மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 4 ஜூலை, 2015

செந்தூர் அழகா...2


மொட்டை போட சீட்டு வாங்கலாம் என்று செல்ல, விஷால் மொட்டை அடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான். இந்த  இடத்துல ஒண்ணு சொல்லணும்... கோயிலுக்குப் போயி மொட்டை போடணுமின்னு சொன்னப்பவே நீங்களும் மொட்டை போடுறீங்களான்னு கேட்டு பாக்கலாம் என்று சொல்லியிருந்தேன். எனவே அதுக்குத்தான் பயபுள்ள பின்னால இழுக்குதோன்னு டவுட்டோட உனக்கு என்னடா வேணுமின்னு கேட்கவும் நீங்களும் மொட்டை போட்டா நானும் போடுறேன்னு அடிச்சான் பாருங்க அவனது மழலைத்தனமான குரலில். என்னடா பிளாக்மெயிலா என்றதும் நீங்க போட்ட நா போடுறேம்ப்பா... இல்லேன்னா இந்தா ஐயால்லாம் கடலுக்கு பொயிட்டாக நானும் போறேன்னு சொல்லிச் சிரிச்சான்.

என்னடா இது குமாருக்கு வந்த சோதனை... பழனிக்கு நடந்து போகும் போது ஆறு வருட தரிசனத்தில் முதல் வருடம் மட்டுமே சண்முகநதிக்கு நடந்து போய் மொட்டை போட்டு வந்தேன். அதன் பிறகு மொட்டை போடுவதை அதிகம் விரும்புவதில்லை. பாப்பாவுக்கு அழகர் கோவிலில் முதல் மொட்டை எடுக்கும் போது நானும் போட்டுக் கொண்டேன். அம்புட்டுத்தான். எதுவும் நேர்த்திக்கடன் பாக்கியா... அல்லது முருகன் ஏதோ நன்மைக்காக எனக்கு காணிக்கை கொடுத்துச் செல் என பாலகன் ரூபத்தில் கேட்கிறானோ என்று யோசித்து சரி வா... கோயில் வாசலில் கேட்கிறாய் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லி இரண்டு சீட் வாங்கச் சென்றேன்.

அப்போது மாமியார் தனது சின்னமகளின் மகனுக்கும் இறக்கிடலாம் என்று சொல்ல மூன்று பேருக்கும் சீட் எடுக்க, மனைவி நானும் பூமுடி இறக்குகிறேன் என்று வந்தார். நான்கு சீட்டோடு முடி எடுக்குமிடம் சென்று முடியிறக்கினால் ஒரு மொட்டைக்கு ஐம்பது ரூபாயாம்... கணக்குப் பண்ணி கொடுத்துவிட்டு நீராட கடலுக்குச் சென்றோம். ஏற்கனவே கடலுக்குள் ஆட்டம் போட்ட எங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொள்ள, கடலில் குளிப்பதென்றால் நாளெல்லாம் கிடக்கச் சொல்லும்... என்ன ஒரு ஆனந்தம். ஆனா பெரிசுகளோட போனாவா ரொம்ப நேரம் குளிக்க முடியும். மணியாச்சு... வாங்க என அப்பா கரையில் இருந்து கத்திக் கொண்டே இருந்தார். பின்னர் நாழிக்கிணறுக்குள் செல்ல அண்ணன் தண்ணீர் ஊற்றுபவரிடம் பணம் கொடுக்க போதும் போதும் என்று சொல்லும் வரை தண்ணீரை இறைத்து ஊற்றினார்.


பின்னர் ஆடைகளை மாற்ரிக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தோம். பணம் கொடுத்து எல்லாம் போகாதீங்க... கூட்டம் கம்மியாத்தான் இருக்கு தர்ம தரிசனத்துலயே போங்க என்று சொன்னார் எங்க வேன் டிரைவர். அவர் சொன்னது போல் தர்ம தரிசனத்துக்கான வரிசையில் செல்ல, ஓரளவு கூட்டம் இருந்தது. வரிசை மெதுவாக நடந்து சென்றது. அருகில் பார்க்க 250 கொடுத்தவர்களுக்கும், அடுத்துப் பார்க்க 100 கொடுத்தவர்களும், ஐயரிடம் 500 கொடுத்து அர்ச்சனைத் தட்டை கொடுத்தவர்களும் வேகமாக தரிசனம் செய்து திரும்ப எங்கள் வரிசை மெதுவாக நகர்ந்தது. நம்மளும் 10,20 ரூபாய் டிக்கெட்ல வந்திருக்கலாம் என்று யோசித்தாலும் எங்களுக்குப் பின்னே நின்ற கூட்டத்தில் இனி வெளியாக முடியாது என்று தோன்ற முருகன் இப்படித்தான் வரணுமின்னு நினைச்சிருக்கான் என்று எண்ணியபடியே மெதுவாக நகர்ந்தோம்.

உள்ளே செல்லும் போது நேராக நின்ற சண்முகனை தரிசித்தபடி செல்ல, செந்தில்நாதன் கடலைப் பார்க்க நிற்பார் என்று அண்ணி சொன்னார்கள். எங்கள் வரிசை நகர்ந்து இடப்புறமாக திரும்ப அங்கே அழகன் முருகன் தனது புன்சிரிப்போடு காட்சியளித்தார். பணம் கொடுத்து வந்திருந்தாலும் முருகனை கொஞ்ச நேரம் நின்னு தரிசிச்சிருக்கலாம்... இதுல போறதால பாத்தோமோ பாக்கலையோ விரட்டிருவாங்க என்று மனைவி சொல்ல, முருகனைப் பார்த்துக் கொண்டே, குழந்தைகளுக்கும் காட்டியபடி முன்னோக்கி நகர்ந்தோம். சரியாக முருகனுக்கு நேரே சென்றபோது தீப ஆராதனை நடக்க நக்ருங்க என காவலாளி சொன்னார். 

அப்போது முன்னே போன கூட்டம் தேங்கி நிற்க, என் மனைவியும் முன்னேற, காவலாளி வரிசை நகரலைம்மா... நீங்க நில்லுங்க... அப்படியே நின்னு முருகனைப் பாருங்க... நின்னு அவனைத் தரிசிக்க கொடுத்து வச்சிருக்கணும்... இருங்க என்று சொல்ல நாங்கள் முருகனுக்கு நேராக பத்து நிமிடங்களுக்கு மேல் நின்று அழகனை ரசித்து மனது உருக வேண்டிக் கொண்டோம். எங்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்கியவன் அவன்தான் இல்லை என்றால் விரைவாக நகர்ந்த கூட்டம் நாங்கள் அவனிடத்தில் வரும்போது நகராமல் நிற்குமா என்ன... மனைவிக்கு சந்தோஷம்... நல்ல தரிசனம்... என்றார். ஆம் அருமையான தரிசனம்...


பின்னர் வெளியாகி கோவில் பிரசாதங்கள் வாங்கி மண்டபத்தில் வைத்து சாப்பிட்டுவிட்டு அப்படியே கோவில் மண்டபத்தில் உள்ள கடைகளுக்குள் புகுந்தால் பயலுக ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு. காரு... துப்பாக்கி என வாங்கிக் குவித்தார்கள். நாங்களும் முருகன் போட்டோ, பனங்கற்கண்டு, ஏலம் சுக்கு இட்ட கருப்பட்டி என எல்லாம் வாங்கிக் கொண்டு திருச்செந்தூரில் இருந்து கிளம்பி வன திருப்பதி சென்று மதிய சாப்பாட்டை அங்கு முடித்து பெருமாளை தரிசித்து விட்டு தேவகோட்டை நோக்கி பயணமானோம்.

இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட்டு 'ஸ்ஸ்ஸ்... அப்பனே முருகா...' என்று படுத்தால் நிம்மதியான உறக்கம்.
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆனந்தமான திருப்தியான தரிசனம் உங்கள் எழுத்துகளில் மிளிர்கிறது... வாழ்த்துகள்...

r.v.saravanan சொன்னது…

முருகனின் தரிசனம் சிறப்புற கிடைத்ததில் மகிழ்ச்சி அவனின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்

ஸ்ரீராம். சொன்னது…

எல்லாம் முருகன் அருள்.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country சொன்னது…

திருச்செந்தூர் பயணப்பகிர்வு அருமை. நன்றி.
புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான தரிசனம் கண்டு மகிழ்ந்திருக்கிறீர்கள்
வாழ்த்துக்ள் நண்பரே
தம +1

துபாய் ராஜா சொன்னது…

சுனாமியை வென்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியின் அருள் எல்லோருக்கும் எப்போதும் உண்டு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ராஜா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

திருப்தியான தரிசனம் - உங்களுக்கும், உங்களால் எங்களுக்கும்....

நன்றி நண்பரே.

ஊமைக்கனவுகள் சொன்னது…

எங்களுக்கும் தங்களின் எழுத்தின் வழி கிடைத்தது.

த ம 7

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகான தரிசனம்...மனதுக்கு இதமான தரிசனம்...கிடைக்கப்பெற்ற அந்த அப்பன் முருகன் எல்லாம் அருளிடுவான்...உங்கள் பதிவின் மூலம் நாங்களும் செந்தூரானைப் பார்த்தோம்.....

மிக்க நன்றி!