மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 22 மார்ச், 2015

நேரில் வந்த காதலே சுவசமாக...

தேவா சுப்பையா... அண்ணனான ஒரு உறவு...

வலைப்பூ ஆரம்பித்து எழுத ஆரம்பித்ததில் இருந்து தொடரும் உறவுகளில் தேவா அண்ணாவும் ஒருவர். இலக்கிய ஆளுமை, அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர், இவரின் எழுத்துக்களைப் படிக்க ஆரம்பித்தால் அப்படியே நம்மை அதற்குள் வசீகரித்துச் செல்லும். தேவா அண்ணா வார்த்தைகளின் ராஜா என்பதை இவரின் பகிர்வுகளில் பார்த்து மயங்கித்தான் தொடர ஆரம்பித்தேன்.

இதோ பக்கத்தில் துபாயில்தான் இருக்கிறார்... மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எனது எழுத்தை அவரும் அவரின் எழுத்தை நானும் வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் நட்பாய்த் தொடர்ந்தோம். சிவகங்கை மண்ணில் விளைந்த எழுத்துக்காரர் அவர் என்பது  பின்னர்தான் தெரியும். என்னதான் இருந்தாலும் நம்ம மண்... நம்ம மக்கள் என்னும் போது பாசம் இன்னும் அதிகமாகும்தானே... அப்படித்தான் தேவா அண்ணன் எனக்குள் நுழைந்தார்.

ஒரு நாள் முகப் புத்தகத்தில் அரட்டையில் வந்து 'தம்பி அபுதாபியிலயா இருக்கீக... போன் நம்பர் தாருங்கள் நான் பேசுகிறேன்' என்றார். மறுநாளே என்னைக் கூப்பிட்டு நீண்ட நேரம் பேசினார். சிவகங்கை மண்ணுக்கே உரிய 'தம்பி எப்படியிருக்கீக?' என்று கேட்டு ஆரம்பித்த பேச்சில் இருந்த அன்பு என்னை அப்படியே ஆட்கொண்டது.

பின்னர் அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது போனில் பேசுவார்... அதிகம் அவர்தான் தொடர்பில் வருவார்... நான் எப்போதாவதுதான்... என்னைப் பொறுத்தவரை அதிகம் யாரையும் போனில் கூப்பிட்டு விட மாட்டேன். அது என்னவோ தெரியலை... இதற்காகத்தான் எங்க அம்மாவிடம் திட்டு வாங்குவேன். சென்னையில் இருக்கும் போது அம்மாவுக்கு கூட கூப்பிடுவதில்லை. போன்ல கூட பேசக்கூடாதாடா... என்று திட்டுவார். அப்படியே பழகிவிட்டது.

கில்லர்ஜி அண்ணா, மகேந்திரன் அண்ணா என சிலரை நேரில் சந்தித்து உறவாடியது போல் தேவா அண்ணனை சந்தித்து பேச வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. ஆனால் அதற்கான நேரம்தான் அமையவில்லை. சென்ற முறை அவர் அபுதாபி வந்தபோது என்னிடம் பேசினார். ஆனால் அலுவலகத்தில் இருந்ததால் சென்று சந்திக்க முடியவில்லை. சரிப்பா அடுத்த முறை பார்ப்போம் என்று சொல்லிச் சென்றார்.

வெள்ளிக்கிழமை என்னை போனில் கூப்பிட்டிருக்கிறார். நாமதான் சமையல் அது இதுன்னு ரொம்ப பிஸியில்ல... போன் வந்ததை பார்க்கவில்லை... உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி... 'தம்பி நாளை நான் அபுதாபி வாரேன்... ஒரு மணியில் இருந்து மூணு மணிக்குள் நீ பிரியாக இருந்தால் சந்திக்கலாம் 'என்று அனுப்பியிருந்தார். உற்சவ மூர்த்தியே நேரடியாக வரும் போது பக்தனுக்கு அதைவிட என்ன வேலை... உடனே 'நாளைக்கு விடுமுறைதான்... கண்டிப்பாக சந்திப்போம்' என்று தட்டிவிட்டேன். அதற்கு பதிலாய் எப்பவும் பேசும் வாஞ்சையான குரலில் 'தம்பி நாளைக்கு வர்றேம்ப்பா... சந்திப்போம் 'என்று பேசி அனுப்பியிருந்தார்.

மறுநாள் காலையில் சில வேலைகள் முடித்து குளிக்கச் சென்ற போது கூப்பிட்டிருக்கிறார். பின்னர் போன் செய்தபோது 'தம்பி எங்க இருக்கே நான் சலாம்ல இருக்கேன்' என்றார். இடம் சொல்லி வரச்சொல்லி... நான் போய் காத்து நிற்க... அவரும் வந்து சேர்ந்தார். இதுவரை இருவரும் நேரில் பார்க்கவேயில்லை... எழுத்தும் குரலும் மட்டுமே எங்களை இணைத்து வைத்திருந்தாலும் என்னைப் பார்த்ததும் கைகாட்டி கூப்பிட்டார். கம்பீர எழுத்துக்குச் சொந்தக்காரரான தேவா அண்ணா கம்பீரமாகவே இருந்தார்.

என்னைப் பொறுத்தவரை கிராமத்தானின் கிறுக்கலாய்த்தான் எனது எழுத்துக்கள்... அவரின் எழுத்துக்களோ சுவாசமாய்... இலக்கியம் பேசுவதைக் கேட்பது மட்டுமே எனக்குப் பிடிக்கும்... அதிகம் பேசுவதும் இல்லை... அண்ணன் இலக்கிய அருவியாய் பேசிக் கொண்டேயிருந்தார். நான் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். வேலு நாச்சியார், மருது பாண்டியர், குயிலி, சின்னமருதுவின் மகன் என எங்கள் மண்ணின் காவியம் பேசினார். இதை மிகச்சிறந்த வரலாற்றுப் பகிர்வாக எழுத வேண்டும் என்பது அவரின் ஆசை... அவர் பேசியதில் இருந்து இந்த வரலாற்றை மிகச் சிறந்த புத்தகமாக கொண்டு வரும் அவரின் எண்ணம் இன்னும் சிறப்பாக அமையும் என்பதை அறிய முடிந்தது.

இன்னும்... இன்னும்... என நிறையப் பேசினார். 'தம்பி இப்ப வேலை அதிகம்... அதிகம் வலைப்பக்கம் வருவதில்லை... ஆனாலும் உனது எழுத்துக்களை தொடர்ந்து படிப்பேன். எனக்கு நம்ம ஊர் பேச்சு வழக்கில்... நம்ம மக்களின் வாழ்க்கையை நீ ரொம்ப அழகா எழுதுறது ரொம்ப பிடிச்சிருக்கு'ன்னு இலக்கியம் என்னையும் புகழ்ந்தது என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்... எல்லாம் ஒரு விளம்பரம்தான்... இருந்தாலும் என்னோட எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் சிலரில் தேவா அண்ணனும் ஒருவர் என்பதை நான் அறிவேன். மிகச் சிறந்த எழுத்து ஆளுமை பாராட்டும் போது 'அட நம்மளும் பரவாயில்லாம எழுதுறோம் போல...' என்று தோன்றியது.

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.... அவருக்கு அடுத்த மீட்டிங் இருந்ததால் இன்னொரு நாள் சந்திப்போம் என்று சொல்லி அவரின் டிரைவரிடம் எங்களைப் போட்டோ எடுக்கச் சொல்லி எடுத்துக் கொண்டார். அந்தத் டிரைவரிடம் நாங்கள் இருவரும் நாலாண்டுக்கு மேல் பழக்கம்... இன்றுதான் பார்க்கப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். அவரோ இதுவரைக்கு பார்த்ததேயில்லையா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.

தேவா அண்ணனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தீர்ந்தது. ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்ற ஆசை இன்னும் கூடியிருக்கிறது... மீண்டும் ஒரு சந்திப்பில் இன்னும்... இன்னும்... என நிறையப் பேச வேண்டும்...

தேவா அண்ணாவின் நான்கு புத்தகங்கள் தயாராகிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. அவரின் எழுத்துக்கள் வலையில் பகிர்வதோடு இல்லாமல் புத்தகமாக வந்து எல்லோரின் மனதிலும் இடம்பிடிக்க வேண்டும் என்பதே ஆசை... அது நிறைவேறும் நாள் விரைவில் வர இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.

தேவா அண்ணாவின் வலைப்பூ : WARRIOR  

நீங்களும் வாசியுங்கள்... அவரின் எழுத்துக்குள் உங்களுக்கு ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கும்...

-'பரிவை' சே.குமார்.

20 எண்ணங்கள்:

Menaga Sathia சொன்னது…

மிக்க மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்!!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
மறக்க முடியாத நினைவு.... அருமையாக சொல்லியுள்ளீர்கள் நிச்சயம் படிக்கிறோம்.. பகிர்வுக்கு நன்றி த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…

வாழ்க வளமுடன் தொடர்ந்து மலரட்டும் நட்பூக்கள்
சொல்லியிருந்தால் வந்திருப்பேனே நண்பரே...
தமிழ் மணம் 3

Angel சொன்னது…

வலையுலக நட்புக்களை நேரில் சந்திப்பது மகிழ்ச்சியாச்சே ..வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

நட்பின் சந்திப்புகள் தொடரட்டும். நட்பூக்கள் மலரட்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சந்திப்பு குறித்து மிக்க மகிழ்ச்சி...

அவருக்கும் வாழ்த்துக்கள்...

RAMA RAVI (RAMVI) சொன்னது…

மிக மகிழ்ச்சியான சந்திப்பு. வாழ்த்துக்கள்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நானும் அடிக்கடி அவர் பதிவுகளை படிப்பதுண்டு, எதையும் தைரியமாக எழுதக் கூடியவர்.

balaamagi சொன்னது…

தங்களின் சந்திப்பு அருமை, அதை அழகிய பதிவாக்கியதும் அருமை, நல்ல வலைபூவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ரூபன்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
அவர் இதற்கு முன் ஒரு முறை வந்த போது மீட்டிங்கின் காரணமாக பார்க்க இயலவில்லை. அதான் இந்த முறை வருவாரா... இல்லையா என்ற நிலை... மேலும் ஒரு மணி முதல் மூணு மணிக்குள் என்றார்.... அதான் கூப்பிடலை... அடுத்த முறை தங்களுடன் சேர்ந்தே சந்திக்கலாம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகிய நட்பூ! தொடரட்டும் நட்பூ! இவரது வலைப்பூ எங்களுக்குப் புதிய அறிமுகம்! அறிந்து கொண்டோம்! மிக்க நன்றி நண்பரே!

Kousalya Raj சொன்னது…

சந்தோசமாக இருக்கிறது... உங்கள் இருவரின் அருமையான உறவும் நேசமும் நாளும் வளரவும் வாழவும் வாழ்த்துகிறேன் குமார்...

உங்களின் சிறப்பான எழுத்துநடைக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுகள் !!!