மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 24 ஏப்ரல், 2017

தியாகராஜன் (சிற்றிதழ்கள் உலகம் சிறு கட்டுரை)

ன்பின் ஐயா பெரம்பலூர் திரு.கிருஷ் ராமதாஸ் அவர்கள் 'சிற்றிதழ்கள் உலகம்' என்னும் என்னும் சிற்றிதழை நடத்தி வருகிறார். துபாயில் வேலை செய்து கொண்டு ஒரு இதழ்... அதுவும் இணைய வழி மற்றும் பிரிண்ட்டிங்கில் புத்தகமாக சந்தாதாரருக்கு ஊரில் அவரின் மகள் மூலமாக அனுப்பவும் செய்து வருவதென்பது அவரின் எழுத்து மீதான... சிற்றிதழ்கள் மீதான அதீத காதலையே காட்டுகிறது. நானெல்லாம் இப்போ அறைக்கு வந்ததும் சமைத்துச் சாப்பிட்டு எப்படா படுப்போம் என்ற நிலையில்தான் இருக்கிறேன். இப்போ அதிகம் எழுதுவதில்லைதான்... 

சிற்றிதழ்கள் உலகம் முதல் இதழில் இருவரி வாழ்த்துச் செய்தி... இரண்டாம் இதழில் இங்கு நான் பகிர்ந்து கொண்ட ஐயா குறித்தான ஒரு கட்டுரை... இப்போது வெளி வந்திருக்கும் மூன்றாவது இதழுக்கு மறைந்த எழுத்தாளர் திருமிகு. அசோகமித்ரனைப் பற்றி ஒரு பக்கம் எழுதிக் கேட்டார். அசோகமித்திரனை அதிகம் வாசித்ததில்லை என்றாலும் ஐயா என்னையும் ஒரு எழுத்தாளனாய் நினைத்து அன்போடு கேட்டமைக்காக சமீபத்தில் வாசித்ததை வைத்து எழுதிக் கொடுத்தேன். அது இந்த இதழில்... அதுவும் என் போட்டோவுடன்... (நான் போட்டோ பெரும்பாலும் கொடுப்பதில்லை... பாக்யாவில் வாராவாரம் வரும் மக்கள் மனசு பகுதியில் நம்ம போட்டோ ஒன்றை ஒட்டியே வச்சிருக்கானுங்க... இவரு முகநூலில் தேடி எடுத்திருப்பார் போல... முகநூலில் கூட என் போட்டோ பகிர்வதில்லை... இது அலைனில் இருக்கும் போது எடுத்தது)

அவருக்கு நான் எழுதி அனுப்பிய முழு வடிவம் கீழே... அவர் பகிர்ந்த ஒரு பக்கத்துக்கு சுருக்கப்பட்ட பகுதி போட்டோவாக....

நன்றி கிருஷ் ராமதாஸ் ஐயா மற்றும் சிற்றிதழ்கள் உலகம் ஆசிரியர் குழு.

Image may contain: 1 person, text

 தியாகராஜன்...

தமிழின் பிரபல எழுத்தாளர்... 1970களின் ஆரம்பத்தில் தமிழ்ச் சிறுகதைகளையும் நாவல்களையும் உலகளவில் கொண்டு சென்ற எழுத்தாளர்களில் முக்கியமானவர்.

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் தியாகராஜனா...? அப்படி ஒருத்தர் தமிழ் எழுத்துலகில் இருந்தாரா... என்ன..? என்று யோசிக்கிறீர்கள்தானே....

அவர்தாங்க எழுத்துலக ஆளுமை... வாழ்க்கைக் கதைகளை என்றென்றும் வாழும் கதைகளாக எழுதி, எழுத்துப் பணியே தன் வாழ்க்கை என இறுதி மூச்சுவரை எழுத்தாளனாக வாழ்ந்து சமீபத்தில் மறைந்த தமிழின் பிரபல எழுத்தாளர்...
திருமிகு. அசோகமித்திரன்...

நானெல்லாம் மிகப்பெரிய வாசிப்பாளன் இல்லை... கல்லூரிக்குப் போகும் வரை ராணி, குமுதம், க்ரைம் நாவல்தான்... கல்லூரியில் எங்க பேராசிரியரின் அறிமுகம் கிடைத்து அவரின் பிள்ளைகளாய் அவர் இல்லம் செல்லும் போதுதான்... இரண்டு அறைகள் முழுவதும் புத்தகங்களாக இருக்க, அவற்றில் மூழ்கும் வாய்ப்புக் கிடைத்தது. கி.ரா, ஜெயகாந்தான், கார்ல் மார்க்ஸ், லெனின், பொன்னீலன், மீரா என அதிகம் வாசிக்க கிடைத்தது. அப்போது அசோகமித்திரனின் சில சிறுகதைகளை வாசித்ததுண்டு. வாசிப்பில் இப்போது இருக்கும் ஆர்வம் அப்போது இல்லை என்றாலும் அவர் வாசிக்க சொன்ன புத்தகங்களை வாசித்ததுண்டு. அப்படியான வாசிப்பில் அசோகமித்திரன் அவர்களின் சில கதைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனால் அவை இப்போது ஞாபகத்தில் இல்லை என்பதே உண்மை.

அவரின் மறைவுக்குப் பின் நண்பர் ஒருவர் அசோகமித்திரன் அவர்களின் சில சிறுகதைகள் மற்றும் நாவலைப் பிடிஎப்பாக அனுப்பித் தர வாசிக்க ஆரம்பித்தேன். கல்லூரிக் காலத்தில் புரிந்து கொள்ள ஏதுவாக இல்லாமல் கடினமாக பயணித்த கதை ஆசிரியரின் கதைகளை இப்போது வாசிக்கும் போது அந்த மனிதர்களுடன் நம்மையும் பயணிக்க வைத்ததை உணர முடிந்தது.

குறிப்பாக ‘தண்ணீர்’ நாவல்... கதையின் மையக்கரு தண்ணீர் பிரச்சினைதான் என்பதாய் படிக்க ஆரம்பித்த நாவல்... வீட்டுக்குள் இருக்கும் தண்ணீர் பிரச்சினை வீதிக்கு வந்து மெல்ல மெல்ல அடுத்த தெருக்களுக்கும் பயணிக்கும் போது சில பெண்களின் வாழ்க்கைப் பிரச்சினை பேசப்படுகிறது... தண்ணீரும் பெண்களின் கண்ணீருமாய் பயணிக்கும் கதை தமிழ் இலக்கிய உலகத்தை மற்றொரு களத்துக்கு எடுத்துச் சென்றது என்று பலர் சொல்லியிருக்கிறார். குறிப்பாக கதை நாயகி  யமுனாவின் வாழ்க்கை... இந்தப் பெயர் பொருத்தத்தைப்  பாருங்க... அதாவது கதை தண்ணீர் பிரச்சினை பற்றியது... அதில் வாழ்க்கை பிரச்சினையாகி... தற்கொலை வரை செல்லும் பெண்ணின் பெயர் யமுனா... எப்படியான சிந்தனை... கதை நகர்த்தல் மிக அருமை....  தண்ணீர் குழாய்க்காக ரோட்டோரத்தில் குழி வெட்டுதல் அதனால் கக்கூஸ் குழாய் உடைப்பு... கார் பதிந்து கொள்ளுதல்... தெரு விளக்குப் பிரச்சினை...  என மிக எதார்த்தமாய் கதை பயணிக்கிறது. கடைசியில் வரும் தண்ணீரும் சாக்கடை நாற்றத்துடன் வர, யமுனாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாய் நிற்க வாசித்த நம்மை கண்ணீருடன் சில நிமிடம் அமர வைத்துவிடுகிறார். மிகச் சிறப்பான நாவல்... அருமையான.... ஆழமான எழுத்து.

அசோகமித்திரனின் மறைவு ஈடில்லா இழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை என்ற போதிலும் அவரின் எழுத்துக்கள் என்றென்றும் இளமையுடன் வாழும்.

அனைவரும் வாசிக்க வேண்டிய எழுத்தாளன்... எழுத்தின் ஆளுமை அசோகமித்திரன்.
-‘பரிவை’ சே.குமார்.

4 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

அசோகமித்திரன் அவர்களின் எழுத்தின் ஆளுமையைப் பகிர்ந்த விதம் நன்று..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே

Yarlpavanan சொன்னது…

அசோகமித்திரன் அவர்களின் நினைவு
ஈழத்திலும் இடம் பெறுகிறது
சிறந்த படைப்பாளி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு பகிர்வு.

வாழ்த்துகள் குமார்.