மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 31 மார்ச், 2015

கூடிழந்த பறவையாய்...


குளத்தங்கரை படித்துறையும்...
குளுகுளுக்கும் வேப்பமரமும்...
இன்றும் சுமக்கின்றன
நம் காதலின் சுவடுகளை..!

கருப்பர் கோவில் பூவரசு
கண்ணியமாய் சுமக்கிறது
மடி சாய்ந்த பொழுதுகளின்
நினைவுகளை..!

ஆவாரம் செடி தாலாட்டும்
ஒற்றையடிப் பாதை..
இன்னும் இசைக்கிறது
நீயும் நானும் கைகோர்த்து
நடந்த நாட்களின்
சந்தோஷங்களை..!

பிள்ளைகள் ஆடும்
ஆலமர விழுதுகள்
ஆராவாரமாய் சுமக்கின்றன
முதல் முத்தத்தின் ஸ்பரிசத்தை..!

கடக்கும் ஒவ்வொன்றும்
கடத்தாமல் வைத்திருக்கின்றன
நம் காதலின் தாக்கத்தை..!

நீயும் நானும் கடத்தி விட்டோம்...
காதலின் வாழ்க்கையை
காலத்தின் பாதையில்..!

எப்போதாவது சந்திக்கிறோம்...
எதாவது பேசுகிறோம்...
இதயம் மறந்த புன்னகையோடு..!

சிநேகமாய் சிரிக்கிறார்கள்
இதயத்தில் இடை புகுந்தவர்கள்...
கூடி விளையாடுகின்றன
வாழ்வின் வசந்தங்கள்..!

எல்லாம் சந்தோஷமாக...
எல்லாரும் சந்தோஷமாக...
ஏனோ மனசு மட்டும்
தவிக்கிறது...
கூடிழந்த பறவையாய்...!
-'பரிவை' சே,குமார்.

12 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…

அனைத்தும், அருமையான வரிகள் நண்பரே....
உண்மைகள் வெளிவரட்டும் எவ்வளவு நாட்களுக்குதான் மூடி வைப்பது.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
இது முழுக்க முழுக்க கற்பனையே... உண்மை அல்ல...
ஹா... ஹா...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

மனம் ஆழ்ந்து ரசித்தோம் வரிகளை! மனம் ஏனோ சிறிது கனத்தது...அந்த வரிகள் அத்தனை அழுத்தம்...அருமை! நண்பரே!

ஸ்ரீராம். சொன்னது…

அருமை குமார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இவ்வளவும் இருந்தும் ஏன் தவிக்கிறது?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புரிகிறது...!

எப்ப வர்றீங்க ஊருக்கு...? ஹிஹி...

சசிகலா சொன்னது…

மனம் லயித்துப் போனது வரிகளில். அருமை சகோ.

balaamagi சொன்னது…

எல்லாம் சந்தோஷமாக...
எல்லாரும் சந்தோஷமாக...
ஏனோ மனசு மட்டும்
தவிக்கிறது...
கூடிழந்த பறவையாய்...!
அருமையான வரிகள், அழகு, நன்றி.

ezhil சொன்னது…

அருமையான நினைவுகளில் கடைசி வரிகளில் கனம்.....

Unknown சொன்னது…

உங்களைத் தேற்றுவதற்கு இதோ என்னாலான உதவி ..த ம 7:)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கூடிழந்த பறவை - மனதைத் தொட்டது.....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான் கவிதை! வாழ்த்துக்கள்!