மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 10 டிசம்பர், 2016

மனசு பேசுகிறது : ராஜ திலகம்

வாசிப்பு அவ்வப்போது தடைபட்டாலும் சில நாட்களாக சாண்டில்யனின் ராஜ திலகம் வாசித்து முடித்தேன். சாண்டில்யன் நாவலுக்கே உரிய இரட்டை நாயகிகள்... இருவரும் வரலாற்று நாயகிகள் என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அதில் ஒரு ராணியின் பெயர் எதிலும் பொறிக்கப்படவில்லை என்றாலும் மாமல்லபுரத்தில் ராஜசிம்ம பல்லவனுடன் இரு ராணிகள் இருப்பதை வைத்து ஒரு ராணிக்கு மைவிழிச் செல்வி என்று பெயர் சூட்டியிருக்கிறார்.  இரட்டை நாயகிகள் என்றாலும் கடல்புறா, ஜலதீபத்தைவிட இதில் வர்ணனை அதிகம். இளைய பல்லவன் இரண்டு ராணிகளையும் தனித்தனியாகவோ, சேர்ந்தோ சந்திக்கும் இடங்களில் எல்லாம்  ரெண்டு மூணு பக்கத்துக்கு வர்ணனைகள்தான்... அதுமட்டுமில்லாமல் இரண்டு ராணிகளும் சந்தித்துப் பேசும் இடங்கள் எல்லாம் வார்த்தை விளையாட்டு வர்ணனைகள்தான்.

Image result for சாண்டில்யனின் ராஜதிலகம்

காஞ்சியை ஆண்ட பரமேஸ்வரவர்மன் அதன் சிற்பக்கலைகள் போரில் அழிந்து விடக்கூடாது என்பதற்காக சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்தனிடம் காஞ்சியை விட்டுக் கொடுத்துவிட்டு வெளியேறிவிடுகிறான். அவனின் மகன் இளவரசனும் மிகச் சிறந்த சிற்பியும் ஆன இளைய பல்லவன் என்ற ராஜசிம்மனை போரில் கவனம் கொல்லாமல் மாமல்லபுரத்தில் கோவில் கட்டுவதற்கு அனுப்பியிருக்கிறார். அப்பா தலைமறைவாக இருந்தாலும் மகன் சிற்பி என்றாலும் ஒருவேளை அப்பனுடன் சேர்ந்துவிட்டால் சாளுக்கிய வெற்றி கேள்விக்குறி ஆகிவிடும் என்பதோடு அவன் போர்த் தந்திரங்களில் சிறந்தவன் என்பதால் அவனை சிறை செய்ய நினைக்கின்றார் சாளுக்கிய போர் மந்திரியான ஸ்ரீராமபுண்யவல்லபர் ஆனால் விக்கிரமாதித்தனோ அவனின் திறமை மீது மதிப்பு வைத்து இருவரும் போரில் நேருக்கு நேர் மோத வேண்டும் என்று சொல்லி கைது பண்ணும் சூழல் இருந்தும் தப்ப விடுகிறான்.

மாமல்லபுரத்தில் இருக்கும் மைவிழிச் செல்வி, இவள் அரச ஒற்றன் இந்திர வர்மனின் மகள், கடலை ரசிப்பது போல் ஓராண்டுக்கு மேலாக ராஜசிம்மனை மனதுக்குள் காதலித்து ஏங்குகிறாள். தன்னை மல்லையில் வைத்து கைது செய்ய நினைக்கும் சாளுக்கிய தளபதி வீரபாகுவிடம் இருந்து தப்பித்து காஞ்சியை மீண்டும் கைப்பற்ற நினைக்கும் இளவரசன் சூழலால் மைவிழிச் செல்வியையும் அழைத்துக் கொண்டு காஞ்சி பயணிக்கிறான். அவனுடன் அவனின் நண்பனும் சீனனுமான யாங் சிங்கும் இருக்கிறான். மைவிழிச் செல்வியையும் மற்றவர்களையும் சாளுக்கிய படைகள் தங்கியிருக்கும் இடத்தில் தங்க வைத்துவிட்டு தான் மட்டும் அரசுக்கு நெருக்கமான சாமியார்ரும், அரச குருவுமான தண்டியின் இல்லத்தில் தங்குகிறான். அங்கு கங்க நாட்டு மன்னன் பூவிக்கிரமனின் மகளான ரங்கபதாகா தேவியைப் பார்த்து அவளையும் விரும்ப ஆரம்பிக்கிறான். அந்த இடத்தில் அவனைச் சிறை வைக்கும் ஸ்ரீராமபுண்யவல்லபர் இரண்டு பெண்களையும் அங்கு தங்க வைக்கிறார்.

சாளுக்கியரின் நண்பனான கங்க மன்னன் மூலமாக விளிந்தையில் இருக்கும் பரமேஸ்வரபல்லவனை வீழ்த்த திட்டமிடும் ஸ்ரீராமபுண்யவல்லபர், அந்த இடத்துக்கு இளவரசன் செல்லக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் தண்டியின் இல்லத்தில் இருந்து சுரங்கப்பாதையில் தப்பித்துச் செல்லும் இளவரசனை சிறை பிடிக்க, அங்கிருந்தும் தப்புபவனை அங்காங்கே சிறை பிடிக்க முயன்று இறுதியில் காட்டுக்குள் இருக்கும் அரச மாளிகையில் சிறை வைக்கிறார். விளிந்தைக்கு அருகே காவிரிக் கரையோரம் கங்க மன்னனை எதிர்க்கும் ராஜா பரமேஸ்வரவர்மன், சிறிய படையால் அவனை எதிர்க்க முடியாமல் காயம் பட்டு போர்க்களத்தில் இருந்து தனது குதிரை அதிசயம் காற்பாற்றிக் கொண்டு வர தோல்வியுடன் திரும்புகிறார். அவருக்கு அங்கு வரும் கங்க மன்னன் மகள் மருத்துவம் பார்க்க மருத்துவரை அழைக்கிறாள். காட்டு மாளிகையில் இருந்து தப்பி வரும் இளவரசன் மருத்துவராய் வர, சீனன் தங்கள் நாட்டு அங்குபஞ்சர் முறையில் காயத்தை உடனே குணமாக்குகிறான்.

ரங்கபதாகா தன் தந்தையின் படையினை காவிரிக் கரையில் இருந்து இளவரசனுடன் மோதாமல் சாமர்த்தியமாக தங்கள் தலைநகர் தழைக்காட்டுக்கு கூட்டிச் சென்று விட, விக்கிரமாதித்தனுடன் நேருக்கு நேர் மோத படையைப் பெருக்கும் முகமாகவும், தங்களுக்கான பண வசதிக்காகவும் சாளுக்கிய நாட்டின் எல்லைப் பகுதியில் போர் தொடுத்து அங்கிருக்கும் கிராமங்களில் வரி விதித்து செல்வம் சேர்க்க நினைக்கும் ராஜசிம்மன், பூவிக்கிரமன் இந்தச் சண்டையின் போது நடுநிலை வகிக்க வேண்டும் என்று கேட்டு தழைக்காட்டுக்குப் போகிறான். அங்கு அவனை சம்மதிக்க வைப்பதுடன் ரங்கபதாகாவை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் பெற்று வருகிறான்.

காட்டு வழியாக சாளுக்கியம் நோக்கி படையை நடத்திச் செல்லும் சீனன், வழியில் கங்க நாட்டு போர் வீரர்களையும் சேர்த்துக் கொள்ள படையின் பலம் கூடிவிடுகிறது. அவர்களுடன் தழைக்காட்டில் இருந்து வந்து சேர்ந்து கொள்ளும் இளவரசன் அதைப் பார்த்து கோபம் கொள்ள, சீனன் எடுத்துச் சொல்ல, கங்கநாட்டு வீரர்களை தனியாக வைக்காமல் கலந்து செல்ல வைத்து விக்கிரமாதித்தனின் மகன் விஜயாதித்தன் மற்றும் பேரனும் சிறுவனும் ஆன விநயாதித்தனை எதிர்த்து வெல்கிறான். இந்தப் போரில் விநயாதித்தனின் போர்க்குணத்தைப் பார்த்து அவனின் வீரத்தைப் பார்த்து, போர் முடிந்து நீ எனது எதிரிதான் என்று ஒரு பார்வை வீசி, குதிரையைப் பிடித்தபடி நடந்து செல்பவனைப் பார்த்து இவனைப் போல் மகன் எனக்கு பிறக்க வேண்டும் என போர்க்களத்தில் சொல்கிறான்.  அதை விக்கிரமாதித்தனிடமும் உறையூரில் சொல்கிறான். அடுத்தவனின் வீரத்தை மதிப்பதிலும் அவர்களை கொல்லக் கூடாது என்பதிலும் இருவரும் உறுதியாக இருந்தார்கள் என்று பல இடங்களில் சொல்கிறார் சாண்டில்யன்.

தெலுங்கு தேசம் சென்று பரமேஸ்வரவர்மன் படை திரட்டி வர, காஞ்சிக்கு அனுப்பப்பட்ட மைவிழிச்செல்வி தண்டியுடன் இணைந்து அங்கிருக்கும் நிலவரம் குறித்து ஓலை அனுப்ப, சோழர்களை எதிர்க்க முக்கால்வாசி படையுடன் ஸ்ரீராமபுண்யவல்லவரை காஞ்சியை ஆள வைத்துச் செல்லும் விக்கிரமாதித்தனைப் பார்க்க தானே உறையூர் செல்லும் இளவரசன், அங்கு விக்கிரமாதித்தனுடன் போர்ப்பயிற்சிக் கூடத்தில் மோதி வெல்கிறான். பாண்டியனுக்கு பல்லவர் எதிரி என்பதால் திறமைமிக்க பாண்டிய இளவரன் ரணதீரனை தங்களுக்கு உதவ ஸ்ரீராமபுண்யவல்லவர் கேட்க நினைத்து ஓலை அனுப்பியிருக்கும் வேளையில் அவனையும் உறையூரில் சந்தித்து அவனுடனும் போர் செய்து வெற்றி பெறுகிறான். அவனுடன் போர் செய்ய இளவரசன் கேட்பது விக்கிரமாதித்தனுடனான போரின் போது அவன் தந்தை உதவிக்கு வரலாம் ஆனால் ரணதீரன் வரக்கூடாது என்று கேட்டு போர் மந்திரியின் எண்ணத்துக்கு செக் வைத்து விடுகிறான். 

அதன் பின்னர் படைகளை வழி நடத்தி பெருவநல்லூர் என்னுமிடத்தில் விக்கிரமாதித்தனை நேருக்கு நேர் சந்திக்கிறான். அங்கு அவன் அமைக்கும் போர் வியூகம் விருட்சிகம்... மிகச் சிறப்பான வியூகம் அமைக்க, அதை அறிந்த சாளுக்கிய மன்னன் படையினை மூன்றாகப் பிரித்து இரண்டை காட்டுப் பகுதிக்கு அனுப்ப, அதையும் அறியும் ராஜசிம்மன், சீனன்,படைத்தளபதி பலபத்ரவர்மன் உள்ளிட்ட மிகச் சிறந்தவர்களின் உதவியுடன் தந்தையை முன்னிறுத்தி வெல்கிறான். காயம் பட்ட விக்கிரமாதித்தனை காப்பாற்றி, அவனை சாளுக்கிய நாட்டுக்கு திரும்பிச் செல்லப் பணிக்கிறான். ராஜசிம்மனை விட்டால் சாளுக்கிய பேரரசை விஸ்திகரிக்க முடியாது என்று சொல்லும் ஸ்ரீராமபுண்யவல்லபர் நிறைய சாணக்கியத்தனம் செய்தும் அதை இளவரசன் முறியடித்து வென்று காஞ்சி திரும்ப, அவனின் மணம் முழுவதும் நிறைந்திருக்கும் காஞ்சி கைலாசநாதர் மற்றும் மல்லை அரங்கன் கோவில் பணிகளைச் செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லி இரண்டு மோதிரங்களில் கோவில்களைப் பொறித்து ராணியரால் ராஜசிம்மனுக்கு திலகமிடச் சொல்லிவிட்டு சாளுக்கியத்துக்கு பயணிக்கிறார்.

போர் வியூகங்களையும் போர்க் காட்சிகளையும் எழுதுவதில் தான் கில்லாடி என்பதை இதிலும் ரொம்ப அழகாக எழுதியிருக்கிறார் சாண்டில்யன் அவர்கள். ஆரம்பத்தில் மாமல்லபுரத்தில் இருந்து நகரும் கதை, காஞ்சிக்கு வந்து விளிந்தைக்குள் நுழையும் வரை ரொம்ப மெதுவாகத்தான் செல்கிறது. மைவிழி, ரங்கபதாகா இவர்களுடனான காதல், அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகள் என சுற்றிச் சுற்றி வருவதால் கதையை வாசிப்போமா வேண்டாமா என்று நினைக்க தோன்றியது. விளிந்தைக்குள் நுழைந்ததும் கங்க தேசம் செல்வதும் பாக்குவெட்டி வியூகம் வைத்து சாளுக்கியத்தை வெல்வதும் விக்கிரமாதித்தனை உறையூரில் சென்று சந்தித்து நேருக்கு நேர் மோதி வெற்றி பெற்று அவனுக்கும் தன் போர்த் தந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து, பெருவநல்லூரில் விருட்சிக வியூகம் அமைத்து வெற்றி பெற்று காஞ்சிக்கி வரும் வரை கதை விறுவிறுன்னு நகர கீழே வைக்க மனமின்றி வாசித்து முடித்தேன்.

ராணியரின் துணையுடன் தனது தந்தையின் ஆசையை நிறைவு செய்யும் விதமாக மிகச் சிறப்பாக இரண்டு கோவில்களையும் கட்டி முடித்த ராஜசிம்மன் தனது நண்பனும் சீனனுமான யாங் சிங்கிற்காக புத்தரின் கோவில் ஒன்றையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

துரை செல்வராஜூ சொன்னது…

அருமையான வாசிப்பு.. முழுக் கதையையும் கண் முன்னே நிறுத்திய பதிவு..

ஸ்ரீராம். சொன்னது…

படித்திருக்கிறேன்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

தங்களின் பகிர்வை படித்துமகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ராஜதிலகம்
படித்து ரசித்திருக்கிறேன்நண்பரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாசிப்பு தொடரட்டும்....

சிறப்பான பகிர்விற்கு பாராட்டுகள் குமார்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாசித்திருக்கிறோம். மீண்டும் நினைவுபடுத்தியது தங்கள் பதிவு. நல்ல பகிர்வு..