மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 5 நவம்பர், 2019

மனசு பேசுகிறது : சோளகர் தொட்டிக்குள்ளே

சோளகர் தொட்டியை வாசித்து விட்டு அப்படியே கடந்து செல்ல முடியாமல் அந்த மக்களுடனே இன்னும் நிற்கிறேன். வாசித்து முடித்ததும் அந்தப் பெண்கள் பட்ட கொடுமைகளை மட்டுமே என்னால் எழுத முடிந்தது. விரிவான விமர்சனமாய் அது இல்லை என்பது நண்பரின் கருத்தாகவும் இருந்தது. அதுவே மிக விரிவானதுதான் என்பதே என் எண்ணமாகவும் இருந்தது.

புத்தகமோ சினிமோ எப்பவுமே கதைக்குள் பயணித்து விமர்சனம் எழுதுவதில்லை... அப்படியே கதையை முழுவதுமாய் எழுதிப் படிக்க  / பார்க்க நினைப்பவரின் மனநிலையைக் கெடுக்க எப்போதும் விரும்புவதில்லை. அப்படித்தான் இந்நாவலின் பெண்களைப் படுத்தியெடுத்த அதிரடிப்படையைப் பற்றியும் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியுமே  முந்தைய பதிவில் எழுதி வைத்தேன்... அதுவே எனக்கு வாசிக்கும் போது மிகுந்த வலியைக் கொடுத்தது என்பதால்...

கலைஞர் அவர்களின் தென்பாண்டிச் சிங்கம் வாசித்து முடித்து விட்டு வெக்கைக்குள் நுழைந்து காடோடிப் போய்க் கொண்டிருந்தாலும் ஏனோ மனசு மட்டும் இன்னும் சோளகர் தொட்டியிக்குள்ளேயே சுற்றி வருகிறது. என் எதிரே இருக்கும் டீப்பாயின் மீது கிடக்கும் அப்புத்தகத்தின் அட்டைப்படம் பார்க்கும் போதெல்லாம் என்னை ஏதோ செய்து கொண்டேயிருக்கிறது.

சோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்
(நாவலில் சிவண்ணா... உண்மையில் சித்தன்)
ஒரு தனி மனிதனை வேட்டையாடுகிறோம் என  வனத்துறையினரின் நிகழ்த்திய வெறியாட்டத்தில் ஒரு சமூகம் அடைந்த துயரங்கள் என்னைச் சூழ்ந்தே நிற்கின்றன. வாளுக்குவேலியும் கறுத்த ஆதப்பனும் வீரத்தோடும் விவேகத்தோடும் மருது பாண்டியர்களைக் காக்க சிவகங்கைச் சீமையில் நின்ற போதும் சுந்தரியும் கல்யாணியும் காதல் மொழி பேசிய போதும் எனக்குள்ளே சிவண்ணாவுடன் மாதியும் சித்தியும் ஈரம்மாவுமே நின்று அழுதார்கள்... இன்னும் அழுது கொண்டிருக்கிறார்கள். 

எப்பவும் ஒரு புத்தகத்தை வாசித்த பின் அதைக் கடந்து போய்விடுவேன்... பிடித்திருந்தால் அதில் இருந்து மிகவும் பிடித்தவற்றில் வேண்டியதை மட்டும் என்னுள் சேமித்துக் கொள்வேன். பெரும்பாலும் வரலாறுகள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றாலும் எல்லா வரலாறுமே வீரத்தை அதீதமாய்த்தான் பேசுமேயொழிய வலிகளை அளவாகத்தான் பேசும்... குறிப்பாக வர்ணனைகள் பல பக்கங்களை வளைத்துக் கொ(ல்)ள்ளும்.

புனைவுகள் இல்லாத வரலாறு என்பது சாத்தியமில்லை என்பதால் ஆசிரியரின் விருப்பப்படி வரலாறு மாற்றி எழுதப்படும் என்றாலும் வாசிக்கும் போது ஏதோ ஒரு விதத்தில் ஈர்க்கும் என்பதால் எனக்குப் பிடிக்கும்.

சோளகர் தொட்டியில் வலிகளை மட்டுமே நாவல் முழுக்கப் பேசியிருப்பது வித்தியாசம்... முதல் முறை இப்படியான ஒரு நாவலை வாசித்தது வித்தியாசமான அனுபவம்.  இதுவும் வரலாறுதான்... நம் காலத்திலேயே நிகழ்ந்த சோக வரலாறு... யாருமே பதிய நினைக்காத, மறைக்க நினைத்த வரலாறு.  நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய சோக வரலாறு... ஒரு இனத்தை தங்கள் அதிகார போதையால் அழித்தொழித்த வரலாறு.

வரலாறைச் சொல்கிறேன் என தானறிந்ததுதான் வரலாறு என இறுமாப்புடன் செல்லும் புத்தகங்களை எல்லாம் ஏன் வாசித்தோமோ என யோசித்திருக்கும் போது நம் சமகாலத்தில் நிகழ்ந்த கொடூர வரலாற்றை யாருமே பதிவு செய்யாத நிலையில் பத்தாண்டுகள் அவர்களுடன் இருந்து எழுதிய இந்தப் புத்தகத்தை ஏன் முன்னரே வாசிக்கவில்லை என நினைத்துக் கொண்டிருக்கிறேன்... வாசிப்பவர்களுடன் பழகும் போதுதான் நிறைய வாசிக்கக் கிடைக்கிறது. அதற்காகவேனும் அவர்களுடனான நட்பு த் தொடரவேண்டும். 

இத்தனை வலிகளையும் பாலமுருகனால் எப்படி தன் எழுத்தில் கடத்த முடிந்தது என யோசித்துக் கொண்டிருக்கிறேன்... புத்தகம் முழுவதும் எழுத்துக்கள் நம் கண்முன்னே அவர்களின் வாழ்க்கையை கொட்டித் தீர்க்கின்றன. இரண்டாம் பாகத்தில் வார்த்தைகள் எல்லாம் வலியைச் சுமந்து நகர்கின்றன. இவ்வளவு வலி நிறைந்த எழுத்தை ஒரு மனிதன் எழுத வேண்டும் என்றால் அவன் மனசுக்குள் எத்தனை வலி இருந்திருக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். பாலமுருகன் வாழ்த்தப்பட வேண்டியவர் அல்ல... இன்னும் வாழ்ந்து நிறைய வெளிக் கொணர வேண்டியவர்.

எவனோ ஒருவன் சந்தனமரம் கடத்தினான் என்பதற்காக கர்ப்பவதிகள் மட்டுமின்றி தான் காணும் பெண்கள் எல்லாருமே அவனுக்கு முந்தி விரித்தவர்கள் என்று சொல்லும் வனத்துறை போலீசார் ஒருவனுக்குக் கூட தன் வீட்டில் அம்மாவாக, அக்காவாக, தங்ககையாக, மனைவியாக, மகளாக ஒரு பெண் இருக்கிறாள் என்று தோன்றவே இல்லையே...  காமம் எல்லாவற்றையும் காவு வாங்கி விடுகிறது.

அப்படியென்ன இவர்களுக்கு அந்த பெண்கள் மீது அத்தனை கோபம்..? 

வன்கொடுமை செய்யும் அளவுக்கு அவர்கள் அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்கள்..? 

யோசித்துப் பார்த்தால் மலைஜாதிப் பெண்களாய் அந்த வனத்தில் பிறந்ததுதான் தவறு என்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவேயில்லை.

வனம் கொடுத்த அழகிய வனப்புக்கூட அவர்கள் மீது இவர்கள் மோகம் கொள்ளக் காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றினாலும் கெஞ்சிக் கூத்தாடும் பெண்களை இவர்களால் எப்படிச் இவ்வளவு கொடூரமாக, கேவலமாகச் சூறையாட முடிந்தது..? 

தேடுகிறேன் பேர்வழி என சாமியாய் மதிக்கும் பெண்களை  அழித்து ஒழிக்கத்தானே செய்திருக்கிறார்கள். சின்னப்பெண், கர்ப்பிணி, உடல்நலம் பாதிக்கப்பட்டவள் என எல்லாரையும் அல்லவா துவம்சம் செய்திருக்கிறார்கள். 

இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்..? 

இதை அரசும் மற்ற அதிகாரிகளும் கண்டு கொள்ளாமலே இருந்திருக்கிறார்களே... அதற்குக் காரணம் என்ன..?

கேள்விகளை அடுக்கினால் பதிலாய் வருவது ஒன்றுதான்... ஆம் மேலிருப்பவர்களுக்கு அவ்வப்போது எலும்புத்துண்டுகளோ விசாரணை என்ற பெயரில் அள்ளிக் கொண்டு வரப்பட்ட ஏதோ ஒரு அபலைப் பெண்ணோ அல்லது சந்தனமரமோ வீசப்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

வனத்துறைக்கு தொட்டியிலுள்ள ஆண்கள் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை உதவியாய் நின்ற போதும் ஏன் இந்தப் பெண்களை இத்தனை துன்புறுத்தியிருக்கிறார்கள்... வெளி உலகு அறியாது என்பதை உணர்ந்தே செய்திருக்கிறார்கள். காமம் என்பது அடக்க முடியாத ஒன்றாய் இவர்களுக்கு... பின் இவர்களுக்கும் விலங்குகளுக்கும் என்ன வித்தியாசம் இருந்து விடப் போகிறது..? இவர்கள் விலங்குகளுக்குக் கீழே. 

சின்னப்பெண்ணை உடைகளை எல்லாம் அகற்றி எல்லார் முன்பும் அம்மணமாக நிற்க வைத்து அதை எல்லா ஆண்களும் பார்க்க வேண்டும் எனச் சொல்லிப் பார்க்காதவர்களை அடித்துத் துன்புறுத்தும் அளவுக்கு அந்தப் பெண்கள் மீது அப்படி என்ன வன்மம்...? கர்ப்பிணி என்று சொல்லும் பெண்ணைக் கதறக்கதறக் கற்பழிக்கும் அளவுக்கு அப்படி என்ன காமவெறி..? இதையெல்லாம் யோசித்தால் கிடைக்கும் விடை... இவர்கள் பெண் உடல் தின்னிகளாய்... காமக் கழுகுகளாய் மட்டுமே இருந்திருக்கிறார்கள் என்பதே. 

காவல்துறை உங்கள் நண்பன் என்ற வார்த்தை நம்ம ஊரில் எல்லாம் சொல்லளவுக்குத்தான்.... சின்னப் பிரச்சினை என்று போனாலும் நம்மை அவர்கள் படுத்தும்பாடு நாம் அறிவோம்... அப்படிப்பட்ட காவல்துறையின் வனக்காவலர்கள் சூதுவாது தெரியாத, எல்லாவற்றும் பயப்படும், வனத்தைத் தெய்வமாக வணங்கும் மக்கள் தங்கள் எதிரே நிற்கும் போது என்ன பாடு படுத்தியிருப்பார்கள்... அதைத்தான் செய்திருக்கிறார்கள் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி. 

மலைஜாதி ஆண்களைச் சுட்டுக் கொன்றும் பெண்களை கற்பழித்தும் வீரப்பன் வேட்டையை வீரமாய் நடத்தியிருக்கிறார்கள். வேட்டையில் வீழ்ந்தது அப்பாவிகள் மட்டுமே... பத்திரிக்கைகளும் அரசும் மார்தட்டிக் கொண்டிருந்திருக்கிறது வீரப்பன் வேட்டை என... மூன்று தலைமுறைகளைக் கண்ட சோளகர் தொட்டி சொல்லியிருக்கும்படி பார்த்தால் போலீஸ் வீரப்பனை ஒருபோதும் நெருங்கவில்லை... அப்பாவிகளையே வீரப்பனின் கூட்டாளிகள் என கொன்று குவித்திருக்கிறது என்பதே உண்மை. நாவலும் வீரப்பன் பின்னே பயணிக்கவில்லை... இரண்டு இடங்களில் கடந்து போகிறார் அவ்வளவே.

சோளகர் ஆண்கள் குழந்தைகளின் பசி போக்க வனத்துக்குள் சுற்றித் திரிந்து தலை கீழாக பாறைகளில் தொங்கித் தேனெடுத்து வரும்போது, ஐயா தேன் கேட்டார் எனப் பறித்துச் செல்லும் காவலர்களை என்ன சொல்லித் திட்டுவது..? இன்னும் தேனெடுக்க வேண்டுமென சாப்பாடு தண்ணியில்லாமல் இரண்டு மூன்று நாட்கள் காட்டில் அலைய விடுவதும் போனவர்களைக் காணாமே எனப் பெண்களும் முதியவர்களும் சிறுவர்களும் சாப்பாடின்றி கண்ணீரோடு காத்துக்கிடக்கும் போது எத்தனை வலிகளைச் சுமந்திருப்பார்கள். இவை எல்லாவற்றிற்கும் காரணம் மக்களின் நண்பன் எனச் சொல்லும் காவல்துறை என்னும் போது வரும் கோபத்துக்கு அணை இட முடியவில்லை.

சிவண்ணாதான் கதையின் நாயகனைப் போல என்றாலும் அந்த மலைஜாதி பழங்குடி இன ஆண்கள் எல்லாமே நாயகர்கள்தான்... எத்தனை எத்தனை வலிகளைச் சுமக்கிறார்கள்...? தன் மக்கள் முன் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்காது உயிரிழந்தவர்களும் உண்டு... அதைத் தாங்கிக் கொண்டு வைராக்கியமாய் என் இனத்தானைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என வாழ்ந்தவர்களும் உண்டு. அப்படித்தான் சாகிறான் சிக்குமாதா... வாழ்கிறான் தள்ளாத வயதிலும் கொத்தல்லி.

வனத்துறைக்கு தீக்கங்காணியாய் வேலை பார்த்து பின்னொரு நாளில் அவர்களிடமே மாட்டி அடிபட்டு மிதிபட்டு அங்கிருந்து தப்பிக்கும் சிவண்ணா, போலீசில் மாட்டாதிருக்க வீரப்பனுடன் இணைந்து பின் அங்கிருந்தும் விலகி, மனைவிக்காக இங்கெல்லாம் சரணடைந்தால் கொன்று விடுவார்கள் என நினைத்து மேட்டுப்பாளையத்தில் போய்ச் சரணடைகிறான். 

ஒன்றுமே செய்யாமல் அடி உதை படுவதுடன் உயிர்ப் பயத்துடனும் அவர்களை ஓட வைத்திருக்கிறார்கள் தங்களிடம் அதிகாரம் இருக்கு என ஆட்டம் போட்ட வனத்துறை காவலர்கள். இவர்கள் அடித்ததில் சீழ் வைத்துச் செத்தவர்கள் அதிகம்... அதில் ஒருவன் பேதன்.

சொல்லி முடித்து விட முடியாத எத்தனையோ கொடுமைகள்... குடும்பம் துறந்து ஆண் ஓடிக்கொண்டிருக்க, அவனுக்காக அந்தக் குடும்பத்துப் பெண்கள் அடிபட்டு, மிதிபட்டு, சித்திரவதை அனுபவித்து அந்த மிருகங்களின் காமப்பசிக்கும் தங்களையும் இழக்க நேரிடுகிறது. 

ஒரு பெண்ணை ஒரே இரவில் எத்தனை மிருகங்கள் குதறுகின்றன... போலீஸ் ஜீப்பில் போகும்போதே மார்பைப் பிடித்து இழுத்தலும் திருகுதலும் என என்னென்ன செய்யச் சொல்கிறது அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தனமான காமம்... வாசிக்கும்போது குலை நடுங்குகிறது நமக்கு...

அப்பனை மகனும் மகனை அப்பனும் மாறி மாறி அடிக்க வேண்டும் என்றும் அடி மெல்ல விழுந்தால் உன்னை நான் அடிப்பேன் என்றும் மனிதாபிமானமே இல்லாமல் சொல்வதும், அப்பனும் மகனும் செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்வதும், அடிப்பட்டவன் வேதனையில் மலங்கழித்த போது அந்த மலத்தையே திங்கச் சொல்வதும்... தண்ணீர் வேண்டும் என்றதும் அடிபட்டு உடம்பிலிருந்து சீழ் வடிபவனைக் கொண்டு வரச்சொல்லி அதைக் குடிக்கச் சொல்வதும் விவரிக்க முடியாத கொடுமைகள்... அனுபவித்தவர்களுக்கே அந்த வலியின் வலி தெரியும்.  

அடிபடும் போதும்... மிதிபடும் போதும்... மின்சாரத்தில் துடிக்கும் போதும்... மிருகங்களின் வெறியின் போதும்... 'மாதேஸ்வரா நீயிருந்தாக் கேளு...', மணிராசா நீயிருந்தாக் கேளு...'  என அவர்கள் மனசுக்குள் எத்தனை முறை கதறியிருப்பார்கள்... மாதேஸ்வரனோ மணிராசனோ கேட்டார்களோ... இல்லையோ... தெரியாது. அந்தக் காமவெறி பிடித்த மிருகங்கள் இன்னும் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றனவா என்பதும் தெரியாது... ஆனால் கதறியவர்களில் பலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் காலம் கொடுத்த வலியை மறந்து மகிழ்வோடு.

தன் நிலத்தை ஆட்பலம் பொருந்திய ஒருவன் அபகரித்தால் அதை எதிர்த்து நிற்பவனைக் கொண்டு போய் காவல் நிலையத்தில் வைத்து அடித்து அனுப்பி, அடிபட்ட இடத்தில் புண்ணாகி, சீழ் வைத்து, அதில் புழுவும் வைத்துச் சாகிறான்... இல்லையில்லை வனத்துறை போலீஸாரால் திட்டமிட்டே கொல்லப்படுகிறான்.

அவன் கேட்டது பரம்பரையாக தான் பாவித்த நிலத்தை வேறொருவன் எடுப்பது நியாயமா என்ற நியாயமான கேள்விதானே.... அதில் என்ன தவறு..? இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இங்கு வேறு வேறு சட்டதிட்டங்கள்... அதைச் செயலாற்றுவதில் எப்பவுமே காவல்துறை நம் நண்பன்தான்... ஆம் பணமும் அதிகாரமும் இருந்தால் நம் முன்னே வாலாட்டும் நண்பன் காவல்துறை.

அம்மணமாக்கி கரண்ட் வைப்பது ஒரு தண்டனை என்றால் விரல்களை ஒவ்வொன்றாய் கட்டையால் அடித்து நகத்தைப் பிடுங்குதலும்...  கட்டை விரலை மடக்கி இழுத்து மணிக்கட்டில் கட்டி வைத்து சில நாளில் அதை அவிழ்க்கும் போது கட்டை விரல் வளைந்து மணிக்கட்டைத் தொட்டுக்கொண்டு நிற்க, இனி துப்பாக்கி ட்ரிக்கரை இழுடா என எக்காளமிடுவதும்... என்ன வகையான மனநிலை... 

இத்தனை குரூரம் இவர்களுக்குள் எப்படிப் புகுந்தது..? 

இந்த மனநிலை தமிழக, கர்நாடக காவல்துறைக்குப் பொதுவாய் அமைந்தது எப்படி..? அந்த உடைக்குள் மனித மனமும் உணர்ச்சியும் சமாதி ஆகிவிடுமோ..?

இவர்கள் எல்லாருமே இதே மனநிலையில்தான் வீட்டிலும் வளர்ந்தார்களா..? 

மனிதாபிமானமே இல்லாமலா வளர்க்கப்பட்டார்கள்..?

மழை வேண்டி பெண்கள் எல்லாரும் காட்டுக் கோவிலில் நிர்வாண பூஜை செய்யும் போது தன் உறவுப் பெண் முன், சகோதரி முன், மகள் முன் அப்படி நிற்பதற்கு யாரும் வருந்தவில்லை... வெட்கப்படவில்லை... அது அவர்களின் பூஜை... வெடித்துக் காய்ந்து கிடக்கும் பூமி தண்ணீரைப் பார்க்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாய்... நிர்வாணம் என்பது அங்கு யாருக்குமே உறுத்தலாய் இல்லை... 

அதே பெண் கண்ட கண்ட மிருகங்களும் தன்னை வேட்டையாடும் போது தன்னைப் பிணம் என்பதுடன் தான் வணங்கும் தெய்த்தையும் நீயும் பிணம்தான்டா என்று சொல்கிறாள் என்றால் தன்னை நிர்வாணமாக்கி குதறியெடுத்ததில் எத்தனை வேதனைப்பட்டிருப்பாள்..? அந்த நிர்வாணத்தின் வலியை அவள் எந்தளவுக்கு உணர்ந்திருப்பாள்..? கண் முன்னே மகளை நாலைந்து பேர் மாறி மாறி என்னும் போது எத்தனை வலிகளைச் சுமந்திருப்பாள்..?

வலி... வலி... வலி...

வேதனை... வேதனை... வேதனை...

கொடுமை... கொடுமை... கொடுமை...

இந்த வார்த்தைகளைத் தவிர்த்துப் பயணிக்க கதையில் வேறெதுவும் இல்லையா என்றால் நிறையவே இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆம் அந்த மக்களின் பழக்க வழக்கங்கள் ஆட்டம் பாட்டம் எல்லாவற்றையும் கதையினூடே சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். தொட்டி என்பது பொதுவாய்... அதில் வாழும் கதை மாந்தர்கள் அந்த வனப்பகுதியில் வெவ்வேறு ஊரில் இருந்த மக்கள்... ஆசிரியர் தன் கதைக்காக எல்லாரையும் ஓரிடத்தில் உலாவ விட்டிருக்கிறார்.

குறிப்பாக அவர்களின் ஆட்டம் பாட்டமெல்லாம் வீரப்பனைத் தேடி தமிழக, கர்நாடக காவல்துறை அந்த வனப்பகுதிக்குள் வரும்வரைதான்... அதன் பின் அந்த மக்களுக்கு ஆடிப்பாட நேரமில்லை... அடிபடத்தான் நேரமிருக்கிறது. ஆடிப்பாடும் போதெல்லாம் மலைஜாதிப் பாடலும் ஆடலுமாய் இரவெல்லாம் எவ்வளவு கூதூகலமாய் இருக்கிறார்கள். பீனாச்சியின் இசைக்கு ஆடுவதில் அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு...

தன் கணவன் இறந்த பின் கொழுந்தனைக் கட்டிக் கொள்ள நினைப்பதை நேரில் பெரியவர்களிடம் சொல்வதும்... அதற்கென சில முறைகள் வைத்திருப்பதும்.. அதை இரண்டு குடும்பமுமு ஏற்று மணமுடித்து வைப்பதும் அங்கே நிகழ்கிறது. 

விரும்பினால் கட்டிய கணவனை விடுத்து அவனுக்கு ஈடாக ராகியோ பணமோ கொடுத்து மனசுக்குப் பிடித்தவனுடன் சேர்ந்து வாழலாம் என்பதை மாதியின் வாழ்க்கை சொல்கிறது. 

வருடம் ஒருமுறை இறந்தவர்களுக்குப் படைத்து அவர்களை கோல்காரன் உடம்பில் அழைத்து குறி கேட்டுக் கொள்கிறார்கள். அப்படிக் கேட்கும் குறி மீது அவர்களுக்குத் தீவிர நம்பிக்கை இருக்கிறது.

வேட்டையாடி அதை எல்லாரும் பங்கு வைத்துச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.

கற்பு சூறையாடப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவள் உறவுக்கு மறுக்கும் போதெல்லாம் வருந்தி பெண்ணைப் பெற்றவளிடமே விபரத்தைச் சொல்லும் மாப்பிள்ளையும் மகளுக்குப் புத்தி சொல்லும் அம்மாவும் அங்கும் இருக்கிறார்கள். 

ஓடிப்போன தன் மகள் உயர்ந்த சாதியில் இல்லை என்னும் போது அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைக்கச் செய்யும் அம்மாவும் மகனும் அங்கியிருக்கிறார்கள். 

இரவில் யாருக்கும் தெரியாமல் தைரியமாய் காட்டுக்குள் ஒளிந்திருப்பவனைப் பார்க்கச் செல்கிறார்கள். சாப்பாடும் கொடுக்கிறார்கள்.

ராகியைப் பாதுகாத்து வைக்க, அவர்கள் பூமியில் தோண்டி அறை அமைப்பதை விலாவாரியாக எழுதியிருக்கிறார். வித்தியாசமாய் இருக்கிறது... கிணறு போல் வெட்டி, மண்ணால் அணைத்து, மெழுகி... அதை வாசிக்கும் போது சமீபத்தில் ஒரு சிறுவன் மண்ணுக்குள் நீச்சல் குளம் அமைத்த வீடியோ பார்த்தது நினைவில் வந்தது.

தொட்டிப் பெண்கள் மட்டுமின்றி அந்தப் பகுதி மலைஜாதிப் பெண்கள் எல்லாம் காட்டுக்குள் பயமின்றிப் பயணிப்பார்கள் என்பதையும் தானே குழந்தையைப் பெற்றுத் தூக்கிக் கொண்டு வருவார்கள் என்பதையும் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார். கெப்பம்மா கோவிலுக்கு ரதியுடன் செல்வதைப் படித்தும் அவர்களின் வீரத்தை அறிய முடிகிறது. 

அப்பெண்கள் வீரம் மிகுந்தவர்கள் என்றபோதிலும் அவர்களைக் கேவலம் தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ள படாதபாடு படுத்தியிருக்கிறது வனத்துறை... அவர்களும் வீரமெல்லாம் துறந்து வீழ்ந்து கிடந்திருக்கிறார்கள். எதிர்த்து நின்றிருந்தால் உயிருடன் விட்டிருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்தே எதிர்க்காமல் வீழ்ந்திருக்கிறார்கள். இல்லையேல் அவர்களுக்கும் அளவெடுத்துச் சட்டை தைத்து வீரப்பன் கூட்டத்தில் பெண்களும் இருக்கிறார்கள்... எங்களை எதிர்த்து நின்னார்கள் எனச் சுட்டு வீழ்த்தி பத்திரிக்கைச் செய்தி ஆக்கியிருப்பார்கள்.

காட்டுக்குள் கஞ்சாவைப் பறித்துக் காய வைத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 'சிவ... சிவ...' என்று சொல்லிக் கொண்டு இழுத்து மகிழ்கிறார்கள்... இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள்... பெண்களும் சுருட்டை ஆண்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்... கஞ்சாவும் கூட சில நேரங்களில் இழுக்கிறார்கள். 

ஒருவனின் வேலைக்கு மற்றவர்கள் உதவியாய் இருக்கிறார்கள்.

இப்படி அவர்களும் மகிழ்வாய்த்தான் வாழ்ந்திருக்கிறார்கள் அதிரடிப்படை உள் நுழையும் வரை... அதையெல்லாம் அப்படியே பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர்.


கல்லூரியில் படிக்கும், சோபா, ரேவதி, சுந்தரி மற்றும் வெண்ணிலா உடன் சோளகர் தொட்டியின் முதல் பட்டாதாரி மீனா (துப்பட்டாவை துண்டாக்கியிருப்பவர்)

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கரடியை அடித்துக் கொல்லும் சூழல்தான் அம்மக்களின் வேதனையான வலி நிறைந்த நாட்களுக்கு மூலகாரணமாக அமைகிறது.... கூடவே மானும்.... 

மானைக் கொன்றவன் பணம் படைத்தவனென்றால் அரசும் அதிகாரமும் அவனுக்குச் சாமரம் வீசும்... அதே ஏழை என்னும் போது எட்டி உதைத்துச் சந்தோஷப்படும். இங்கே மானைக் கொன்று தின்றவன் மனிதர்களையும் கொன்று விட்டு மகிழ்வோடுதான் கோடிகளில் புரண்டான்... பசிக்காக மானைத் அடித்துத் தின்றவன் மூத்தரத்துக்குள் முக்கியெடுத்து அடித்துத் துவைக்கப்பட்டான்... இதுதான் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமான நாட்டின் உண்மை நிலை... காவல்துறை நம் நண்பன் எனச் சொல்லிக் கொள்வோம் சோளகர் தொட்டிப் பெண்களுக்குக் கேட்காத வகையில்.

இந்த நாவல் என்னைப் படாதபாடுபடுத்துகிறது... நல்வாழ்க்கை மலருமென விவசாயம் செய்து ராகிப் பயிரின் பசுமையைப் பார்த்து பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்து மாற நினைக்கும் மாதியைப் போல் நானும் மாறத்தான் நினைக்கிறேன்... முடியவில்லை.

அதனால்தான் உடனே தென்பாண்டிச் சிங்கத்துக்குள் புதைந்தேன்... அங்கும் சிவண்ணாவும் மாதியும் சித்தியுமே என் முன்னே நின்றார்கள்.

மீண்டு வரமுடியாத வலிகளைச் சுமந்து மீள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்...

சோளகர் தொட்டி நம் கண்முன்னே நிகழ்ந்த ஓலத்தின் ஒளிவு மறைவில்லாத வரலாறு... வரலாறை எழுதுகிறேன் எனச் சொல்பவர்கள் வரலாறுகளைச் சிதைத்து உங்கள் கதைகளை வரலாறு ஆக்காதீர்கள். வலி நிறைந்த வாழ்க்கையோ, வளம் நிறைந்த வாழ்க்கையோ அது அப்படியே பதியப்படட்டும் வரும் சந்ததிக்காக.

சோளகர் தொட்டி எப்போதும் மறக்கமுடியாத நாவலாய் எனக்குள்...

முதல் பாகம், இரண்டாம் பாகம் என இரு பிரிவுகளை கொண்ட இந்த நாவலின் முதல்பாதி அம்மக்களின் வாழ்க்கை முறையையும்... கலாசாரத்தையும்... அவர்களின் வழிவழியான நம்பிக்கைகளையும்... வனத்தின் மீதான காதலையும்... வணங்கும் கடவுள்களையும்... தங்களுக்காகவே படைக்கப்பட்டதே இவ் வனம் என்ற எண்ணத்தையும் கிராமப்புற நிர்வாகத்தையும் அதன்  கட்டமைப்பையும்... விதவை திருமணத்தையும்... திருமண பந்தம் தாண்டிய அவர்களின் உறவுகளையும், அதன் மீதான அம்மக்களின் பார்வைகளையும், அவர்களுக்கு எதிராகப் பின்னப்படும் சூழ்ச்சியையும்... துரோகத்தையும்....ஆதிக்க சக்திகளின் ஆட்டத்தையும்...கண நேரமும் புகையும் கஞ்சாவையும் பற்றிய மிக நேர்த்தியாகவும் இயல்பாகவும் வாசிப்பவர்கள் நெஞ்சில் பதிய வைக்கிறது.

இரண்டாம் பாதி ஆரம்பம் முதலே சோகத்தை மனதுக்குள் மெல்ல மெல்ல நுழைக்க ஆரம்பித்து பெரும் வலியை இறக்கி வைக்கிறது. வீரப்பன் வேட்டை என அதிரடிப்படை செய்யும் அனைத்தும் இந்த மக்களையும் அவர்களின் வெள்ளந்தியான வாழ்வினையும் எப்படி சிதைகிறது என்பதை எதிர்த்துக் கேட்க மக்களோ அரசாங்கமோ இல்லாத நாதியற்ற அவர்கள் மீது காட்டப்படும் வன்மமும் ஆதிக்கமும் நிறையவே யோசிக்க வைக்கிறது. வதை முகாம்களில் சிக்கிக் கொள்ளும் மனித உடல்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும் வக்கிரங்களும் அப்படியே காட்சிப்படுத்தப்பட்டு அதன் மூலம் தனிமனித உரிமை எப்படி மீறபடுகிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது பெரும்வலியோடு.

அம் மக்களின் வாழ்க்கை குறித்த மிக நுணுக்கமான ஒரு களப்பணியை பாலமுருகன் செய்திருக்கிறார். இது மிகப்பெரிய விஷயம்... இத்தனை தூரம் களப்பணியோடு அர்ப்பணிப்போடு இனி ஒரு நாவல் உருவாகுமா என்பதே கேள்விக்குறிதான்.

நாவல் வெளிவந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு (ஜூன் - 2018) அந்த மக்களை மீண்டும் சந்தித்தபோது தொட்டி எத்தனை மாற்றங்களை... எத்தனை இழப்புக்களைச் சந்திருக்கிறது என்பதை விகடன் தடம் இதழ் பதிவு செய்திருக்கிறது... வாசியுங்கள் மிகவும் ரசிப்பீர்கள்.


முடிந்தால் வல்லினம் பகிர்ந்திருக்கும் 2011-ல் நவீன் தன் வலைப்பூவில் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையையும் வாசியுங்கள்.


அப்படியே சவுக்கு 2018-ல் பகிர்ந்திருக்கும் இந்தக் கட்டுரையையும் வாசியுங்கள்...

எனது தேடுதல் இன்னும் தொடரும்... விரிவான விபரங்களுடன் நீண்டதொரு கட்டுரை எழுத வேண்டும்... 
-'பரிவை' சே.குமார்.

4 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒவ்வொரு வரிகளிலும் மனதில் உண்டான வலி புரிகிறது...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனதில் ரணம் குமார். பதிவு படிக்கும் போதே வலி என்றால் நூல் படித்தால் எவ்வளவு கடினமாக இருக்கும் என்று புரிகிறது. படிக்கும் மனோதிடம் இல்லை.

Ramesh DGI சொன்னது…

I would highly appreciate if you could guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News

கோமதி அரசு சொன்னது…

பதிவு படித்து மனம் நடுங்குது.