மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 அக்டோபர், 2019

மனசு பேசுகிறது : இணையத்தில் பொங்கல் வைக்காதீர்

பாடல்கள் தொடர் எழுதலாம் இல்லைன்னா பிகில், கைதின்னு விமர்சனம் எழுதலாம்ன்னு யோசிச்சப்போ, இந்தத் தீபாவளிக்கு நம்ம கதைகள் சில மின், இணைய இதழ்களில் வெளிவந்து மகிழ்வைக் கொடுத்தது. அதனால அதோட லிங்கை இணைப்போம்ன்னு முடிவு பண்ணி எழுத ஆரம்பிக்கும் போது சுஜித் பற்றியும் அதன் பின்னான முகநூல், டுவிட்டர், வாட்ஸப் அரசியல் பற்றியும் கொஞ்சம் எழுதலாம்ன்னு தோணுச்சு.

இந்த வருடத் தீபாவளி பெரும் சோகத்துடன் முடிவடைந்து இருக்கிறது. சுஜித்தின் போராட்டமும் சுஜித்துக்கான போராட்டங்களும் தோல்வியில் முடிந்து பெரும் சோகத்தையே விதைத்திருக்கிறது. பாவம் அந்தப்பிள்ளை அது கருவறை இருட்டு அல்ல.. கல்லறை இருட்டு என்பது தெரியாமலேயே உள்ளுக்குள் இருந்திருக்கிறான்... பிஞ்சு மனசுக்குள் என்ன என்ன நினைத்திருக்கும்..? எத்தனை பயந்திருக்கும்...? இனிமேலும் வேறு எக்குழந்தைக்கும் நடக்கக்கூடாத கொடுமை இது... இந்த விஷயத்தில் அரசின் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்.

அதிமுக அரசு மீது எப்போதும் நம்பிக்கை இருப்பதில்லை... அவர்களை விரும்புவதுமில்லை என்றாலும் அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கயே இருந்தது... கூடவே காங்கிரஸின் ஜோதிமணியும் இருந்தது... அரசின் துரித நடவடிக்கைகள் என அரசு அதனால் முடிந்த எல்லாமே செய்து கொண்டுதான் இருந்தது... அவர்களைக் குறை சொல்ல, அரசியலாக்க இதில் ஒன்றுமேயில்லை என்பதை முதலில் உணருங்கள்.

ஆழ்குழாய்க்குள் விழுந்த குழந்தையை எடுக்க நம்மிடம் அவ்வளவு அதிநவீன இயந்திரங்கள் இல்லை என்றாலும் கடும் பாறையையும் துளைத்துத்தான் முயற்சித்தார்கள்... அங்கே உழைத்தவர்களுக்கு எல்லாம் சுஜித் தங்களின் குழந்தையாகத்தான் தெரிந்தானே தவிர, மாற்று மதத்தானாக இல்லை என்பதை உணருங்கள். சமூக வலைத்தளமும், ஜியோவின் அளவில்லா இணையத்தள வசதியும் இருப்பதால் எதை வேண்டுமானாலும் எழுதாதீர்கள். யாருமே பிஞ்சுக் குழந்தையைக் கொன்று அரசியல் செய்ய நினைக்க மாட்டார்கள் என்பதை உணருங்கள். வீட்டுக்குள் படுத்து விட்டத்தை முறைத்துக் கொண்டு பொங்கிப் பொங்கல் வைக்காதீர்கள்.

சங்கிகளின் செயலென்றும் பிரதமர் சொல்லித்தான் நிகழ்ந்ததென்றும் அதிமுக டில்லியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்றும் கிறிஸ்தவக் குழந்தை என்பதால் இந்தப் பாரபட்சம் என்றும் ஆளாளுக்குக் கதை கட்டிக் கொண்டே போவதை முதலில் நிறுத்துங்கள்... இதில் என்ன வேதனை என்றால் படித்தவர்களும், நம் நட்பில் இருப்பவர்களும் இதையே சொல்வதுதான். இதில் பலர் மதம் சார்ந்து நிற்கிறார்கள். பின்ன என்னத்தைப் படித்தார்கள் இவர்கள்..?

அவனவனுக்கு ஆயிரம் விஷயம் இருக்கு அரசியல் பண்ண... பச்சைக் குழந்தையைக் கொன்றுதான் அரசியல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எவனுக்குமில்லை... ஒரு ஓட்டுக்கு இப்போது கொடுப்பதை அடுத்த முறை இரட்டிப்பாக்கினால் இங்கு பொங்கும் நீங்களும் சுயமிழப்பீர்கள் என்பதை மறக்காதீர்கள். அரசியல்வாதிகள் மீது காழ்ப்புணர்ச்சி இருக்க வேண்டியதுதான்... அதற்காக அதை இந்தச் சிறுவனின் மரணத்தில் கொட்டித் தீர்க்காதீர்கள். மதக் கழிவுகளை மக்காத குப்பையெனக் கொட்டாதீர்கள். 

நிகழ்வு நடந்த இடத்தில் பலர் இரவு பகலாக உறக்கம் துறந்து... குடும்பம் மறந்து... தீபாவளி மறந்து தங்கள் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே குழந்தையை மீட்கப் போராடியவனுக்கும் சுஜித் போல குழந்தை இருந்திருக்கலாம்... அதுவும் அப்பா தீபாவளிக்கு ஏன் வரவில்லை என ஏங்கியிருக்கலாம்... நிகழ்வின் இடத்தில் கூட இல்லாமல் எங்கோ ஓரிடத்தில், அடுத்த மாநிலத்தில், அடுத்த நாட்டில் அமர்ந்து கொண்டு அள்ளி வீசாதீர்கள் உங்கள் கள்ளிப்பால் வார்த்தைகளை.

தங்கள் வீட்டில் சிறுகுழந்தை இருக்கும் போது அந்த ஆழ்குழாயை மூடி வைக்க வேண்டும் என்ற சிறு எண்ணம் கூட இல்லாமல் இருக்கும் நம்மை முதலில் திருத்த முயற்சிப்போம். பிறகு நாட்டுக்கு வருவோம்... அங்கே பார்... இங்கே பார்... ரஷ்யாவைப் பார்... அமெரிக்காவைப் பார்... நீ ஜப்பானில் பிறந்திருக்கலாம்... தாய்லாந்தில் பிறந்திருக்கலாம் என்றெல்லாம் என்னென்னவோ எழுதுகிறீர்களே... அந்தப் பாலகன் விழுந்தது முதல் போராடியவர்களைக் கேலி பண்ணுவது போலில்லையா உங்களின் பொங்கல். எந்த விஷயத்துக்கும் பொங்கும் முன் முதலில் யோசியுங்கள்... சரியெனப்பட்டால் பொங்குங்கள்... எதையும் ஆளாளுக்குப் பேசுவதன் மூலம் சரியாக்கப் பார்க்காதீர்கள்.

அடிபட்டு கிடக்கும் ஒருவன் முன் நின்று செல்பி எடுத்து அதைப் பகிர்பவர்கள்தாம் நாம் என்பதை உணருங்கள். இங்கே இருவர் சண்டையிட்டு ஒருவர் மரணித்தபோது சண்டையை விலக்கி விடாமல் வீடியோ எடுத்த அறை நண்பர்கள் அத்தனை பேரையும் தூக்கிச் சிறையில் போட்டார்கள்... அது முடியுமா நம்நாட்டில்...? 

இங்கே பத்திரிக்கையில் எந்தச் செய்தி வரணும் எது வரக்கூடாது என்பதையெல்லாம் அரசு முடிவு செய்யும்... நம்மூரில் இஷ்டத்துக்கு எதுவும் எழுதலாம்... கேட்டால் பத்திரிக்கை சுதந்திரம்... இங்கே அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச முடியாது... நாம பிரதமரையும் நாட்டையும் எவ்வளவு இழிவாக வேண்டுமானாலும் பேசலாம்... 

முதலில் நமக்கு இருக்கும் சுதந்திரத்தை நல்ல விஷயத்துக்குப் பயன்படுத்துங்கள். விஷத்தைக் கக்கி வீரியமாக்கப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.

சுஜித் காப்பாற்றப்படாமல் போனதற்கு மதமோ மனிதர்களோ காரணமில்லை... பெரும் முயற்சியில் ஏற்பட்ட தடைகளும் குழறுபடிகளுமே காரணம் என்பதை உணருங்கள்... இதில் மதத்தை நுழைத்து மனிதத்தைக் கெடுக்காதீர்கள். 

தயவு செய்து வீட்டில் உக்கார்ந்து கொண்டு வீர் வசனங்களை எழுதாதீர்கள்... மண்ணுக்குள் மல்லுக்கட்டிய மனிதர்களை மனதில் நினையுங்கள்... உங்கள் வாந்தியை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்... இணையத்தில் துப்பித் தொலையாதீர்கள்.

சுஜித்... 

சென்று வா மகனே என்று சொல்ல மனசு வரவில்லையடா... வென்று வருவாய் என்றல்லாவா நினைத்திருந்தோம்... வேதனையையே கொடுத்துச் சென்றுள்ளாய்... வலிக்கிறதடா மகனே... உன் இழப்பும் அதனை அரசியலாக்கும் மதமூடர்களின் செயல்களும்.

மீண்டும் பிறந்து வா மகனே...

*****

தேன்சிட்டு மின்னிதழ் தீபாவளிச் சிறப்பிதழில் எனது சிறுகதை 'வெட்டிச்செலவு' வெளிவந்திருக்கிறது.

சிறுகதைகள்.காம் தளத்தில் எனது 'காத்தாயி' சிறுகதை சமூகநீதி என்னும் கதைத் தொகுப்புக்குள் பகிரப்பட்டிருக்கிறது.

அகல் மின்னிதழ் தீபாவளி சிறப்பிதழில் எனது 'தீபாவளிச் சிந்தனைகள்' என்னும் கட்டுரை வெளிவந்திருக்கிறது.

மின்கைத்தடி இணைய இதழின் தீபாவாளி சிறப்பு மலரில் சிறப்புச் சிறுகதையாக எனது 'ஜீவநதி' என்னும் கதை வெளிவந்திருக்கிறது. ஜாம்பவான்களின் எழுத்துக்கு இடையே என் கதையும்... இதற்கென இரண்டு நாட்களுக்கு முன்னரே போஸ்டர் தயார் செய்து அதை முகநூல் பக்கத்தில் பகிர்ந்து  கொண்டார்கள்... முதல் முறை எழுத்தாளனாய் போஸ்டருக்குள் சிரித்ததும் நல்லாத்தான் இருந்தது...

எங்கள் பிளாக்கில் கேட்டு வாங்கிப் போடும் கதையில் என் 'கருப்பர்' பகிரப்பட்டிருக்கிறது.

எங்கள் பிளாக் தவிர மற்ற சிறுகதைகள் இங்கு (மனசு தளத்தில்) எழுதியவைதான் என்பதால் மீண்டும் பகிரவிரும்பவில்லை. அகல் கட்டுரை அடுத்த பதிவாய்...

மகிழ்வான தீபாவளிதான் எழுத்தைப் பொறுத்தவரை... குடும்பத்துடன் கழிக்க முடியாத மன வருத்தமான தீபாவளிதான் எப்போதும் போல... கூடுதல் வலியாய் சுஜித்தும்...

என்ன சொல்ல... கடக்க வேண்டியவை ஆயிரம் இருக்கு... கலைய வேண்டியவையும் ஆயிரம் இருக்கு... அதை நோக்கிப் பயணிப்போம்... அதைவிடுத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம் என எண்ணப்படி எதையும் அள்ளியெறிய வேண்டாம்... நாமெல்லாம் ஒருதாய் மக்கள் என்பதை மறக்காதீர்கள்... மதத்தைச் சுமக்காதீர்கள்... மனிதத்தைச் சுமந்து பயணியுங்கள்... சுஜித்தின் மீளாத்துயரை உங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தாதீர்கள்.
-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என் மனதில் என்னவெல்லாம் நினைக்கின்றேனோ, அதை இங்கே பதிவாக வாசிக்கிறேன்... நன்றி குமார்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

# சங்கி சூல் தமிழ்நாடு #

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

# சங்கி சூல் தமிழ்நாடு #

ஸ்ரீராம். சொன்னது…

குழந்தை இறந்த சோகம் தமிழ்நாடெங்கும் விரவி இருக்கிறது.  மதுரைத்தமிழன் பதிவு படித்தீர்களா குமார்? 

Avargal Unmaigal சொன்னது…

விஜய பாஸ்கர் மற்றும் ஜோதிமணி செயல்களை தவிர மற்ற செயல்கள் எல்லாம் மிக கேவலமாகத்தான் இருக்கிறது