மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 7 ஆகஸ்ட், 2013

அம்மான் மகனே...


அம்மன் கோவிலுக்கு
வாறேன்னு சொன்ன
அம்மான் மகனுக்காக
அவன் விரும்பும்
பாவாடை தாவணியில்
கூந்தல் காயுமுன்னே
சூடிய மல்லிகை மணக்க
அர்ச்சனைக் கூடை
தூக்கி அரக்கப்பறக்க
ஓடி வந்தால் சிறுக்கி
மனசை சிறைபிடித்த
கிறுக்குப் பயலை
இன்னும் காணோம்....

அர்ச்சனையை அவன்
பேருக்குச் செய்து
பிரகாரம் சுற்றி
பிரசாதம் வாங்கி
வராதவனை அர்ச்சித்தபடி
குளக்கரை படித்துறையில்
அமர்ந்து நேற்றைய
சந்திப்பின் இனிமையை
நினைவில் நிறுத்தி
உதடு சிரிக்க...
அவனைக் காணாது
உள்ளம் கொதிக்க...

என் கண் முன்னே
காதல் புறாக்கள்
கொஞ்சி மகிழ...
என் மகிழ்ச்சி
மறையும் சூரியனாய்
கரைந்து போக
கோபச்சூடு மூச்சில்
முன்னே பொங்கி வர...

கோவிலுக்குப் போனா
வரமாட்டாளேன்னு
அம்மா தேடுவா...
இவ்வளவு நேரமான்னு
அப்பா வேற கேப்பாரு...
பரவாயில்லை மச்சான்
எப்பவும் சொல்ற
பொய் எங்கிட்ட இருக்கு...

சொன்ன நீ வராம
எங்க போன மச்சான்
எப்போ வருவே மச்சான்
தவிக்கும் சிறுக்கி மனசு
கல்லுப்பட்ட தண்ணியா
சிதறிக் கிடக்கு...
விருப்பமில்லாம
வீட்டுக்குப் போறேன்...

வெளக்கு வச்சதும்
வெளிய வருமென்னை
வீதியில நின்னு பாத்துக்க...
விதியேன்னு நானும்
உன்னை பார்த்துக்கிறேன்...

இன்னைக்கு நாம
பாக்கலைன்னாலும்
நேற்று தட்சிணாமூர்த்தி
தரிசனம் தந்த
நினைப்போட போறேன்...

நாளைக்கு சனிக்கிழமை
ஆஞ்சநேயர் கோவிலுக்கு
வடைமாலை சாத்த வாறேன்
இன்னைக்கு மாதிரி
இல்லாம சொன்னபடி
வந்திரு மச்சான்...

அஞ்சு மணிக்கு வந்து
வடமாலை சாத்திப்புட்டு
வாகைமரக் கரையோரம்
ஆறு மணி வரைக்கும்
ஆரும் காணாம
காத்திருப்பேன் மச்சான்...
காக்க வைக்காம
காத்தா வந்திரு மச்சான்...
-'பரிவை' சே.குமார்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தந்தையின் வலியை கேலிப் பொருளாக்குவதா?

காதலில் விழுந்த மகளை நினைத்துக் கண்ணீர் வடிக்கும் ஒரு தகப்பன் சினிமாக்காரனாக இருப்பதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறார். முகநூலில் கருத்துப் போர் நடத்த வாரத்துக்கு ஒரு நிகழ்வு கிடைத்துவிடுகிறது. இளவரசன் திவ்யா காதல் கதைக்கு பெரும்பாலும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். அந்தப் பெண் அவன் சாவதற்க்கு முன்னர் எனக்குப் போன் செய்தான் என்று சொல்லியிருக்கிறது. எதற்காக அப்படிச் சொன்னது... இதை சொல்வதால் அதற்கு என்ன லாபம் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். சரி முடிந்த கதைக்குள் செல்வதில் பயன் என்ன இருக்கிறது. இன்றைய பரபரப்புச் செய்திக்குள் போகலாம்.

இயக்குநர் சேரனின் மகள் தாமினி சந்துரு என்பவரைக் காதலிக்கிறார் அது அவரது விருப்பம்தான். பெற்றவர்களைக் கேட்டு காதலிக்க வேண்டும் என்றால் காதல் எதற்கு என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கும். காதலுக்காக நீதிமன்றம் ஏறுவது என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.


நான் காதலித்துத் திருமணம் செய்தவன்தான், காதலுக்கு எதிரியில்லை படிப்பு முடியட்டும் நானே திருமணம் செய்து வைக்கிறேன் என்று  சொன்னதாகவும் பின்னர் சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்பதால் அவன் வேண்டாம் என மகளிடம் சொன்னதாகவும் சேரன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

எப்பவுமே பெண் குழந்தைகள் அப்பா செல்லமாகவே வளர்கிறார்கள். எதுவாக இருந்தாலும் அப்பாதான் வாங்கித்தர வேண்டாம். எதாக இருந்தாலும் அப்பாவிடம்தான் சொல்லவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அப்படிப்பட்ட பெண்ணையும் அப்பாவை எதிரியாகப் பார்க்க வைக்கும் ஒன்று உண்டு என்றால் அது காதல் மட்டுமே...

எல்லாமே பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுக்கும் அப்பாவால் மகளுக்கு நல்ல குணமுள்ள மாப்பிள்ளை பார்க்கத் தெரியாதா என்ன... இதில் மட்டும் ஏன் இத்தனை அவசரம்? சந்துரு என்றில்லை எவனைக் காதலித்தாலும் அவன் நல்லவனா, கடைசி வரைக்கும் வைத்துக் காப்பாற்றுவானா என்று ஏன் சிந்திப்பதில்லை. பிரபலத்தின் மகள் என்றில்லை ஏழை விவசாயியின் மகள்களும் இப்படித்தான் ஏமாறுகிறார்கள்.

எனது அத்தை பெண் திடீரென்று ஒரு நாள் காணாமல் போனாள். அவள் ஊரைவிட்டு வெளியேற ஊரில் அவளுடன் சுற்றிய பெண்ணே உதவியிருக்கிறாள். அது பின்னால் தெரிய வர பேச்சு வார்த்தைகள் அற்றுப் போய்விட்டன. அவள் காணாமல் போன அன்று எங்கள் குடும்பமே அவமானத்தாலும் அவள் கொடுத்த துக்கத்தாலும் துடித்தது. எங்கெங்கோ தேடினோம்... குறி... ஜாதகம் என எங்கெல்லாமோ அலைந்தோம். அவளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. சில வருடங்களுக்குப் பிறகு ஒரு ஊரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவளது தம்பி போய் பார்த்து வந்தான். குடிகாரனுக்கு வாக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு கஷ்ட ஜீவனமாய் வாழ்க்கையை ஓட்டுவதாக பக்கத்து வீட்டுப்பெண் சொல்ல, அவளது சான்றிதழ்களை கொண்டு போய் இதையாவது வைத்துப் பிழைத்துக் கொள் என்று கொடுத்துவிட்டு வந்துவிட்டான்.. அதன் பிறகு தொடர்பில் இல்லை. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் அவள் ஓடியது ஒருபுறம் இருக்கட்டும்... அவளது அப்பா, அம்மாபட்ட கஷ்டங்கள் சொல்லிமாளாது.

இதே காதலுக்காக நாங்களும் இஞ்சினியரிங் படித்த ஒருவனை இழந்து இன்னும் அவன் நினைவால் தவித்துக் கொண்டிருக்கிறோம். அவனது இழப்பில் இருந்து மீளமுடியாத தந்தை ஹோட்டல் தொழில் செய்தாலும் நடைபிணமாகவே வாழ்ந்து வருகிறார். 

சரி விசயத்துக்கு வருவோம், சேரன் திரைப்படங்களில் இளவயது காதல்களை சொன்னதன் வலியை இப்போது அனுபவிப்பதாக பெண்ணைப் பெற்ற தந்தையர்களும், பெண்ணைப் பெறப் போகும் தந்தையரும், மகள்களை வைத்திருக்கும் அம்மாக்களும், மகள்களுக்கு அம்மாவாகப் போகிறவர்களும் அளாளுக்கு அள்ளி விளாசுகிறார்கள். அன்று சேரன் காட்டிய சினிமாவை எல்லாரும் பார்த்து பிரமித்துத்தான் போனோம்... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதேன்னு ஆளாளுக்கு புலம்பித் தள்ளினோம். அன்று யாருமே சேரன் அவர்களே இதுபோல படமெடுத்தால் நாளை நீங்கள் அனுபவிப்பீர்கள் எனச் சொல்லவில்லை.

எனக்குத் தெரிந்து சேரனின் திரைப்படங்கள் வாழ்க்கையைப் பிரதிபலித்தனவே தவிர காதலை அதிகம் சொல்லவில்லை... அதன்பின்னான பிரச்சினைகளையே அதிகம் பேசியது... அப்படியே காதலைச் சொல்லியிருந்தாலும் யாராலும் விமர்சிக்கப்படவில்லை என்பதே உண்மை. பொற்காலமும் தவமாய் தவமிருந்தும் சொல்லிச் சென்றது எதை... இளவயது காதலையா... அல்லது காதல் தவறில்லை என்பதையா... சேரனை விமர்சிப்பவர்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்.


இது சேரனுக்கு ஆதரவான பகிர்வு அல்ல... எத்தனையோ சேரன்கள் தங்கள் வாரிசுகளின் காதலால் கதறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது தொடரும் நிகழ்வுதான். காதலன்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காதல் கசந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு பெற்றோரிடம் வந்து நிற்பதும் வாடிக்கைதான். ஆனால் ஒரு தகப்பனின் கண்ணீரை நாம் கேலிக்கைப் பொருளாக்கிப் பார்ப்பது என்பது இப்போதுதான் அதிகம் நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு காரணம் வலையுலகம்தான்.

சினிமாக்கள் பொழுது போக்கிற்காக மட்டுமே எடுக்கப்படுகின்றன. அவற்றை நாம் யாரும் வாழ்வில் கடைபிடிப்பதும் இல்லை... கடைபிடிக்க வேண்டியதும் இல்லை... பார்த்தோமா ரசித்தோமா அத்துடன் அதைவிடுத்து நமது சராசரி வாழ்க்கைக்கு வந்துவிடுவோம். பதினாறு வயதுப் பெண்ணுடன் அறுபது வயதுக் கதாநாயகன் மரத்தைச் சுற்றி டூயட் பாடினால் நாமும் அதுமாதிரியா செய்கிறோம் இல்லை ஜேம்ஸ்பாண்ட் போல பறந்து பறந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமா... இல்லை அல்லவா... மேலும் நீ எடுத்த படத்தால் நாங்கள் கெட்டுவிட்டோம் என்று நம்மால் அறுதியிட்டுத்தான் சொல்ல முடியுமா... வேண்டுமானால கொலை கொள்ளைகள் நடக்கும் போது சினிமா கெடுத்துவிட்டது என்று கூறுவோம். அதற்காக படத்தில் காட்டினாய் அல்லவா அதனால் நீ அனுபவி என்று எப்படிச் சொல்லலாமா?.

ஒரு தகப்பனாய் தகப்பனின் வலி அறிந்தவராக நம்மில் யாருமே பேசவில்லை என்பதே வேதனைதான். என் மகளின் காதலுக்கு நான் எதிரியில்லை என்று சொன்ன தந்தையின் வலியை... அழுகையை கேலிப் பொருளாக ஆக்கி அதற்கான கருத்துக்களையும் பெற்று சந்தோஷப்படுகிறோம்... ஆண்டியாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் மகளைப் பெற்ற தந்தையின் வலி என்பது எல்லாருக்கும் ஒன்றுதான்.

நாளை இதே வலி நமக்கு வரும்போது எத்தனை பேர் ஏற்றுக் கொள்வோம் சொல்லுங்கள் பார்க்கலாம். அன்று நாம் மனதார வாழ்த்தி அணைத்துக் கொள்வோமா இல்லை அப்போது மட்டும் இது எனது குடும்பம்... என் மகள்... என் மகன்... என்று தந்தையின் வலியைப் பிரதிபலிப்போமா?

மகளோ மகனோ தாங்கள் தேர்ந்தெடுக்கும் இணை எப்படிச் சூழலிலும் தன் மீது கொண்ட காதலில் இருந்து இம்மியளவும் குறையமாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்டு அதை தனது பெற்றோரிடம் தெரிவித்து அவர்களின் அனுமதிபெற்று வாழ்க்கையை ஆரம்பித்தால் அந்த வாழ்க்கை இனிக்கும். இன்று காதலனுக்காக இத்தனை வருடம் கஷ்டப்பட்டு தங்களின் சுக துக்கங்களை நெஞ்சில் சுமந்து வாழ்ந்த பெற்றோரை ஒரு நொடியில் தூக்கி எறிந்து பேசும் வாரிசுகள் நாளை தங்களது வாரிசுகளை எப்படி நடத்துவார்கள்... எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொள்வார்களா... அப்போது மட்டும் என் குடும்பம் என் குழந்தைகள் என்று வாழ்க்கை வட்டத்துகுள் வந்துவிடுவார்கள் என்பதே உண்மை. அதற்கு சேரனும் விதிவிலக்கல்ல என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

பிரபலமாக இருப்பதால் பிரச்சினை சந்திக்கு வந்திருக்கிறது. எத்தனையோ ஏழை அப்பன்களின் வலிகளெல்லாம் வாழ்க்கையைக் கரைத்துக் கொண்டு போய்விடுகின்றன. மீடியாக்களும் பேசுவதில்லை... வலையுலகமும் பேசுவதில்லை.

காதலனுடன்தான் செல்வேன் என நீதிமன்றத்தில் அடித்துச் சொல்லியிருக்கிறார் சேரனின் அன்பு மகள். அப்படியே செல்லட்டும்... சந்தோஷமாக வாழட்டும்... வாழ்க்கை சிறக்கட்டும்... கடைசி வரை அந்தப் பையனுடன் வாழ்ந்து நான் நல்லவனைத்தான் காதலித்திருக்கிறேன் என்று பெற்றவர்களுக்கு நிரூபிக்கட்டும்... நாமும் வாழ்த்துவோம்.


நான் நேற்று முகநூலில் பதிந்த கருத்தையே இங்கும் சொல்லி முடிக்கிறேன்.

சினிமாக்காரன் என்பதால் ஒரு தந்தையின் வலி இங்கே சந்தி சிரிக்கிறது.

இதற்கு எதிர்மறையான விமர்சனங்களும் வரலாம். ஒரு மகளைப் பெற்ற தந்தையாக என் மனதில் தோன்றியதைத்தான் பதிந்திருக்கிறேன். இதில் என்னுடன் எல்லாரும் ஒத்துப் போகவேண்டும் என்று சொல்லவரவில்லை. மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்....
-'பரிவை' சே.குமார்.

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

தொடர்பதிவு : மகிழ்வான தருணங்கள்...

மகிழ்வான தருணங்கள் அப்படின்னு ஒரு தொடர்பதிவை தென்றல் சசிகலா அக்கா அவர்கள் தனது மகிழ்வான தருணங்களை எழுதி அதில் நம்மையும் எழுத அழைத்து மாட்டிவிட்டுவிட்டார்கள்... நானும் ஐந்து பேரை மாட்டிவிடணுமாம்... இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை எழாமல் ஆண், பெண் இருவரும் சமமாக ஆறு பேரை அழைக்கிறேன். பதிவிற்குள் செல்லும் முன்னர் மேளதாளம் முழங்க மாட்டிக்கொண்டவர்களை அழைத்துவிட்டு மெதுவாக பதிவிற்குள் செல்லலாம்....

மனசு முழுவதும் சந்தோஷமாக கீழே கொடுத்துள்ள உறவுகளை இந்தப் பதிவைத் தொடர அழைக்கிறேன்.



அப்பா இப்பத்தான் சந்தோஷமாக இருக்கு.... யான் பெற்ற இன்பம் இவர்களும் பெறுக...!

சரி வாங்க... நம்ம சந்தோஷ தருணங்களைப் பார்ப்போம்...


கணிப்பொறி மையம் வைத்திருந்த போதும் கல்லூரியில் வேலை பார்த்த போதும் பெரும்பாலும் விசுவல் பேசிக், ஜாவா, சி++ என்ற வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்ததால் பொழுது போக்குகள் நிறைந்த வலைப்பூவையோ முகநூலையோ பற்றி அறிந்து கொள்ளும் எண்ணம் எழவில்லை. 

தேவகோட்டையிலிருந்து சென்னை வந்து சிலகாலம் வேலை பார்த்து அங்கிருந்து என்னைப் பயணிக்க வைத்த வாழ்க்கைத் தேடல்  அபுதாபியில் கொண்டு வந்து நிறுத்தியபோது மனைவியும் பாப்பாவும் அம்மாவின் வயிற்றில் இருந்த விஷாலும் மட்டுமே மனசெல்லாம் நிரம்பி இருந்தார்கள்... 

இங்கும் இயந்திரத்தனமான வேலை... வேலை முடிந்ததும் களைப்பில் எப்படா அறைக்குச் செல்வோம் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்... வேலை... அறை என்ற இயந்திர வாழ்க்கைக்குள் இறுக்கமாய் அமர்வதாய் மனசுக்குள் தோன்ற கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அதிகம் தொடராத எழுத்தை மீண்டும் தொடர ஆரம்பித்தேன்... அதிகமான கதைகள் எழுதினேன். 

அந்தச் சமயத்தில் எனது நண்பன் கணேசன் வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்தான். அதைப் பார்த்ததும் எனக்கும் ஒரு ஆசை நாமளும் எழுதினால் என்ன என்ற எண்ணம் மேலிட எப்படி வலைப்பூ ஆரம்பிப்பது எனக் கேட்டு நண்பனுக்கு மின்னஞ்சல் செய்தேன். அவனும் எனக்கு உதவ, 2009 ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி கிறுக்கல்கள் என்ற வலைப்பூவை ஆரம்பித்து சின்னச்சின்ன கவிதைகளைப் பதிய ஆரம்பித்தேன்,  எனது முதல் பதிவிற்கு நிலாமதி அவர்கள் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தினார்கள். 

அதன் பின்னர் பின்னூட்டங்களும் நண்பர்கள் வட்டமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட பதிவு போதை தந்த உற்சாகத்தில் கிறுக்கல்களோடு நெடுங்கவிதைகள், சிறுகதைகள், மனசு என நான்கு தளங்களை ஆரம்பித்து எழுத ஆரம்பித்தேன். எனது கிறுக்கல்கள் தளத்தில் பதிந்த கவிதை ஒன்றை நாடோடி இலக்கியன் அவரது பகிர்வில் சிலாகித்திருந்தார். இதுதான் மற்றொரு தளத்தில் எனது பதிவிற்குக் கிடைத்த முதல் அங்கிகாரம்... நம்ம எழுத்தும் நல்லா இருக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு ஒரே சந்தோஷம்தான் போங்க... அம்மா இன்னைக்கு தோசை சூப்பரா இருக்குன்னு சொன்னா உடனே அம்மா சந்தோஷத்துல நம்ம புள்ள இன்னொரு தோசை சாப்பிடமாட்டானான்னு வேகமாக அப்போ முறுகலா ஒரு தோசை வாங்கிக்கன்னு கூடுதலா ஒண்ணு வைப்பாங்களே... அது மாதிரி கிறுக்கித் தள்ளியாச்சு...

அப்புறம் ஒரு தடவை பனித்துளி ஷங்கர் அவர்கள் நாலு வலைய வச்சிக்கிட்டு ஏய்யா நீ மாரடிக்கிறதுமில்லாம எங்களையும் வதையுங்கொலையும் வாங்கிறேன்னு செல்லமா சொன்னாரு... இவருக்கு பொறாமையா இருக்குமோன்னு நானும் விடாம நாலையும் இறுக்கிப் பிடிச்சிக்கிட்டேன்... அப்புறம்தான் தெரிஞ்சது அவரு சொல்றது உண்மைதான்... எல்லாத்தையும் ஒரு தளத்துல பதியலாமேன்னு முடிவு பண்ணி எதில் பதிவதென யோசித்தபோது நண்பர்களுடன் நடத்திய மனசு கையெழுத்துப்பிரதி அனுபவம் எப்போதும் சந்தோஷத்தின் உச்சம் என்பதால் மனசில் தொடர முடிவெடுத்து ஒரு தளத்துக்கு மாறினேன்.

அப்புறம் சீனா ஐயா அவர்களின் ஆசியோடு வலைச்சர ஆசிரியனாய் ஒரு வாரம்... அதீதத்தில் சிறுகதைகள்... கல்லூரியில் படிக்கும் போதே பத்திரிக்கைகளில் எழுதியிருந்தாலும் மீண்டும் பத்திரிக்கைகளில் சிறுகதைகள், கவிதைகள்... வம்சி வெளியிட்ட காகங்கள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் என்ற சிறுகதைத் தொகுப்பில் எனது கருத்தப்பசு சிறுகதை... கதம்பமாலையில் எனது கவிதைகளை சென்ற வார டாப்-10 என தொகுக்கும் ஆசிரியர் தொடர்ந்து இருமுறை மூன்றாவதாக தேர்ந்தெடுத்து பகிர்ந்தது, வலைச்சரத்தில் அதிகமுறை எனது பதிவுகளை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியது என எனக்கு வலைப்பூ கொடுத்த வசந்தம் அதிகம். 

குறிப்பாக இதன் மூலம் நமது சுக துக்கங்களில் பங்கெடுக்கும் உறவுகளைப் பெற்றது... நமது எழுத்தின் நிறை குறைகளை மனசார சொல்லிச் செல்லும் உள்ளங்களைப் பெற்றது... பெரும்பாலான நேரங்களில் மனவலியைக் குறைக்கும் மருந்தாக இருப்பது என வலைப்பூ வாழ்வில் முக்கியமானதாய் ஆகிப் போனது என்பதே உண்மை. 

வலைப்பூவிற்கு வரும் முன்னரே பத்திரிக்கைகளில் கதை, கவிதை எழுதியிருந்தாலும் கல்லூரியில் படிக்கும்போது 'ஒரு கட் அவுட் நிழலுக்குக் கீழே' என்ற எனது கவிதை முதன் முதலில் தாமரையில் வெளியான அந்த தினம் கொடுத்த சந்தோஷம் இன்னும் மறக்க முடியாத சந்தோஷம்....

இன்று எனது எழுத்துக்கள் உங்களால்தான் செம்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை என் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் சொல்லிக் கொள்கிறேன்... 

கடைசியாக... என்ன வலைக்குள் நுழைந்தால் வலையில் சிக்கிய மீனாக வெளியில் வரமுடியாமல்... வர நினைக்காமல் அதிலேயே மனம் லயிப்பது ஒருவித போதை என்றாலும் இந்தப் போதை தரும் சுகம் சந்தோஷமானது என்பதால் மனம் மகிழ்வுடன் மற்ற நண்பர்களின் எழுத்துக்களை வாசித்துக் கொண்டே இருக்கிறது....

சரி... இத்தோடு  நிறுத்திக்கலாம்.... சசிகலா அக்கா அவர்களின் அழைப்பை ஏற்று எழுதியாச்சு.... எனது அழைப்பை ஏற்று எல்லாரும் எழுதிருங்க... 

திண்டுக்கல் தனபாலன் சாருக்கு... உங்களை யாராவது அழைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏன்னா வலைப்பூக்களில் சுறாவளி சுற்றுப்பயணம் செய்பவர் நீங்கள்... அப்படி யாருமே உங்களை அழைக்கவில்லை என்றால் நீங்களும் எழுதுங்கள்....
-'பரிவை' சே.குமார்

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நண்பா... நண்பா...


இன்று நண்பர்கள் தினமாம்... முதலில் அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். 


கல்லூரியில் சேர்ந்த முதல் நாள்.. வகுப்பறையில் எனக்கு அருகில் அமர்ந்திருந்தவன் மெதுவாக நான் அண்ணாத்துரை, காளையார் கோவிலுக்கு அருகே கடம்பங்குளம் என்றான் சினேகமாக... நானும் சினேகமானேன். பின்னர் அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவன் நான் சேவியர், சூராணத்துல இருந்து வாரேன் என்றான். மூவரும் நண்பர்களானோம்.. அண்ணாத்துரையும் சேவியரும் இராம்நகரில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து சமைத்து சாப்பிட்டு தங்கிப் படித்தனர்.

சில நாட்கள் மெதுவாக நகர, ராமகிருஷ்ணன், முத்தரசு பாண்டியன், ஆதிரெத்தினம், திருநாவுக்கரசு, பிரான்சிஸ், நவநீதன் என எங்கள் நட்பு வட்டம் விரிந்தது. எங்கள் கல்லூரியைப் பொறுத்தவரை திருவாடானை, தேவகோட்டை எனத்தான் அணிகள் பிரியும்... பின்னர் அடித்துக் கொள்ளவும் செய்யும். ஆனால் எங்கள் வகுப்பில் புதுமையாக தேவகோட்டையே இரண்டு பிரிவாக ஆகி இதில் ஐந்து... அதில் ஐந்து... என மோதிக் கொண்டிருந்தது. எங்கள் அணி ஆசிரியர்களுக்குப் பிடித்த அணியாக இரண்டு துருவங்களுக்கும் நடுவில் பொதுவான அணியாக இருந்தது.

எப்பவும் ஜாலிதான்... பங்காளி, மாப்பிள்ளை என்ற உறவு முறைகளுடன் சந்தோஷமாக கழிந்தன கல்லூரி நாட்கள். எங்கள் நட்பு வட்டத்தில் எல்லாருடைய வீட்டிலும் சென்று தங்கி சந்தோஷமாகக் கழித்திருக்கிறோம். எங்களுக்குள் சாதி மதங்கள் எல்லாம் தடையாக வரவில்லை. மதியம் சாப்பிடும் போது யாருடைய சாப்பாடு யாருடைய கையில் என்றெல்லாம் பார்ப்பதில்லை எல்லாருடைய சாப்பாட்டையும் எல்லாரும் பகிர்ந்து சாப்பிடுவோம். எப்பவும் ஆதியின் சாப்பாடு அவன் கைக்குச் செல்வதே இல்லை... எங்களிடமே முடிந்துவிடும்.

காலையில் நானும் ராம்கியும் பேருந்து நிலையத்துக்கு எதிரே சைக்கிளில் காத்திருப்போம். நண்பர்கள் பேருந்தில் வந்து இறங்க, எல்லாப் பிரிவு பசங்களும் எங்களுடன் நட்பாக இருப்பார்கள் பதினைந்து இருபது பேர் கூட்டாக வருவோம். நான் சைக்கிளில் இருக்க, சைக்கிள் கேரியர் எல்லாம் நண்பர்களின் நோட்டுக்களால் நிறைய இரண்டு பக்க தோளிலும் நண்பர்கள் கை போட்டுக்கொள்ள சைக்கிளை ஓட்டாமலே கல்லூரி வந்து சேரும்... முத்தரசும் திருநாவும் அரசியலை அக்குவேர் ஆணிவேராக ஆராய்வார்கள். மெதுவாக எதையாவது கிளப்பிவிட்டுவிட்டால் போதும் கல்லூரி வந்து சேர்வதே தெரியாது. அனல் பறக்கும் விவாதத்தின் முடிவு எப்பொழுதுமே தெரிவதில்லை.

தீபாவளி வருகிறது என்றால் ஊதுபத்தியும் வெடியும் ஆதியின் கைகளில் எப்பவும் இருக்கும். எங்கு வைப்பான் எப்படி வைப்பான் என்பது எங்களைத் தவிர யாருக்கும் தெரியாது. சரியாக வெடிக்க வேண்டிய நேரத்தில் வெடிக்கும். அதே போல் ஏப்ரல் முதல் தேதி பெரும்பாலும் உஜாலா பாட்டில் வாங்கி வந்துவிடுவார்கள்.  பிரின்ஸ்பால்கூட உஜாலாவில் குளித்திருக்கிறார்.

வகுப்புக்குக் கட் அடித்து விட்டு பிள்ளையார்பட்டிக்கு சைக்கிளில் பயணித்தது, பிரான்சிஸ்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது எல்லாரும் அவன் வீட்டில் போய் இருந்தது, கல்லூரிக் கடைசி நாளில் காரைக்குடிக்கு சினிமாவுக்குச் சென்றது, கவிதைப் போட்டிகள் கட்டுரைப் போட்டிகள் மாறு வேடப் போட்டிகளில் யாராவது ஒருவர் கலந்து கொள்ள எல்லாரும் தூண்டுதலாய் இருந்தது... கல்லூரி ஆசிரியரைப் பார்த்து சில்வர் பிளஸ் என்று சொல்லி அதற்காக ஒருநாள் பேருந்து நிலையத்துக்கு எதிரே வாங்கிக் கட்டிக் கொண்டது என இன்னும்... இன்னும்... சொல்லிக் கொண்டே போகலாம்.

அண்ணாத்துரையை எனது திருமணத்திலும் பின்னர் அவனது திருமணத்திலும் சந்தித்ததோடு சரி. சேவியர் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்திருப்பதாகக் கேள்வி, ஆதி திருவாடானையில் ஐயப்பன் கோவில் பூசாரியாக இருக்கிறான். திருநாவின் திருமணத்திற்கு ஊருக்குப் போய் வந்தேன். பிரான்சிஸ் பெங்களூரில் இருக்கிறானாம். ராம்கி எங்கிருக்கிறான் யாருக்குமே தெரியவில்லை, நவநீதன் அ.தி.மு.க. வழக்கறிஞராக காளையார்கோவிலில் இருக்கிறான். போனில் சிலமுறை பேசியிருக்கிறேன். முத்தரசு பாண்டியனை அடிக்கடி சந்திப்பேன். ஏனென்றால் தேவகோட்டையில் வழக்கறிஞராக இருக்கிறான். 

எல்லாருடனும் மீண்டும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள ஆசை அதிகமிருக்கிறது. ஒரு மாதம் விடுமுறையில் ஊருக்குச் செல்லும் போது நமக்கான வேலைகள் திரும்பி வரும்வரை சிறகடித்துப் பறக்கின்றன... எங்கே தேடுவது. பங்காளிகளும் மாப்பிள்ளைகளும் இன்னும் மனசுக்குள் அதே உரிமைகளையும் நட்பையும் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே எங்கிருந்தாலும் சந்தோஷமாய் இருக்கள்... உங்கள் வாழ்க்கை சிறக்கட்டும்.

ம்.... இன்னும் சிலரை சொல்லமல் போவது நட்புக்கு அழகல்லவே... என்னில் கரைந்த மற்றவர்களில் முக்கியமானவன் கரு.முருகன், படிக்கும் காலத்திலும் கல்யாணத்துக் முன்னரும் எந்நேரமும் இருவரும்தான் ஒன்றாகச் சுற்றுவோம். தேவகோட்டைக் கல்லூரி தமிழ்த்துறையில் பணிபுரிகிறான். எங்கள் நட்பில் இடையில் சிறிய விரிசல் வந்து தற்போது எப்பவும் போல் தொடர்கிறது.

மனசு கையெழுத்துப் பிரதி நடத்த நாங்கள் ஆசிரியர் குழு அமைத்து வெற்றிகரமாக இரண்டு வருடங்கள் இதழ் நடத்தினோம். அதில் ஆசிரியர்களாக இணைந்த இளையராஜா, அம்பேத்கார், பிராபாகரன் மூவரும் அருமையான நண்பர்கள்... இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்கு மட்டுமல்ல முருகனும் தெரியவில்லை.

மேலும் எங்கள் இதழில் ஆசிரியராக இருந்த சுபஸ்ரீ, நல்ல தோழி, எதற்கும் பயப்படாதவர். தற்போது வங்கிப் பணி, இடையில் தேவகோட்டைக்கு வருவாராம் ஐயா வீட்டிற்குச் செல்லும் போது அம்மா சொல்வார்கள். 

தினமும் கல்லூரி முடிந்ததும் நாங்கள் கூடும் இடம் எங்கள் ஐயா வீட்டில்தான். ஐயாவுடன் சில பல விவரங்கள் பேசுவதுடன் எங்களுக்குள் பேச்சு அரட்டை என சந்தோஷமாக கழிந்த தினங்கள் அவை. முருகன், சுபஸ்ரீ, கனிமொழி, அன்பு அண்ணன், தமிழ்குமரன், பார்த்தீபன், மணிவாசகன், மணி மேகலை  என தனி நட்பு வட்டம் கல்லூரிக்கு வெளியேயும் இருந்தது. 

எத்தனை சந்தோஷமான நாட்கள் அவை.... நட்பே எங்கிருக்கிறாய்....?

இணைய நட்புக்களுக்கும் என் இனிய நட்புக்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

-'பரிவை' சே.குமார்.

உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிதான்...!- ஷாரூக்

இந்த உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார் மட்டுமே என்றார் பாலிவுட் கிங் எனப்படும் ஷாரூக்கான். ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்து திரைக்கு வரவிருக்கிறது 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம். 

இந்தப் படத்துக்கான அனைத்து விழாக்களும் முதலில் சென்னையில் நடப்பது போலவே ஏற்பாடு செய்துள்ளார் ஷாருக்கான். படத்தின் நாயகி தீபிகா படுகோனேவுடன் இன்று சென்னை வந்த ஷாரூக்கான், விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 


என் அம்மா பிறந்த ஊர் ஹைதராபாத். தீபிகாவுக்கு சொந்த ஊர் பெங்களூர். இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் சத்யராஜ் தமிழ். இந்தப்படம் சம்பந்தப்பட்டவர்கள் தென் இந்தியர்கள். தென் இந்தியர்கள் எல்லோரும் இணைந்து ஒரு இந்தி சினிமா செய்திருக்கிறோம். 

தமிழ்நாட்டில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அஜீத் எனக்கு நல்ல நண்பர். மணிரத்னம்,சந்தோஷ் சிவன் என்று என் மனதுக்குப் பிடித்த நண்பர்கள் இங்கு நிறைய பேர் இருக்கிறார்கள் என்றார். 

தீபிகா படுகோனிடம், "கோச்சடையான், சென்னை எக்ஸ்பிரஸ் என்று இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்திருக்கிறீர்கள். நீங்கள் பணியாற்றிய விதத்தில் யார் பெஸ்ட் என்று நினைக்கீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

 தீபிகா சற்று தயங்க, உடனே வந்த ஷாருக்கான் மைக் பிடித்து, இந்த கேள்விக்கு தீபிகாவால் பதில் சொல்ல முடியாது. நானே சொல்கிறேன். உலகத்திற்கு ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினி சார்தான். இது எல்லோருக்கும் தெரியும்.


ரஜினி சாருக்கு ஜப்பானில் இருக்கும் ரசிகர்களை கண்டு நான் வியந்திருக்கிறேன். தனித்துவம் வாய்ந்த அந்த மனிதரை கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்தது. அதனால்தான் லுங்கி டான்ஸ் ஒன்றுக்கு ஆடியுள்ளேன். இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த பாடலுக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் ரஜினி சாருக்கு என்னால் முடிந்த ஒன்றைச் செய்த திருப்தி இருக்கிறது என்றார்.

செய்திக்கு நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
படங்களுக்கு நன்றி : கூகிள் இணையம்
-'பரிவை' சே.குமார்

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஒத்தை மரம்



ஊருக்கு வெளியே
தனியாய் நிற்கும்
ஒத்தை மரம்
கூந்தலில் சூடிய
ஒற்றை ரோஜாவாய்
தனி அழகுதான்...

பூக்கும் காலத்தில்
பாலைக்குள் சோலையாய்
பசுமை போர்த்தி
நிற்கும் அழகே அழகு...

மரக்கொரங்குக்கும்
கயிறு ஊஞ்சலுக்கும்
கிரிக்கெட்டுக்கு 
ஸ்டெம்புக்கும்
மதிய நேர 
குட்டித் தூக்கத்துக்கும்
எப்பவும் எங்களுடன்
இணைந்தே இருக்கும்....

ஆட்டுக்கு கொலை
அறுக்கப் போய்
அருவாக் கம்பு
தவறி விழுந்து
கழுத்தறுபட்டு 
செத்துப் போனான்
அயோத்தி...

அன்னைக்கு பிடிச்சது
மரத்துக்கு ஏழரை...
அயோத்தி பேயா
இருக்கானாம்...
வில்லுக்கம்பு 
வெள்ளச்சாமியும்
பாண்டி முனியும்
அதிலே இருக்காம்...

கதைகள் வளர
மரம் தனிமைப்பட்டது...
விளையாட்டு இடமும்
மாறி நாளாச்சு...

இரவில் அலறும்
அந்தையும்
எப்போதாவது கேட்கும்
ஒருவித சத்தமும்
பிறக்கும் பிள்ளைக்கும்
சொல்ல வைத்தது
ஒத்த மரத்துல
பூச்சாண்டி இருக்கான்னு...

ஊருக்கே அழகுதான்
ஒத்த மரம்...
மனித மனங்கள்
பயம் சுமந்து
ஒதுக்கி வச்சாலும்
இன்னும் நிற்கிறது
எப்பவும் போல் 
பசுமை சுமந்து...
-'பரிவை' சே.குமார்.