மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வியாழன், 27 டிசம்பர், 2018

சினிமா விமர்சனம் : கனா

Related image

னா

'ஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்' நாயகி ரமா,  தன் மகளின் ஆசைக்கு தான் போட்டு வைத்திருக்கும் முட்டுக்கட்டையை உடைக்கும் இடத்தில் சொல்வார். உண்மைதான்... எத்தனை தடைகள் வந்தாலும் உடைச்சி எறிஞ்சிட்டு தன்னோட ஆசையை, கனவை அடைந்தே தீருவேன் என அடம்பிடிக்கத் தெரியணும். அப்படி அடம்பிடித்து தன் இலக்கை அடைந்தாரா கௌசி.

'ஜெயிக்கிறேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது... ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்' என இந்தியாவுக்காக களம் இறங்கப்போகும் அந்நாளில் குடும்ப பிரச்சினைக்காக கனவை தூக்கியெறிய நினைக்கும் போது பயிற்சியாளராக வரும் சிவகார்த்திகேயன் சொல்வார். இது உண்மையான, எதார்த்த வரிதானே... இந்த அறிவுரையை ஏற்றாரா கௌசி.

'என் பொண்ணு தமிழ் நாட்டுக்காக மட்டுமில்லை... இந்தியாவுக்காகவும் விளையாடுவாய்யா... விளையாட வைப்பேன்...' எனக் கேலி செய்யும் ஊரார் முன் விவசாயி சத்யராஜ் சபதம் போடுகிறார். அந்தச் சபதத்தை நிறைவேற்றினாரா கௌசி.

'சித்தி அவ எங்கூடத்தானே விளையாடுறா...' என விளக்குமாற்றால் அடித்து இழுத்துச் செல்லும் ரமாவிடம் கேட்கும் அண்ணனும், அவளுக்கு விளையாடச் சொல்லிக் கொடுக்கும் ஊர் உறவுகளான அண்ணனின் நட்புக்களும் விரும்பியதைச் செய்தாளா கௌசி.

'சார் எங்கப்பா இந்தியா தோத்துப் போனதும் அழுதார் சார்... நான் விளையாண்டு ஜெயிச்சி அவரைச் சிரிக்க வைக்கணும் சார்' என பள்ளியில் விளையாட்டு ஆசிரியரிடம் சொன்னபடி தன் ஆசையை, கனவை நிறைவேற்றி அப்பாவைச் சிரிக்க வைத்தாளா கௌசி.

தன்னை ஒதுக்கும் வடக்குக்கு முன் திறமையைத் தொலைக்காமல் அடித்து ஆடி களம் கண்டு தெற்கைத் தலை நிமிர வைத்தாளா கௌசி.

வயசுக்கு வந்த புள்ளயா லட்சணமா நடக்கத் தெரியிதா என முதுகுக்குப் பின்னே பேசும் ஊர்க்காரர்களுக்கு தன் லட்சணத்தை உயர்த்திக் காட்டினாளா கௌசி.

'பொட்டச்சிக்கிட்டயாடா அவுட்டானே' என்பவனிடம் 'நான் பார்த்ததை நீ பார்த்திருக்கணும்' என்று சொல்ல, களத்தில் இறங்கியவன்  'ஆமாடா பந்து ஆடி ஆடி வருதுடா'ன்னு சொல்ல அதன்பின்  அடிதடி, கலவரமென உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிப் பிரச்சினை காவல் நிலையம் செல்வதாய் ஆரம்பிக்கும் கதையில் தன்னைக் கேவலமாய்ப் பேசியவர்களுக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பதில் சொன்னாளா கௌசி.

கிராமத்தில் பிறந்து வளர்ந்தவங்களுக்குத்தான் தெரியும்... அங்கிருக்கும் பெண்களின் நிலை. இன்று கிராமங்களில் இருந்து பெரும்பாலான குடும்பங்கள் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டன. பெண்களும் கூட கிராமிய சூழலில் வளர்வதென்பது வெகுவாகக் குறைந்து விட்டது. அப்படி வளரும் பெண் சாதிக்கத் துடிக்கும் போது வந்து விழும் வார்த்தைகளை அனுபவித்த பெண்ணான கௌசி சாதித்தாளா..?

Image result for kanaa movie images

வயசுக்கு வந்தால்தான் என்றில்லை ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல் பசங்களுடன் விளையாடினால் 'ஏய்... வர்றியா.. வரவா...' என்ற குரல் வீட்டிலிருந்து கிளம்பி வரும். 'பொட்டச்சிக்கு பயலுகளோட என்ன விளையாட்டு' என்றும் 'உம்மவளக் கண்டிச்சி வையி... ஆம்பளப் புள்ளயளோட ஜோடி போட்டுச் சுத்துறா' என்றும் 'அடக்க ஒடுக்கமா இருடி..' என்றும் எத்தனையோ வார்த்தைகள் வசவுகளுடன் வந்து விழும். இதுதான் கிராமத்தின் உண்மையான பக்கம்... அதை அப்படியே காட்டியிருக்கிறார் இயக்குநர்.

'கனா'வில் கிரிக்கெட்டும் விவசாயமும் இணைத்துப் பேசப்படுகிறது. விவசாயம் சம்பந்தமாக கொஞ்சம் அதிகமாகப் போயிருக்கிறார்கள் என்றாலும் கதையே இல்லாமல் 'மாஸ்' காட்டாமல் அதைப் பேசியிருக்கிறார்களே அதுவும் சோறு போடும் விவசாயம் குறித்து கோடிகளில் புரளும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதையில் பேசியிருக்கிறார்களே... அதற்காக இயக்குநர் அருண்ராஜ் காமராஜைப் பாராட்டலாம்.

சில காட்சிகள் முரண் என்றாலும் முழுதாய்ப் பார்த்து முடிக்கும் போது முரணைப் புறந்தள்ளி 'ஜெயிச்சிட்டாடா கௌசி' என ஆரிப்பரிக்கிறது கண்ணீர்.

எத்தனையோ படங்களில் கிரிக்கெட் போட்டி பார்த்திருக்கிறோம்... பந்தை எல்லைக்கோட்டில் உருட்டி விட்டு நாலு என்பார்கள். தூக்கிப் போட்டு ஆறு என்பார்கள் ஆனால் இதில் அந்த மைதானக் காட்சிகளை நாம் நேரடியாகக் கிரிக்கெட் பார்ப்பது போல் மிகவும் பரபரப்பாக... 'ஆப் சைட்... ஆப்சைட் போடாதே... பின்னால போடு' என செமத்தியாகக் கொடுத்திருக்கிறார்கள். எடிட்டர் ரூபன் பாராட்டுக்குறியவர்.

விவசாயி முருகேசனாக சத்தியராஜ்... வானம் பார்த்த பூமியின் கிராமத்து விவசாயியாக வலம் வருகிறார். அப்பா செத்துக் கிடக்கும் போதும் ஸ்கோர் பார்க்கும் கிரிக்கெட் பைத்தியம் (இது கொஞ்சம் ஓவர்தான், செத்த வீட்டுல எங்கய்யா டிவி போடுவானுங்க... அதுவும் கிராமத்தில்). 

படிக்கும் காலத்தில்... கணிப்பொறி மையம் வைத்திருக்கும் போது நாங்களும் அப்படித்தான் திரிந்தோம். அபுதாபி வந்தும் இந்தியா - பாகிஸ்தான் உலககோப்பை போட்டி அன்று லெபனானி மேனேஜரிடம் கேட்டு விடுப்பு வாங்கிச் சென்று மேட்ச் பாத்தவங்கதான் என்றாலும் இப்போது கிரிக்கெட் மீதான பாசம் குஷ்பு, சிம்ரன் மீதான பாசம் போல அடியோடு குறைந்து விட்டது. ஆனா முருகேசன் இந்த வயசுலயும் பைத்தியமா இருக்காரு எங்கப்பா போல.... ஆமா இப்பவும் கிரிக்கெட்டுன்னா டிவிக்கு முன்னாலதானே கிடக்கிறார்.

கௌசி.... 

ஐஸ்வர்யா ராஜேஷ் எனக்கு இறுதி வரை 'கௌசி'யாத்தான் தெரிந்தார்.

என்ன நடிப்பு... ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக வாழ்தல் என்பது எளிதல்ல... தோல்வி, துரோகம், எள்ளல், என எல்லாவற்றையும் சுமந்து வைராக்கியத்தோடு முன்னேறி இந்தியாவுக்காக களம் இறங்கும் வரை... இல்லையில்லை விவசாயத்தையும் கிரிக்கெட்டையும் இணைத்துப் பேசுவது வரை கௌசி... கௌசிதான். 

ஒவ்வொரு படத்திலும் தன் திறமையை நிருபித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா, கனாவை தன் திறமையால் தனியே சுமந்திருக்கிறார். இது அவரது சினிமாப் பயணத்தில் மகுடம்...  ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்புத் தெரிகிறது. கடுமையான உழைப்பின் களைப்பை வெற்றி போக்கியிருக்கிறது.

இவரை 'பொம்பள விஜய் சேதுபதி'ன்னும் சொல்லலாம். ஆனா நல்லவரு வல்லவருன்னு ஒரு காலத்துல 'தல'யைச் சொன்ன மாதிரி கொஞ்ச நாளா இணையமெல்லாம் வி.சேயைப் புகழ ஆரம்பிக்கிறாங்க... எங்கிட்டுப் பார்த்தாலும் அவருதான்... சீதக்காதி இதுல மயங்கினாருன்னா அமுக்கிப் போட்டு சோலியை முடிச்சிடுவானுங்க.. சூதனமா அவரு இருக்கணும்... புகழ் போதை பொல்லாதது என்பதை உணர்ந்து வல்லவரு நல்லவரை விட்டு வெளியே வர வேண்டிய நேரமிது அவருக்கு. ஐஸ்வர்யா இன்னும் தொடரட்டும் தனது எதார்த்த, போராட்ட நடிப்பை... அதுவே மற்றவர்களிடம் இருந்து அவரைத் தனித்துக் காட்டும்.

எப்பவுமே பிடிக்காத சிவகார்த்திகேயனை இதில் பிடித்தது.. காமெடி செய்கிறேன் பேர்வழி என சூரியுடன் மொக்கை போடாமல் தனித்த பயிற்சியாளராய் பண்பட்ட நடிப்பு.

Actress Aishwarya Rajesh in Kanaa Movie Photos HD

உர வியாபாரி இளவரசு... மகளைக் கண்டிக்கும் கிராமத்து அம்மாவாக ரமா, கௌசியை ஒரு தலையாகக் காதலிக்கும் புதுமுகம் தர்ஷன், அவரின் நண்பர்கள், கிரிக்கெட் சொல்லிக் கொடுக்கும் ஊர் பசங்க, இன்ஸ்பெக்டராக வரும் ராமதாஸ் என எல்லாருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

படத்தின் இசை அருமை... பாடல்கள் நல்லாயிருக்கு... இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் பின்னணி இசையில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். அதுவும் கிரிக்கெட் போட்டிக் காட்சியில் தூள்... பதற்றத்தை நம்முள் பத்த வைக்கிறார். அனிருத் போல பாத்திரங்களை உருட்டவில்லை என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

முதல் படத்தில் விளையாட்டை மையமாக்கி விவசாயம் பற்றி பேசியிருப்பதற்கு தாராளமாக வாழ்த்துச் சொல்லலாம் இனியும் தரமான படங்களைக் கொடுங்கள் என்ற விண்ணப்பத்தோடு. 'அவனுக்கு எங்கயோ மச்சமிருக்கு'ன்னு யாரேனும் உங்கள் வெற்றி குறித்துச் சொன்னால் மயங்கி விடாதீர்கள் அருண்ராஜ்.

இப்படி ஒரு படத்தை எடுத்து தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன், இன்னும் நல்ல படங்களைக் கொடுக்கட்டும். 

கனா - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்... அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்.

கணிப்பொறி இல்லாதது... கால் வலி குறையாதது என பாதிக்கப்பட்டிருந்தாலும் வேலையில்லாத நேரத்தில் ஏதேனும் எழுதலாமேயென அலுவலகத்தில் பொழுது போகாமல் தட்டச்சிய பதிவு இது என்பதை எல்லாருக்கும் முகநூலில் லைக் போடுறே, பதிவு எழுதுறே கேட்டா வீட்டில் கணிப்பொறி இல்லை, கால் வலிங்கிறேன்னு சொல்லி கோபப்படும் உறவுகளுக்காகவே இங்கு சொல்லிவிட வேண்டுமல்லவா. அப்புறம் அலுவலகத்தில் இதையெல்லாம் செய்யாதே என அட்வைஸ் பண்ண நினைத்தால் வேலையில்லாம 10 மணி நேரம் என்னய்யா செய்யிறது என்பதே என் பதிலாய் வரும்.
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

கனலி சொன்னது…

சிறப்பு குமார்

ஸ்ரீராம். சொன்னது…

பார்க்க முயற்சிக்கிறேன்.

Geetha Sambasivam சொன்னது…

நல்ல விமரிசனத்துக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த படத்தின் வசனங்கள் தான் SIXER...!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்ல விமர்சனம்.கனா பரவலான பாராட்டைப் பெற்றிருக்கிறது.

vimalanperali சொன்னது…

ஆழ்ந்த விமர்சனம்,படம் பார்க்க வேண்டும் கண்டிப்பாக/

மாதேவி சொன்னது…

நன்றி. பார்க்க முயல்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல விமர்சனம் குமார். பாலக்காட்டில் இருந்த வரை தமிழ்ப்படங்கள் பார்க்க முடியும். இப்போது ஊருக்கு வந்த பிறகு படங்கள் கூடப் பார்க்க முடிவதில்லை.

துளசிதரன்

குமார் உங்க விமர்சனம் அருமை.

என்னன்னா விளையாட்டில் வெல்வது அப்பா சப்போர்ட் என்று இந்தி டு தமிழ் வந்துச்சே அப்புறம் இன்னொரு படம் பாக்சிங்க் படம் மாதவன் நடிச்ச படம்..அதெல்லாம் வெற்றி பெற்றதும் மீண்டும் ஒரு விளையாட்டு படம்...என்பது நம் சினி இண்டஸ்ற்றி இப்படித்தான் ஒரு படம் வெற்றி அடைஞ்சா அதே போல எடுப்பது...கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துது...ஆனால் ஐஸ்வர்யாவின் நடிப்பு மிகவும் பேசப்படுவதால் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்...

கீதா