதும் காடன் செட்டியாரின் குலதெய்வமான குன்றக்குடி முருகனைத் தரிசிக்க வந்தபோது அம்மலைக் கோவில் புதர்மண்டி கவனிப்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்து திருப்பணிகளை ஆரம்பித்து, தான் வந்து தங்க சிறிய அரண்மணையும் கட்டியிருக்கிறார். கோவிலின் ராஜகோபுரமும் அவரால் கட்டப்பட்டதே... தேர் செய்து தைப்பூச விழாவை மிகச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்.
அலங்கார மண்டபத்தில் இருக்கும் தூணில் மருது சகோதரர்கள் சிலை இருக்கிறது. அதன் கீழே இருக்கும் கல்வெட்டில் பிளவை நோயைத் தீர்த்த விபரம் இருக்கிறது.
இது புராணக்கதை அல்ல... வரலாற்று உண்மை. 'வீரமருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே..! ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே...' என்று குன்றக்குடி பாமாலையில் எழுதப்பட்டிருக்கிறது.
மலையில் இருந்து பார்த்தால் நாற்புரமும் ஊரணிகளைக் காணலாம்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூ
குன்றக்குடி ஆதீனம் கட்டுப்பாட்டில் இருக்கும் இம்மலைக்கோவில் காலை 5 மணி முதல் பகல் 12.30 வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருணகிரிநாதரால் பாடப்பெற்ற தலம் இது.

நாளை காளையார் கோவில்...
*******
நீண்ட நாட்களுப் பிறகு மின்கைத்தடி இணைய இதழில் எனது சிறுகதை... கதையைப் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர்கள் சகோதரி. லதா சரவணன் மற்றும் சகோதரர். கமலக் கண்ணன் ஆகியோருக்கு நன்றி. வாசித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

குன்றக்குடி ஷண்முகநாதனையும் பலமுறை தரிசனம் செய்துள்ளேன்...

ஷண்முகா சரணம்...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குன்றக்குடி - குன்னக்குடி என்றாலே உடனே குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான் நினைவுக்கு வருவார்.

தகவல்கள் தெரிந்து கொண்டேன் குமார்

வீடு நல்லாருக்கு!!!!! அதுவும் கடைசில சொன்னது...முடிவு.

கீதா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான அருமையான கோவில்... தகவல்களும் அருமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பிள்ளையார்பட்டி சில முறை சென்றிருந்தாலும் குன்றக்குடி சென்றதில்லை. போக வேண்டும் எனத் தோன்றுகிறது.

திரித்து எழுதப்படும் வரலாறுகள் - வேதனை. எத்தனை எத்தனை சாதிப் பிரிவுகள்... என்றைக்கு தீரும் இந்த பிரிவுகள். பல வரலாறுகள் உண்மையை திரித்து எழுதப்பட்டவை என்றே தோன்றுகிறது.

புத்தகமாக வெளியிடலாம் என்ற யோசனை நல்ல விஷயம். தொடர்ந்து எழுதுங்கள். மின்புத்தகமாகவாது வெளியிடலாம்.

கதை - படிக்கிறேன் குமார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வீடு கதை படித்தேன் குமார். ரொம்ப நல்லா வந்துருக்கு. பாராட்டுகள்.

மாதேவி சொன்னது…

குன்றக்குடி முருகன் வணங்குகிறேன்.

வீடு படிக்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பல முறை குன்றக்குடிக்குச் சென்றுள்ளேன். இன்று இப்பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி. இதுபோன்ற சுமார் 800 கோயில்களைப் பற்றி விக்கிப்பீடியாவில் எழுதியுள்ளேன், சுருக்கமாக. தற்போது ஆங்கில விக்கிப்பீடியாவில் ஆரம்பித்துள்ளேன். கோயிலைப் பற்றி எழுதுவது என்றாலே அது ஒரு வகையான மன திருப்திதான்.

கோமதி அரசு சொன்னது…

குன்றக்குடி முருகனை நிறைய தடவை தரிசனம் செய்து இருக்கிறார்.

படங்களும், செய்திகளும் அருமை.

கோமதி அரசு சொன்னது…

வீடு கதை படித்தேன் நன்றாக் இருக்கிறது.