மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 30 நவம்பர், 2014

தொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 10)

முந்தைய பகுதிகள் : 


ஒன்பதாவது பகுதியின் இறுதியில்...

"ஏலா... பேரப்பிள்ளைக வருதுக பாத்துப் பாத்து சமச்சிப் போடணும்... ஆமா சொல்லிப்புட்டேன்... பெரிய மாப்ள கடல கொண்டாந்து கொடுத்தாருல்ல... அதை நல்லா காய வையி... வந்ததும் அவிச்சிக் கொடுக்கணும்... பொரியரிசி வறுத்து வையி... சத்துமாவுக்கு அரச்சிக்கிட்டு வாறேன்... வந்தா பெசஞ்சி திங்கிங்க... என்ன இந்த அயிசுப் பெட்டிதான் இல்ல... இருந்தா அம்புட்டையும் வாங்காந்து அடஞ்சி வச்சிடலாம்... எடுத்து எடுத்து சாப்பிட்டுக்குங்க..." என கந்தசாமி பேசிக் கொண்டே போக, 'பார்றா இந்தக் கெழவனை... எம்புட்டு சந்தோஷம்... அதுக வந்துட்டு போற வரைக்கும் இவரோட ஆட்டம் தாங்க முடியாதே...' என்று மனதுக்குள் நினைத்த காளியம்மாள். "ஆமா... அதுக வந்து டிவியைக் கட்டிக்கிட்டு அழப்போகுதுக... என்னமோ உங்க கூட வயலுக்கு வந்து கருதறுக்க ஒதவப் போற மாதிரி குதிக்கிறீக..." என்றாள் நக்கலாக.

"என்ன இப்புடிச் சொல்றே.... அதுக இங்க வர்றதே சந்தோஷம்தானே..." என்று சிரித்த போது "சித்தப்பா உங்களுக்கு வெசயந் தெரியுமா?" என்றபடி வந்தான் கண்ணதாசன்.

இனி...

சித்தப்பா உங்களுக்கு வெசயந் தெரியுமா என கண்ணதாசன் கேட்டதும் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினார் கந்தசாமி.

"மணி அண்ணன் காரைக்குடியில ஒரு எடம் வாங்குதாம்..."

"என்ன நம்ம மணியா... காரைக்குடியிலயா...?"

"ஆமா... அதோட மச்சின வீட்டுக்குப் பக்கத்துலயாம்..."

"இதாரு உனக்குச் சொன்னா..."

"அந்த இடம் கொடுத்த விஷயமா முத்து மாமா மகன் எடப்புரோக்கராத்தானே இருக்கான்... அவனுக்கு எப்புடியோ விவரம் தெரிஞ்சி எங்கிட்ட உங்கண்ணன் காரைக்குடியில இடம் வாங்குறாராமேன்னு கேட்டான்..."

"அவனுக்கிட்ட அம்புட்டு பணமில்லையே... எப்படி வாங்கினான்..."

"ஆமா... இல்லயில்லயின்னு சொல்லிக்கிட்டு அங்கிட்டு சேத்து வச்சிருப்பாக... எந்தப் புத்துக்குள்ள எந்தப் பாம்பிருக்குமின்னு நமக்கா தெரியும்... வந்த மவராசி எப்புடிப்பட்டவ..." காளியம்மா குமுறினாள்.

"உங்க வர்க்கந்தானே... அதுவா இப்ப முக்கியம்... அவனுக்கிட்ட காசு இருக்கு இல்ல...நம்மக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இங்கிட்டு பொரட்டிக் கொடுத்திருக்கலாமுல்ல... நம்ம புள்ளக நல்லா இருந்தா நமக்குத்தானே அழகு... என்ன கண்ணா நாஞ்சொல்றது..."

"சரித்தான் சித்தப்பா... அதுக்கிட்ட பணமிருக்க வாய்ப்பில்லைதான்.... சின்னவன் கொடுத்திருப்பானோ என்னவோ..?"

"கொமரேசன் இப்பத்தானே பேசினான்... கொடுத்திருந்தா சொல்லியிருப்பானே... வேற யாருக்கிட்டயும் கடன கிடன வாங்கி பின்னாடி செரமப்படப் போறான்... என்ன ஏதுன்னு விசாரி கண்ணா.... நாளைக்கி கடங்காரன் பிரச்சன அது இதுன்னு வந்தா எப்படி தாங்குவான்..." புலம்பினார்.

"ஆமா... மவனுக எதுவும் சொல்றதில்லை... இவுக கெடந்து குதிப்பாக... கண்ணா இவர பஸ்சுடாண்டுல கொண்டு போயி விடு ஒரு எட்டு மூத்தவன் வீட்டுக்குப் போயி விசாரிச்சி பணம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்துட்டு வரட்டும்..." காளியம்மாவின் கோபம் வார்த்தையில் தெரிந்தது.

"அட விடு சின்னம்மா... அண்ணன் எப்படி அம்புட்டுப் பணம் பொரட்டுச்சின்னு அவரோட பெத்த மனசு பதறுது... நம்மக்கிட்ட கேட்டிருந்தா நாங்கூட பிரசிடெண்டுக்கிட்ட கேட்டு கைமாத்தா வாங்கியிருப்பேன்... அது யாருக்கிட்டயும் சொல்லல... அதுவா சொல்லாம விடப்போகுது... எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்ததுதான் செய்திருக்கும்..."

"ஆமா... ஆமா... இம்புட்டு வினையா வருவான்னு நெனைக்கவேயில்லை..."

"விடு சின்னம்மா... நம்ம பல்லக் குத்தி நாமளே மோந்து பாக்கலாமா.. விடு..."

"நல்லாச் சொல்லுப்பா... நம்ம வீட்டுக்கு வந்த மருமவ முந்திப் பிந்தி இருந்தாலும் நாமதான் அனுசரிச்சிப் போகணும்... இவ சும்மா நொய்யி நொய்யின்னு கத்திக்கிட்டே இருப்பா... ஒருநா இல்லாட்டி ஒருநா அவ திருந்தி வருவா.. அப்படியேவா இருக்கப்போறான்னு சொன்னா கேக்கமாட்டா..."

"ஆமா என்னையவே நொன்ன சொல்லுங்க.. உங்களுக்கு இங்க இருக்க இந்த மைனரு வேற சப்போட்டு..."

"அட விடு சின்னம்மா... அவருக்கு சப்போட்டெல்லாம் பண்ணல... அது நம்ம சொந்தமாப் போச்சு... அன்னியமா இருந்தா சண்டை சச்சரவுன்னு கெடக்கலாம்.. சொந்தத்தைக் கொண்டாந்துட்டு அடிச்சிக்கிட்டுக் கிடந்தா நல்லாவா இருக்கும்... அவரு சொல்றது சரிதானே... விட்டுட்டு வேலையைப் பாருங்க..."

"இரு கண்ணா... மூத்தவனுக்கு போன் பண்ணிக் கேக்கலாம்..."

"வேண்டாஞ் சித்தப்பா... அதுதான் சொல்லலையில்ல... விட்டுடுங்க..."

"அப்படியெல்லாம் விட்டுட முடியாது... அவஞ் சொல்லாட்டியென்ன நாம கேட்டா கொறஞ்சா போயிருவோம்... இரு போனைப் போடுறேன்.." என எழுந்து போனார்.

"இந்தக் கெழவனுக்கிட்ட ஒரு சேதி சொன்னா உடனே அதக் கேக்காட்டி தல வெடிச்சிரும்... இப்ப அவ ரெண்டு கத்துக் கத்தவும் கப்சிப்புன்னு வச்சிட்டு வருவாரு பாரேன்..."

"அலோ யாரு..." தோரணையாக கேட்டாள் சித்ரா.

"நாந்தாத்தா மாமா பேசுறேன்..."

"ம்... சொல்லுங்க... சும்மாயிருக்கீகளா...?"

"எங்களுக்கென்ன நல்லாத்தான் இருக்கோம்.. நீங்க எப்டியிருக்கீக..? பேத்தியா நல்லா இருக்காளா?"

"ம்.. எல்லாரும் நல்லாருக்கோம்... என்ன வெசயம்..? அவுக வெளிய பொயிட்டாக.... வந்தோடனே பேசச் சொல்லவா..."

"சும்மாதாந்தா போன் பண்ணுனேன்.... ஆமா உங்க அண்ணமூட்டுக்குப் பக்கத்துல எடம் வாங்கியிருக்கீகளாமே... ?"

"இப்பத்தான் ஒரு எடம் வாங்கலான்னு பேசுனோம்... அதுக்குள்ள வத்தி வச்சி வயிறெரிய வச்சிட்டாங்களா?"

"ஏந்தா இப்புடிப் பேசுறே...? பெத்த புள்ளக நல்லா இருக்கதப் பாத்து பெத்த வயிறு குளிரத்தாந்தா செய்யும் எரியாது... காசு பணத்துக்கு செரமப்பட்டிருப்பானே... நம்மகிட்ட சொல்லியிருந்தா எதாவது சரி பண்ணிக் கொடுத்திருக்கலாமேன்னுதான் கேட்டேன்... கேட்டது தப்புன்னா மன்னிச்சுக்கத்தா..."

"ஆத்தாடி... மன்னிப்பு அது இதுன்னு இப்ப எதுக்கு பேசுறீக... எடம் வாங்குன வெவரமெல்லம் உங்க பிள்ளக்கிட்ட கேட்டுக்கங்க... எனக்குத் தெரியாது..." என போனை படக்கென வைத்தாள்.

கொஞ்ச நேரம் போனை காதில் வைத்தபடியே நின்ற கந்தசாமி ஒன்றும் பேசாமல் கட்டிலில் வந்து அமர்ந்தார்.

"என்ன சித்தப்பா... அண்ணன் பேசுச்சா... ?"

"அவே வெளிய பொயிட்டானாம்... மருமவதான் பேசினா..."

"என்ன சொன்னா?" காளியம்மா கேட்டாள்.

"என்னத்த சொல்றா... எப்பவும் போல எடுத்தோங் கவுத்தோமுன்னுதான் பேசுறா..."

"இதுக்குத்தான் சொன்னேன்... கேட்டாத்தானே... நாயி பேயி எல்லாம் இன்னைக்கு நம்மளப் பேசுது..."

"விடு சின்னம்மா... அதுக்குத் தெரிஞ்சது அம்புட்டுதான்... விடுங்க சித்தப்பா... இனி இது வெசயமா யாருக்கிட்டயும் பேசாதீக... சொன்ன சொல்றாக... சொல்லாட்டி போறாக..."

"நமக்கிட்ட சொல்லாட்டியும் பரவாயில்ல... மாப்ள இந்த வீட்டுக்கு மூத்தபுள்ளையா இருந்து எல்லாம் பாக்குறாரு.. அவருக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமுல்ல... அவருக்கு தெரிஞ்சா வருத்தப்பட மாட்டாரா..."

"நல்ல கத சித்தப்பா... பெத்தவுகளுக்கே சொல்லல... இது வீட்டுக்கு வந்த மாப்ளக்கி சொல்லுமாக்கும் விடுங்க... விட்டுட்டு வேலயைப் பாருங்க..." என்றபோது "என்னங்க சாப்புட வாறீகளா?" என அவனது மனைவி குரல் கொடுக்க, "சரி சித்தப்பா... அப்பறமா வாறேன்" எனத் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு எழுந்தான்.

ண்டியில் போய்க்கொண்டிருந்த குமரேசனின் மொபைல் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்க, 'இவ ஒரு தடவ அடிச்சி எடுக்கலைன்னா இப்படித்தான் அடிச்சிக்கிட்டே இருப்பா... என்னமோ தல போற மாதிரி' என மனைவியைத் திட்டிக் கொண்டே வண்டியை ஓரமாக நிப்பாட்டி போனை எடுத்துப் பார்த்தான். அதில் அண்ணன் வீட்டு நம்பர் வரவும் எடுத்து "சொல்லுண்ணே?" என்றான்.

"நாந்தான் பேசுறேன்..." எதிர்முனையில் சித்ராவின் குரல் கணீர் என்றது.

"சொல்லுங்கண்ணி... என்ன விஷயம் நீங்க போன் பண்ணியிருக்கீக... மாகா சும்மாயிருக்காளா?"

"எல்லாரும் நல்லாத்தானிருக்கோம்.. எங்கள யாரு நிம்மதியா இருக்க விடுறா...?"

"ஏன்... என்னாச்சு... அண்ணன் எதாவது திட்டுச்சா?"

"அஹ்ககஹா... ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுறீக... தொட்டியையும் ஆட்டி விட்டுக்கிட்டு பிள்ளயையும் கிள்ளி விடுறீக... "

"என்ன... என்ன அண்ணி குதர்க்கமா பேசுறீக... புரியிற மாதிரி பேசுங்க..."

"என்னத்த புரியிற மாதிரி பேச... பொண்டாட்டி பணக்காரின்னு காட்ட அவ அப்பனுக்கிட்ட காசு வாங்கிக் கொடுத்தா... நீங்க உடனே உங்கப்பனுக்கிட்ட சொல்லி ஏவங்கேக்கச் சொல்லியிருக்கீக..."

"அண்ணி... எனக்கு இந்த மாதிரி வேல எல்லாம் பிடிக்காது... எங்கிட்ட பணமில்லைன்னு சொல்லிட்டேன்... அவளாத்தான் மாமாவுக்காக நாங்கேக்குறேன்னு சொல்லி வாங்குனா... இதுல எஞ்சம்பந்தம் எதுவுமில்ல... அப்பாக்கிட்ட இது பத்தி நான் பேசவே இல்லை..."

"அப்புறம் நீங்க சொல்லாம எவுக சொன்னாக... அவருக்கு கனவுல வந்துச்சோ... பத்தவச்ச ஒடனே இங்க போனப்போட்டு கேக்குறாரு அந்த மனுசன்.... நாங்க நல்லாயிருந்துறக் கூடாதே... சொல்லியிருந்தா அவுக பணம் பொரட்டிக் கொடுத்திருப்பாகளாம்... என்ன வச்சிருகாக  அங்க... அஞ்சுக்கும் பத்துக்கும் பொறங்கையை நக்கிக்கிட்டு நிக்கிறாக... பேச வந்துட்டாக பேச... இனி ஆரு எங்க விசயத்துல மூக்க நொழச்சாலும் மானத்தக் கெடுத்து மாட்ட விட்டு ஓட்டிருவேன் ஆமா..."

"இப்ப எதுக்கு தேவையில்லாத பேச்சு... நாஞ் சொல்லல... அபியும் சொல்லியிருக்க மாட்டா... எங்களுக்குத் தெரியாது... "

"அப்ப எவஞ் சொன்னான்... எந்த மயிராண்டி அந்தாள தூண்டிவிட்டான்..."

"என்ன ரொம்ப ஓவராப் பேசுறே.... எங்கண்ணன் பொண்டாட்டிங்கிறதுக்காக மரியாதையாப் பேசுறேன்... இதே வேற ஆளா இருந்தா என்ன பேசுவேன்னு தெரியாது...  எந்த மயிராண்டி சொன்னானோ அந்த மயிராண்டிக்கிட்ட உன்னோட வாய் சவடாலை வச்சிக்க... எங்கப்பன் ஆத்தாவை நாங்க பொறங்கையை நக்கிக்கிட்டு தெருவில திரிய விடலை..." எனக் கத்திவிட்டு போனை கட் பண்ணினான்.

அவள் பேசிய வார்த்தைகள் அவனை தீயாய்ச்சுட அவனுக்குத் தெரியாமல் அபி எதுவும் சொன்னாளா என போன் செய்து கன்பார்ம் செய்து கொண்டான். பின்னர் அண்ணனின் மொபைலுக்கு கூப்பிட்டான்.

"என்னப்பா... சொல்லு..." அவனுக்கே உரிய பாசத்தோடு கேட்டான் மணி.

"உங்கிட்ட கொஞ்சம் பேசணும்... முடியுமா?" எப்பவும் போல் நலம் விசாரிக்காமல் நேரிடையாக கொஞ்சம் கோபமாகக் கேட்டான் குமரேசன்.

"என்னடா எதாவது பிரச்சினையா...? குரல் ஒரு மாதிரி இருக்கு...? என்னாச்சு...?" பதற்றாமாய்க் கேட்டான் மணி.

(வேரும் விழுதுகளும் வளரும்)
-'பரிவை' சே.குமார்.

8 எண்ணங்கள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தொடர்கிறேன் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

tha ma 2

UmayalGayathri சொன்னது…

கதை சுவாரஸ்யகாக போகிறது...இப்போதான் பகுதி 9 முடித்து வந்தேன். தொடரட்டும்...

கோமதி அரசு சொன்னது…

தாத்தா பேரபிள்ளைகளுக்கு தேவையானதை கொடுக்க நினைக்கும் பாசப்பேச்சுகள் அருமை.

நம்ம புள்ளக நல்லா இருந்தா நமக்குத்தானே அழகு,//
அது தான் தந்தையின் பாசம், அருமை.

KILLERGEE Devakottai சொன்னது…


நன்றீகத்தான் போகிறது,
த.ம.3

சென்னை பித்தன் சொன்னது…

தொடர்ந்து வர முடிவதில்லை.வரும்போது விட்டுப்போனவற்றையும் படித்துக் கொள்கிறேன்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

குடும்ப உறவுகளை சிறப்பாக கையாள்கிறது எழுத்து! அருமையான நடை! தொடர்கிறேன்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சென்ற வாரம் வர இயலவில்லை நண்பரே! படித்து விட்டோம்...தொடர்கின்றோம்....