மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 28 மார்ச், 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 25)

முந்தைய பகுதிகள் :

"இல்ல நீ பாரு நா பாருன்னு நம்மள இங்கயும் அங்கயும் அலைய விட்டுருவானுங்களோன்னு பயமா இருக்குங்க..."

"ஏய்... அதெல்லாம் எதுவும் நடக்காது... சித்ரா பேச்சுத்தான் அப்படி... ஆனா பாசமானபுள்ளதான்... சின்னவன் பொண்டாட்டி நம்ம மேல எம்புட்டு பாசம் வச்சிருக்கு... அப்புறம் என்ன...?"

"அக்கம் பக்கத்துல நடக்குறதைப் பாக்கும்போது..."

"எதையும் பாக்காதே... யோசிக்காதே... எல்லாம் நல்லதே நடக்கும்..." என மனைவியை ஆறுதலாக தடவிக் கொடுத்தார். கண்ணீரைத் துடைத்தபடி அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் காளியம்மாள்.

இனி...

ந்தசாமி மனைவிக்கு ஆறுதல் சொல்ல, காளியம்மாள் முகத்தைத் துடைத்துக் கொண்டு 'இருங்க... காபி போட்டுக்கிட்டு வாறேன்...' என்றபடி எழுந்தாள்.

மனைவிக்கு ஆறுதல் சொன்னாலும் மனசுக்குள் எங்களை மாதிரி எப்பவும் அன்போடு இவனுக இருப்பானுங்களா... இல்லை ஒரு சிலர் மாதிரி அடிச்சிக்கிட்டு நிப்பானுங்களான்னு தெரியலையே.... என்று யோசித்தார். அவர் மனசு ஏனோ நம்ம ஆயுசு வரைக்கும் அவனுக சேர்ந்திருந்தாப் போதும்ன்னு நினைக்கலை... ஆயுசுக்கும் ஒண்ணா இருக்கனும்ன்னு சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டார்.

"என்ன சித்தப்பா... யோசனை பலமா இருக்கு?" டவுனுக்குப் பொயிட்டு வந்த கண்ணதாசன் வண்டியை நிறுத்திக் கேட்டான்.

"வா... கண்ணா... நா எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசிக்கப்போறேன்... எல்லாம் நீங்க நாலு பேரும் கடைசி வரைக்கும் ஒண்ணா இருக்கனுமேன்னுதான் யோசனை..."

"சித்தப்பா... நாங்க உங்க பிள்ளைங்க... எப்பவும் ஒண்ணாத்தான் இருப்போம்... என்ன சின்னத்தா மூக்கைச் சிந்திருச்சாக்கும்... அது முகம் நேத்து சித்ரா பேசினதுல இருந்தே நல்லாயில்ல... விடுங்க சித்தப்பா...குலைக்கிற நாயி கடிக்காதுல்ல... சித்ரா அப்ப அப்ப கூவிட்டு விட்டுடும்... விடுங்க... மலையாளத்தான் கடைப்பக்கம் போனேன் சூடா அப்பம் போட்டிருந்தாரு... இந்தாங்க..." என்று பொட்டலத்தை நீட்டினான்.

"பிள்ளைகளுக்கு வாங்கினியா... இல்லேன்னா இதைக் கொண்டேக்கொடு..."

"இருக்கு சித்தப்பா... சாப்பிடுங்க..."

"சரி கொடுத்துட்டு வா.... உங்க சின்னத்தா காபி போடுறா... "

"இந்தா வாறேன்... சின்னம்மா போடுற காபி வேண்டான்னு சொல்லுவேனா..." என்றபடி வீட்டுக்குள் நுழைந்தான்.

"ஏலா... கண்ணனுக்கும் காபி சேத்துப் போட்டுக்கிட்டு வா..." என்று கத்தினார்.

"அதுதான் மாமரத்துக் கொல்லையில ஆளுக்கு பத்துச் செண்டு இருக்குல்ல... அப்புறம் எதுக்குடி மொத்தத்தையும் எங்களுக்கு கொடுங்கன்னு கேட்டு ஏழரையை இழுக்கப் பாத்தே...?" நேற்றிலிருந்து கேட்க நினைத்த கேள்வியை சாப்பிட்டு முடித்து படுத்தபோது மெதுவாகக் கேட்டான் மணி.

"ஆமா... எல்லாத்துக்கும் குத்துக்கல்லு மாதிரி உக்காந்துக்கிட்டு இருந்தா எல்லாம் வந்திருமா? ரோட்டோரத்துல மொத்தம் இருபது செண்டு... சும்மாவா?"

"அதுக்காக அவனுக்கு அங்க வீடு கட்டணுமின்னு எண்ணம் இருக்காதா?"

"பழைய வீட்டை எடுத்துக்கடான்னு சொல்லிட்டு இதை மொத்தமா வாங்கியிருக்கலாம்ல்ல... நா ஆரம்பிச்சா.... உடனே உங்க குடும்பத்தை பிரிக்கப் போறேனாக்கும்ன்னு என்னையத்தானே அதட்டுறீங்க..."

"அதுக்காக... அவனோ அபியோ எதுவும் பேசாதப்போ பெரிய மனுசங்ககிட்ட படக்குன்னு பேசுறது நல்லாவா இருக்கு..."

"ஆமா... பொல்லாத சொத்து... மேட்டுச் செய்யும்... அயிருவாய்க்காலும் என்னத்துக்கு ஆகப்போகுது... வானம் பாத்த பூமியில நாம போயி வெவசாயமா பண்ணப் போறோம்... உங்கப்பா இருக்கவரை பாப்பாரு... அப்பறம் வேலாயி வீட்டு வயலுக மாதிரி கருவ மண்டிப் போயிக் கெடக்கப் போகுது... அதுக்கு மாமரத்துக் கொல்லையை வாங்கியிருந்தா... இந்தா செட்டியாரு வீட்டு கரும்புத் தோட்டத்துல இஞ்சினியரிங் காலேசு கட்டப் போறானுங்க... இன்னைக்கு மாமரத்துக் கொல்லைதானேன்னு நினைப்பீங்க... நாளைக்கு அந்த எடத்துல செண்டு என்ன வெல போகும்... அதை நாம எடுத்துக்கிட்டா வீடு கட்டும்போது ரெண்டு வீட்டை சேத்துக் கட்டிப் போட்டா வாடகைக்கு விட்டாச்சும் சம்பாதிக்கலாம்ல்ல..."

"அது சரி... உன்னோட எண்ணம் இப்படிப் போகுதா... அடேங்கப்பா உன்னைய மட்டும் உங்கப்பன் படிக்க வச்சிருந்தாருன்னா... இன்னேரம் கலெக்கடராயிருப்பே... நீ யோசிக்கிற மாதிரி அவனும் யோசிச்சு அண்ணன் வீட்டை எடுத்துக்கட்டும் நா கொல்லையில வீடு கட்டிக்கிறேன்னு சொல்லியிருந்தா... "

"ம்க்கும்... உங்க தம்பிதானே... அவரு இனியாவது ஊருக்குள்ள வர்றதாவது... மெதுவா உங்க தம்பிக்கிட்ட பேசி அதை வாங்கப் பாருங்க..."

"ஆத்தா... பத்து செண்டு நமக்குப் போதும்... பேசாம இரு...."

"அதானே... நீங்க கேட்டுப்புட்டாலும்... கேக்கிற நேரத்துல நான் கேட்டுக்கிறேன்...."

"அத்தான்... நான் குமரேசன் பேசுறேன்..." 

"சொல்லு மாப்ள..." என்றார் எதிர்முனையில் அழகப்பன்.

"என்னத்தான் எப்படியிருக்கீங்க...?"

"என்ன மாப்ள நேத்துத்தான் பாத்துட்டுப் போனே... அதுக்குள்ள நலம் விசாரிக்கிறே...?"

"இல்ல அப்படி கேட்டு பழக்கமாயிருச்சில்ல..." சிரித்தான்.

"சரி... சரி... என்ன விஷயம்... எதாவது முக்கியமா...?"

"ம்... மருமக, மருமகன் எல்லாம் ஹாஸ்டல் போயாச்சா..."

"ம்... கிளம்பிட்டாங்க... நானும் உங்கக்காவுந்தான் எம்மொகத்தை நீ பாரு... உம்மொகத்தை நா பாக்குறேன்னு உக்காந்திருக்கோம்..."

"அப்புறம்... ரமேஷ் அத்தான் திடீர்ன்னு ரொம்ப நல்லவரா மாறிட்டாரேத்தான்... எப்படித்தான்..."

"ஏய்... அவன் அப்படித்தான்.... நல்லவந்தான்... மிடுக்கிக்கிட்டுத் திரிவான்... சரி விடு... அவனோட போக்கை அவனே மாத்திக்கிட்டது நல்லதுதானே... கெட்டவன் கெட்டவனாவே இருந்து சாகணுமின்னா எப்படி... நாலு வார்த்தையின்னாலும் நறுக்குன்னு பேசிப்பிட்டானுல்ல..."

"ம்... எனக்கு ஆச்சர்யம்..."

"அப்ப அப்ப அவனுக்கிட்ட போன் பண்ணிப் பேசு... இன்னும் மொறச்சிக்கிட்டு திரியாம..."

"சரி..."

"ம்... வேறென்ன சொல்லு..."

"அப்புறம் மாமரக் கொல்லையை...."

"கொல்லையை..."

"சித்ராண்ணி கேட்ட மாதிரி அவங்ககிட்ட கொடுத்துடலாம்ன்னு பாக்குறேன்... ஆசைப்பட்டுட்டாங்க... அதைக் கொடுக்கிறதால கொறஞ்சி போயிடப் போறதில்லை... பழைய வீட்டை அப்பாம்மா காலத்துக்கு அப்புறம் வேலை பாத்து வச்சிக்கிட்டு நல்லது கெட்டது போனா தங்கிட்டு வந்துக்கலாம்..."

"உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..."

"ஏந்த்தான்...?"

"ரோட்டோரத்துல கிடக்கிற நெலம் அது ஒண்ணுதான்... அதையும் மொத்தமாத் தூக்கி அவனுக்கிட்ட கொடுத்துட்டு... நாலப்பின்ன அபியே கேள்வி கேட்டா என்ன பண்ணுவே..."

"அதெல்லாம் அவ கேக்கமாட்டாத்தான்... அண்ணனுக்குத்தானே கொடுக்கிறோம்..."

"அண்ணன் கேட்டானா... இல்லையில்ல... அவ எதுக்கு இருபது செண்டையும் கேக்குறா தெரியுமா...? வீடு கட்ட மூணு செண்டு போதும் மாப்ள... தோட்டம் போட்டு காய்கறி யாவாரமா பண்ணப்போறா.... எல்லாம் பயங்கர பிளான் மாப்ள..."

"என்ன பிளான்?"

"பக்கத்துல இஞ்சினியரிங் காலேஸ் வருது... அப்புறம் அந்த எடத்துல செண்டு என்ன வெலைக்குப் போகும்... பிளாட் போட்டு வித்தாலும் நாலஞ்சி பிளாட் விக்கலாம்... இல்ல லோனைக்கீனைப் போட்டு வீடா கட்டி விட்டா மாசாமாசம் வாடகை வரும்... எந்தங்கச்சி சித்ரா படிக்கத்தான் இல்ல... ஆனா கலெக்டரைவிட அழகா கணக்குப் போடுவா... வெவரம் புரியாம தூக்கிக் கொடுக்கிறேன்னு சொல்றே..."

"அது சரி... இம்புட்டு உள்குத்து இருக்கா...?"

"மாப்ள... உலகம் புரியணும்... எனக்கு நீ வேற... மணி வேற இல்லை.... எல்லாரும் நல்லாயிருக்கணும்... அதுதான் எனக்கு வேணும்... சித்ரா கணக்கு வேற மாதிரி... நீ பேசாம உனக்கு உள்ள பத்துச் செண்டை வச்சிக்க... பின்னால பாக்கலாம்... இன்னைக்கி தூக்கிக் கொடுத்துட்டு பின்னால அவங்க அதன் மூலம் பலன் அனுபவிக்கும் போது நீயோ அபியோ மனசு வருந்தி எதாவது சொல்லப்போயி முட்டிக்கிட்டு நிக்கக் கூடாது.... நம்ம குடும்பம் கந்தசாமிங்கிற சிற்பி செதுக்குனது... அதுல ஒச்சம் விழக்கூடாது... செய்யணுமின்னு நினைச்சியன்னா... மகா கல்யாணத்துக்கு நீயே நின்னு செய்யி... அவனுக்கும் உதவியா இருக்கும்... என்னடா அத்தான் இப்படிப் பேசுறாரேன்னு நினைக்காதே... உலகம் புரிஞ்சி வாழக் கத்துக்க... ஏன்னா உன்னையப் புரிஞ்ச அபிக்கு நம்ம குடும்பந்தான்  உலகம்... அவ மனசுல இதுவரைக்கும் வராத வருத்தங்கள் வந்தா பின்ன கூட்டுக் குடும்பம் சின்னா பின்னமாயிரும்... சித்ரா... குலைக்கிற நாய்... அது கடிச்சிடாது... ஆனா... யோசிச்சிக்க..."

"சரித்தான்... இப்ப பிரிச்சது அப்படியே இருக்கட்டும்... அப்புறம் பாத்துக்கலாம்..." 

"சரி.. மாப்ள... மாமாக்கிட்ட பேசினியா... என்னதான் சந்தோஷமா சொத்தைப் பிரிச்சிக் கொடுத்தாலும் ரெண்டு பேரு மனசுக்குள்ளயும் எதோ சஞ்சலம்... அதை முகத்துல பார்த்தேன்... கொஞ்சம் பிரியாப் பேசுங்க... மணிக்கிட்டயும் சொல்லி பேசச் சொல்லு... ஏன்னா அவரு எதையாவது நினைச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடாம..."

"சரித்தான்... நாளைக்கு கூப்பிட்டுப் பேசுறேன்... உடம்பைப் பாத்துக்கங்க..." என்றான் குமரேசன்.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

17 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

சித்ரா கணக்கு இப்படி போவுதா..அப்பாடி இந்த மூளை எனக்கும் இருந்தா நானும் கலக்டராயிருப்பேன்..சும்மா சகோ..அருமை !!

KILLERGEE Devakottai சொன்னது…

கதை, நன்றாக போகிறது
தமிழ் மணம் 2

ஊமைக்கனவுகள் சொன்னது…

தொடர்கிறேன் அய்யா!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா

கதை நன்றாக உள்ளது இரசித்து படித்தேன் அடுத்த விழுதுக்காக காத்திருக்கேன்...த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொடர்கிறேன் நண்பரே
தம 4

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

குடும்பக் கட்டுக்கோப்பை தங்கள் கதையில் நன்கு காணமுடிகிறது. தொடர்ந்து வாசிக்கிறோம்.

UmayalGayathri சொன்னது…

தொடர்கிறேன் சகோ

தம 6

balaamagi சொன்னது…

நல்லவற்றை சொல்லிக்கொடுக்கும் நல்ல மனிதர்கள் இன்று குறைவு. கதை அருமை. தொடர்கிறேன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சொத்து படுத்தும் பாடு...ம்ம்ம்ம்ம் தொடர்கின்றோம்.....