மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

மனசு பேசுகிறது : அய்யப்ப பூஜையும் அன்பான சந்திப்பும்

ப்போதேனும் ஒரு விடுமுறை நாள் மகிழ்வுக்குறிய நாளாகிவிடும்... இங்கு அது அத்தி பூத்தாற்போல் கிடைப்பதுண்டு, ஏனென்றால் பெரும்பாலான விடுமுறை தினங்கள் அறைக்குள்ளேயே கழிந்துவிடும். பழைய அறையில் இருக்கும் வரை எப்போதேனும் குழும கூட்டங்கள், நட்புக்களின் வருகை என வெளியில் சென்றால்தான் உண்டு. புதிய அறைக்கு வந்தபின் அருகே நண்பர்களின் பூக்கடை இருப்பதால் பெரும்பாலான விடுமுறை தினங்களை மாலை நேர அரட்டை விழுங்கிக் கொள்கிறது.


கணிப்பொறி பழுதான பின் விடுமுறை தினங்கள் எல்லாம் வெறுமையான தினங்களாய்... வீட்டுக்குப் பேசும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களைக் கடத்துதல் என்பது மிகப்பெரிய விஷயமாகிவிட்டது. இரவெல்லாம் செல்போனில் படம் பார்க்கும் நண்பர்கள் மத்தியில் அரைமணி நேரம் செல்போனைப் பார்ப்பதென்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. எப்போது கணிப்பொறி மீண்டும் உயிர்பெறும் என்பது தெரியாது. அதன் காரணமாகவே பூக்கடை முன் கராசார விவாதம் மணிக்கணக்கில் தொடர்கிறது.

எப்போதேனும் ஒரு விடுமுறை தினம் மகிழ்வுக்குறிய நாளாகிவிடும் என்றுதானே ஆரம்பித்தேன். அப்படியான விடுமுறை தினத்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் அனுபவிக்க முடியாமல் செய்தது தொடரும் கால் வலி. 

பாரதி நட்புக்காக அமைப்பின் 'ஆனந்த ராகம்' நிகழ்வுக்கு வரச் சொல்லி அதன் தலைவர் இராமகிருஷ்ணன் அவர்கள் பலமுறை அழைத்திருந்தார். விழாவை ரசிக்கவும் சூப்பர் சிங்கர் வெற்றியாளரும் தற்போதைய சினிமாப் பாடகருமான திவாகரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. கால் வலியுடன் செல்வதென்பது இயலாத காரியம் என்பதால் ஆவலுக்கு அணைபோட்டு அறைக்குள் முடங்கிவிட்டேன்.

இந்த விழாவிற்குச் சில நண்பர்கள் வருவதாய் சொல்லியிருந்தார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் வரவில்லை என்பதை பின்னர் அறிந்தேன். துபாயில் இருந்து சில நண்பர்கள் வந்து சென்றிருக்கிறார்கள் சுவடு தெரியாமல்...  இந்தச் சுவட்டில் அபுதாபி நட்புக்கள் சிலரும் அடக்கமே.

அமீரக எழுத்தாளர்கள் குழுமத் தலைவர் ஆசிப் மீரான் அண்ணாச்சிதான் நிகழ்ச்சியின் தொகுப்பாளராய் இருந்தார் என்பதைப் பின்னர் அறிய முடிந்தது. நிகழ்வு மிகச் சிறப்பாக இருந்ததாகச் சொன்னார்கள். இராமகிருஷ்ணன் சாரும் மறுநாள் 'ஏன் வரவில்லை' எனக் கேட்டு நலம் விசாரித்தார். இந்தப் பண்பு எல்லாருக்கும் வருவதில்லை... நானும் அடக்கமே இதில்.

எப்போதேனும் ஒரு விடுமுறை தினம் மகிழ்வுக்குறிய நாளாகிவிடும்... மறுபடியுமான்னு நினைக்காதீங்க... உண்மையிலேயே இந்த வெள்ளி மகிழ்வுக்கு உரிய தினமாகத்தான் இருந்தது. இந்திய சமூக மையத்தில் (ISC) ஐயப்பன் பூஜை... இரண்டு வருடங்களுக்கு முன்னர் சென்றிருக்கிறேன். இந்த முறை செல்லலாம் என்ற ஆவல். இரவெல்லாம் தூங்க முடியாத கால்வலிதான் ஆவலுக்கு முட்டுக்கட்டையாய் இருந்தது. இருந்தும் ஐய்யபனைத் தரிசிக்க வேண்டும் பிரச்சினைகளைக் கடக்க என முடிவெடுத்தேன்.

முதல்நாள் இரவே இராஜாராமுடன் பேசும் போது அதிகாலையில் வந்துவிடுவேன்... நீங்களும் வாங்க என்றார். அறை நண்பர் போகலாம் எனச் சொல்லியிருந்தார். காலையில் கேட்டபோது இரவு நீண்ட நேரம் தொடர்ந்த வாரவிடுமுறையின் காரணமாக பின்வாங்கிவிட்டார். 

எப்போதும் போல் அதிகாலைக் குளியல் முடித்து இராஜாராமுக்குப் போன் செய்து அவர் வந்ததை உறுதி செய்து கொண்டு மெல்ல நடந்து போய் பேருந்தைப் பிடித்து ISC-க்கு அருகில் இறங்கி இராஜாராமுடன் அவரின் உறவினரையும் வாசலியேயே சந்தித்து அளவளாவினோம்.

பின்னர் காலை சிற்றுண்டி ஐயப்ப பூஜையில்... கொஞ்ச நேரம் பூஜை நடந்த இடத்தில் அமர்ந்திருந்தோம். பின்னர் மேல்தளத்தில் சமையல் வேலை நடக்கும் இடத்தில் பணியிலிருந்த கிளினிங் கம்பெனி ஆட்களில் பலர் இராஜாராமின் உறவினர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்பதால் அங்கு சென்றோம். நீச்சல் குளம் அருகில் அமர்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்... குளிர் எங்களை விரட்டத் துடித்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உறவுகள் சந்திப்பு எப்படியானதொரு மகிழ்வைக் கொடுக்கும் என்பதை அறிவோமல்லவா..? நாமும் அனுபவிப்பவர்கள்தானே... அப்படியான ஒரு நெகிழ்வான தருணத்தில் எல்லாருடைய மகிழ்ச்சியும் கண்களில் தெரிந்தது.

இன்றைய அவசர உலகத்தில் உறவுகள் சந்திப்பு என்பது மட்டுமல்ல கூடப் பிறந்தவர்கள் சந்திப்பு என்பது கூட அரிதாகிவிட்டது. அப்படியிருக்க, இந்தப் பாலை மண்ணில்... அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் உறவுகள் சந்திக்க இயலாத சூழலில் இது போன்ற நிகழ்வுகளே சந்திப்பதற்கான வாய்ப்பாய் அமைகின்றன அல்லவா..? 

அதுவும் அந்தக் கம்பெனி தன்னை ஐயப்ப பூஜையில் இணைத்துக் கொண்டதால் வருட முழுவதும் எங்கோ ஓரிடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அந்த ஒருநாளில் எல்லாரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில் எத்தனை மகிழ்வாய் இருப்பார்கள் என்பது அவர்களின் நல விசாரிப்புக்களில் தெரிந்தது. அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்குள்... அது தனியொருவனாய் நின்ற என்னையும் தொத்திக் கொண்டது என்பதே உண்மை.

'கவிஞர்' பால்கரசும் வந்து சேர்ந்தார். எழுத்து, எழுத்தாளர்கள் என பேச்சு ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது. மற்றொரு பக்கம் வரும் உறவுகளுடன் அவர்களின் நல விசாரிப்புக்கள்... ஊர்ப் பேச்சுக்கள் எனத் தொடர்ந்து கொண்டிருந்தது. 

இதற்கிடையே மீண்டும் கீழிறங்கி வரிசையில் நின்று ஐயப்ப தரிசனம் முடித்து மீண்டும் மொட்டைமாடி... உறவுகளின் குலாவல்... கதை, கவிதை, கட்டுரை, பிரபல எழுத்தாளர்கள் என பேச்சு தொடர்ந்து கொண்டேயிருந்தது.

மதிய உணவுக்கு டோக்கன் கொடுத்திருந்தார்கள்... ஆனால் டோக்கன் கேட்டு தொந்தரவு செய்யவில்லை என்றாலும் பெரும் கூட்டத்தில் திருமண வீட்டில் பந்திக்கு நிற்பது போல் நின்று ஒரு வழியாக மூன்றாவது பந்தியில் ராஜாராமும் பால்கரசும் சாப்பிட, நாலாவது பந்திதான் உனக்கானது என ஐயப்பன் சொன்னதால் சாப்பிட்டு அங்கிருந்து கீழிறங்கினோம். மிகச் சிறப்பான சைவ உணவை, வாழையில் சாப்பிடக் கொடுத்துத்தான் வைக்க வேண்டும். எங்களுக்குக் கொடுத்து வைத்திருந்தது. அங்கிருந்து பால்கரசுவின் காரில் கிளம்பினோம்.

அறைக்கு அருகில்... ஆஸ்தான பூக்கடைக்கு முன்னர் மீண்டும் தொடங்கியது பேச்சு... இலக்கிய ஆர்வமுள்ள நட்புக்களுடன் பேசுவதற்கு சொல்லவா வேண்டும்... அவர்கள் பேச... எப்பவும் போல் கேட்டுக் கொண்டிருந்தேன் நான். 

ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேச்சுத் தொடர்ந்தது. அதன் பின் பூக்கடையில் சில சாமான்கள் வாங்கிக் கொண்டு எங்களின் மாளிகையையும் பார்த்து அவர்கள் விடை பெற்ற பின்னர் கட்டிலில் அமர்ந்து காலை நீட்டினால் வலியின் கொடுமை மெல்ல மெல்ல உச்சம் பெற்றது... 

இன்று வரை வலி தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்றாலும் நிறைவான தரிசனமும் அன்பான சந்திப்பும் அன்று பரிமாறப்பட்ட நெய் பாயாசம் போல் இனித்துக் கொண்டேயிருக்கிறது இன்னும் மனசுக்குள்.


திருவிழாக்களை எல்லாம் முன்னோர்கள் திட்டமின்றி ஏற்படுத்தவில்லை... எல்லாரும் கூடி மகிழ வேண்டும் என்பதே முக்கியமான காரணம். தற்போது வேலை, குடும்பம் என எல்லாரும் பிரிந்து கிடக்கிறோம்... இச்சூழலில் நல்லது, கெட்டதில் கலந்து கொள்வதென்பது கூட அரிதாகிவிட்டது. 

திருவிழாக்களில் கூடி மகிழ்தல் என்பது அத்திபூத்தாற்ப் போலாகிவிட்டது. திருவிழாவுக்கு என்னால் வரமுடியாது என்பதே இப்போது அதிகம் கேட்கும் வார்த்தையாகிவிட்டது. பெரும்பாலான கிராமங்களில் திருவிழாக்கள் பெரிசுகளின் கட்டாயத்தின் பேரில்தான் இன்னும் மரணிக்காமல் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளில் ஆட்களற்ற கிராமங்களில் திருவிழாக்களும் சிதைந்து போகும். சந்திப்புக்கள்... நல விசாரிப்புக்கள்... மகிழ்வான தருணங்கள் எல்லாமே காணாமல் போய்விடும் என்பது மட்டும் உறுதி.

தற்போது உறவு முறைகள் தெரியாது வளரும் தலைமுறை, கொஞ்சக் காலத்தில் திருவிழாக்களையும் அறியாமல்தான் வளரும் என்பதே உண்மை.

-'பரிவை' சே.குமார்.

5 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

அழகான பதிவுண்ணே, இத்தனை ஆண்டுகாலம் நான் இங்கு தொடர்ந்து வந்தாலும்! இந்த உறவுகளை பதியாமலே விட்டு விட்டேன். உங்களின் பதிவிற்கு எப்போதுமே நான் விசிறியே, சிறப்பு அருமை!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்லதொரு சந்திப்பு...தரிசனம் இல்லையா குமார்! இது போன்றவை மனதிற்கு உற்சாகம் அளிக்கும் ஒன்றுதானே!

கால் வலியை தயவு செய்து கவனிக்கவும். மருத்துவர் ஆலோசனை பெறவும்.

துளசிதரன், கீதா

Balkarasu சொன்னது…

அருமையான நிகழ்வை ஆவணப்படுத்திய உங்களுக்கு என் வாழ்த்துகள்.

Balkarasu சொன்னது…

அருமையான நிகழ்வை ஆவணப்படுத்திய உங்களுக்கு அன்பு முத்தம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் மனவேதனை புரிகிறது ஜி...