மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

உன் பேரைச் சொல்லும் போதே...


'மாப்ள அவ உன்னோட நெருங்கிப் பழகுறா... உங்கிட்ட ஒருநாள் கூட பேசாம இருந்ததில்லை... எனக்கென்னவோ அவ உன்னை விரும்புறான்னு நினைக்கிறேன்... பேசாம நாளைக்கு காதலர் தினத்துல புரப்போஸ் பண்ணிப் பாருடா' என்று நண்பன் ஜவகர் சொன்னதை மீண்டும் மீண்டும் நினைவில் ஓடவிட்டபடி 'உன் பேரைச் சொல்லும் போதே...' பாடலை ரசித்துக் கொண்டிருந்தான் சுபாஷ்.

சுபாஷூம் ஜவகரும் ஒரே வீதிதான்... இருவரின் வீட்டுக்கும் இடையில் மூன்று வீடுகள்தான்... முதல் வகுப்பில் இருந்து இருவரும் சேர்ந்தே படிக்கிறார்கள். எட்டாவது வரை அன்னாசி அரசு நடுநிலைப்பள்ளியில் படித்தவர்கள். பின்னர் ஒன்பதாம் வகுப்பில் அந்தோணி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்கள். இப்ப இருவரும் பனிரெண்டாம் வகுப்பு... இரண்டுமே இருபாலர் பள்ளிதான். ஜவகர் எப்போதும் இவர்கள் வீட்டில்தான் கிடப்பான். இன்று பள்ளியில் இருந்து வரும்போதுதான் இப்படி ஒரு சின்ன நெருப்பை பற்ற வைத்துவிட்டுச் சென்றான். அது சுபாஷூக்குள் பிடித்து எரிய, கணிப்பொறி திரையில் அஞ்சலி மீண்டும் மீண்டும் 'உன் பேரைச் சொல்லும் போதே'க்கு ஆடிக் கொண்டிருந்தாள்.

'இவன் சொல்றான்னு இறங்கலாமா..?' என்று யோசித்தான். அதற்கும் காரணம் இருக்கு... இவனுக எட்டாம் வகுப்பில் படிக்கும் போது கூடப் படித்த சுவாதி, அதுவும் இவனுக வீதியிலதான் இருந்தது. அதனால் இவனுககிட்ட நல்லாப் பேசும். 'டேய்... இன்னைக்கு எங்கப்பா கடலை மிட்டாய் வாங்கியாந்தாருடா... இந்தாங்கடா'ன்னு இவனுகளுக்கு கொடுக்கும். எதாயிருந்தாலும் இவனுககிட்ட சொல்லும். நாளைக்கு படத்துக்குப் போறோம்ன்னு இன்னைக்கே சொல்லிச் செல்லும். அது எந்தப் படத்துக்குப் போகுதுன்னு பார்த்து இவனுகளும் அங்க போயிருவானுங்க... அதுக்கும் சந்தோஷமா இருக்கும். இடைவேளையில தின்னுறதுக்கு வாங்கும் போது அம்மாக்கிட்ட சொல்லி இவனுகளுக்கும் பாப்கார்ன் வாங்கிக் கொடுக்கும். இதெல்லாம் இவனுக மண்டைக்குள்ள வேற மாதிரி சுத்த ஆரம்பிச்சிருச்சு... எல்லாம் சினிமாவும் டிவியும் கத்துக் கொடுக்கிறதுதானே... 

'டேய் அந்தப்புள்ள நம்மள விரும்புதுடா... அதுக்கு லவ் லெட்டர் எழுதுவோமுடா'ன்னு ஜவகர் ஏத்திவிட, இவனுகளும் காயே... கனியேன்னு எல்லாம் கிறுக்கி ரெண்டு பேரு பேரையும் எழுதி சுவாதிக்கிட்ட கொடுத்துட்டானுங்க... என்னடான்னு வாங்கிப் பார்த்த புள்ள... காய்.. கனியெல்லாம் படிச்சிட்டு எதுக்கு எழுதியிருக்கானுங்கன்னு யோசிக்க... 'அறியாத மனசு... புரியாத வயசு...' பாட்டு மனசுல வந்து சம்மட்டி அடிக்க 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சிருச்சு. இவனுகளுக்கு என்ன செய்யிறதுன்னு தெரியலை. ஓடிடலாம்ன்னு பார்த்தா கரெக்டா எட்டாப்பு சார் ஏழுமலை அங்க வந்துட்டாரு... எதுக்கு அழுகிறேன்னு கேட்க, அது லெட்டரை அவருக்கிட்ட கொடுத்திருச்சு... வாங்கி வாசிச்சாரு... எழுத்துப் பிழையும் அடித்தலும் திருத்தலுமாய் ஒரு லவ் லெட்டர்... கீழ ரெண்டு பேரு பேரும் வேற.... சொல்லவா வேணும்..?

சுவாதியை நீ போன்னு சொல்லிட்டு ரெண்டு பேரு காதையும் பிடிச்சி கிள்ளியே பொத்தல் போட்டவரு... இந்த வயசுல காதல்... அதுவும் ஒரு புள்ளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து லெட்டர் எழுதுறீங்க... படிங்கடான்னு சொன்னா... இதுதான் பண்ணுறீங்களா... அப்படியே இன்னும் மூணு பேரைச் சேர்த்து அஞ்சு பேரா எழுதியிருந்தா நீங்க பாண்டவர்களாவும் அந்த புள்ள பாஞ்சாலியாவும் ஆக்கியிருக்கலாம்... மூதேவிகளான்னு சொல்லி, அவரோட பேவரேட்டே புளியங்குச்சிதான்... அதால விளாசு விளாசுன்னு விளாசி...அன்னைக்குப் பூராம் முட்டி போட வச்சிட்டாரு... அதுக்கப்புறம் சுவாதி இவனுகளை திரும்பிக்கூட பார்ப்பதில்லை... அப்பா வாங்கியாந்த பலகாரம் எல்லாம் கொடுக்கலை, சினிமாவுக்கு போறதைச் சொல்லலை, பாப்கார்னும் கிடைக்கலை... பத்தாவது முடிச்சதும் அவங்க அப்பாவுக்கு வேலை மாறிடுச்சுன்னு மதுரைப் பக்கம் போயிருச்சு. அந்த அடியை நினைச்சாலே இன்னும் அவனுக்கு வலிக்கும்... அதுக்கப்புறம் சில அடி வாங்கியிருந்ததாலும் மறுபடியும் அடி வாங்க வச்சிட்டான்னா... அதனால ரொம்ப யோசிச்சான்... எந்த முடிவுக்கும் வர முடியாம திணறினான்.

கணிப்பொறி திரையில் அஞ்சலி மீண்டும் மீண்டும் ஆடினாள். "என்னடா லவ்வு கிவ்வு வந்திருச்சா... இந்தப்பாட்டே இருபது தடவைக்கும் மேல ஓடுது..." அவன் பின்னே வந்து மெல்லக் கேட்டாள் கல்லூரியில் படிக்கும் அக்கா புவனா.

"ஆமா அஞ்சலியைக் காதலிக்கிறேன்... நீ யாரை சூர்யாவையா..?" என்று கேட்டதும் "ஆளைப்பாரு... படிக்கிறது பிளஸ்டூ... அதுக்குள்ள லவ்வைப் பத்திப் பேசுது... இதெல்லாம் உருப்பட..." என திட்டியவள் தான் கேட்டதால்தானே அவன் பேசினான் என்பதை மறந்து "அம்மா... உம்மகன் அஞ்சலியை லவ் பண்றானாம்... அவ இப்ப ஆந்திராப் பக்கம் பொயிட்டா... நீ அங்க போயி பேசி முடிச்சிட்டு வா" என்று கத்தினாள்.

"ஆமாம்மா... அப்படியே சென்னையில இறங்கி சூர்யா வீட்டுக்குப் போயி ஜோதிகாவை டைவர்ஸ் பண்ணச் சொல்லு... நம்ம வீட்டு அனார்கலி சூர்யாவை லவ் பண்றாளாம்" இவனும் பதிலுக்கு கத்தினான்.

"மூதேவிகளா... படிக்கிறதை விட்டுட்டு லவ்வு கிவ்வுன்னு பேசிக்கிட்டா இருக்கீக... வந்தேன்னா வெளக்குமாத்துக் கட்டை பிஞ்சு போயிரும்..." என அம்மா அடுப்படியில் இருந்து கத்த, புவனா அவனுக்கு பழிப்புக்காட்டி விட்டு அங்கிருந்து அகன்றாள்.

'ஜவகர் சொன்னது மாதிரி அவ என்னைத்தான் விரும்புறாளா..? சொன்னா ஏத்துப்பாளா...? இல்ல ஊரைக் கூட்டி பிரச்சினை ஆக்கிடுவாளா...?' என்று யோசித்துக் கொண்டிருந்தான். 'புரப்போஸ் பண்ணலாம்... ஒகேன்னா ஓகே... இல்லேன்னா பிரண்டா இருந்துப்போம்...' என்று நினைத்தான். இப்படித்தான் ஒன்பதாவதில் உமாக்கிட்ட காதலிக்கிறேன்னு சொல்லி, அவ போடான்னு மறுக்க ஓகே நாம பிரண்ட்ஸ் அப்படின்னு சொன்னான். பத்தாவதில் பானுக்கிட்ட சொல்லி அவ கொடுத்த அறைக்கு அப்புறமும் அவளோட பிரண்டா இருக்கிறான். பதினோராவதுல ஜெனிபர்கிட்ட சொல்ல, அவ அண்ணன் வந்து உதைச்சிட்டுப் போனான். இவன் மட்டும்தான் உதை வாங்குவான்னு இல்லை... எல்லா உதையிலயும் ஜவகருக்கும் பங்கு இருக்கும். அதனால கூட அவன் இவனை மாட்டிவிடப் பார்க்கலாமேன்னும் யோசிச்சான். 'சேச்சே... அவன் என்னோட நண்பேன்டா...' அப்படின்னு மனசைத் தேத்திக்கிட்டு பேப்பரை எடுத்தான். கணிப்பொறி திரையில் அஞ்சலி ஆடிக் கொண்டிருந்தாள். இவன் 'அன்பே அஞ்சலி' அப்படின்னு ஆரம்பித்தான்.

றுநாள் காலை...

"ஹாய்... நான் உன்னைப் பார்க்கணுமே..?" என அஞ்சலிக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினான். 'இன்னைக்கா?' என உடனடியாக பதில் செய்தி வந்தது. அப்போது அவனின் அப்பா பார்த்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியில் 'இன்று காதலர்கள் கோவிலுக்கு வந்தால் பிடித்து தாலி கட்டி வைப்போம்' என ஒரு அமைப்பு சொன்னதாகச் சொல்லவும் 'இவனுகளுக்கு வேற வேலை இல்லை' என்றார் அப்பா.

'ஆமா... எவனோட பிள்ளைகளுக்கோ இவனுக கல்யாணம் பண்ணி வைப்பானுங்களாம்... இதே இவனுக பிள்ளைகளா இருந்து மாட்டினா... வீட்டுக்கு இழுத்துக்கிட்டு பொயிட்டு அது கூட வந்ததை அடிச்சித் தூக்கி தண்டவாளத்துல போட்டுருவானுங்க... ஏன் அதுகளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதானே...' என்று முணங்கியபடி "ஆமா... முக்கியமாப் பேசணும்..." என அஞ்சலிக்கு செய்தி அனுப்பினான்.

"என்ன அப்படி முக்கியம்..? சும்மா சொல்லேன்..." இது அஞ்சலி.

"நேர்ல பேசணும்..." 

"அப்படியா... ஈவ்னிங் பார்க்கலாமா..? இன்னைக்கு லவ்வர்ஸ் டே..." அங்கிட்டு இருந்து பதில் வர, 'அதுக்குத்தானேடி பேசணுங்கிறேன்'னு முணங்கியபடி "அதுதான் நான் இன்னைக்கு பேசணுங்கிறேன்..." என டைப்பினான்.

"நாங்கூட இன்னைக்குத்தான் எனக்குப் பிடித்தவர்கிட்ட புரபோஸ் பண்ணப் போறேன்... காலையில அவரை பூங்காவுல பாக்குறதா ராத்திரி அவருக்கு செய்தி அனுப்பினேன்... ஓகேன்னு சொல்லியிருக்கார்... சக்சஸ் ஆகும்ன்னு நினைக்கிறேன்... நீயும் என்னோட பிரண்ட்தானே... என்னோட காதல் சக்ஸஸாகனும்ன்னு வேண்டிக்கடா... ப்ளீஸ்... ஆள் யார்ங்கிறது இப்போதைக்கு சஸ்பென்ஸ்... ஒகே ஆனதும் உங்கிட்டதான் முதல்ல சொல்லுவேன்..."

அந்தச் செய்தி பார்த்ததும் அவனுக்கு இடி விழுந்தது போல் ஆனது... 'எவன்டா அவன்... நம்ம லைன்ல கிராஸ் ஆனது... நானும் ஜவகரும்தான் இவகிட்ட பிரியாப் பேசுவோம். மாப்ளயா இருந்தா இந்நேரம் போன் பண்ணியிருப்பானே... நாங்க இல்லாம இடையில வந்த அவன் யாரா இருப்பான்... ம்.... எப்படியோ நமக்கு அஞ்சாவதும் போச்சு... இனி காதலும் வேண்டாம்... கத்திரிக்காயும் வேண்டாம்...' என முடிவெடுத்தபடி "ஓகே" என அனுப்பிவிட்டு மொபைலை சுவிட்ஸ் ஆப் பண்ணி வைத்துவிட்டு குளிக்கப் போனான்.

"அம்மா... நான் ஜவகர் வீட்டு வரைக்கும் பொயிட்டு வாறேன்..." என்றான்.

"என்னடா எழுதுன லெட்டரை கிழிச்சிட்டே... புட்டுக்கிச்சா" என்று சிரித்த அக்கா, வேகமாக ஸ்கூட்டியை எடுத்தாள். 'போ உனக்கெல்லாம் எவனோ ஒருத்தன் மாட்டியிருக்கான்... நீங்கள்லாம் இன்னைக்கு லவ்வர்ஸ்டே கொண்டாடுறீங்க... வெட்டிங்க்டே இவன் கூட கொண்டாடுவீங்களான்னு பாப்போம்... அப்ப எந்த இளிச்சவாயன் வந்து மாட்டுறானோ...' என்று மனசுக்குள் திட்டியபடி ஜவகர் வீட்டை அடைந்தான்.

"யாரோ முக்கியமான பிரண்டைப் பார்க்கப் போறேன்னு ஜவா டிப்டாப்பா கிளம்பிப் போயிருக்கான்... உனக்குத் தெரியாதா..? உங்கிட்ட சொல்லாமயா போனான்... உன்னை விட்டுட்டு அவனுக்கு மட்டும் யாரு பிரண்ட்... சரி...உள்ள வா சுபாஷ்" என்றாள் ஜவகரின் தங்கை காவ்யா.

எதுவும் பேசாமல் உள்ளே போய் சோபாவில் அமர்ந்தான். அஞ்சலி சொன்னதும் ஜவகர் போனதும் ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் ஆக, 'அடப்பாவி எங்கிட்ட சொல்லாம மறைச்சிட்டியேடா...' என மனசுக்குள்ளேயே நண்பனைத் திட்டினான். 

"இந்தா காபி... நானே போட்டது... அம்மா, அப்பா அத்தை வீட்டுக்குப் போயிருக்காங்க... இப்ப வந்துருவாங்க... நானே உன்னைப் பாக்க வரணும்ன்னு நினைச்சேன் தெரியுமா..?" என்றபடி "இந்த ஒத்தை ரோஜா எனக்கு நல்லாயிருக்கா?" எனக் கேட்டு வெட்கமாய்ச் சிரித்தவள் ஆரஞ்சுக் கலர் சுடியில் இருந்தாள். தொலைக்காட்சியில் 'உன் பேரைச் சொல்லும் போதே...' பாடல் ஓட, காவ்யா டிவியின் சப்தத்தை அதிகமாக்கினாள். அவனுக்குப் புரிய அவள் கொடுத்த காபி சுவைத்தது.

******
சென்ற ஆண்டு எழுதிய காதலர் தின சிறுகதை அனுராக் வாசிக்க...

-'பரிவை' சே.குமார்.

22 எண்ணங்கள்:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

அடடா..இது என்ன தாவும் காதல்!! :)

ஸ்ரீராம். சொன்னது…

காதலுக்காக இப்படி அலையணுமா என்று தோன்றியது. இப்படித் தேடித் தேடி வருவது காதலா? ஆனால் ஒன்று, பெண் கிடைப்பதே குதிரைக் கொம்பாகி வரும் இந்நாளில் இதுவும் நல்ல ஐடியாதான்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இப்படியும் காதலா
தம+1

ezhil சொன்னது…

ஓ , இப்படித்தான் இருக்கிறதோ இந்த காலத்துக் காதல்கள்....

S.P.SENTHIL KUMAR சொன்னது…

நல்ல காதல்!
த ம 3

J.Jeyaseelan சொன்னது…

காதல் கதைனாலே நல்லாதான் இருக்குல்ல (மை மைண்ட் வாய்ஸ்) .... செம சார்..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹஹஹஹ இதற்குப் பெயர் பச்சோந்திக் காதல்!!!??? காவ்யாவாவது புட்டுக்காம இருந்தா சரி..ஹஹஹ்

துரை செல்வராஜூ சொன்னது…

நல்ல கதை.. பாராட்டுகள்..

KILLERGEE Devakottai சொன்னது…

ரசித்தேன் தெய்வீக காதல் கதையை....

நிஷா சொன்னது…

அடடடா! குமார்! இது தான் காதலா? அட இது மட்டும் தான் பா இந்த உலகத்துக்காதல்! அதிலும் எட்டாம் வகுப்பில் இரண்டு பேர் பேர் போட்டு எழுதிய காதல் கடிதம் தான் சூப்பர் டூப்பர் காதல் கடிதம், எங்கிருந்து தான் இந்த யோசனை வருகின்றது என புரியவே இல்லையே!

கதை படிக்கும் போதே சிரிச்சிட்டு தான் படித்தேன், அத்தனை சுவாரஷ்யமாய் இருந்தது. நல்லா இருக்குப்பா கதை!

UmayalGayathri சொன்னது…

அட இப்படியும் காதலா...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சீலன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.