மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 29 டிசம்பர், 2015

மார்கழிக் கோலங்கள் - 1

மார்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விதவிதமான கோலங்கள் வரைந்து அதில் பொறுமையாய் பார்த்துப் பார்த்து கலர்க் கொடுத்து ரோட்டில் போவரை எல்லாம் ரசிக்க வைப்பதில் அலாதிப் பிரியம். 


நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்க அக்காக்களெல்லாம் மார்கழி மாதம் வருவதற்கு முன்னரே கலர்பொடி பாக்கெட்டுக்களை வாங்கி வந்து அதில் மணல் கலந்து டப்பாக்களில் கொட்டி வைப்பார்கள். கிராமங்களில் எல்லா நாளும் கலர்  கொடுக்க மாட்டார்கள். மாதத்தில் சில நாட்கள் கொடுப்பார்கள். பொங்கலன்று கொடுப்பார்கள்... அவ்வளவே... விதவிதமாய் கோலங்கள் வரைந்து பத்திரப்படுத்தி வைத்த நோட்டுக்களை மார்கழி மாதம் மட்டுமே எடுப்பார்கள். முதல்நாள் இரவே நாளைக்கு என்ன கோலம் வரைவது என்பதை முடிவு செய்து,  எத்தனை புள்ளி எத்தனை வரிசை என்று பார்த்து ஒரு முறை போட்டுப் பார்த்துக் கொள்வார்கள். மறுநாள் வாசலைக் கூட்டி, அதில் சாணம் தெளித்து (இப்பல்லாம் தண்ணிதான்) அழகாய் புள்ளி வைத்து கோலமிட்டு கலர்க் கொடுத்து நிமிரும் போது அவர்களின் கைவண்ணம் அதில் அழகாய்த் தெரியும்.


அப்போதெல்லாம் கோலத்திற்கு கலர் கொடுக்கப் போவதுண்டு. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் எங்க வீட்டில்தான் கோலம் போடுவார்கள். எனவே தினம் இரண்டு கோலம் போடுவதால் கோவிலில் போட்டுவிட்டு வீட்டிற்கு போடுவதற்குள் கோவிலில் நானும் தம்பியும் கலர் கொடுத்து விடுவோம். அப்புறம் நாங்க வீட்டு வாசலுக்கு வர, அக்காவோ அண்ணியோ கோவில் கோலத்தின் மேல மறுபடியும் கோலப்பொடியால் விளிம்பிவிட்டு வருவார்கள். ஒரு சில நேரங்களில் நாங்கள் கலர் கொடுக்க எழுந்திரிக்க மாட்டோம். படுத்துக்கிட்டு தூக்கம் வருதுன்னு பிகு பண்ணுவோம். அவர்கள் கெஞ்ச... நாங்க மிஞ்சிவிடுவோம்.

பெரும்பாலும் பொங்கலன்று பொங்கப்பானை போடுவதெல்லாம் நாங்களாகத்தான் இருக்கும். கரும்பு, மஞ்சள் கொத்து  அது இதுன்னு எல்லாம் நாங்களே வரைவோம். மாட்டுப் பொங்கலன்று தம்பி அழகாய் மாடு வரைந்து விடுவான். பின்னர் பொங்கல் வாழ்த்துக்கள் என்று அழகாய்(?) வேறு எழுதுவதுண்டு. 


இப்படிப் போன கோல நாட்களில் என் மனைவியின் வருகைக்குப் பின் எங்கள் வீட்டுக் கோலங்கள் இன்னும் உயிர்பெற்றன. இவர் தினமும் கோலம் போட்டு கலர் கொடுப்பதற்காகவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். எங்க வீடு, தேவகோட்டை, சென்னை, காரைக்குடி என குடியிருந்த வீடுகள், தற்போது தேவகோட்டையில் இருக்கும் எங்க வீடு என எல்லா இடங்களிலும் இவரது கோலம் பிரபலம். காரைக்குடியில் இருந்து வீடு காலி பண்ணி வந்த அடுத்த வருடம் பக்கத்து வீட்டு ஆண்டி போன் பண்ணி நித்யா நீ இல்லாம நம்ம ஏரியாவுல மார்கழி மாதமாவே இல்லை என்று சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

விதவிதமாய் கோலங்கள் வரைவதில் கில்லாடி... புள்ளி வைத்து... புள்ளி வைக்காமல் என அழகோவியமாய் கோலம் வரைந்து கலர் கொடுத்து வாசலுக்கு அழகை கொடுத்து விடுவார். அவருக்கு கோலம் போடுவதில் அலாதிப் பிரியம்... அதுவும் பாக்கெட் கலர்பொடி வாங்கமல் கலர்களை வாங்கி வந்து இவரே கலந்து டப்பாக்களில் நிரப்பி வைப்பார்... மார்கழி மாதம் முழுவதும் கலர் கோலம் மட்டுமே போடுவார்,.


அதிகாலையில் எழுந்து பனியில் கோலம் போடுவதற்கு என்னிடம் தினமும் திட்டு வாங்குவார். இப்பவும் ஊரெல்லாம் திருட்டு பயம் இருக்குன்னு எழுந்திரிக்காதே என்று இங்கிருந்து கூவினாலும் கேட்பதில்லை.... இந்த முறை விஷால் நான் சொல்வது போல்  உங்களுக்கு என்ன கிப்டா கொடுக்கப் போறாங்க, பீவர்தாம்மா வரும்ன்னு மழலையில் திட்ட, உங்க மகன் அப்படியே உங்களை மாதிரியே இருக்கான்... நான் கோலம் போடப்போனா நீங்க திட்டுற மாதிரி இப்ப இந்த ஆம்பளை திட்டுறாருன்னு சொல்லிச் சிரிச்சாங்க. இப்ப வீட்ல சின்னக்குமார் மிரட்டல் விட ஆரம்பிச்சிருக்கார்.


இடத்திற்கு ஏற்றார் போல் சுருக்கி விரித்து கோலம் போடுவதில் கில்லாடி... எங்க வீட்டில் என்ன கோலம் போட்டிருக்கிறார் என்று பக்கத்து வீட்டார் எல்லாம் வந்து பார்த்து ஒருநாள் போடவில்லை என்றாலும் என்னாச்சு என்று கேட்கும் அளவுக்கு காரைக்குடியிலும் சென்னையிலும் வைத்திருந்தார். தேவகோட்டையில் ஒதுக்குப்புறமாய் வீடு... இன்னும் அதிகம் வீடுகள் வரவில்லை... எதிரே இருக்கும் மூன்று வீட்டாரும் கோலமா... அப்படின்னா என்ன என்று கேட்கும் ரகம். இருந்தும் எங்க வீட்டில் கோலம் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறது,

என் மனைவி போடும் கோலங்களை இனி என் எழுத்தில் இந்த மாதம் முழுவதும் அப்ப அப்ப பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். போன வருடம் முகநூலில் பகிர்ந்தேன்... இந்த முறை என் மனசில்...

 
இங்கு பகிரப்பட்டிருக்கும் கோலங்கள் அனைத்தும் இந்த மார்கழியில் எங்க வீட்டில் விளைந்தவையே.... இவற்றை விற்கும் எண்ணம் என்னிடம் இல்லை... அதற்கான உரிமையும் என்னிடம் இல்லை... அதெல்லாம் இதன் ஓனரிடமே... விரும்பினால் அவரிடம் கேட்டுக் கொடுக்கப்படும்... யாரும் சொல்லாமல் தூக்கிக் கொண்டு போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என்ன பண்றது... அம்மணியோட கைவண்ணமுல்ல... அப்படித்தான்... கோபப்படாதீங்க.... அப்ப அடுத்த மார்கழிக் கோலங்கள்ல சந்திப்போம்.


-'பரிவை' சே.குமார்

25 எண்ணங்கள்:

Tamizhmuhil Prakasam சொன்னது…

அச்சில் வார்த்தது போல் அழகாக கண்ணைக் கவர்கின்றன கோலங்கள். சகோதரிக்கு இனிய வாழ்த்துகள். பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

நிஷா சொன்னது…

வாவ்! நித்தியாவின் கைவண்ணத்தில் அழகான கோலங்கள், வரைந்தது போல் அத்தனை அழகும் வர்ணங்களை தேர்ந்தெடுத்ததில் தேர்த்தியும் தெரிகின்றது.

நித்யாவுக்கு பாராட்டுகளை சொல்வதோடு குட்டி குமாரை இன்னும் கொஞ்சம் தட்டிக்கேட்கவும் சொல்லுங்க.. ஆமாம் விடிகாலை குளிரில் ஜீரம் தான் வரும்,ஹாஹா!

கோலத்துடன் சிறுவயதில் கோலமிட்ட நினைவுகளுமாய் சமீப நாட்களில் கண்டும் கேட்டுமிருந்த செய்திகளிலிருந்து விடுபட ரிலாக்ஸான பதிவொன்றுக்கான நன்றி குமார்.

தொடருங்க>......!

Menaga Sathia சொன்னது…

செம அழகான கோலங்கள்,அப்படியே பார்த்துட்டே இருக்கேன்..சகோ கோவிக்காதீங்க சில கோலங்கலை அப்படியே பார்த்து வரைஞ்சுக்குறேன்..உங்க மனைவிக்கு என் பாராட்டுக்களை தெரிவிக்க்கவும்....

ஸ்ரீராம். சொன்னது…

அழகிய கோலங்கள். கண்ணைக் கவர்கின்றன.
தம +1

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அழகுக் கோலங்கள்
தம+1

unmaiyanavan சொன்னது…

அழகான நேர்த்தியான கோலங்கள். அருமை. உங்கள் மனைவிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

(மனைவிக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைக்கிறீங்கப்பா!!!)

ராஜி சொன்னது…

கோலங்கள் அழகாகவும், அதற்கேற்ற வண்ணமும் கொடுத்து பளிச்சுன்னு இருக்கு. இனி திட்டாதீங்க சகோ! தலைக்கு குல்லாவும், ஸ்வெட்டரும் வாங்கி கொடுங்க. முடிஞ்சா குளிருக்கு இதமா ஒரு காஃபி போட்டு கொடுங்க.

சாரதா சமையல் சொன்னது…

மார்கழிக் கோலங்கள் அனைத்தும் மிக அழகு குமார்.

ராமலக்ஷ்மி சொன்னது…

கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணக் கோலங்கள். ஓனருக்குப் பாராட்டுகள்:).

நினைவுகளை மலரச் செய்யும் அருமையான பதிவும்.

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

balaamagi சொன்னது…

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு இக்கோலங்கள், ஆனா பாருங்கள் நீங்க தூக்கிகொண்டு போய்விடாதீர்கள் என்று சொன்னீர்கள், என்ன செய்வது என் கண்கள் எப்பவோ தூக்கிவிட்டன சில கோலங்களை,
சூப்பப், என்னால் அவ்வளவு தான் சொல்ல முடியும்.
எல்லாக் கோலமும் தெரியும், ஆனா அந்த 5 வது கோலம் என்னமோ பன்னி இருக்காங்க, சரி சரி போட்டு பார்த்து சொல்கிறேன்.
உண்மையிலே என் பாராட்டுக்களை சகோ க்கு சொல்லுங்கள். கலக்கல் கோலங்கள் என்று. வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai சொன்னது…

அனைத்தும் அழகிய கோலங்கள் வாழ்த்துகள் நண்பரே...
தமிழ் மணம் 4

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையா அழகா இருக்கு குமார். பளிச் என்று கண்ணைக் கவரும் விதத்தில்...சகோதரிக்கு எங்கள் வாழ்த்துகள்!

கீதா: நானும் கூட கலர் சாயம் வாங்கிக் கலந்து தான் வைத்துக் கொள்வேன். பாக்கெட் கலர் வாங்கிக் கலப்பதில்லை. ஏனென்றால் பாக்கெட் கலர் மாவு போன்று கிடைக்குமே அதை வாங்கி நம் கோலப்பொடியில் கலந்து வைத்துக் கொண்டால் பல சமயங்களில் கலர் வெள்ளை கோலப்பொடியுடன் கலக்கும் போது ஒரிஜினல் கலர் கிடைப்பதில்லை. அதனால் வித விதமான கலர் டை சாயம் கிடைக்கும் அதை வாங்கி கோலப்பொடியில் கலந்து நிழலில் காய வைத்துக் கொண்டால் நல்ல கலர் பளிச்சென்று, தூவுவதற்கும் டெக்சர் நன்றாக இருக்கும். நான் இப்போது இருப்பது ஃப்ளாட் ஆகிப் போனதால் போடுவதில்லை. முன்பு கிராமத்தில் இருந்தவரை, பின்னர் பலரும் கேட்டு அவர்கள் வீட்டிலும், பாண்டிச்சேரியில் இருந்த போதும் போட்டதுண்டு. நித்யா மிக மிக அழகாகப் போட்டுள்ளார். அதுவும் ஷேட் காம்பினேஷன் அருமையாகப் போட்டுள்ளார். அவரது கைவண்ணத்திற்கு ஸ்பெஷல் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து விடுங்கள் குமார்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இப்போதெல்லாம் மார்கழி மாதக் கோலங்களை காண முடிவதில்லை . எல்லாம் காலம் செய்த கோலம்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
உங்கள் பாராட்டை படித்துப் பார்த்து தெரிந்துக்கச் சொல்லியாச்சு...
குட்டி குமார் கேள்விகளால் துளைககவும் மிரட்டவும்தான் செய்கிறார்....
ரிலாக்சாகத்தான் பதிவிட்டேன்... என் மனநிலை மாற்றும் வண்ணமாக இன்னும் எழுத வேண்டும் என்பதே எண்ணம்...


தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
உங்கள் கருத்துக்களைப் படிச்சிட்டார்...
தங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னார்...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சொக்கன் சார்...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

//(மனைவிக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைக்கிறீங்கப்பா!!!)//

இதெல்லாம் ஐஸ் வகை அல்ல... இது திறமையை வெளிப்படுத்தும் அன்பு சார்... அன்பு...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
முதலில் தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
என் மனைவியும் சொல்லச் சொல்லியாச்சு... கூடுதலாக காபி கொடுக்கச் சொன்னதுக்கும்...

காபி போட்டுக் கொடுக்க ஆசைதான்... அபுதாபியில் இருந்து பார்சல் அனுப்பினாலும் உடனே போகாதே அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அம்மா...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா....
ஓனருக்கிட்ட சொல்லிட்டேன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...

எடுத்துக் கொள்ளுங்கள்... போட்டுப் பாருங்கள்...
உங்கள் பாராட்டுக்களைச் சொல்லிவிட்டேன்....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

வாங்க கீதா மேடம்...

எங்க வீட்டிலும் அப்படித்தான் சாயம் வாங்கித்தான் கலக்கிறார்கள்...
உங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சொல்லிவிட்டேன்...
வாங்க துளசி சார்....

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஜயா...
எங்க பக்கமெல்லாம் முன்பை விட இன்னும் அழகாக கோலம் போடுகிறார்கள். அதுவும் படிக்கும் பெண்கள் புள்ளி வைக்காமல் மயில், பூக்கள், மான் என அழகழகாய் வரைகிறார்கள்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.