மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 2 அக்டோபர், 2019

பிக்பாஸ் : முகனின் 'இரு மீன்கள் ஒரு ஓடையில்...'

Image result for bigg boss day-100 images

100 வது நாள் காலை...
'ஏய் மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா...

ஹே மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
பயர் பத்திக்கிருச்சா...'

என்ற மாரி-2 படப் பாடல் ஒலிபரப்பப்பட, வெளியில் இருந்து ஆட்கள் வந்து ஆட, உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் விருந்தாளிகளாய் வந்திருக்கும் வெளியே போன போட்டியாளர்களும் ஆடினார்கள். நைனா மோகன் நயமாய் ஆடினார்.

உலகத்துலயே சோபாவுல உக்கார்ந்து யோகா பண்ணும் ஒரே ஒருத்தியான மீரா மிகவும் சிரத்தையோடு யோகாவில் எதையோ உருட்டித் திரட்டி மனசுக்குள் தள்ளிக் கொண்டிருந்தார். சாண்டியும் முகனும் அவர் உருட்டித் திரட்டியது போல் அவருக்கு நெருக்கமாய்ச் சென்று உருட்டினார்கள். விழித்துப் பார்த்தவர் அதிர்ந்தார்.

அவர் உருட்டித் திரட்டும் போது அவரைச் சுற்றி ஒரு அதிர்வு இருக்குமாம்... அதைக் கெடுத்துட்டீங்கன்னு கத்துச்சு... அதன் பின் பாத்ரூம் கழுவும் ஹார்பிக்கை எடுத்து வா மீரா இதை வச்சி பல் விளக்கு கக்கூஸே சுத்தமாகும் போது உன் வாய் சுத்தமாகாதான்னு சாண்டி மீராவை விரட்டிக் கலாய்த்துக் கொண்டிருந்தார். ஆமா இதெல்லாம் என்ன டிரஸ்ங்க மீரா...

சரி வெட்டியா இருக்கானுங்களே ஏதாவது கொடுப்போம்ன்னு டம்மி கடிகாரத்தை வச்சி ஒரு மணி நேரத்தைச் சரியாக் கணிங்கடா... ரெண்டு பேர் ஒரே நேரத்தில் நேரத்தைக் கணிக்கலாம்... மற்ற இருவர் அதைக் கெடுக்கலாம்ன்னு செம டப்பான டாஸ்க் கொடுத்தாரு... லாஸ்லியாவும் ஷெரினும் முகனைப் படாதபாடு படுத்தினாங்க... அவருதான் 53 நிமிசத்துல ஒரு மணி நேரத்தைக் கணக்கிட்டாராம். அவரே வெற்றியாளர்.

எல்லாரும் வெளியில உக்காந்து கதை பேசிக்கிட்டு இருந்தாங்க... அப்ப பிக்பாஸ் முகன் உங்க சேரை மீராவுக்குப் பக்கத்தில் போட்டு உக்காருங்கன்னு சொன்னதும் அதன்படி செய்தார்கள்... அடுத்து சாண்டி நீங்க எழுந்து முகன் பின்னால நில்லுங்கன்னு சொல்ல, சாண்டியும் எழுந்து போய் நின்னார். பாத்திமா இப்ப வெளிய போகும் அளவு இடமிருக்கான்னு கேக்க, அவரும் இருக்கு பிக்பாஸ் என்றதும் அப்பப் போயி மைக்கை எடுத்து மாட்டிக்கிட்டு வாங்கன்னு சிரிக்காமச் சொன்னார். நான் ரொம்ப நேரம் சிரிச்சேன்.

பிக்பாஸ் அடித்த நகைச்சுவையில் இந்தச் சுவையே அதிகம் இனித்தது. செம.... எல்லாரும் கெக்கேபிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க.. நானுந்தான்.

முதல் நாள் அழுகாச்சி காவியம் படைத்த பிக்பாஸ், நீங்க உங்களை மறந்து சிரித்த காட்சிகள்ன்னு அகம் டிவியில் ஓட்டினார் பிக்பாஸ்.... ஒவ்வொரு பிரேமுக்கும் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஷெரினின் கெவுனைப் போட்டுக் கொண்டு வள்ளி திருமண நாடகத்தில் வரும் முருகனைப் போல் திரிந்த கவினைப் பார்த்து ஷெரின் கண்ணீர் வரச் சிரித்தார்.

அப்புறம் எல்லாரையும் செயல்முறை அரங்கு வரச்சொல்லி அங்கிருக்கும் மகிழ்வான தருணங்களின் போட்டோக்களைப் பார்த்து உங்கள் மனதின் எண்ணங்களைச் சொல்லுங்கன்னு பிக்பாஸ் சொல்ல, பேசிய எல்லாருமே சாண்டியே இங்கே வடிவேலாய்... எங்களை எல்லா நேரத்திலும் சிரிக்க வைத்தார்ன்னு சாண்டி புகழ் பாடினாங்க.

உண்மைதான்... அதிரடி டாஸ்க் இல்லாத மொக்கைத்தனமான பிக்பாஸ் வீட்டில் லாலா... லாலான்னு அப்பப்ப புலம்பிக் கடுப்படித்தாலும் பெரும்பாலான நேரங்களில் மகிழ்வாய் நகர்த்த பிக்பாஸ்க்குப் பெரிதும் உதவியவர் சாண்டிதான். அவர் இல்லையேல் சீசன்-3 கவிழ்ந்தடிச்சிப் படுத்திருக்கும்... எத்தனைநாள் கவினின் கண்றாவிக் காதல்களைப் பார்த்திருக்க முடியும். சொல்லுங்கள்...

இந்த நூல் வெளியீடுகளில் எல்லாரும் பேசிய பின்னர் எழுதியவர் ஏற்புரையை எவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு வழங்குவாரோ அப்படியான சூழலில் சாண்டி... கண் கலங்கி, வார்த்தைகள் வராது தவித்து முகினை அணைத்துப் பின் எல்லாரையும் அணைத்து தன் மகிழ்வை ஆனந்தக் கண்ணீரோடு வெளிக்காட்டினார் சாண்டி... தமிழ்ச் சினிமாவில் சரியானதொரு வாய்ப்புக் கிடைத்தால் போதும்.. வடிவேலு இடத்தில் சாண்டி சாதிப்பார்.

எல்லாரும் கல்யாணத்துக்குப் போற மாதிரி புதிய உடைகள் அணிந்து காத்திருந்தார்கள். பெண்கள் கூந்தலை விதவிதமாய் அலங்கரித்திருந்தார்கள். லாஸ்லியாவின் சிகை அலங்காரம் ஆஹா... என்ன அழகு... நல்லாயிருக்க தெருவுல பைப் போட வெட்டிட்டு மூடுன மாதிரி... சரி விடுங்க... எல்லாரும் காத்திருந்தார்கள்.

வெளியில உங்களுக்காக ஒரு பார்ட்டி இருக்கு.. நீங்க தயாரான்னு பிக்பாஸ் கேட்க, எல்லாரும் ஆமெனச் சொல்ல, கேக்கலை சத்தமாச் சொல்லுங்கன்னு ஒண்ணாப்பு ஆசிரியர் பிள்ளைங்களைக் கத்தச் சொல்ற மாதிரிக் கத்தவிட்டார் பிக்பாஸ்.

வெளியே...

திவாகர், பிரியங்கா உள்ளிட்ட சூப்பர் சிங்கர் பாடகர்கள் வந்திருந்தார்கள் சிறிய இசைக்குழுவுடன்... இவர்கள் அங்க போய் எல்லாரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அன்பைப் பறிமாறிப் பின்னர் பாடல்கள் பாட ஆரம்பித்தார்கள்... அருமையாய், அழகாய், ஆனந்தமாய் நகர்ந்தது அந்த நிமிடங்கள்.

திவாகர் என்னப்பா இப்படிக் குண்டாயிட்டே... ரொம்பப் பூரிப்பு போல...

பிரியங்கா இளைத்துக் கொண்டே போனாலும் ஸ்வர்ணலதா மாதிரி அந்தக் குரல் மட்டும் எல்லாரையும் ஈர்க்கத்தான் செய்கிறது.

முகனின் பாடலான 'நீதான்... நீதான்... நீதானே எனக்குள்ளே...' பாடலைப் பாடிய பாடகி, முகனை ரொம்பவே விரும்பினார்... அபி இல்லாத தைரியத்தில் அணைத்தும் கொண்டார். அப்போது அவர் கண்ணுக்குள் நூறு நிலவு.

முகனின் பாடல் முதல் முறை இசையில்லாமல் அவர் பாடும்போதே என்னை ஈர்த்தது. மறுமுறை கவின், சாண்டியின் இசையுடன் பாடிய போது இன்னும் ஈர்த்தது. நேற்று சேர்ந்த இசையுடன் கேட்க்கும் போது ஆஹா... தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு மெகா ஹிட் பாடல் கிடைத்திருக்கிறது என்றே ரசிக்க வைத்தது.

'நீதான்... நீதான்... நீதான்டி எனக்குள்ளே...
நாந்தான்.... நாந்தான்... நாந்தானே உனக்குள்ளே...
குழிதான் உன் கன்னத்துல விழுகுதடி...
நீ சிரிக்கயிலே வலிதான் என் நெஞ்சுக்குள்ள எழுகுதடி...
...
...
சத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆளைக் கொல்லுதடி...
...
...
இரு மீன் ஒரு ஓடையில்
கண்ணீரில் தன்னை இழக்க...
...
...
என்னை மறந்தே...
என்னை மறந்தே...'

என முகன் அந்தப் பாடலைப் பாடும் போது அவரைக் கட்டிப் பிடித்து 'லவ் யூ டா'ன்னு சொல்லணும் போல இருந்தது. பாடலைப் பாடும் போது 'இரு கண்கள் ஒரு ஓடையில்' என்ற வரிகளை முகன் உச்சஸ்தாயியில் பாட, அருகிலிருந்த பாடகர்கள் கத்தி ஆர்ப்பரித்தார்கள். முகனைத் தவிர இவ்வளவு ஆழமாய்ப் பீல் பண்ணி பாடுவது மற்றவர்களுக்கு அவ்வளவு எளிதல்ல.... செமை... நீ நல்லா வருவேடா. 

பிரியங்கா 'மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக் கண்டேன்' என சின்னச் சின்ன வண்ணக்குயிலை ஆரம்பித்து,

'மன்னவன் பேரைச் சொல்லி.. மல்லிகை சூடிக் கொண்டேன்... 
மன்மதன் பாடல் ஒன்று.. நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்...' 

என தன் காந்தக் குரலில் பாடிய போது எனை மறந்தேன்... இந்தப் பெண்ணுக்குத்தான் என்ன வசீகரமான குரல். உடம்பையும் பார்க்கணும் பிரியங்கா... அப்பத்தான் இந்தக் குரலை இன்னும் இன்னுமாய் நாங்கள் ரசிக்க முடியும்.

அதன் பின் சாண்டிக்காக லாலாவை நினைத்து 'கண்ணான கண்ணே ...' பாட ஆரம்பித்து...
'நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்

போர்வைகள் போத்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்

எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

ஆராரிராரோ ராரோ
ராரோ ஆராரிராரோ'
என நம்மைக் கண்ணீரில் நனைய விட்டார் திவாகர்.

பாட ஆரம்பித்ததும் முகனை விட்டு லாலா போட்டோ ஒட்டிய தலையணையை எடுத்து வர வைத்து அதைக் குழந்தையாகப் பாவித்து சாண்டி நடனமாடினார்... உணர்ச்சிப்பூர்வமான நடனமும் பாடலுமாய் கண்ணான கண்ணே கண் கலங்க வைத்தது. நெகிழ்ச்சி...

பிக்பாஸ் போதும்டான்னு சொன்னதும் எல்லாரும் சேர்ந்து ஒரு குத்துப் போட்டுக்கிறோம்ன்னு கெஞ்ச, இப்பவும் எல்லாரும் சொல்லுங்க, சத்தமாச் சொல்லுங்கன்னு ஒண்ணாப்பு ஆசிரியராய் ஆன பிக்பாஸ் ஒரு பாட்டுத்தான் சொல்லி ஆட விட்டார்.

அப்புறம் நாலு பேரையும் விட்டுட்டு எல்லாரும் ஓடியாந்திருங்கன்னு சொல்லிட்டார்.... ரேஷ்மா இப்பவாச்சும் நான் அழகி... பேரழிகின்னு சொல்லுங்க பிக்பாஸ்ன்னு கெஞ்சிக்கிட்டு இருந்துச்சு... அவரு சொன்னாரான்னு தெரியலை... நமக்குக் காட்டலை.

ராத்திரி ஒரு மணிக்கு பாத்ரூம்ல லாஸ்லியா இருக்க, அங்கிட்டுப் போன சாண்டி, கதவைத் தட்டி பயத்தை கூட்டிவிட்டு ஒளிந்து கொள்ள, கதவைத் திறந்து வந்து வெளியில் தேடி யாருமில்லைன்னு பக்கத்துப் பாத்ரூம் கதவைத் தள்ள, உள்ளே சாண்டி... லாஸ்லியா அரண்டு போய் முகம் மூடி அமர, நான் இங்கதான் ரொம்ப நேரமாச் சுத்திக்கிட்டு இருக்கேன்னு சொல்லிச் சிரித்தார் பிக்பாஸ் இல்ல வடிவேலு சாண்டி.

ரொம்ப நாளைக்கு அப்புறம் டாஸ்க் இல்லைன்னாலும் செமையான ஒரு நாளாக 100வது நாள். 

முகனின் பாடல் மனசுக்குள் சுற்றிச் சுற்றி அடிக்குது... என்ன வரிகள்... மறுபடியும் வாழ்த்துக்கள்டா.

இன்னைக்கு சொர்ணாக்காக்களை இறக்கிவிட்டு ஷெரினைப் பதம் பார்க்கிறார்கள் போல. எங்க முடிவு லாஸ்லியாதான் என்பதால் மற்றவர்களை நாங்க அடிச்சித்தான் துவைப்போம்ன்னு விஜய் டிவி சொன்னாலும் ஷெரினைத் தாக்குவதால் அவருக்கு இன்னும் நல்ல பேரும் அதற்கான ஓட்டும் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. பிக்பாஸ் சொந்தக்காசில் சூனியம் வச்சிக்கிற மாதிரித்தான் தோணுது... பார்க்கலாம்.


டிஸ்கி : வேலை அதிகமிருந்தாலும் தொழில்ல கவனமாயிருக்கணும் என்பதால் அவசர அடிதான்... பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க... 

நன்றி.

82 பதிவுகள் எழுதும் வாய்ப்பைக் கொடுத்த, வாசித்துக் கருத்துச் சொல்லும் அனைவருக்கும் நன்றி... 

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

0 எண்ணங்கள்: