மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 18 ஜூலை, 2015

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 27)

முந்தைய பகுதிகள் :

"நக்கலா... இந்த கண்ணதாச பயலுக்கு நாம ஒண்ணுமே கொடுக்கலையே... ஏதாவது கொடுத்தா என்னன்னு தோணுதுலா..."

"அதான் சொத்த சரிபாதியா பயலுகளுக்கு பிரிச்சிக் கொடுத்தாச்சே... சும்மாவே ஏ நண்ணமக சொத்துக்கு ஏழரையைக் கூட்டப் பாத்தா... இதுல கண்ணதாசனுக்கு கொடுக்கணுமின்னு சொல்லியிருந்தா பத்ரகாளி ஆயிருக்கமாட்டா...."

காளியம்மாள் இப்படிக் கேட்டதும் கண்ணதாசனுக்கு எதாவது செய்யணுமின்னு சொன்னா மீண்டும் ஒரு பிரச்சினை வருமோ என்ற ஐயம் அவருக்குள்ளும் ஒட்டிக் கொள்ள, மேற்கொண்டு பேசாமல் அமைதியாக எங்கோ ஆந்தை அலறும் சத்தம் கேட்க, நாய்கள் குரைக்க ஆரம்பித்தன

இனி...

தான் சொன்னதுக்கு பதில் வராமல் போகவே "என்னங்க... பதிலையே காணோம்?" என்று மீண்டும் கேட்டாள் காளியம்மாள்.

"இல்ல... நீ சொன்னத யோசிச்சேன்... உண்மைதான்... பயலுக அது வேணும் இது வேணுமின்னு சண்டை போடலையின்னு சந்தோஷப்பட்டுக்கலாம்ன்னா எல்லாத்துக்கும் சேத்து நாலு பெரிய மனுசங்க முன்னாடி மருமவ அது எனக்கு வேணுமின்னு பிரச்சினையைக் கூட்டிருச்சுல்ல... நாம கண்ணதாசனுக்கு சொத்து கொடுக்கணுமின்னு சொன்னோமின்னா நீ சொன்ன மாதிரி பத்ரகாளியாயிடுவா.... எதுக்கு தேவையில்லாம வாங்கிக் கட்டிக்கணும்..."

"அதுதான்...நானும் சொல்ல வந்தேன்..."

"ம்... எனக்கென்ன இங்கன நம்மளை பெத்த ஆத்தா அப்பனாட்டம் பாத்துக்கிறான்... ஏதாவது செய்யணுமின்னு தோணுச்சி.... அதான்... ம்... ஒண்ணு செய்யலாம்... நமக்கிட்ட காசு கொஞ்சம் இருக்குல்ல... அதுல எதாவது அவனுக்குச் செய்யலாம்..."

"ம்.... செய்யலாம்... செய்யலாம்... எதுக்கும் அவனுககிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கணும்... இல்லேன்னா நாளக்கி இம்புட்டுக்காசு வச்சிருந்தாக... சொல்லாமக்கொள்ளாம அவனுக்கிட்ட தூக்கிக் கொடுத்துட்டாகன்னு ஒண்ணாமண்ணா இருக்க புள்ளைக அடிச்சிக்கிட்டு நிக்கக்கூடாதுல்ல... சொத்தும் காசும்தானே பகையே"

"ஏய்... அவனுகளை கேக்காமயா முடிவெடுக்க முடியும்... ஆனா இந்த ரத்தம் அடிச்சிக்கிட்டு கெடக்க ரத்தமில்ல... வழிவழியா ஒண்ணாவே வாழ்ற ரத்தம்..."

"ஆமா...ஆமா... அன்னக்கி வந்தவளுக கூட்டுக்குடும்பம் வேணுமின்னு அக்கா, தங்கச்சியா அம்புட்டுப் பாசத்தோட நின்னோம்... இன்னக்கி அப்பிடியா இருக்கு... வந்த மறுநாளே தனிக்குடித்தனம் போவணுமின்னு நிக்கிறாளுகளே...."

"நீ சொல்றது சரித்தான்... இனிமே அண்ணந்தம்பி உறவெல்லாம் மழக்கி முளைக்கிற காளான் மாதிரித்தான்... சரி... சரி... ஒறங்கு... பயலுககிட்ட பேசிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்..." என்றபடி பேச்சைக் முடித்துக் கொண்ட கந்தசாமி சிறிது நேரத்தில் குறட்டை விட ஆரம்பிக்க, காளியம்மாள் தூக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாள்.

"என்னங்க..." அழைத்தது சுந்தரி.

"என்ன..." கேட்டது அழகப்பன்.

"இல்ல சொத்தப் பிரிச்சிக் கொடுத்துட்டு பெருசுக ரெண்டு முகத்துலயும் சந்தோசம் இல்லாமப் போச்சு பாத்தியளா..?"

"ஆமா... சின்னவங்கிட்ட கூட சொன்னேன்..."

"எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு... ரெண்டு நாளு இங்கிட்டு கூட்டிக்கிட்டு வந்து வச்சிக்கலாமான்னு பாக்குறேன்..."

"யாரு... அவுகளா... இங்கயா... சரித்தான்... வந்துட்டுத்தான் மறுவேலை பாப்பாக... அடி நீ வேற..."

"ஆமால்ல.... ஒருநா ஒருபொழுது வராதுகல்ல..."

"அதைத்தான் நாங்களும் சொல்றோம்... புள்ளகதான் இல்லையில்ல... நீ ஒரு ரெண்டு நாளைக்கி அங்கன போயி இருந்துட்டு வா..."

"நானா...? உங்கள இங்க விட்டுட்டா...? அதெல்லாம் சரி வராது..."

"ஏய்... நடிக்காதடி... எந்தப்பொம்பள ஆத்தா வீட்டுக்குப் போறதுக்கு விரும்பமாட்டா சொல்லு... எங்க நா போறேன்னு சொன்னா என்ன சொல்லுவானோன்னு அவுகளை இங்கன கூட்டியாரலாமான்னு பேச்சை ஆரம்பிச்சே... கெட்டிக்காரிடி நீ..."

"ஆமா உங்கள ஏமாத்தித்தான் கோட்டை கட்டப்போறோம் பாருங்க..."

"ஏய்... சும்மா சொன்னேன்... உனக்கு மட்டுமில்ல எனக்கும் அவுகதான் தாயி தகப்பன்... இன்னங் கொஞ்ச நாளக்கி ரெண்டு பேரும் இருக்கணும்... அதத்தான் நா சாமிக்கிட்ட வேண்டுறேன்... நாளக்கி கொண்டு போயி விடுறேன்... ரெண்டு நாளக்கி இருந்துட்டு வா.... சரியா..."

"ம்..."

"என்னங்க நா சொன்னதை யோசிச்சியளா?' கணவனிடம் கேட்டாள் சித்ரா.

"எதை?" தெரியாதது போல் கேட்டான் மணி.

"ம்... எல்லாம் அந்த இடத்து விசயந்தான்..."

"அதுதான் பேச்சை விடுன்னு சொல்லிட்டேனே... அப்புறம் என்ன...?"

"அதுக்காக... உங்க தம்பிக்கிட்ட கேட்டு அத வளச்சிப் போடப்பாருங்க... சும்மா வெவரங்கெட்டதனமா இருக்காம..."

"ஏண்டி அவரு சரியாத்தான் பிரிச்சிக் கொடுத்தாரு... அவனுக்கும் அதுல வீடு கட்டணுமின்னு ஆசையிருக்காதா என்ன...?"

"இப்பத்தான் கடலு மாதிரி வீடு கட்டி வச்சிருக்காகல்ல... ஊர்ல பழைய வீடு வேற இருக்கு... அப்புறம் எதுக்கு புதுசா வீடு..."

"ஏன்டி... இதை நாம சொல்ல முடியுமா? காரைக்குடியில இடம் வாங்கிப் போட்டிருக்கோமே அங்க வீடு கட்டிட்டா ஊர்ல வீடு வேணாமின்னு இருந்துருவியா என்ன? இந்தப் பேச்சை விட்டுட்டு ஆவுறதைப் பாரு... இந்த பிசாத்து சொத்துக்காக அவனோட அடிச்சிக்கிட்டு நிக்க என்னால முடியாது... அது எனக்குப் பிடிக்கவும் இல்லை... இனிமே இதப்பத்தி பேசுனே... அம்புட்டுத்தான்...." என்றபடி எழுந்து சென்றான்.

"ஒண்ணுக்கும் புண்ணியமத்த மனுசனை எந்தலையில கட்டி வாழ்க்கையை வீணாக்கிப்புட்டானுங்க... இந்தாளெல்லாம் எதுக்கு மனுசனுன்னு வேட்டிசட்டை கட்டிக்கிட்டு திரியுறான்..." என மூக்கைச் சிந்தினாள்.

"அம்மா... இப்ப எதுக்கு ஒப்பாரி வக்கிறே...?" கத்தினாள் மகா.

"உனக்கென்னடி தெரியும்..."

"இங்க பாரும்மா... நமக்கு நல்லாத்தான் கொடுத்திருக்காக... அதுக்கு சந்தோஷப்படு... சித்தப்பாவுட்டு பாதியும் வேணுமின்னு நிக்கிறது ஆசை மட்டுமில்லம்மா... பேராசை... அது இருந்தா அழிஞ்சிருவோம்... எனக்கு படிப்புக்குன்னு அவருதான் செலவு பண்ணுறாரு... அதுவே பெரிய விஷயம்... தெரிஞ்சிக்க..."

"ஆமா... பொல்லாத பணத்தை கட்டுறாக..."

"வேண்டான்னா சொல்லு.... இப்பவே போன் பண்ணி இனி அம்மா கட்டிருவாகன்னு சொல்லிடுறேன்..."

"அப்பன மாதிரியே உரிச்சிக்கிட்டு பொறந்து ஏ வாநாளை வாங்குறே... போடி அங்கிட்டு..." என்றவள் "நாளைக்கி ஆகட்டும் அந்த கெழவனுக்கு போனைப் போட்டு வாங்கித் தரச்சொல்றேன்" என்றபடி எழுந்தாள்.

"கண்மணி..."  என்ற ரமேஷின் அழைப்புக்கு "என்னங்க..." என்று அடுக்களையில் இருந்து எதிர்குரல் வந்தது.

"கொஞ்சம் தண்ணி கொண்டாவே..."

"ம்..."

அவள் கொண்டு வந்த தண்ணியைக் குடித்து விட்டு "உன்னோட உடன்பிறப்புக்கள் போன் பண்ணுனாங்களா?"

"என்ன திடீர்ன்னு இந்தக் கேள்வி..?"

"பாசமாப் போன் பண்ணியிருப்பனுங்களேன்னு கேட்டேன்..."

"இல்லை..."

"ம்... உங்கம்மா வீட்டுக்குப் போறியா?"

"எதுக்கு?"

"எதுக்கா... பாக்கத்தான்..."

"நல்லாத்தானே இருக்காக... அதுவுமில்லாம ஒருநாளுமில்லாத திருநாளா நீங்க என்னைய போறியான்னு கேக்குறீக..."

"அட இல்ல... சொத்துப் பிரிக்கிறப்போ அந்தச் சனியன் சித்ரா தேவையில்லாம பேசிருச்சுல்ல... அப்புறம் மாமா முகமே நல்லாயில்ல... எல்லாரும் போயாச்சு... ரெண்டு பேருமா இருப்பாக... மனசுக்குள்ளே வச்சிக்கிட்டு இருந்து ஏதாவது ஒண்ணுன்னா... அதான் புள்ளகள கூட்டிக்கிட்டு போயிட்டு ரெண்டு நாள் இருந்துட்டு வரலாம்ல்லன்னு கேட்டேன்..."

"போலாந்தேன்... உங்க ஆத்தாவுக்கு ஆரு ஆக்கிப் போடுறது.... நாங்க இல்லைன்னா நீங்க இங்கிட்டு வரவே மாட்டிய... அது என்ன பண்ணும்..."

"சரசுக்கிட்ட சொல்லிடுறேன்... அது பாத்துக்கும்... நீ பொயிட்டு வா..."

"பாக்கலாம்..." என்றபடி படுத்தாள்.

காலையில் பேசலாம் என குமரேசனும்... இடப்பிரச்சினை பேசணும் என சித்ராவும்... நாளை அவர்களைப் பார்க்கப் போகலாமா என மகள்களும் நினைத்திருக்க, அந்த இரவோ அவர்களுக்கு மிகப்பெரிய துயரத்தைக் கொடுக்கப் போகும் விடியலை நோக்கி நகர்ந்தது.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

7 எண்ணங்கள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையாகச் செல்கிறது! தொடர்கிறேன்!

Kasthuri Rengan சொன்னது…

தொடரட்டும் கதை ...
தம +

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அருமையாக உள்ளது ...வாழ்த்துக்கள் தொடருங்கள்....த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு சொன்னது…

என்ன அதிர்ச்சி தர போகிறீர்கள்? பெரியவர்களுக்கு ஏதாவது?

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அதன் இரவு என்ன பெரிய துயரத்தைத் தரப் போகிறதோ? கடவுளே! ...

நிஷா சொன்னது…

என்னாகபோகின்றதுப்பா? சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

தொடர்கிறோம். சீக்கிரம் தொடர்ச்சியைக் கூறுங்கள்.