மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 28 நவம்பர், 2019

தெரிசை சிவாவின் 'குட்டிகோரா'

Image result for குட்டிகோரா

'குட்டிகோரா'

சகோதரர் தெரிசை சிவாவின் முதல் சிறுகதைத் தொகுப்பு.

சில பல காரணங்களால் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர்களின் புத்தகங்களுக்கு விமர்சனம்... விமர்சனம் என்பதைவிட வாசிப்பின் அனுபவத்தை எழுதுவதில்லை என்ற விரதத்தைத் தீவிரமாக கடைபிடித்து வருகிறேன் என்றாலும் சிவாவின் முதல் புத்தகம் குறித்தான வாசிப்பு அனுபவத்துக்காக சற்றே அதைத் தள்ளி வைக்க வேண்டியதாகிவிட்டது.... ஏனென்றால் கதையின் மொழிநடை நாஞ்சில் வழக்கு என்றாலும் கதைக்களம் எனக்கு மிகவும் நெருக்கமான கிராமத்து மனிதர்களின் வாழ்வியல். 

'எழுத்து எனக்கான ஒரு ஆர்ப்பரிப்பு... நான் கண்ட எளிய மனிதர்களின் மறுதலிப்பு... எனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன்... நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும் என் கதை மாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள்... காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால் என் கதைகளின் வழி சில மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நிறுத்தியுள்ளேன்.'

இது தன்னுரையில் சிவா சொல்லியிருப்பது... மண்ணை நேசிக்கும் ஒரு மனிதனுக்குள்தான் மண்ணின் மைந்தர்கள் கதை மாந்தர்களாய் வலம் வருவார்கள்... வலம் வரமுடியும்... குட்டிகோராவில் அப்படித்தான் வருகிறார்கள்... வாழ்கிறார்கள்... நம்மை வசப்படுத்துகிறார்கள்.

கதைகள் குறித்து  இப்படியிருக்கு... அப்படியிருக்கு... என்றெல்லாம் விரிவான விமர்சனம் எழுத வேண்டியதில்லை... ஒவ்வொரு கதையும் எழுத்தாளனின் எண்ணத்தில் உதிக்கும் போது அழகாக, அருமையாக உதித்திருக்கிறது... சிறப்பாகவும் வந்திருக்கிறது. ஒரே மாதிரிக் கதைகளாக இல்லாமல் கலவையாய்க் கதைகளைக் கலந்து கொடுத்திருக்கிறார்கள். ஒரு சோகத்துக்குப் பின் கண்ணீர் வருமளவுக்குச் சிரிப்பு... சிரித்து முடிந்ததும் வழுக்கிச் செல்லும் பாசம்... பாசத்தில் குளித்து எழுத்தால் சமூகச் சாடல் என மாறி மாறி ஆடிக்காற்றாய் சுழன்றாடி இருக்கிறார் ஆசிரியர். 

சடலச்சாந்தி போன்ற கனத்த கதையைச் சுமக்கும் புத்தகத்தில் முடியன் போன்று வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் கதையுமிருக்கு... குட்டிகோரா போன்ற வாலிபக் கதையுமிருக்கு... தோசை போல சமூக தீவிரத்தைச் சொல்லும் கதையுமிருக்கு... ஒவ்வொரு கதையும் வித்தியாசமான களத்தில்... எல்லாவற்றிலும் பேசும் மொழி ஒன்றே என்றாலும் ஒவ்வொன்றும் பேசும் விதம் மாறுபட்டதாய்... அசரடிக்கும் எழுத்து நடைக்கு ஆரம்பத்திலேயே வாழ்த்துச் சொல்வதில் தப்பொன்றும் இல்லையே... வாழ்த்துக்கள் சிவா.

கதைகள் எப்படியிருக்கு...? 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்... பதம் சரியாகவே இருக்கு... இன்னும் சொல்லப் போனால் பாயாசம்ன்னா அறவே பிடிக்காது என்றாலும் பால்பாயசம்ன்னா கொஞ்சம் விருப்பமாய் சாப்பிடுவேன் என்று சொல்லும் என்னைப் போன்றோருக்கு இது பால்பாயாசம்... 

சரி கதை எப்படியிருக்கு...? 

தித்திப்பா இருக்கு.... ஆனா திகட்டலை... அதுதான் முக்கியம்.... திகட்டத் திகட்டச் சாப்பிடுவதைவிட, சாப்பிட்டபின் நாவில் தித்திப்பு தங்கியிருப்பதுதான் சுவை... அந்தச் சுவை துளியும் குறையவில்லை. வாசிப்புக்குப் பின் தித்திப்பு நிச்சயம்.

ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் கடற்காகம், வேற்று திசை, மலையாளத் திரையோரம் போன்ற புத்தகங்களின் வெளியீடு நிகழ்வு அன்று துபை வரை செல்ல வேண்டிய வேலை... அங்கு சென்ற பின் விழாவில் கலந்து கொள்ள வாருங்கள் என நெருடாவின் அழைப்பு... இன்று வரை திக்குத் தெரியாத காடுதான் துபையெல்லாம் எனக்கு... அபுதாபி எனக்கு தேவகோட்டை, காரைக்குடி மாதிரி... சந்து பொந்தெல்லாம் புகுந்து வந்திடுவேன்... துபையே தரிகிணத்தோம் எனும்போது ஷார்ஜா எப்படிப்  போவதுன்னு யோசனை... அப்புறம் பாலாஜி அண்ணாவை நெருடாவும் நானும் மாறி மாறிப் போனில் தொந்தரவு செய்ய, முடிவில் மெட்ரோவுல மைதானம் நிறுத்தம் வந்துரு... நான் வந்து அள்ளிக்கிறேன்னு சொன்னார். அப்படியே அள்ளிக் கொண்டார்.

அவரின் காரில் புத்தகக் கண்காட்சி நடக்கும் இடம் நோக்கிப் போகும் போது 'தம்பி சிவாவோட குட்டிகோரா வாசிச்சேன்டா.... அப்பப்பப்போ சிரிச்சி மாளலை... உடம்பு முடியலைன்னு வீட்டுல படுத்துக்கிட்டு இதைப் படிச்சி சிரிச்சா... வீட்டுல ஒரு மாதிரிப் பார்க்குறாங்க....' என ஆரம்பித்தார். அப்போதே அவர் முகத்தில் எப்போது இருக்கும் சிரிப்பின் அடர்த்தி கூடியிருந்தது.

'ஆமாண்ணே... நானும் ஒரு சில கதைகள் படிச்சேன்... நல்லாயிருந்துச்சு... ரசிக்க வைக்கும் எழுத்து நடை...'

'ஆமாடாம்பி... அந்த நெல்லைப் பேச்சு வழக்குத்தான் கொஞ்சம் நமக்குப் புதுசுங்கிறதால கொஞ்சம் எடறுச்சு... மத்தபடி ரசனைதான் போ... இலக்கியவாதிகளுக்கான மூணு கதை தவிர, மற்றதெல்லாம் ரொம்ப நல்லாயிருந்துச்சு...'

'ம்... நீங்க ரசிச்சி எழுதியிருந்தீங்க... பார்த்தேன்...'

'அதுலயும் பாரு.... முடியன்னு ஒரு கதை... ஹஹ்ஹாஹா.... சிரிக்க முடியலடா தம்பி... ஆடும் சுடலைமாடனும் பேசுற மாதிரி... நம்ம பக்கம் கருப்பன், முனியன்னு இருக்க மாதிரி அவய்ங்க ஊருல சுடலைமாடன்... சுடலைக்கு வெட்ட நேர்ந்து விட்ட ஆட்டுக்கும் நாலு வருசத்துக்கு ஒருமுறை திருவிழாவைப் பார்க்கிற சுடலைக்கும் நடக்குற பேச்சு வார்த்தைதான் கதை... வரிக்கு வரி சிரிக்கலாம்...'

'அப்படியா..? முதல் கதையான தோசை வருத்தமான முடிவைக் கொடுத்தது... சடலச்சாந்தி கூட ரொம்பவே யோசிக்க வைத்தது... முடியன் இன்னும் வாசிக்கலை....'

'சடலச்சாந்தியெல்லாம் ரொம்பச் சோகமான முடிவோட வருத்தப்பட வைக்கும்... ஆனா இது வடிவேலு நகைச்சுவை மாதிரிப் படிச்சிட்டு வச்சிட்டு நினைச்சி நினைச்சி சிரிச்சிக்கிட்டே இருக்கலாம்...'

'ம்...'

'சுடலை நிக்கிறதைப் பார்த்து நடிப்புல நீரு சிவாஜியை மிஞ்சிடுவீரு ஓய்ன்னு ஆடு சுடலையைப் பார்த்துச் சொல்லும்டா தம்பி... சிரிச்சேன் பாரு விழுந்து விழுந்து சிரிச்சேன்....'

நானும் சிரிச்சேன்... எங்க ஊரு அய்யனாருகிட்ட வெள்ளாட்டங்கிடாய் சொல்வதாய் நினைத்து...

'உனக்கு என்னை வெட்ட இருப்பதாகவும் என்னைப் பலி கொடுக்கப் போறாங்க... அதுல இருந்து தப்பிக்க நீதான் ஏதாவது வழி சொல்லணும் என சுடலைக்கிட்டயே ஆடு சொல்லும்... அதுக்கு அவரு தலையில தண்ணி ஊத்தும் போது தலையை ஆட்டாதேன்னு சொல்வாரு... யாரு நானு... தலைய தண்ணிக்குள்ள அழுக்கி காதுல எல்லாம் தண்ணி போக வைப்பாங்க... அப்ப தலையை ஆட்டாம... செரித்தான்... ஆமா நீ ஆட்டாம இருப்பியான்னு திருப்பிக் கேக்கும்.... உடனே சுடலை யோசிச்சி உடம்புல ஒச்சம் இருந்தா வெட்டமாட்டாகன்னு சொல்லிக் கொடுக்கும்... ஹா...ஹா..ஹ்ஹா... அவுக ரெண்டு பேரும் பேசுறது வரிக்கு வரி சிரிப்புடா தம்பி...' என்றார்.

'அப்புறம் எழுதியிருப்பாரு பாரு... கவட்டுக்கு கீழே... அதான் ரெண்டு காலுக்கும் இடையில சூடம் வைப்பாங்க... எங்கே உடுத்தியிருக்கிற ஒத்த வேட்டியில பிடிச்சிருமோன்னு சுடலை பயந்து நிப்பாருன்னு எழுதியிருக்காரு... சுடலைக்கு இருக்கதே ஒத்த வேட்டிதான்னு நினைச்சப்போ சிரிப்பை அடக்க முடியலை... அப்புறம் திருப்பதி வெங்கடாஜலபதியாப் பிறக்கணும்ன்னு சுடலை நினைக்கும் ஏன்னா அப்பத்தான் பணக்கார சாமியாயிருக்கலாம்ன்னு யோசிக்குதாம்... ஹாஹ்ஹா... சிரிச்சி மாளலை தம்பி... வீட்டுல எல்லாரும் தூங்குறாய்ங்க... இதை மறுக்கா மறுக்கா படிச்சி எந்திரிச்சி உக்காந்து சிரிச்சிக்கிட்டு இருக்கேன்...'

ஷார்ஜா போகும் வரை குட்டிகோராதான் காருக்குள் சுற்றிச் சுற்றி வாசனையைப் பரப்பியது. ஒரு மனிதனை இவ்வளவு ரசிக்க வைக்கும் எழுத்து எல்லாருக்கும் வாய்த்து விடுவதில்லை... இந்தளவுக்குச் சிலாகிக்கிறார் என்றால் அக்கதை எந்தளவுக்கு இருந்திருக்க வேண்டும்... அப்படித்தான் இருந்தது முடியன்.

இன்று முடியனை வாசிக்கும் போது சிவாஜியை மிஞ்சிடுவீரு ஓய்ல அலுவலகம் என்பதையும் மறந்து சிரித்தேன். சாமிக்கு முன்னாடி நின்னு சண்டை போட்டுப் பேசும் மனிதர்களைப் பார்த்து இருப்போமில்லையா அப்படித்தான் இங்கே ஆடு... அதான் முடியன். ஆடு பேசும் போது எனக்கு ஊர்ல திரியிற கிசும்பு பிடிச்ச ஆள் பேசுவது போலத்தான் இருந்தது.

குட்டிகோரா பவுடரின் மணம் எப்படியிருக்கும்...? அப்படித்தான் இருந்தது குட்டிகோரா கதையும்... சற்றே வித்தியாசமான கதை...  பேண்ட் கோபக்கார அப்பாவுக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் இருக்குன்னு சொன்ன கதை...  நருவல் எதார்த்தம்... உலக்கருவி அமானுஜ்யம் நிறைந்த பரபரப்பாக நகரும் கதை... ஆசானும் மலையாளப் பேய்களும் ரசிக்க வைத்த பேய்க்கதைகள்... இன்னும் இன்னுமாய் தோசை, அண்டி, அணுகுண்டு, கும்பாட்டக்காரி,வெத்தலப்பெட்டி என எல்லாமுமே ஒவ்வொரு சுவையில்.

சடலச்சாந்தி கதை கதைசொல்லி பவாவுக்கு ரொம்பப் பிடித்துப் போக, பொன்னீலன்-80 விழா மேடையில் கதையை முழுவதுமாய்ச் சொல்லியிருக்கிறார்... இதுதான் இவ்வெழுத்து சிவாவுக்குக் கொடுத்திருக்கும் பரிசு... இன்னும் சிறப்பான கதைகளைப் படைக்க இவையெல்லாம் ஊக்கம் கொடுக்கும் படிக்கற்கள்... பாலாஜி அண்ணனின் பாராட்டுப் போல் பாராட்டுக்களே ஒரு நல்ல எழுத்தாளனை மேலும் மேலும் முன்னே பயணிக்க வைக்கும்.

உதிரம் தா...

உதிரம் தா...

என்பதைப் போல இன்னும் பல கதைகளைத் தா... கதைகளைத் தாவெனச் சொல்ல வைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர் சிவா.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, உட்புறம் மற்றும் உரை

குட்டிகோரா - அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

வாழ்த்துக்கள் சிவா...

விரைவில் உங்கள் நாவலை வாசிக்கும் ஆவலுடன்.

குட்டிகோரா
தெரிசை சிவா
எழுத்து பதிப்பகம்.
விலை : ரூ.180/-

**************
கணேஷ் பாலா அன்னான் நடத்தும் மூன்றாம் ஆண்டு படத்துக்கு கதை எழுதும் முகநூல் சிறுகதை போட்டியில் என் கதையும்... அங்கு வாசித்து உங்கள் கருத்தை சொல்லுங்க...
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான அறிமுகம்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசனையான அனுபவ விமர்சனம்...

Unknown சொன்னது…

அருமை

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரரே

அருமையான குட்டிகோரா நூலை பற்றி சிறப்பான விமர்சனம். தாங்கள் விமர்சித்த கதை மட்டுமல்லாது எல்லா கதைகளையும் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியது.

தங்கள் முகநூல் கதையான "வலி"யும் மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள். படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Unknown சொன்னது…

சூப்பர்