மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 9 அக்டோபர், 2015

தேர்தல் அலப்பறைகள்


நாட்டுல தேர்தல் வந்தாலே இந்த அரசியல்வாதிங்க முதற்கொண்டு அல்லக்கைகள் வரை பண்ற அலப்பறை இருக்கே அது சொல்லி மாளாது. அதுவும் இப்போ நாமெல்லாம் காசுக்கு அடிமையான பின்னாடி இவனுக பண்ணுற கூத்து... அப்பப்பா... ஐந்து வருட கொள்ளைக்காக எப்படியெல்லாம் பணம் கொடுத்து பாஸாகப் பார்க்கிறார்கள் என்பதை சென்ற தேர்தல் அப்பட்டமாகக் காட்டியது. பஞ்சாயத்து தேர்தல்ல இருந்து பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் ஓட்டுப் போடும் வரை ராஜ உபச்சாரம்தான். அதற்கு அப்புறம்...?

சரி விடுங்க... கேடுகெட்ட அரசியல் நமெக்கெதுக்கு... அதனால நாம இப்போ சினிமாக்காரனுங்க தேர்தலைப் பற்றி பேசலாம் வாங்க... இன்னைக்கு நடிகர் சங்க தேர்தல்தான் தமிழகத்தின் மிக முக்கியமான செய்தியாக இருக்கிறது. வாத்தியார் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததால் செத்தாலென்ன... குடும்பத்தை நிர்வாணமாக்கி குதூகலித்தாலென்ன... சிறுமியை அப்பன், அண்ணன், காவல்துறை என பங்கு போட்டு கெடுத்தாலென்ன... அதெல்லாம் தேவையில்லை... நடிகனுங்க அடிச்சிகிறதுதான் தலைப்புச் செய்தியாக வர வேண்டும். என்னா நாமதான் கட் அவுட் வச்சி அதுக்கு பாலாபிஷேகமும் பண்ணுவோமுல்ல... பக்கத்து வீட்டுப் பெண்ணை கெடுத்துக் கொன்னுட்டானுங்க என்றாலும் ம்... அப்படியா.... ஐய்யோ பாவம் என கடந்து போகத் தெரிந்தவர்கள்தானே நாம்... சரி... இன்னைக்கு பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் செய்திகளை வாரி வழங்குகின்றன. இவன் அவனைத் திட்டினான்... அவன் இவனைத் திட்டினான் என்று சொல்லி பரபரப்புச் செய்திகளை கொடுப்பதில் யார் முதல் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.


பல வருடங்களாக இருக்கும்தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பல தலைவர்கள் வந்து சென்ற போதும்... நடிகர் சங்கம் கடனில் கிடக்கு... அப்படி இருக்கு... இப்படியிருக்கு என்று புலம்பிக் கொண்டே இருந்தார்களே ஒழிய முன்னணிகள் எல்லாம் அதைத் தீர்த்து வைப்பதற்கு முன் வரவில்லை. விஜயகாந்த் பொறுப்பேற்ற பின்னர்தான் நடிகர்களை ஒருங்கிணைத்து கலைவிழா நடத்தி கடனில் இருந்து மீட்டார். அதன் பின் அவர் அரசியல்வாதி ஆகிவிட அரசியல் செய்பவர்கள் நடிகர் சங்க தலைவராக இருக்கக்கூடாதென தற்போதைய தலைவர் சரத்குமாரும் இன்னும் சிலரும் அவரை வெளியேற்றினர். அதன்பின் சரத்குமார் தலைவரானார். சரத்குமார் அரசியல்வாதியாக இல்லையான்னு கேக்கப்படாது... ஏன்னா ஒரு நாளைக்கு ஆயிரம்தடவை அம்மா வாழ்கன்னு எழுதுறாராம்... இந்தச் சங்கம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்ததுன்னு நினைக்கிறேன்... ஏன்னா பத்து வருசமா தேர்தல் வைக்காமல் எல்லோரும் ஒன்றாக இருந்தார்கள்... ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்து வண்டி ஓட்டினார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமையோ தலைகீழா இருக்கு...

சரத்குமார் அணி என்றும்  விஷால் அணி என்றும் கபடிக் களத்தில் வீரர்கள் மோதலுக்கு தயாராய் நிற்பது போல் நிற்கிறார்கள். நாசர் தனக்கு நண்பன் என்பதால் கமல், நாசர் தலைவராக போட்டியிடும் விஷால் அணிக்கு ஆதரவாய்ப் பேசியிருப்பார் போல, அவருக்கு நான் அந்த சமயத்தில் உதவினேன்... இந்த சமயத்தில் உதவினேன்னு சொல்லி கமல் தூண்டிவிடுகிறார் என சரத்குமார் அறிக்கை விடுகிறார். உதவி செய்ததை சொல்வது என்ன வகை என்று தெரியவில்லை. அந்தப்பக்கம் விஷாலுக்கு ஆதரவாக பேசும் வடிவேலு கிணற்றைக் காணோமுன்னு ஒரு படத்துல நான் சொன்னேன்... இங்க நடிகர் சங்கத்தையே காணோமய்யான்னு சாதிகளை கடைவிரிக்கிறார். நாம சட்டசபைத் தேர்தல்ல தேவையில்லாமப் பேசித்தான் நமக்குன்னு இருந்த இடத்தை விட்டுவிட்டு வீட்டில் கிடக்கிறோம். இப்போ இங்க வேற வந்து கூவி நமக்கான ஆப்பை நாமே சரியாக செதுக்கி வைத்துக் கொள்கிறார்.

விஷாலுக்கும் சரத்குமாருக்கும் பிரச்சினை... சொந்தப் பிரச்சினையை நடிகர்களுக்குள் கொண்டு வந்து பிரிக்கிறார் என்று ஒரு பக்க வாதம்... அப்படி என்னய்யா சொத்துப் பிரச்சினை என்றால் அதுதான் இல்லை... பொண்ணு பிரச்சினை... யாரு... சரத்குமார் மகள்... அதுவா... ஆமா... அதேதான்யா... சிம்பு கூட ஒரு படத்துல நடிச்சிச்சே... படம் பேரு கூட போடாபோடி... ரசிகர்கள் கூட போடியின்னு சொன்னாங்களே... ஆமா...அதுக்குத்தான்... மாமன் மாப்பிள்ளை சண்டை அப்படின்னு சொல்றாங்க... இல்லை கிரிக்கெட் விளையாடப் போனப்போ... பிரச்சினையின்னும் சொல்றாங்க... எது எப்படியோ இது அவங்க குடும்பப் பிரச்சினை... இதுல எதுக்குய்யா எல்லாரையும் பிரிக்கிறீங்கன்னு தெரியலை.

பல தரப்பட்ட பிரச்சினைகளைக் கடந்து வாலு கொடுத்த சந்தோஷத்தில் இருந்த சிம்புவை ஏத்திவிட்டு பேச விட்டுருக்காங்க சரத்குமார் அணியினர்... ராஜேந்தர் மகனுக்கா பேசச் சொல்லிக் கொடுக்கணும்... சும்மா நான் என் குடும்பத்தை பிரிக்ககூடாதுன்னு நினைக்கிறேன்... எல்லோரும் என் சொந்தங்கள் என்று சொல்லிக்கொண்டே அடேய்... உடேய்... அவனே... இவனேன்னு சும்மா போட்டுத் தாக்கிப்புட்டாப்லயில்ல... அதுவும் பாருங்க... என்னவோ ஒரு வார்த்தை... அது... ஆமா... intention... அதேதான்... எனக்குத் தெரிந்த ஒருவர் குடித்து விட்டால் ஆக்சுவலி... அக்சுவலின்னு கொன்னு எடுத்துடுவாரு... சிம்பு பேசினதில் அதிகமாக சொன்னது இந்த intention. ஆனா அளு சும்மா வடிவேலு மாதிரி எல்லாம் பேசலை... ரொம்ப விபரமாப் பேசினாரு... நிறைய விஷயங்களை எடுத்து வைத்தாரு... இடையில் தனுஷ் என்னோட போட்டியாளந்தான்... அவன் கூட எப்படியாச்சும் சேர்த்து வைக்கணும்ன்னு சொல்றான்னு சொன்னார். எல்லாம் சரிதான்.... ஆனால் எதுக்காக இவ்வளவு கோபமான பேச்சு... அப்பா புலி...புலின்னு சும்மா உறுமி... உசுப்பேத்தி... தளபதிய குதிச்சு வர வச்சி... இன்னைக்கு அது எலியாயிப் போயிக்கிடக்கு... இதுல புள்ள ஆய்... ஊயின்னு பேசி.... ம்... சரத்குமாரு ஏத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாரு... பாவம் சிம்பு... இன்னும் உலகம் அறியாதவராய் இருக்கிறார்.


இளைஞர்கள் கையில் கொடுங்கன்னு விஷால் குதிக்கிறாரு... சரித்தான்... என்னைக்குமே நம்மளை ஆளுறவன் எல்லாமே வேற மாநிலத்துக்காரனுங்கதானே.... தமிழன் தமிழனை ஆள்வதில்லையே... விஷாலுக்கும் ஆசை.... ஆளட்டும்... நாளைக்கு அரசியலுக்கும் வரலாம்... நாமும் ஓட்டுப் போட்டு மேலே ஏற்றிப் பார்ப்போம்... நகைக்கடை, சினிமா, அரசியல், பைனான்ஸ் என எல்லாவற்றிலும் நமக்கு முன்னால் பக்கத்து மாநிலத்துகாரனுங்கதானே இருக்கானுங்க... ஆனா அரசியல் பண்ணுவதற்காகவே பிரச்சினைகளை ஊதிப் பெரிசாக்கும் வேலையை விஷால் செய்கிறாரோ எனத் தோன்றுகிறது.

நாங்கள் வந்தால்.... ஏய் நாங்கள் வந்தால்... என அரசியல்வாதிகள் போல அறிக்கைகள் விடுகிறார்கள். இவர்கள் சொல்வதை எல்லாம் செய்வார்களா? குறிப்பாக நாடகக் கலைஞர்களுக்கு அதைச் செய்வோம் இதைச் செய்வோம் எனச் சொல்கிறார்கள்... செய்வார்களா? இல்லை இதெல்லாம் தேர்தல் நேரத்து அறிக்கைதானா..? என்பதை திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள்தான் சொல்ல வேண்டும்.

மொத்தத்தில்... இந்த முறை நடிகர் சங்கத் தேர்தல் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலைவிட மோசமான பேச்சுக்கள், ஜாதியை இழுக்கும் அநாகரீக வார்த்தைப் பிரயோகம் என விறுவிறுப்பாய் இருக்கிறது. இதில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் உடைந்த சங்கம் இனி ஒன்றாய் கூடுமா என்பது சந்தேகமே... இவர்கள் எல்லாரும் பேசுவதைப் பார்த்தால் சாதாரண மனிதர்களாய்ப் பேசவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. எல்லோர் மனதிலும் சினிமாக் ஹீரோயிசம்தான் தெரிகிறது. அது கற்பனை வாழ்க்கை என்பதை மறந்து பேசுகிறார்கள்... எது எப்படியோ நடிகர்களுக்காக அடித்துக் கொள்ளும் ரசிகர்களை வைத்து பிழைப்பை நடத்தும் நடிகர்கள் இன்று காரசாரமாக அரசியல் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்... வெல்பவர் நாளை முதல்வராகக் கூட நம்மால் உட்கார வைக்கப்படலாம்... கூத்துக் கட்டுறவன் கூடி நின்னா சந்தோஷமே... தெருவுக்கு தெரு தனித்தனியா கூத்துக்கட்டினா... யாருக்கு நஷ்டம்?

சரிங்க... புதுக்கோட்டை விழாவுக்கு இன்னும் ஒருநாள்தான் இருக்கு... எல்லாரும் கண்டிப்பாக கலந்துக்கங்க...

-'பரிவை' சே.குமார்.

10 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

#பரபரப்புச் செய்திகளை கொடுப்பதில் யார் முதல் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன.#
குமார் ஜி ,இந்த பதிவில் நீங்களும் அந்த செய்தியைத்தானே சொல்லி இருக்கறீர்கள் ?

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அண்ணா
இவர்கள் யாரு.. நடிகர்கள்... ... இதற்கு மேல் சொல்லவா வேண்டும்.. புரிந்தால் சரி
த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜி...
இது சினிமாக் கூத்து, பரபரப்பாக்க வேண்டியதில்லை... நான் சொல்லியிருப்பதில் சில வருத்தங்களும் இருக்கிறதுதானே... இதெல்லாம் அரசியல் ஆசை... நாமெல்லாம்... விடுங்க... பரபரப்பா எழுதினாத்தானே மனசு பக்கமும் எல்லார் மனசிலும் நிற்கும்...

கருத்துக்கு நன்றி ஜி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
ஆமா... நடிகர்கள் என்ற வட்டத்துக்குள்தான் நிற்கிறார்கள்...
புரிகிறது...
கருத்துக்கு நன்றி ரூபன்.

KILLERGEE Devakottai சொன்னது…

வணக்கம் நண்பரே என்னைக் கேட்டால் இவங்களைப் பூராம் கூண்டோட நாடு கடத்தி உகாண்டாவில் கொண்டு போய் விடனும் இவர்களால் மக்களுக்கு என்ன பிரயோசனம்

துபாய் ராஜா சொன்னது…

அருமையான கருத்துக்களோடு கூடிய நியாயமான அறச்சீற்றம்.

// கூத்துக் கட்டுறவன் கூடி நின்னா சந்தோஷமே... தெருவுக்கு தெரு தனித்தனியா கூத்துக்கட்டினா... யாருக்கு நஷ்டம்? //

அவர்களுக்கு லாபமோ, நஷ்டமோ, இந்த பத்திரிக்கையாளர்கள் பப்பரப்பான செய்திகளை வெளியிட்டு நமக்கு நிறைய கஷ்டம் கொடுக்கிறார்கள் என்பது மட்டும் திண்ணமான உண்மை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்திலும் அரசியல்..... பொதுவாகவே இது போன்ற விஷயங்களை பார்ப்பதோ, படிப்பதோ இல்லை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நடிகர்களும் தற்போது அரசியல்வாதிகளைப் போல ஆகிவிட்டார்கள். புதுக்கோட்டை அழைப்பிற்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

என்னவோ நம்ம நாட்டுல எதுலதான் அரசியல்னு விவஸ்தையே இல்லாம போயிக்கிட்டுருக்கு...ம்ம் அரசியல்லையும் அரசியல் இருக்குதே...!!!!

புதுக்கோட்டை விழா சீரும் சிறப்புமாக நடந்தது. புதுக்கோட்டை நம் நண்பர்களையும் அவர்களை வழி நடத்திய முத்துநிலவன் அண்ணாவையும் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை...

நிஷா சொன்னது…

எனக்கு பிடிக்காத சம்பந்தமில்லாத ஆர்வம் காட்டாத துறைப்பா. சினிமாவும் அரசியலும் சும்மா பொழுதைபோக்கவென படித்து செல்வேனே தவிர சிந்தித்து கருத்திடும் படியெல்லாம் இல்லை.

எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஊரான் காசை வித்து உத்தமரென பேரெடுக்கணும் என பாடு படுவது எப்படின்னு இவங்க கிட்டதான் கற்றுக்கணும்.