மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

சினிமா : இறுதிச்சுற்று

குருவைக் காதலிக்கலாமா...? கூடாதா...? என்பது சில நாட்களுக்கு முன்னர் எனது புதிய தொடர் பற்றி அண்ணன் ஒருவருடன் பேசும் போது  நிகழ்ந்த விவாதம். அது தப்பென்று சொன்னாலும் தங்கள் காதலைச் சொல்ல முடியாத சிஷ்யர்களும் சிஷ்யைகளும் படும் அவஸ்தையை அவர்கள் மட்டுமே உணர முடியும். அந்த உணர்வையும் தன் தொழிலின் மீது வெறி கொண்ட ஒருவன் மீன் விற்கும் பெண்ணை உலக அரங்கில் குத்துச் சண்டை வீராங்கனையாக்குவதையும் மிக அழகாக, நேர்த்தியாகச் சொல்லியிருக்கும் படம் இது.


பெண்கள் கொண்டாடும் மேடி...   தம்பி படத்துக்குப் பிறகு ஏற்றிருக்கும் மிகச் சிறப்பான கதாபாத்திரம்... சாக்லெட் பாய் மேடிக்குள் இப்படி ஒரு அசுர வேகம் இருந்ததை தம்பி படம் கூட காட்டவில்லை என்றே சொல்லலாம். அந்த ஹேர் ஸ்டைலும் தன் சிஷ்யை லவ் பண்ணுறேன்னு சொல்லும் போது அதைத் தட்டிக்கழித்து எனக்கு உன்னோட விளையாட்டு மேலதான் குறியின்னு சொல்வதில் அவருக்கு குத்துச் சண்டை வீரனாய் தான் பிடிக்க முடியாமல் போனதை ஒரு பயிற்சியாளனாய் பிடிக்க வேண்டும் என்ற வெறி மனசுக்குள் இருப்பதைக் காட்டுகிறது. அதுவும் சென்னையில் போய் நீ சாதிச்சுக் காட்டு என முன்விரோதத்தால் தலைவர் அனுப்பிவிட,  மனசில்லாமல் சவால் விட்டுவிட்டு சென்னைக்கு வந்து ஒருத்தியை கண்டு பிடித்து அவளுக்கு மிரட்டலும் உருட்டலுமாய் பயிற்சி கொடுத்து, தன்னோட சிஷ்யை உலக அரங்கில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்ற வெறி படம் முழுவதும் இருப்பதைக் காண முடிகிறது. அருமையான நடிப்பு.

அதாருப்பா அது அந்தப் பொண்ணு... என்னமோ நம்ம பக்கத்து வீட்டுப் பிள்ளை மாதிரி மனசுக்குள்ள பச்சக்குன்னு வந்து ஒட்டிக்கிது... அதுவும் சேரிப் பேச்சை பேசிக்கிட்டு மீன் விற்றுக் கொண்டு  அக்காவுடன் ஆட்டம் போடுவதாகட்டும்... பணத்துக்காக பயிற்சிக்கு வருவதாகட்டும்... தன்னோட அக்காவே தனக்கு எதிரியாய் நிற்கிறாளே என்று வருந்தினாலும் அதை வெளிக்காட்டாமல் மாதவனிடம் அடி வாங்குவதாகட்டும்... அவளைப் பெரியாளாக்குறேன் என்று சொல்லும் தலைவர், நீ முன்னுக்கு வர, என்னோட இருக்க வேண்டும் எனும்போது அவனுக்கு பாடம் புகட்டுவதாகட்டும்... உனக்கு என்ன வேணும் மாஸ்டர் என்று கேட்டு எதிரியை நாக்-அவுட் செய்வதாகட்டும்... எனக்காக எல்லாம் செய்யுறியே... அப்ப இது காதல் இல்லாம என்னவாம் என்று சொல்லிச் செல்வதாகட்டும்... இறுதிக்காட்சியில் போட்டி நடைபெறும் இடத்தில் மாதவன் இல்லாது தவிப்பதாகட்டும்... ரித்விகாசிங் நடிக்கவில்லை... சேரிப் பெண் லக்ஸின் தங்கையாக மதியாக... அதுவும் நிறைந்த பௌர்ணமியாக அருமையாக நடித்திருக்கிறார். வாழ்த்துக்கள் மதி.

போலீஸ் ஆகணும் அதுதான் லட்சியம் என்று போராடும் அக்கா லக்ஸ், அதற்காக முயற்சித்து... நிறைய இழப்புக்களையும் சந்தித்து... முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் போது அதற்கு தங்கையே வில்லியாக வருகிறாளே என்ற வருத்தத்தில்... வேதனையில்... கடுப்பில்... தங்கையின் கையில் ஆணி குத்த வைப்பதில் தொடங்கி, மீண்டும் அவள் பயிற்சி பெற வரும் போது அவளிடம் நீ எதுக்குடி இங்க வந்தே என சண்டையிட்டு... மாதவனிடம் எனக்கு எதுக்கு மாஸ்டர் அவளுக்குச் சொல்லித் தர்ற மாதிரி சொல்லித் தரமாட்டேங்கிறே என்று வாய்விட்டுக் கதறி... ஆரம்பத்தில் அக்காவும் தங்கையும் ஆட்டம் போட்டாலும் இடைவேளைக்குப் பிறகு எதிரும் புதிருமாக நிற்க, கடைசிக் காட்சியில் குத்துச் சண்டை போட்டியில் அடி வாங்கி ரத்தம் வடிய நிற்கும் தங்கையைப் பார்த்து ஓடி வந்து அவளுக்கு முதலுதவி செய்யும் போது அந்தப் பாசம்... உடன் பிறந்த பாசம்... எத்தனைதான் மோசமான சண்டைகள் இருந்தாலும்... பேசவே கூடாது என்று நினைத்தாலும் இப்படியான சூழலில் உள்ளத்துக்குள் உறங்கும் அந்தப் பாசம் விழித்துக் கொள்ளும் என்பதை பார்ப்பவர்கள் அனைவரின் மனதிலும் உணர வைத்த நடிப்பு. லக்ஸாக வரும் மும்தாஸ் சர்க்காரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.


நாம் நாசரை வில்லனாய்... ஒரு கனமான கதாபாத்திரமாய் பார்த்தே பழக்கப்பட்டு விட்டோம். அதை இதில் உடைத்திருக்கிறார்கள்... எனக்கு காமெடியும் வரும் என்பதை மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்கிறார். அதுவும் மாதவனுடன் தண்ணியடிக்கும் போது லிவர் கேட்பதும்... உடனே தண்ணி அடிச்சா லிவர் கெட்டுப் போயிடும்ன்னு சொல்லுவாங்க... அதுக்குத்தான் இந்த லிவர்... இதை சாப்பிட்டுக்கிட்டே அடிச்சா இந்த லிவர்தானே கெட்டுப்போகும் என்று  சொல்வதும்... ராதாரவியை வைத்துக் கொண்டு மாதவனிடம் 'சார்... இது அந்த வீணாப்போன முண்டம்..ஓடிப்போன தண்டம் மாதிரி இல்ல சார்... பாரு சார்... அதுக்கிட்ட உயிரே இல்லை' என்று சொல்லி விட்டு தன்னை ராதாரவியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு 'நீங்க...?' என்றதும் 'இப்பச் சொன்னியே வீணாப்போன முண்டம்... அதோட அப்பா...' என்று ராதாரவி சொல்லும் போது சத்தமாக சிரிக்க வைத்தார். மதிக்காக போராடும் மனிதராய் வந்து நாசர் கலக்க, மாமனாராக... மாப்பிள்ளையின் பின்னே திரிந்து நிறைவாய் செய்திருக்கிறார் ராதாரவி.

ரித்திகாவின் அம்மாவாக இந்தி பேசும் சேட்டுப் பெண் சரியான தேர்வு. அப்பாவாக வரும் காளி வெங்கட்டும் குறை வைக்கவில்லை. இன்னும் சிறிய சிறிய கதாபாத்திரங்களும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளன. மாதவனின் மனைவி ஓடிப் போய்விட்டாள் என்பதை முன்கதைக்குள் கொண்டு செல்லாமல் ஒரு வரி வசனத்தோடு முடித்திருப்பது சிறப்பு. குள்ளநரித்தனமாய் வில்லத்தனம் செய்யும் குத்துச்சண்டை அமைப்புத் தலைவராக வரும் ஜாகீர் உசேன் இறுதியில் ரித்விகாவின் குத்தை வாங்கி சரிகிறார். அவர் பேசும் தமிழும்.... அந்த கண்ணாடிக்குள் சிரிக்கும் கொடூரமான கண்ணும்...  சிலகாட்சிகளே என்றாலும் சிறப்பாய் செய்திருக்கிறார்.

இசை சந்தோஷ் நாராயணன்... பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன... பாடல்கள் படத்தோடு பயணிப்பது சிறப்பு... பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயனின் கேமரா வட சென்னை மற்றும் வட மாநிலங்களின் உண்மைத் தன்மையை அப்படியே படம் பிடித்திருக்கிறது. சதீஷ் சூர்யாவின் எடிட்டிங் படத்தை விறுவிறுப்பாய் நகர வைத்திருக்கிறது. அருண் மாத்தீஸ்வரனின் வசனங்களில் ஆங்காங்கே நெருப்புப் பொறி. உடை மற்றும் சிகை அலங்காரத்திலும் மிக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள்.

மணிரத்னத்தின் உதவியாளரான சுதா, துரோகி படத்தின் மூலம் இயக்குநராய் மலர்ந்தார் என்றாலும் இந்தப்படம் யார் இந்த சுதா..?  என்று எல்லாரையும் கேட்க வைத்துவிட்டது. மூன்றாண்டுகளுக்கு மேல் அவர்பட்ட கஷ்டத்தை எல்லாம் களைந்து போட்டுவிட்டது இந்த இறுதிச் சுற்று... இதுதான் அவரின் சினிமா வாழ்க்கைக்கான ஆரம்பச் சுற்று எனலாம்... இவ்வளவு நேர்த்தியாக ஒரு பெண் இயக்குநர் படம் எடுக்க முடியுமா என்று எல்லோரையும் யோசிக்க வைத்துவிட்டார். மாதவன் ஒழுக்கமானவன் அல்ல என்பதை ஆரம்பக் காட்சியிலேயே காட்டிவிடுகிறார். மேலும் அவன் மதியிடம் வரம்பு மீறவும் இல்லை என்பதை படத்தில் வரும் வசனங்கள் மூலமாகவே நகர்த்தி விடுகிறார். முதல் மனைவி ஓடிட்டா... அப்படியா அப்ப அதை மாதவன் சொல்றப்போ அப்படியே காட்சிகளை விரி... குடிச்சிக்கிட்டு இருக்கானா.... கதையை சொல்லிட்டான்ல... அப்ப அந்தப் பார்லயே ஒரு பாட்டை வைய்யிய்யா என்று கல்லாக் கட்டும் ராஜேஷ்கள் நிறைந்த தமிழ் சினிமாவில் 'அவ ஓடிப்பொயிட்டா' என்ற வசனத்தோடு கடந்து போகும் சுதாவுக்கு ஒரு பூங்கொத்து என்ன ஓராயிரம் பூங்கொத்து கொடுக்கலாம்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் முன்னுக்கு வர பாலியல் ரீதியாக எப்படியெல்லாம் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை தைரியமாக கையிலெடுத்திருக்கிறார்கள். அதுவும் காவல் நிலையத்தில் அடிவாங்கி கிடக்கும் போது மாதவனுக்கு போன் செய்ய, விபசார வழக்கில் கைதான பெண் செல்போன் கொடுத்து உதவுவது.. அவர்களின் மனிதாபிமானத்தைக் காட்டும் காட்சி... இதற்கெல்லாம் ஒட்டு மொத்த குழுவுக்கும் வாழ்த்துச் சொல்லணும்.


இறுதிச்சுற்றின் இறுதிக்காட்சியில் தன் மாஸ்டர் இல்லையே என அடி வாங்கி அவன் முகம் தெரிந்ததும் அடித்து ஆடி வெற்றி பெறும் ரித்விகாவை, தன்னோட தேர்வு என சொல்ல வரும் தலைவனுக்கு அடி கொடுத்து ஓடி வந்து மாதவனின் மீது தாவி, குழந்தை போல் அழும் போது 'அட இந்தப் பொண்ணு ஜெயிச்சிருச்சே' என சந்தோஷப்பட முடியாமல் நமக்கும் கண்ணீர் வரத்தான் செய்கிறது. அப்போது கேமரா மாதவனின் முகம் காட்ட, மேடி உதட்டைச் சுளித்து சிரிப்பார் பாருங்கள்... அட... அட... சூப்பர்.

பயிற்சியாளனாய் மாதவன் மின்ன, வீராங்கனையாய் ஜொலிப்பது புதுமுகம் ரித்விகாதான்... அசால்டா எல்லாரையும் அடிச்சி வீழ்த்திட்டு படத்துல முதல் இடத்துக்கு போய்க்கிட்டே  இருக்கு. படம் பார்க்கும் வரை இந்த பஞ்சாபிப் பெண் உண்மையான குத்துச் சண்டை வீராங்கனை என்பது தெரியாது. நேற்றுத் தெரிய அவரின் ரியல் குத்துச் சண்டை வீடியோ பார்த்தேன். அதிலும் ரித்விகாவுக்கே வெற்றி... ஜெயிக்கட்டும்... ஜொலிக்கட்டும்... முன்னாடியே தெரிந்திருந்தால் அட இது குத்துச் சண்டை தெரிந்த பெண்தானே என்று கூட தோன்றியிருக்கலாம்.

ஆமா... படத்துல குறையே இல்லையாக்கும் என்று நினைக்கலாம்... சில குறைகள் இருந்தாலும் நிறைவாய்... நிறைய காட்சிகள் இருப்பதால் குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணான்னு பாடிக்கிட்டு போக வேண்டியதுதானே... அப்புறம் எல்லாரும் கண்டிப்பாக பாருங்கள். அப்படியே ரித்விகாவின் இந்த குத்தையும் பாருங்க... கண்டிப்பாக ரசிப்பீங்க...


என்னடா இவன் சினிமா பதிவுக்கு பொயிட்டானேன்னு நினைக்கும் நட்புக்களுக்கு... சில பல மனக் குழப்பங்கள்... எதுவும் எழுதாமல் இருப்பதைவிட இதுபோல் எழுதினால் மனசுக்கும் கொஞ்சம் ஆறுதல்... அதனால்தான் இப்படி... நாளை வழக்கம் போல் 'குறிஞ்சியும் நெருஞ்சியும்' எழுதிடலாம்... இன்று போல் நாளை இல்லை அல்லவா...? ஹா.. ஹா... மீண்டு(ம்) வருவோம்.
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

r.v.saravanan சொன்னது…

என்னை இந்த படம் ரொம்பவே ஈர்த்திருக்கிறது். இந்தப் படத்தை பற்றி எழுத நிறைய விசயமிருக்கிறது.

ஸ்ரீராம். சொன்னது…

பார்க்க வேண்டிய படம் என்பதில் சந்தேகமில்லை. நல்ல பிரிண்ட் கிடைக்கட்டும்!!!
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

முதல் பத்தி அருமை. பட விமர்சனம் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது. நன்றி.

KILLERGEE Devakottai சொன்னது…

முழுமையான அலசல் நன்று
தமிழ் மணம் 3

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம்.

நிறைய நண்பர்களின் விமர்சனம் படித்ததில் பார்க்க நினைத்திருக்கிறேன்.

S.P.SENTHIL KUMAR சொன்னது…

பலரும் படம் நன்றாக இருப்பதாக சொல்லியதால் கூடிய விரைவில் பார்க்க இருக்கிறேன். அருமையான விமர்சனம்.
த ம 5

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பார்த்துவிட்டோம். அருமையான படம். அட! யாருப்பா இந்தப் பொண்ணு என்று கேட்க வைத்தார் ரித்விகா. செம பாடி லாங்குவேஜ். அதுவும் அறிமுகத்திலிருந்து மேடியுடன் வாக்குவாதம் சண்டை முரண்டு என்று பண்ணுவது வரை செம பாடி லாங்குவேஜ் ஒர் ஆம்பிள்ளைத்தனத்துடன்...மிக மிக ரசிக்கும் படியான நடிப்பு. அசாத்திய நடிப்பு எனலாம். மேடியை திரை உலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை எனலாம். இயக்குனர் சுதா கண்டிப்பாகப் பாராட்டப்பட வேண்டியயர்தான்..

படம் ஆங்கிலப்படம் மில்லியன் டாலர் பேபி என்பதன் தழுவல் என்பது படத்தைப் பார்த்ததும் தெரிந்தது. அந்த ஒரிஜினல் படத்தை முடிந்தால் பாருங்கள் குமார்...அசாத்தியமான படம். இறுதிச்சுற்று நம் ஊருக்கு ஏற்றபடி எடுத்திருக்கிறார்கள். தெய்வத்திருமகள் - ஐயாம் சாமிலிருந்து அப்பட்டமான காப்பி - இயக்குநர் தனது கதை என்று சொல்லியது போல் இல்லைதான் என்றாலும் படம் பார்த்த போது மில்லியன் டாலர் பேபி நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க இயலவில்லை. என்றாலும் இசு வில் குறிப்பாக ரித்திவிகா மனதைக் கவர்ந்தார்...மேடியும்...

உங்கள் விமர்சனம் அருமை குமார்..

கீதா

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
கண்டிப்பாக பார்க்க வேண்டிய பட வரிசையில் இதுவும்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
பாருங்கள் அண்ணா... நல்ல படம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க செந்தில் சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார் / கீதா மேடம்...
தழுவலாக இருந்தாலும் அவர்களின் உழைப்பு பாராட்டுக்குறியது...
அந்தப் பெண் ரித்திகா எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டாள்....
அருமை... அருமை...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ம.தி.சுதா சொன்னது…

அருமையாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் அண்ணா